disalbe Right click

Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Saturday, July 15, 2017

காமராஜர் கட்டாத அணைகள்

Image may contain: 1 person, text
காமராஜர் கட்டாத அணைகள்
ஒருவகையில் காங்கிரஸ் சாம்ராஜ்யத்தை அண்ணா வீழ்த்திய பிறகு இங்கு உருவான மாற்றங்கள் தமிழகத்தின் தனித்தன்மையை வளர்த்தெடுக்கவும் சுயமரியாதைமிக்க மாநில சுயாட்சிக்கான சகல திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் பெருமளவில் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் திமுக அதிமுகவின் சாதனைகளைவிட அவர்கள் ஆட்சியில் தமிழகம் கண்ட வேதனைகளே அதிகம்.
பறிபோன நீர்நிலைகள்
தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் பாழ்பட்டுப்போய் தமிழகத்தின் நீராதாரம் இன்று வானளாவிய கேள்விக்குறியாக நிற்பதற்கு ஆற்றுப் புறம்போக்கு ஆக்கிரமிப்பு, ஏரிப்புறம்போக்கு ஆக்கிரமிப்பு, பாசனக் கால்வாய்கள் காணாமல் போன கதைகள், ஊர்நடுவே ஊருக்கு வெளியே இருந்த குளங்கள் குளக்கரைகள் ஆக்கிரமிக்கப்பட்ட அவலங்கள் நடந்தேறியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளில் முக்கியமானது மினரல் பாட்டில்களும் தண்ணீர் கேன்களும் தண்ணீர் லாரிகளும் எப்போது வருமென மக்கள் ஆலாய் பறப்பதுதான்.
வெள்ளம் இல்லாத காலத்தில் மண்ணில் ஈரம் கொஞ்சமேனும் இருக்க தன்போக்கில் இருக்கும் சீரான ஆற்றுப்பாதைகள் முக்கியம். ஆற்றிலும் மணல் எடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுமதித்ததால், அதன் சதைகள் வெட்டப்பட்டு இன்று எலும்புக்கூடாகி, தமிழகத்தின் முக்கிய ஆறுகள் வறண்டு போயின.
வங்கிக் கணக்கும் இல்லாத முதல்வர்
இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பேச்சுக்கு, ''அந்த காலத்துல காமராஜர் ஆட்சியே தேவலாம்'' என்று சொல்வதுண்டு. காமராஜர் ஆட்சியில் ஊழலே இல்லையா? என்றும் கேட்லாம். உலக வரலாறு தோன்றிய நாளிலிருந்தே ஊழல் இல்லாத நிர்வாகமே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் காமராஜர் ஒரு முதலமைச்சராக இருந்தபோது தனக்கென்று ஒரு வங்கிக் கணக்குகூட வைத்துக்கொள்ளாதவர். அவர் இறக்கும்போது மிச்சம் இருந்தது சில வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான்.
அதன்பிறகு வந்த முதலமைச்சர்கள் மட்டும் அல்ல, சாதாரண அமைச்சர்களுக்குக்கூட ஒரு கல்லூரியாவது சொந்தமாக இருக்க வேண்டும். முதலமைச்சருக்கு உதவியாளராக இருந்தவருக்கே ரூ.350 கோடி சொத்து இருக்கிறது என்ற செய்தியை சர்வசாதாரணமாக இன்று நாம் ஜீரணித்துவிட்டுச் செல்கிறோம்.
இன்றைய காங்கிரஸ்
இதனால் காங்கிரஸ்காரர்கள் காமராஜர் ஆட்சியை தருவோம் என்று அடிக்கடி சொல்லி தமிழகத்தை ஆறுதல்படுத்துவதாக நினைத்து தங்களையே ஆறுதல்படுத்திக்கொள்வதுண்டு. 'மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்' என்ற வெடியை அவர்கள் அடிக்கடி பற்ற வைக்கிறார்கள்.
அது பல சமயங்களில் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் எதிர்க்கட்சியினர் மேடைகளிலும் ''டமால் டுமீல்'' என்று நகைச்சுவையாக வெடிக்கத்தான் செய்கிறது. ஆனால் காங்கிரசுக்கு தமிழகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச செல்வாக்கும் குறைந்துகொண்டு வருவது ஏன் என்பதையும் அதை எவ்வாறு சரி செய்வது என்பதிலும் அவர்களுக்கு கொஞ்சமேனும் சிரத்தை இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இன்று அதிமுகவிலும் நிறைய குழப்பம். எதிர்காலத்தில் திமுகவின் வெற்றி மதில்மேல் பூனை.
ஆனால் சைக்கிள் கேப்பில் பிஜேபியும் இங்கே நுழைந்து காலி இருக்கைகள் உருவாவதற்கான சாத்திய எதிர்பார்ப்புகளோடு முன்கூட்டியே துண்டு போடவும் பார்க்கிறது. அதற்காக சினிமா கவர்ச்சியையும் முன்னிறுத்த அவர்கள் தயங்க மாட்டார்கள் என்றுதான் தெரிகிறது. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு பாஜகவின் கடந்த மூன்றாண்டுகால ஆட்சியை நினைக்கும்போது தமிழகம் பாஜகவை வரவேற்க சிவப்புக்கம்பளம் விரிக்குமா என்பது சந்தேகம்தான்.
என்னதான் இவர்கள் வளர்ச்சி! நல்லாட்சி! என்றெல்லாம் சொன்னாலும் உண்மையான வளர்ச்சியும் நல்லாட்சியும் காமராஜர் ஆட்சிதான். அவர் காலத்தில் தோன்றிய தொழிற்பேட்டைகளும், நூற்பாலைகளும், கல்விச்சாலைகளும், நீர்ப்பாசன அணைத்திட்டங்களும், இரும்பு ஆலை, சிமெண்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், ரப்பர் ஆலைகள், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் என நாட்டின் அஸ்திவாரம் போன்ற நிர்மாணப் பணிகளை இன்றுவரை முறியடிக்க எவராலும் முடியவில்லை. இந்தியாவை அல்ல உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த நாட்கள் திரும்பவும் வருமா என்றும் சொல்வதற்கில்லை.
கட்டாத அணைகள்
அவரது ஆட்சியின்போது சட்டமன்றத்தில் நடந்த ஒரு உரையாடலை அடிக்கடி அக்கால பெரியவர்கள் நினைவுகூர்வதுண்டு. சட்டப்பேரவையில் எதிர்வரிசையில் இருந்தவர்களில் டாக்டர் சத்தியவாணிமுத்து எழுந்து ''விவசாயத்திற்கு காமராஜரின் சாதனை என்ன'' என்று கேட்டாராம்.
அதற்கு காங்கிரஸ் உறுப்பினர் எச்.வி.ஹண்டே சொன்னதாக சொல்வார்கள், ''காமராஜர் தமிழக விவசாயத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நீர்ப்பாசனங்களை ஒழுங்கு செய்ய தமிழகத்தின் முக்கிய ஆறுகளுக்கெல்லாம் அணைகளை கட்டியிருக்கிறார்.
அவர் கட்டாத அணைகள் சில உண்டு. அது கேஆர்ஆர், எஸ்எஸ்ஆர், எம்ஆர்ஆர்... ஆகிய ஆறுகளுக்கு எல்லாம்தான் அவர் அணை கட்டவில்லை'' என்று பதில் சொன்னதாக சொல்வார்கள்.
இவர்கள் மூவருமே திராவிட இயக்கங்களின் போர்வாளாக மேடைகளில் முழங்கி, காங்கிரஸை மட்டுமல்ல காமராஜரையும் கடுமையாக தாக்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் கட்டிய அணைகள்:
1. கீழ்பவானி, 2. மணிமுத்தாறு, 3. காவிரி டெல்டா, 4. ஆரணியாறு, 5. வைகை நீர்த்தேக்கம், 6. அமராவதி (அணை), 7. சாத்தனூர் (டாம்), 8. கிருஷ்ணகிரி, 9. புள்ளம்பாடி, 10. வீடூர் அணைத்தேக்கம், 11. பரம்பிக்குளம், 12. நெய்யாறு போன்றவைகளாகும்.

அதுபோல அவர் காலத்தில் தொடங்கப்பட்ட நீர் மின் திட்டங்கங்கள் 1. 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம், 2. 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம், 3. 8 கோடி ரூபாயில் கும்பார் – அமராவதி மின் திட்டம், 4. 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சார்ம் உபரியாக்க் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம் போன்றவைகளாகும்.
டெல்லிக்கு சென்றிருக்கக் கூடாது
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தேசிய பணியாற்ற வேண்டும் என்று காமராஜர் வேறு எதற்கோ சொன்னதை வைத்து அதையே ஒரு திட்டமாக ஆக்கிவிட்டார் நேரு. அதற்கு கே பிளான் (காமராஜர் பிளான்) என்றும் பெயர்வைத்தார். பிற மாநில தலைவர்களை டெல்லிக்கு அழைப்பதற்குமுன் முதற்கட்டமாக காமராஜரையே காங்கிரஸ் கமிட்டிக்கு தேசிய பணியாற்ற புதுடெல்லிக்கு வரவழைத்துவிட்டார்.
பின்னர் இந்திய அரசியலின் பெரும்சக்தியாக இந்திரா காந்தி உருவாக இவரே காரணமானார் என்பதும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இந்தி திணிப்பைக் கைவிடக் கோரியபோது யாரந்த அந்த காமராஜர் எனக் கேட்டதும் பிறகு வந்த வருடங்களில் இந்திரா காந்தி தனது ஆட்சியில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்ததும் அதை காமராஜர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்தும் வரலாறு...
எது எப்படியிருந்தாலும் காமராஜர் அந்த தவற்றை செய்திருக்கக் கூடாது. எனக்கு தமிழ்நாட்டில் இனிமேல்தான் வேலை அதிகம். எனது தாய்த்தமிழகத்தில் பணியாற்றுவதைவிட்டு நான் டெல்லிக்கு வரமுடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ தேசிய பாசம் அவரை அப்படி சொல்லவைக்க விடவில்லை. இழப்பு தமிழகத்திற்குத்தான். அது சாதாரண இழப்பு அல்ல. அதன்பிறகு தமிழகம் அல்ல இந்தியாவே அப்படியொரு தலைவரைக் காணவில்லை.
ஜூலை 15, இன்று காமராஜர் பிறந்தநாள்!
பால்நிலவன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.07.2017

Friday, July 14, 2017

காமராஜருடன் ஒருநாள் - எழுத்தாளர் சாவி

காமராஜருடன் ஒருநாள் - எழுத்தாளர் சாவி
இரண்டு மாதங்களுக்கு முன் காமராஜ் அவர்களை  சந்திக்க நான் டெல்லிக்குப் போயிருந்தபோது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர் முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியில் இருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராக வந்திருந்தார்.

அன்று மாலை காமராஜரைக் காண மெட்ராஸ் ஹவுஸிற்கு வந்திருந்தார் லால்பகதூர் சாஸ்திரி. வாசலில் நின்று கொண்டிருந்த ரிசப்ஷன் ஆபிஸர் தீனதயாளைக் கண்டதும் அவர்,”காமராஜரை பழையபடி கவனித்துக் கொள்கிறீர்கள் அல்லவா? முன்பு அவர் தங்கியிருந்த அதே அறைதானே? உபசரிப்பில் ஒன்றும் குறையில்லையே? என்று கேட்டுக்கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றார்.

காமராஜர் பதவியில் இருந்து விலகிவிட்டதால் எங்கே அவரை சரியாக கவனிக்காமல் இருந்துவிடுவார்களோ என்ற கவலையிலேயே சாஸ்திரி அவ்வாறு கேட்டார். ஆனால், உண்மையில் காமராஜூக்கு அங்கே முன்னைக் காட்டிலும் இரட்டிப்பு உபச்சாரம்.

மறுநாள் காலை. நான் மெதுவாக காமராஜ் தங்கியிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டதும், “என்..ன? வாங்க..” என்று புன்முறுவலோடு அழைத்தார்.

விசிட்டர்கள் அதிகம் இல்லாத நேரமாகையால் நிம்மதியாக உட்கார்ந்து பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப்போகிறார்கள் என்பஹு பற்றி, பத்திரிக்கைகளில் ஏதேதோ செய்திகள் வெளியாகி இருந்தன. காமராஜரும் அதுபற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

“லால்பகதூர் சாஸ்திரியையே காங்கிரஸ் தலைவராகப் போட்டுவிடலாமே.....” என்று மெதுவாக பேச்சைத் தொடங்கினேன்.

ஆமாம். போட்டுவிடலாம்; அப்படித்தான் நாங்களும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். (நாங்கள் என்பது சஞ்சீவ ரெட்டியையும், அதுல்யா கோஷையும் சேர்த்து சொன்னது) சாஸ்திரியிடமும் கேட்டுப் பார்த்தோம். ஆனால், அவர் தலைமைப் பதவி தமக்கு வேண்டாம் என்கிறார். இன்றைக்கு மறுபடியும் சாஸ்திரியை சந்தித்து கன்வின்ஸ் பண்ண வேண்டும்.” என்றார்.  

ஆனால், மறுநாள் காலைப் பத்திரிக்கைகளைப் புரட்டியபோது தலைமைப் பதவிக்கு காமராஜரையே காரியக் கமிட்டி தேர்ந்தெடுத்திருப்பதைக் கண்டபோது எனக்கு வியப்பு.

”என்ன இப்படி ஆகிவிட்டது”? என்று காமராஜிடம் கேட்டேன்.

எனக்கு ஒன்றும் தெரியாது; காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதுல்யா கோஷும் சஞ்சீவரெட்டியும் காதைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் செய்த வேலை இது என்று எண்ணுகிறேன்”  என்றார்.

