disalbe Right click

Sunday, February 23, 2020

சாட்சி கையெழுத்து போடுபவர்களுக்கு

சாட்சி கையெழுத்து போடுபவர்களுக்கு பதிவுத்துறை விதித்துள்ள புதிய நிபந்தனை
பத்திரப்பதிவு சாட்சிகள் 24.02.2020 முதல் புது கட்டுப்பாடு
சார் பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் போது, சாட்சியாக வருபவர்களுக்கு பதிவுத்துறையால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரையில் நடந்துவந்த நடைமுறை என்ன?
  • பத்திரப் பதிவின் போது, விற்பவர் தரப்பில் மற்றும் வாங்குபவர் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக அந்த பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும் என்பது விதி.
  • சில நேரங்களில் விற்பவர் தரப்பில் அல்லது வாங்குபவர் தரப்பில் சாட்சியாக யாரும் வராத நிலையில், இதற்கு முன்பு ஆவண எழுத்தர், அலுவலக ஊழியர்கள் யாராவது, சாட்சியாக கையெழுத்திடுவார்கள்
  • அந்த சமயத்தில் அங்கு இருக்கின்ற வீடு, மனை விற்பனை செய்கின்ற புரோக்கர்களும் சாட்சியாக கையெழுத்து போடுவதுண்டு.
  • சார் பதிவாளர் இதனை கண்டு கொள்வதில்லை.
நடக்கும் முறைகேடு என்ன?

  • சார் - பதிவாளர் அலுவலகங்களில், சாட்சி கையெழுத்து போடுவதற்கென்றே, சிலர்  அங்கு  வலம்    வருகின்றனர்
  • தொடர்ந்து ஒரே நபர்  பல பத்திரங்களில் சாட்சி கையெழுத்து போட்டு  வருவது   அங்கு   வாடிக்கையாகி விட்டது
  • இது, மோசடிக்கு வழி வகுப்பதாக உணர்ந்து, பத்திரப் பதிவுக்கான சாட்சிகள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய, புதிய கட்டுப்பாடுகளை, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் விபரம்
  • சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் போதுசாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கைரேகையையும் அங்குள்ள அலுவலர்கள் பதிவு செய்ய வேண்டும்
  • சாட்சியாக கையொப்பம் இடுவோரின்  அடையாள ஆவணத்தையும், அவர்கள்   தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் ஒரே நபர், சாட்சி கையெழுத்திட, சார் - பதிவாளர் அனுமதிக்கக் கூடாது.
  • அப்படி ஒருவேளை அவசியம் ஏற்பட்டால், மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின், சம்பந்தப்பட்ட பத்திரத்தை சார் பதிவாளர் பதிவு செய்ய வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 24.02.2020 

புகார் அளித்திட காலவரையறை இருக்கிறது, தெரியுமா?

புகார் அளித்திட காலவரையறை இருக்கிறது, தெரியுமா?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
இந்தியன் லிமிடேஷன் ஆக்ட் எனப்படுகின்ற இந்திய வரைமுறைச் சட்டத்தில் குற்றம் நடந்ததாக ஒருவர் புகார் தெரிவிக்கவோ அல்லது அது சம்பந்தமான வழக்கு பதிவு செய்யவோ காலவரையறை எதுவும் குறிப்பிடவில்லை.
புகார் தெரிவிக்கவில்லை என்றால்......
சம்பவம் நடந்து பல நாட்கள் ஆனபிறகும்கூட, ஒருவர் தமக்கு குற்றம் செய்தவர் மீது புகார் தெரிவிக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர் அந்த குற்றத்தை மன்னித்து விட்டதாக கருதப்படும்.
புகார் தெரிவிக்கும்போது......
புகார் தெரிவிக்க கால தாமதம் ஆனால், அது சட்டப்படி குற்றம் என்பது இவ்வளவு நாட்களாக தனக்குத் தெரியாது என்பதையோ அல்லது தாமதமாக புகார் அளிப்பதற்கான காரணத்தையோ குற்றம் சாட்டுபவர் தனது புகாரில் குறிப்பிட்டு அதனை நிரூபிப்பது நல்லது. அவ்வாறு புகார்தாரர் அதனை தெளிவுபடுத்தவில்லை என்றால், வேண்டுமென்றே புகார் அளிக்க தாமதம் செய்ததாக கருதப்படும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 468
சிறைத்தண்டணை எதுவும் இல்லாமல் அபராதம் மட்டுமே விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு கால வரம்பு ஆறு மாத காலம் எனவும், ஓரு வருடம் சிறைத்தண்டணை உடைய குற்றங்களுக்கு கால வரம்பு ஓர் ஆண்டு எனவும், ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை தண்டனைக் காலம் உடைய குற்றங்களுக்கு கால வரம்பு மூன்று ஆண்டுகள் எனவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 468 கூறுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 469
குற்றம் நடந்த நாள், குற்றம் நடந்தது எப்போது என்று அக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கோ அல்லது காவல்துறையின் அதிகாரிக்கோ தெரிந்த நாள் முதல் காலவரம்பானது கணக்கிடப்படும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 469 கூறுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 469()
குற்றத்தை செய்தது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாவிட்டால் அதனை செய்தது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ எப்போது தெரிய வருகின்றதோ அந்த நாள் முதல் காலவரம்பு கணக்கிடப்படும் என்றும் பிரிவு 469 () கூறுகிறது.
Image result for thinking emoji
பெரும்பாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உடைய குற்றங்களுக்கு, தாமதமாக புகார் கொடுத்தாலும் குற்றத்தன்மையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது, அதே நேரத்தில் மிகவும் தாமதமாக அளிக்கப்படும் புகார்கள் மீது, (அந்தப் புகாரில் தீய நோக்கங்கள் இருக்கலாம். என்பதால்) வழக்குப் பதிவு உடனடியாக செய்யப்படுவதில்லை. இது போன்ற நேரங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 21இல் வழங்கப்பட்டுள்ள தனிமனித வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான உரிமைகளும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 23.02.2020