disalbe Right click

Monday, April 6, 2015

பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?


பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?
**********************************************

''பெண்களுக்கான சொத்துரிமை, பெண்ணின் சொத்தில் அவருக்கு உள்ள உரிமைகள் என இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகலாம். இதைத் தெளிவாக தெரிந்துகொண்டால் குழப்பங்கள் இருக்காது''

''முதலில், பெண்களுக்கான சொத்துரிமை குறித்து பார்ப்போம். இந்த உரிமை அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. 1937 வரை இந்து பொதுக் குடும்ப சொத்தில் பெண்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லாமலே இருந்தது. அதாவது, பங்குரிமையானவர்களாக (Coparcener) ஆண்கள் மட்டுமே இருக்க முடியும். கணவர் இறந்துவிட்டால் அவருடைய பங்கு, அந்த கூட்டுக் குடும்பத்திலுள்ள மற்ற ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். ஆனால், ஆண்களைப்போல, மனைவிக்கோ, மகளுக்கோ எந்தப் பங்கும் கிடைக்காது.

இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, சொத்தில் பெண்களுக்கான உரிமைச் சட்டம் 1937-ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கூட்டுக் குடும்ப அமைப்பில் கணவரின் சொத்து மனைவிக்கு வந்தடைய வழி செய்தது. ஆனால், முழுமையான உரிமை வந்தடையவில்லை. அதன்பிறகு, 1956-ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோதுதான் பெண்களுக்கு சொத்துரிமை மேலும் பலப்படுத்தப்பட்டது. அதன்படி, ஓர் ஆணின் சொத்து, அவரது காலத்திற்குப் பிறகு, பொதுக் குடும்ப சொத்து என்றும், தனிப்பட்ட சொத்து என்றும் இரண்டு வகையாகப் பிரிக்க வழி செய்தது. இதில், தனிப்பட்ட சொத்தில் வாரிசு அடிப்படையில் மனைவிக்கும், மகள்களுக்கும் சமபங்கு வழங்க வகை செய்யப்பட்டது. ஆனால், பொதுக் குடும்பச் சொத்து, பரம்பரை சொத்தில் உரிமை எதுவும் வழங்கப்படவில்லை.

1989-ல் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங் களில் இந்த சட்ட நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பொதுக் குடும்பச் சொத்திலும் பெண்கள் உரிமை கோரலாம் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, 25.03.1989-க்கு முன்பாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் பொருந்தாது. மேலும், அன்றைய தேதி வரை பொதுக் குடும்பச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று இந்தச் சட்ட திருத்தம் சொன்னது.

2005-ம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, பெண் என்பவர் குடும்பத்தின் பங்குரிமையானவராக கருதப்படுவார் என்றது. அதன் விளைவாக, பொதுக் குடும்பச் சொத்து என்றாலும், ஆணின் தனிப்பட்ட சொத்து என்றாலும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை உள்ளதோ, அந்த உரிமை பெண்ணுக்கும் உள்ளது. 

2005 முதல் இந்தச் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தற்போது சொத்துகளில் ஆண், பெண் பேதம் கிடையாது. காலப்போக்கில் இப்படி பல மாற்றம் கண்டுவந்திருக்கிறது பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம்.
அடுத்து, நாம் பார்க்கவேண்டிய முக்கியமான விஷயம், ஆண்கள் பெயரில் உள்ள சொத்துகளில் அவருக்கு உள்ள உரிமையும், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளில் அவருக்கு உள்ள உரிமைகளும் என்ன என்பதைத்தான்.

ஆண்கள் பெயரில் உள்ள சொத்து அவர் களுக்கு எப்படி கிடைத்தது என்பதைப் பொறுத்து அவர்களின் உரிமை தீர்மானிக்கப்படும். அதாவது, மூதாதையர் வழியாக ஓர் ஆணுக்குக் கிடைக்கும் சொத்தில் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் பங்குரிமை உண்டு. அதேபோல, ஒரு பொதுக் குடும்பத்தில், ஓர் ஆண் பெயரில் சொத்து இருந்தாலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பொதுக் குடும்ப உறுப்பினர்கள் என்கிற அடிப்படையில் பாகம் கேட்க உரிமை உண்டு. அதே ஆண் அவருடைய சுயசம்பாத்தியத்தில் அல்லது அவருடைய தனிப்பட்ட பாகமாகக் கிடைக்கும் சொத்துகள் அவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சொத்தாகும். இப்படி சொத்து வந்த முறையைப் பொறுத்து சொத்தின் உரிமை தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளை பொறுத்து இவ்விதமான நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மூலமாகச் சொத்துகள் கிடைத்தால், அதில் அவரது கணவரோ, குழந்தைகளோ உரிமை கோர முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள்.

ஏற்கெனவே சொன்னபடி, இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அதாவது அவரது பெற்றோர்கள் மூலமாக, கணவனின் மூலமாக அல்லது சுய சம்பாத்தியம் மூலமாக என எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அது அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.
கணவன் தன்னுடைய வருமானத்தைக் கொண்டு மனைவி பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார். இருவருக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த நிலையில் கணவன் அந்தச் சொத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டால், முடியாது 

எப்படி என்கிறீர்களா?
ஒருவர் தன்னுடைய பணத்தைக்கொண்டு வேறொருவர் பெயரில் சொத்துகளை கிரயம் செய்வது, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, யார் பெயரில் சொத்து இருக்கிறதோ, அவரே அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கருதப்படுவார். சட்டப்படி, வேறு யாரும் அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கோர முடியாது. அப்படிக் கோருவது குற்றம்.

ஆனால், இந்த நடைமுறையிலும் விதிவிலக்கு உள்ளது. அதாவது, ஒருவர் தன் மனைவி பெயரிலோ அல்லது திருமணமாகாத மகள் பெயரிலோ சொத்துகளை வாங்கியிருந்தால், அந்தச் சொத்து வாங்குவதற்கான பணம் தன்னால் மட்டுமே செலுத்தப்பட்டது என்பதையும், மனைவி / மகளுக்கு வருமானம் ஏதுமில்லை அல்லது கிரயத்தொகை அவரால் செலுத்தப்படவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே அந்தச் சொத்தை அவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிடும்.

ஒரு பெண்ணின் சொத்திற்கு யார், யார் வாரிசுகளாக இருக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 15-ன்படி, ஒரு பெண் இறந்தபிறகு அவருடைய கணவன் மற்றும் மகன், மகள்கள் வாரிசுகளாகின்றனர். அவர்கள் இல்லாதபோது கணவனுடைய வாரிசுகளுக்கு அந்தச் சொத்து போய் சேரும்.

கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் மனைவி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இறந்துவிட்டால் அவருக்கு வாரிசு யார்? என்று நீங்கள் கேட்கலாம். விவாகரத்து வழங்கப்படும்வரை கணவன் - மனைவி என்கிற பந்தம்தான் கணக்கிலெடுக்கப்படும். ஆகவே, வாரிசு உரிமைச் சட்டப்படி, பிரிந்து வாழும் மனைவியின் சொத்து கணவனுக்குச் சென்றடையும்.

திருமணம் ஆகாமல் ஒரு பெண் இறந்தால் அவரது சொத்துகளுக்கு யார் வாரிசு என்று கேட்கிறீர்களா? திருமணம் ஆகாத பெண் இறந்தால், அவரது பெற்றோரே வாரிசாக இருப்பார்கள். அவர்கள் இல்லாதபட்சத்தில் தந்தையின் வாரிசுகள் இறந்துபோன பெண்ணின் வாரிசுகளாகக் கருதப்படுவார்கள்.

ஒரு பெண்ணின் தனிப்பட்ட சொத்தை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு ஒரு பெண் தனிப்பட்ட முழுமையான உரிமையாளர் என்கிறபோது, அவர் அந்தச் சொத்தை தன் விருப்பப்படி அனுபவிக்க முடியும். அதாவது, அவர் அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றித் தரலாம். அது தானமாகவோ / உயிலாகவோ அல்லது விற்கவோ எந்த வகையிலும் பாராதீனம் செய்யலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஓர் இந்துப் பெண் மதம் மாறுவதால், குடும்பச் சொத்தில் உள்ள உரிமைகளோ, பங்கு கேட்கும் உரிமைகளோ பாதிக்கப்படுமா? என்று கேட்கலாம். 

இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 26-ன்படி, இந்து மதத்திலிருந்து விலகி மதம் மாறிய ஒருவர் மற்றும் அவரின் வாரிசுகள், வாரிசு உரிமையின் அடிப்படையில் இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு கேட்க முடியாது. இருந்தாலும், ஜாதிக் குறைபாடுகள் அகற்றுதல் சட்டத்தின்படி ஒருவர் சாதி இழப்பதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சொத்தில் உள்ள உரிமையை அவர் இழப்பதில்லை. இதையே உயர்நீதிமன்ற சமீபத்திய தீர்ப்புகூட உறுதி செய்துள்ளது.

இந்துப் பெண்களுக்கான இந்த சொத்துரிமை சட்டங்கள் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தில் உள்ள பெண்களுக்குப் பொருந்துமா? என்பதும் பலருக்கு இருக்கும் கேள்வி.

பரம்பரைச் சொத்து, தனிக் குடும்பச் சொத்து போன்ற தத்துவங்கள் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தாது. 

ஆகவே, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரது பெயரில் உள்ள சொத்துகள் அவரது தனிப்பட்ட சொத்தாகவே இருக்கும்''


உயில் என்பது என்ன ?


உயில் என்பது என்ன ?
************************************

ஒரு மனிதர் - தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட அனைத்தும் யார் யாருக்கு தர வேண்டும் என விரும்புகிறாரோ - அதனை எழுதி வைப்பது தான் உயில். உயிருடன் இருக்கும் போது எழுதப்படும் இந்த தனி மனிதரின் விருப்பம் - அவரது மறைவுக்கு பின் தான் அமல் படுத்தப்படும்.

சுய சம்பாத்தியத்தில் வந்தவை மட்டும் தான் உயில் எழுத முடியுமா ?

சுய சம்பாத்தியத்தில் வந்தவை மற்றும் தனது பெற்றோர் மூலம் - சட்டப்படி ஒருவருக்கு வந்த சொத்துக்கள் இவற்றை உயில் மூலம் மாற்றம் செய்ய முயும்.
வயதானவர்கள் மட்டும் தான் உயில் எழுதுவது அவசியமா ?

அப்படி இல்லை. மரணம் எப்போது வேண்டுமானாலும், எந்த வடிவிலும் ஒருவருக்கு வரக்கூடும் என்பதால் - மத்திய வயதில் இருப்போரும் கூட உயில் எழுதி வைப்பது நல்லது. உயில் எழுதாத பட்சத்தில் - உங்கள் உறவினர்களில் - நீங்கள் விரும்பாத சிலருக்கு கூட உங்கள் சொத்தில் ஒரு பகுதி செல்லக்கூடும். மாறாக நீங்கள் சம்பாதித்த சொத்தை நீங்கள் விரும்பினால் - ஒரே ஒரு நபருக்கு கூட செல்லுமாறு உயில் மூலம் செய்யலாம். மேலும் உங்கள் சொத்தில் ஒரு பங்கை உங்கள் காலத்துக்கு பின் Charity - க்கு செல்ல வேண்டுமென நினைத்தால் - அது உயில் எழுதி வைத்தால் தான் சாத்தியமாகும். இல்லாவிடில் வாரிசு தாரர்கள் மட்டுமே சொத்தை பிரித்து கொள்வர்.

ஒரு உயில் எப்படி எழுதப்பட வேண்டும் ? அதனை ரிஜிஸ்தர் செய்வது எப்படி ?


