disalbe Right click

Wednesday, February 7, 2018

ஆதார் எண் பாதுகாப்பு

உங்கள் ஆதார் எண் பாதுகாப்பாக இருக்கிறதா! என்று சோதித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய ஆதார் எண்ணை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? என்பது இன்றைக்கு எல்லோர்க்கும் எழுகின்ற சந்தேகமாக ஆகிவிட்டது. ஏனென்றால் நமது வங்கி எண், எரிவாயு இணைப்பு எண் என்று நம்மைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் கட்டாயமாக்கி  ஆதாருடன்  மத்திய அரசு  இணைத்துவிட்டது.  அதனால், நமது ஆதார் எண்ணை வைத்து நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மற்றவர்கள் பெறுகிறார்களோ? என்ற ஒருவித சந்தேக மனப்பான்மையுடன் நாம் இருந்து வருகிறோம். இதனை தீர்க்க  UIDAI இணையதளத்தில்  https://resident.uidai.gov.in/notification-aadhaar என்று புதிதாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளதுஇந்த லிங்கிற்குச் சென்று நாம் நம்முடைய ஆதார் எண்ணைப் பதிவு செய்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து Generate One Time Password  க்ளிக் செய்ய வேண்டும்.
ஏற்கனவே, ஆதார் அட்டை வாங்கிய போது அதில் பதிவு செய்த உங்களின் செல்போன் எண்ணுக்கு ஒரு One Time Password  வரும். மேலும், அப்போது  திரையில் உள்ள விண்ணப்பத்தில், உங்கள் ஆதார் எண் பற்றிய அனைத்துத் தகவல்களும் வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கான தகவல்கள் மட்டும் வேண்டுமா? என்பதை பதிவு செய்து அந்த One Time Password ஐ பதிவு செய்தால் நீங்கள் கேட்ட தகவல்கள் கிடைக்கும்.
அதாவது, உங்கள் ஆதார் எண்ணை நீங்கள் எங்கெல்லாம் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற அனைத்துத் தகவல்களும் ஒரு பட்டியலாகக் கிடைக்கும்.
உங்கள் ஆதார் எண்ணை வேறு யாரேனும் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் இதன் மூலம்  உங்களால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.  அப்படி பயன்படுத்தி இருந்தால், உடனடியாக 1945 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகாரும் அளிக்கலாம்.
***************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.02.2018 

Tuesday, February 6, 2018

பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்!

பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்!
குமரி மாவட்டம் கட்டையன்விளையைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு  ஒன்றைத் தொடுத்துள்ளார். 
அதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில், 'நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான நாகர்கோவில் நகராட்சி கமிஷனரை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுநாகர்கோவில் நகராட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாகர்கோவிலில் புதிய நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்ற பின்பு வருமானம் அதிகரித்துள்ளது. எனவே, மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தாக்கல்செய்துள்ளார் என்று வாதாடியுள்ளார் 
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்
'கோரிக்கையை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
நாகர்கோவில் நகராட்சி கமிஷனர் சிறப்பாகப் பணி புரிந்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்நோக்கத்துடன் மனுதாரர் மனுதாக்கல் செய்திருப்பதால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை மதுரை உயர் நீதிமன்ற சட்ட உதவி மையத்தில் வருகிற 19.02.2018-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என்று அறிவித்துள்ளனர்.
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.02.2018 

Sunday, February 4, 2018

விஜிலென்ஸ் விழிப்புணர்வு முகாம்

பயணியர்களின் அன்பான கவனத்திற்கு.....
தென்னக ரயில்வேயில், விஜிலென்ஸ் பிரிவின் சார்பாக பயணியர்களுக்கு விழிப்புணர்வு முகாம், வருகின்ற 10.02.2018ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
ரயில்வேயில் நடக்கின்ற ஊழல்கள், முறைகேடுகள், உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள், இரயில்வே ஊழியர்களின் அடாவடி மற்றும் ரயில் பயணத்தில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட, அனைத்து முறைகேடுகளையும், விஜிலென்ஸ்
உதவி மையத்திற்கு, 155210 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இணையதளம் மூலமாக, vigcomplaints@sr.railnet.gov.in என்ற முகவரியிலும் புகாரை பதிவு செய்யலாம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி மையத்தின் போன் எண் மற்றும் இணையதள முகவரி குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தெற்கு ரயில்வே முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், 22.01.2018 முதல் 28.01.2018 வரை, விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும், 10.02.2018 ம் தேதி வரை, முக்கிய ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முழுவதும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.02.2018

Friday, February 2, 2018

விடுதலைப் பத்திரம்

விடுதலைப் பத்திரம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு மிக அதிகமான பங்குதாரர்கள் இருந்தாலோ அல்லது பங்கு பிரிக்க முடியாதபடி சிறிய சொத்தாக இருந்தாலோ அல்லது அதனை யாரும் தனியாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை இருந்தாலோ, இருக்கின்ற பங்குதாரர்களில் ஒருவருக்கோ அல்லது சிலருக்கோ மற்ற பங்குதாரர்கள், (பங்கை அனுபவிக்க இருப்பவர்களிடமிருந்து அவர்கள் பங்குக்குரிய பணத்தை பெற்றுக் கொண்டு) விட்டுக்கொடுத்து அதனை ஒரு பத்திரம் மூலம் எழுதிக் கொள்வார்கள். இதனையே விடுதலைப் பத்திரம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் இதற்கு (Release Deed) என்று பெயர். தனி மனித உரிமைகளைக் கூட விட்டுக் கொடுப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை Releasor என்றும், விடுதலைப் பத்திரம் எழுதி வாங்குபவரை Releasee என்றும் சொல்கிறார்கள்
வித்தியாசங்கள் 
மற்ற பத்திரங்களுக்கும் இதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. 
1. இதற்கு நிரந்தரமான முத்திரைக் கட்டணம் கிடையாது. மற்ற பத்திரங்களுக்கு இருப்பது போல் ஒரே அளவாக இல்லாமல்  சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல மாறுபடும்.
2. மற்ற பத்திரங்கள் அசையாச் சொத்துகள் குறித்த நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால், விடுதலைப் பத்திரமானது அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகியவற்றில் உள்ள உரிமைகள் மட்டுமல்லாமல், கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் ஆகியோர்களுக்கிடையே இருக்கின்ற, தனி மனித உரிமைகளைக் கூட விட்டுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
3. சொத்துக்களை அடமானம் வைக்கும் போதோ அல்லது அந்த சொத்துக்களின்மீது கடன் வாங்கும் போதோ எழுதிக் கொடுக்கப்படுகின்ற விடுதலைப் பத்திரம், அந்த அடமானத்தை அல்லது அந்தக் கடனை முழுமையாக தீர்த்துவிட்டால், அடமானம் பெற்றவரிடமிருந்தோ, கடன் கொடுத்தவரிடமிருந்தோ அந்த சொத்தின் உரிமையாளரால் திரும்பப் பெறப்படுகிறது.
கவனம் தேவை
விடுதலைப் பத்திரம் என்பது உங்களது உரிமைகளை சில நேரங்களில் தற்காலிகமாகவும், சில நேரங்களில் நிரந்தரமாகவும் விட்டுக் கொடுத்து எழுதி பதிவு செய்யப்படுகின்ற ஒரு ஆவணமாகும்.  ஆகையால், மிக கவனமாக எழுத வேண்டும். ஒருமுறைக்கு பலமுறை படித்துப் பார்த்து கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் அதனை நாம் திரும்பப் பெற முடியும். 

விடுதலைப் பத்திரம் மாதிரி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விடுதலை ஆவணம்

201_______ம் வருடம் _______ மாதம் _____ம் நாள் _________________________ விலாசத்தில் வசிக்கும் திரு.__________ அவர்களின் குமாரர் சுமார் ____ வயதுள்ள திரு. __________ (அடையாள அட்டை ______) (கைபேசி எண்.______) ஆகிய தங்களுக்கு

_________________________ விலாசத்தில் வசிக்கும் திரு.__________ அவர்களின் குமாரர் சுமார் ____ வயதுள்ள திரு. __________ (அடையாள அட்டை ______) (கைபேசி எண்.______) ஆகிய நான்

மனப்பூர்வமான சம்தத்துடன் சம்மதித்து எழுதிக்கொடுக்கும் விடுதலைப் பத்திரம் என்னவென்றால்.

இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘ஏ’ ஷெடியூல் சொத்தானது ____________. ________________ பதிவு மாவட்டம், ____________ சார்பதிவகம், ________________ கிராமம், சர்வே எண்.______ மனை எண்._____, கதவு எண்.______________________ இதற்கு உட்பட்ட விஸ்தீரணம் ____________ சதுரடிக்கொண்ட சொத்தினை, நமது தகப்பனார் திரு.________________ அவர்கள் கடந்த ____________ந் தேதியில் ________________ சார்பதிவாளர் அலுவலகம் 1 புத்தகம், _______ வருடத்திய __________ம் ஆவண எண்ணாக பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரப்படிக்கு, தமது பெயருக்கு கிரையம் கிடைக்கப் பெற்று அன்று முதல் அவர் மேற்படி சொத்தினை அவருடைய சுவாதீனத்தில் சர்வ அக்கு உரிமைகளுடன் சர்வ வில்லங்கச் சுத்தியாய் ஆண்டனுபவித்துக்கொண்டு வந்தார்.

அவ்வாறு ஆண்டனுபவித்து வருகையில் நமது தகப்பனார் பிரஸ்தாப சொத்தைப் பொருத்து எந்தவித ஏற்பாடும் செய்யாமல் ______ தேதியில் காலமாகிவிட்டார். அவர் காலத்திற்கு பிறகு அவரது வாரிசுகள் என _______ வட்டாட்சியர் வழங்கிய வாரிசுரிமை சான்று எண்.______ நாள்.________ன்படி நமது தாயார் திருமதி.___________ மற்றும் நாம் இருவரும் வாரிசுகள் ஆவோம்.

இந்நிலையில் ______ தேதியில் நமது தாயாரும் இயற்கை எய்திவிட்ட நிலையில், பிரஸ்தாப சொத்தை நமது தந்தையின் நேரடி வாரிசுகளாக நாம் இருவர் மட்டும் கூட்டாக அனுபவித்து வருகிறோம்.

மேலும் நம்மால் இச்சொத்தை கூட்டாக ஆண்டனுபவிக்க முடியாத காரணத்தினாலும், தங்கள் மீது எனக்குண்டான அன்புனாலும், பிரியத்தினாலும் இதனடியில் ‘பி’ ஷெடியூலில் கண்ட எனக்குண்டான பிரிபடாத 1/2 பாக சொத்தினை, இன்றைய தேதியில் நான் தங்களின் பெயருக்கு இந்த விடுதலை பத்திரப்படிக்கு விடுதலை செய்து தங்களின் சுவாதீனத்தில் ஒப்படைத்து விட்டேன்.

ஆகையால் இன்று முதல் தாங்கள் இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘பி’ ஷெடியூல் சொத்தினை தங்கள் பெயரில் மனைக்குரிய ரெவின்யு ரிக்கார்டுகளையும், பட்டாவையும் சப்-டிவிஷன் செய்துக்கொண்டும், கட்டிட கட்ட அனுமதி பெற்றக்கொண்டு, மாநகராட்சி கட்டிட வரிவகையறாக்கள், மின்இணைப்பு வரி வகையறாக்கள், குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி வகையறாக்கள் உள்ள பாகத்திற்கு பெயர் மாற்றிப் பெற்றுக்கொண்டு, தங்களின் இஷ்டம்போல் தங்களின் புத்திர பௌத்திர பாரம் பரியமாய், வித்தொத்தி தானாதி வினிமிய விக்கிரையங்களக்கு உரித்த யோக்கியங்களுடன் சர்வ சுதந்திர பாத்தியதைகளுடன் சர்வ வில்லங்க சத்தியாய் ஆண்டனுபவித்துக்கொள்ள வேண்டியது.

அப்படி தாங்கள் இன்று முதல் இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘பி’ ஷெடியூல் சொத்தினை ஆண்டனுபவித்துக் கொள்வதில் எனக்கும், எனது வாரிசுகளுக்கும், சந்ததிகளுக்கம் மற்ற உள்ள எவருக்கும் எவ்விதமான சொந்தமும், சம்மந்தமும், பாக அக்கு வாரிசு உரிமையும், பின்தொடர்ச்சி தாவாக்களும் ஏதும் கிடையாது என்று இதன் மூலம் நான் உறுதி அளிக்கிறேன்.

சொத்து விவரம்
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

ஆக இந்தப்படிக்கு நான் கீழ்கண்ட சாட்சிகள் முன்னிலையில் மனப்பூர்வமான சம்மதித்து எழுதிக் கொடுத்த விடுதலை ஆவணம் ஆகும்.

சாட்சிகள்.


1.

2.

******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 03.02.2018