disalbe Right click

Showing posts with label இன்சூரன்ஸ். Show all posts
Showing posts with label இன்சூரன்ஸ். Show all posts

Monday, June 15, 2015

12 ரூபாய்க்கு விபத்து பாலிசி!


12 ரூபாய்க்கு விபத்து பாலிசி!
***************************************
அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி ?பாரதி தம்பி
'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப் பரவும் செய்தி. அரசின் விளம்பரங்களும் அமோகமாக இருப்பதால், ஆளாளுக்கு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். '12 ரூபாய்க்கு ரெண்டு லட்ச ரூபாய் பாலிசியா? அப்படின்னா எனக்கு 10 பாலிசி போடுங்க’ என்கிறார் ஒருவர். 'ஏற்கெனவே நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோமே... அதுவும் இதுவும் வேறு வேறா..?’ என்பது பலரின் குழப்பம். சந்தேகங்களுக்கு விடை தேடுவோமா? 
இப்போது மத்திய அரசு இரண்டுவிதமான காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஒன்று,விபத்துக் காப்பீட்டுப் பாலிசி. இதில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம். குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, கை, கால், கண் ஆகிய உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடாக அதிகபட்சமாக 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் செய்ய முடியும். விபத்தில் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் வரையிலும் க்ளெய்ம் செய்யலாம். '12 ரூபாய்தானே’ என்பதற்காக 10, 20 பாலிசிகள் எடுக்க முடியாது. ஓர் ஆளுக்கு ஒரு பாலிசிதான். அதற்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு அவசியம். பிரீமியம் தொகை, ஒவ்வோர் ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்துதான் எடுக்கப்படும். இந்தத் தொகைத் திருப்பித் தரப்பட மாட்டாது.
'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்பது இரண்டாவது திட்டம். அதாவது, 'பிரதம மந்திரி வாழ்க்கை ஒளி காப்பீடுத் திட்டம்’. இதன்படி ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசிதாரர் எந்தக் காரணத்தினால் மரணம் அடைந்திருந்தாலும் அவரது நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வருடாவருடம் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இதில் கட்டப்படும் பிரீமியமும் திரும்பத் தரப்பட மாட்டாது.
'இந்த இரண்டு பாலிசிகளுக்கும் என்ன வித்தியாசம்? ஏன், ஒன்றில் அவ்வளவு குறைந்த தொகை..?’ என்றெல்லாம் பலப்பல குழப்பங்கள் நிலவுகின்றன. காப்பீடு தொடர்பான அடிப்படை விவரங்களை இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன் விளக்குகிறார்.
''இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோமென்ட் பாலிசி (Endowment policy). இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது. ஆனால், முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் என்றாலே ஒரு முதலீடு என்பதைப்போல நம் ஊரில் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
முதலீடு செய்ய லாபகரமான வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டுகிறீர்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பீர்கள்.          20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும் எனச் சொல்வார்கள். இது 4 முதல் 6 சதவிகித லாபம்தான். ஆனால், பாதுகாப்பான பி.பி.எஃப் திட்டத்தில் 8.5 சதவிகிதம் உறுதியான லாபம் கிடைக்கிறது. அதனால் இன்ஷூரன்ஸ் என்பதை முதலீடாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.
உண்மையில் டேர்ம் பாலிசிதான் இன்ஷூரன்ஸின் முழுமையான அர்த்தத்தை வழங்குகிறது. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ஒருவேளை இறந்துவிட்டால், அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு அவர் எவ்வளவு சம்பாதித்துத் தருவாரோ, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதற்கான காப்பீடு இது. ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 10-ல் இருந்து         15 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். உங்கள் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய் என்றால், 30 முதல் 45 லட்சம் வரையிலும் டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
விபத்துக் காப்பீடுத் திட்டம் என்பது, முழுக்க முழுக்க விபத்து நேர்ந்தால் மட்டுமே க்ளெய்ம் செய்யக்கூடியது. இதற்கான பிரீமியம் குறைவுதான். உதாரணத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு தோராயமாக 200 ரூபாய் பிரீமியம் வரும். உங்களின் வருமான வரம்பைப் பொறுத்து, விபத்துக் காப்பீடு தொகையும் முடிவு செய்யப்படும். இதில் பிரீமியம் எனக் கட்டும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறலாம். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு பணம் சென்றுவிடும். டேர்ம் பாலிசி எடுக்கும்போதே, விபத்துக் காப்பீடையும் அதனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு 'ரைடர்’ எனப் பெயர்.
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அல்லது மெடிக்ளெய்ம் என்பது மற்றொரு முக்கியமான பாலிசி. நோய்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய பாலிசி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து 3 முதல்           5 லட்சம் ரூபாய்க்காவது மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது.
இன்றைய சூழலில் ஒருவர் விபத்துக் காப்பீடு பாலிசி, டேர்ம் பாலிசி, மெடிக்ளெய்ம் பாலிசி ஆகிய மூன்று பாலிசிகளை வைத்திருப்பது அவசியம். விபத்துக் காப்பீடுப் பாலிசியை தனியாக எடுக்காமல், டேர்ம் இன்ஷூரன்ஸுடன் ஒரு ரைடராகச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி ஒருவரிடம் எத்தனை எண்டோமென்ட் பாலிசி இருந்தாலும், அத்தனையையும் அவர் க்ளெய்ம் செய்ய முடியும்!''
ஏன்... எதற்கு... எப்படி?
தற்போது அரசு அறிவித்துள்ள விபத்துக் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 12 ரூபாய், ஆயுள் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 330 ரூபாய். இரண்டிலும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அடிப்படை சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இங்கே...
''யாரெல்லாம் இந்த பாலிசிகளை எடுக்க முடியும்?''
''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் எவரும் இதில் சேரலாம்!''  
''சேர என்ன செய்ய வேண்டும்?''
''நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று விசாரித்தால் விண்ணப்பம் தருவார்கள். அதை நிரப்பிக்கொடுத்தால் போதுமானது!''
''வயது வரம்பு என்ன?''
''12 ரூபாய் பிரீமியம் கட்டும் விபத்துக் காப்பீடு பாலிசியில் சேர, 18-70 வயது உடையவராக இருக்க வேண்டும். 330 ரூபாய் பிரீமியம் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசியில் சேர்வதற்கு 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்!''
''ஒருவர், எத்தனை பாலிசிகள் எடுக்கலாம்?''
''ஒரு நபர் ஒரு விபத்துக் காப்பீடு பாலிசியும்,
ஒரு டேர்ம் பாலிசியும் மட்டுமே எடுக்க முடியும்!''
''ஒருவேளை ஒருவர் மூன்று வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், ஒவ்வொன்றின் மூலமாகவும் ஒரு பாலிசி எடுக்கலாமா?''
''முடியாது. அப்படியே எடுத்தாலும் ஏதேனும்
ஒரு பாலிசிதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்!''
''இந்த பாலிசி எனக்கு மட்டும்தானா... குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாமா?''
''குடும்பத்தினருக்குக் காப்பீடு அளிக்காது. விபத்துக் காப்பீடு பாலிசியின்படி விபத்து ஏற்பட்டால் அவரோ, வாரிசுதாரரோ இழப்பீட்டைப் பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசியின்படி, மரணம் ஏற்பட்டால் அவர் குறிப்பிட்டுள்ள வாரிசுக்கு, அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்!''
''இப்போது பாலிசியில் சேர்ந்துவிட்டு, வேண்டாம் என்றால் இடையில் விலக முடியுமா?''
''இது தொடர்பான அறிவிப்புகளில், பாலிசியை இடையில் நிறுத்திக்கொள்வது குறித்த விவரங்கள் இதுவரை குறிப்பிடப்படவில்லை!''
''பாலிசி அமைந்த வங்கிக் கணக்கை மாற்ற வேண்டியிருந்தால் என்னவாகும்?''
''நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை, அந்த         ஓர் ஆண்டுக்கானது மட்டுமே. எனவே அடுத்த ஆண்டு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றாலோ, நீங்கள் அந்த பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றாலோ,  உங்கள் பாலிசி காலாவதியாகிவிடும். வேறொரு வங்கிக் கணக்கின்மூலம் புதிதாக விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்!''
''க்ளெய்ம் செய்ய, என்ன செய்ய வேண்டும்?''
''விபத்துக் காப்பீடு பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய, விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்., காப்பீடுத் தொகை செலுத்தியதற்கான ரசீது, விபத்து மூலம் மரணம் நேர்ந்திருந்தால் மரணச் சான்றிதழ்... ஆகியவற்றை எந்த வங்கிக் கணக்கின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். 330 ரூபாய் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசிக்கும் இதே நடைமுறைதான்!''
நன்றி : ஆனந்த விகடன் - 14.06.2015 

Wednesday, June 10, 2015

ஹெல்த் இன்சூரன்ஸ், முழுமையாக “க்ளெய்ம்” செய்ய


ஹெல்த் இன்சூரன்ஸ்,  முழுமையாக “க்ளெய்ம்” செய்வது எப்படி?
ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க...
கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து விளக்குகிறார் ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன்.
மறைக்கக்கூடாத தகவல்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்கும் விவரங்களில் எந்த மாதிரியான விவரங்களை முழுமையாகத் தரவேண்டும் என்பது இன்னும் பலருக்குத் தெளிவில்லாமல் இருக்கிறது. உதாரணமாக, ஏதாவது நோயினால் நீங்கள் அவதிப்பட்டு பாலிசி எடுப்பதற்குமுன் குணமடைந்திருந்தால் அது குறித்த மருத்துவச் சான்றிதழ் மற்றும் மருத்துவரின் பரிந்துரைக் கடிதங்களை விண்ணப்பத்தோடு சமர்பிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக, தெளிவாகக் குறிப்பிடுவதால் உங்கள் பிரீமியத்தை அதிகமாக்கும் என்றாலும், க்ளெய்ம் என்று வரும்போது பிரச்னை எழாமல் இருக்கும். பாலிசி எடுக்கும்போது பிரீமியத்தைக் குறைக்க உங்கள் நோய் பற்றிய விவரங்களை மறைத்தால் அது நீங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் அடிப்படை நோக்கத்தையே நேரடியாகப் பாதிக்கும்.
நீங்கள் தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காமல் ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது மேற்கூறிய அனைத்தையும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்கெனவே உள்ள நோய்களை (ப்ரீ எக்ஸிஸ்டிங் டிஸீஸ்) பற்றிய விரிவான குறிப்புகள் மற்றும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு குணமான நோய்கள் போன்றவைகளையும் குறிப்பிடுவதால் க்ளெய்ம் தொகை கிடைப்பதில் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
பாடி மாஸ் இண்டெக்ஸ்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கிடப்படும். இந்த இண்டெக்ஸ்படி, ஒருவர் எவ்வளவு உயரம் இருக்கிறாரோ, அந்த உயரத்துக்கு தகுந்தாற் போல் அவரின் உடல் எடையும் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் கூடுதல் உடல் எடை இருந்தால், அது இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க காரணமாகும். ஏன் இதைக் கணக்கிடுகிறார்கள் என்றால், அதிகப்படியான உடல் எடை சர்க்கரை நோய்க்கு அடித்தளம். சர்க்கரை நோய் வந்துவிட்டால், படிப்படியாக ரத்த அழுத்தம், இதய நோய்களும் கூடவே வர வாய்ப்பு அதிகம். இதனால் கம்பெனி அதிக பிரீமியம் வசூலிக்க வேண்டியிருக்கும். பிரீமியத்தைக் குறைக்க நம் எடையைக் குறைத்து சொல்லி, பிறகு ஏதாவது க்ளெய்முக்குச்  சென்று, பின்னாளில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிய வந்தால் மொத்த பாலிசியும் ரத்து செய்யப்படும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி!
ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளுக்கு இணையாக அதிக க்ளெய்ம்களை தருவதில்லை. உதாரணமாக, ஒரு சில ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் ஆம்புலன்ஸ், மருத்துவர் கட்டணம், சிறப்பு மருத்துவர் கட்டணம், நோயாளிகள் தங்கும் அறை வாடகை போன்றவை களுக்கு க்ளெய்ம்  கிடையாது.
மேலும், ஹெல்த் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களின் முதல் கடமையே இதுவாக இருப்பதால், பாலிசிதாரரின் தேவையை அறிந்து பல புதிய பாலிசிகளை அறிமுகமும் செய்து வருகின்றன. ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளில் மேற்கூறிய அனைத்துக்கும் பாலிசியின் மொத்த க்ளெய்ம் தொகையில் குறிப்பிட்டுள்ள அளவு க்ளெய்ம் தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக, பொது மருத்துவரை அணுகினால் மொத்த கவரேஜ் தொகைக்கு 1%, சிறப்பு மருத்துவர்களை அணுகினால் ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை என்று வழங்கப்படும். மருத்துவ அறையின் வாடகை கவரேஜ் தொகையில் 1% என்று வழங்கப் படுகிறது. இது ஒவ்வொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் மாறுபடும்.
இரண்டாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி!
ஒருவர் இரண்டாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் அவர் தன் முதல் பாலிசி பற்றிய விவரங்களை இரண்டாவது பாலிசி எடுக்க இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இரண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஐஆர்டிஏவின் பரிந்துரையின் படி, அதிக கவரேஜ் வழங்கிய நிறுவனம் அதன் கவரேஜ் தொகைக்குத் தகுந்த பங்கு தொகையையும், குறைந்த கவரேஜ் வழங்கிய நிறுவனம் அதற்குத் தகுந்த பங்கு தொகையையும் வழங்கும். உதாரணத்துக்கு, ஒருவர், முதல் பாலிசியில் 2 லட்சம் கவரேஜும், இரண்டாவது பாலிசியில் 1 லட்சம் கவரேஜும் எடுத்திருந்தால், முதல் பாலிசியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கும் இரண்டாவது பாலிசியில் இருந்து மூன்றில் ஒரு பங்கும் க்ளெய்ம் பெற முடியும். ஆனால், ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும்போது க்ளெய்ம் நேரத்தில் எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் எவ்வளவு க்ளெய்ம் வழங்க வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்க ளுக்குள் சிக்கல்கள் ஏற்படும். எனவே, ஒரு தனிநபர் பாலிசியும், ஒரு ஃப்ளோட்டர் பாலிசியும் எடுத்தால் போதுமானது.
கோ-பேமென்ட்!
பாலிசி எடுக்கும்போது கோ - பேமென்ட் என்று ஏதாவது செலுத்த வேண்டுமா என்பதைத் தெரிந்துகொண்டு  எடுங்கள். பல நிறுவனங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தொகையில் 10 - 20% தொகையைக் கோ-பேமென்ட்டாகச் செலுத்த வேண்டும் என்று சொல்கிறது. சில நிறுவனங்கள் இந்தக் கோ-பேமென்ட் இல்லாமலும் க்ளெய்ம் வழங்குகிறது. எனவே, இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பாலிசி எடுங்கள். அதேபோல் வயதானவர்களுக்கு எப்படி கோ-பேமென்ட் கணக்கிடுகிறார்கள் என்று விசாரித்து பாலிசி எடுங்கள்.
க்ளெய்ம் விவரங்கள்!
எந்த மாதிரியான சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும்; எந்த மாதிரியான சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் தெரிந்துகொண்டு எடுங்கள். உதாரணமாக, நாம் செய்து கொள்ளும் சிகிச்சைகளில் நம் அழகை அதிகப்படுத்தச் செய்யப்படும் கிசிக்கைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது. அதோடு ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எத்தனை ஆண்டுகள் காத்திருப்புக் காலம்  என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பாலிசி எடுப்பது நல்லது. சில நிறுவனங்கள் பாலிசி எடுத்து 30 நாட்களுக்குப் பின் க்ளெய்ம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எத்தனை நாட்களுக்கு காத்திருப்புக் காலம் என்பதை எல்லாம் கவனித்துப் பாலிசி எடுங்கள். இது உங்கள் க்ளெய்ம் தொகையில் பிரச்னை இல்லாமல் இருக்க வழி வகுக்கும். இந்தக் காத்திருப்புக் காலம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.
சர்க்கரை நோய்..! 
பொதுவாக சர்க்கரை வியாதிக்கு எந்த பாலிசியிலும் க்ளெய்ம் கிடைக்காது. அப்படி க்ளெய்ம் கொடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தால் எதற்கு எல்லாம் க்ளெய்ம் உண்டு என்று தீர விசாரித்துத் தெரிந்துகொண்டு பாலிசி எடுங்கள். எனவே, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பிரத்தியேகமான டயாபெட்டீஸ் பாலிசி எடுத்தால் சர்க்கரை வியாதியால் வரும் அனைத்து நோய்களுக்கும் க்ளெய்ம் கிடைக்கும். சர்க்கரை வியாதிதான் இன்றைய தேதியில் பெரும்பாலான நோய்களுக்கான அறிமுக நோயாக இருக்கிறது. எனவே, அதற்கு தனி பாலிசியை எடுத்துக்கொள்வது நலம்.
எங்கு சிகிச்சை?
பாலிசி எடுத்தவர்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் எனில், பாலிசி எடுத்த நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவ மனைகளில் இணைவது நல்லது. பணத்தை நாம் செலுத்திவிட்டுப் பின் க்ளெய்முக்கு காத்திருப்பதை விட கேஷ்லெஸ் முறையில் நெட்வொர்க் மருத்துவ       மனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்வது பெஸ்ட்.
தெரியப்படுத்துதல்!
முன்கூட்டித் திட்டமிட்டு எடுக்கவுள்ள சிகிச்சைகளை 72 மணி நேரத்துக்குமுன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் க்ளெய்மை நிராகரிக்க இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உரிமை உண்டு.
அதுபோல அவ்வப்போது ஏதாவது புதிய விதிமுறைகள் வந்திருக்கிறதா அல்லது இருக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை இணையம், நாளிதழ்கள் மற்றும் உங்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
சிறப்பு பாலிசிகள்!
இன்றைய காலத்தில் க்ரிட்டிக்கல் இல்னஸ் பாலிசிகள், மகளிர் பாலிசிகள் என்று பல தரப்பட்ட பாலிசிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கத் தொடங்கி இருக்கின்றன. மேலும், மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு பாலிசிகளை ஒரு சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆகவே, மூத்த குடிமக்களும், இத்தகைய சிறப்பு பாலிசிகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு உள்ளது என்றால் வெறும் கார்டியாக் பாலிசியை எடுத்தால் போதும். அதேபோல் தற்போது பெண்களுக்கு என்று சிறப்பு மகளிர் பாலிசிகள் வந்திருக்கின்றன. இந்த பாலிசி மூலம் பெண்களை அதிகம் தாக்கக்கூடிய மார்பகப் புற்றுநோய், கர்பப்பை புற்றுநோய் பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளின் நோய்களான ப்ரீ மெச்சூர் ஒவேரியன் ஃபெய்லியர், பாலிசிஸ்டிக் ஓவரி போன்ற பிரச்னைகளுக்குக்கூட இந்த பாலிசிகளில் க்ளெய்ம் கிடைக்கும்.
மு.சா.கெளதமன்
நன்றி : நாணயம் விகடன், 07.06.2015  

Sunday, April 19, 2015

இல்லத்தரசிக்கு இன்ஷூரன்ஸ்

 இல்லத்தரசிக்கு இன்ஷூரன்ஸ்
ன்ஷூரன்ஸை பொறுத்தவரையில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன. ஏனெனில், இன்ஷுரன்ஸ் என்பது ஒரு குடும்பத்தின் நிதி இழப்பை ஈடுகட்டுவதற்காக மட்டுமே என்று கருதுவதனால்தான். உதாரணத்துக்கு, ஒரு ஆணோ, பெண்ணோ வேலைக்குச் சென்றால், அவர்கள் ஈட்டும் வருமானத்தை வைத்து, அவர்களுக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் தேவை என்று கண்டறியப்படுகிறது.
ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய வேண்டுமா, வேலைக்குப் போகாமல் குடும்பப் பொறுப்புகளை நிர்வகிக்கும் இல்லதரசிகளுக்கு ஏன் இன்ஷூரன்ஸ் இல்லை என்கிற கேள்வி எழுகிறது. 

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இல்லதரசிகள் அவர்களின் வாழ்நாளின் பெறும் பகுதியை தங்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகவே  செலவு செய்கின்றனர். அவர்களின் நேரம் முழுவதும், குடும்பத்தினருக்கு உணவு தயாரிப்பது, குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பது முதல்  அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது என்ற வடிவில் ஒரு குடும்பத்துக்கு முக்கிய பங்களிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இல்லத்தரசிகள் மனப்பூர்வமாக, பாசத்தோடு செய்யும் இந்த செயல்பாடுகள் விலை மதிப்பிட முடியாதவை. அதற்கெல்லாம் இவ்வளவுதான் சம்பளம் என ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்ய முடியாது. ஆனாலும் ஒருபேச்சுக்கு அவர்கள் செய்யும் செயல்பாடுகளுக்கு பண அடிப்படையில் குறைந்தபட்ச அளவிலான மதிப்பீட்டை செய்துபார்த்தால், உண்மையாகவே பெண்களின் பங்களிப்பை நம்மால் உணர முடியும்.
சிறுவர் பராமரிப்பு!
ஒரு தனிநபர் வருமானம் ஈட்டும் வீட்டில், இல்லத்தரசிகள் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை சிறப்பாகச் செய்கின்றனர். இந்தப் பொறுப்பை அவர்கள் செய்யாமல், குழந்தையை பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரிக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் மாதமொன்றுக்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை ஆகிறது. இதுவும் ஒரு குழந்தைக்கு மட்டுமே. இரண்டு குழந்தை என்றால் பராமரிப்புச் செலவு இரு மடங்காக உயரும். மேலும், குழந்தைகளை, பள்ளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதற்கு மட்டுமே மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,000 வரை செலவாகும்.
சமையல் கலை!
ஒவ்வொரு இல்லத்தரசியும் குழந்தைகளின் தேவைக்கேற்ப அன்போடு உணவு தயாரிக்கிறார்கள். இதற்காக, அவர்கள் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல், அனைவருக்கும் ஆரோக்கியமான உணவை தயார் செய்து தருகின்றனர். இந்த சமையல் கலை சேவையை அவர்கள் இல்லாதபோது, நன்கு சமைக்கத் தெரிந்த ஒருவரை வைத்து செய்தால் மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை செலவாகும்.
வீட்டுப் பராமரிப்பு!
நாம் இருக்கும் வீட்டை சுத்தமாக பேணிப் பாதுகாத்து நிர்வகிப்பதை கலைநயத்துடன் ஒவ்வொரு இல்லத்தரசியும் சிறப்பாகச் செய்கின்றனர். அவர்கள் இல்லாதபோது, ஒரு பணியாளரை நியமனம் செய்து வீட்டை ஒருநாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஆகும் செலவு மாதமொன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 ஆகும்.
இதற்கான தீர்வுகள்!
ஒரு உதாரணத்துக்காக இப்படி வைத்துக் கொள்வோம். வீட்டில் இல்லத்தரசிகள் இல்லாத சூழல் வருகிறபட்சத்தில் மேற்கூறிய பொறுப்புக் களைச் செய்து முடிக்க ஆகும் செலவை குறைந்த அல்லது நடுத்தர வருமானம் வாங்கும் ஒரு குடும்பத் தலைவரால் நிச்சயம் சமாளிக்க முடியாது. பணக்காரக் குடும்பங்களால் மட்டுமே இந்த பணஇழப்பை சிறிதளவு சமாளிக்கலாம். இந்த பிரச்னைக்கு மிக நம்பகமான மற்றும் பாதுகாப்பான வழி என்றால் அது ஆயுள் காப்பீடுதான். குடும்பத்தில் ஒரு தலைவி இல்லாத போது ஏற்படும் இந்தச் செலவுகளுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.1,80,000 எனக் கொண்டால், அந்தத் தொகை கிடைக்குமளவுக்கு ஒரு ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இல்லத்தரசி களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்குவதில் பல விதிமுறைகளை வைத்துள்ளது. ஒரு இல்லத்தரசியின் கணவரின் வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும் என்றும், இல்லத்தரசிகள் பட்டப் படிப்பு முடித்திருக்கவேண்டும், மருத்துவப் பரிசோதனை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்றும் சொல்கின்றன. மேலும், கவரேஜின் அளவு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சமாகவும் அதிகபட்சமாக ரூ.25 லட்சமாகவும் இருக்க வேண்டும் என்கிறது. ஆரோக்கியமான 30 வயதுள்ள ஒரு இல்லத்தரசிக்கு 30 வருடத்துக்கு, ரூ.25 லட்சம் ஆயுள் காப்பீடு எடுக்க சுமாராக ஆண்டுக்கு ரூ.3,000 பிரீமியம் கட்டினால் போதும்.
ஆனால், பாரம்பரிய பாலிசிகளான எண்டோவ்மென்ட் பாலிசியை எடுப்பது சுலபம். இருப்பினும், இதிலும் ஒருவருடைய வருமானம், குடும்பப் பின்னணி முதலியவற்றைக் கருத்தில் கொண்டே வழங்கப்படுகிறது. இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும், மேற்கூறிய மதிப்பீட்டைக் கருத்தில்கொண்டு, இல்லத்தரசிகளுக்கு காப்பீடு வழங்கினால், நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
மருத்துவக் காப்பீடு!
மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அவசியம்.  இவை தவிர, பெண்களுக்கென்று ஒருசில பிரத்தியேக காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. உதாரணத்துக்கு, பெண்கள் சம்பந்த நோய்களான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மகப்பேறு மற்றும் மகப்பேறு சம்பந்தமான நோய்களை கவர் செய்யும் பிரத்தியேக பாலிசிகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
Thanks :vayal 19.04.2015

Monday, April 6, 2015

தனி நபர் விபத்துக் காப்பீடு


தனி நபர் விபத்துக் காப்பீடு
********************************
வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்த பாலிசியை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் இனி...

1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி.
இந்த பாலிசியில் நிரந்தர , தற்காலிக ஊனங் களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பீரிமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும்.

3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும்.

4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.

உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும்.

5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும்.

6. இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவு களுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.

7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித க்ளெய்மும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5% போனஸாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50% வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன.

8. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும்.

9. இந்தக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யும்போது எந்தமாதிரியான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகக் குறிப்பிட்டிருந்தால்தான் அதற்கான இழப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைக்கும் என்பதை மறக்கக்கூடாது.

10. எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரத்தில், எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது.