disalbe Right click

Friday, April 10, 2020

கொரோனா நோயை ஒருவரால் மற்றவருக்கு பரப்ப முடியுமா?

கொரோனா நோயை ஒருவரால் மற்றவருக்கு பரப்ப முடியுமா?
கொரோனா வைரஸ் 
கொரோனா நோய் என்பது முதலில் தொற்று நோய் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு நோயுமே ஆர் நாட் (R0) ஆர் நாட் எனப்படும் ஓர் அளவுகோலை வைத்துத்தான் அதன் பரவும் தன்மை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், கோவிட் - 19 கொரோனா வைரஸின் ஆர்.நாட் அளவு 1.5 முதல் 4 வரை இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. அதாவது R0 மதிப்பென்பது 2.5 என எடுத்துக்கொண்டால், கொரோனா தொற்று கொண்ட ஒரு நபர் 30 நாள்களில் 406 நபர்களுக்கு அந்தத் தொற்றைப் பரப்புவார்.
அந்த R0 மதிப்பென்பது கூடுதல் ஆகும்போது அவர் இன்னும் அதிகமாக நபர்களுக்கு நோயை பரப்புகின்ற தன்மையை பெறுவார்.
தனக்கு நோய் இருக்கிறது என்பதே தெரியாமல் பரப்புகிறவர்
தனக்கு கொரோனா நோய் இருக்கிறது என்பதே தெரியாமல் பரப்புபவர் தானும் அவதிப்பட்டு, மற்றவர்களையும் அவதிக்குள்ளாக்குவார். இதனால்தான் நமது மத்திய, மாநில அரசாங்கங்கள், வீட்டில் இருங்கள்!, விலகி இருங்கள்! என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் வெளியில் செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்கள் இதனை கடைபிடிப்பது இல்லை. ஆகையால் பாதிப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் நிலைக்கு அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியை பொதுமக்களே உருவாக்கி இருக்கிறார்கள்.
தனக்கு நோய் இருக்கிறது என்பதே தெரிந்தே பரப்புகிறவர்
தனக்கு கொரோனா நோய் இருக்கிறது என்பதே தெரிந்தே பரப்புபவர்களும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு டெல்லியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுச்சேரிக்கு நேர்முகத் தேர்வுக்காக வந்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரால் டெல்லி செல்ல முடியவில்லை. விழுப்புரத்தில் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த முகாமில் தங்கி இருந்திருக்கிறார். அந்த முகாமில் இருந்தவர்களுக்கு 07.04.2020 அன்று பரிசோதணை செய்த போது, அவருக்கு நோய் தொற்று இருக்கிறது என்று ஆய்வில் கண்டுபிடித்து அவர் தங்கியிருந்த முகாமிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கிருந்து எங்கோ சென்றுவிட்டார். ஏழு தனிப்படைகள் அவரை தற்போது தேடிக் கொண்டிருக்கிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
குறிப்பு: இவர் 14.04.2020 அன்று செங்கல்பட்டில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது
அவர் இப்போது அந்த நோயை எத்தனை பேருக்கு பரப்பி இருக்கிறாரோ தெரியவில்லை. அவருக்கு நோய் இருக்கிறது என்பது தெரியாமல் எத்தனை பேர்கள் அவருடன் பழகிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. அவருக்கு நோய் இருக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம். அதனால், அதன் தாக்கம் அதிகமாகும்போது அவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கே திரும்பி வரலாம். அவர் பிழைத்துவிடலாம். ஆனால், அவரால் நோய் தொற்றுக்கு ஆளாகி நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்களின் கதி என்னாகும்?.
சமூக விலகலினால் என்ன பயன்?
பொதுமக்கள் கட்டுப்பாடுடன் சமூகவிலகலை கடைபிடித்தால், அதாவது முக கவசம் அணிந்து கொண்டு, மற்ற மனிதருடன் இருக்கும்போது இருவருக்கும் உள்ள இடைவெளியை 3 அடி தூரமாக வைத்துக் கொண்டால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா வைரஸ் பரவாது.
ஊரடங்கு உத்தரவு
ஆகவே மக்களே, அரசு உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவை மதியுங்கள். ஒத்துழைப்பு தாருங்கள். சமூக விலகலை கடை பிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். விலகியே இருங்கள். வாழ்வதற்கு முதலில் உயிர் முக்கியமானது. அதற்குப் பிறகுதான் உணவு.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 10.04.2020

Saturday, April 4, 2020

ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க ....?

