disalbe Right click

Tuesday, June 7, 2016

பள்ளிக் குழந்தைகளை பக்குவமாக வளர்க்க


பள்ளிக் குழந்தைகளை பக்குவமாக வளர்க்க
என்ன செய்ய வேண்டும்?

" அப்பாடி... இத்தனை நாள் இந்த பிள்ளைங்களை வீட்டுல வைச்சுகிட்டு நாங்க பட்டப்பாடு இருக்கே.... இனிமே 3 மணி நேரம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்" என்று பெருமூச்சு விடும் கே.ஜி பெற்றோரா நீங்கள்? இந்த வயதில்தான் உங்கள் செல்லங்களின் ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு மிக முக்கியமானது.
அவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் யமுனா.

1. என்ன காரணம் சொன்னாலும் காலையில் வயிற்றுக்கு சாப்பாடு கொடுத்த பிறகே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். காலை உணவை தவிர்க்கவிடவேக் கூடாது.

2) படுக்கையை விட்டு எழுந்ததும், 'ஸ்கூல் கெளம்பு... நேரமாச்சு' என்று படுத்தாமல், அவர்களுக்கு விரும்பியதை அரை மணி நேரம் செய்யவிட்டு, பிறகு அன்றாட பழக்கவழக்கங்களை முடித்துவிட்டு பள்ளிக்கு அனுப்பினால்தான் ஸ்கூல் போகிற மனநிலை வரும்.

3) ஒரு நாள் அம்மா, ஒரு நாள் அப்பா என்று பெற்றோர் இருவரும் ஒரு நாள்விட்டு ஒரு நாள் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்து அனுப்புங்கள். அப்போதுதான் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தை அழாமல் சமர்த்தாக ஸ்கூல் கிளம்புவார்கள். 

4) ''இவளோ லேட்டா எழுந்திரி, வேன் போயிடும்", ''போ போய் மிஸ் கிட்ட அடி வாங்கு" என்று காலையில் சுப்ரபாதம் பாடி எழுப்பாமல், ''சீக்கிரம் எழுந்தா உன் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கூட போய் கிளாஸ் ஆரம்பிக்கிற வரைக்கும் ஜாலியா விளையாடலாம்ல" என்று பாசிட்டிவாக பேசுங்கள்.

5) கேஜி முதல் 3ம் வகுப்புக்குள் படிக்கின்ற குழந்தைகளிடம், இந்த வயதிலேயே மதிப்பெண்களை எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு பதில் அவர்கள் படிப்பை எப்படி  புரிந்து கொள்கிறார்கள் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 

6) புதிய சூழ்நிலைக்குத் தயாராவது எப்படி? புதிய நபர்களிடம் எப்படிப் பழக வேண்டும், நண்பர்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து,  அந்தந்த சூழ்நிலைகளில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். 

7) எந்தப் பள்ளிக்கூடமும் நூறு சதவிகிதம் சிறந்தது கிடையாது. எனவே குழந்தைகள் முன்பாக அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தைத் தரக்குறைவாகப் பேசக்கூடாது. அப்படி பேசும்பட்சத்தில் குழந்தைகளுக்குப் பள்ளியின் மீது உள்ள ஈர்ப்புக் குறையத் தொடங்கி, படிப்பு மீதே வெறுப்பு ஏற்படும்.

8) ''ஹோம் ஒர்க் பண்ண வர்றியா இல்லியா...? முதல்ல உன் கையெழுத்தை மாத்து" என்று எப்போதும் மிலிட்ரி கமாண்டராக இருக்காமல் ''டேய் இன்னிக்கு என்ன ஹோம் வொர்க்...? வா வா ஓடிவா பார்க்கலாம்" என்று சின்ன சுவாரஸ்யத்தை கூட்டுங்கள். இந்த வயசுல ஹோம் வொர்க் எல்லாம் எதுக்கு என்று அசால்டாகவும் இருக்கக் கூடாது. அவர்களுடன் நீங்கள் உட்காரும் பட்சத்தில் வளரும் போது அவர்களாகவே ஹோம் வொர்க்கை முடித்துவிடுவார்கள்.

9) தினமும் மாலை வீட்டுக்கு வந்ததுமே படி என்று சொல்லாமல், கொஞ்ச நேரமாவது விளையாட விடுங்கள். அப்போதுதான்  அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

10) இந்த வயதில் மோஷன் போறதுல பிரச்னை இருக்கத்தான் செய்யும்.எனவே குழந்தை ஸ்கூலில் மோஷன் போய்விட்டால் திட்டாதீரக்ள். அதே போல் மோஷன் போறதில் பிரச்னைகள்  இருந்தால்  அதை பள்ளியில் தெரிவித்து விடுங்கள்.

11) குழந்தைப் பருவத்தில் ஜலதோசம், இஃன்பெக்ஷன், அனீமியா இதெல்லாம் வருவது சகஜம்தான். எனவே மாதா மாதம் உடம்பை செக் பண்ணுங்கள். சின்னக் குழந்தைக்கு ஒரு வருடத்தில் 6-7 முறை உடல்நிலை பாதிக்கப்படுவது இயல்பானது. உடம்பு சரியில்லாத பட்சத்தில், குழந்தைகளை ஸ்கூலுக்கு 100% அட்டென்டென்ஸுக்காக அனுப்பக்கூடாது.

12) ''அம்மா அந்தப் பையன் என்னைக் கடிச்சிட்டான், அடிச்சிட்டான்" அப்படின்னு குழந்தை சொல்லும் போது, உடனே "நீ ஏதாவது பண்ணுனியா..?" அப்படின்னு கேட்கக் கூடாது. பதிலா "அதுக்கு முன்னாடி என்ன நடந்தது...?" அப்படின்னு கேட்கணும். அப்பதான் குழந்தைங்க உண்மையை சொல்வார்கள்.

13 ) மதியச் சாப்பாட்டு தொடர்ந்து திரும்ப அப்படியே வருகிறது என்றால்  அவர்களுக்கு பிடித்த சாப்பாட்டை கொடுத்தனுப்புங்கள். அதை விடுத்து நீங்கள் செய்வதைத்தான் சாப்பிட வேண்டுமென்று கமாண்ட் செய்யாதீர்கள்.

14)  தினமும் பள்ளி முடிந்து வந்ததும்  அன்று என்ன நடந்தது என்று கேளுங்கள். அப்புறம் கேட்டுக்கலாம்   என்றால், அவர்களுக்கு மறந்து போய்விடும். வெளிப்படையாக பேசினால் மட்டுமே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

15) சின்ன சின்ன எமோஷன்களுக்கு பதிலளியுங்கள். அப்போதுதான் பென்சில் காணாமல் போனதிலிருந்து மனக் காயம் வரை எல்லாவற்றையும் சொல்வார்கள்.

16) "ஸ்கூல்ல டீச்சர் திட்டிட்டாங்க..." ன்னு வந்து சொன்னா, "கவலைப்படாத சரியாகிடும், நான் கூட இருக்கே"ன்னு சொல்லணும். நீங்களும் சேர்ந்து திட்டுனா, அவங்க உங்ககிட்ட எதுவுமே ஷேர் பண்ணிக்க மாட்டாங்க.

17) பிரச்னை என்று அழுதால், உடனே அவர்களுக்கு பிடித்த பொருளை கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பிறகு எல்லா பிரச்னைகளுக்கும் எதையாவது ஒன்றை நீங்கள் தர வேண்டியது இருக்கும். 

18) அவர்கள் முன்னால் நீண்ட நேரம் சீரியல் பார்ப்பது, அவர்களை திட்டுவது, அவர்கள் முன்னால் ஸ்மார்ட் போனை சதா பார்த்துக் கொண்டே இருந்தால் அவர்களும் அதை திரும்பச் செய்வார்கள்   என்பதை மறந்துவிடாதீர்கள்.

-தொகுப்பு: லோ. சியாம் சுந்தர்
(மாணவப் பத்திரிகையாளர்

நன்றி : விகடன் செய்திகள் - 07.06.2016

No comments:

Post a Comment