உயில் ஒரு மனிதனின் விருப்பம் என்ற அளவில் - எப்படி / எந்த format -ல் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

உயிலை ரிஜிஸ்தர் செய்வது சட்டப்படி கட்டாயம் இல்லை. ஆயினும் - அதன் நம்பகத்தன்மையை சிலர் சந்தேகிக்கலாம் என்ற அளவில் - ரிஜிஸ்தர் செய்வது நல்லது.

தனது உயிலை ஒருவர் எழுதி முடித்து விட்டு தனது கையொப்பம் இட்டபின் - கட்டாயம் இருவர் சாட்சி கையெழுத்திட வேண்டும். இப்படி சாட்சி கையெழுத்திடுவோர் - தங்கள் முன் உயிலை எழுதியவர் கையொப்பம் இட்டார் என்பதற்கு மட்டுமே கையெழுத்து இடுகிறார்கள். உயிலை முழுவதும் அவர்கள் வாசிக்க வேண்டுமென்று அவசியம் இல்லை.

இதன் பின் உயில் சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்யலாம். உயிலை ரிஜிஸ்தர் செய்ய மிக மிக குறைந்த கட்டணமே (அதிக பட்சம் ரூ. 500 ) வாங்கப்படுகிறது.

நாம் ஒரு முறை எழுதிய உயிலை மாற்றி எழுத முடியுமா ? ஒருவர் பல உயில் எழுதினால் - எது எடுத்து கொள்ளப்படும் ?

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை மாற்றி எழுதலாம். எந்த உயில் கடைசியாக ஒருவரால் எழுதப்பட்டதோ, அதுவே அவரின் இறுதி உயிலாக எடுத்து கொள்ளப்படும்
உயிலை முழுவதும் மாற்றி எழுதாமல் சில பகுதிகளை மட்டும் மாற்ற முடியுமா ?

முடியும். 

குறிப்பாக ஒருவர் உயில் எழுதிய பின் புதிதாக வேறு சொத்துகள் வாங்கியிருக்கலாம். அல்லது ஏற்கனவே எழுதிய ஒரு சொத்தை - இன்னொருவருக்கு மாற்றி எழுதலாம். இந்நேரங்களில் உயிலின் ஒரு பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்படும். அல்லது புதிதாக உள்ள சொத்து யாருக்கு சேரவேண்டும் என எழுதப்படலாம். இதற்கு "Codicil " என்று பெயர். உயில் மற்றும் Codicil இரண்டும் சேர்ந்து ஒருவரின் உயிலாக கொள்ளப்படும்

ஒருவருக்கு உயில் மூலம் எழுதி வைத்த சொத்தை, உயில் எழுதியவர் பின்னர் விற்க முடியுமா ?
உயில் என்பது ஓருவரின் இறப்புக்கு பின் தான் நடைமுறைக்கு வருகிறது. எனவே - அவர் இறக்கும் வரை அந்த சொத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனை அவர் தாரளாமாக பிறருக்கு விற்கலாம். அல்லது வேறு யாருக்கேனும் கூட மாற்றி எழுதலாம்

இஸ்லாமியர்கள் தங்கள் சொத்து முழுமையும் உயில் மூலம் எழுத முடியுமா ?

முடியாது. ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே உயில் மூலம் எழுத முடியும். மீதமுள்ள 2/3 பங்கு - அவரது வாரிசு தாரகளுக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி தான் சென்று சேரும்.

உயிலை நடைமுறைப்படுத்த கோர்ட் அனுமதி பெறவேண்டுமா ?

உயிலில் உள்ள விஷயங்களை கோர்ட் ஒரு முறை அங்கீகரிக்கும் வழக்கம் இந்தியாவில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களுக்கு மட்டும் அவசியமாகும். போலவே இந்த 3 நகரங்களிலும் இருந்தபடி ஒருவர் உயில் எழுதினர் எனில் - அவர் உயில் மூலம் எழுதும் சொத்து வேறு ஊரில் இருந்தாலும் கூட கோர்ட் அப்ரூவல் பெறுவது அவசியமாகிறது. இந்த நடைமுறையை ப்ரொபேட் என்று அழைப்பார்கள்.

ப்ரொபேட் தேவைப்படும் நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு விண்ணப்பித்து ப்ரொபேட் பெற்றபின் தான் சொத்து - சட்டப்படி அவருக்கு வந்து சேரும்

Executor மற்றும் Beneficiary என்பவர்கள் யார்?

தனது சொத்துக்களை உயில் மூலம் எழுதி வைக்கும் நபர் Testator எனப்படுவார்.

சொத்தில் யார் யாருக்கெல்லாம் உரிமை/ பங்கு உள்ளதாக அவர் குறிப்பிடுகிறாரோ அவர்கள் Beneficiary எனப்படுவர்.

ஒருவர் எழுதிய உயிலை அவரது மரணத்துக்கு பின் நிர்வகித்து அனைவருக்கும் உயிலில் உள்ளபடி சொத்துக்கள் சென்று சேரும்படி நடவடிக்கை எடுப்பவர் Executor என அழைக்கப்படுவார்.

ஒருவர் தனது உயிலிலேயே - Executor யார் என குறிப்பிடுவது மிகவும் நல்லது

நாம் எழுதும் உயில் யாருக்கும் தெரியாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளும் வசதி உள்ளதா ?

ஆம்; அப்படியொரு வசதி இருக்கிறது. எந்த சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் உயிலை நாம் பதிவு செய்கிறோமோ, அங்கேயே குறிப்பிட்ட தொகை செலுத்தினால், சப் ரிஜிஸ்தர் அதனை பத்திரமாக பாதுகாப்பார். அவர் ரீசீப்ட்- டை நமது வாரிசு தாரர்களிடம் தந்து வைத்து விடலாம். நமது இறப்பிற்கு பின் அந்த ரீசீப்ட் மற்றும் நமது இறப்பிற்கான சான்று காட்டி - நமது வாரிசு தாரர்கள் நமது உயிலை பெற்று கொள்ளலாம்


ஜீவனாம்சம் வழக்கு


ஜீவனாம்சம் - வழக்கு

தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மற்றவரை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு இந்தியக் குடிமகனுக்கு நம் நாட்டுச் சட்டம் என்ன வழி சொல்கிறது?

அது கொடுக்கும் பாதுகாப்புதான் என்ன? இந்திய குற்றவியல் சட்டத்தின் (Criminal Procedure Code) பிரிவு 125, 126, 127 மற்றும் 128.

இந்திய நாட்டைப் பொறுத்தவரை சிவில் சட்டங்கள் என்று சொல்லக் கூடிய தனி மனித உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் திருமணச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், ஜீவனாம்சம் போன்றவை ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளன. எனினும் மேற்கூறிய இந்தச் சட்டப்பிரிவு இந்திய மக்கள் அனைவருக்கும் ஜீவனாம்சம் கோர ஒரு பொதுவான சட்டமாகவே உள்ளது.

யாரெல்லாம் ஜீவனாம்சம் பெற தகுதியானவர்கள்?
இந்தச் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ்...

* தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத மனைவி.

* தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத, ”சட்டம் அங்கீகரிக்கும்” மற்றும் ”சட்டம் அங்கீகரிக்காத மைனர் குழந்தைகள்” இதில் அடக்கம். ஒருவேளை இவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.

* வயது வந்த சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின் மகன், மகள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்.

* ஒரு நபரின் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத தாய், தந்தையர்.

மேற்கூறிய இவர்கள் அனைவரும் தன்னுடைய கணவர், தகப்பன் மற்றும் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோர இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டப் பிரிவில் மனைவி என்ற சொல் சட்டப்பூர்வமான மனைவியை மட்டுமே குறிக்கும். மேலும், கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்யாத பட்சத்திலும், எந்தவிதமான நிரந்தர ஜீவனாம்சம் பெறாத பட்சத்திலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள எந்தவிதமான வருமானமும் இல்லாத பட்சத்திலும் இந்தச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் கோர இயலும்.

வழக்கு எங்கு தாக்கல் செய்யவேண்டும்?

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய விரும்பும் நபர் தான் எங்கே வசிக்கிறாரோ, எதிர் தரப்பினருடன் கடைசியாக எங்கே வசித்தாரோ, அந்த இடத்திற்குட்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலோ (Magistrate Court) அல்லது குடும்பநல நீதிமன்றத்திலோ ஜீவனாம்ச வழக்கு தாக்கல் செய்யலாம்.

மைனர் குழந்தைகளுக்கு தாயே காப்பாளராக இருந்து வழக்கு தாக்கல் செய்ய இயலும், இது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தைக்கும் (Illegitimate child) பொருந்தும். மேலும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைக்கால ஜீவனாம்சம் கோரவும் இந்தச் சட்டத்தில் இடமுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம் (rise in cost of living) எதிர்தரப்பினராக இருக்கும் கணவரின், தந்தையின், மகனின் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் ஏற்படும் மாற்றம், ஜீவனாம்சம் கோரும் மற்றும் ஜீவனாம்சம் பெரும் நபரின் ஊதியம் ஈட்டக்கூடிய நிலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய நிலையில் மாற்றம், விவாகரத்தான மனைவியின் மறுமணம் அல்லது விவாகரத்து ஆகாத மனைவியின் தவறான நடத்தை, மைனரிலிருந்து மேஜராகும் பிள்ளைகள் போன்ற ஒரு சில காரணங்களால் நீதிமன்றம் நியமித்த ஜீவனாம்ச தொகையை உயர்த்தவோ, குறைக்கவோ இந்தச் சட்டத்தின் பிரிவு 127ன் கீழ் வழிவகை உள்ளது.

நீதிமன்ற ஆணைக்குப் பிறகும், ஜீவனாம்சம் தராவிட்டால்?

நீதிமன்றம் கொடுத்த ஜீவனாம்சம் தொகையினை எதிர்தரப்பினர் தராமலும் எந்தவிதமான மேல்முறையீடும் செய்யாமலும் இருக்கும் பட்சத்தில் அந்தத் தொகையை பெற ஒரு மனு தாக்கல் செய்து அந்தத் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்தவோ அல்லது ஜீவனாம்சம் கொடுக்காத பட்சத்தில் எதிராளியை சிறையெடுக்கவோ முடியும். இந்த வழக்குகளில் எதிர் தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் ஒரே நோக்கத்தில்தான் அவரை சிறையெடுக்கும் ஒரு முடிவினை நீதிமன்றம் எடுக்கும்.

எதிர்தரப்பினர் ஜீவனாம்சம் செலுத்திவிடும் பட்சத்தில் சிறையெடுப்பு தவிர்க்கப்படும்.

நீதிமன்ற தீர்ப்புகள்:

Savitaben Somabhai Bhatia Vs State of Gujarat and others (2005)

இந்த வழக்கில் ஒரு ஆண் மகன் தன்னை தானே பராமரித்துக்கொள்ள இயலாத நிலையி லிருக்கும் தன்னுடைய மனைவி, மக்கள் மற்றும் பெற்றோரை பராமரிப்பது இயற்கை அவன் மீது விதித்திருக்கும் தர்மப்படியான ஒரு கடமை. இவ்வாறு கடமையாற்றுவது ஒரு சமூக நீதியின் வெளிப்பாடு என்று ஜீவனாம்சத்தைப் பற்றி தீர்ப்பு வழங்கப்பட்டது.

Chaturbhuj Vs Sita Bao (2008)

இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 125 இயற்றப்பட்டதன் நோக்கம் தன்னால் பராமரிக்கப்பட வேண்டியவர்களை பராமரிக்க தவறும் நபருக்கு அவருடைய தர்மப்படியான கடமையை புரியவைக்க முயற்சிப்போமேயன்றி தண்டிப்பது நோக்கமல்ல.

Provision Of Muslim Women (Protection Of Rights On Divorce) Act 1986

1985ம் ஆண்டு நமது உச்ச நீதிமன்றத்தில் Mohammed Ahmed Khan Vs ShahBanu Begum என்ற சரித்திரப் புகழ் மிக்க வழக்கில் ஒரு இஸ்லாமியப் பெண்ணிற்கு தலாக்கிற்கு பிறகு இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் கொடுத்த தீர்ப்பு இஸ்லாமிய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தினால் மேற்கூறிய இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. மேற்கூறிய இந்தச் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் இஸ்லாமிய சமூகத்தாரால் தலாக்கிற்குப் பிறகு ஒரு பெண் கடைப்பிடிக்கும் இதாத் சமயத்திலேயே அந்தப் பெண்ணிற்கு தன் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான ஜீவனாம்சத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. தலாக் செய்யப்பட்ட உடனே அவர்களுக்குப் பிறக்கும் சட்டப்படியான குழந்தைக்கான ஜீவனாம்சமும், மேலும் திருமணத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட மெஹர் தொகையும் செலுத்தப்பட வேண்டும். அந்தப் பெண்ணிற்கு திருமணத்திற்கு முன்னரும் திருமணத்தின்போதும் அவளது உற்றார், உறவினர், நண்பர்கள், கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தும் திருப்பித் தரப்படவேண்டும்.

ஒரு வேளை தலாக் செய்த கணவர் மேற்கூறியவற்றை சரிவர நடைமுறை படுத்தாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் வழக்கு தொடர இயலும். தலாக்கிற்கு பிறகு மறுமணம் செய்து கொண்ட இஸ்லாமிய பெண்ணிற்கு முழுமையான ஜீவனாம்ச தொகை தராத பட்சத்தில் சட்டப்படி அதனை முன்னாள் கணவரிடமிருந்து கோர மறுமணம் ஒரு தடையல்ல.

The Hindu Marraige Act 1955 (இந்து திருமணச் சட்டம் 1955)

இந்தச் சட்டத்தின் பிரிவு 24ன் கீழ் பாதிக்கப்பட்ட கணவனோ அல்லது மனைவியோ எதிர்தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் கோர இயலும். இந்து திருமணச் சட்டத்தின்கீழ் ஏதாவது ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய இந்தச் சட்டப்பிரிவினை பயன்படுத்த இயலும்.

பிரிவு 25ன் கீழ் ஒரு வழக்கு விவாகரத்தில் முடியும் பட்சத்தில் வாழ்நாள் ஜீவனாம்சத்தை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ள இந்தப் பிரிவு வழிவகை செய்துள்ளது.

Hindu Adoption and Maintenance Act 1956
(இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்ச சட்டம் 1956)

இந்தச் சட்டத்தின் பிரிவு 18 ஒரு இந்து மனைவி அவர் வாழ்நாள் முழுவதும் தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர வழிவகை செய்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நியாயமான காரணத்திற்காக கணவரை விட்டுப் பிரிந்த மனைவியும் ஜீவனாம்சம் கோரலாம்.
1. எந்த ஒரு தகுந்த காரணமும் இல்லாமல் தன் மனைவியை கைவிட்டு பராமரிக்க தவறிய கணவன்.
2. கணவனால் மனதளவிலும், உடலளவிலும் வன்கொடுமை அனுபவித்த பெண்.
3. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கணவர்.
4. வேறு ஒரு மனைவியுடன் வாழ்பவர்.
5. வேறு ஒரு பெண்ணுடன் அதே வீட்டில் தொடர்ந்து அல்லது அவ்வப்போது வசிப்பது.
6. இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது.
7. வேறு ஏதாவது ஒரு நியாயமான
காரணத்திற்காக பிரிந்து இருத்தல்.
தகாத உறவில் ஈடுபட்ட, ஈடுபட்டிருக்கும் ஒரு மனைவி இந்தச் சட்டத்தின் கீழ் தனி வசிப்பிடமோ, ஜீவனாம்சமோ கோர இயலாது.

* இந்தச் சட்டத்தின் பிரிவு 19ன் கீழ் கணவனை இழந்த பெண் தன்னுடைய சுய சம்பாத்தியம் அல்லது சொத்தின் மூலம் வரும் வருமானத்தாலோ, தன்னுடையோ கணவரோ அல்லது தாய், தந்தையரின் சொத்தின் மூலம் வரும் வருமானத்தினாலோ, மேலும் தன் மகன் மற்றும் மகளின் பராமரிப்பின் மூலம் அல்லது அவர்களது சொத்தின் மூலம் வரும் வருமானத்தினாலோ தன்னைக் காத்துக்கொள்ள இயலாத பட்சத்தில் தன்னுடைய கணவரின் தந்தையிடமிருந்து (மாமனார்) ஜீவனாம்சம் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* இச்சட்டத்தின் பிரிவு 20ன் கீழ் ஒரு இந்து குடிமகனின் சட்டப்பூர்வமான அல்லது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தை, தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத வயதான பெற்றோர், தன்னைப் பராமரித்துக் கொள்ள இயலாத திருமணமாகாத மகள் ஆகியோர் ஜீவனாம்சம் கோர இயலும். நீதிமன்றம் ஜீவனாம்சம் வழக்கின் போது வழக்கு தொடுப்பவரின் நிலை, எதிராளியின் வருமானம், வாழ்க்கைத் தரம் அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு ஜீவனாம்சம் கோருபவரின் வாழ்வாதாரத்திற்கான போதிய தொகையை நிர்ணயிக்கும்.