                 ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க ....?   
                 
பொதுமக்கள் வாழ்க்கையில் அதிகமாக அங்கம் வகிப்பது காவல்துறை என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு, பொதுமக்கள் சந்திக்கும் அதிகப்படியான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் அரசுத் துறையில், காவல்துறை பெரும்பங்கு வகித்து வருகிறது.
ஆனால், இந்தத்துறையில் சாதாரண மக்கள் புகார் அளிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்களில், ஒரு வழக்கை பதிவு செய்வதைவிட, காவல் நிலையங்களில் ஒரு புகாரை பதிவு செய்வது மிக கடினமாக இருக்கிறது.
நடைமுறை என்ன?
புகார்தாரர் ஒருவர் காவல்துறையில் தருகின்ற புகாரை பெற்றுக் கொண்டு, அதற்கு ஒப்புதலாக CSR என்று சுருக்கமாக சொல்லக்கூடியபுகார் மனு ஏற்புச் சான்றிதழ்(Community Service Register) என்ற ஒன்றை உடனடியாக அவரிடம் காவல்துறையினர் வழங்கவேண்டும். அதன்பிறகு, அவர்கள் அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளவற்றை படித்துப் பார்த்து குற்றம் நடந்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள, இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்க வேண்டும். அவர்கள் இருதரப்பினரும் தருகின்ற ஆவணங்களை, சாட்சியங்களை ஆய்வு செய்ய வேண்டும். குற்றம் நடந்தது விசாரனையில் தெரிந்தவுடன், ”முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட வேண்டும். குற்றம் நடக்கவில்லை என்றால், புகார் மனு ஏற்புச் சான்றிதழ் ரத்து செய்யப்படவேண்டும். அளிக்கப்பட்டது பொய்ப்புகார் ஆக இருந்தால், அதனை அளித்தவர் காவல்துறையால் முதல் தடவை மட்டும் எச்சரிக்கப்படுவார்.
காவல் நிலையங்களில் நடப்பது என்ன?
ஆனால், பெரும்பாலும் புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்வதே இல்லை. படித்துப் பார்த்துவிட்டு நமது கையிலேயே கொடுத்து விடுகிறார்கள். அதிகாரி இல்லை, பிறகு வாருங்கள் என்பார்கள். அல்லது என்ன நடந்தது என்பதை நம்மிடம் வாய்மொழியாக கேட்டுவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து பேசுகிறார்கள். நமது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை. எனக்கு இதில் அனுபவம் நிறைய இருக்கிறது.
ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்
இப்போது இந்த பிரச்சனையை ஒழிக்க, அரசு ஆன்லைன் மூலமாக, காவல்துறையில் புகார் அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதனால நமக்கு அலைச்சல் கிடையாது. செலவு கிடையாது. வீட்டில் இருந்தபடியே, நாம் இருக்கும் இடத்தில் இருந்தே புகார் அளிக்க முடியும். புகார் செய்ததற்கு ஆதாரமும் நமக்கு உடனே கிடைத்துவிடுகிறது.
எப்படி புகார் அளிப்பது?
இதற்கு முதலில் https://eservices.tnpolice.gov.in/ என்ற இணையதளத்திற்குச் நீங்கள் செல்லவேண்டும். அதில் இடமிருந்து வலமாக 3வதாக தெரிகின்ற Citizen Services (Free) என்ற வார்த்தையின் மீது கிளிக் செய்ய வேண்டும். அதனுள் இருகின்ற 10 சேவைகளைப் பற்றிய தலைப்புகள் தெரிகின்ற இன்பாக்ஸ் ஒன்று உருவாகும்.
அதில் முதலாவது இருக்கின்ற Register Online Complaint என்ற வார்த்தையை கிளிக் செய்தால் கீழ்காணும் ஒரு பெரிய பாக்ஸ் உருவாகும்.

