disalbe Right click

Showing posts with label இணையதளம். Show all posts
Showing posts with label இணையதளம். Show all posts

Monday, October 10, 2016

குழந்தைகளைக் காக்க புது இணையதளம்


குழந்தைகளைக் காக்க புது இணையதளம் - என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் இந்தச் சமூகத்தில்தான் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

குறிப்பாக இணையதளம் மூலம் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதும் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆன் லைன்களில் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக முதன்முறையாக நம் நாட்டில் aarambhindia.org என்ற இணையத்தைத் தொடங்க உள்ளது. இது இங்கிலாந்தைச் சேர்ந்த Internet Watch Foundation (WIF) -உடன் தொடர்புடையது. WIF- ஆன் லைனில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காவே இயங்கிவரும் நிறுவனம்.

நாம் ஆன் லைன் பயன்படுத்தும்போது குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டால் அதன் லிங்கை  aarambhindia.org  அனுப்பிவைத்தால் போதும். 

 உடனே அந்த லிங்க் செயல்படாமல் முடக்குவதுடன், அதை யார் செயல்படுத்துகிறார், இதற்கு காரணமானவர்கள் யார் எனக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இந்த இணையதளம் முயற்சிகளை எடுக்கும். 

பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய, குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் பற்றிய குறும்படங்களும் இந்தத் தளத்தில் உள்ளன.

தொடக்கமாக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர இருக்கும் aarambhindia.org இணையதளம், விரைவிலேயே இந்தியாவின் 22 பிரந்திய மொழிகளிலும் செயல்படும். 

அடுத்த வாரம் முதல் இந்த இணையதளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற செயல்கள் தொடர்புடைய 'லிங்க்' களைப் பதிவு செய்யலாம். 

இந்த இணையதளம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்.

குரூர எண்ணம் கொண்டவர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்போம்.

-------------------------------------------------------------------------------------------என்.மல்லிகார்ஜுனா

நன்றி : விகடன் செய்திகள் - 14.09.2016

Friday, October 7, 2016

ஆன்லைனில் ஆர்.டி.ஐ. கேள்வி பதில்கள்


ஆன்லைனில் ஆர்.டி.ஐ. கேள்வி பதில்கள் - என்ன செய்ய வேண்டும்?

புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்:

ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் அரசுத் துறை செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இந்த சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. 

எனினும், சில அரசுத் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைனில் பதிவேற்றம்:

அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் குறித்த தகவல்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 எனினும், ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது. அனைத்து மத்திய அரசுத் துறைகளும் இதை கடைபிடிக்க வேண்டும். 

இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 08.10.2016

Tuesday, September 20, 2016

ஆன்லைன் ரம்மி, ஆடுனா டம்மி


ஆன்லைன் ரம்மி, ஆடுனா டம்மி - என்ன செய்ய வேண்டும்?
அப்படி என்னதான் நடக்கிறது ஆன்லைன் ரம்மியில்?
 - கலங்கடிக்கும் பின்னணி!
‘ஒண்ணு வெச்சா ரெண்டு.. ரெண்டு வெச்சா நாலு’ கணக்காக, நாளொரு விளம்பரமும் பொழுதொரு அறிவிப்புமாக நம்மைச் சீட்டு விளையாட அழைத்துக் கொண்டிருக்கின்றன பல இணைய தளங்கள். ரம்மி சர்க்கிள், ஜங்கிள் ரம்மி, க்ளாஸிக் ரம்மி, ரம்மி மில்லியனர் என்று தொடங்கி பலரும் இதை ஒரு மிகப்பெரிய வியாபாரமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், ராணா போன்ற பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்கள் இழுப்பது ஒருபுறம் என்றால், ‘நான் ஒரு லட்சம் ஜெயித்தேன்.. நான் 50000 ஜெயித்தேன்’ என்று ஷமீர், குல்கர்னி என யாராரோ இன்னொரு புறம் நம்மை ஈர்க்கப் பாடுபடுகிறார்கள்.

இந்த ஆன் லைன் விளையாட்டுகள், பாதுகாப்பானதா என்பதைவிட தேவையா என்று பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. மக்களை ஈஸியாக இழுக்கிற, வலையில் விழவைக்கிற ஆட்டங்களில் ரம்மிக்கு முதலிடம் தரலாம். உள்ளே செல்பவர்கள், தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கலாம் என்பதால், ஒருமுறை தோற்றாலும் அடுத்தமுறை ஜெயிக்கிற ஆசையில் விளையாடிக்கொண்டேதான் இருப்பார்கள்.

இந்தத் தளங்களில், விளையாடி வரும் சிலரைத்தொடர்பு கொண்டோம். அவர்கள் சொல்கிற விஷயமெல்லாம் கொஞ்சம் கிலி ஏற்படுத்தத்தான் செய்கின்றன.

“ஒரு தடவை விளையாடிட்டீங்கன்னா.... அப்பறம் அது உங்களை உள்ள இழுத்துடும். ரம்மி ஒரு மிகப்பெரிய அடிக்‌ஷன். என் தம்பி ஃப்ரெண்ட் விளையாடிட்டிருந்தப் பார்த்து திட்டின நானே ஒரு நாள் அதில் அப்படி என்னதான் இருக்கிறதென பார்ப்போமே என இணைந்தேன். ஒரு கட்டத்துல, ஆஃபீஸ் லீவு போட்டுட்டு விளையாடும் அளவுக்குப் போய்விட்டது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூர்த்தி.

”நேரத்தை ரொம்பவும் சாப்பிடும்” என்று பயமுறுத்துகிறார் போரூரைச் சேர்ந்த பொறியாளர் ஆதிமூலகிருஷ்ணன். “ஒரு முழு ஞாயிற்றுக்கிழமையும் இதுல உட்கார்ந்தேன் நான். அதுக்கு முந்தின நாள்தான் ஐநூறு ரூபா ஜெயிச்சிருந்தேன். அந்த உற்சாகம்! போகிற காசை விட, இதுக்கு செலவழிக்கற நேரம்தான் ரொம்பவே பயமுறுத்த ஆரம்பிச்சது. அடுத்த நாளே அன் இன்ஸ்டால் பண்ணிட்டேன்” என்கிறார் இவர்.

‘உங்க அக்கவுண்ட்ல பணம் போட்டவுடனே வர்ற முதல் கேம், நல்லா ஜெயிக்கிறாப்பல வரும். ஆர்வத்துல தொடர்ந்து விளையாடினிங்கன்னா அப்புறம் நாமம்தான்! ஆனா ஒண்ணு, ஜெயிச்ச காசை ரிக்வஸ்ட் கொடுத்தா, ரெண்டு நாளில் நம்ப வங்கிக் கணக்குக்கு போட்டுவிட்டுடுறாங்க’ இப்படிச் சொல்கிறார் பேர்லாம் வேண்டாங்க எனும் நண்பர். 

இந்த விளையாட்டில் உங்களுடன் விளையாடுவது யார் என்பது உங்களுக்குத் தெரியாது. நாம் தொடர்பு கொண்ட பலரும் ஒப்புக்கொள்கிற விஷயம் ஒன்று உள்ளது. ’ஏதாவது ஒரு ஆட்டத்தில், நீங்க நூறோ, இருநூறோ ஜெயிச்சீங்கன்னா தொடர்ந்து வர்ற பல ஆட்டங்கள்ல ஜெயிக்கவே முடியாது. 99% அப்படித்தான் அமையும். 

விளையாட வேண்டாம்னு கார்டை ஸ்கூட் (டிராப்) பண்ற மாதிரி சேரவே சேராத கார்டுகள் வந்தாலும் பரவால்லை, மூணு ஜோக்கர், நிறைய ரம்மி சான்ஸ்னு கார்டு வரும். ஒரு கார்டு வந்தா முடிஞ்சுடும் என்பது மாதிரி இருக்கும். ஆனா கூட விளையாடற அஞ்சாறு பேருக்கு கார்டு போய்ட்டு வர்றதுக்குள்ள ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்கு டென்ஷனாகும். எத்தனை ரவுண்ட் போனாலும் உங்களுக்கான அந்த ஒரு கார்டு வரவே வராது. மொத்தப் பணமும் போய்விடும்’ என்கிறார்கள். 

அது அப்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கலாம், விளையாடும் ஐந்தில் நிச்சயம் ஒன்றோ, இரண்டோ கம்ப்யூட்டரால் இயக்கப்படும் ப்ரோக்ராமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு அழுத்தமாக உண்டு என்கிறார்கள் இவர்கள். இன்னும் கூட பல டிரிக்கியான அமைப்புகள் உள்ளன என்றும் சந்தேகிக்கிறார்கள். நீங்கள் வெறுமனே ரம்மியில் தேர்ந்த நபராக மட்டும் இருந்தால் உங்கள் பணம் கோவிந்தா ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்!

இதில் பல வகையான விளையாட்டுகள் உண்டு.

*இரண்டு பேர் கொண்ட டேபிள், மற்றும் ஆறு பேர் விளையாடும் டேபிள் என நம் விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வகை ரம்மிகளும் உள்ளன. நாக்கவுட் வகை, பாயிண்ட்ஸ் வகை, 101 பாயிண்ட்ஸ், டீல்ஸ் வகை என நமக்குப் பிடித்த வகையில் விளையாட முடியும்.

*ஒரு பாய்ண்டுக்கு ஐந்து பைசா முதல், 50 ரூபாய், 100 ரூபாய் வரை வைத்து விளையாடலாம். ஒரு கேமில் ஜெயித்தாலும் தோற்றாலும் நிறுத்திவிட்டு வெளியே வந்துவிடலாம்.

*Pool Rummy. இரண்டு பேர் அல்லது ஆறு பேர் சேர்ந்து விளையாடலாம். ஆளுக்கு நூறு ரூபாய் என்றால் ஜெயிக்கறவருக்கு 500 ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.

*அத்தனை விளையாட்டுகளிலுமே, யார் ஜெயித்தாலும் குறிப்பிட்ட சதவீத தொகை  ‘கம்பேனி’க்குப் போய்விடுகிறது.

* டோர்னமெண்ட் என்றொரு வகை இருக்கிறது. 8 மணிக்கு டோர்னமெண்ட் என்றால், இரண்டு மூன்று மணிநேரங்களுக்கு முன்னதாக ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். ஐயாயிரம் பேர் எல்லாம் கூட விளையாடுவார்கள். ஒவ்வொரு ரவுண்டாக ஆட்கள் வெளியேறி கடைசி டேபிளில் ஆறு பேர் விளையாடுவார்கள். அதில் ஜெயிக்கறவர் ஒரு பெரிய தொகையை ஜெயிக்க முடியும். இதில்தான் ஆயிரங்களில் கட்டணமும், லட்சங்களில் பரிசுத்தொகையும் இருக்கிறது. இதில் ஜெயிப்பவர்கள்தான் விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். 

*புதிய ஆட்களைக் கவரவும், தோத்தாக்குளிகளை ஆறுதல் படுத்தவும் சில டோர்னமண்ட்களில் இலவச அனுமதியும் உண்டு. இது வாரத்துக்கு ஒன்றிரண்டு கேம்கள் நடக்கும். கூட்டம் பிய்ச்சுக்கும்!

*இதுபோக, புதியவர்கள் பழக டிரையல் கேம்களும் உண்டு. இதற்கு பணம் எதுவும் இல்லை. ஒப்புக்கு சப்பாணியாக விளையாடி, வார்ம் அப் செய்துகொள்ளலாம். 

இதில் சூட்சுமம் அல்லது சூழ்ச்சி என்னவென்றால், இந்தத் தளங்களை நிர்வகிக்கறவர்களே Blog உருவாக்கி ரம்மி விளையாட சிறந்த தளம் இதுதான். இதில் நிறைய பணம் சம்பாதிக்கலாம், அதில் நிச்சயம் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற ரீதியில் வாசகர்கள் எழுதியதுபோல எழுதிக் கொள்கிறார்கள்.  எல்லா வகை கேம்களும், புதியவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளும்படி, எளிதாக விளையாடும்படி யூஸர் ப்ஃரெண்ட்லியாக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ரொம்பவே கவர்ச்சியாகத்தான் இருக்கும்! உள்ளே போனால், டவுசர் தப்புவது கஷ்டம்தான்! 

அரண்மனைக்கிளி ராஜ்கிரண் போல டவுசர் ஸ்ட்ராங்காக இருந்தால் இறங்கி விளையாடிப்பாருங்கள்!!

கேமிங் என்பது சட்டத்தால் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததால்,  இதைத் தடை செய்யச் சொல்லி ராமதாஸ் போன்றவர்கள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்திலிருக்கும் ஒன்றிரண்டு ஓட்டைகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இப்படியான விளையாட்டுக்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், ‘அதெல்லாம் கரெக்டாதான் இருக்கும்’ என்று நினைப்பவர்களும் உண்டு. 

அதற்காக இந்த கேம் டெவலப்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தால், ம்ஹும்! அவ்வளவு ஈஸியாக இல்லை அது. இந்த விளையாட்டின் மெக்கானிசம் குறித்து அதை நடத்துபவர்கள் விரிவாக விளக்கமளிக்க முன்வந்தால், அதைப் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்!

-பரிசல் கிருஷ்ணா

நன்றி : விகடன் செய்திகள் - 20.09.2016



Friday, September 9, 2016

குற்றவாளிகளின் ஜாதகம் பெற


குற்றவாளிகளின் ஜாதகம் பெற என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் முதல் முறையாக, கோபியில் கைதான, ஏ.டி.எம்., கார்டு மோசடி மன்னனின் ஜாதகம், குற்றப் பின்னணி வலைப்பின்னல் திட்டத்தில், பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ.டி.எம்., மோசடி : 

ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்தவர் குருசாமி, 70; ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்ற இவரை ஏமாற்றி, 20 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்ற வழக்கில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளையராஜா, 42, என்பவனை கைது செய்தனர்.

 அவனிடம் விசாரித்ததில், மேலும் பலரது வங்கி கணக்குகளிலும் பணம் திருடியது தெரியவந்தது. அவனிடம், 23 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின், இளையராஜாவின் அங்க அடையாளம், கை ரேகை, தோற்றம், உருவம், நண்பர்கள், உறவினர்கள், அவனுடன் தொடர்புள்ளவர்கள் என, அவனது ஜாதகம் அனைத்தையும் சேகரித்து, சி.சி.டி.என்.எஸ்., என்ற குற்றம் மற்றும் குற்றப் பின்னணி கண்டறியும் வலைப்பின்னல் திட்டத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.

2013ல் அமல் : 

இதனால், அவன் தேசிய அளவில், எங்கு கைவரிசை காட்டியிருந்தாலும், வழக்கில் சிக்கியிருந்தாலும் தெரிந்துவிடும். சி.சி.டி.என்.எஸ்., திட்டம், ஈரோடு மாவட்டத்தில், 2013 செப்., 19ல் அமலானது. 

தற்போது, ஈரோடு மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழக அளவிலும், இளையராஜா ஜாதகம் தான் முதலாவதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.

நன்றி : தி்னமலர் நாளிதழ் - 09.09.2016

Monday, April 4, 2016

டிஜிட்டல் லாக்கரில் பத்திரங்களை பாதுகாக்க


டிஜிட்டல் லாக்கரில் பத்திரங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

சமீபத்திய சென்னைப் பெருமழையில் வீடு, கார் சேதமானதுடன், பலரது விலை மதிப்பற்ற ஆவணங்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகின. பல இடங்களில் உடனடி ஆவணங்கள் வழங்கும் முகாம் நடத்தி, பலரது ஆவணங்களை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மழை, வெள்ளம், தீ என எந்தவிதமான இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்கள் ஆவணங்கள் எந்த வகையிலும் தீங்கு விளையாமல் பத்திரமாக வைத்திருப்பதற்கான வழி இப்போது பிறந்துள்ளது, அதுவும் இலவசமாக நயா, பைசா செலவில்லாமல்.
டிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இணையப் பெட்டகம்தான், நம்மிடம் இருக்கும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கும் புதுமையான வழி. இது ஆன்லைனில் இயங்குவதாகும் (Online Document Storage Facility). இதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிரச்னையும் இன்றி ஆவணங்களைப் பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ அனுப்ப முடியும்.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆவணங்களையும் தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘பேப்பர் இல்லா செயல்பாடு’ (Paperless Governance) என்கிற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பதுதான் இந்த டிஜி லாக்கர்.
தேவைகள்!
இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த உங்களிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது இருப்பிட உறுதிக்கென பிற ஆவணங்களை கொடுத்து அதன் சரிபார்ப்பிற்கு பின்னர் இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த முடியும்.
பதிவு செய்வது அவசியம்!
இந்த டிஜி லாக்கரில் பதிவு செய்த பின்புதான் இந்தப் பெட்டகத்தை நீங்கள் பயன்படுத்த இயலும். இதற்கென இருக்கும் இணையதளத்திற்குச் சென்று (www.digilocker.gov.in), உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தபின்பு, நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். உடனடியாக அந்த பாஸ்வேர்டு பதிவு செய்தபின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) பாஸ் வேர்டைக் குறிப்பிட்டு உங்களுக்கான இந்தப் பெட்டகத்தை பயன்படுத்தலாம். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையப் பெட்டகத்தில் இணைக்கப்படும்.
ஆவணங்களின் சேமிப்பு!
நமது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இந்த இணையப் பெட்டகத்தில் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி ஃபைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும்.
எல்லாம் முடிந்து இந்தப் பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப்பக்கத்துக்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த இணையதளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.
அளவு!
தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.
பாதுகாப்பு!
இது அனைத்து வகையிலும் பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு மற்றும் மையமானது ஐஎஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால், உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படும். அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு ‘தானியங்கி நேரப் பாதுகாப்பு’ (Auto Time Log-Out) மூலம் தடை செய்யப்படும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாதபட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.
ஆவணங்களின் பயன்பாடு!
இணைய கையெழுத்து (e-Sign) எனும் தொழில்நுட்பம் இந்த இணையப் பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கம்பெனி பதிவகங்கள் மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த இணைய கையெழுத்து பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த டிஜி லாக்கரில் இணைய கையெழுத்து தொழில்நுட்பம் இந்தப் பெட்டகத்தில் உள்ள ஃபைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்து செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களைக்கூட இந்த முறையில் அனுப்ப முடியும். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக அனுப்ப இயலும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.
கூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள், இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படு வதில்லை. ஆனால், இந்த தளத்தில் இருந்து செய்யப் படும் ஆவணப் பதிவேற்றத்துக்கு அரசு அங்கீகாரம் தந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் சுமார் 14 லட்சம் ஆவணங்களை இதில் பதிவேற்றி இருக்கிறார்கள்.
எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானா லும் உங்கள் ஆவணங் களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் (Any Time, Any Where, Share your Documents Online) என்ற கோட்பாட்டில் அரசால் துவங்கப் பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய அரசின் பெட்டகம் இது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது ஆவணங்களை தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம்.
கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை.
நன்றி : 

Friday, April 10, 2015

அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்


அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்
*********************************************************
இணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே. இவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன. 
பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரவுஸ் செய்திடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு கூடுதலான சிறப்பாகும். இந்த பிரவுசர்களின் முழு செயல்பாடும், மற்றவற்றில் தரப்படும் “private” அல்லது “incognito” நிலைக்கு இணையானவை என இவற்றைப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இவற்றை இயக்குவதும் எளிதானதாகும். இவை இலவசமாகவும் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.

1. ஒயிட்ஹேட் ஏவியேட்டர் (WhiteHat Aviator):


 நீங்கள் ஏற்கனவே கூகுள் குரோம் பயன்படுத்தி, பின்னர் இதனைப் பயன்படுத்தினால், இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடில்லை என எண்ணுவீர்கள். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். ஏனென்றால், இரண்டும் ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டவை. ஏவியேட்டர் பிரவுசரை வடிவமைத்த ஒயிட் ஹேட் செக்யூரிட்டி லேப்ஸ், இந்த பிரவுசரை “இணையத்தில் மிகவும் பாதுகாப்பான பிரவுசர்” என்று அறிவித்துள்ளது. மற்ற பிரவுசர்கள் போலின்றி, இது முழுமையான பாதுகாப்பு தரும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளருக்குத் தேவையான தனிநபர் பயன்பாட்டிற்கான அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும், பிரவுசருடனேயே தரப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்பிற்கென நாம் எதுவும் கூடுதலாக முயற்சிகள் எடுக்கத் தேவை இல்லை. இதில் கூகுள் குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம். ஏனென்றால், இரண்டிலும் ஒரே சோர்ஸ் கோட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குரோம் போலின்றி, இது குக்கீஸ் பைல்களை, விளம்பர நெட்வொர்க், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ் புரோகிராம்கள் பின்பற்றுவதனைத் தடுக்கிறது. இவ்வளவு வேலைகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டாலும், இது வேகமாகச் செயல்படுகிறது. நமக்கு விருப்பமான இணைய தளங்களை விரைவாக நமக்குப் பெற்றுத் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: https://www.whitehatsec.com/aviator/

2. மேக்ஸ்தான் க்ளவ்ட் பிரவுசர்: 

இந்த பிரவுசர், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. மொபைல் போனுக்கான வடிவமும் இதில் அடக்கம். இதனைத் தயாரித்த நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு க்ளவ்ட் சேவையை வழங்கி, பைல்களை சேவ் செய்திட இடம் தருகிறது. பைல்கள் மட்டுமின்றி, நாம் விரும்பும் இணைய தள முகவரிகள் (favorites), நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்கள், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் ஆகியவையும் சேவ் செய்யப்படுகின்றன. இது மற்ற எந்த பிரவுசரிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரவுசர் தானாகவே இயங்கி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கு நாம் செல்வதைத் தடுக்கிறது. அவற்றைத் திறக்கும் முன்னர், அந்த தளங்களை ஸ்கேன் செய்து, அவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. பிரவுசரின் கூடுதல் செயல்பாடுகளுக்கென, இந்த பிரவுசரிலேயே சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றைத் தேவை இருந்தால், நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பிரவுஸ் செய்திடும் தளம் குறித்த தகவல்கள் ஸ்டோர் செய்வதனைத் தடுக்க, private ஆகவும் இதில் பிரவுஸ் செய்திடலாம். மேக்ஸ்தான் பிரவுசரில் தரப்படும் snapshot வசதியை அனைத்துப் பயனாளர்களும் விரும்புவார்கள். ஒரே தளத்தை, ஒரே நேரத்தில், பல இடங்களில் திறந்து பயன்படுத்தும் வசதி, விளம்பரங்களைத் தடுக்க Ad Hunter என்னும் வசதி போன்றவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://www.maxthon.com/

3. ஆப்பரா பிரவுசர் (Opera): 

மேலே சொல்லப்பட்ட மேக்ஸ்தான் பிரவுசர் போல, ஆப்பரா பிரவுசரும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. தேடல் சாதனங்களைப் பயன்படுத்துகையிலும், சமூக இணைய தளங்களில் இயங்குகையிலும், நம் தேடல்களை வேறு புரோகிராம்கள் பின்பற்றுவதனை இது தானாகவே தடுக்கிறது. இதன் செயல்பாட்டு வேகம் எப்போதும் வேகமாகவே இருக்கிறது. நம் இணைய இணைப்பு சற்று குறைந்த வேகத்தில் செயல்படுகையில், இதில் உள்ள Turbo வசதி, நம் செயல்பாட்டினை வேகமாக மேற்கொள்ள உதவுகிறது. மொபைல் சாதனங்களில் ஆப்பரா பயன்படுத்துகையில், டேட்டாவினை சேவ் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது. பயனாளர் விருப்பப்படி ஆப்பராவினை வடிவமைக்க, அதிகமான எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் இந்த பிரவுசரிலேயே கிடைக்கின்றன. நாம் முதல் வரிசையில் வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நான்கு பிரவுசர்களைக் காட்டிலும், இது கூடுதல் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது என இதன் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரவுசரைப் பொறுத்தவரை ஒரு சிறிய குறை ஒன்று உள்ளது. தங்கள் இணைய தளங்களை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசரில் இயங்கும் வகையிலும், தங்கள் தளங்களை வடிவமைப்பதில்லை. எனவே, சில தளங்கள் இந்த பிரவுசரில் இயங்கா நிலை ஏற்படும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.opera.com/

4. கொமடோ ட்ரேகன் இன்டர்நெட் பிரவுசர் (Comodo Dragon Internet Browser):

 இணையத்திற்கான செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிக்கும் கொமடோ நிறுவனம், இதனையும் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. குரோம் மற்றும் ஏவியேட்டர் பிரவுசர்கள் வடிவமைப்பின் கட்டமைப்பான குரோமியம் குறியீட்டு வரிகளைப் பயன்படுத்தியே, இந்த பிரவுசரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மட்டுமே காணப்படும் சில வசதிகள், இதற்கு ஒரு தனித்தன்மையினை அளிக்கின்றன. நம் இணையத் தேடல்களை வேறு புரோகிராம்கள் எதுவும் கண்டு கொள்ள முடியாதபடி தடுக்கிறது. நாம் செல்லும் ஒவ்வொரு இணைய தளத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழ்கள் (SSL certificates) அனைத்தையும் இது சோதனை செய்து பார்க்கிறது. இணைய தளம் பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், கொமடோவின் ஐஸ் ட்ரேகன் (IceDragon) பதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசர் மாதிரியே இருப்பதனை உணர்வீர்கள். இந்த பிரவுசர் தற்போது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் வகையில் மட்டுமே கிடைக்கிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி.https://www.comodo.com/home/browsers-toolbars/browser.php

5. டார் பிரவுசர் (Tor browser): 

மேலே சொல்லப்பட்ட பிரவுசர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்படும் பிரவுசராக டார் பிரவுசர் உள்ளது. இந்த பிரவுசரின் தனிச் சிறப்பு என்னவென்றால், இது தரும் நம் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்புதான். உலகெங்கும் இதன் நெட்வொர்க் கம்ப்யூட்டர்கள் இயங்கி இணைப்பு தருகின்றன. இதனால் இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் நம் கம்ப்யூட்டரை இந்த பிரவுசர் வழி நெருங்க முடியாது. பல தன்னார்வலர்கள், இந்த தனி நெட்வொர்க் கம்ப்யூட்டர் சர்வர்களை இயக்கி வருகின்றனர். இணையத்தில் பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதனை நிரூபிக்கும் வகையில், இந்த நெட்வொர்க்கினைப் பராமரித்து வருகின்றனர். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்க முறைமைகளில் இயங்கும் வகையில், இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இந்த பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் கூட இன்ஸ்டால் செய்து இயக்கலாம். எனவே, நம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பினைக் காட்டிலும், தனிப்பட்ட முறையில் இயங்க நினைப்பவர்களுக்கு இந்த பிரவுசர் உகந்ததாகும். இருப்பினும், இதனை வடிவமைத்தவர்கள், இணைய தள முகவரியில் “https” என்ற முன்னொட்டு கொண்ட தளங்களுக்கு மட்டுமே செல்லுமாறு, இதன் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர் . இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி.https://www.torproject.org/projects/torbrowser.html.en

Monday, April 6, 2015

ஹேக்கிங்


ஹேக்கிங்
*************************

இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.

ஹேக்கிங் என்றால் என்ன?

********************************உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.

எதற்கு இதை செய்கிறார்கள்?

*******************************************ஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.

இதை எவ்வாறு தடுப்பது?

*************************************
நான் கூறப்போவது உங்களை எச்சரிக்கை படுத்தவே நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும். எனவே நான் கூறியவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.

1. நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணக்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை httpsமுறையில் மாற்றிக்கொள்ளுங்கள் காரணம் இது அதிக பாதுகாப்பான ஒன்றாகும். http பயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் கணக்கை எளிதில் முடக்க முடியும். குறிப்பாக நீங்கள் Public Wireless பயன்படுத்தினால். எனவே நீங்கள் முதல் வேலையாக இதை மாற்றி விடுங்கள். மின்னஞ்சல் கணக்கு என்றில்லை வங்கிக்கணக்கு உட்பட எந்த கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். https உங்கள் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்பும்.

2. நீங்கள் எப்போது மின்னஞ்சலை பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுதும் தட்டச்சு செய்யுங்கள் எடுத்துக்காட்டாகhttps://gmail.com/ வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் தயவு செய்து போகாதீர்கள். எடுத்துக்காட்டாக www.emaanthavan.com/google.com என்று இருக்கும் icon smile ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?திறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரி! எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாகwww.gmail.com என்று அடித்து சென்று விடுவீர்கள் ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் இன்னொருவருக்கு உங்கள் கடவுச்சொல்லை தாரை வார்த்து விட்டீர்கள் என்று.

3. உங்கள் கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நீங்கள் இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும். நீங்கள் அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது. இது நீங்கள் பயன்படுத்துகின்ற உலவிக்கும் பொருந்தும்.

4. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை தயவு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு சந்தேகம் அளிக்கும் எந்த சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக சுருட்ட முடியும்.

5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி கேட்டு எதுவும் மின்னஞ்சல் வந்தால் நீங்கள் தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம். எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம். உங்கள் மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையை சேர்ந்ததாகும்.

6. இலவசமாக கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியாத எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற உங்கள் தகவல்களை திருடும் மென்பொருளையும் இணைத்து விடுவார்கள். இது தெரியாமல் இலவசம் என்று சந்தோசமாக நிறுவினால் உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள். நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே! உஷாராக இருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது உங்கள் கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.

7. Keylogger என்ற ஒரு மென்பொருள் உள்ளது இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும். எளிமையாக கூறுவதென்றால் சுத்தமாக உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும். இது பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் தனியாக இடுகை விரைவில் எழுதுகிறேன்.

8. எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால் அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும். இங்கே மேற்க்கூறிய என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது அனைத்துமே நடக்கலாம். எனவே உங்களின் முக்கியமான கணக்குகளை இதைப்போல பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் தயவு செய்து Private Browsing முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ல் பயன்படுத்தவும். இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது. ஆனால் Keylogger மென்பொருள் முறையில் உங்கள் தகவல்களை திருட முடியும். பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.

9. உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

10. நீங்கள் என்னதான் அனைத்திலும் பக்காவாக இருந்தாலும் உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள். தகவல் உதவி நன்றிhttp://www.vijayforvictory.com/
a) http://howsecureismypassword.net/
b) https://www.microsoft.com/protect/fraud/passwords/checker.aspx
c) http://www.passwordmeter.com/


11. அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, Yahoo, Hotmail, WordPress) ஒரே கடவுச்சொல்லை வைக்கக்கூடாது அப்படி நீங்கள் வைத்தால் ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் உங்கள் கையை விட்டுப்போய் விடும். கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், ப்ளாகர், கூகிள் அனலைசிடிக்ஸ், பிகாசா, காலண்டர், ஃபீட் பர்னர், ரீடர், ஆர்குட், கூகிள் சாட், கூகிள் வாய்ஸ், YouTube, Docs என்று அனைத்தும் காலி ஆகி விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள். இவை இல்லாமல் Yahoo!, Hotmail, WordPress என்று பல கணக்குகள் உள்ளன.

12. உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால் வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள் அது எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி! இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம் நாளை வேறு ஒருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரை சந்தேகப்பட வேண்டி வரும். இது அனாவசிய பிரச்சனைகளை தரலாம் நட்பை முறிக்கலாம்.

மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும் இருப்பினும் இதையும் மீறி ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் கணக்கை யாரும் இது வரை முடக்கவில்லை அதனால் நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை. ஹேக் செய்பவர்கள் நினைத்தால் உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் “கணக்கை” முடித்து விடுவார்கள்.