“எப்படி இருந்தாலும் நல்ல முடிவு” என்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, விடை பெற்றேன். “பதினைந்து நாட்களுக்கு முன்னால், முதலமைச்சராக இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால், பதவியில்லாத சாதாரண மனிதராக வந்தார். இன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவி தேடி வந்திருக்கிறது. இத்தனை மாறுதல்களும் இரண்டே வாரங்களில் நடந்துவிட்டன. ஆனாலும், அவரிடத்தில் எந்தவித மாறுதலையும் காண முடியவில்லை. பதவியில் இருந்தபோது, பதவியை விட்டபோது, பதவி அவரை தேடி வந்துள்ளபோது ஆக எந்த நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்” என்றார் தீனதயாள்.

மறுநாள் காலை காமராஜ் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அவர் சோபா ஒன்றில் கால்களை சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். சட்டைப் பித்தான்களைக் கழற்றிவிட்டு, வலது கையை முதுகுப் பக்கமாக செலுத்தி இடது தோளைத் தேய்த்த படியே பத்திரிக்கை படிப்பதில் சுவாரஸ்யமாக இருந்தார். 

மேஜ மீது அன்றைய இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் இவ்வளவு பத்திரிக்கைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

”பத்திரிக்கைகளில் அரசியல் செய்தி மட்டும்தான் படிப்பீர்களா? அல்லது...”  

”எல்லாந்தான். எந்த ஊரில் என்ன பிரச்சனை என்று பார்ப்பேன். ஒரு ஊரில் தண்ணீர் இல்லை என்ற செய்தி இருந்தால் அதையும்தான் பார்ப்பேன், தண்ணீர் இல்லை என்பதும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே?” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார். எழுந்தவர் கவனமாக மின்விசிறியை நிறுத்திவிட்டு அடுத்த அறைக்குள் சென்றார். அதுதான் அவருடைய படிக்கை அறை. படுக்கை அறையை ஒட்டினாற்போல் இன்னொரு சின்ன அறை. அங்கேதான் அவருடைய பெட்டி இருந்தது. அந்த சின்ன அறைக்குள் இருந்த சிறு மேஜை, கோட் ஸ்டாண்ட், முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கண்ணோட்டமிட்டேன்.

”என்ன... என்ன பாக்கறீங்க?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 

“ஒன்றுமில்லை; தங்களை கூடவே இருந்து கவனிக்கப் போகிறேன், இது என்னுடைய நீண்டநாள் ஆசை” என்றேன்.

“ஓ, தாராளமா இருங்களேன், இப்படி வந்து உட்காருங்க” என்று கூறிக்கொண்டே பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே வைத்தார்.

அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும்  ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.

INSIDE AFRICA - by John Gunther.

ENDS AND MEANS - by Aldous Huxley

TIME MAGAZINE.

NEWS WEEK

சிந்தனைச் செல்வம் - வி.ச.காண்டேகர்

இவ்வளவும் இருந்தன. இவ்வளவையும் கவனிக்காததுபோல் கவனித்துக் கொண்டேன். நான் கவனிக்காததிபோல் கவனித்ததை அவரும் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்தாற்போல் பெட்டியில் இருந்து ஷேவிங் செட்டை எடுத்து கண்ணாடி முன் வைத்துக் கொண்டார். அந்த நித்திய கடமை முடிந்ததும், தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைத்தார். அங்கு ஏற்கனவே பல சட்டைகள் இந்த மாதிரி மடித்து வைக்கப்பட்டிருந்தன.

“ ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?”

“இரண்டு முறை குளிக்க வேண்டும் எனக்கு. ஒவ்வொரு முறை குளித்து முடிந்ததும் சலவைச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.

“இப்படி ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களே! இதனால் உடல் நலம் பாதிக்கப் படுவதில்லையா?”

“கிடையாது, நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்துவிடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காபி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாக இருந்தால், 11 மணிக்குள் சாப்பிட்டு விடுவேன். அத்துடன் இரண்டு மணிக்கு ஒரு கப் காபி, இரவு இட்லியும் சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம்.

கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்யும் நாட்களில் சிலசமயம் பகலில் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் லேசாக மோர் சாதம் சாப்பிட்டால் போதும் என்று தோணும். ஆனால், எனக்கு சாப்பாடு போடுகிறவர்களிடம் மோர்சாதம் போதுமென்று சொன்னால் கேட்க மாட்டாங்க. இலையில் எல்லாவற்றையும் போட்டு கஷ்டப் படுத்திடுவாங்க. என் நிலையை புரிந்து கொள்ளாமல் தொந்தரவு கொடுப்பாங்க. இதற்காக நான் ஒரேயடியாக சாப்பாடே வேண்டாமென்று சொல்லி பட்டினி போட்டுவிடுவேன்.” 

“தாங்கள் கைக் கடியாரம் கட்டிக் கொள்வதில்லையே, ஏன்?”

“அதெல்லாம் எதுக்கு! அவசியமில்லை. யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க. கிராமங்களுக்குப் போகும்போது மட்டும் சில சமயம் நேரம் தெரியாமல் போய்விடும். அதற்காக ஒரு சின்ன பைம்பீஸ் வாங்கி வைத்திருக்கிறேன்” என்றார்.

“தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து தங்கள் வீட்டு  வாசலில் காத்திருக்கிறார்களே, அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பார்கள்?”

“சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்கிற உதவிகள் எல்லாம் சுலபமாக செய்யக் கூடியதாக இருக்கும். முடிந்ததை நானும் செய்து விடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க வந்து கேட்கிற காரியங்களில்தான் சிக்கல் இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து “இப்படிச்செய்யலாமே! என்று எனக்கு ஆலோசணை சொல்வாங்க. நான், “ஆகட்டும், பார்க்கலாம்” என்பேன். யாருக்காவது ஒரண்டொருவருக்குச் செய்துவிட்டு மற்றவர்களுக்குச் செய்யவில்லை என்றால்தானே கோபம் வருகிறது? ஆகையால் எல்லஓருக்கும் சமமாக இருந்துவிடுவேன். யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். “ நீ வாங்கியிருக்கும் மார்க்கை விட குறைந்த மார்க வாங்கியுள்ள பையன் யாருக்காவது அட்மிஷன் கொடுத்திருந்தால் சொல்” என்பேன். அப்படி இருக்காது. ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், “ஆமாம், நீ சொன்னது உண்மைதான்” என்று ஒப்புக் கொள்வேன். அவன் அதிலேயே திருப்தியடைந்து போய்விடுவான்!”

தினந்தோறும் இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி அனுப்புவது ரொம்ப கஷ்டமான காரியம் ஆயிற்றே? அலுப்பாக இருக்குமே!” 

”எனக்கு அலுப்பே கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். ஆனால், இதில் எனக்குள்ள சங்கடம் பத்திரிக்கை படிக்க நேரமில்லாமல் போய்விடுவதுதான். ஆகையால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது. பத்திரிக்கை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். விசிட்டர்களால் அது தடைபட்டுப் போகிறது. அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எப்போது வந்தாலும் பார்க்கத் தயார்” என்றார்.

அன்றிரவு மணி 12 இருக்கும். காமராஜ் கட்டிலில் படுத்தவாறே மிக சுவாரஸ்யமாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன புத்தகம் அது என்று எட்டிப் பார்த்தேன்.

கம்ப இராமாயணம்!

நன்றி : ஆனந்தவிகடன் - 11.12.2013

Sunday, June 25, 2017

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்
“காந்தி இருந்திருந்தால் அவருக்கும் சிறைதான்!” நெருப்பு நாட்கள்...
எமர்ஜென்சி நினைவலைகள்!
இந்திய அரசியலில் இரும்புப்பெண்மணி எனப்பட்ட இந்திராகாந்தி தன் அதிகாரத்தின் அதிகபட்ச எல்லையை நிறுவிய நாள் இன்று. ஆம், 1975 ஜூன் மாதம் இதேநாள் நள்ளிரவில்தான் இந்தியாவில் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
அது ஒரு கடும் கோடைக் காலம் முடிந்து வெயிலும் குளிரும் சன்னமாய் உணரப்பட்ட ஜூன் மாதம். அந்த மாதத்தின் 12 ந்தேதி ஒட்டுமொத்த இந்தியாவும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் வாயிற் கதவுகளில் தங்கள் காதை வைத்துக் காத்துக்கொண்டிருந்தது. பிரதமர் இந்திராகாந்தியின் அரசியல் வாழ்வை அன்றுமுதல் தீர்மானிக்கபபோவது இந்த நீதிமன்றம்தான்.
இந்திராவுக்கு எதிரான வழக்கு என்ன...
நேருவுக்குப்பின் காங்கிரஸின் பலம்வாய்ந்த தலைவராக உருவாகிவந்த பிரதமர் இந்திரா காந்தி 1971 பாராளுமன்றத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்திராவிற்கு அப்போது எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு அலை இருந்தது.
இந்தத் தேர்தலில் தன் வெற்றிக்காக ஆட்சி இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த இந்திரா, யஸ்பால் கபுர் என்ற உயரதிகாரியை அதற்கு பயன்படுத்தினார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனால் இந்திராவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்புதான் 1975ம் வருடம் ஜூன் 12 ந்தேதி அறிவிக்கப்பட இருந்தது.
நாடே பரபரப்பாய் உற்றுநோக்கிக்கொண்டிருந்த தீர்ப்பை நீதிபதி ஜெகன்மோகன் சின்ஹா 10 நிமிடங்களில் வாசித்து முடித்தார். வழக்கின் அனைத்து அம்சங்களும் உறுதிப்படுத்தப்பட்டதாய்க் கூறிய அவர், இந்திராவின் வெற்றி செல்லாது என அறிவித்ததோடு அடுத்த 6 வருடங்களுக்கு இந்திரா தேர்தலில் போட்டியிட தடையும் விதித்தார். இந்த தீர்ப்பால் அகில இந்தியாவும் அதிர்ந்து நின்றது. 'தீர்ப்பின் எதிரொலியாக இந்திரா உடனயடியாக பதவி விலகவேண்டும்' என இந்திராவுக்கு எதிராக அன்றைக்கு போர் நடத்திக்கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
அசைந்துகொடுக்காத இந்திரா உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தார். மனுவை ஏற்று, முந்தையத் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்த உச்சநீதிமன்றம், 'இந்திரா எம்.பியாகவும் பிரதமராகவும் நீடிக்கத் தடை இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களிக்கக்கூடாது' என்றது.
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இந்திரா சற்று நிம்மதியானார். ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த நிம்மதியை நீடிக்கவிடவில்லை. நாடு முழுவதும் இந்திரா எதிர்ப்பாளர்கள் கண்டனக் கூட்டங்கள் நடத்தி அவரை பதவி விலகச் சொல்லி பரபரப்பை கூட்டினர். உச்சகட்டமாக அவரை பதவியிலிருந்து அகற்ற மொரார்ஜி தேசாய் தலைமையில் எதிர்கட்சிகள் ஒரு போராட்டக்குழுவை அமைத்தன. நாடே பரபரப்பாக இருந்தது.
எதிர்க்கட்சிகளின் இந்த முடிவால் இந்திரா பதவி விலகும் முடிவுக்கு வந்தார். ஆனால் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு, தான் அஞ்சிவிடுவதா என்ற ஈகோ அவரது முடிவுக்கு முன் முட்டுக்கட்டையாக நின்றது. தனக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகரும் அன்றைய மேற்கு வங்க முதல்வருமான சித்தார்த் சங்கர் ரேவிடம் யோசனை கேட்டார். தேர்ந்த அனுபவம்பெற்ற அரசியல்வாதியான ரே, சில சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்துவிட்டு இந்திராவிடம் திரும்பிவந்தார்.
“பிரதமராக நீடிப்பதில் சட்டச்சிக்கல் இல்லாததால் பதவியில் தொடருங்கள். எதிர்கட்சிகளை பொருட்படுத்தாதீர்கள்” என யோசனை சொன்னார். ஓரிருநாளில் 'அடுத்துவரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் சஞ்சய் காந்தியின் மாருதி கார் விவகாரம், நகர்வாலா ஊழல் உள்ளிட்ட ஆட்சிக்கு சங்கடமான சில விவகாரங்களை கையிலெடுத்து எதிர்கட்சிகள் பிரச்னை கிளப்ப இருப்பதாக உளவுத்துறையிடமிருந்து இந்திராவுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. நிலைகொள்ளாமல் தவித்தார் இந்திரா. தன் அரசியலின் அந்திமக்காலம் இது என்பதை உணர்ந்தாலும் அவரது இயல்பான குணம் அதை ஏற்கவில்லை. என்ன ஆனாலும் சரி போராடிப் பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். இந்த காலகட்டத்தில் இந்திரா மவுனம் காப்பதும் வழக்கத்துக்கு மாறாக பிரதமர் இல்லம் சட்டவல்லுனர்களால் நிரம்பிவழிந்ததும் எதிர்கட்சித்தலைவர்களுக்கு கொஞ்சம் நெருடலை தந்தது.
இந்திரா காந்திஇந்திராவின் குணத்தை அறிந்த அவர்கள், அவர் அதிரடியாக எதையாவது செய்துவிடக்கூடும் என அஞ்சினார்கள். ஆனால், நேருவின் மகள் ஜனநாயகத்துக்கு விரோதமான எந்த முடிவுக்கும் போகமாட்டார் என அவர்கள் நம்பினர்.
ஜூன் 23 ரேவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திரா. இந்திராவுக்கு பதவியை விட மனமில்லை. அதேசமயம் அதிகாரமின்றி அதில் தொடர்வதிலும் விருப்பமில்லை என்பதை நீண்ட பேச்சின் முடிவில் புரிந்துகொண்ட ரே, இந்திரா 'எதிர்பார்த்த' ஒரு முடிவை அவருக்கு சொன்னார். “பிரதமராக நீடித்தாலும் எதிர்கட்சிகள் குடைச்சல் தருவதை நிறுத்தாது. அதனால் வேறுவழியில்லை; எமர்ஜென்சியை அறிவித்துவிடுவதுதான் இப்போதைக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். எல்லாப்பிரச்னைகளில் இருந்தும் தற்காலிகமாக தப்பிவிடலாம்” என்றார். அன்றே ரேவுடன் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்த இந்திரா, உளவுத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி, 'ஆட்சியில் ஸ்திரத்தன்மை இல்லாத சூழலில் உள்நாட்டுக்கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுத்திருப்பதாக' சொன்னார்.
“உடனே நெருக்கடி நிலை பிரகடனத்தை தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்” என்றார் ஜனாதிபதி. அதிகாரிகள் விரைந்து காரியம் ஆற்றினார்கள். எது நடந்துவிடக்கூடாது என எதிர்கட்சிகள் அஞ்சினார்களோ அந்த பயங்கரம் நடந்தேறியது. ஆம் ஜூன் மாதம் 25 ந்தேதி இந்திய மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதிர்ந்து நின்றது இந்தியா. உலக நாடுகள் இந்திராவின் இன்னொரு முகத்தைக் கண்டு விக்கித்து நின்றன.
நெருக்கடி நிலையின் கோர முகம் 26ந்தேதி விடியற்காலையிலிருந்தே தெரிய ஆரம்பித்தது. சஞ்சய்காந்தியின் ஆலோசனையின்பேரில் இரவோடு இரவாக தலைவர்கள் கைதுப்படலமும் அரங்கேறியது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், பிலுமோதி, ராஜ் நாராயணன், பிஜூ பட்நாயக், அசோக் மேத்தா, மொரார்ஜி தேசாய், வாஜபாய், ஜார்ஜ் பெர்ணான்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் எந்தக் கேள்வியுமின்றி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். நெருக்கடி நிலை குறித்த செய்திகள், தலைவர்கள் கைது இவை மக்களிடம் சென்றுசேர்வதைத் தடுக்க டெல்லியில் முக்கிய நாளிதழ்களின் அலுவலகங்களுக்கு நள்ளிரவு முதல் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் பல பத்திரிகைகள் மறுதினம் வெளிவரவில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட தகவல் மந்திரிகளுக்கே மறுநாள் காலையில்தான் சொல்லப்பட்டது.
இந்திராவை எதிர்த்தவர்களில் முக்கியமானவரான ஜெயப்பிரகாசரை கைது செய்தபோது “வீநாச காலே விபரீத புத்தி” என மனம்நொந்து சொன்னார். எமர்ஜென்சியை விமர்சிக்க அஞ்சி மற்ற மாநிலங்கள் வாய்மூடி மவுனம் காத்தபோது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக அதை கடுமையாக எதிர்த்தது. அதிமுக சற்று அடக்கிவாசித்தது. இந்திரா எதிர்ப்பாளர்களில் கைது செய்யப்படாத ஒரே தலைவர் தமிழத்தில் காமராஜர் மட்டுமே. ஏற்கெனவே கட்சிக்குள் இந்திராவின் சர்வாதிகாரப்போக்கினை எதிர்த்துத் தோல்வி கண்டவர் காமராஜர். தனக்கு எதிராக மாநிலத்தில் பலம் வாய்ந்த ஓர் தலைமை உருவாவதை விரும்பாத இந்திரா எடுத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் உடைந்து தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் என்றும், காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் எனவும் தனித்தனியே செயல்பட்டுவந்தன. இந்நிலையில் இந்திராவின் எமர்ஜென்சி அறிவிப்பு காமராஜரை மனம் நோகச் செய்தது. ஆனால் இந்திராவை கட்டுப்படுத்தும் கடிவாளம் அவரிடம் அப்போது இல்லை. “ நாட்டுக்கு உழைச்சவங்க எல்லாம் சிறையில் இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு நானும் சிறைக்கு போறேன்” என எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து அவர் மேடைபோட்டு பேச ஆரம்பித்தார்.
இந்திராகாந்தி
இந்திராகாந்தி
நேருவின் மகள் ஜனநாயகத்தை பழிதீர்த்துக்கொண்டதாக கட்சிப்பிரமுகர்களிடம் தெரிவித்த அவர், “நாட்டின் தலைவர்களையெல்லாம் கைது செய்துவிட்டு இவர்கள் ஆளப்போவது நாட்டையா, சுடுகாட்டையா” என மனம் நொந்துச் சொன்னார். பிளவுபட்ட காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஒட்டவைக்கும் ஆசை இந்திராவின் அடிமனதில் அப்போது இருந்ததுதான், காமராஜரை அவர் கைது செய்யாமல் விட்டதற்கு காரணம். ஆனால் எமர்ஜென்சி பிரகடனத்தின் எதிரொலியாக நாட்டில் நடந்தவைகளை காமராஜரால் ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. அவரது உடல் நலிவுற்றது. நெருக்கடி நிலை அமலுக்கு வந்த 4 மாதத்தில் காமராஜர் காலமானார்.
எமர்ஜென்சி பிரகடனத்தையொட்டி வானொலியில் உரையாற்றிய இந்திரா, மக்களின் நலனுக்காக, தான் எடுத்த சில முற்போக்கு நடவடிக்கைகளை பிடிக்காத சிலர் ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி செய்ததால் அவற்றை முறியடிக்க வேறு வழியின்றி எமர்ஜென்சியை கையிலெடுக்க வேண்டியதாகிவிட்டதாக கூறினார். அதேசமயம் சட்டத்தை மீறாத எந்த குடிமகன்களுக்கும் எதுவும் நேராது. வழக்கம்போல் சட்டப்படியான உரிமை அனைத்தும் கிடைக்கும். அசாத்தியமான சம்பவங்கள் எதுவும் நிகழாது. ஜனநாயக மாண்புகளை எள்ளளவும் மீறப்படாது என உறுதியளிக்கிறேன்” என்றார். ஆனால் நடந்ததெல்லாம் அதற்கு நேர் எதிர்.
நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு முந்தைய வாரம் தனது துக்ளக் இதழில் 'ஒண்ணரைப்பக்க நாளேடு' என்ற கற்பனைப்பகுதியில் 'எமர்ஜென்சியை அறிவித்தார் இந்திரா', என கற்பனையாக ஒரு செய்தியை வெளியிட்டு கைதாகப்போகும் தலைவர்கள் என கிண்டலாக ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார் பத்திரிகையாளர் சோ. ஆச்சர்யமாக பட்டியலில் இடம்பெற்ற தலைவர்கள் அத்தனைபேருமே அடுத்த ஒருவாரத்திற்குள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
தொடர்ந்து பத்திரிகை தணிக்கை அமலுக்கு வந்தது. செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள், தலையங்கக்கட்டுரைகள் அரசின் தீவிர தணிக்கைக்குப்பிறகே வெளிவந்தன. பல பத்திரிகைகள் இந்திராவின் கடுமைக்கு பயந்து அவற்றை நிறுத்திக்கொண்டன. சில பத்திரிகைகள் இந்திராவின் எண்ண ஓட்டத்திற்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டன. வெளிநாட்டு பத்திரிகை அலுவலகங்கள் முடக்கப்பட்டு அவற்றின் நிருபர்கள் அவர்களின் நாட்டுக்கு மிரட்டி அனுப்பப்பட்டனர்.
எம்.ஜி.ஆர்
இப்படி ஜனநாயகத்தின் அத்தனை பண்புகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதிகாரிகள் நினைத்தவை நடந்தன. எமர்ஜென்சியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மாணவர் தலைவர்கள், போராட்டக்காரர்கள் பலர் திடீர் திடீர் எனக் காணாமல்போயினர். பெற்றோர்கள் அவர்களை தேடித்தேடி அலைந்ததுதான் மிச்சம். கடைசிவரை அவர்கள் 'காணாமலேயே' போய்விட்டார்கள். கேரளாவில் மாணவப் போராட்டத்திற்கு தலைமை வகித்த சுகுமாரன் என்ற மாணவர் காணாமல் போக, அவரின் தந்தை பல வருடங்களுக்குத் தேடிவந்தார். வழக்கும் நடத்தினார். எமர்ஜென்சியின்போது காவல்துறையினரால் அவர் கொல்லப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்க சர்க்கரையை கொட்டி எரித்த கொடூரமான கொலைச் சம்பவம், பல வருடங்களுக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்தது. தன் மகன் குறித்து அவர் எழுதிய நுால் இன்றளவும் எமர்ஜென்சியின் கொடூரத்திற்கு சாட்சியான ஓர் புத்தகம்.