அதில் முதல் பாதியில் கேட்கப்பட்ட எந்த மாவட்டம், உங்களது பெயர், இனம், பிறந்த நாள், வயது, முழு முகவரி, செல்போன் எண் மற்றும் -மெயில் முகவரி ஆகிய விபரங்களை ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டும்.  அதற்கு அடுத்த பாதியில் முதலில் உள்ள Box-ல் குற்றம் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் பொருத்தமான குற்றத்தை மட்டும்டிக்செய்யவேண்டும். அதன் பிறகு உள்ள பாக்ஸில் எந்த நாளில் குற்றம் நடந்தது என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு உள்ள பாக்ஸில் எந்த இடத்தில் குற்றம் நடந்தது என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு உள்ள பெரிய பாக்ஸில் குற்றத்தை பற்றி சுருக்கமாக (2000 எழுத்துகள்) டைப் செய்ய வேண்டும்.
ஆவணங்கள் இணைத்தல்
அதற்கு கீழே  நடைபெற்ற குற்றம் சம்பந்தமான ஆவணங்கள் இருந்தால், அவற்றை பதிவேற்றலாம். அதற்கு YES என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். ஆவணங்கள் ஏதும் இல்லை என்றால் NO என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். உள்ளே செலுத்துகின்ற அந்த ஆவணங்கள் பி.டி.எப், பி.என்.ஜி அல்லது ஜேப்பக் பைலாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் அவற்றை பதிவு செய்ய முடியும். 500 KB வரை பதிவேற்றலாம். ஒவ்வொரு ஆவணத்தையும்  உங்களது கைபேசி அல்லது கம்ப்யூட்டரில் இருந்து அதனுள் செலுத்தியவுடன் UPLOAD என்ற வார்த்தையை கிளிக் செய்துவிட்டு அடுத்த ஆவணத்தை அதனுள் செலுத்த வேண்டும்.                 
அவ்வளவுதான். வேலை முடிந்தது. இறுதியாக கீழே தெரிகின்ற செக்யூரிட்டி கோடு எண்ணை பதிவிட்டு    REGISTER  என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். 
உங்களது புகார் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற அர்த்தத்தை கொண்ட ஆங்கில வார்த்தைகள் தோன்றும். அதற்கு கீழே உங்களது புகாரைப் பற்றிய சிறு குறிப்புடன் ஒரு ஒப்புதல் சீட்டு திரையில் தோன்றும் அதனை டவுண்லோடு செய்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். Citizen Services (Free)  என்று முதலில் பார்த்த பாக்ஸை கிளிக் செய்தால் தோன்றுகின்ற இன்பாக்ஸில்  2வதாக தெரிகின்ற Online Complaint Status என்ற வார்த்தையை கிளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும்.  உங்களது புகாருக்கு கொடுக்கப்பட்ட எண்ணை (புகார் அளிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து)  அந்த பக்கத்தில் உங்களது புகார் எண்ணை பதிவிட்டால், உங்களது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியும். இதனை நீங்கள் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். அடுத்து சில நாட்களில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்படும். அவர்கள் உங்களை அழைத்து, புகார் விளக்கமாக பெற்றுக் கொண்டு, அதனை கையாண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதற்குப் பிறகும் உங்களது புகாரின் நிலையை மேற்கூறியவாறு தொடர்ந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களது புகார் தள்ளுபடி செய்யப்பட்டால் Disposed என்று அதில் தெரியும்.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.04.2020 

Saturday, March 28, 2020

பிரச்சனைகளுக்குள்ளேயே தீர்வு இருக்கும்!

