disalbe Right click

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, September 4, 2017

மருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்!

மருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்!
பிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு எம்.பி.பிஎஸ்., அல்லது பி.டி.எஸ்.,! மருத்துவத் துறையில் இந்த படிப்புகளையும் கடந்து, வாய்ப்புகள் மிகுந்த பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றை இங்கே காண்போம்...
மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் சிறந்த படிப்பு. மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள, இந்த படிப்பு உதவுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ரேடியாலஜிஸ்ட்என்று அழைக்கப்படுவர்.
கதிர்வீச்சினை (எக்ஸ்ரே) மனித உடம்புக்குள் செலுத்தி, குறிப்பிட்ட உறுப்புக்களை துல்லியமாக்க படம் எடுத்து, நோய்களை கண்டறிவதும் மற்றும் காயங்கள் அல்லது எலும்பு முறிவுகளை அளவிடுவதும் இவர்கள் தான். ரேடியாலஜி படிப்பில், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றி விரிவாகப் படிக்கலாம்.
ஆப்தொமெட்ரி
கண்களின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி படிக்கும் முதன்மை படிப்பு ஆப்தொமெட்ரி. பார்வை குறைபாடு தொடர்பான பரிசோதனை, கண் நோய்களை கண்டறிதல், கண் சிகிச்சை உள்ளிட்டவற்றை இப்படிப்பின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
பார்வை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை விலக்கி, கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, அதற்கேற்ற சிகிச்சை குறிப்புகளை வழங்குபவர்கள், ஆப்தொமெட்ரிஸ்ட்’.
நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்புடன், கிளினிக்கல் அனுபவம் பெற இன்டர்ன்ஷிப் பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக இவர்களால் செயல்பட முடியும்.
மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி
மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் மூலம் நோய்களை கண்டறிதல், நோயினை பகுத்து ஆராய்தல், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆய்வுக்கூடத்தில் அனைத்துப் பணிகளையும் ஒருங்கே செய்து கொடுப்பதை பற்றி படிக்கும் படிப்பு.
உடலில் உள்ள நீர், ரத்தத்தின் அளவு, சதை, கெமிக்கல் அனாலிஸ், உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை கண்டறியும் முறைகள் பற்றி முழுமையாக இந்த படிப்பின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஹெமாட்டாலஜி, இம்யூனலாஜி, கிலினிக்கல் பெதாலஜி, பிலெட் பேங் டெக்னாலஜி, மாலிக்குலர் பெதாலஜி, பயோ கெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி மற்றும் சிரோலஜி உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற முடியும்.
ஆக்குபேஷனல் தெரபி
இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட மனிதர்களின் செயல்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது ஆக்குபேஷனல் தெரபி’. மனநலம் சார்ந்த இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலிகிளினிக், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபிபடித்தவர்களின் சேவை அதிகம் தேவைப்படுவதால், இத்துறையில் வாய்ப்புகள் அதிகம். இத்துறையில், பிஎஸ்.சி., எம்எஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பிசியோதெரபி (பி.பீ.டி.,)
துணை மருத்துவப் படிப்புகளில், அதிக முக்கியத்துவம் நிறைந்த படிப்பாக கருதப்படும் படிப்பு இது. முறையாக செயல்படாமல் இருக்கும் உடல் இயக்கத்தை சீர் செய்ய மருந்துகளோடு சேர்த்து பிசியோதெரபி சிகிச்சையும் அவசியமான ஒன்றாகி உள்ளது. எலும்பு முறிவு, சதைப் பிடிப்பு, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிகிச்சை அளித்து வலியைப் போக்குவதில் பிசியோதெரபிஸ்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மருத்துவர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் பிசியோதெரபிஸ்ட்களுக்கும் வாய்ப்பு உண்டு. இப்பிரிவில், பிஎஸ்.சி., எம்எஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
நியூரோ டெக்னாலஜி
மருத்துவத் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறை நியூரோ டெக்னாலஜி’! நியூரோ சயின்ஸ், செல்லுலார் இன்ஜினியரிங் மற்றும் சிக்னல் பிராசசிங் உள்ளிட்டவற்றை விரிவாகப் படிப்பதினால், நரம்பியல் மருத்துவர்க்கு இணையாக, இத்துறையில் பட்டப்படிப்பை படித்தவர்கள் செயல்படுகின்றனர். எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இத்துறை மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்படுகின்றது. இதில், பிஎஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
பெர்பியூஷன் டெக்னாலஜி
அனைத்து விதமான இதய அறுவை சிகிச்சையின் போதும் உடலின் ரத்த ஓட்டம், நின்றுவிடாமல் இருக்கவும், சீராக செயல்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும், மயக்கவியல் வல்லுநர்களுக்கும் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் பெர்பியூஷனிஸ்ட்பெரிதும் உதவுகின்றனர். அதனால், ‘பெர்பியூஷனிஸ்ட்இல்லாமல் இருதய அறுவை சிகிச்சை என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. மூன்று ஆண்டுகள் கொண்ட பிஎஸ்.சி.,- பெர்பியூஷன் டெக்னாலஜி படிப்பை படிக்கும் மாணவர்கள், மருத்துவர்களுக்கு நிகராக செயல்பட முடியும். அதனால், மருத்துவ துறையில் இவர்களுக்கான தேவைகள் அதிகம். மேலும், ஒரு சில தனியார் கல்லூரிகள், இன்டர்ன்ஷிப் படிப்புடன் நான்கு ஆண்டுகள் கொண்ட பிஎஸ்.சி., பட்டப்படிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி

அறுவை சிகிச்சை அறையில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் பற்றி முழுவதுமாக படிக்கும் முக்கியத்துவம் நிறைந்த படிப்பு. அறுவை சிகிச்சையின் போது, மருத்துவருக்கு இணையாகவும், அறுவை சிகிச்சைக்கு முன், அறை மற்றும் தேவைப்படும் கருவிகளை சுத்தப்படுத்தி வைப்பது என பல்வேறு வேலைகளை மேற்கொள்கின்றனர், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்ஸ். இதில், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் மேனேஜ்மென்ட், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிக்ஸ் மற்றும் சர்ஜரிக்கல் டெக்னாலஜி ஆகிய பிஎஸ்.சி., படிப்புகளும், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகிறது.
டயாலிசஸ் டெக்னாலஜி
மனித உடலின் ஆரோக்கியத்திற்கு, இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்கையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சிறுநீரகங்கள் சேதமடைதல், பிற நோய் தொற்றுகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் செயல் இழந்தால், மேற்கொள்ளப்படும் சிகிச்சை தான் டயாலிசஸ். இந்த சிகிச்சைக்கு, டயாலிசஸ் டெக்னிஷியன்களின் தேவை அவசியம். அதனால், அனைத்து மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில் வேலைவாய்ய்புகளை எளிதில் பெற முடியும்.
பிஎஸ்.சி., டயாலிசஸ் டெக்னாலஜி படிப்பில், டயாலிசஸ் இயந்திரத்தை பொருத்துதல், ஸ்டெர்லிலைசேஷன் கலவை தயாரித்தல், நோயாளியை கண்காணித்தல், டயாலிசஸ் இயந்திரத்தை இயக்குதல், மேற்பார்வை செய்தல், இரத்த ஓட்டத்தை கணக்கிடுதல், இயந்திரத்தை சுத்தம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் உள்ளிட்டவற்றை படிக்கலாம்.
ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லேங்குவேஜ் பெதாலஜி
கேட்பதில் மற்றும் பேசுவதில் குறைபாடுள்ள குழந்தைகள், கேட்கும் திறன் பேசும் திறனை இழந்தவர்கள், திக்குவாய் போன்ற பிரச்சனைக்கு உட்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது குறைபாடுகளை கண்டறிந்து, அதைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் பற்றி கற்றுக் கொடுக்கும் படிப்பு இது!
பிளஸ் 2வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை முதன்மை பாடமாக படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மூன்று வருட பி.எஸ்சி., படிப்புடன், ஒரு வருட இன்டன்ஷிப் பயிற்சியும் சேர்த்து மொத்தம் 4 ஆண்டுகள், இந்த படிப்பை படிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் காது கேளாதோர் கல்வி நிறுவனங்களில், ஆடியாலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட்களுக்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இத்துறையில் பட்டப்படிப்பை படித்தவர்கள் தனியாக கிளினிக் வைக்கலாம் அல்லது தனிப்பட்ட முறையில் குறைபாடு இருக்கிறவர்களின் வீடுகளுக்குச் சென்று சேவை செய்யலாம். வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.
மெடிக்கல் ரெக்காடு சயின்ஸ்
நர்சிங் ஹோம் தொடங்கி சூப்பர் மல்டி ஸ்பேஷாலிட்டி ஹாஸ்பிட்டல்கள் அனைத்திலும், நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றின முழு விவரங்களை பதிவு செய்து வைத்திருப்பது கட்டாயம். எனவே, தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாரு, மின்னணு சாதன அமைப்பில் எவ்வாறு விவரங்களை பதிவு செய்வது, அதன் விதிமுறைகள், எத்தகைய தகவல்கள் இடம்பெற வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி படிக்கும் படிப்பு!
வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இத்துறையில், பி.எஸ்சி., பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கவனம் சிதறாமல் வேலை பாக்கும் திறன், நேரத்தை நிர்வகிக்கும் திறன், தகவல்களை சேகரிக்கும் திறன்களை வளர்த்து கொள்வது அவசியம்.
ரெஸ்பிரேடரி தெரபி
புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா மற்றும் இருதய நோய்களால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கூடிய துணை மருத்துவ படிப்பு இது. மருந்துகளை நிர்வகித்தல், கார்டியோ பல்மோனாரரி சிகிச்சை தொடர்பான உபகரணங்களை கையாள்வது, ஆக்ஸிஜன் மற்றும் பிற வாயுக்களின் அளவை தீர்மானிப்பதற்கு இரத்த மாதிரிகள் பகுப்பாய்வு செய்தல், செயற்கை மூச்சுக் குழாய்களை நிர்வகித்தல், ஜெஸ்ட் எக்ஸ்ரேஸ், முக்கிய சுவாச அறிகுறிகளை மதிப்பீடு செய்தல், நோயாளிகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என பல்வேறு பிரிவுகளைப் பற்றி விரிவாக கற்றுக் கொடுக்கும் படிப்பு. இதில், இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் பி.எஸ்சி., பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அனஸ்திஸ்யா டெக்னாலஜி
நோயாளிகளின் உடல் தகுதிகளை ஆராய்ந்து, அறுவை சிகிச்சையின் போது அவர்களுக்கு போடப்படும் மயக்க மருந்தின் அளவை நிர்ணயிக்கும் முக்கிய பணியினை மேற்கொள்பவர்கள் தான் அனஸ்திஸ்யா டெக்னாலஜிஸ்ட்கள்! மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும், தீவிர மருத்துவ பராமரிப்பு பிரிவுகளிலும் இவர்களது பணி பெறும் அளவில் தேவைப்படுகிறது.
மயக்க மருந்து உபகரணங்கள், மயக்க மருந்தின் நுட்பங்கள் மற்றும் நோயாளிகளின் உடல் தகுதிக்கு ஏற்றவாறு மயக்க மருந்தின் அளவை கணக்கிடும் முறைகள் மற்றும் மயக்க மருந்தை செலுத்தியவுடன் கண்காணிக்கும் விதிமுறைகள் போன்றவை, இளநிலை பி.எஸ்சி.,-அனஸ்திஸ்யா டெக்னாலஜி பட்டப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. சி.சி.யு., மற்றும் ஐ.சி.யு., பிரிவிலும், அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து வழங்கும் மயக்க மருந்து வல்லுநர்களாகவும், அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்தும் வேலை செய்யலாம். எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பிறகு அனஸ்திஸ்யா பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசம்.
கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜி
இதயம் மற்றும் அதன் தொடர்பான வாஸ்குலர் பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு, கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜிஸ்ட்கள் (சி.வி.டி.,) உதவுகின்றனர். இரத்த ஓட்ட நிலைகள் மற்றும் இருதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மிக துல்லியமாக கண்காணித்து மருத்துவ அறிக்கையை தயார் செய்வதும் இந்த கார்டியலஜி தொழில்நுட்ப வல்லுநர்களே!
அல்ட்ராசவுண்ட் மூலம் இதய படங்களை எடுக்கும் தொழில்நுட்ப முறைகள், எடுத்த படங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் நோய் கண்டறியும் செயல்முறைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கான தேவைகள் மருத்துவ துறைகளில் மிக அதிகம். அதனால், இப்பாடப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பின்மை என்பது இல்லை.                 
நன்றி : தினமலர் – கல்வி மலர் – 04.09.2017 

Monday, July 17, 2017

அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி

அரசு  சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி
அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழியில் படிப்பு: கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு
அரசு சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழியில்சட்டப்படிப்புகள் தொடங்கப்பட வுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் சட்டம் படிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் (2017-2018) செங்கல்பட்டு, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய அரசு சட்டக்கல்லூரிகளில் தமிழ் வழியில் சட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன. இதன்மூலம் மாணவர் கள் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். கிராமப்புற மாணவர்களுக்கும் இது உதவி யாக இருக்கும். மேலும் திருச்சி, கோவை, நெல்லை போன்ற இடங்களில் உள்ள சட்டக் கல்லூரி களிலும், 3 மற்றும் 5 வருட சட்டப்படிப்பு தமிழ்வழியில் தொடங்கப்படவுள்ளது. அந்த கல்லூரிகளில் தலா 60 இடங்கள் ஒதுக் கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்து வருட சட்டப்படிப்புக்கு மட்டும் தமிழ் வழியில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு சட்டக் கல்லூரி முதல்வர் என்.தேவநாதன், ‘தி இந்துவிடம் கூறியதாவது:
240 இடங்கள் கொண்ட இந்த கல்லூரியில், சட்டப் பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்வழியில் சட்டப் படிப்பு தொடங்கப்படுகிறது. வழக்கறிஞர் தொழிலின் மீதான கவர்ச்சி மாணவர்களிடையே குறையாமல் உள்ளது. சட்டப் படிப்புக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு உள்ளது. சென்னை, மதுரை சட்டக் கல்லூரிகளில் மட்டும் தமிழ்வழியில் சட்டப்படிப்பு இருந்தது.
தற்போது செங்கல்பட்டு உள்ளிட்ட பிற சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு தமிழ்வழியில் சட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி வளர்ச்சிக் காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கல்லூரியில் முதன்முறையாக கணினி குற்றங்கள் தொடர்பாக முதுகலைபட்டப்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெ. ஜேம்ஸ்குமார்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.07.2017



Monday, July 3, 2017

சட்டம் எங்கே படிக்கலாம் ?








சட்டம் எங்கே படிக்கலாம் ?
+2, பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் (The Tamilnadu Dr. Ambedkar Law University) இடம்பெற்றிருக்கும் பல்வேறு சட்டப்படிப்புகளில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.இளநிலைச் சட்டப்படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் இருக்கும் சட்டப்பள்ளியில் (School of Excellence in Law) ஐந்தாண்டு கால அளவிலான B.A.,L.L.B (Hons.), B.B.A.,L.L.B (Hons.), B.Com.,L.L.B., B.C.A.,L.L.B ஆகிய நான்கு பிரிவுகளிலான ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்புகளும், மூன்று ஆண்டு கால அளவிலான L.L.B (Hons.) எனும் இளநிலைச் சட்டப்படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.
ஐந்தாண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 70% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மூன்றாண்டு கால இளநிலைச் சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை. 
முதுநிலைச் சட்டப்படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான 1) Business Law, 2) Constitutional Law & Human Rights, 3) Intellectual Property Law, 4) International Law and Organisation, 5) Environmental Law and Legal Order, 6) Criminal Law and Criminal Justice Administration, 7) Human Rights and Duties Education, 8) Labour and Administrative Law, 9) Taxation Law எனும் ஒன்பது பிரிவுகளில் முதுநிலைச் சட்டப்படிப்புகள் (L.L.M) இடம்பெற்றிருக்கின்றன. 
முதுநிலைச் சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஐந்து அல்லது மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் புதிய ஒழுங்குவிதிகள் எனில் 45% மதிப்பெண்களுடனும், பழைய ஒழுங்குவிதிகள் எனில் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.  
தொலைநிலைக் கல்விப் படிப்புகள்:
இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்விப் படிப்புகளாக, இரண்டாண்டு கால அளவிலான நிறுமச் சட்டங்கள் (Master of Corporate Laws  M.C.L) எனும் பிரிவிலான முதுநிலைச் சட்டப்படிப்பும், ஒரு ஆண்டு கால அளவிலான
1) Business Law - P.G.D.B.L,
 2) Environmental Law  P.G.D.E.L,
 3) Information Technology LawP.G.D.I.T.L,
 4) Intellectual Property Law  P.G.D.I.P.L,
 5) Labour Law  P.G.D.L.L,
 6) Human Rights & Duties Education  P.G.D.H.R & D.E,
 7) Cyber Forensic and Internet Security P.G.D.C.F & I.S,
 8) Criminal Law, Criminology & Forensic Science P.G.D.C.L.C & F.S,
 9) Law Librarianship  P.G.D.L.Lib, (Medico  Legal Aspects  P.G.D.M.L.A),
 10) Consumer Law & Protection  P.G.D.C.l & P,
11) Maritime Law P.G.D.M.L
எனும் 11 பிரிவுகளிலான முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்புகளும், ஆறுமாத கால அளவிலான ஆவணமாக்குதல் பயிற்சி (Course in Documentation) எனும் சான்றிதழ் படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.
முதுநிலை நிறுமச் சட்டங்கள் படிப்பு மற்றும் முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்புகள் அனைத்திற்கும் ஏதாவதொரு இள நிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. சான்றிதழ் படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
 மேற்காணும் அனைத்துப் படிப்புகளுக்குமான விண்ணப்பத்தை
”The Registrar,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரியில் நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ பெற்றுக்கொள்ள முடியும். இளநிலை மற்றும் முதுநிலைச் சட்டப்படிப்புகள் அனைத்திற்கும் நேரடியாகப் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500, பிற பிரிவினர் ரூ.1000 எனவும், முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250, பிற பிரிவினர் ரூ.500 என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். 

அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் இளநிலை மற்றும் முதுநிலைச் சட்டப்படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.600, பிற பிரிவினர் ரூ.1100 என்றும், முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.350, பிற பிரிவினர் ரூ.600 என்றும்  விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
அஞ்சல் வழியில் பெற விரும்புவோர்
“The Registrar,
The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வேண்டுதல் கடிதம் ஒன்றையும் சேர்த்து அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு படிப்பிற்கும் தனி விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமும் தனியாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தினை ஏதாவதொரு இந்தியன் வங்கிக் கிளையில் உரிய சலான் வழியாக மட்டுமே செலுத்தவேண்டும். விண்ணப்பக் கட்டணத்திற்கான சலானை பல்கலைக்கழக அலுவலகத்தில் பெற்றுக்கொண்டோ அல்லது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்தோ பயன்படுத்திக்கொள்ளலாம். 
நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்துப் பல்கலைக்கழக அலுவலகத்தில் நேரடியாகக் கொடுக்கலாம்.
அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புவோர்
“The Chairman,
 Law Admissions 2017-2018,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்குத் தொடர்புடைய படிப்பிற்கான கடைசி நாளுக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். 

ஐந்தாண்டு இளநிலைச் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.6.2017. மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.6.2017. முதுநிலைச் சட்டப்படிப்பு மற்றும் தொலைநிலைக் கல்விப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28.7.2017.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது பல்கலைக்கழக அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றோ, பல்கலைக்கழகத்தின் 044 - 24641212 எனும் அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம். 

அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டப் படிப்புகள்தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் (The Tamilnadu Dr. Ambedkar Law University) இணைவிப்பு பெற்றுத் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அரசு சட்டக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் இளநிலைச் சட்டப்படிப்புகளில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசுச் சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இளநிலைச் சட்டப்படிப்புகள்: மேற்காணும் சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்பு (B.A.,L.L.B) மற்றும் மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பு (L.L.B) எனும் இரண்டு வகையான இளநிலைச் சட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 
கல்வித்தகுதி:
ஐந்தாண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டு காலச் சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு சட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை நேரடியாகப் பெற விரும்புவோர் மேற்காணும் அரசுச் சட்டக் கல்லூரிகளிலும், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். நேரடியாகப் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250, பிற பிரிவினர் ரூ.500 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். 
அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.350, பிற பிரிவினர் ரூ.600 என விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். அஞ்சல் வழியில் பெற விரும்புவோர்
The Registrar,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வேண்டுதல் கடிதம் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். 
விண்ணப்பக் கட்டணத்தினை ஏதாவதொரு இந்தியன் வங்கிக் கிளையில் உரிய சலான் வழியாக மட்டுமே செலுத்தவேண்டும். விண்ணப்பக் கட்டணத்திற்கான சலானை அரசுச் சட்டக் கல்லூரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, நேரடியாகச் சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகங்களிலும், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நேரடியாகக் கொடுக்கலாம். அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புவோர்
“The Chairman,
 Law Admissions 2017-2018,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
“Poompozhil” No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.6.2017.
மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17.7.2017.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது அருகிலுள்ள சட்டக்கல்லூரி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு. சுப்பிரமணி
நன்றி : தினகரன் நாளிதழ் - 16.06.2017

Monday, May 29, 2017

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என்ன படிக்கலாம்?

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என்ன படிக்கலாம்?
நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை. காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான்.
+2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம்.
இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
எனவே, இன்ஜினியரிங் சீட் வாங்குவதைவிட, அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பதுதான் இன்றைக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. எனவே, இன்ஜினியரிங் படிப்பை சிறப்பாக வெற்றிகரமாக முடிக்கக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதை தெளிவாக ஆராய்ந்து, பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும்.
மெடிக்கல் படிப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் குறைந்தளவு கல்லூரிகளே இருப்பதால், மிக அதிகளவு மதிப்பெண் வாங்கியவர்களுக்கான படிப்பாக மட்டுமே அது இருந்து வருகிறது. எனினும், MBBS என்கிற ஒரேயொரு படிப்பிற்கு மட்டும், நாம் முயற்சி செய்வதைத் தாண்டி, மருத்துவத்தில் உள்ள மற்ற படிப்புகளிலும் கவனம் செலுத்தினால், சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகரிக்கும். MBBS போலவே, அதே காலஅளவில் உள்ள மாற்று மருத்துவம் சார்ந்த சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகியவற்றின் மருத்துவப் பட்டப் படிப்புகளும் சமீப ஆண்டுகளில் புகழ்பெற்று வருகின்றன.
தவிர, BDS எனப்படும் பல் மருத்துவப் படிப்பு, MBBS சொல்லித்தரப்படுகிற கல்லூரிகளைவிட, சற்று அதிகமான கல்லூரிகளில், தமிழகத்தில் உள்ளதால், இவற்றில் சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். கூடவே, B.Pharm எனப்படும் மருந்தியல், B.Sc(Nursing), B.P.T எனப்படும் பிசியோதெரபி, கண் மருத்துவம் சார்ந்த ஆப்டோமெட்ரி ஆகியவையும், மருத்துவம் சார்ந்த நாம் கவனிக்க வேண்டிய படிப்புகளாகும்.
மருத்துவத்தில், மனிதர்களுக்கான மருத்துவம் தாண்டி, கால்நடைகளுக்கான மருத்துவம், காலம்காலமாக புகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. எனப்படும் வெர்ட்னரி சயின்ஸ் படிப்பு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், இந்தப் பல்கலையின் கீழ் இயங்கும் நாமக்கல் கல்லூரியிலும் சொல்லித் தரப்படுகிறது. தவிர, B.F.Sc. எனப்படுகிற மீன்வளம் சார்ந்த விஷயங்களை பட்டப் படிப்பாக சொல்லித் தருவதற்கென, தூத்துக்குடியில் அரசு மீன்வளக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்லூரியும், கால்நடை மருத்துவப் பல்கலையின் கீழ்தான் செயல்படுகிறது. இது, சமீப ஆண்டுகளில் வரவேற்பை பெற்றுவரும் இன்னொரு புதிய படிப்பாகும்.
வேளாண் துறை சார்ந்த படிப்பான B.Sc. (Agriculture), எப்போதுமே வரவேற்புள்ள ஒரு படிப்பாகும். கோவையிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், கோவையில் மட்டுமல்லாது, திருச்சி, பெரியகுளம் என பல்வேறு இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளிலும், இந்தப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. வேளாண் கல்லூரிகளில், சமீப ஆண்டுகளில் அதிகம் நாடப்படும் இன்னொரு படிப்பு, Horticulture எனப்படும் தோட்டக்கலை சார்ந்த படிப்பாகும்.
தவிர, கோவை வேளாண் பல்கலையில், ஒருசில சிறப்பு இன்ஜினியரிங் பட்டப் படிப்புகளும் சொல்லித் தரப்படுகின்றன என்பது பலர் அறியாத செய்தி. B.Tech(BioTechnology), Food Process Engineering, Agricultural IT போன்ற இந்த இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, நீங்கள் நேரடியாக கோவை வேளாண் பல்கலைக்கு, தனியாக ஒரு விண்ணப்பம் போட வேண்டும்.
ஒரு காலத்தில், அரசியலில் நுழைய வேண்டுமானால், அதற்கு சட்டக் கல்லூரியில் சேர்வதானது, பாஸ்போர்ட் எடுப்பது போன்றது என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால், இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு, மீண்டும் சமீப ஆண்டுகளில் சட்டப் படிப்பிற்கான மவுசு கூடிவருகிறது. சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களிலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்பில் சேர +2வில் நீங்கள் எந்த குரூப் எடுத்திருந்தாலும் போதுமானது.
இப்படியான தொழிற் படிப்புகளுக்கான கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும், B.A., B.Sc., B.Com. போன்ற படிப்புகளை வழங்கும் கலை அறிவியல் கல்லூரிகளும், நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன. எனினும், இந்தக் கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு காலத்திலிருந்த வழக்கமான படிப்புகளிலிருந்து மாறுபட்டு, இன்று நிறைய புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. சொல்லப்போனால், இன்ஜினியரிங் கல்லூரியிலுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி போன்றவை, B.Sc. படிப்புகளாக, கலை அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, சயின்ஸ் பாடங்களில்கூட, சிறப்புத் துறைகளாக மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி என சிறப்பு பட்டங்கள் தரப்படுகின்றன. சத்துணவு, இந்திய சுற்றுலா, ஹோம் சயின்ஸ், உளவியல் என பெண்களை மையப்படுத்தி, நிறைய சிறப்பு பட்டப் படிப்புகள், குறிப்பாக, மகளிர் கல்லூரிகளில் சொல்லித்தரப்படுகின்றன.
கலை, அறிவியல் கல்லூரிகளில் மிகவும் பிரபலமான இன்னொரு படிப்பு B.Com. என்றாலும், அதோடு சேர்ந்த படிக்க வேண்டிய இன்னும் சில கோர்ஸ்களை நம் மாணவர்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அதாவதாக, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் எனப்படும் CA, காஸ்ட் அக்கவுன்டன்ட் எனப்படும் ICWAI மற்றும் கம்பெனி செக்ரட்டரி எனப்படும் ACS ஆகிய மூன்றும்தான் அவை.
ஒருகாலத்தில், பட்டப் படிப்பை முடித்தப் பிறகுதான், இவற்றை முயற்சி செய்யவே முடியும். ஆனால் இன்று, +2 முடித்து பட்டப் படிப்பில் சேர்ந்தவுடனேயே இவற்றுக்கான தொடக்கநிலைத் தேர்வுகளை எழுத முடியும் என்பதால், பட்டப் படிப்பை படித்துக்கொண்டே ஒரே நேரத்தில், இந்தத் தேர்வுகளையும் எழுதுவதால், மூன்றாண்டு காலம், விரயமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதை, ஒரு காலத்தில், பல வீடுகளில் அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அத்தனைப் படிப்புகளும், தொலைக்காட்சித் துறைக்கும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதால், அந்த எதிர்ப்பு நிலை மாறியுள்ளது. சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு சொல்லித் தரப்படுகிறது. அதேபோல், சென்னை அடையாறில் உள்ள அரசு இசைக் கல்லூரியில், இசை மற்றும் நடனம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் சொல்லித் தரப்படுவதோடு, இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன.
உங்களின் ஓவியத் திறமையை மட்டுமே வைத்து பட்டப் படிப்பில் நுழையும் வாய்ப்பு உள்ளது தெரியுமா? சென்னை எழும்பூரிலுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியிலும், கும்பகோணத்திலுள்ள இதே அரசுக் கல்லூரியிலும் BFA எனப்படும் Fine Arts பட்டப் படிப்பு, பல்வேறு சிறப்பு பிரிவுகளில் சொல்லித் தரப்படுகிறது. இதில் சேர, உங்களது ஓவியத் திறமையைப் பரிசோதிக்கும் நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, அதன்மூலம் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். இரண்டுமே அரசுக் கல்லூரிகள்  என்பதால், கல்விக் கட்டணமும் மிகக் குறைவுதான். இன்று தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் பல்வேறு ஆர்ட் டைரக்டர்களும் இக்கல்லூரிகளின் மாணவர்களே!
சமீப ஆண்டுகளில் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் படிப்புகளில், முக்கியமான இன்னொரு படிப்பு பேஷன் டெக்னாலஜி. சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக் கல்லூரியான NIFT எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாகும். இங்கு பல்வேறு பிரிவுகளில் ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி போன்ற டிசைனிங் கோர்ஸ்கள், பட்டப் படிப்புகளாக சொல்லித் தரப்படுகின்றன.
சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பும், எப்போதுமே நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் படிப்புகளாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கப்பல், விமானம் என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து வேலைபார்க்கும்  வாய்ப்பை கேட்டரிங் படிப்புகள் தருவதால், அதுசார்ந்த ரசனை உள்ளவர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். அதேபோல், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் விளம்பரம் என, ஊடகத்துறை வளர்ச்சி, இன்று சிறப்பாகவே இருந்து வருவதால், மீடியா படிப்புகளான B.Sc. Visual Communication, Mass Communication, Public Relations, Journalism, Electronic Media போன்ற பட்டப் படிப்புகளும், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய படிப்புகளாகும்.
எனவே, காலங்காலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரேமாதிரியான படிப்புகளையே தேர்ந்தெடுக்காமல், உங்கள் ரசனை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, வித்தியாசமான ஒரு பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதே சிறப்பான அமையும்.         
- ரமேஷ் பிரபா, கல்வியாளர்.
 நன்றி : தினமலர் - கல்விமலர் - 30.05.2017