disalbe Right click

Saturday, August 26, 2017

விதிமீறல், ஆக்கிரமிப்புகள் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை

விதிமீறல், ஆக்கிரமிப்புகள் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை
சென்னை, : விதிமீறல், ஆக்கிரமிப்புகள் குறித்த புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, அரசு அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராமச்சந்திரன் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
ஆவணங்களை பரிசீலிக்கும்போது, சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிகிறது. விதிமீறல், ஆக்கிரமிப்புகள் இருந்தால், சட்ட வழிமுறைகளை பின்பற்றி, அதை இடிக்க, அரசுக்கு உரிமை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 
சென்னை நகருக்குள் இருந்தால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புறநகராக இருந்தால், சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி மற்றும் நகரமைப்பு அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்கு முன், சம்பந்தப் பட்ட வர்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுக்க வேண்டும். 
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விண்ணப்பங்கள் மற்றும் புகார்கள் வந்தால், அரசு தரப்பில் உடனடியாக முடிவு எடுப்பதில்லை என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. 
குறிப்பிட்ட அவகாசத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத கட்டுமானம், ஆக்கிரமிப்புகள், விதிமீறல்கள் தொடர்பான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் முன், தேவைக்கேற்ப, வேறு யாரிடமும் விசாரிக்கலாம். அனுமதிக்கப்பட்ட திட்டப்படி கட்டப்பட்டதா என்பது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்தை கேட்டு முடிவெடுக்கலாம். 
எனவே, அரசின் அனைத்து செயலர்களுக்கும், நீதிமன்றம் தெரிவித்த கருத்தை, தலைமை செயலர் தெரியப்படுத்த வேண்டும். இதனை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய, உத்தரவின் நகலை, தமிழக அரசின் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், புதுச்சேரி அரசு மற்றும் பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.08.2017

No comments:

Post a Comment