நிலத்தை கையகப்படுத்திய, நில சீர்திருத்த துறையின் உத்தரவு, ரத்து
நில ஆவணங்கள் தகவல்: பதிவுத்துறைக்கு உத்தரவு
சென்னை, ஆவணங்களை பதிவு செய்த உடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவிக்கும்படி, பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், சரோஜினி என்பவரிடம், 1982ல், சொத்து ஒன்றை வாங்கினார்.
ஆனால், அந்த நிலத்தை, வகை மாற்றம் செய்யவில்லை. இதையடுத்து, அந்த நிலத்தை, நில சீர்திருத்த துறை, தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்தது.
இதை எதிர்த்து, நிலத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, 'நிலத்தின் சொந்தக் காரருக்கு தெரியப்படுத்தாமல், முன்னாள் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, இடத்தை கையகப்படுத்தி உள்ளனர். இது, விதிமுறைகளுக்கு முரணானது' என்றார்.
அப்போது, நில சீர்திருத்த துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, 'தமிழக நகர்ப்புற நில ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், உரிய நடைமுறைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
எப்போது நிலம் மற்றொருவருக்கு விற்பனை செய்யப்பட்டதோ, அப்போதே, அந்த நிலத்தின் சொந்தக்காரராக, வாங்கியவர் மாறி விடுகிறார். எனவே, அவருக்கு தான், நில சீர்திருத்த துறை, இடத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான, நோட்டீசை அனுப்ப வேண்டும்.
ஆனால், அப்படி எதுவும் செய்யாமல், சம்பந்தப்பட்ட இடத்தில், நோட்டீசை ஒட்டியுள்ளனர்.
உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், அதற்கான கட்டணத்தை செலுத்தி, அவர், அந்த நிலத்திற்கான ஆவணங்களை, வகை மாற்றம் செய்து விடுவார்.
ஆனால், இந்த நடைமுறை, இந்த வழக்கில் கடைப்பிடிக்கவில்லை. எனவே, மனுதாரரின் நிலத்தை கையகப்படுத்திய, நில சீர்திருத்த துறையின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
ஒரு நிலத்தை பதிவு செய்த பின், அந்த பதிவு தொடர்பான விபரங்களை, சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்தாததால் வந்த பிரச்னை இது.
எனவே, நிலம் வகை மாற்றம் செய்வதற்கு ஏதுவாக, நிலம் பதிவு செய்யப்பட்ட உடன், அதுகுறித்து, நில சீர்திருத்த துறைக்கு தெரிவிக்கும்படி, பதிவு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கான சுற்றறிக்கை அனுப்புமாறு, பதிவு துறை, ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர் நாளிதழ் - 26.11.2017