சிறையில் அடைபட்டவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளானார்கள். தலைவர்களின் மனநிலையை சிதைக்க அவர்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் சிலருக்கு சிறையில் அளித்த உணவு குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் உலவின. மொரார்ஜி தேசாய் பாம்புகள் நிறைந்த பாழடைந்த பயன்படுத்தப்படாத சிறையில் அடைக்கப்பட்டார். “நல்லவேளை காந்திஜி உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவரும் சிறையில்தான் இருந்திருப்பார்” என நகைச்சுவையாக சொல்வார்கள் அந்நாளில். பாராளுமன்றக் கூட்டத்தொடர்களில் எதிர்கட்சிகள் சார்பில் பேச ஆளின்றி அத்தனைபேரும் தலைமைறைவாகியிருக்கும் நிலை ஏற்பட்டது. பலர் இந்தத் 'திருடன் போலீஸ் விளையாட்டு' பிடிக்காமல் தங்கள் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். ரேடியோவில் இந்திராவின் 20 அம்ச திட்டத்தைப் பற்றி பாடமுடியாது என்று சொன்ன பிரபல இந்தி பாடகர் கிஷோர்குமாரின் பாடல்கள் தடைசெய்யப்பட்டன.
சோ
துக்ளக் ஆசிரியர் சோ தணிக்கை அதிகாரிகளை கலாய்ப்பதற்காக ஒருமுறை தன் பத்திரிகையின் நகல் என அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிப்பட்டியலை அனுப்பிவைத்தார். 'எமர்ஜென்சியை எதிர்ப்பவரிடமிருந்து இப்படியொரு கட்டுரையா, இதென்ன சங்கேத பாஷையா' என குழம்பிப்போனார் அதிகாரி. அதனால் எதற்கு வம்பு என அதற்கு தடை போட்டதோடு சோவை அழைத்து விசாரித்தார். “நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற தேசிய கீதத்துக்கும் தடை போட்டிருக்கிறீர்களே எமர்ஜென்சியின்போது தேசியகீதம்கூட பாடக்கூடாதா?” என கேட்டு இன்னமும் அதிகாரியை எரிச்சலுாட்டினார் சோ. அப்போதுதான் சோ செய்த குறும்பு தெரியவந்தது அவருக்கு. நான் என்ன செய்வது அதிகாரிகள் சொல்வதை நான் கேட்கிறேன் என நொந்துகொண்டார் அந்த அதிகாரி.
இந்நிலையில், எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்ததோடு அதைக் கண்டித்து கட்சியின் செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக. தணிக்கையை கண்டிக்கும் விதமாக ஒருநாள் சலவைக்கு துணி போட்ட கணக்கு வழக்குகளை முரசொலியில் பிரசுரித்தது திமுக தலைமை. இந்நிலையில் 1976 ம் ஆண்டு ஜனவரி 31 ந்தேதி திமுக அரசு கலைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும்சில இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன.
எமர்ஜென்சிக்கு எதிராக பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவுசெய்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்திராவுக்காக மேற்முறையீடு செய்திருந்த பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா இந்திராவைக் கண்டிக்கும் விதமாக அந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்டார். மத்திய அரசின் சோலிசிட்டர் நாரிமன் பதவி விலகினார்.இந்திராவின் உதவியாளர் ஜனகராஜ் என்பவர் இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டு துணிச்சலாக அவருக்கே கடிதம் எழுதினார். அவரை சிறையிலடைத்தார் இந்திரா. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா, மரியாதையாக நீங்கள் பதவி விலகுங்கள் இந்திரா என நயமாக ஒரு கடிதத்தை இந்திராவுக்கு எழுதினார். நெருக்கடி நிலையைப்பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த ஜார்ஜ் பெர்ணான்டஸை கைது செய்ய அவரது சகோதரரை அடித்துக்காயப்படுத்தியது தனிக்கதை.
20 அம்சத் திட்டம் பத்திரிகை வானொலிகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டதோடு எமர்ஜென்சியின்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசு முனைந்தது. ஒருவகையில் அது உண்மையே. அரசியல் மாச்சர்யங்களினால் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும் பொதுமக்களுக்கான சேவையில் அக்காலகட்டத்தில் அரசு இயந்திரம் சரிவர இயங்கியது. ரயில்கள் நேரத்தோடு ஓடின. அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள்வரை சரியான நேரத்தில் பணிக்கு வந்தனர். வேலைநிறுத்தங்கள் எதுவும் நடைபெறவில்லை. ரேஷன் கடையில் எல்லாப் பொருட்களும் முறையாக கிடைத்தன. கடத்தல், பதுக்கல் வேலைகள் நடக்கவில்லை' இப்படி பல நல்ல காரியங்களும் நடந்தன.
இதை மீறியும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பிய ஒருசமயம், “முன்னேற்றத்திற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எப்படி பாழாகின்றன என்பதை நெருக்கடி காலத்தில்தான் அறிய நேர்ந்தது. நம் நாட்டு மக்களின் பின்தங்கிய நிலை மாறவேண்டுமானால் நெருக்கடி நிலை தொடரவேண்டும்” என தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பேசினார் இந்திரா. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு சுமார் ஒண்ணரை ஆண்டுகள் கடந்த நிலையில் 1977 ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திரா மீதான மக்களின் கோபம் வாக்குப்பெட்டியில் வெளிப்பட்டது. தான் போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் அதே ராஜ் நாராயணனிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் இந்திரா. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தபோதே நெருக்கடி நிலையை ரத்து செய்த இந்திரா, தனது பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மக்களின் கோபத்தைக் கண்ட இந்திரா நெருக்கடி நிலைப்பிரகடனத்தின் மூலம், தான் செய்த வரலாற்றுத்தவறை புரிந்துகொண்டார்.
எமர்ஜென்சியை அறிவித்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட இந்திரா, “என்னுடன் இருந்தவர்களின் பேச்சைக்கேட்டு எனது விருப்பத்துக்கு மாறாக சில முடிவுகளை எடுக்கவேண்டியதாகிவிட்டது. ஆனால் விளைவுகள் தங்களுக்கு பாதகமாகிவிட்டதும் அதற்கு காரணமானவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். எல்லா தீய விளைவுகளையும் நான் ஒருத்தியே சுமக்கவேண்டியதாகிவிட்டது” என வருந்தினார்.
இந்திராகாந்தி
எப்படியிருந்தாலும் இந்திராவின் இந்த நெருக்கடி நிலைப்பிரகடனம் அவர் வாழ்வில் ஒரு கரும்புள்ளி என்றே இன்றளவும் விமர்சிக்கிறார்கள். ஜனநாயக மாண்புகளின் மீது அபரிதமான நம்பிக்கை கொண்டிருந்த நேருவின் மகள் அதற்கு நேர் எதிராக ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி சர்வாதிகாரி என்ற பெயரைத்தான் இந்த நடவடிக்கையின் மூலம் பெறமுடிந்தது. எந்த நிலையிலும் மக்கள் அவரின் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை.
அதிர்ச்சி என்னவென்றால் இந்திரா என்ற இரும்புப்பெண்மணியை எதிர்த்து ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியின் தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் 3 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்சியை இழந்தனர். மீண்டும் இந்திராவை மன்னித்துவிட்ட வாக்காள பரமபிதாக்கள் 1980 தேர்தலில் அபரிதமான வெற்றியை அவருக்கு அளித்து மீண்டும் பிரதமராக்கி அழகு பார்த்தனர்.




எஸ்.கிருபாகரன்




நன்றி : விகடன் செய்திகள் - 25.06.2017

Saturday, June 10, 2017

குதுப்மினார்

Image may contain: text
குதுப்மினார்
மகாபாரத காலத்தில் துவங்கி இன்றுவரை சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றை கொண்டிருக்கும் நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட நவீன இந்தியாவின் தலைநகரான டெல்லி ஆகும்.
இந்த வரலாற்று காலம் நெடுகவும் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது இருந்துவருகிறது டெல்லி. எத்தனையோ போர்கள், சதிகள், முற்றுகைகள், கவிழ்ப்புகளை சந்தித்திருக்கும் இந்நகரம் இன்று வரலாற்று பாரம்பரியம் கொண்ட பழமையான பாரதத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆடம்பர மேற்கத்திய வாழ்க்கைமுறை கொண்ட நவீன இந்தியாவிற்கும் இடையில் இயங்கும் ஒரு கலாச்சார தொட்டிலாக இருக்கிறது.
இந்த நகரத்தின் நீண்ட நெடிய வரலாற்றுக்கு அத்தாட்சியாக வானுயர நிற்கும் குதுப்மினார் பற்றி இன்றைய கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா பகுதியில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
குதுப்மினாரின் சிறப்பு:
* 74மீ உயரம் கொண்ட குதுப்மினார் தான் உலகத்திலேயே செங்கற்களால் கட்டப்பட்ட மிக உயரமான தூபி ஆகும்.
 * குதுப்மினார் மற்றும் இதனை சுற்றியிருக்கும் மற்ற வரலாற்று சிதலங்கள் அனைத்தும் யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
யாரால் எப்போது கட்டப்பட்டது?
* கி.பி 1200ஆம் ஆண்டு தில்லி சுல்த்தான் வம்சத்தை தோற்றுவித்தவரான குதுப் உதின் ஐபக் என்பவரால் குதுப்மினார் கட்டப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்னர் வந்த இல்துமிஷ் என்பவர் கி.பி 1220ஆம் ஆண்டு குதுப்மினாரில் மேலும் இரண்டு அடுக்குகளை கட்டியிருக்கிறார்.
* 1369ஆம் ஆண்டு இடி தாக்கியதன் காரணமாக சிதலமடைந்த குதுப்மினாரை பிரோஸ் ஷாஹ் துக்ளக் என்ற மன்னன் புனரமைத்ததோடு மட்டுமில்லாமல் மேலும் செங்கற்கள் மற்றும் பளிங்கு கற்களை கொண்டு மேலும் இரண்டு அடுக்குகளை புதிதாக கட்டியிருக்கிறான்.
பெயர் காரணம்:
குதுப்மினாருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதற்கு இருவேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
* இதை கட்டுவதற்கு உத்தரவிட்டது குதுப் உதின் ஐபக் என்பதால் அவரின் பெயரில் இருந்து குதுப்மினார் என்று சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
* குதுப்மினார் கட்டபப்ட்ட காலத்தில் டெல்லியில் மிகப்பிரபலமாக விளங்கிய சூபி ஞானி குதுபுதின் பக்தியர் காகி என்பவரின் பெயரில் இருந்தும் இக்கட்டிடதிற்க்கான பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கட்டிட அமைப்பு:
*தூபி என்பது இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மசூதிகளில் நாம் பார்க்கும் உயரமான தூண்கள் தான் தூபி எனப்படுபவை. அக்காலத்தில் செய்திகளை தெரிவிக்கவும், போர் பற்றிய எச்சரிக்கைகளை அனுப்பவும், தொழுகை செய்வதற்கான நேரம் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டவும் இந்த தூபிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
*அப்படிப்பட்ட தூபிக்களில் ஒன்றான குதுப்மினாரில் குரானின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது துருக்கிய மற்றும் பெர்சிய நாட்டு கலை அம்சங்களை உள்ளடக்கிய அழகியதொரு கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.
துருப்பிடிக்காத தூண்:
* குதுப்மினார் வளாகத்தில் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இரும்புத்தூண் ஒன்றையும் நாம் காணலாம். இது கிட்டத்தட்ட 2000வருடங்களாக இதே இடத்தில் கொஞ்சம் கூட துருப்பிடிக்காமல் நிற்பது ஒரு அறிவியல் அதிசயமாகும்.
* குதுப்மினார் கட்டப்படுவதற்கு பல வருடங்கள் முன்பிருந்தே இருக்கும் இந்த இரும்புத்தூனில் 'பிராமி' எழுத்துக்குறிப்புகள் காணப்படுகின்றன.
விபத்து:
*அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையினுள் எப்படி படிக்கட்டுகள் மூலம் அதன் உச்சிக்கு சென்று பார்க்கலாமோ அதுபோலத்தான் குதுப்மினாரின் உள்ளும் அதன் உச்சி வரை மக்கள் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
*ஆனால், டிசம்பர்4,1981ஆம் ஆண்டு இதனுள் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி நாற்பதுக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருக்கின்றனர். அதன் பிறகு பொதுமக்கள் இதனுள் சென்றுவர தடைவிதிக்கப்பட்டது.
குதுப் வளாகம்:
குதுப்மினார் இருக்கும் குதுப் வளாகத்தில் அலா இ மினார், குவாத்துல் இஸ்லாம் மசூதி, இமாம் ஜமின் டூம் (கல்லறை), அலாவுதீன் கில்ஜி கல்லறை, சுல்தான் காரி நினைவுச்சின்னம் போன்ற இடங்களும் இருக்கின்றன. 
குதுப்மினாரின் வரலாற்றோடு பின்னிப்பிணைத்த இந்த இடங்களுக்கும் சென்று கட்டாயம் பார்வையிடுங்கள்.

நன்றி : Nativeplanet » Tamil » Travel Guide - 18.12.2015

ஜனாதிபதி தேர்தல் - ஒரு கண்ணோட்டம்

ஜனாதிபதி தேர்தல் - ஒரு கண்ணோட்டம்
இந்தியாவின் 15வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17ல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ல் நடைபெறும். ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள். முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே.
ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் குறித்த ஒரு பார்வை.
இந்திய அரசியலமைப்பு விதி 54, ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடுகிறது. இது, மறைமுக தேர்தலாக அமைந்துள்ளது. மக்கள் நேரடியாக வாக்களிக்காமல்
அவர்களது பிரதிநிதிகளான எம்.பி., , எம்.எல்.ஏ,.க்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்களை உள்ளடக்கிய 'எலக்ட்டோரல் காலேஜ்' மூலம் ஒற்றை மாற்று ஓட்டு முறையில் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார்.
ஜனாதிபதி தேர்தலையும் தேர்தல் ஆணையமே நடத்துகிறது. இந்தியாவில்
மொத்தம் (லோக்சபா 543 + ராஜ்யசபா 233) 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். எம்.எல்.ஏ.,க் களில் 29 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே இத்தேர்தலுக்கு
கணக்கில் கொள்ளப் படுகிறது. லோக்சபாவில் இரண்டு, ராஜ்யசபாவில் 12 ஆகிய நியமன எம்.பி.,க்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.
வாக்குப்பதிவு மையம்
ஜனாதிபதி தேர்தல்வாக்குப்பதிவு டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகம் மற்றும் மாநில சட்டசபை வளாகங்களில் நடைபெறும்.
தகுதிகள்
* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்ப வராக இருக்கக் கூடாது.
* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முந்தைய பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.
* டெபாசிட் கட்டணம் 15ஆயிரம் ரூபாய்.
யாருக்கு வாய்ப்பு
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 1804 எம்.எல்.ஏ.,க்கள் மூலம் 2,39,923 வாக்குகளும், 336 லோக்சபா எம்.பி.,க்கள், 70 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மூலம் 2,87,448 வாக்குகளும் மொத்தம் 5,27,371 வாக்குகள் கைவசம் உள்ளன.
இது ஐ.மு. கூட்டணியை விட 1.74 லட்சம் வாக்குகள் அதிகம். இவர்களுடன் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் சேர்ந்தாலும் தே.ஜ., கூட்ட ணியை விட 93 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியே இருக்கும். வெற்றிக்கு 5,49,474 வாக்குகள் தேவை என்பதால், கூடுதலாக சுமார் 22000 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பா.ஜ.,வுக்கு தேவை.
இது நடுநிலை வகிக்கும் சுயேச்சைகள், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் (36,500), தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் டி.ஆர்.எஸ்., ( 23,200 ), அ.தி.மு.க., (59,000) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் எளிதில் பா.ஜ., வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தற்போதைய காலியிடம்
லோக்சபா 2
ராஜ்யசபா 2
சட்டசபைகள் 4


நன்றி : தினமலர் நாளிதழ் - 07.06.2017

Wednesday, May 10, 2017

ஆரம்பத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட்

 ஆரம்பத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட்
 8 ஆண்டுகால நீதிபதி பயணத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கர்ணன்
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்க மற்றும் தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணனின் வாழ்க்கைப் பயணம் பரபரப்புக்கு பஞ்சமில்லாததாக இருந்துள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி யாக பதவி வகிக்கும் சி.எஸ்.கர்ணனின் இயற்பெயர் கருணாநிதி. கடந்த 1991-ல் தன்னுடைய பெயரை சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன் என அவரே மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கர்ணநத்தம்தான் அவரது சொந்த ஊர். கடந்த 1955 ஜூ ன் 12-ம் தேதி பிறந்த கர்ணனின் தந்தை சுவாமிநாதன் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியர் விருது பெற்றவர். ஆனால் கர்ணனுக்கு ஆரம்பக் கல்வியை புகட்டியது அவரது தாயார் கமலம் அம்மாள்தான்.
மங்கலம்பேட்டை பேரூராட்சி உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப் பையும், விருத்தாச்சலம் கலைக் கல்லூரியில் ஓராண்டு புதுமுக வகுப்பையும், சென்னை புதுக்கல்லூரி யில் மூன்றாண்டு அறிவியல் பட்டப்படிப்பையும் முடித்த கர்ணன், அதன்பிறகு 1983-ல் சென்னை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டம் பயின்று, அதே ஆண்டு வழக்கறிஞராகவும் பதிவு செய்தார்.
ஆரம்பத்தில் அரசியலில் தீவிரம் காட்டிய கர்ணன் 2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பூத் ஏஜெண்டாக செயல் பட்டுள்ளார். அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸிலும் கால் பதித்துள்ளார்.
சுமார் 23 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் புரிந்த கர்ணன், சிவில் வழக்குகளில் அதிகமாக வாதாடி வந்துள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் சட்ட ஆலோசகராகவும், தமிழக மற்றும் மத்திய அரசு வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார். ஆனால் வெளிவட்டாரத்தில் கர்ணனின் முகம் அதிகம் தெரிய ஆரம்பித்தது 2005-ல் தான். வாழ்வில் படிப்படியாக உயர்ந்து கடந்த 2009 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அன்று முதல் தற்போது வரை நீதிபதி கர்ணனின் தடாலடி நடவடிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை.
உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் தேர்வு தொடர்பான வழக்கை நீதிபதிகள் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கர்ணன், நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் சிவில் நீதிபதிகள் நேர்முகத் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடாது என தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தடை பிறப்பித்தார். ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தால், அவர்களை கணவன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
கடந்த 2015-ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல் மீது பனிப்போரைத் தொடுத்த கர்ணன், தான் ஒரு தலித் நீதிபதி என்பதால் தன்னை எஸ்.கே.கவுல் மற்றும் சக நீதிபதிகள் ஒதுக்கி வைப்பதாகக் கூறி அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு பரிந்துரைத்தார். மேலும் எஸ்.கே.கவுல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சுமத்தி ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பினார்.
இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்ச நீதிமன்றம், அவர் மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன்காரணமாக அவரை கடந்த 2016 பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடமாற்றத்துக்கு கடந்த 2016 பிப்ரவரி 15-ம் தேதி தனக்குத்தானே தடை விதித்து பரபரப்பு ஏற்படுத்திய கர்ணன், அன்று முதல் இன்று வரை உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான தனது உரசல் போக்கை தொடர்ந்து வருகிறார்.
2016 மார்ச் முதல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணன், வரும் ஜூன் 12-ம் தேதியோடு ஓய்வுபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 6 மாத சிறை தண்டனையால் சிறை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆர்.பாலசரவணக்குமார்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 11.05.2017