disalbe Right click

Showing posts with label இந்திய தண்டணைச் சட்டம். Show all posts
Showing posts with label இந்திய தண்டணைச் சட்டம். Show all posts

Friday, January 13, 2017

முதல் தகவல் அறிக்கை பதிவு சட்டம்

முதல் தகவல் அறிக்கை பதிவு சட்டம் 


நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்னைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.

வழக்குகள் இரண்டு வகை

முதலில் ஒரு குற்றச்சாட்டில் பல்வேறு தன்மைகள் உள்ளது. பொதுவாக குற்றங்கள் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் என்று இருவகைகள் உள்ளது. இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை. பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அதன் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்னைகளை உரிமையியல் (சிவில்) வழக்குகள் என்று வரையரை செய்யப்பட்டுள்ளது.
சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறுவது எப்போது?

இந்த உரிமையியல் பிரச்னைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் (கிரிமினல் வழக்கு) தன்மை பெறுகின்றன.
குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களாக கருதுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.

கிரிமினல் வழக்குகள் எவை?

பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாகும்.

கிரிமினல் வழக்குகளின் பிரிவுகள்

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை
1) நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள்

2)  நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாகும்.

அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சூறையாடுதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாகும்.

இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார், தன்மீது அவதூறு பரப்பிவிட்டார், அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார், பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்படுவோர் புகார் கொடுத்தால், காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படுகிறது

அதே சமயத்தில் காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விஷயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக கருதப்படுகின்றன.

சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறுவது எப்படி?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.
இந்திய தண்டணைச் சட்டம் - குறிப்பு

எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கடமை என்ன?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை - பதிவு எப்போது?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.
முதல் தகவல் அறிக்கை - பதிவு செய்ய மறுத்தால்?

அவ்வாறு காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர் தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும்.
மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர்  பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்து கொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

மேல்முறையீடு யாருக்கு செய்ய வேண்டும்?

குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.
நீதிமன்றம் செல்வது எப்போது?

புகார் பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.
கோர்ட் டைரக்‌ஷன்

புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை. மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம்.
இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை  நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பு இல்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156 (3)ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர் எதிர் எம். எஸ். கிருஷ்ணாபட் மற்றும் பிறர் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.

எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

நீதிமன்றத்தில் தனிப்புகார்

குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர் சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார். அவ்வாறு விசாரிக்கப்படும் போது  தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம்.
தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம். அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.  மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.

நீதிமன்றத்தின் அதிகாரம்

இதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது. அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.

நேரடியாக நீதிமன்றத்தில் புகார் செய்யலாம் (பிரிவு-482)

மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும்.

இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம்.

பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதி மன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 03.01.2017

Tuesday, August 2, 2016

குற்றவியல் திருத்தச் சட்டம், 2013


குற்றவியல் திருத்தச் சட்டம், 2013 - என்ன செய்ய வேண்டும்? 

உலக நாடுகளின் முன் இந்தியாவை வெட்கி தலை குனிய வைத்த அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்தேறிய நாள் 2012 டிசம்பர் 16.  இந்தியத் தலைநகரான புதுடெல்லி யில் மருத்துவ மாணவி ஒருவர் தன் ஆண் நண்பருடன் இரவு வேளையில் திரைப்படம் பார்த்துவிட்டு வருகின்ற போது கயவர்கள் சிலரால் வஞ்சகமாக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு... அதன் பிறகு இருவருக்கும் நடந்த விஷயங்கள் உலகம் அறிந்த ஒரு செய்தி.  

பெண்ணை  போற்றுகிறோம் என்று பறைசாற்றும் இந்த தேசத்தில் பெண்ணினத்துக்கு ஏற்பட்ட மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி, அதனால் ஏற்பட்ட உயிர்பலி - ‘நிர்பயா’ என்று ஊடகங்களால் பெயரிடப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட சம்பவம் - குற்றவியல் சட்டங்களின் திருத்தத்துக்கு வழிவகை செய்தது.  

நிர்பயா வழக்குக்கு முன்னரும் பின்னரும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கும் அமில வீச்சுக்கும் பலியாகி தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். இதோடு, உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டவர்கள் பலர் உண்டு. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் தொடர் சம்பவமாகிவிட்ட நிலையில் நீதியரசர் வர்மா கமிஷனின் பரிந்துரையின் பேரில் திருத்தம் செய்யப்பட்டு, 2013 பிப்ரவரி 3 முதல் அமலுக்கு வந்திருக்கும் குற்றவியல் சட்டத்திலிருக்கும் சில முக்கிய திருத்தங்கள் என்னவெனப் பார்ப்போம்.

அமில வீச்சும் அதற்கான தண்டனையும்

அமில வீச்சினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்ட திருத்தம் வரும்வரை ஒரு குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.  புதிய திருத்தம் பிரிவு 326A யின் படி எவர் ஒருவர் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ அமில வீச்சினாலோ, அமிலத்தை புகட்டியதினாலோ, உடலுக்கோ அல்லது உடலின் ஒரு சில பாகங்களுக்கோ ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தால் அவர்களுக்குத் தண்டனையாக 10 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவச் செலவுக்காகவும் அவரின் நலனுக்காகவும்  நஷ்டஈடாக  கொடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.  

புதிய திருத்தம் 326 B யின் படி 

எவர் ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தும் எண்ணத்தில் அவர் மீது அமிலத்தை வீசவோ, அமிலத்தை புகட்டவோ முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.  அமிலம் என்பது ஒருவரின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோ, உடல் பாகத்தை அரித்தெடுப்பதோ, மாறாத வடுவை ஏற்படுத்தும் ஒரு திரவமே ஆகும். மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த கொடிய அமிலத்தை எளிதாக விற்பனை செய்வதைத் தடை செய்யும் முயற்சியை வெறும் பெயரளவுக்கு இல்லாமல் செவ்வனே செய்ய வேண்டிய நேரம் இது.  

இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின்படி யார் ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மையை நிலைகுலைக்கும் எண்ணத்துடனோ, அவமானப்படுத்தும் தவறான எண்ணத்துடனோ, தங்களுடைய பலம் கொண்டு செயலாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்தப் பிரிவுடன் புதிய பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளவை 

354 A  

பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதற்கான தண்டனை.

(i)     உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின்  உடலைக் கையாளுதல்.
(ii)     தவறான எண்ணத்துடன் உடல் 
இச்சையை பூர்த்தி செய்ய அழைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது.
(iii)    பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக 
ஆபாசமான பாலியல்களை காட்சிக்கு வைத்தல்.
(iv)    ஆபாசமான கொச்சை வார்த்தைகளால் பெண்ணை கேலி செய்வது.

இவற்றை பாலியல் வன்முறையாக இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது.  முதல் மூன்று உட்பிரிவுகளுக்கு 
3 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  நான்காவது உட்பிரிவுக்கு ஒரு ஆண்டு சிறைத்
தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். 

354 B 

 ஒரு பெண்ணின் மீது தவறான எண்ணத்துடன் பலம் கொண்டு அவருடைய உடையை களைந்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்குவது குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்  (வட இந்தியாவில் பெரும்பாலும் இவ்வாறான குற்றங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் மீது அவர்களை அவமானப்படுத்தவும், அவர்களை தன் சொற்படி நடக்கச் செய்யவும் நடத்தப்படுகிறது). 

354 C  

ஒரு ஆண், ஒரு பெண் அந்தரங்கமாக இருக்கும்போது தவறான எண்ணத்துடன் அவரைப் பார்ப்பது, அந்த அந்தரங்க நிலையை படம் பிடிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டம் வரையறைத்துள்ளது  (ஒரு பெண் உடை மாற்றும் போதோ, கழிப்பறை, குளியலறையை பயன்படுத்தும்போதா நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடைகளுடன் இருக்கும் போது பார்ப்பதோ, படமெடுப்பதோ) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு ஒன்றிலிருந்து 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

354 D 

 ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்து அவரை பின்தொடர்தல், இவரின் இந்த செய்கையை அந்தப் பெண் எதிர்த்தும் தொடர்வது, மேலும் மின்னஞ்சல் போன்ற விஞ்ஞான சாதனத்தின் மூலம் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய முயற்சி செய்தல் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றன.  முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு குற்றச்செயலை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அல்லது சட்டத்தின் உதவியுடன் ஒருவர் ஒரு பெண்ணை பின்தொடர்வது குற்றமாக கருதப்படமாட்டாது.  

370

370 இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வியாபார நோக்கில் ஆட்கடத்தல் செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனை இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் சற்று விரிவுபடுத்தியுள்ளார்கள்.  எவர் ஒருவர் மற்றொரு நபரையோ அல்லது நபர்களையோ தவறாக பயன்படுத்துவதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ப்பது, யார் கண்ணிலும் தெரியாமல் மறைத்து வைப்பது, தவறான நோக்கில் வேறொருவரிடமிருந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, இவற்றை மிரட்டல் மூலமாகவோ, கட்டாயத்தின் மூலமாகவோ, ஆட்கடத்தலின் மூலமாகவோ, தன்னுடைய அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து தன்வசப்படுத்துவதோ, வியாபார நோக்கில் செய்யப்படும் ஆட்கடத்தல் குற்றமாக கருதப்படுகிறது. 

பெரும்பாலும் இந்த ஆட்கடத்தல் குற்றம் பாலியல் தொழிலுக்காகவோ, கடுமையான வேலை செய்ய கொத்தடிமைகளாக பயன்படுத்துவதற்காகவோ, உடல் உறுப்புகளை திருடுவதற்காகவோ நடைபெறுகிறது.  கடத்தப்படும் நபர் தன்னுடைய ஒப்புதலை கொடுத்தாரா என்பதை சட்டம் பார்க்காது.  

யாரொருவர் வியாபாரத்துக்காக ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ, அவருக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். யாரொருவர், ஒருவருக்கு மேற்பட்ட நபர்களை வியாபார ரீதியான நோக்கத்தில் ஆட்கடத்தல் செய்யும் பட்சத்தில் அந்தக் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். 

யாரொருவர் வயது வராத சிறுவனையோ, சிறுமியையோ வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்ததற்கு 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.  யாரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்களை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்யும் பட்சத்தில் அவருக்கு 14 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

யாரொருவர் ஒரு சிறுவனை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் செய்கிறாரோ அவருக்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஒரு காவல் துறை அதிகாரியோ, பொது அலுவலரோ வியாபார ரீதியாக ஆட்கடத்தலில் ஈடுபடும்போது அவருக்கு தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு 370 A 

 யாரொருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்காக சிறார்கள் மீது ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ அவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் ஆட்கடத்தல் மூலம் தாங்கள் வசப்படுத்திய ஒரு நபரை பாலியல் ரீதியாக பயன்படுத்தினால் அதற்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் வன்புணர்ச்சி

பிரிவு 375 

-ஒரு ஆண் மகன் தவறான நோக்கில் ஒரு பெண்ணின்  மீது  பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு அவருடைய அந்தரங்க பாகங்களை தொடுவது, காயப்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் முறையில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பது, அதுவும் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அவளின் அனுமதியின்றி, மேலும் அவளிடம் அனுமதி பெற்றாலும் அந்த அனுமதி அவள் பிரியப்பட்ட ஒரு நபரை பணயம் வைத்து அவளை பயமுறுத்தி பெற்ற அனுமதியாக இருப்பினும், மேலும் கணவரல்லாத ஒரு நபர் கணவர் என்ற போர்வையில் உறவு வைத்துக்கொள்வதும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அல்லது நடக்கும் செய்கையை புரிந்துகொள்ள இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண் அல்லது 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண் ஆகியோருடன் வைத்துக் கொண்டிருக்கும் பாலியல் உறவுகள் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்துக்குச் சமம். 

பிரிவு 376ன் கீழ் இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு. 

ஒரு காவல் துறை அதிகாரி தான் பணிபுரியும் காவல் நிலையத்திலேயோ அல்லது அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண்ணிடமோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது... 

ஒரு பொது அலுவலர் தன்னுடைய பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ராணுவத்தில் பணிபுரிபவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

சிறைக் காவலர் அல்லது சிறை அதிகாரி அல்லது பெண்களும் குழந்தைகளும் தங்கும் பாதுகாப்பு இல்லங்களின் பொறுப்பாளர் மற்றும் 
விடுதியிலிருப்பவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

மருத்துவமனையின் பராமரிப்பில் இருப்பவர் அல்லது அதில் பணிபுரிபவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒரு பெண்ணின் உறவினரோ, காப்பாளரோ, ஆசிரியரோ அவர் பாதுகாப்புக்கு நம்பிக்கையானவரோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஜாதிக் கலவரத்தின் போது ஏற்படுத்தும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...

கர்ப்பிணி என்று தெரிந்தும் ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...

16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒப்புதல் கொடுக்க இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண்ணுடன் வல்லுறவு கொள்வது...

மனநலம் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளியின் மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒரே பெண்ணின் மீது மீண்டும் மீண்டும் வல்லுறவு வைத்துக்கொள்வது...

ஒரு பெண்ணின் மீது பாலியல் உறவின் போது அவள் உடலைக் காயப்படுத்துவதோ, அவள் உயிருக்கு பங்கம் விளைவிப்பதோ... 

இவையனைத்துக்கும் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனையும், அதிக பட்சமாக 
வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான அபராதத்துடன் கூடிய தண்டனையும் விதிக்கப்படும்.  

பிரிவு 376 A  ’

யாரொருவரின்  பாலியல் வன்புணர்ச்சி செய்கையினால் ஒரு பெண்ணுக்கு மரணம் ஏற்படின் அல்லது மரக்கட்டை போன்ற ஒரு நிலை ஏற்படின்... குற்றம் இழைத்த அந்த நபருக்கு 20 ஆண்டுகள் வரை அல்லது சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 B 

யாரொருவர் நீதிமன்ற அனுமதியுடனோ, தன்னிச்சையாகவோ பிரிந்து வாழும் தன் மனைவியின் முன் அனுமதி இல்லாமல்  பாலியல் உறவில் ஈடுபடுகிறாரோ அவருக்கு குறைந்த பட்சம்  2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 C

யாரொருவர் தன் பதவி மற்றும் அதிகாரத்தின் மூலம் தனக்கு அடங்கி இருப்பவர் மீது  பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ  அந்த நபருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான  அபராதத்துடன் கூடிய  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 D 

 ஒரு பெண்ணின் மீது கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு வருக்கும் 20 ஆண்டுகளிலிருந்து ஆயுட்காலம் வரை அபராதத்துடன் கூடிய  வாழ்நாள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 E 

 யாரொருவர் ஏற்கனவே குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதே பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவாராயின் அவருக்கு, வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில சட்ட திருத்தங்களைப் பற்றி பார்த்தோம். 

இனி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.

பிரிவு 54 A
  
இந்தப் புதிய திருத்தத்தின் கீழ் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில், மன நலமோ, உடல் நலமோ பாதிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் பட்சத்தில் அவரை அடையாளம் காண்பது குற்றவியல் நீதிபதி முன்னர் நடைபெற வேண்டும். 

குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணும் நபர் மனநலமோ, உடல்நலமோ பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த அடையாள அணிவகுப்பை படப்பதிவு செய்வது அவசியம். 

பிரிவு 154

 இந்தச் சட்ட திருத்தத்தின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணை செய்ய ஒரு பெண் காவலரையே நியமிக்க வேண்டும்.

தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் நபரை அவருடைய இல்லத்திலோ,  அவருக்கு சௌகர்யமான இடத்திலோ, அவருடைய செய்கை மொழியை மொழிமாற்றம் செய்யத் தெரிந்தவர் முன்னிலையிலேயோ அல்லது சிறப்புக் கல்வியாளர் முன்னிலையிலேயோ விசாரணை மேற்கொள்வது அவசியம்.  மேலும் அவ்விசாரணையை படப்பதிவு செய்வது நன்மை பயக்கும்.

பிரிவு 161 

 இந்தப் பிரிவின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து வாக்குமூலம் கோரும்போது அவ்வாறான வாக்குமூலத்தை ஒரு பெண் காவல் அதிகாரி பதிவு செய்வது அவசியம்.  

பிரிவு 357 B  

இந்தப் பிரிவின் கீழ் பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் நஷ்ட ஈடு, இந்திய தண்டனைச் சட்டம் 

பிரிவு 326 அல்லது 376ன் கீழ் கொடுக்கப்படும் நஷ்டஈடுக்கு கூடுதலாக கொடுக்கப்படுவதேயாகும்.   

பிரிவு 357 C 
  
மத்திய, மாநில மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமில வீச்சு, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச முதல் உதவியோ, மருத்துவ உதவியோ செய்யத் தவறும் பட்சத்தில் அதைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இந்திய சாட்சிய சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்

பிரிவு 53 A 
  
பாலியல் வன்முறை அல்லது கற்பழிப்பு குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்ணின் நன்னடத்தை பற்றியோ, அதற்கு முன்னர் இருக்கும் பாலியல் அனுபவம் பற்றி கேட்பது சாட்சி விசாரணையின்போது அவசியமானதல்ல. 

பிரிவு 114 A 
  
கொடுமையான பாலியல் வன்முறை அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண், தான் அந்த பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும். 

பிரிவு 119
  
ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ  மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். 2013ம் ஆண்டு குற்றவியல் திருத்த சட்டத்தின் சில முக்கிய திருத்தங்களைப் பற்றி பார்த்தோம். 

மேலும் நிர்பயாவின் மரணம் பல பெண்களின் மானம் காக்க சட்ட திருத்தமாக உருப்பெற்றுவிட்டாலும், பெண்களுக்கு எதிரான இவ்வாறான கொடுமையான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், நம் சமுதாயம் ஒரு பெண்ணை ஆணுக்கு இணையாகவே பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சட்டங்களும் சட்ட திருத்தங்களும் மட்டுமே அவளுக்குப் பாதுகாப்பல்ல. எனினும், பெண்களை பாதுகாக்கும் இந்த சட்ட திருத்தம் பெண்ணினத்துக்கு ஒரு வரப் பிரசாதமே. குற்றமற்ற சமுதாயமே பெண்களுக்கு பாதுகாப்பு!

நன்றி குங்குமம் தோழி

சட்டம் உன் கையில்: 
வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி



-----------------------------------------------------------28.06.2014 தினகரன் நாளிதழில் இருந்து

Monday, July 18, 2016

பொய் ஆவணம் தயாரித்தல்


பொய் ஆவணம் தயாரித்தல் - என்ன செய்ய வேண்டும்?
ஒருவர், அவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் கையெழுத்தைப் போடாமல், அவரது பெயரை அவரே எழுதி்னால்கூட, அவர் பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
உதாரணம் - 1
ராமசாமிக்கு வயதாகிவிட்டதால், பிள்ளைகளுக்கு தனது சொத்துக்களை பிரித்துக் கொடுக்க எண்ணி, இருக்கும் சொத்துக்கள் தன் மகன் முருகனுக்கும், தன் மகள் கோமதிக்கும் சரிசமமாக சேரவேண்டும் என்று உயில் எழுதுகிறார். அந்த உயிலில் இருந்த தனது சகோதரியின் பெயரை முருகன் அகற்றி விடுகிறார். முருகன் பொய் ஆவணம் தயாரித்தவர் ஆகிறார்.
உதாரணம் - 2
கணேஷ் என்பவரால் கையெழுத்து போடப்பட்டு கொணர்பவர் பெறக்கூடிய (Bearer cheque) தொகை நிரப்பப்படாத காசோலை ஒன்றை மூர்த்தி என்பவர் பாதையில் கண்டெடுக்கிறார். அதில் 10,000 ரூபாய் என்ற தொகையை மூர்த்தி நிரப்புகிறார். மூர்த்தி பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
தண்டணை என்ன?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 465ன்படி, பொய் ஆவணம் புனையும் எவரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப் படுவார்கள்.

******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Sunday, July 10, 2016

காவல்துறை அதிகாரியையும் கைது செய்ய


காவல்துறை அதிகாரியையும் கைது செய்ய வைக்கலாம்!
என்ன செய்ய வேண்டும்?
                             ஒருவர் அரசு அதிகாரியாக இருந்து, நீதிமுறை நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும், சட்டத்திற்கு முரணானது என்று தெரிந்து இருந்தும், அவரால் அளிக்கப்படுகின்ற அறிக்கை, கட்டளை அல்லது தீர்ப்பு வேறு எதையாவது நெறிகேடான முறையில் அல்லது குரோத மனப்பான்மையுடன் செய்கின்ற அல்லது பகிர்கின்ற (காவல்துறை அதிகாரி மட்டுமல்ல) யாராக இருந்தாலும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடிய தண்டணை விதித்து தண்டிக்கப்படுவார். அபராதமும் விதிக்கப்படுவார். அல்லது இரண்டுமே விதித்து தண்டிக்கப்படுவார்.
                   கைது செய்யப்படக்கூடிய குற்றம் செய்தவரை, கைது செய்யாமல் விட்டு வைக்கும் காவல்துறை அதிகாரி இப்பிரிவின் கீழ் தண்டிக்கப் படுவார்.
                              முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டிய புகாரில், சி.எஸ்.ஆர். மட்டும் பதிவு செய்கின்ற காவல்துறை அதிகாரி இப்பிரிவின் கீழ் தண்டிக்கப் படுவார்.
                           
                              சட்டத்துக்கு முரணாக தீர்ப்பு வழங்கினாலும், ஊழல் முறையில் அல்லது தீய நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கினாலும் நீதிபதியைக்கூட   இந்தப்பிரிவின் கீழ் தண்டணைக்கு உள்ளாக்கலாம்.

Saturday, July 9, 2016

பொய்யாவணம் புனைதல்-தண்டணை


பொய்யாவணம் புனைதல்-தண்டணை-என்ன செய்ய வேண்டும்?

பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு ”பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆவணத்தை பொய்யாக புனைபவர்” இந்தப் பிரிவின் கீழ் குற்றம் செய்தவர் ஆவார்.

உதாரணமாக, 
பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் அந்த சங்க நிர்வாகிகளால் நிறைவேற்றப் படுகின்றன. அதனை ஏற்றுக் கொண்டு உறுப்பினர்கள் கையெழுத்து போட வேண்டும். தேவையான கையெழுத்துக்களைப் போட அதிகமான உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 
உறுப்பினர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள் என்பதை மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நிரூபிப்பதற்காக பொய்யான பல கையெழுத்துக்கள் அந்த சங்க நிர்வாகிகளால் போடப் படுகிறது. மாவட்டப் பதிவாளர் அவர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பொய்யாவணம் தயாரிக்கப் படுகிறது. இதில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் இந்தப் பிரிவி்ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
அளிக்கப்படுகின்ற தண்டணை
பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு ”பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆவணத்தை பொய்யாக புனைபவர்” ஏழு ஆண்டுகள்வரை நீடிக்கக் கூடிய சிறைத் தண்டணைக்கு உள்ளாக்கப் படுவார். மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

மேலும் இதற்கு பிடியாணை தேவையில்லை. ஜாமீனும் கிடையாது.