பிரச்சனைகளுக்குள்ளேயே தீர்வு இருக்கும்!
ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்னாலேயே கொரோனா ஊடகங்களில் பிரதான செய்தியானது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதில் இருந்து வேறு ஏதும் செய்திகள் இடம் பெறாமல் ஊடகங்கள் முழுவதையும் அது ஆக்கிரமித்துக் கொண்டது. நானும்கூட அதைப்பற்றிய செய்திகளையே அதிகம் பரிமாறிக் கொண்டேன். போரடித்துவிட்டது. நடப்பது நடக்கட்டும். ரூட்ட மாத்துவோம்னு இத எழுத ஆரம்பித்துள்ளேன். இதை ஒரு தொடராக எழுத வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் உள்ளது. ஏன்னா, எனக்கும் வேற வழியில்லை.  எப்படியோ பொழுத போக்கணும். நீங்களும் படிச்சிதான் ஆகணும்; உங்களுக்கும் வேற வழியில்லை. 
எனது இளமைக் காலம்
எனது திருமணம் முடிந்திருந்த நேரம். நான் அப்போது ஒரு (ஐ.டி.ஐ) டர்னர். ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையில் சம்பளம் குறைவாக இருந்த காரணத்தால் வேறு வேலை தேடிக் கொண்டு இருந்தேன். எங்களது வீட்டுக்கருகிலேயே சுந்தரவேல் குச்சி பேக்டரி என்று ஒன்று இருந்தது. அங்கு வேலை கேட்கலாம் என்று போயிருந்தேன். உள்ளே அனுமதித்தார்கள். மானேஜரை பாருங்கள் என்று கூறி அவரை சந்திப்பதற்கு  வழியும் காட்டினார்கள்.
நான் படித்த வேலை அங்கு இல்லை
அந்த நிறுவனத்திற்கு 20க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்தது. அத்தனை தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களை அந்த மேனேஜர்தான் நிர்வகித்துக் கொண்டிருந்தார். அவரது பெயர் திரு காந்தி முருகேசன்.  என்னைப் பார்த்து விசாரித்து விபரம் அறிந்து கொண்டு, இங்க லேத் இல்லையேப்பா! என்றார். லேத் என்பது டர்னர்கள் வேலை பார்க்கும் இயந்திரம். பிறகு அவரே பிட்டர் வேலைதான் இருக்கு; பாக்குறீயா? என்றார். 
பிட்டர்ன்னா, என்ன வேலை பார்க்க வேண்டும்? என்றேன். 
அது வேற ஒண்ணுமில்லப்பா, தீப்பெட்டிக்குத் தேவையான மருந்து அரைக்கிற கிரைண்டிங் மெஷின்கள் நம்மளோட ஒவ்வொரு தீப்பெட்டி ஆபிஸிலும் இருக்கு. நீ ஒவ்வொரு ஆபிஸிற்கும் சென்று அதை மேற்பார்வை பார்க்கணும். சரி செய்ய முடிஞ்சா, அங்கேயே வச்சி சரி செஞ்சி கொடுக்கணும். அதிக பட்சம் புஸ் மாத்த வேண்டியதிருக்கும். அதுக்கும் மேல போச்சுதின்னா மெஷின மாத்தி கொடுக்க வேண்டியதிருக்கும். நம்மகிட்ட ஒரு நாலஞ்சி மெஷினு எப்பவுமே ஸ்பேரா இருக்கும். அதில ஒண்ண அங்க அனுப்பிட்டு, அங்க உள்ள மெஷின (தனியார்) ஒர்க்‌ஷாப்புக்கு அனுப்பி வைக்கணும். அப்புறம்  அங்க இருக்கிற ஆயில் எஞ்சினயும் பாத்துக்கிடணும் என்றார்.
மேனேஜர் கொடுத்த தைரியம்
எனக்கு மலைப்பாக இருந்தது. ஏன்னா, நான் ஆயில் எஞ்சின தூரத்தில பாத்ததோட சரி. அதப்பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. கிரைண்டிங் மெஷினக் கூட சமாளிச்சிரலாம்; ஆயில் எஞ்சின எப்படி சமாளிக்கிறது? என்று யோசித்தேன்.
அவர் என்னப்பா இப்படி யோசிக்கிற? என்றார்.
இல்ல அண்ணாச்சி எனக்கு ஆயில் எஞ்சினப் பத்தி ஒண்ணுமே தெரியாது! அதனாலதான் யோசிக்கிறேன்ன்னு  அவரிடம் உண்மையைக் கூறினேன். 
அதனால என்ன?  பரவாயில்லப்பா. உனக்கு தெரிஞ்ச வரைக்கும் பாரு. முடியலின்னா வெளிய இருந்து மெக்கானிக்க வரச்சொல்லிருன்னு சொல்லிட்டு அவர் வெளியே கிளம்பிட்டாரு. 
அங்கு இருந்த அவருடைய அஜிஸ்டெண்டு ஒரு முன்னாள் ஆசிரியர்.  அவரை எல்லோரும் வாத்தியார் என்றே அழைத்தனர். அவர் என்னிடத்தில் வந்து அந்தா இருக்கு டூல்ஸ் பை. எடுத்துக்கிட்டு முதல்ல பக்கத்தில இருக்குற தீப்பெட்டி ஆபிஸுக்கு போங்க. நான் போன் பண்ணி தகவல் சொல்லிடுறேன் என்றார். தயங்கிக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு அங்கே சென்றேன். 
அதிர்ச்சி அளித்த போர்மேன்
அந்த தொழிற்சாலை மிகவும் அருகிலேயே இருந்தது. அதனால் அங்கு எனது சைக்கிளிலேயே சென்றேன். அங்கு சென்று போர்மேனிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஓ, நீங்கதான் புது பிட்டரா? வாங்க, வாங்க. இங்க, ஆயில் எஞ்ஜின் ரெண்டு நாளா ஓடல; கொஞ்சம் என்னான்னு பாருங்க! என்று சொல்லிவிட்டு அவரது வேலையை பார்க்க போய்விட்டார். எனக்கு தூக்கிவாறி போட்டது. ஆயில் எஞ்ஜினை அப்போதுதான் முதன் முதலாக அருகில் சென்று பார்த்தேன். 
Diesel Engines - Diesel Engines - Lister Type Diesel Engine ...

சமாளித்தேன்
அதனை எப்படி இயக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியாது. அதனால் மீண்டும் போர்மேனை அழைத்தேன்.  அண்ணே, என்ன பிரச்சனை? என்றேன். ஸ்டார்ட் செய்வதற்கு சுழற்றியை போட்டு சுழற்றும்போது ஸ்டார்ட் ஆகும் நேரத்தில் ப்ளைவீல் சுழற்றியுடன் ரிவர்ஸில்  சுத்துகிறது.  ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்கிறது. எத்தனை தடவை சுழற்றினாலும் இதுபோல்தான் இருக்கிறது என்றார்.  என்முன்னே ஒரு முறை சுற்றுங்கள் என்றேன்.  ஒரு வேலையாளை அழைத்து சுழற்றச் சொன்னார். அந்த வேலையாள் அதனை சுழற்றியை வைத்து சுத்தினார். அவர் சொன்னது போலவே ஒரு வீல் மட்டும் ரிவர்ஸில் சுத்தியது. 
சரி நீங்கள் போங்கள், நான் என்னவென்று பார்க்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தேன். முடியவில்லை என்று முதலிலேயே சொல்லிவிடுவோமா? என்று எண்ணினேன். மேனேஜர் கூறியது (ஒனக்கு தெரிஞ்ச வரைக்கும் பாரு. முடியலின்னா வெளிய இருந்து மெக்கானிக்க வரச்சொல்லிரு) எனது நினைவுக்கு வந்தது. சரி முயற்சி செஞ்சிதான் பாப்போமே என்று அந்த எஞ்ஜினை சுத்தி சுத்தி வந்தேன்.
முயற்சி திருவினை ஆனது
அந்த எஞ்ஜின் அருகிலேயே ஒரு காட்டர் பின் கிடந்தது. அது அந்த எஞ்ஜினுக்கு உரியதா? என்பதை சோதித்தேன். அந்த எஞ்ஜினுக்கு உரியதுதான். ரிவர்ஸில் சுத்திய வீலுக்கு உரியது. பிரச்சனைக்கு காரணம் இதுவாகத்தன் இருக்குமோ என்று நினைத்தேன். அதை எடுத்து அந்த வீலில் மாட்டினேன்.  சரி இப்போது ஓட்டி பார்ப்போம்; என்ன ஆகிறது என்று எண்ணி போர்மேனை மறுபடியும் அழைத்து, அந்த எஞ்ஜினை மீண்டும் இயக்கச் சொன்னேன். அவர் வேறு ஆளை அழைக்காமல் அவரே அதனை இயக்கினார்.
நீங்கதான்யா மெக்கானிக்
என்ன ஒரு ஆச்சர்யம்?  எஞ்ஜின் இயங்க ஆரம்பித்துவிட்டது. போர்மெனுக்கு ரொம்ப சந்தோஷம். மகிழ்ச்சியில் என்னிடம் கை கொடுத்தார். வந்து அரைமணி நேரத்தில் எஞ்ஜின ஓடவச்சிட்டீங்களே, மெக்கானிக்குனா நீங்கதான் மெக்கானிக் என்று பாராட்டினார்.  எனக்கும் சந்தோஷமாக இருந்தது. கம்பீரமானேன்.
இதைப் போல்தான் பிரச்சனைகளும்
நாம் நமது வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சனைகளும் இதுபோல்தான். அதனை நாம் கையாளும் விதத்தில்தான் நமது வெற்றி அதில் அடங்கியுள்ளது. 
Cricket batsman clipart 4 » Clipart Station
கிரிக்கெட் விளையாட்டில் பவுலர் உங்களை அவுட் ஆக்க வேண்டும் என்றுதான் பந்து வீசுவார். நீங்கள் அந்தப் பந்தை உங்கள் கையில் உள்ள மட்டையின் மூலம் கையாளுவதன் மூலம் அதனை சிக்ஸ் ஆக மாற்ற முடியும். ஆகையால் பிரச்சனைகளை கண்டு பயம் கொள்ளாமல் அதனை ஆராய்ந்து லாவகமாக கையாண்டு வெற்றி பெறுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.03.2020 

Saturday, March 21, 2020

பொது தகவல் அலுவலர் மீது ஓர் புகார் மனு

பொது தகவல் அலுவலர் மீது ஓர் புகார் மனு
மதுரையில் உள்ள சார்பதிவாளர், தனது கடமையை சரியாக செய்யவில்லை என்று அது  சம்பந்தப்பட்ட எனது நண்பர் ஒருவருக்கு கோபம். இதனை ஆர்.டி.ஐ. மூலமாக கேட்க வேண்டும். டைப் அடித்து தாருங்கள் என்று சென்ற மாதத்தில் ஓர் நாள் என்னிடம் வந்திருந்தார். நானும் டைப் செய்து கொடுத்தேன்.
பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கை 
அதாவது, சொத்துக்களை சார்பதிவாளர் பதிவு செய்யும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று  சுற்றறிக்கை மூலமாக பதிவுத்துறைத்தலைவர் அறிவுறுத்தி உள்ளார். ஆனால், மதுரையில் உள்ள சார்பதிவாளர் ஒருவர் அதனை செய்யவில்லை. அது குறித்து சில தகவல்களை எனது நண்பர் தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழ் மதுரை பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களிடம் கேட்டிருந்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 7(1) என்ன சொல்கிறது?
ஒரு மனுதாரர் உரிய முறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்கும்போது, அதனை பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தகவல்களை அளிக்க வேண்டும்; அல்லது சட்டப்பிரிவு 8 மற்றும் 9-ல் குறிப்பிட்டுள்ளபடி தகவல்களை வழங்க மறுக்க வேண்டும் என்று உள்ளது.  
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 7(3) என்ன சொல்கிறது?
மனுதாரர் கோருகின்ற தகவல்களை நகல் எடுத்து வழங்க வேண்டியது இருந்தால், அதற்குரிய  கட்டணத்தை தெரிவிக்க வேண்டும் என்று பிரிவு 7(3)ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது தகவல் அலுவலர் அளித்த தகவல்
பதிவுத்துறை இணையதளத்தை குறிப்பிட்டு நீங்கள் கேட்ட தகவல் அதில் இருக்கிறது.  அதனை ஓப்பன் செய்து டவுண்லோடு செய்து கொள்ளுங்கள் என்று  பொது தகவல் அலுவலர் தகவல் அளித்திருந்தார். 


இது சட்டப்படி தவறான தகவல் ஆகும். பிரிவு 7(3)ன்படி அவர் அதனை நகல் எடுத்து, அதற்குரிய கட்டணத்தை பெற்று  மனுதாரருக்கு  வழங்கி இருக்க வேண்டும். 
இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா?
எனது நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. இப்படி பொறுப்பில்லாமல் பதில் அளிக்கிறார்களே,  இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதா? என்று என்னிடம் மிகவும் ஆதங்கப்பட்டார். என்னிடம் இருந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட புத்தகத்தை எடுத்து கொடுத்தேன். வாசித்து பார்த்தார். முகம் மலர்ச்சி அடைந்தார். எனக்கு தகவலே வேண்டாம். முதலில் புகார்மனு டைப் அடியுங்கள் என்றார். அடித்து கொடுத்தேன்.  
மன்னிக்கவும். இன்னும் அந்த கடிதம் அனுப்பப்படாததால் அதன் நகலை   பிரசுரிக்க இயலவில்லை. இரண்டு நாட்கள் பொறுங்கள்.
************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.03.2020. 

பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய முடியாது!

பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய முடியாது! 
எங்களது சங்கத்தில் நடக்கின்ற மோசடி
எங்களுடைய சங்க நிர்வாகத்தில் பல மோசடிகள் நடந்துள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்ற சங்க நிர்வாகிகளுக்கு சாதகமாக விருதுநகர் மாவட்டப்பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் நல்லதொரு பாதுகாப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர்கள் என்ன தவறு செய்து இருந்தாலும், அதனை ஆதாரபூர்வமாக நான் நிரூபித்தாலும் தீர்ப்பு என்னமோ அவர்களுக்கு சாதகமாகத்தான் வழங்கப்படுகிறது. மாவட்டப் பதிவாளர் மட்டும்தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார் என்று பார்த்தால் பதிவுத்துறையே அவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. 
மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் செய்த பல மோசடிகள்
நான் சங்க நிர்வாகிகள் மீது ஆதாரத்துடன் புகார் அளிப்பேன். யாராவது ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை நடத்த வேண்டும் அல்லவா?  உடனே எனக்கு விசாரணை அழைப்பு விடுக்கப்படும். நானும், ஆஹா, மாவட்டப் பதிவாளர் விசாரணைக்கு நம்மை அழைத்துவிட்டார்; இதோடு சங்க நிர்வாகிகளின் மோசமான நிர்வாகத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும்! என்று அந்த விசாரணைக்கு ஆர்வத்துடன் செல்வேன். விசாரணை நடக்கும். நான்  சங்க நிர்வாகிகளின் மீது ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுவேன். என்முன்னே அவர்களை மிரட்டுவது போல் மாவட்டப் பதிவாளர் பாசாங்கு செய்வார். அவர்கள் தலையை சொரிவார்கள். என்னை மட்டும் அனுப்பிவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்.
விசாரணையின் முடிவு அறிவிக்க மாட்டார்கள்
நடந்து முடிந்த விசாரணையின் முடிவை மாவட்ட பதிவகத்தில் இருந்து புகார்தாரரான எனக்கு வழங்கவே மாட்டார்கள். ஆனால், வழங்கியது போல ஒரு ஏற்பாட்டை செய்து கொள்வார்கள். இது சமீபத்தில்தான் எனக்கு தெரிய வந்தது. அதுபற்றிய ஆதாரமும் எனக்கு எதேச்சையாக கிடைத்தது. இதுபற்றிய செய்தியை 17.03.2020 அன்று ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து அதனை அறிந்து கொள்ளலாம். 
ஆவணங்களை ஆய்வு செய்தால் என்ன?
சங்க நிர்வாகிகளும், பதிவுத்துறையும் சேர்ந்து செய்கின்ற அத்தனை மோசடிகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது, சங்க நிர்வாகிகள் பதிவுத்துறையில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்தால் என்ன? என்று ஒரு யோசணை தோன்றியது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (ஜே) ன் கீழ், விருதுநகர் மாவட்டப்பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்களுக்கு, கடந்த 2001ம் ஆண்டு முதல் கடந்த 2019ம் ஆண்டு வரை எங்களது சங்க நிர்வாகிகள் தங்களிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் தாங்கள் அவர்களுக்கு, மற்றவர்களுக்கு அனுப்பிய கடிதங்களை ஆய்வு செய்து கொள்லவும், குறிப்பெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று   ஒரு கடிதத்தை கடந்த 31.08.2019 அன்று அனுப்பினேன். 
பதிவுத்துறையின் சட்டதிட்டங்கள் வேறு
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (ஜே) ன் கீழ் பதிவுத்துறையில் உள்ள சங்க ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றும்,  பதிவுத்துறையின் சட்டதிட்டங்கள் மூலமாகவே அவற்றை ஆய்வு செய்ய முடியும் என்றும் மாவட்டப் பதிவாளர் எனக்கு 30.09.2019 அன்று கடிதம் அனுப்பினார்.
போராளிகளின் வேகத்தை தடுக்கின்ற ஸ்பீடு பிரேக்கர்
அதனால், மதுரை - பதிவுத்துறை துணைத் தலைவருக்கு எனது முதல் மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். அங்கு பதிவுத்துறை துணைத் தலைவராகவும், பொது தகவல் அலுவலராகவும் வீ.வாசுகி என்று ஒரு அம்மையார் பணியாற்றி வருகிறார்கள். எனக்கு எந்த பதிலையுமே அனுப்பவில்லை. தகவல் ஆணையமானது முதல் முறையீடு செய்யாமல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்தால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறார்களே தவிர, முதல் மேல்முறையீடு செய்த மனுதாரர்களுக்கு எந்தவித பதிலையும் அளிக்காத முதல் மேல்முறையீட்டு அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை. போராளிகளின் வேகத்தை தடுக்கின்ற ஸ்பீடு பிரேக்கராகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முதல் மேல்முறையீடு இருக்கிறது.
இரண்டாம் மேல்முறையீடு! 
”அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுகிட்டு இருன்னு!’ நம்ம ஊருகளில் ஒரு பழமொழி சொல்வார்கள்.  அது சட்டப்போராளிகளின் வாழ்க்கைக்கும் நன்றாக பொருந்தும். அதனால், எனது இரண்டாம் மேல்முறையீட்டை கடந்த 21.11.2019 அன்று தகவல் ஆணையத்திற்கு அனுப்பினேன்.
ஆணையம் போட்ட உத்தரவு
தகவல் ஆணையத்தில் இருந்து எனக்கு மேற்கண்ட ஆய்வு சம்பந்தமாக, விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அவர்களுக்கு அனுப்பிய உத்தரவு நகல் ஒன்றை எனக்கு 24.02.2020 அன்று அனுப்பி வைத்திருந்தார்கள். அதில் ஆய்வு செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தண்டம் விதிக்க நேரிடும் என்றும் மாவட்டப்பதிவாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அசராத மாவட்டப் பதிவாளர்
அதற்கு 04.03.2020 அன்று அனுமதி அளிக்க வழியில்லை என்று ஒரு கடிதம் மூலமாக தகவல் ஆணையத்திற்கும் சட்டம் சொல்லித் தந்திருந்தார். ஆணையம் 19.03.2020 அன்று நேரடி விசாரணைக்கு அவரை மட்டும் அழைத்தது. நானும் பல வழிகளில் விசாரணை செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிவுத்துறையில் ஆய்வு செய்ய அனுமதிக்கலாம்!  என்பதை எனது 14.03.2020 கடிதத்தில் மீண்டும் தகவல் ஆணையத்தின் ஆணையாளருக்கு வலியிறுத்தி இருந்தேன்.
மாவட்டப் பதிவாளர் அனுப்பி,  எனக்கு பறந்து வந்த கடிதம்
19.03.2020 விசாரணையில் நேரடியாக ஆஜரான மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள்  எப்போது விருதுநகர் வந்தாரோ, எப்போது கடிதம் எழுதினாரோ, எப்போது அனுப்பினாரோ,  21.03.2020 அன்று எனக்கு அவர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதில் வருகின்ற 30.03.2020 அன்று விருதுநகர் மாவட்டப் பதிவகத்தில் ஆய்வு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் தங்களது பார்வைக்காக கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்தவுடன் இது சம்பந்தமான அடுத்த பதிவை என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம்.


************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.03.2020