disalbe Right click

Sunday, April 19, 2015

கையெழுத்து


கையெழுத்து 
கையெழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமாக வடிவமைத்துக்கொள்ளும் அடையாளம். இக்கையெழுத்தை நாம் எவ்வாறு, வடிவமைக்கின்றோமோ, அதை பொறுத்து நம் குணாதிசயங்கள் முடிவுசெய்யப்படுகின்றதாக கூறுகின்றனர். உங்கள் கையெழுத்துடன் ஒப்பிட்டு பாருங்களேன்.
பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாக பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள். சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையையும் திட்டவட்டமாக ஒழுங்காக செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
இவர்கள். எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள், எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள். 

எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள், பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள். எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள், எந்தப் பிரச்னைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்கும், மனஉறுதி படைத்தவர்கள்.
வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள், சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள். சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
எழுத்துக்களை நீட்டி, நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள், எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள். எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள், வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள். எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள், விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள். 
எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள், குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள். எழுதும்போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப் போக்குடையவர்கள்.
உங்கள் கையெழுத்து எப்படி இருக்கிறது என்பதை வைத்து உங்கள் குணம் தீர்மானிக்கப்படுவது, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 
மிக மோசமான கையெழுத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் எழுத்தில் உள்ள நல்ல கருத்துக்களால் புகழ் பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அழகான கையெழுத்தை உடையவர்கள் பலர், இன்று மாதக்கடைசியானால் பிறரிடம் கடன் வாங்குபவர்களாக உள்ளனர். ஆகவே, அவரவர்களின் திறமை, பேச்சு சாதுர்யம், படிப்பு, அனுபவம், புத்திசாலித்தனம் ஆகியவைதான், அவரது ஆளுமை, வாழ்வில் சிறந்த மனிதராக மாறுவது ஆகியவற்றை தீர்மானிக்கிறது. 
ஆனாலும் கிராபாலஜி எனும் இந்த கையெழுத்து கலையை அலட்சியம் செய்து விட முடியாது. ஓரளவுக்கு நிபுணர்கள் கணிப்பது சரியாகவே இருந்து வருகிறது.

1 comment:

  1. பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete