disalbe Right click

Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts

Thursday, August 10, 2017

வெளிநாடு வாழ் இந்தியர் இங்குள்ள வங்கியில் கடன் பெற

வெளிநாடு வாழ் இந்தியர் இங்குள்ள வங்கியில் கடன் பெற
வெளிநாட்டுக்குப் போய்ச் சம்பாதித்து, பின்னர் சொந்த ஊருக்கு வந்து வீடு, வாசல் கட்டும் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டே, வீட்டுக் கடன் வாங்கி சொந்த ஊரில் வீடு கட்டிவிடலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வீட்டுக் கடன் வழங்க வங்கிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. என்.ஆர்.ஐகள் வீட்டுக் கடன் வாங்குவது மிகவும் கஷ்டம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால், அவர்கள் வீட்டுக் கடன் வாங்குவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது.
வங்கிகள் தாராளம்வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க ரிசர்வ் வங்கி பொது அனுமதி வழங்கிய பிறகு, வங்கிகளும் தேசிய வீட்டு வசதி வங்கியால் (National Housing Bank) அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களும் கடன் அளிக்கத் தாராளம் காட்டுகின்றன. வீட்டுக்கடன் வழங்க உள் நாட்டு இந்தியர்களுக்கு ஒரு விதிமுறையும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஒரு விதிமுறையும் பின்பற்றப்பட்ட காலம் உண்டு.
ஆனால், வீட்டுக் கடன் தொடர்பான பெரும்பான்மையான விதிமுறைகள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதன் காரணமாகவே என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது என்கிறார்கள் வங்கியாளர்கள்.
ஒரே விதிமுறைகள்“உள்நாட்டில் ஒருவருக்கு எப்படி வீட்டுக் கடன் அளிக்கப்படுகிறதோ, அதேபோல்தான் வெளிநாடுவாழ் இந்தியருக்கும் வழங்கப்படுகிறது. உதாரணமாக மார்ஜின் தொகை (அதாவது வீட்டு மதிப்பில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான தொகை), எவ்வளவு காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துவது (சாதாரணமாக 5 முதல் 25 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவது) மற்றும் வட்டி விகிதம் ஆகியவை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாகவே பின்பற்றப்படுகின்றன.
அவ்வப்போது ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்துக்குத் தகுந்தபடி கடனுக்கான வட்டி விகிதம் மாறும். என்.ஆர்.ஐ.கள் இந்தியாவுக்கு விடுப்பில் வரும்போது, வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்” என்கிறார் முன்னாள் வங்கி அதிகாரி எஸ்.ஜி.கிருஷ்ணன்.
ஆவணங்கள் என்ன?உள்நாட்டில் வீட்டுக் கடன் வாங்கவே பல சான்றிதழ்களை வங்கிகள் கேட்கும். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க என்னென்ன சான்றிதழ்களை வங்கிகள் கேட்கும்? என்.ஆர்.ஐ.கள் தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல், எந்த நாட்டில், எந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ், சம்பளச் சான்றிதழ், இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு (என்.ஆர்.இ./எஃப்.சி.என்.ஆர்./என்.ஆர்.ஓ.) விவரங்களைக் கூடுதலாகக் கேட்பார்கள். இவை தவிர்த்து உள்நாட்டு வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்க என்னென்ன ஆவணங்களைக் கேட்பார்களோ அவற்றையெல்லாம் எ.ஆர்.ஐ.களிடமும் கேட்பார்கள்
திருப்பிச் செலுத்துவது எப்படி?உள்நாட்டில் வீட்டுக் கடன் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ.யை வங்கிக்கு நேரடியாகச் சென்றோ, இணையம் மூலமோ செலுத்திவிடுவோம். வெளி நாட்டில் இருந்துகொண்டு வீட்டுக் கடனை எப்படி அடைப்பார்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கெல்லாம் நிறைய வழி இருக்கிறது.
“வெளிநாட்டில் இருந்தபடியே இ.எம்.ஐ. செலுத்த முடியும். கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்குச் சில வழிமுறைகளைச் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அந்நியச் செலாவணி, வங்கிகள் வாயிலாகவே இந்தத் தொகை வங்கிக்கு வர வேண்டும். அல்லது கடன் பெற்ற வெளிநாடுவாழ் இந்தியரின் என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். அல்லது என்.ஆர்.ஓ. கணக்கிலிருந்து செலுத்தலாம்.
இந்தக் கணக்குக்கு அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் மூலம் வாடகை வருமானம் வருமேயானால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த வாடகைப் பணத்தைப் பயன்படுத்தலாம். கடனைத் திருப்பிச் செலுத்துபவருக்கு இதில் எது எளிதாக இருக்கும் என்று கருதுகிறாரோ அதைத் தாராளமாகப் பின்பற்றலாம்” என்கிறார் எஸ்.ஜி. கிருஷ்ணன்.
விரிவாக்கத்துக்கும் கடன்என்.ஆர்.ஐ.கள் வீடு கட்டவோ, வாங்கவோ மட்டுமே வங்கிகள் கடன் அளிக்கும் என்று கருத வேண்டாம். அவர் களுக்கு ஏற்கனவே உள்ள சொந்த வீட்டைப் பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும்கூட வங்கிகளிட மிருந்தும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களிடமிருந்தும் கடனுதவி கிடைக்கின்றன. இப்படி என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் வழங்குவது எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
எனவேதான் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் வீடு, மனைக் கண்காட்சிகளில் என்.ஆர்.ஐ.களைக் குறி வைத்தே நிறைய அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
நன்றி : தி இந்து நாளிதழ் - 10.01.2015

Friday, July 28, 2017

பெண் தொழிலதிபர்களை உருவாக்கும் வங்கிக் கடனுதவித் திட்டங்கள்!

பெண் தொழிலதிபர்களை உருவாக்கும் வங்கிக் கடனுதவித் திட்டங்கள்!
கடந்த 20 ஆண்டுகளில், பெண் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு வங்கிகள் கைகொடுப்பதே. குறிப்பாக, பெண் தொழில்முனைவோருக்கு சிறப்புக் கடன் திட்டங்கள் மூலம் உதவி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பெண்கள் எந்த வகையான தொழில்களை ஆரம்பிக்கலாம், அதற்கான வங்கிக் கடனுதவியை எப்படிப் பெறலாம் என விளக்கமாக எடுத்துச் சொன்னார் சென்னை, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா நிறுவனத்தின் மண்டல அலுவலக முதன்மை மேலாளர் தங்கம்.
மதிப்புக் கூட்டுப் பொருள்களின் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. பனை, வாழை, தென்னை, பாக்கு போன்ற மரங்களில் இருந்து எக்கச்சக்கமான மதிப்புக் கூட்டுப் பொருள்களை ஆண்டு முழுக்க உற்பத்தி செய்யலாம். சில நாள்கள் பயிற்சி எடுத்தால் போதும், இந்த மதிப்புக் கூட்டுப் பொருள்களை எளிதில் செய்யத் தொடங்கிவிடலாம்.
அதேபோல, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் டிசைனிங், டிரெஸ் டிசைனிங், ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட், கட்டட வடிவமைப்பு, ஜுவல்லரி டிசைனிங் உள்ளிட்ட டிசைனிங் சார்ந்த பல தொழில்கள் நகர்ப்புறப் பெண்களின் தற்போதைய தேர்வாக இருக்கின்றன. இந்தத் தொழில்களில் வீட்டில் இருந்தபடி டிசைனிங் செய்துகொடுத்தாலே கைநிறைய சம்பாதிக்க முடியும்.
பெண்கள் சிறப்பாக சுயதொழில் செய்தாலும், மார்க்கெட்டிங் செய்வதில்தான் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அதைச் சரிசெய்ய சுயதொழில் தொடங்குதல், செயல்படுத்துதல், மார்க்கெட்டிங் செய்தல் போன்றவற்றுக்கான அடிப்படைப் பயிற்சிகளை அரசு வழங்கினால் சிறப்பாக இருக்கும். தவிர, கிராமப்புறப் பகுதிகளில் தயாரிக்கும் பொருள்களுக்கு, நகர்புறப் பகுதிகளில் எல்லாக் காலத்திலும் வரவேற்பு இருக்கிறது. எனவே, இவை இரண்டுக்குமான இடைவெளியைச் சரிசெய்யக் கண்காட்சி, சிறப்பு விற்பனை நிலையங்கள் போன்றவற்றை அரசு அதிகப்படுத்தினால் இன்னும் வளர்ச்சி அதிகரிக்கும்.
முன்பெல்லாம் தொழில் தொடங்கப் பணம் கிடைக்காமல் சிரமப்பட்ட பெண்கள், இன்று யாரையும் எதிர்பார்க்காமல் வங்கியை அணுகி எளிதாகக் கடன் பெறுகிறார்கள். தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து தொழில் தொடங்கும் பெண்களுக்கு வங்கிகள் பலவித வங்கிக் கடனுதவிகளை வழங்குகின்றன. ஆனால், அவை பற்றிய விவரங்கள் பெரும்பாலான பெண்களுக்குச் சென்று சேராமலேயே இருக்கின்றன. இதுதான் தொழில்முனைவோருக்கும் வங்கிகளுக்கும் மிகப்பெரிய இடைவெளியாக இருக்கிறது.
பெண் தொழில் முனைவோர்களை வரவேற்கும் விதமாக பல வங்கிகளும் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, எங்கள் வங்கியில் சென்ட் கல்யாணி’ (பார்க்க பெட்டிச் செய்தி) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்என்றார் அவர்.
முன்பெல்லாம் பியூட்டி பார்லர், உணவு சார்ந்த தொழில்கள் போன்றவற்றைத் தொடங்கவே பெண்கள் ஆர்வம் செலுத்துவார்கள். ஆனால், இன்று டிசைனிங், உற்பத்தி, சர்வீசஸ் போன்ற பல புதிய தொழில்களில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இன்னுமுள்ள ஏராளமான புதிய தொழில்களில் கவனம் செலுத்தினால், தனித்துவத்துடன் எளிதாக வெற்றி பெறலாம்’’ என்றபடி, பெண் தொழில்முனைவோர்களுக்குப் பல பயனுள்ள தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை, அண்ணா நகர் கிளை முதன்மை மேலாளர் சந்தியா ரவிமோகன்.
‘‘புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்கள் மாவட்டத் தொழில் மையத்தில் தங்களுக்குப் பிடித்தமான தொழில், அதற்கான வளர்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். 
அருகிலுள்ள வங்கிகளிலோ அல்லது அந்த வங்கிகளின் இணையதளத்திலோ கடனுதவி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். 
மேலும், எம்.எஸ்.எம்.இ (MSME - Ministry of Micro, Small & Medium Enterprises) மற்றும் கே.வி.கே (KVK - Krishi Vigyan Kendra) போன்ற அரசு நிறுவனங்களும் ஏராளமான தொழில் உதவிகளைச் செய்கின்றன.
மத்திய அரசின் முத்ரா, ஸ்டாண்ட்அப் இந்தியா போன்ற திட்டங்களில் பெண்கள்தான் அதிகளவில் பயன்பெறுகின்றனர். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரையிலான தொகையைப் புதிதாகத் தொழில் தொடங்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பெண் தொழில்முனைவோருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவியாக வழங்குகின்றன.
சுயதொழில் செய்யும் பெண்களுக்குக் கடனுதவி அளிக்க எங்கள் வங்கி உள்பட பல வங்கிகள் இன்முகத்துடன் காத்திருக்க, அதனைப் பற்றிய விழிப்பு உணர்வு பெண்களிடம் போய்ச் சேர வேண்டியது முக்கியம். அடுத்த 20 ஆண்டுகளில் தொழில் துறையில் ஆண்களுக்குக் கடும் சவால் கொடுக்கும் வகையில் பெண்கள் முன்னேறுவார்கள்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
வீட்டில் பெண்கள் முடங்கியிருந்த காலம் போய்விட்டது. இனி, தொழில் துறையிலும் அவர்கள் கலக்க வந்துவிட்டார்கள் என்பதே இன்றைய யதார்த்தம்.
பெண்களுக்கான சில வங்கிக் கடன் திட்டங்கள்!
பெண் தொழில்முனைவோர்களுக்காகப் பல்வேறு வங்கிகள் சிறப்புத் திட்டங்கள், லோன் வசதி, வட்டி விகிதம் குறைப்பு, விசேஷக் கடன் என பல வசதிகளைச் செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை இங்கே!
1. சென்ட் கல்யாணி திட்டம்
வங்கி: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா
தொழில்கள்: கைவினைத் தொழில்கள், உணவு சார்ந்த தொழில்கள், விவசாய மற்றும் கூட்டு நடவடிக்கைகள், சில்லறை வணிகம் மற்றும் அரசாங்க ஆதரவுத் திட்டங்கள் உள்ளிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: அதிகபட்சமாக ரூ.1 கோடி.
வட்டி விகிதம் குறைப்பு: ரூ.10 லட்சம் வரை 0.25%, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 0.50% (தொழில் மற்றும் நபர்களைப் பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்).
வட்டி: ரூ.10 லட்சம் வரை, 8.95%. ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 9.40%

2. ஸ்ரீ சக்தி திட்டம்
வங்கி: ஸ்டேட் பேங்க்
தொழில்கள்: சிறு, குறு, நடுத்தர மற்றும் புதிய தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: ரூ.25 லட்சம்
வட்டி விகிதம் குறைப்பு: ஆண்களைவிட பெண்களுக்கு 0.5%. குறைவு வட்டி: 8.1%

3. தேனா சக்தி திட்டம்
வங்கி: தேனா வங்கி
தொழில்கள்: விவசாயம், உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைத் தொழில்கள், சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட சிறு, குறு தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: தொழில் மற்றும் நபரைப் பொறுத்து மாறுபடும்.
வட்டி விகிதம் குறைப்பு: ஆண்களைவிட பெண்களுக்கு 0.25% குறைவு.
வட்டி: 11%

4. பி.என்.பி வனிதா திட்டம்
வங்கி: பஞ்சாப் நேஷனல் வங்கி
தொழில்கள்: வருமானத்துக்கு வழிவகுக்கும் டிரேடிங், சர்வீஸ், தொழில் விரிவாக்கம், புதுப்பித்தல், உபகரணங்களை வாங்குதல்.
கடன் உச்சவரம்பு: ரூ.25,000.
வட்டி விகிதம்: 8.35%
(அடிப்படை வட்டி விகிதம்)

நன்றி : நாணயம் விகடன் - 30.07.2017

Tuesday, June 20, 2017

சிபில் ஸ்கோர் - அடிப்படை விஷயங்கள்!

சிபில் ஸ்கோர் - அடிப்படை விஷயங்கள்!
​கடன் சம்பந்தப்பட்ட  விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?
http://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=3036&loc=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fnews%2Fmiscellaneous%2F92796-know-the-basic-details-of-cibil-score.html&referer=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fnews%2F&cb=a518dade28CIBIL என்றால் என்ன?
Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் (சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.
யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?
க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.
இதனால் என்ன பயன்?
நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.
கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?
ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.
என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?
க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.
ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்? 
சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும். 
சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?
சிபில் இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.
தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?
சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.
சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?
க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.
கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?
ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.
சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?
இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.
ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.
அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.
நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?
குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.
 சஞ்சய் காந்தி

நன்றி : விகடன் செய்திகள் - 19.06.2017

Thursday, March 23, 2017

கடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா?

Image may contain: house and outdoor

கடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா?
ஆசை ஆசையாக வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்குகிறோம். வாங்கிய கடனுக்கு முறையாக இ.எம்.ஐ.யும் கட்டி வருகிறோம். திடீரென வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு நிரந்தரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோமே.
அந்த வீட்டை விற்று விடலாம் என்று நினைக்கிறோம். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், வீட்டை விற்க முடியுமா?
வீட்டுக் கடன் என்பதே, வாங்கிய வீட்டை வங்கியில் அடமானம் வைத்து வாங்குவதுதான் இல்லையா? வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டுதான் வங்கிகள் கடனை அளிக்கின்றன. ஆனாலும் வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ விற்க முடியும். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். இதற்காகச் சில வழிமுறைகள் உள்ளன. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வேறு ஒருவர் வாங்கத் தயார் என்றால், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் அந்த வீட்டை வாங்குகிறாரா? அல்லது அவரும் வங்கிக் கடன் மூலமாகவே வாங்குகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். 
மொத்தமாகப் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாங்குவதாக வைத்துக் கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும்?
1. வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி முதலில் விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும்.
2. வங்கிக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலையும் எழுத்துப்பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
3. சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.
4. வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நபரிடம் வழங்க வேண்டும்.
6. வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு சட்ட ரீதியான கருத்தைப் பெறலாம். திருப்தி ஏற்படும்பட்சத்தில் வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்கலாம். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யலாம்.
7. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு முடிந்ததற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
8. வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அடமான வீட்டுக்கடன்
ஒருவேளை கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே சொன்ன நடைமுறைகளில் முதல் நான்கு நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
1. தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
2. வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் இதில் இருக்காது.
3. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.
4. கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.
5. அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிப்பது மிகவும் நல்லது. அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்புக்கும் நேரமும் சிரமமும் நிச்சயம் குறையும்.
தி இந்து நாளிதழ் செய்திகள் - 21.03.2015

Sunday, March 5, 2017

காலிமனை வாங்க வங்கியில் கடன் கொடுப்பாங்களா?

காலிமனை வாங்க வங்கியில் கடன் கொடுப்பாங்களா?
வீட்டு மனை வாங்குவதற்கு வங்கியில் கடன் வாங்க முடியுமா?
மனை வாங்குவதற்கு வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் கடன்களை வழங்கி வருகின்றன.  ஆனால், அதற்கென்று சில நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது
வீட்டுக் கடன் வழங்குவதற்கு உள்ளது போல மனை வாங்குவதற்கான கடனுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

விண்ணப்பித்தவரது வருமானம், கடனைச் செலுத்துவதற்கான தகுதி ஆகியவை மிக முக்கியமாக ஆராயப்படுகிறது. மேற்கண்ட தகுதி இருந்தால் விண்ணப்பித்தவரின் மனு வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது மட்டும் போதுமா?
  1. நீங்கள் வாங்க நினைத்துள்ள மனையில் எந்த விதமான வில்லங்கமும் இருக்கக் கூடாது.
  2. அது குடியிருப்புப் பகுதியாக அரசால் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  3. விவசாய நிலமாகவோ, வணிக ரீதியான நிலமாகவோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.
  4. வரையறுக்கப்பட்ட உள்ளாட்சியின் எல்லைக்குள் மனை கண்டிப்பாக இருக்க வேண்டும்
  5. மனையின் விவரங்கள் அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தீர விசாரிப்பார்கள்.

மேற்கண்ட விதிமுறைகளின்படி நீங்கள் வாங்க இருக்கின்ற மனை இருந்தால், கடன் கிடைப்பதில் சிக்கல் இல்லை.
சரி, மனைக் கடன் எவ்வளவு கிடைக்கும்?
வீட்டுக்கடன்களுக்கான நடைமுறைதான் மனைக் கடனுக்கும் பின்பற்றப்படுகிறது.
மனை இருக்கின்ற பகுதியைப் பொறுத்தும் மனைக் கடன் நிர்ணயிக்கப்படும்.
பொதுவாக வீட்டுக் கடன் என்றால் அதிகபட்சம் 80 % வரை வங்கியில் இருந்து பெறமுடியும். மீதம் 20 % தொகையை நம் கையில் இருந்து செலுத்த வேண்டியதிருக்கும்.
அரசு வழிகாட்டு மதிப்பினை வைத்தே மனைக் கடன் வழங்கப்படும்.
பெரிய நகரங்கள் என்றால் அரசு வழிகாட்டு மதிப்பின்படி குறைந்தது 70 % வரை மனைக் கடன் கண்டிப்பாக கிடைத்துவிடும். இடத்தை பொறுத்து சில தனியார் வங்கிகள் மட்டும் 80 முதல் 85 % வரை மனைக் கடன் வழங்குகிறது. சிறிய நகரங்கள் என்றால், மனையின் மொத்த மதிப்பீட்டில் 50 முதல் 60 % வரைதான் மனைக் கடன் வழங்கப்படுகிறது
Image result for காலி மனை
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
  1. வாங்க இருக்கின்ற இடத்தின் பத்திரம் மற்றும் மூல பத்திரங்கள்
  2. வாங்க இருக்கின்ற இடத்தின் 30 வருட வில்லங்க சான்றிதழ்
  3. வாங்க இருக்கின்ற இடம் குடியிருப்புக்கானது என்ற சான்றிதழ்
  4. வாங்க இருக்கின்ற இடத்தின் மதிப்பீட்டு சான்றிதழ்
  5. வாங்க இருக்கின்ற இடத்தின் வரைபடம்
  6. உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  7. உங்களது வருமான சான்றிதழ்
  8. உங்களது இருப்பிட சான்றிதழ்
  9. உங்களது அடையாள சான்றிதழ்
  10. உங்களது கடந்த 6 மாதங்களுக்கான வரவு செலவு (வங்கி) விபரங்கள்

காலி மனை கடனுக்கு வரிச் சலுகை கிடையாது
பொதுவாக நீங்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடனை அடைக்கும் தொகைக்கான வரி விலக்கு கொஞ்சம் வழங்கப்படுகிறது. ஆனால், நீங்கள் வாங்குகின்ற மனைக் கடனை அடைக்கச் செலுத்துகின்ற தவணைத் தொகைக்கு எந்த விதமான வரி விலக்கும் கிடையாது.

****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி,