disalbe Right click

Showing posts with label ஆய்வு. Show all posts
Showing posts with label ஆய்வு. Show all posts

Sunday, August 13, 2017

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!
இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
➤  இது கையெழுத்தே இல்லை.
➤  இது என்னோட கையெழுத்து இல்லை.
➤  இது அவருடைய கையெழுத்து இல்லை
➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.   
இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?
கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?
1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம். 
கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?
2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.
 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?
3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்.
Tamilnadu Forensic Sciences Department and Lab.  Addresses:
1. The Director, 
    Forensic Sciences Dept, 
    30-A, Kamarajar salai, 
    Mylapore, 
    Chennai- 600 004. (Phone: 044-28447771, Fax: 28447767)
    E-mail:forensic(at)tn.nic.in  

2. The Asst. Director, 
    Forensic Sciences Dept, 
    Ezhilagam Annexe, 
    Chepauk, 
    Chennai- 600 005. (Phone: 044-28517217) 

3. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    219, Race course road, 
    Coimbatore- 641 018. (Phone: 0422-2214695)  

4. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Collector office road, 
    Madurai- 625 020. (Phone: 0452-2531966)  

5. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Thanjavur Medical College Campus 
    Thanjavur - 613 004. (Phone: 04362-240016)  

6. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Tirunelveli Medical College Campus 
    Tirunelveli - 627 011. (Phone: 0462-2575675)  

7. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Phase-3, Sathuvachery 
    Vellore - 636 009. (Phone: 0416-2253255)  

8. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    55, Chinaiah road, Maravaneri. 
    Salem - 636 007. (Phone: 0416-2253255)  

9. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    165/90,Thiru.vi.ka. nagar, Pudur 
    Trichy - 620 017. (Phone: 0431-2770400)  

10. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Master  Plan Complex, 
    Viluppuram - 605 602. (Phone: 0414-224680)  

11. The Asst. Director, 
    Regional Forensic Sciences Lab., 
    Master Plan Complex, Sethupathy Nagar,
    Ramanathapuram - 623 503. (Phone: 0467-230646)  


குறிப்பு:  கையெழுத்துக்களை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் அல்லது காவல்துறை மூலமாகவே மேற்கண்ட அலுவலகங்களை அணுக முடியும்.
***************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Wednesday, October 19, 2016

கோவில் இல்லாத ஊரில்


கோவில் இல்லாத ஊரில் ..... என்ன செய்ய வேண்டும்?

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் உட்கருத்து என்னவாக இருக்கும்? அக்காலக் கோயில்கள் எப்படி செயல்பட்டன? 

இதுபற்றிச் சொல்கிறார், டாக்டர்.எஸ்.சாந்தினிபீ… 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை; தமிழ்ப் பெண்மணி; பல வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதியுள்ளவர்.

மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எல்லாக் கோயில்களிலும் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களே இரவின் இருளை நீக்கி, வெளிச்சம் தந்தன. அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு எனப் பல வகைகள் இருந்தன. 

இவற்றுக்கான எரிபொருள், பெரும்பாலும் மன்னர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அள்ளித்தந்த தான தர்மங்களில் இருந்து வந்தவையே. 

அணையா விளக்கான ஒரு நந்தா விளக்கை பராமரிக்க 96 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த ஆடுகள், கோயில் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்த ஆடு மேய்ப்போர்களிடம் கொடுக்கப் பட்டன. கைம்மாறாக, ஆடுமேய்ப்பவர்கள் நாள்தோறும் ஓர் ஆழாக்கு நெய் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். 

இப்படி ஒரு விளக்குக்கு 96 ஆடுகள் எனில், ஆயிரக்கணக்கான தீபங்களுக்கு எத்தனை ஆடுகள் விடப்பட்டிருக்கும்! இதன் மூலம் ஆடு மேய்ப்பவர்கள் வாழ்வாதாரம் பெற்றனர். 

கோயிலுக்கு வரும் நெய், நெல், பழம், காய்கறி, பூமாலை மற்றும் அபிஷேகப் பொருட்களை அளக்கும் மற்றும் எண்ணும் பணியினாலும் எண்ணற்றோர் பலன் அடைந்தனர். நெல்லைக் குத்தவும், தரம் பிரிக்கவும் நூற்றுக்கணக்கானோர் தேவைப்பட்டனர். கோயில் நந்தவனங்களைப் பராமரிக்க, பூக்களைப் பறிக்க, மலர் மாலைகளைத் தொடுக்க ஒரு சிறு தொழில்கூடம்போல பலரும் செயல்பட்டனர். 

அதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு மற்றும் அர்த்த ஜாமம் என பல வேளை பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தமையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்தன. 

ஒவ்வொரு வேளை பூஜையின்போதும் கடவுளுக்குப் படைக்கப்படும் உணவு வகைகள் கோயிலுக்கு உள்ளே சமைக்கப்பட்டன. இத்துடன், இலையில் எத்தனை வகை காய், கூட்டு, வெற்றிலை, பாக்கு இடம்பெற வேண்டும் என்பதை தானம் வழங்கியவரே நிர்ணயித்தார். இவை அனைத்தும் சேர்ந்ததே ஒரு தளிகை எனப்படும். 

இப்படி ஒரே ஒரு வேளைக்காக ஆயிரக்கணக்கான தளிகைகள் தயாரிக்கப்பட்டதாக ரங்க கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

கடவுளுக்கான துணிகளை நெய்பவர்கள், ஆபரணங்களைச் செய்பவர்கள், ஆடையில் விலையுர்ந்த கற்களைப் பதிப்பவர்கள், துப்பரவாளர்கள் என பலர் தங்கள் பணிகளினால் பயன்பெற்று வந்தார்கள்.
கோயில் நிலங்களில் வேளாண்மை நடந்தது. 

தானங்களைப் பரிபாலனம் செய்பவர், கோயிலை அழகுபடுத்துபவர், கோலமிடுபவர், மேளதாளம் வாசிப்பவர், வாய்ப்பாட்டு வாசிப்பவர், நடனமாடுபவர் என தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றி பயன் பெற்றனர். 

கோயில்களின் நாற்புற வாசல்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் உள்ள பானைகளில் எந்நேரமும் தண்ணீர் நிரப்பி வைக்கவும், அருந்துவதற்கு எடுத்துக் கொடுக்கும் பணிகளிலும் பலர் அமர்த்தப்பட்டனர். 

உதாரணமாக, தஞ்சை பெரிய கோயிலை பேரரசன் ராஜராஜன் கட்டிய புதிதில் 900 பேரை பணி அமர்த்தியதாக கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பணியாற்றியவர் களுக்கு என அரசு சார்பில் அளிக்கப்பட்ட குடியிருப்புகளின் விலாசம் மற்றும் ஊதிய விவரமும் அங்குள்ள கல்வெட்டுகளில் துல்லியமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 

இவ்வளவு பெரிய அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பினை தந்த வேறு ஓர் அமைப்பு அக்காலத்தில் இருந்திருக்குமா என்பது ஐயமே! 

தானமாக வரும் பணம், தங்கம் போன்றவற்றை கிராம சபைகளுக்கும், மக்களுக்கும் தேவையான காலங்களில் வட்டிக்குக் கடன் உதவி செய்து நவீன கால வங்கிகள்போல் செயல் பட்டன கோயில்கள். முக்கியமாக, இயற்கை சீற்றங்களின்போது, கிராமங்களின் மறுவாழ்வுக்காக கோயில் சொத்து பயன்பட்டது. 

மக்கள் கடவுளுக்கு அளித்த காணிக்கை அவர்களுக்கே பயன்பட்டது. இதற்கு ஆதாரமாக தஞ்சையின் ஆலங்குடியில் கிடைத்த சோழர் காலத்து கல்வெட்டுகளில் `பொதுமக்கள் கால தோஷம் காரணமாக கோயிலின் பண்டாரத்திலிருந்து எல்லா தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மொத்தம் 1011 கழஞ்சு தங்கம், 464 பலம் வெள்ளி கடனாக பெற்றுக் கொண்டனர்’ எனக் பொறிக்கப்பட்டுள்ளது.

கோயில்களின் பரந்த இடம் கல்வி நிலையங்களாக செயல்பட்டன. பாகூர், திருபுவனி, எண்ணாயிரம், திருமுக்கூடல், திருவாடுதுறை மற்றும் திருவற்றியூர் ஆகிய ஆறு இடங்களில் உயர் கல்விக்கூடங்கள் இருந்தது பற்றியும், அதன் மாணவர்கள், ஆசிரியர்கள், இவர்களது சம்பள விவரம் மற்றும் போதிக்கப்பட்ட பாட விவரங்கள் என அனைத்தும் அந்த ஆறு இடங்களில் உள்ள கோயில்களின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 

கோயில்கள் விழாக்காலங் களில் கலைகளை வளர்க்கும் கூடங்களாகவும் செயல்பட்டன. அதே போல, போக்கற்ற வர்களுக்கும், யாத்ரிகர்களுக்கும் உணவும் உறைவிடமும் தரும் இடமாகவும் திகழ்ந்தன. தன் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும் கோயில்கள் வாழ்வளித்துள்ளன. 

இந்நிலைக்கு ஆளான மக்கள் தம்மை கோயிலுக்கு விற்றுக்கொண்டு அடிமையாகிவிடும் வழக்கம் இருந்துள்ளது. 

இதில் கிடைக்கும் தொகையில் அம்மக்கள் தாம் பட்ட கடனை அடைத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் கோயிலுக்குப் பணி செய்து கிடப்பார்கள். திருபுவனியின் கல்வெட்டுகளில் மூன்று தலைமுறைகளாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 உறுப் பினர்கள் தங்களை கோயிலுக்கு அடிமைகளாக விற்றுக்கொண்ட செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

தற்போது கடன் சுமையால் நடைபெறும் தற்கொலைகள் அக்காலத்தில் நடைபெறாமல் காத்துள்ளன கோயில்கள். 

கோயில் அமையப்பெற்ற ஊர் மக்கள் மட்டுமின்றி, அவ்வூரைச் சுற்றியிருந்த மக்களும் அந்தக் கோயிலால் பயன்பெற்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படாமலும் கோயில்கள் உதவின. 

இப்படிப் பன்முகப் பயனாக செயல்பட்டமை தான்… ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழி ஏற்படக் காரணம்.

ஆலயங்கள் போற்றுவோம்!

நன்றி : அவள்விகடன் - 01.11.2016

Sunday, April 19, 2015

கையெழுத்து


கையெழுத்து 
கையெழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமாக வடிவமைத்துக்கொள்ளும் அடையாளம். இக்கையெழுத்தை நாம் எவ்வாறு, வடிவமைக்கின்றோமோ, அதை பொறுத்து நம் குணாதிசயங்கள் முடிவுசெய்யப்படுகின்றதாக கூறுகின்றனர். உங்கள் கையெழுத்துடன் ஒப்பிட்டு பாருங்களேன்.
பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாக பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள். சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையையும் திட்டவட்டமாக ஒழுங்காக செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
இவர்கள். எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள், எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள். 

எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள், பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள். எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள், எந்தப் பிரச்னைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்கும், மனஉறுதி படைத்தவர்கள்.
வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள், சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள். சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
எழுத்துக்களை நீட்டி, நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள், எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள். எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள், வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள். எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள், விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள். 
எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள், குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள். எழுதும்போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப் போக்குடையவர்கள்.
உங்கள் கையெழுத்து எப்படி இருக்கிறது என்பதை வைத்து உங்கள் குணம் தீர்மானிக்கப்படுவது, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 
மிக மோசமான கையெழுத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் எழுத்தில் உள்ள நல்ல கருத்துக்களால் புகழ் பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அழகான கையெழுத்தை உடையவர்கள் பலர், இன்று மாதக்கடைசியானால் பிறரிடம் கடன் வாங்குபவர்களாக உள்ளனர். ஆகவே, அவரவர்களின் திறமை, பேச்சு சாதுர்யம், படிப்பு, அனுபவம், புத்திசாலித்தனம் ஆகியவைதான், அவரது ஆளுமை, வாழ்வில் சிறந்த மனிதராக மாறுவது ஆகியவற்றை தீர்மானிக்கிறது. 
ஆனாலும் கிராபாலஜி எனும் இந்த கையெழுத்து கலையை அலட்சியம் செய்து விட முடியாது. ஓரளவுக்கு நிபுணர்கள் கணிப்பது சரியாகவே இருந்து வருகிறது.

Friday, April 10, 2015

பிரேத பரிசோதனை நடப்பது என்ன?


பிரேத பரிசோதனை நடப்பது என்ன?
**********************************************

மரணங்களுக்குப் பின்னால் உள்ள எத்தனையோ புதிர்களைத் தீர்க்கக்கூடிய இடம் பிரேதப் பரிசோதனை அறை.
ஆனால், இந்தியாவில் பெரும் பாலான பிரேதப் பரிசோதனைகள் முறையாகச் செய்யப்பட வில்லை என்கிறார் மருத்துவர் டிகால்.
சட்டம் சார்ந்த சிறப்பு மருத்துவரான இவர், பல வருட அரசுப் பணிக்குப் பிறகு, தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இணை தடயவியல் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
இதுவரை 2,000 பிரேதப் பரிசோதனைகளைச் செய்துள்ளார். 2ஜி வழக்கில் சர்ச்சைக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படும் சாதிக் பாட்சாவின் உடலைப் பரிசோதனை செய்தவர் இவர்தான்.
தடயவியல் ஆய்வுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை முறைகளில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசுகிறார்.
தடயவியல் ஆய்வில் பிரேதப் பரிசோதனையின் பங்கு என்ன?
*************************************************************************************************

தடயவியல் என்பது கடல். அதில் சிறிய பகுதி தடயவியல் மருத்துவம். ஒரு குற்றம் மனித உடல் சார்ந்த குற்றம் எனில், பிரேதப் பரிசோதனை மருத்துவரின் அறிக்கை அதற்கு அவசியம்.
இந்தியத் தடயவியல் துறையிடம் எவ்வளவோ வசதிகள் இருந்தும் நிறைய மரணங்கள் மர்மமாகவே இருப்பதற்கான காரணம் என்ன?
பெரும்பாலும், பிரேதப் பரிசோதனை மேஜையிலேயே மரணத்துக்கான காரணத்தை மருத்துவர் கண்டுபிடித்துவிட முடியும். வசதிகள் இருந்தாலும், நமது நாட்டைப் பொறுத்தவரை பிரேதப் பரிசோதனை நடைமுறைகளில் நிறையக் குளறுபடிகள் உள்ளன.
பிரேதப் பரிசோதனைக்கான சடலத்தைக் காவல் துறையினர் அளிக்கும்போதே மரணத்துக்குள்ளானவர் என்னென்ன காரணங்களால் இறந்திருக்கக் கூடும் என்ற தங்கள் விசாரணை விவரங்களைச் சான்றிதழாகக் கொடுத்து விடுகிறார்கள். காவல் துறையின் அறிக்கையையே அரசு மருத்துவரும் கொடுத்துவிட்டால் அந்த வழக்கே முடிந்து விடும். இந்தியாவில் எத்தனை வழக்குகளில் காவல் துறையினர் சொல்வதற்கு மாறாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, சொல்லுங்கள்? அதனால்தான் சொல்கிறோம். புலனாய்வு செய்யும் போலீஸும் அரசு மருத்துவரும் மட்டும் போதாது. சந்தேகப் படும் தரப்பு சார்பில் மருத்துவ நிபுணர் பிரேதப் பரிசோதனை அறையில் இருந்தால் மட்டுமே பிரச்சினை தீர்க்கப்படும்.
மேல்முறையீடு செய்வது சந்தேகம் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லையா?
பெரும்பாலும் பரிசோதனை முடிக்கப்பட்ட அன்றே சடலத்தை எரித்துவிடுவார்கள். இல்லையென்றால், அடுத்த நாள் காலை அழுகிவிடும். அதற்குப் பிறகு என்ன செய்வது?
அப்படியெனில், உண்மையாகவே பிரேதப் பரிசோதனை நடப்பதில்லை என்கிறீர்களா?
மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை அறைக்கே பெரும் பாலும் போவதில்லை. எம்.டி. படிக்கும் மாணவர்கள்தான் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். இவர்கள் கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். எம்.பி.பி.எஸ். படித்த யாரும் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்ற அனுமதி உள்ளது.
மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. வெட்டுக் காயத்தால் இறந்தவர் தொடர்பான வழக்கு அது. பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய மருத்துவர் உள்ளேயே போகவில்லை. மரணத்துக்கான காரணம் ஆஸ்துமா என்பதாகவும், நுரையீரலைத் திறந்து பார்த்த தாகவும் அறிக்கை கொடுத்துவிட்டார்கள்.
பிரேதப் பரிசோதனை அறைக்கு மருத்துவர்கள் ஏன் போவதில்லை?
மருத்துவர்கள் உள்ளே நுழையும் நிலையில் அந்த இடம் உள்ளதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
பிரேதப் பரிசோதனையில் நடக்கும் தவறுகளுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்?
சமீபத்தில் என்னிடம் நிபுணர் ஆலோசனைக்காக ஒரு வழக்கு வந்துள்ளது. நெல்லூரில் நடந்த ஒரு மாணவியின் மரண வழக்கு அது. நான்கு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அந்த மாணவி, தன் கழுத்தைத் தானே நெரித்துக்கொண்டு இறந்துவிட்டதாக அறிக்கை கொடுத்துள்ளனர். ஒருவர் தனது கழுத்தைத் தானே நெரித்துக்கொண்டு சாவதற்கான சாத்தியக்கூறு 0.0001 சதவீதம்தான் இருக்கிறது. அப்படியிருக்க, இது வரை அதைக் கொலை வழக்காகப் பதியவில்லை. அந்த மாணவியின் பெற்றோர் இது தற்கொலை என்று நம்ப மறுக்கின்றனர். சிபிஐ விசாரணை கேட்கின்றனர். ஆந்திர உயர் நீதிமன்றமோ எந்தக் காரணத்துக்காக சிபிஐ விசாரணை என்று கேட்கின்றனர். நிபுணர் பரிந்துரைக்காக என்னிடம் வந்தனர். கழுத்தைப் பிறர் நெரிக்கும்போது, அனைத்துச் சதைகளும் அழுத்தப்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும். அதையே மருத்துவரும் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். ஆனால், அது எப்படித் தற்கொலை வழக்கானது? பெரும்பாலான வரதட்சணைக் கொலைகளில் இப்படித்தான் பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு முடிக்கப்படுகிறது.
சட்டரீதியான விசாரணையில் பிரேதப் பரிசோதனை செய்பவரின் இடம் எது?
பிரேதப் பரிசோதனை செய்பவர் ஒரு சந்தேகத்தை மட்டுமே எழுப்ப முடியும். அவர் ஒரு சாட்சி. அவ்வளவுதான். மரணத்துக்கு உடல்ரீதியான காரணங்கள் என்னென்ன என்று மட்டுமே அவரிடம் கேட்பார்கள். நீதிமன்றத்தால் எந்த வழக்கிலும் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையை நேரடியாக உணர முடியாது. மருத்துவரின் பணி என்பது அந்த உண்மைக்கு நெருக்கமாக நீதிமன்றத்தைக் கொண்டு நிறுத்துவதுதான். இருட்டுக்குள் தடவிச் செல்வதைப் போன்ற பாதை அது. உடலில் இருந்ததை விஞ்ஞானபூர்வமாக உண்மையாகச் சொன்னால் போதும். ஆனால், அந்த உண்மையைச் சொல்ல முடியாத நிலையில் நடைமுறைகளில் எவ்வளவோ ஓட்டைகள்!
புகார்தாரர் சார்பில் ஒரு நிபுணர் பங்குகொண்டால் என்ன வகையான மாற்றங்கள் ஏற்படும்?
பிரேதப் பரிசோதனைக்கான படிவத்திலேயே புகார் தாரரிடம், அவருடைய சார்பில் மருத்துவர் வேண்டுமா என்று கேட்பதற்கான இடம் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளில் புகார்தாரர் தரப்பாக தனியார் மருத்துவர்களை நியமிக்கலாம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவர்களை அனுப்பலாம். வீடியோ எடுப்பது அனைத்துப் பிரேதப் பரிசோதனைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இப்போதைய நடைமுறைப்படி, ஒரு மருத்துவரே பிரேதப் பரிசோதனை செய்யும் நிலையில் தன்னுடைய அறிக்கையை அவர் எத்தனை காலம் வேண்டுமானாலும் முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்க இயலும். ரசாயனப் பரிசோதனைக்குக் காத்திருப்பதாகக் காரணம் சொல்லலாம். ஒரு சாதாரண ஊழியரின் மூலம் அங்குள்ள சாம்பிள்களை மாற்றிவிட முடியும். மூன்று நாட்களுக்குள் ஒரு சோதனையை முடித்து அறிக்கை அனுப்பும் வகையில் அங்குள்ள உள்கட்டமைப்பையும் பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும்.
பிணவறைகளையும் பிரேதப் பரிசோதனை அறையையும் எப்படி மேம்படுத்த வேண்டும்?
உடலின் ஒவ்வோர் அடுக்கையும் கத்தியால் வெட்டும்போதும் வேறு வேறு கையுறைகளை அணிய வேண்டும். ஆனால், அது நடைமுறையில் இல்லை. அழுக்குக் கையால் ஒரு மாதிரியை எடுத்தால் துல்லியமான முடிவுக்கு எப்படி வர முடியும்? பல வருடங்களாக ஒரே உடைகளை எப்படித் துவைத்துப் பயன்படுத்த முடியும்? கையுறை, காலுறை, மேல் கோட் உட்பட ஒரு முறையே பயன்படுத்தும் வகையில் இருத்தல் அவசியம். எல்லாவற்றுக்கும் டிஸ்போஸபிள் வேண்டும். மொத்த டிஸ்போஸபிள் உடை ஒரு செட்டுக்கு ரூ.100-தான் ஆகும்.
அதேபோல், பிணவறைக்குள்ளேயே உடைமாற்று அறை, ஷவருடன் இருக்க வேண்டும். குளிர்சாதன வசதி, நீர் உடனடியாக உலரும் வகையில் வழுக்காத தரைகள், சடலங்களைப் பார்வையிடும் அறை ஆகியவை அவசியம். சாதாரண வீட்டின் சமையலறையிலேயே சிம்னி வசதி வேண்டும் என்கிற காலம் இது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறையில் சிம்னி கிடையாது. சடலத்தைத் திறக்கும் போது எத்தனை அழுக்குகள், கிருமிகள் வெளிவரும். அதை உறிஞ்சி மேலே அனுப்ப சிம்னி வேண்டாமா? வெளி நாடுகளில் அந்த வசதிகள் பக்காவாக இருக்கின்றன.
இந்திய மருத்துவமனைகளில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், பிணவறையும் பிரேதப் பரிசோதனை அறையும் மட்டும் ஏன் அப்படியே இருக்கின்றன?
ஒரு ஊழலான அமைப்பைச் சரிசெய்வதற்கு அனைத்து அங்கங்களிலும் மாற்றம் அவசியம். ஒரு பிணவறை நவீனமாவதை மருத்துவர் விரும்ப மாட்டார். ஏனெனில், வீடியோ கேமரா இருந்தால், எல்லா பிரேதப் பரிசோதனைகளிலும் அவர் பங்கேற்க வேண்டும். கத்தியை எடுத்து சடலத்தைக் கட்டாயமாக வெட்டிப் பார்க்க வேண்டும்.
ஆனால், இப்போது எந்த மருத்துவரும் சடலத்தைத் தொடுவதேயில்லை. ‘ஸ்வீப்பர்’ என்று சொல்லப்படும் கீழ்நிலைப் பணியாளர்கள்தான் கத்தியைக் கையாள்வார்கள். அவர்களும் முறையான கல்விப் பின்னணியோ, பயிற்சியோ இல்லாதவர்கள். ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சி கொடுத்து இப்பணியில் நியமிக்கலாம். ஆனால், அதற்குக்கூட அரசு இதுவரை வழிவகை செய்ய வில்லை. இதுபோன்ற மாற்றத்தை மருத்துவர்களும் விரும்ப வில்லை. அரசுத் தரப்பில் கொடுக்கப்படும் நிதி எதையும் பிரேதப் பரிசோதனை முறையை மேம்படுத்துவதற்கு டீன்கள் ஒதுக்குவதேயில்லை. ஏனெனில், ஒதுக்கப்படும் நிதி குறைவு. ஒரு புதிய கத்தரிக்கோல் வாங்குவதற்கு எத்தனை ‘பார்மாலிட்டிஸ்’ நடக்கும் தெரியுமா?
வேறு என்ன செய்யலாம்?
நீதிபதி பி.என். பிரகாஷ் சமீபத்தில் ஓர் அருமையான தீர்ப்பு கொடுத்திருக்கிறார். அடையாளம் தெரியாத சடலங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பரிசோதிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்குக் கூறியுள்ளார். அவர்களுக்கு நடைமுறை அறிவுபெற சடலங்கள் தேவை. அடையாளம் தெரியாத உடல்களை மூன்று நாட்கள் குளிர்பதனத்தில் வைக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகும் யாரும் கோராத நிலையில், தனியார் மருத்துவமனை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரேதப் பரிசோதனை செய்யும் அரசு மருத்துவருக்கு உதவித்தொகை உண்டா?
ஒரு பிரேதப் பரிசோதனைக்கு 500 ரூபாய்கூட உதவித் தொகை அரசு மருத்துவர்களுக்குக் கிடையாது. சமீப காலம் வரை ஒரு பிரேதப் பரிசோதனைக்கு 75 ரூபாய் கொடுத்தனர். ஊதிய கமிஷன் இப்போதுதான் 150 ரூபாயைப் பரிந்துரைத்துள்ளது. கடைநிலைப் பணியாளருக்கு ஒரு பிரேதத்துக்கு 12 ரூபாய் வரை கிடைக்கும்.
ஒரு பிரேதப் பரிசோதனை நிபுணராக மரணத்தையும், மரணமடைந்த ஒரு உடலையும் எப்படி விளக்குவீர்கள்?
எங்கள் துறையில் சொல்வார்கள்: இறந்த உடலைப் பொறுத்தவரை அது உண்மையை மட்டுமே பேசும். அது பேசும் மொழியை மட்டுமே மருத்துவர் தெரிந்திருக்க வேண்டும். அந்த மொழிதான் அறிவியல். இறந்த உடல் சொல்லும் அனைத்தையும் எனது அனுபவத்தையும் அறிவையும் வைத்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் கற்றது கைமண் அளவு என்பதே உண்மை.
..........................தி இந்து நாளிதழ் செய்திகள், 08.02.2015....................