Protection of Women from Domestic Violence Act 2005
(குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005)

நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் குற்றங்களில் பெரும்பாலான குற்றங்கள் பெண்களின் மீது செலுத்தப்படும் குடும்ப வன்முறையே ஆகும். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு தன் கணவராலோ, சகோதரனாலோ, மகனாலோ, உடன் வசிக்கும் ஆண் நண்பராலோ, தந்தையாலோ நிர்கதியாக விடப்படும் பெண் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்மகனிடமிருந்து ஜீவனாம்சமும் நஷ்டஈடும் கோர இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது. பொதுவாக இந்திய சட்டங்களில் மனைவி என்ற அந்தஸ்துடைய பெண் மட்டுமே ஜீவனாம்சம் கோர சட்டம் வழிவகை செய்துள்ளது. எனினும் முதல் முறையாக மனைவியல்லாத ஒரு ஆண்மகனுக்கு துணையாக மனைவி போல் வாழும் ஒரு பெண்ணும் ஜீவனாம்சம் கோர இந்தச் சட்டமே முன்னோடியாக விளங்கியது. இந்தச் சட்டத்தைப் பற்றி முழுமையாக பின்னர் தெரிந்து கொள்வோம்.

Narinder Pal Kaur Vs M.S. Chawla (2008)

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கூறிய வழக்கில் மனைவியல்லாத ஒரு பெண்ணிற்கு ஜீவனாம்ச உரிமை கொடுத்து தீர்ப்பளித்தது. காலங்காலமாக ஒரு ஆண் பல மனைவிகள் வைத்துக்கொண்டது நம் இதிகாசங்களில், புராணங்களில் பார்த்துவந்த ஒன்று. இந்தியாவில் திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டவுடன் ஒரு தாரம் முறை வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் திருமண உறவில் அல்லாத ஒரு பெண் ஜீவனாம்சம் கோர சட்டம் அனுமதிக்கவில்லை. எனினும் மேற்கூறிய வழக்கில் ஒரு ஆண் தான் ஏற்கனவே மணமாகியிருந்ததை மறைத்து 14 ஆண்டுகள் ஒரு பெண்ணுடன் மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து இரண்டு குழந்தைகளையும் பெற்று சமூகத்தில் அந்த குடும்பத்தின் தலைவன் என்று வெளிக்காட்டிக்கொண்டு இருந்த காரணத்தால் இந்த வழக்கின் தீர்ப்பில் இந்த இரண்டாவது மனைவியையும் சட்டப்பூர்வமாக ஜீவனாம்சம் பெருவதற்கு அங்கீகரிக்கலாம் என்று கூறி நீதிமன்றம் ஜீவனாம்சமும் வழங்கியது.

Komalam Amma Vs Kumara Pillai Raghavan Pillai and others (2008)

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பில் ஒரு பெண்ணிற்கு வசிக்கும் இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஜீவனாம்சத்தின் ஒரு அங்கமே என்று கூறியுள்ளது. மேலும், அந்த இருப்பிடமும் அந்தப் பெண் பழக்கப்பட்ட அந்தஸ்திலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007
(பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007)

இந்திய நாடு கூட்டுக் குடும்ப முறைக்கு பெயர் போனது. ஆனால், காலத்தின் கட்டாயத்தால் பொருளீட்டுவதற்காக இளைய தலைமுறையினர் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்த காரணத்தால் நம் நாட்டில் வயதான பெற்றோர்களும் மூத்த குடிமக்களும் பராமரிக்க ஆளில்லாமல், அன்பு காட்ட ஆளில்லாமல் தனிமை படுத்தப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை. இதனாலேயே இன்று புற்றீசல் போல் முதியோர் காப்பகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 125ன் கீழ் பெற்றோர்கள் ஜீவனாம்சம் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தாலும் 2007ம் ஆண்டு கூடுதலான இந்தச் சிறப்பு சட்டத்தினையும் இயற்றியுள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் தன்னை பராமரித்துக்கொள்ள இயலாத ஒரு மூத்த குடிமகன், ஆதரவற்று விடப்பட்ட பெற்றோர், தன்னிச்சையாகவோ அல்லது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (ழிநிளி) மூலமாக இதற்கென நியமிக்கப்பட்ட ஆணையத்தின் முன் வழக்கு தாக்கல் செய்யலாம்.

மேலும், யாருமே பராமரிக்க இயலாத நிலையில் இருக்கும் முதியோர்களை அரசே முதியோர் இல்லங்களின் வாயிலாக பராமரிக்க சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும், இந்த சட்டத்தின்கீழ் மனு தாக்கல் செய்யும் செய்பவரின் குழந்தைகள் அல்லது வாரிசுகளுக்கு சம்மன் அனுப்பி ஆணையம் ஆலோசனை வழங்கி சமரச முயற்சி மேற்கொள்கிறது. சமரச முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் ஆணையம் ஜீவனாம்சம் வழங்கக் கோரி தீர்ப்பினை வழங்குகிறது.


கல்விக்கடன் வாங்கும்போது - கவனிக்க


கல்விக்கடன் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை
**************************************************************

கடந்த சில வருடங்களாக, கல்விக்கான செலவுகள் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் நீங்கள் ஒரு பெற்றோராக அல்லது மாணவராக இருந்தால், கல்விக்கடனை பற்றி நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. சில நேரங்களில் பல முனைகளில் இருந்து கடன் கிட்டும். அதில் நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கும் மற்றவைகளுக்கும் சிறிய வேறுபாடு மட்டுமே இருந்திருக்கலாம். ஆனால் அவை எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும். கல்விக் கடனில் அப்படி நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?

1) கல்விக்கடனை பொறுத்த வரைக்கும் 0.25 சதவீதம் அல்லது 25 அடிப்படை புள்ளிகள் என்ற சிறிய வேறுபாடு பெரிய தக்கத்தை ஏற்படுத்தும் அதனால் கடன் வாங்குவதற்கு முன்பு வட்டி விகிதங்களை ஆய்வு செய்து கொள்வது நல்லது.

2) பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். அதில் எப்போதுமே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிறந்து விளங்குவதை நீங்கள் காணலாம். மேலும் தனியார் வங்கிகளில் வட்டி வகிதங்கள் அதிகமாக இருக்கும் எனவே கல்வி கடன் வாங்கு பொழுதில் தனியார் வங்கிகளை ஒதுக்கிடுவது நல்லது

3) இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் மேலும் தள்ளுபடி கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

4) ஃபிக்சட் வட்டி மற்றும் ஃப்லோடிங் வட்டி போன்ற பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். முடிந்த வரை ஃப்லோடிங் வட்டி விகிதத்தை கொண்ட கடனை பெறுவது தான் நல்லது.

5) வங்கி மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் அளவு அமையும். உதாரணத்திற்கு, தொழிற்கல்வி அல்லாத படிப்புகளுக்கு, ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான கடனை ஐ.டி.பி.ஐ. வங்கி வழங்குகிறது. அதே போல் சார்ட்டட் அக்கௌண்டன்சி படிப்பு என்றால் கல்விக்கடனாக ரூ. 3 லட்சத்தை வங்கி வழங்குகிறது.

6) கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பை பொருத்தும் வங்கியை பொருத்தும் மாறுபடும். உங்கள் கடனின் அளவை பொறுத்து அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை பல்வேறு வங்கிகள் தீர்மானிக்கிறது. உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடிடுங்கள்.

7) கல்விக்கடனின் மீது பல்வேறு பிற கட்டணங்களும் பொருந்தும். செயலாக்க கட்டணம், கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் படிப்பதற்கு கல்விக்கடன் பெரும் போது சில வங்கிகள் செயலாக்க கட்டணத்தை வசூலிப்பதில்லை. ஆனால் வெளிநாட்டில் படிப்பதற்காக கல்விக்கடன் பெரும் போது அவர்கள் செயலாக்க கட்டணத்தை வசூலிக்கலாம்.

8) இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெரும் போது, இவ்வகையான இலவசங்களை மறந்து விடாதீர்கள், இது வாழ்கையில் கண்டிப்பாக உதவும்.

9) ஏற்கனவே சொன்னதை போல், நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது வட்டி விகிதமே. பொதுத்துறை வங்கிகள் இந்த விஷயத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களிடம் இருந்து கடனுக்கான ஒப்புதலை பெறுவதற்கு நீங்கள் பல முறை அலைய வேண்டியிருக்கும். ஆனாலும் கூட முடிவில், உங்கள் அலைச்சல் நல்ல பலனை அளிக்கும்.

டீமேட் கணக்கு (Demat Account)


DEMAT ACCOUNT
********************
பங்கு சந்தையில் வரத்தகம் செய்திட நமக்கு மின் ஆவணக் கணக்கு எனப்படும் டீமேட் கணக்கு (Demat Account) அவசியம்.

நாம் வர்த்தகம் செய்திடும் அனைத்து விதமான பதிவுகளும் இக்கணக்கில் பதிவாகி இருக்கும். இந்நிலையில் இக்கணக்கு வைத்திருப்பவர்கள் நோயின் காரணமாகவோ, உடல்நலக்குறைவின் காரணமாகவோ அல்லது வயோதிகம் காரணமாகவோ திடீரென்று இக்கணக்கிற்கு நாமினி அதாவது கணக்கிற்கு வாரிசாக யாரையும் நியமிக்காமல் மரணமடைந்தால், இக்கணக்கில் இருக்கும் பங்குகளின் நிலை என்ன??

இக்கட்டாண நிலையில் ஆவணக்கணக்கிற்கு வாரிசாக இன்னொருவரை நியமனம் செய்யாமலோ, அல்லது உயில் எழுதி வைக்காமலோ ஒருவர் இறந்து விடும் பட்சத்தில், அவருடைய மின் ஆவணக்கணக்கில் அதிக மதிப்புடைய பங்குகள் இருக்குமாயின், இறந்தவரின் மரபுவழி வழித்தோன்றல் (சட்டரீதியான வாரிசு) கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி பங்குகளை கையகப்படுத்தும் உரிமையை பெறலாம்.

1) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழின் நகல்.

2) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட வழிமுறையுரிமை (மரபுவழி வாரிசுரிமை) சான்றிதழ் நகல் அல்லது உயில் இல்லாமல் இறந்திருந்தால், தகுதிவாய்ந்த நீதிமன்றம் வழங்கும் ஆணை

3) விருப்புறுதிச் சான்றிதழ் நகல் (Probate) அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட நிருவாக உத்தரவு (Letter of Administration). மேற்கூறிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், என்ன செய்ய? இறந்தவரின் சட்டரீதியான வாரிசு கீழ்க்காணும் ஆவணங்களை சமர்ப்பித்து பங்குகளை கையகப்படுத்தும் உரிமையை பெறலாம்.

a)பங்கு மாற்று பத்திரத்தை பூர்த்தி செய்வதின் மூலம் பங்கு மாற்று உரிமை கோரலாம்.

b) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழ் நகல் கொண்டு உரிமை கோரலாம்.

c) நீதித்துறை சாரா முத்திரத்தாளில் பெறப்பட்ட காப்புறுதிக் கடிதம் (Letter of Indemnity) 

d) நீதித்துறை சாரா முத்திரத்தாளில் பெறப்பட்ட பிரமாணப் பத்திரம் (Affidavit) 

e) பங்கு மாற்று உரிமைக்கு ஒப்புதல் அளிக்கும், இறந்தவரின் சட்டரீதி வாரிசுகளின் ஒப்புதல் பெற்ற தடையில்லா சான்றிதழ்

மோசடி நிறுவனங்களை அடையாளம் காண


மோசடி நிறுவனங்களை அடையாளம் காண 10 வழிகள்
***************************************************************
பிஏசிஎல், எம்ஆர்டிடி மாதிரி பல நூறு மோசடி நிறுவனங்கள் தமிழகம் முழுக்க ராஜ்ஜியம் நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களைக் கண்டுபிடிப்பதற்கான பத்து வழிகள் இருக்கிறது.

1. நாம் முதலீடு செய்யப்போகும் நிறுவனம் எந்தமாதிரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, தனிநபர் நடத்தும் அமைப்பா, கூட்டாண்மை நிறுவனமா, இன்ஷூரன்ஸ் நிறுவனமா, வங்கியா, வங்கியல்லாத நிதி நிறுவனமா, பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளா, பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை ஒளிவுமறைவற்ற முறையில் தங்கள் கணக்குவழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அவற்றைத் தேர்வு செய்வது நல்லது. ஆனால், அது மட்டுமே நம் பணத்துக்குப் பாதுகாப்பல்ல.

2.நிறுவனங்கள் எந்தச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எந்த ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் கீழ் நெறிமுறைப்படுத்தப் படுகிறது என்பதை இணையம் மூலமாகவோ, நேரடி யாகவோ தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் ஒரு பிரச்னை எனில், யாரிடம் முறை யிடுவது என்பது தெரியும். உதாரணமாக, இன்ஷூரன்ஸ் நிறுவனம் எனில், ஐஆர்டிஏவால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். (பதிவு பெற்ற நிறுவனங்களின் பெயர் பட்டியல் ஐஆர்டிஏ இணையதளத்தில் கிடைக்கிறது). வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எனில், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள் எனில், அந்த நிறுவனங்கள் செபியால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். உற்பத்தி/சேவைத் துறை நிறுவனங்கள் எனில், கம்பெனி சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

3.முதலீடுகளை பணமாகவே பெறுவோம் எனில், அந்த நிறுவனங்களை நம்பாதீர்கள். அதேபோல், நிறுவனத்தின் பெயரில் மட்டுமே காசோலைகளை எழுதுங்கள். குறிப்பிட்ட வேறு நிறுவனத்தின் பெயரில் எழுதவோ, தனி நபரின் பெயரிலோ காசோலையை தரச் சொன்னால் போலி நிறுவனங்கள் என்பதை அடையாளம் கண்டுவிடலாம். நிறுவனத்தின் பெயரில் காசோலை எடுக்கச் சொன்னாலும், அதில் க்ராஸ் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது போலி நிறுவனமாகவே இருக்க வாய்ப்புண்டு.

4.ஒரு நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாகப் பெறுகிறது எனில், அதற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி தவிர, வேறு அரசு அல்லாத அமைப்புகளிடம் அனுமதி பெற்று டெபாசிட் பெற்றாலும் அதைப் போலி நிறுவனமாகக் கருதலாம்.

5.பட்டியலிடப்படாத நிறுவனங்களில் நிதி சார்ந்த பிரச்னைகள் இருந்தால் நமக்குத் தெரியாது. எனவே, பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

6.நிதி நிறுவனங்களில் முதலீடு மேற்கொள்ளும் போது அவர்கள் வழங்கும் விண்ணப்பங்களில் தந்திருக்கும் டிஸ்க்ளெய்மர் விதிகள் மற்றும் நம் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மறுத்தாலோ, இழுத்தடித்தாலோ, மழுப்பினாலோ அந்த நிறுவனம் போலி நிறுவனம் என்று முடிவு செய்யலாம். முழுவதும் பூர்த்தி செய்யாத எந்த விண்ணப்பத்திலும் கையெழுத்திடாதீர்கள்.

7.முதலீடு செய்த நிறுவனத்தின் செயல்பாடுகள், புரமோட்டர்களின் செயல்பாடுகள், கணக்கு வழக்குகள், நிறுவன நிர்வாகம், நிதி நிலைமை, சந்தையில் நிறுவனத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் என்று எதையும் தெளிவாக வெளியிடாமல், ரகசியமாக வைத்திருந்தால் அந்த நிறுவனத்தைப் போலி நிறுவனமாகக் கருதலாம். குறிப்பாக, பெறப்படும் பணம் எதில் முதலீடு செய்யப்படுகிறது, எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை வெளி யிடாத நிறுவனங்கள் மிக ஆபத்தானவை.

8.நிறுவனத்தின் எந்த முக்கிய மாற்றமும் முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்த பின்னரே செய்ய வேண்டும். அப்படி தெரிவிக்காமல் செய்தால், அது போலி நிறுவனம்.

9.போலி நிறுவனங்கள் வளர வளர தன் வெளிப்படைத்தன்மையை வெகுவாகக் குறைத்துக் கொள்ளும். சரியான பதில்கள் கிடைக்காது, பணம் சம்பந்தமான பரிமாற்றங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இறுதி நிலையில் அவை எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்கிற மாதிரி மர்மமாக செயல்படத் தொடங்கும்.

10.கவர்ச்சிகரமான ஆஃபர்கள், அதிக டிவிடெண்ட், குலுக்கல் முறை யில் கோடி ரூபாய்க்கு பரிசு, தங்க காசு, ஆண்டுக்கு 35% வட்டி, ரியல் எஸ்டேட் கூட்டு முதலீடுத் திட்டம் என்கிற மாதிரியான, பேராசையைத் தூண்டக்கூடிய வார்த்தைகளைச் சொல்லும் எல்லா நிறுவனங்களும் 200% போலிதான். இந்த நிறுவனங் களிடமிருந்து தூர விலகி நில்லுங்கள்!


தனி நபர் விபத்துக் காப்பீடு


தனி நபர் விபத்துக் காப்பீடு
********************************
வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்த பாலிசியை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் இனி...

1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி.
இந்த பாலிசியில் நிரந்தர , தற்காலிக ஊனங் களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பீரிமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும்.

3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும்.

4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.

உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும்.

5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும்.

6. இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவு களுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.

7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித க்ளெய்மும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5% போனஸாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50% வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன.

8. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும்.

9. இந்தக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யும்போது எந்தமாதிரியான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகக் குறிப்பிட்டிருந்தால்தான் அதற்கான இழப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைக்கும் என்பதை மறக்கக்கூடாது.

10. எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரத்தில், எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது.