disalbe Right click

Thursday, May 7, 2015

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009



குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009


அத்தியாயம் 01
முன்னுரை
1.தலைப்பு
1.  இச்சட்டம்  “குழந்தைகளின்  இலவச  கட்டாயக்  கல்வி  உரிமைச்  சட்டம்  2009  என்று  அழைக்கப்படும்.
2.   இந்தச்  சட்டம்  ஜம்மு  காஸ்மீர்  மாநிலம்  தவிர்த்து  இந்தியா  முழுவதற்கும்  பொருந்தும்.
3.  மத்திய  அரசு  அதன்  அதிகாரப்பூர்வ  அரசிதழில்  வெளியிட்ட  நாளிலிருந்து  நடைமுறைக்கு  வரும்.

2.  சொற்பொருள்  விளக்கம்
1. “அரசு”   என்பது
மத்திய,  மாநில  அரசுகளால்  நிறுவப்பட்ட / சொந்தமான/ கட்டுப்பாட்டிற்கு  உட்படும்  பள்ளிகள்  இச்சட்ட  வரையறைக்குள்  அடங்கும்.  இந்த  வரையறை  யூனியன்  பிரதேசத்திற்கும்  பொருந்தும்.
2.  இச்சட்டத்தில்  தரப்பட்டிருக்கும்  “தலைக்  கட்டணம்”  என்ற  சொல்  பள்ளியில்  வசூலிக்கப்படும்  நன்கொடை,  கூடுதல்  கட்டணம்  செலுத்துதல்  ஆகியவற்றைக்  குறிக்கும்.
3.  “குழந்தை”  என்ற  சொல்  6  முதல்  14  வயது  வரை  இருபால்  குழந்தையைக்  குறிக்கும்.
4.  ”ஒதுக்கப்பட்ட  பிரிவை  சார்ந்த  குழந்தை” – தாழ்த்தப்பட்டோர்,  பழங்குடியினர்,  சமூக  ரீதியாக  பிற்படுத்தப்பட்டோர்  அல்லது,  அரசாங்கத்தால்  அதிகாரப்பூர்வமாக  வரையறுக்கப்பட்ட   சமூகம்,  கலாச்சாரம்,  பொருளாதாரம்,  நிலப்பரப்பு,  மொழி,  பாலினம்  எனும்  அடிப்படைகளில்  பாகுபடுத்தப்பட்ட  பிரிவைச்   சார்ந்த  குழந்தைகள்.
5.  “நலிந்த  பிரிவைச்  சார்ந்த  குழந்தை”  அரசால்  வரையறுக்கப்பட்ட  வறுமைக்  கோட்டிற்கு  கீழ்  உள்ள  குடும்பங்களைச்  சார்ந்த  குழந்தைகள்.
6.  “தொடக்கக்கல்வி” – முதல்  வகுப்பிலிருந்து  எட்டாம்  வகுப்பு  வரையிலான  கல்வி.
7.  “பாதுகாவலர்” – குழந்தையைத்  தன்  பொறுப்பில்  வைத்து  வளர்க்கும்  ஒருவர்,  அல்லது  நீதிமன்றத்தாலோ அல்லது  சட்டப்பூர்வமாகவோ  பாதுகாவலர்  என்று  அறிவிக்கப்பட்டவர்.
8.  ”உள்ளாட்சி  அமைப்பு” – மாநகராட்சி  அல்லது  நகராட்சி  அல்லது  மாவட்ட  ஊராட்சி  ஒன்றியம்  அல்லது  நகர  ஊராட்சி  அல்லது  கிராம  ஊராட்சி.
9.  “தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்” – குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையங்கள்  சட்டம்  2005  பிரிவு  3ன்  கீழ்  அமைக்கப்பட்ட  தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையத்தைக்  குறிக்கும்.
10.  “பள்ளி”  என்பது  தொடக்கக்  கல்வியை  வழங்குகிற  அங்கீகரிக்கப்பட்ட  பள்ளி  என்று  பொருள்படும்  -  அது  பின்வரும்  பள்ளிகளை  உள்ளடக்கியதாகும்.
அ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  நிர்வாகத்தால்  நிறுவப்பட்டு,  சொந்தமாக  உள்ள,  அவைகளின்  நேரடி  கட்டுப்பாட்டிற்குள்  செயல்படுகின்ற  பள்ளிகள்;
ஆ.  அரசு  அல்லது  ஊராட்சி  நிர்வாகத்திடமிருந்து  நிதியுதவிப்  பெறும்  தனியார்ப்  பள்ளிகள்.
இ.  தனித்து  வகுத்துரைக்கப்பட்ட  சிறப்புப்  பள்ளிகள்  (கேந்திரிய  வித்யாலயா,  நவோதயா  வித்யாலயா,  சைனிக்  பள்ளி)
ஈ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  நிர்வாகத்திடமிருந்து  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகள்.
11.  “மாணவர்  பள்ளியில்  சேர்க்கும்  முறை”  குழந்தைகளைப்  பள்ளியில்  சேர்க்கின்ற  போது  மேற்கொள்ளப்படும்  தேர்வு  முறை.
12.  “மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்”  என்பது  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையங்கள் – சட்டம்  2005ன்  கீழ்  அமைக்கப்படுகின்ற  ஆணையம்.

அத்தியாயம்  -  02
இலவச  கட்டாயக்  கல்வி  உரிமை

3.  குழந்தைகளின்  இலவச  கட்டாயக்  கல்வி  உரிமை
1.  6  முதல்  14  வயது  வரை  உள்ள  ஒவ்வொரு  குழந்தைக்கும்  ஒரு  அண்டைப்  பள்ளியில்  தொடக்கக்  கல்வி  முடியும்  வரை  இலவசமாக,  கட்டாயமாகக்  கல்வி  பெறுவதற்கு  உரிமை  உண்டு.
2.  இப்பள்ளியில்  படிக்கும்  குழந்தைகள்  கட்டணங்கள்  செலுத்தவோ  செலவுகள்  செய்யவோ  வேண்டியதில்லை.
மாற்றுத்  திறனுடைய  குழந்தைகளுக்கு  இலவச  கட்டாய  தொடக்கக்  கல்வி  பெறுகிற  உரிமை  உண்டு.

4.  பள்ளிச்  சேர்க்கை  இல்லாத  அல்லது  தொடக்கக்  கல்வியை  முடிக்காத     
           குழந்தைகளுக்கான  சிறப்பு  விதிகள்
*.  6  வயதுக்கு  மேற்பட்ட  ஒரு  குழந்தை  பள்ளியில்  சேர்க்கப்படவில்லை  என்றால்
*.  சேர்க்கப்பட்டு  தொடக்கக்  கல்வியை  முடிக்க  இயலவில்லையென்றால்   அப்போது  உள்ள  வயதிற்கு  பொருத்தமான  வகுப்பில்  சேர்க்க   வேண்டும்.
*.  இம்மாதிரியான  குழந்தைகள்  ஏனைய  குழந்தைகளுக்கு  இணையான  அறிவைப்  பெறும்  வகையில்  சிறப்புப்  பயிற்சியை  அளிக்க  வேண்டும்.
*.  14  வயதிற்கு  பிறகும்  கூட  தொடக்கக்  கல்வியை  முடிக்கா  நிலையில்  இவர்களுக்கும்  இலவசக்  கல்வி  பெறும்  உரிமை  உண்டு.

5.  பள்ளியை  மாற்றிக்  கொள்ளும்  உரிமை
ஒரு  குறிப்பிட்ட  தொடக்கப் பள்ளியில்  படிக்கும்  குழந்தைக்கு  அந்தப்  பள்ளியில்  படிப்பை  தொடர  முடியாத  சூழல்  ஏற்பட்டால்  பள்ளியை  மாற்றிக்  கொள்வதற்கான  உரிமை  உண்டு.  தொடக்கக்  கல்வியை  முடிப்பதற்கு  வழியில்லாத,  ஒரு  பள்ளியில்   பயிலும்  ஒரு  குழந்தைக்குத்  தனது  தொடக்கக்  கல்வியை  முடிப்பதற்காக  வேறு  பள்ளிக்கு  மாற்றக்  கோரும்  உரிமை  உண்டு.  இவ்வாய்ப்பு  அரசு  மற்றும்  அரசுதவி  பெறும்  பள்ளிகளுக்கு  மட்டுமே  பொருந்தும்.
2.  தொடக்கக்  கல்வியை  முடிக்க  ஒரு  மாநிலத்திற்கு  உள்ளேயோ  அல்லது  மாநிலத்திற்கு  வெளியேயோ  வேறொரு  பள்ளிக்கு  மாற வேண்டிய  அவசியம்  வருமானால்  மாற்றுமாறு  கோர  உரிமை  உண்டு.  இவ்வாய்ப்பு  அரசு  மற்றும்  அரசுதவி  பெறும்  பள்ளிகளுக்கு  மட்டுமே  பொருந்தும்.
3.  வேறொரு  பள்ளியில்  சேர்வதற்கு  பள்ளியின்  தலைமை  ஆசிரியர்  அல்லது  பொறுப்பாளர்  உடனடியாக  மாற்றுச்  சான்றிதழ்  வழங்க  வேண்டும்.
மாற்றுச்  சான்றிதழ்  வழங்க  தாமதப்படுத்தும்  பள்ளியின்  தலைமையாசிரியர்  அல்லது  பொறுப்பாளர்  மீது  பணி  விதிகளின்  கீழ்  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்படும்.

அத்தியாயம் – 03
6. அரசு,  உள்ளாட்சி  அமைப்புகள்,  பெற்றோர்  கடமைகள்
6.  அரசும்  மற்றும்  உள்ளாட்சி  அமைப்புகளும்  அண்டைப்  பள்ளிகள்  இல்லாதிருக்குமானால்  இச்சட்டம்  சட்ட  நடைமுறைக்கு  வந்த  மூன்று  ஆண்டுகளுக்குள்  நிறுவிட  வேண்டும்.

7.  நிதி  மற்றும்  இதர  பொறுப்புகள்
1.  இந்தச்  சட்டத்தின்  விதிகளைச்  செயல்படுத்தவும்  நிதி  வழங்கவும்  மத்திய  மற்றும்  மத்திய  அரசுக்குப்  பொதுப்  பொறுப்பு  உண்டு.
2.  இச்சட்ட  விதிகளைச்  செயலாக்குதற்குரிய  முதலீடு  மற்றும்  செலவுகள்  குறித்த  மதிப்பீட்டை  மத்திய  அரசு  தயாரிக்க  வேண்டும்.
3.  மத்திய  அரசு  மாநில  அரசுகளின்  செலவுகளுக்கான   விகிதாச்சாரத்தை  வருவாய்  நிதி  ஒதுக்கீடுகளாக  வழங்க வேண்டும்.
4.  மாநில  அரசுகளுக்குக்  கூடுதல்நிதி  வழங்கும்  வகையில்  நிதி  ஆணையத்தைக்  கேட்டுக்  கொள்ள  குடியரசுத்  தலைவரைக்  கேட்டுக்  கொள்ளலாம்.
5.  மத்திய  அரசு  தரும்  நிதியினை  வைத்துக்  கொண்டு  மாநில  அரசு  இச்சட்ட  விதிகளை  முறையாகச்  செயல்படுத்த   நிதி  வழங்க  வேண்டும்.
6.  மத்திய  அரசாங்கம்  மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை,
அ.  அதிகாரப்பூர்வ  கல்வி  அமைப்பின்  உதவியோடு  தேசிய  பாடத்திட்டத்திற்கான  ஒரு  சட்ட  வரைமுறையை  உருவாக்கும்.
ஆ.  ஆசிரியர்கள்  பயிற்சிக்கான  தர  நிர்ணயங்களை  வகுக்கும்.
இ.  புதிய  கண்ணோட்டங்கள்,  ஆய்வுகள்,  திட்டம்  மற்றும்  திறன்  வளர்ப்பு  ஆகியவற்றிற்குத்  தொழில்  நுட்ப  ஒத்துழைப்பும்  ஆதாரங்களையும்  மாநில  அரசுகளுக்கு  வழங்கும்.

8.  அரசின்  கடமைகள்
அ.  ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாயத்  தொடக்கக்  கல்வியை  வழங்குதல்.
அரசு  யாருடைய  செலவை  ஈடுகட்டாது.
அரசு,  உள்ளாட்சி  அமைப்பு – இவைகளால்  நிறுவப்படாத,  கட்டுப்பாட்டிற்குள் வராத,  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகளில்  சேர்க்கப்பட்டிருக்கும்  குழந்தைக்கு  அந்தக்  குழந்தையின்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளருக்குத்  தொடக்கக்  கல்வி  அளிப்பதில்  ஏற்படும்  செலவை  ஈடுகட்டுமாறு  கோருவதற்கு  உரிமை  இல்லை.
விளக்கம் – “கட்டாயக்  கல்வி  என்ற  சொல்லின்  பொருள்”  பின்வருமாறு :
அ.  அரசு  6 முதல்  14  வயது  வரை  உள்ள  ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாயத்  தொடக்கக்  கல்வி  வழங்குதல்.
ஆ. அரசு  ஒவ்வொரு  குழந்தையும்  தொடக்கக்  கல்வி  பெறும்  வகையில்  அண்டைப்பள்ளி  ஒன்றை  உருவாக்குவதை  உறுதிச்  செய்ய  வேண்டும்.
இ.  நலிந்த  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவைச்  சார்ந்த  குழந்தைகளுக்கு  எவ்வித  பாகுபாடு  காட்டப்படாமல்  தொடக்கக்கல்வியை  முடிக்க  அரசு  உறுதியான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.
ஈ.  பள்ளிக்  கட்டடம்,  ஆசிரியர்கள்  மற்றும்  கற்றல்  கருவிகள்  உள்ளிட்ட  உட்கட்டுமானங்களை  அரசு  வழங்க  வேண்டும்.
உ.  பள்ளிகளில்  சிறப்புப்  பயிற்சிக்கான  வசதிகளை  வழங்க  வேண்டும்.
ஊ. ஒவ்வொரு  குழந்தையும்  பள்ளியில்  சேர்க்கப்பட்டு,  தொடர்ந்து  வருகை  தந்து  தொடக்கக்  கல்வியை  முடிப்பதை  கண்காணிக்க  வேண்டும்.
எ.  நல்ல,  தரமான  தொடக்கக்  கல்வி  கிடைப்பதை  அட்டவணையில் குறிப்பட்டுள்ளபடி  நடைமுறைப்படுத்த  வேண்டும்.
ஏ,  பாடத்திட்டம்  தயாரித்தல்,  பாட  வகுப்புகளை  நிர்ணயித்தல்  உரிய  காலத்தில்  நடத்தப்படலை   உறுதிப்பட  வேண்டும்.
ஐ.  ஆசிரியர்களுக்கான  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.

9.  உள்ளாட்சி  அமைப்பின்  கடமைகள்
ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாய  கல்வியை  வழங்க  வேண்டும்.
அ.  அரசு,  உள்ளாட்சி  அமைப்பு – இவைகளால்  நிறுவப்படாத,  கட்டுப்பாட்டிற்குள்  வராத,  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகளில்  சேர்க்கப்பட்டிருக்கும்  குழந்தைக்கு  அந்தக்  குழந்தையின்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளருக்குத்  தொடக்கக்  கல்வி  அளிப்பதில்  ஏற்படும்  செலவை  ஈடுகட்டுமாறு  கோருவதற்கு  உரிமை  இல்லை.
ஆ.  அரசு  ஒவ்வொரு  குழந்தையும்  தொடக்கக்கல்வி  பெறும்  வகையில்  அண்டைப்பள்ளி  ஒன்றை  உருவாக்குவதை  உறுதிச்  செய்ய   வேண்டும்.
இ.  நலிந்த  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவைச்  சார்ந்த  குழந்தைகள்  எவ்வித  பாகுபாடு  காட்டப்படாமல்  தொடக்கக்  கல்வியை  முடிக்க  அரசு  உறுதியான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.
ஈ.  ஊராட்சி  அமைப்பின்  அதிகார  எல்லைக்குட்பட்ட  பகுதியில்,  வசிக்கும்  14 வயது  வரை  உள்ள  குழந்தைகள்  பற்றிய  விபரங்களைச்  சேகரித்து  பராமரிக்க  வேண்டும்.
உ.  ஒவ்வொரு  குழந்தையும்  பள்ளியில்  சேர்க்கப்பட்டு,  தொடர்ந்து  வருகை  தந்து  தொடக்கக்  கல்வியை  முடிப்பதைக்  கண்காணிக்க  வேண்டும்.
ஊ.  பள்ளிக்  கட்டடம்,  ஆசிரியர்கள்  மற்றும்  கற்றல்  கருவிகள்  உள்ளிட்ட  உட்கட்டுமானங்களை  அரசு  வழங்க  வேண்டும்.
எ.  சிறப்புப்  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.
ஏ.  நல்ல,  தரமான  தொடக்கக்  கல்வி  கிடைப்பதை  அட்டவணையில்  குறிப்பிட்டுள்ளபடி   நடைமுறைப்படுத்த  வேண்டும்.
ஐ.  பாடத்திட்டம்  தயாரித்தல்,  பாட  வகுப்புகளை  நிர்ணயித்தல்  உரிய  காலத்தில்  நடத்தப்படலை  உறுதிப்படுத்த  வேண்டும்.
ஒ.  ஆசிரியர்களுக்கான  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.
ஓ.  புலம்  பெயர்ந்த  குடும்பங்களின்  குழந்தைகள்  பள்ளியில்  சேர்க்கப்படுவதை  உறுதிப்படுத்த  வேண்டும்.
ஒள.  தனது  அதிகார  எல்லைக்கு  உட்பட்ட  பகுதியில்  பள்ளிகளின்  செயல்பாட்டைக்  கண்காணிக்க  வேண்டும்.
அ. கல்வி  ஆண்டைத்  தீர்மானிப்பது  இவ்வமைப்பின்  கடமையாகும்.
10.  பெற்றோர்  மற்றும்  பாதுகாவலரின்  கடமைகள்
தங்கள்  குழந்தை  அல்லது  தங்கள்  பொறுப்பில்  உள்ள  குழந்தைகளை,  அவரவர்தம்  நிலைமைக்கேற்ப,  அண்டைப்பள்ளி  ஒன்றில்  தொடக்கக்கல்வி  பெற  பள்ளியில்  சேர்ப்பதும்  அல்லது  சேர்க்க  வைப்பதும்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலரின்  கடமையாகும்.
11.  பள்ளிக்கு  முந்தைய  கல்வியை  வழங்குவதில்  அரசின்  பொறுப்பு
3வயதுக்கு  மேற்பட்ட  குழந்தைகளைத்  தொடக்கக்  கல்வி  பெற  தயார்ப்படுத்துவதற்காகவும்  6 வயது  நிறைவடையும்  வரையில்  அனைத்துக்  குழந்தைகளுக்கும்  தொடக்க  நிலை  குழந்தைப்  பருவ  கவனிப்பு  மற்றும்  கல்வி  கிடைக்கச்  செய்வதற்காகவும்  அரசு  இக்குழந்தைகளுக்கு  இலவசமாகப்  பள்ளிக்கு  முந்தைய  கல்வி  வழங்குவதற்குத்  தேவையான  வகை  செய்ய  வேண்டும்.

அத்தியாயம் – 04
பள்ளிகள்  மற்றும்  ஆசிரியர்களின்  பொறுப்புகள்

12.  இலவச  கட்டாயக்  கல்வி  வழங்குவதில்  பள்ளியின்  பொறுப்புகள்
1.  இந்தச்சட்டத்தின்  நோக்கங்கள்  நிறைவுற  ஒரு  பள்ளி  பின்வருமாறு  செயல்பட  வேண்டும்.
அ.  அரசு  மற்றும்  அரசுதவிப்  பெறும்  பள்ளிகளில்  சேர்க்கப்படும்  அனைத்து  குழந்தைகளுக்கும்  இலவச,  கட்டாயக்  கல்வி  வழங்க  வேண்டும்.
ஆ.  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்  தனது  வருடாந்திர  செலவு  ஆகியவற்றிற்கு  உட்பட்டு,  குறைந்தது  25   விழுக்காடு  அளவிலான  விகிதாசாரப்படி  சேர்க்கப்பட்ட  குழந்தைகளுக்கு  இலவச  கட்டாயக்  கல்வி  வழங்க  வேண்டும்.
இ.  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்  மற்றும்  தனித்து  வகுத்துரைக்கப்பட்ட  பள்ளிகளில்  முதல்  வகுப்பில்  குறைந்தது  25  விழுக்காடு  குழந்தைகளை  அண்டைப்  பகுதிகளிலுள்ள  நலிந்த  பிரிவுகள்  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவுகளைச்  சேர்ந்த  குழந்தைகளைக்  கண்டறிந்து  அவர்களுக்குத்  தொடக்கக்  கல்வி  முடியும்  வரையில்  இலவச,  கட்டாயக்  கல்வியை  வழங்க  வேண்டும்.
பிரிவு  2  விதி (n) ல்  குறிக்கப்பட்டுள்ள  ஒரு  பள்ளி,  பள்ளிக்கு  முந்தைய  கல்விக்காகக்  குழந்தைகளைச்  சேர்த்துக்  கொள்வது  என்பதற்கும்  பிரிவு (a),  (உ)  ஆகிய  விதிகள்  பொருந்தும்.
(2)  இலவச,  சட்டாயக்  கல்வி  வழங்குகிற  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்,  அரசாங்கத்தால்  ஒரு  குழந்தைக்கு  இவ்வளவு  என  நிர்ணயிக்கப்பட்டுள்ள  செலவுத்  தொகையை  அல்லது  குழந்தையிடமிருந்து  வசூலிக்கப்பட்ட  உண்மைத்  தொகையை,  இவற்றில்  எது  குறைவோ  அந்தத்  தொகையை,  வகுத்தரைக்கப்பட்டுள்ள  வழிமுறைகளின்படி  ஈடு  செய்யக்  கோர  முடியும்.
இவ்வாறு  ஈடு  செய்யக்கோரும்  தொகையானது,  அரசு  மற்றும்  அரசுதவிப்  பெறும்  பள்ளியில்  வரையறுக்கப்பட்டுள்ளபடி  ஒரு  குழந்தைக்கு  இவ்வளவு  என  அரசாங்கத்தால்  நிர்ணயிக்கப்பட்ட  தொகைக்கு  மேல்  இருக்கக்  கூடாது.
இலவசமாகவோ  அல்லது  சலுகை  விலையிலோ  நிலம்,  கட்டடம்,  கல்விச்  சாதனங்கள்  அல்லது  இதர  வசதிகளைப்  பெற்றுக்  கொண்டதற்காகக்  குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான  குழந்தைகளுக்கு  இலவசக்  கல்வி  வழங்கியாக  வேண்டிய  அளவு  வரையிலான  தொகையை  (அரசாங்கத்திடமிருந்து)  ஈடு  செய்யக்கோர  முடியாது.
(3)  ஒவ்வொரு  பள்ளியும்  உரிய  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்பு   கோருகிற  மேற்கண்ட  தகவல்களைத்  தரவேண்டும்.

13.  பள்ளி  சேர்க்கைக்குக்  கல்வி  கட்டணம்,  தேர்வுமுறை  கூடாது
1. எந்தப்  பள்ளியும்  ஒரு  குழந்தையைச்  சேர்க்கும்  பொழுது  அதன்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளரிடமிருந்து  எந்தவொரு  கல்விக்  கட்டணமும்  வசூலிக்கக்கூடாது.  குழந்தையை  எந்தவொரு  முன்  தேர்வு  நடைமுறைக்கும்  உட்படுத்தக்  கூடாது.
2.  எந்தவொரு  பள்ளியோ  அல்லது  நபரோ…
அ.  கல்விக்  கட்டணம்  வசூலித்தால்  வசூலிக்கப்பட்ட  கல்விக்  கட்டணத்தைப்  போல  10 மடங்கு  வரை  அபராதம்  தண்டனையாக  விதிக்கப்படும்.
ஆ.  குழந்தையைத்  தேர்வு  நடைமுறைக்கு  உட்படுத்தினால்  முதல்  தடவையாக  விதியை  மீறும்பொழுது  இருபத்து  ஐந்தாயிரம்  ரூபாய்  வரையில் அபராதம்  தண்டனையாக  விதிக்கப்படும்.  மீண்டும்  மீண்டும்  மீறும்பொழுது  ஒவ்வொரு   முறையும்  ஐம்பதாயிரம்  ரூபாய்  வரையில்  அபராதம்  விதிக்கப்படும்.

14.  பள்ளிச்   சேர்க்கைக்கான  வயது  சான்று
1.  தொடக்கக்  கல்விக்கு  குழந்தையைச்  சேர்ப்பதற்கு,  அந்த  குழந்தையின்  வயது  1986 ஆம்  ஆண்டின்  பிறப்பு  இறப்பு  மற்றும்  திருமணப்  பதிவுச்சட்ட  விதிகளின்கீழ்  வழங்கப்படும்  பிறப்புச்  சான்றிதழின்  அடிப்படையில்  அல்லது  அதுபோன்ற  இதர  ஆவணங்களின்  அடிப்படையில்  முடிவு  செய்யப்பட  வேண்டும்.
2.  வயது  சான்றிதழ்  இல்லாத  காரணத்திற்காக  எந்தவொரு  குழந்தைக்கும்  பள்ளிச்  சேர்க்கை  அனுமதி  மறுக்கப்படக்  கூடாது.

15.  பள்ளியில்  சேர்க்க  மறுத்தல்  கூடாது
கல்வி  ஆண்டு  தொடங்கும் போது  அல்லது  தீர்மானிக்கப்படும்  கால  வரையறைக்குள்  ஒரு  குழந்தைப்  பள்ளியில்  சேர்க்கப்படவேண்டும்.
நீட்டிக்கப்பட்ட  காலத்தை  ஒட்டி  பள்ளியில்  சேர்ப்பதற்கு  விண்ணப்பிக்கப்  படுமானால்  எந்தவொரு  குழந்தைக்கும்  சேர்க்கை  அனுமதி  மறுக்கப்பட  மாட்டாது.
மேலும்  நீட்டிக்கப்பட்ட  காலத்திற்குப்  பின்  சேர்க்கப்படும்  எந்தவொரு  குழந்தையும்,  அரசால்  வகுத்துரைக்கப்படும்  முறையில்  கல்வியை  முடிக்கலாம்.

16.  ஒரே  வகுப்பில்  இருக்க  வைத்தல்  மற்றும்  வெளியேற்றுவதற்குத்  தடை
ஒரு  பள்ளியில்  சேர்க்கப்படும்  எந்தவொரு  குழந்தையும்  தொடக்கக் கல்வி  முடியும்  வரையில்  தோல்வி  என்ற  பெயரில்  எந்தவொரு  வகுப்பிலும்  தொடர்ந்து  இருக்க  வைக்கப்படக்கூடாது;  மேலும்  பள்ளியிலிருந்து  வெளியேற்றவும்  கூடாது.

17.  குழந்தைக்கு  உடல்  ரீதியான  தண்டனை  அல்லது  
         மன  ரீதியான  துன்புறுத்தல்  ஏற்படுத்த  தடை
1.  எந்தவொரு  குழந்தையும்  உடல்  ரீதியான  தண்டனைக்கோ  மன  ரீதியான  துன்புறுத்தலுக்கோ  உள்ளாக்கக்கூடாது.
2.  மீறுவோர்  மீது  பணி  விதிகளின்படி  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்படும்.

18.  அங்கீகாரச்  சான்றிதழ்  பெறாமல்  எந்தவொரு  பள்ளியும்  நிறுவப்படக்கூடாது
1.  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்புகளால்  நிறுவப்பட்டு  உடமையாக்கப்பட்டுக்  கட்டுப்படுத்தப்படுகிற  பள்ளியில்லா  வேறு  எந்தப்  பள்ளியும்,  இந்தச்  சட்டம்  நடைமுறைக்கு  வரத்  தொடங்கிய  பிறகு  உரிய  முறையில்  விண்ணப்பித்து  உரிய  அதிகார  அமைப்பிடமிருந்து  அங்கீகாரச்  சான்றிதழ்  பெறாமல்  நிறுவப்படவோ,  செயல்படவோ  கூடாது.
2.  கல்வித்துறை  அதிகார  அமைப்பு,  வரையறைக்குட்பட்ட  முறையில்,  அதற்குரிய  காலத்திற்குள்,  அதற்குரிய  நிபந்தனைகளுக்கு  உட்பட்டு  அங்கீகாரச்  சான்றிதழ்  வழங்க  வேண்டும்.
வரையறுக்கப்பட்டுள்ள  நடைமுறைகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யாத  பள்ளிக்கு  அங்கீகாரச்  சான்றிதழ்  வழங்கப்பட மாட்டாது.
3.  பள்ளி  அங்கீகாரத்திற்கான  நிபந்தனைகள்  மீறப்படுமானால்  உரிய  அதிகார  நிர்வாகம்  அங்கீகாரத்தை  எழுத்துப்பூர்வ  ஆணைப்படி  விலக்கிக்  கொள்ளும்.
அங்கீகாரம்  மறுக்கப்படும்  பள்ளியில்  படிக்கும்  குழந்தைகள்  அடுத்து  எந்த  அண்டைப்  பள்ளியில்  சேர்க்கப்படுவார்கள்  என்பதற்கான  ஆணைகளும்  அந்த  ஆணையில்  சேர்க்கப்பட  வேண்டும்.
அங்கீகாரம்  கேள்விக்குள்ளாகும்  பள்ளிக்குச்  சுய  விளக்கம்  தர  வாய்ப்பளிக்காமல்  அதன்  அங்கீகாரத்தை  விலக்கிக்  கொள்ளக்  கூடாது.
4.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்படும்  தேதியிலிருந்து  பள்ளி  செயற்படக்  கூடாது.
5.  அங்கீகாரச்  சான்று  பெறாமலோ  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட  பிறகோ  பள்ளியைத்  தொடர்ந்து  நடத்துகிற  எந்தவொரு  நபர்  மீதும்  நடத்துகிற  எந்தவொரு  நபருக்கும்  ஒரு  இலட்சம் ரூபாய்  வரையில்  தண்டனை  விதிக்கலாம்.  இத்தண்டனைக்குப்  பிறகும்  தொடர்ந்து  பள்ளி  நடத்துவோர்  தொடரும்  நிலையில்  நாளொன்றுக்குப்  பத்தாயிரம்  ரூபாய்  வரை  தண்டனைத் தொகை  விதிக்கப்படும்.

19.  பள்ளிக்கான  விதிகளும்  தரங்களும்
1.  அட்டவணையில்  குறிக்கப்பட்டுள்ள  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யா  எப்பள்ளியும்  நிறுவப்பெறலுகு  உரிமை  இல்லை.  அப்பள்ளிக்கு  அங்கீகாரம்  அளிக்கப்படமாட்டாது.
2.  இச்சட்டம்  நடைமுறைக்கு  வர  தொடங்குவதற்கு  முன்பே  அட்டவணையில்  கூறப்பட்டுள்ளபடி  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யாமல்  ஒரு  பள்ளி  நிறுவப்பட்டிருக்குமானால்,  அந்தப்  பள்ளி  தனது  சொந்தச்  செலவில்  மூன்றாண்டுகளுக்குள்  விதிகளையும்  தரங்களையும்  நிறைவு  செய்வதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும்.
3.  இந்த  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்ய  தவறும்  பள்ளியின்  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்படும்.
4.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட்ட  தேதியிலிருந்து  பள்ளி  இயங்க  அனுமதியில்லை.
5.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட்ட பிறகு  பள்ளியைத்  தொடர்ந்து  நடத்துகிற  எந்தவொரு  நபரும்,  ஒரு  இலட்சம்  ரூபாய்  வரையில்  தண்டனைத்  தொகைக்கு  உட்படுத்தப்படுவார்.  இந்த  விதி  மீறல்  தொடரும்  நிலையில்,  மீறல்  தொடரும்  நாளொன்றுக்கு  பத்தாயிரம்  ரூபாய்  அபராதம்  விதிக்கப்படும்.

20.  அட்டவணையைத்  திருத்துவதற்கான  அதிகாரம்
மத்திய  அரசாங்கம்,  அறிவிக்கை  மூலமாக,  எந்தவொரு  நடைமுறை  அல்லது  தரங்களைச்  சேர்த்தல்  அல்லது  நீக்குதல்  மூலமாக  அட்டவணையில்  திருத்தம்  செய்யலாம்.

21.  பள்ளி  நிர்வாகக்  குழு
(1)  உள்ளாட்சி  நிர்வாகத்தின்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்,  குழந்தைகளின்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்  மற்றும்  ஆசிரியர்கள்  கொண்ட  பள்ளி  நிர்வாகக்  குழு  ஒன்றை  அமைக்க  வேண்டும்.
உறுப்பினர்கள்
குழு  உறுப்பினர்களில்  நான்கில்  மூன்று  பகுதியினர்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்களாக  இருக்க  வேண்டும்.
ஒதுக்கப்பட்ட  மற்றும்  வறுமைக்  கோட்டிற்குக்  கீழ்  வாழும்  பிரிவுகளைச்  சார்ந்த  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்களுக்கு  அக்குழுவில்  விகிதாச்சார  முறைப்படி பிரதிநிதித்துவம்  அளிக்கப்பட  வேண்டும்.
இக்குழுவின்  உறுப்பினர்களில்  ஐம்பது  விழுக்காட்டினர்  பெண்களாக  இருக்க  வேண்டும்.
(2) பள்ளி  நிர்வாகக்  குழுவின்  பணிகள்
அ.  பள்ளியின்  செயல்பாடுளைக்  கண்காணித்தல்.
ஆ.  பள்ளி  மேம்பாட்டுத்திட்டம்  தயாரித்தல்,  பரிந்துரைத்தல்
இ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்பு  அல்லது  வேறு  மூலங்களிலிருந்து  கிடைக்கும்  நிதி  ஒதுக்கீடுகள்  பயன்படுத்தப்  படுவதைக்  கண்காணித்தல்  மற்றும்
ஈ.  விதிக்கப்  பெறும்  ஏனைய  பணிகளையும்  செய்தல்.

22.  பள்ளி  மேம்பாட்டுத்  திட்டம்
1.  ஒவ்வொரு  பள்ளி  நிர்வாகக் குழுவும்  பள்ளி  மேம்பாட்டுத்  திட்டம்  ஒன்றைத்  தயாரிக்க  வேண்டும்.
2.  இம்மேம்பாட்டுத்  திட்டமே  உரிய  அரசும்  உள்ளாட்சி  அமைப்பும்  நிதி  ஒதுக்கீடு  செய்வதற்கான  அடிப்படையாக  அமையும்.

23.  ஆசிரியர்கள்  நியமனத்திற்கான  தகுதிகளும்  நிபந்தனைகளும்
1.  மத்திய  அரசின்  அதிகாரப்பூர்வ  அறிக்கையின்படி  அதிகாரம் அளிக்கப்பட  கல்வித்துறை  அமைப்பு  வகுத்துள்ள  குறைந்தபட்ச  தகுதிகள்  உள்ள  எந்த  ஒரு  நபரும்  ஆசிரியராக  நியமிக்கப்படத்தகுதி  உள்ளவராவார்.
2.  ஒரு  மாநிலத்தில்  ஆசிரியர்  பயிற்சி  அளிப்பதற்குப்  போதுமான  நிறுவனங்களும்  குறைந்தபட்ச  தகுதிகள்  கொண்ட  ஆசிரியர்களும்  போதுமான  எண்ணிக்கையில்  இல்லாத  நிலையில்,  மத்திய  அரசாங்கம்  ஆசிரியர்  நியமனத்திற்கான  குறைந்தபட்சத்  தகுதிகளைத்  தளர்த்தலாம்.
குறிப்பிடப்பட்ட  குறைந்தபட்சத்  தகுதிகள்  ஒரு  ஆசிரியருக்கு  இல்லை  என்றால், அவர்  ஐந்தாண்டுகளுக்குள்  குறைந்தபட்சத்  தகுதிகளைப்  பெற  வேண்டும்.
(3) ஆசிரியர்களுக்கு  வழங்கப்படும்  ஊதியம்,  படிகள்  அவரது  பணிமுறைகள்  மற்றும்  பணி  நிபந்தனைகள்  ஏற்கனவே  விதிக்கப்பட்ட  வகையில்  அமையும்.

24.  ஆசிரியர்களின்  கடமைகளும்  குறை  தீர்ப்பும்  ஆசிரியரின்  பணிகள்
அ.  பள்ளிக்குத்  தொடர்ந்தும்  உரிய  நேரப்படியும்  வருதல்.
ஆ.  பாடத்திட்டத்தை  முழுமையாக  நடத்தி  முடித்தல்.
இ.  முழு  பாடத்திட்டத்தையும்  வரையறுக்கப்பட்ட  கால  அளவுக்குள்  முடித்தல்;
ஈ.  ஒவ்வொரு  குழந்தையின்  கற்றல்  திறனையும்  மதிப்பிடுதல்,  தேவைப்படுமானால்  கூடுதல்  பயிற்சி  வழங்கி  ஈடுசெய்தல்;
உ.  பெற்றோர்  மற்றும்  பாதுகாப்பாளர்களுடன்  சந்திப்புக்  கூட்டங்களைத்  தொடர்ச்சியாக  நடத்தி,  குழந்தையின்  தொடர்ச்சியான  வருகை,  கற்றல்  திறன்,  கற்றலில்  ஏற்பட்டுள்ள  முன்னேற்றம்  மற்றும்  இதர  பொருத்தமான  தகவல்களைத்  தெரியவைத்தல்;
ஊ.  வகுக்கப்படும்  இதர  பணிகளையும்  செய்தல்
எ.  பள்ளியில்  வரையறுக்கப்பட்ட  கடமைகளை  ஒரு  ஆசிரியர்  செய்யத்  தவறுவாரானால்  பணிவிதிகளின்  கீழ்  ஒழுங்கு  நடவடிக்கைக்கு  உட்படுத்தப்படுவார்.
அவ்வாசிரியர்  மீது  ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு  முன்பாக  அவர்  தரப்பு  வாதத்தைக்  கேட்பதற்கும்  வாய்ப்பு  அளிக்க  வேண்டும்.
ஏ.  ஆசிரியருக்குரிய  குறைகள்  உரிய  முறையில்  தீர்க்க  வழிகாணப்படும்.

25.  மாணவர்  ஆசிரியர்  விகிதம்
1.  இந்த  சட்டம்  நடைமுறைக்கு  வர  தொடங்கிய  6  மாதங்களுக்குள்  அட்டவணையில்  வரையறுக்கப்பட்டுள்ளபடி  ஒவ்வொரு  பள்ளியிலும்  மாணவர் – ஆசிரியர்  விகிதம்  முறையாக  இருப்பதை  அரசு அல்லது  உள்ளாட்சி  அமைப்புகள்  உறுதிப்படுத்த  வேண்டும்.
2.  மாணவர் -  ஆசிரியர்  விகிதத்தைப்  பராமரிக்க  ஒரு  பள்ளியில்  நியமிக்கப்படும்  எந்தவொரு  ஆசிரியரும்  வேறு  பள்ளியிலோ  அல்லது  அலுவலகத்திலோ  பணியாற்றும்படி  செய்யக்கூடாது;  கல்வி  சாரா  வேறு  பணிகளுக்கு  அனுப்பக்கூடாது.

26.  ஆசிரியர்  காலி  பணியிடங்களை  நிரப்புதல்
அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்புகளால்  நேரடியாகவோ  மறைமுகமாகவோ  நிறுவப்பட்டு,  உடமையாக்கப்பட்டு  கட்டுப்பாட்டிலிருக்கிற  அல்லது   நிதி  வழங்கப்படுகிற  ஒரு  பள்ளி  தொடர்பான  நியமன  அதிகாரம்  கொண்ட  அமைப்பு,  அந்தப்பள்ளியில்  காலியாகும்  ஆசிரியர்  பணியிடங்கள்  எண்ணிக்கை  அனுமதிக்கப்பட்ட  மொத்த  ஆசிரியர்  பணியிடங்களின்  எண்ணிக்கை  10  விழுக்காட்டிற்கு  மேல்  சொல்லாமல்  இருப்பதை  உறுதிப்படுத்த  வேண்டும்.

27.  கல்விசாரா  நோக்கங்களுக்கு  ஆசிரியர்களை  அனுப்ப  தடை
மக்கள்தொகை  கணக்கெடுப்பு,  பேரிடர்  நிவாரண  பணிகள்  அல்லது  உள்ளாட்சி   அமைப்புக்கோ  மாநில  சட்டமன்றத்துக்கோ  நாடாளுமன்றத்துக்கோ  நடைபெறும்  தேர்தல்கள்  தொடர்பான  பணிகள்  தவிர  வேறு  கல்வி  சாராத  எந்தப்  பணிக்கும்  எந்த  ஒரு  ஆசிரியரும்  அனுப்பப்பட மாட்டார்கள்.

28.  ஆசிரியர்களின்  தனிப்பட்ட  பயிற்சி  அளிக்க  தடை
எந்தவொரு  ஆசிரியரும்  தனிப்பயிற்சி  (டியூசன்)  நடத்த அனுமதியில்லை.

அத்தியாயம் – 5
பாடத்திட்டமும்  தொடக்கக்  கல்வியை  முடித்தலும்

29.  பாடத்திட்டம்  மற்றும்  மதிப்பீட்டு  நடைமுறைகள்
1.  தொடக்கக்  கல்விக்கான  பாடத்திட்டத்தையும்  மதிப்பீட்டு  முறையையும்  உரிய  கல்வித்துறை  அதிகார  அமைப்பு  வகுத்தளிக்கும்.
2.  பாடத்திட்டத்தையும்  மதிப்பிடும்  நடைமுறையையும்  வகுக்கிற  கல்வித்  துறை  அதிகார  அமைப்பு   பின்வரும்  அம்சங்களைக்  கருத்தில்  கொள்ளும்.
3.  அரசியல்  சாசனத்தில்  கூறப்பட்டுள்ள  மதிப்பிடுகளுக்கு  ஒத்திசைந்ததாக  இருத்தல்.
4.  குழந்தையின்  முழு  வளர்ச்சி
5.   குழந்தையின்  அறிவு  மற்றும்  திறனை  வளர்த்தல்
6.  குழந்தைக்கு  இணக்கமான  முறையிலும்,  குழந்தையை  மையப்படுத்திய  முறையிலும்  செயல்வழி  கற்றல்,  கண்டறிதல்  மற்றும்  ஆராய்ந்தறிதல்  ஆகியவற்றை  வளர்த்தல்.
7.  பயிற்றுமொழி  என்பது  கூடிய  வரையில்  குழந்தையின்  தாய்மொழியிலேயே  இருத்தல்.
8.  குழந்தை  அச்சமின்றியும்,  மன  உளைச்சல்  இன்றியும் , பதட்டமின்றியும்  பயிலச்  செய்தல்,  குழந்தைத்  தன்  கருத்துகளைச்  சுதந்திரமாக  வெளிப்படுத்த  உதவுதல்.
9.  குழந்தையின்  அறிவு,  புரிதல்  மற்றும்  அதனை  செயல்படுத்தும்  திறன்  ஆகியவற்றை  விரிவாகவும்  தொடர்ச்சியாகவும்  மதிப்பிடுதல்.

30.  தேர்வு  மற்றும்  படிப்பை  முடிப்பதற்கான  சான்றிதழ்
1.  தொடக்கக்  கல்வியை  முடிக்கும்  வரையில்  எந்தவொரு   குழந்தையும்  எந்தவொரு  வாரிய (போர்டு)  தேர்வையும்  எழுதி  தேர்ச்சி  அடைய  வேண்டிய  அவசியமில்லை.
2.  தொடக்கக்  கல்வியை  முடிக்கிற  அனைத்துக்  குழந்தைக்கும்  சான்றிதழ்  வழங்கப்படும்.

அத்தியாயம் – 6
குழந்தை  உரிமைப்  பாதுகாப்பு

31.  குழந்தையின்  கல்வி  உரிமையைக்  கண்காணித்தல்
1.  தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அல்லது  பிரிவு  17ன்  கீழ்  உருவாக்கப்படும்  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அவைகளுக்கு  நிர்ணயிக்கப்பட்ட  பணிகளோடு  பின்வரும்  பணிகளையும்  மேற்கொள்ளும்.
அ.  இந்தச்  சட்டத்தால்  அல்லது  இந்த  சட்டத்தின்  கீழ்  வழங்கப்பட்ட  பாதுகாப்பு  அம்சங்களைப்  பரிசீலித்தல்,  மறு  ஆய்வு  செய்தல்,  அவற்றைப்  பயன்  தரும்  வகையில்  செயல்படுத்துவதற்கான  நடவடிக்கைகளைப்  பரிந்துரைத்தல்.
ஆ & இ.  புகாரின்  அடிப்படையில்  உரிய  நடவடிக்கை  எடுத்தல்.
2.  குழந்தையின்  இலவச  கட்டாயக்  கல்வி  தொடர்பான  எந்தவொரு  பிரச்சனையும்  விசாரிக்கிற  மேற்படி  ஆணையங்களுக்குக்  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையங்கள்  சட்டத்தின்  பிரிவு  14,  24  ஆகியவற்றின்  கீழ்  அவற்றுக்கு  வழங்கப்பட்டுள்ள  அதே  அதிகாரங்கள்  இருக்கும்.
3.  ஒரு  மாநிலத்தில்  மாநில  குழந்தைகள்  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அமைக்கப்படாத  நிலையில்,  உரிய  மாநில  அரசானது  வரையறுக்கப்பட்டுள்ள  செயல்பாடுகளை  மேற்கொள்ளும்  நோக்கத்திற்காக  வகுத்துரைக்கப்படும்  நடைமுறைகள்  மற்றும்  நிபந்தனைகளுக்கு உட்பட்டு  ஒரு  ஆணையத்தை  அமைக்க  வேண்டும்.

32.  குறை  தீர்ப்பு
1.  இந்தச்  சட்டத்தின்  கீழ்  ஒரு  குழந்தையின்  உரிமை  தொடர்பாக  எவருக்கேனும்  ஏதேனும்  குறை  இருக்குமானால்  அவர்  அதனை  அதிகார  எல்லைக்குட்பட்ட  உள்ளாட்சி  நிர்வாகத்திற்கு  எழுத்துப்பூர்வமான  புகாராக  அளிக்கலாம்.
2.  இந்தப்  புகாரைப்  பெற்றுக்  கொண்டபின்,  உள்ளாட்சி  நிர்வாகமானது,  சம்பந்தப்பட்டவர்  தரப்பு  வாதத்தைக்  கேட்பதற்கு  நியாயமான  வாய்ப்பு  வழங்கப்பட்ட  பின்பு  மூன்று  மாத  காலங்களுக்குள்  இதுகுறித்து  முடிவு  செய்யும்.
3.  உள்ளாட்சி  நிர்வாகத்தின்  முடிவால்  பாதிக்கப்படக்  கூடிய  எந்தவொரு  நபரும்  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையத்திற்கு  மேல்  முறையீடு  செய்யலாம்.
4.  மேல்  முறையீடு  தொடர்பாக  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அல்லது  ஏனைய  நிர்வாக  அமைப்புகள்  உரிய  முடிவினை  எடுக்கும்.

33.  தேசிய  ஆலோசனைக்  குழு  அமைத்தல்
1.  தொடக்கக்   கல்வித்  துறையிலும்  குழந்தை  மேம்பாட்டிலும்  அறிவும்  அனுபவமும்  உள்ள  நபர்களைத்  தெரிவுச்  செய்து  ஒரு  தேசிய  ஆலோசனைக்  குழுவை  அமைக்க  வேண்டும்.  இவர்கள்  எண்ணிக்கை  15 பேர்களுக்கு  மிகாமல்  இருக்க  வேண்டும்.
2.  சட்டத்தின்  விதிகளைப்  பயன்  விளைவிக்கும்  வகையில்  செயல்படுத்துவதற்கான  ஆலோசனைகளை  மத்திய  அரசாங்கத்திற்கு  வழங்குவதே  இக்குழுவின்  செயற்பாடாகும்.
3.  தேசிய  ஆலோசனைக்  குழு  உறுப்பினர்கள்  நியமனம்,  படிகள்  மற்றும்  இதர  நடைமுறைகள்  மற்றும்  நிபந்தனைகள்  ஆகியவை  வகுத்துரைக்கப்படும்  வகையில்  முடிவு  செய்யப்படும்.

34.  மாநில  ஆலோசனைக்  குழு
1.  மாநில  அரசு,  குழந்தை  மேம்பாட்டிலும்  அறிவும்  நடைமுறை  அனுபவம்  உள்ள   எண்ணிக்கையில்  15 பேர்  மிகாத  உறுப்பினர்களைக்  கொண்ட  ஒரு  மாநில  ஆலோசனைக்  குழுவை  அமைக்க  வேண்டும்.
2.  கல்வி  உரிமைச்  சட்டத்தின்  விதிகள்  முறையாக  செயற்படுத்துவதற்கான  ஆலோசனைகளை  மாநில  அரசுக்கு  வழங்குவதே  மாநில  ஆலோசனைக்  குழுவின்  செயற்பாடாகும்.
3.  இக்குழு  உறுப்பினர்களின்  நியமனம்,  படிகள்  மற்றும்  இதர  நடைமுறைகள்,   நிபந்தனைகள்  ஆகியவை  ஏற்கனவே  விதிக்கப்பட்ட  வகையில்  முடிவுச்  செய்யப்படும்.

அத்தியாயம் – 7
இதர  அம்சங்கள்
35.  ஆணைகள்  வெளியிடும்  அதிகாரம்
இந்தச்  சட்ட  விதிகளைச்  செயல்படுத்தும்  நோக்கத்திற்காக
1.  உரிய  அரசுகளுக்கு,  உள்ளாட்சி  அமைப்பிற்கு  உரிய   வழிகாட்டுதல்களை  மத்திய  அரசு  வழங்கலாம்.

(01.04.2010  முதல்  இச்சட்டம் நடைமுறைக்கு  வந்துள்ளது)
நன்றி : மனித  உரிமைக்  கல்வி  நிறுவனம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (2009)-ஐ அமல் படுத்தும் விதமாக சமீபத்தில் தமிழக அரசு ஒரு அரசானையை வெளியிட்ட்து. 
இதில் தனியார் பள்ளிகளில் 25% சதவீத ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளையும், முக்கியத் தேதிகளையும் குறிப்பிட்டிருந்தது. 
இதன்படி ஒவ்வொரு வருடமும் கீழ்குறிப்பிட்ட தேதிகளில் ஒவ்வொரு பணியும் முடிக்கப்படவேண்டும்.
1. ஒவ்வொரு பள்ளியும் தன் தொடக்க வகுப்புகளில் எவ்வளவு மொத்த காலியிடங்கள் உள்ளன என்பதை தயார் செய்ய வேண்டும்
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2-ம் தேதி


2. அரசாணை No.9 பள்ளிக் கல்வித் துறை தேதி:18.01.2011-  குறிப்பிட்டுள்ளபடி 25% ஒதுக்கீடு தொடர்பான காலியிடங்கள் எத்தனை என்பதை தனி பதிவேட்டில் குறிப்பிட்டு மாவட்ட குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2-ம் தேதி


3. மேற்கண்ட 25% காலியிடங்கள் எத்தனை என்பதை ஒவ்வொரு பள்ளியும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கவேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2-ம் தேதி


4. சிறுபான்மை தனியார் பள்ளி நீங்களாக அனைத்துத் தனியார் பள்ளிகளும் 25% ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் மே 2-ம் தேதி


5. விண்ணப்பங்கள் வழங்குதல்
ஒவ்வொரு வருடமும் மே 3-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை


6. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்க கடைசி நாள்(விண்ணப்பங்கள் பெற்றுக் கொண்டதிற்கான ஒப்புகைச் சீட்டு கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்)
ஒவ்வொரு வருடமும் மே 9-ம் தேதி மாலை 5 மணிக்குள்


7. தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான மாணவர்கள் பட்டியல் மற்றும் தகுதியிழந்த மாணவர்கள் பட்டியல் அதற்குரிய காரணங்களோடு வெளியிடுதல்
ஒவ்வொரு வருடமும் மே 11ம் தேதி மாலை 5 மணிக்குள்


8. தகுதியான மாணவர்கள் 25% சதவீததிற்கு அதிகமாக இருப்பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுடைய பெற்றோர் அவர்களுடைய விருப்பத்தின் பெயரில் அனுமதிக்கப்படுவர்.
ஒவ்வொரு வருடமும் மே 14ம் தேதி காலை 10.30  மணிக்குள்


9. மேற் சொன்ன நடைமுறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் பெயர் பட்டியல் 10 சதவீத காத்திருப்போர் பட்டியலுடன் வெளியிடப்படவேண்டும்.
ஒவ்வொரு வருடமும் மே 14ம் தேதி மதியம் 2 மணிக்குள்


10. அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்
ஒவ்வொரு வருடமும் மே 20ம் தேதிக்குள்.

குறிப்பு: இந்த வருடத்தில் (2015) ஜூன் மாதம் 15ம் தேதிவரை        
                                                           குழந்தைகளை இத்திட்டத்தி கீழ் சேர்க்கலாம்.

விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.






கேஸ் சிலிண்டர் விபத்து , இழப்பீடு


கேஸ் சிலிண்டர் விபத்து , இழப்பீடு - வழிகாட்டுதல்

உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !(பாரதி தம்பி)
*********************************************************
'நாம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும் சேர்த்துதான் கட்டுகிறோம். எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இன்ஷூரன்ஸைப் பயன்படுத்தி 40 லட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு பெற முடியும். ஆனால், இந்தச் செய்தியை இன்ஷூரன்ஸ் நிறுவனமோ, கியாஸ் நிறுவனமோ மக்களுக்குச் சொல்வது இல்லை!’ இப்படி ஒரு செய்தி குபீரெனப் பரவுகிறது. அது உண்மையா? 

உண்மைதான்! ஆனால், முழு உண்மை அல்ல. எரிவாயு இணைப்பை நாம் பெறும்போதே, ஒவ்வோர் இணைப்பின் மீதும் இரண்டு வகையான இன்ஷூரன்ஸ் எடுக்கப்படுகின்றன. ஒன்று, சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் எடுப்பது; மற்றொன்று நமது கியாஸ் ஏஜென்சி எடுப்பது. இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் தொகையை, கியாஸ் ஏஜென்சிகளும் கியாஸ் நிறுவனங்களுமே செலுத்திவிடும்; வாடிக்கையாளர்களாகிய நாம் செலுத்தவேண்டியது இல்லை.

ஒருவேளை கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதற்கான தொகையை இன்ஷூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் இது பொருந்தும். இதன்படி, தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரையிலும், மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரையிலும், உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக இழப்பீடு பெற முடியும். இந்த இழப்பீட்டுக்கான உச்சவரம்பு எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இப்படி ஒரு இன்ஷூரன்ஸ் இருப்பது குறித்து, கியாஸ் ஏஜென்சிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் மக்களுக்கு எந்தத் தகவலும் சொல்வது இல்லை. இது தொடர்பான விழிப்புஉணர்வும் மக்களிடம் இல்லை. இதனால் கியாஸ் சிலிண்டர் விபத்துக்கள் எத்தனையோ நடந்திருந்தும், கடந்த 20 ஆண்டுகளில் ஒரு கிளெய்ம்கூட செய்யப்படவில்லை. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய், பிரீமியம் என்ற பெயரில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குச் செல்கிறது.



அதே நேரம், இந்த முறையில் கிளெய்ம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றன. விபத்து ஏற்பட்டதும் உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள், சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனத்திடமும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமும் தெரிவிப்பார்கள். பிறகு, அதிகாரிகள் குழு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அதுவரையில் விபத்து நடந்ததற்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்க வேண்டும். யாருக்கேனும் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை இணைக்க வேண்டும். விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், அதற்கான மருத்துவமனை/ மருந்துப் பொருட்களின் ரசீதுகளை இணைக்க வேண்டும். விபத்தின் மூலம் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும். ஆனால், இவையெல்லாம் விபத்துக்குப் பிறகான நடைமுறை.

விபத்துக்கு முன்னரே நாம் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ஏகமாக இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். அப்படி சான்று பெற்றிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. நமது பெயரில் நாம் பெற்ற கியாஸ் சிலிண்டராக இருக்க வேண்டும். அவசரத்துக்குக் கடன் வாங்கிய சிலிண்டரில் விபத்து ஏற்பட்டால், கிளெய்ம் செய்ய முடியாது. இப்படிப் பல நிபந்தனைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நிறைவேற்றி இருந்தால் மட்டுமே, விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியும்.

'ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற பொருட்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்’ என்ற முதல் இரண்டு விஷயங்களிலேயே நம் ஆட்கள் அத்தனை பேரும் ஃபெயில் ஆகிவிடுவார்கள். இத்தனை சிக்கலான நிபந்தனைகளை வைத்துக்கொண்டு, அதை மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

'இது தொடர்பாக விளம்பரங்கள் செய்வது இல்லை என்பது உண்மைதான். அதற்காக இதை நாங்கள் மறைக்கிறோம் எனச் சொல்ல முடியாது. எல்லா விவரங்களும் எங்கள் இணையதளங்களில் வெளிப்படையாக இருக்கின்றன’ என்கிறார்கள் எரிவாயு நிறுவன ஊழியர்கள்.

கியாஸ் சிலிண்டர் விபத்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கின்றன. சிலிண்டர்களை எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கையாள்வது இதற்கு முக்கியக் காரணம் என்றால், காலாவதியான சிலிண்டர்கள் இன்னொரு காரணம்.

அது என்ன காலாவதியான சிலிண்டர்?

'இந்த சிலிண்டர், எரிவாயு நிரப்பும் தரத்துடன்தான் இருக்கிறது’ என, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு சிலிண்டரும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்தச் சோதனையில் சிலிண்டரில் ஏதேனும் குறை இருப்பது தெரியவந்தால், அது சரிசெய்யப்பட்டு இந்தியத் தர நிர்ணய அமைப்பு (ஙிuக்ஷீமீணீu ஷீயீ மிஸீபீவீணீஸீ ஷிtணீஸீபீணீக்ஷீபீs) சான்று அளித்த பின்னரே, மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும். ஒரே சிலிண்டரில் இரண்டாவது முறையாகக் குறை இருப்பது கண்டறியப்பட்டால், அது பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும்.

சிலிண்டரின் தலைப்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கின்றன அல்லவா? அதில் ஒரு கம்பியின் பக்கவாட்டில், சிலிண்டரின் எடை விவரங்கள் இருக்கும். இன்னொன்றில், காலாவதி தேதி குறித்த எண்கள், சுருக்கெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையில் கி, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் ஙி, ஜூலை முதல் செப்டம்பர் வரை சி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் ஞி. உதாரணத்துக்கு உங்கள் சிலிண்டரில் கி–15 என எழுதப்பட்டிருந்தால், அதன் எக்ஸ்பயரி தேதி மார்ச் 2015 என அர்த்தம். இந்தத் தேதிக்குப் பிறகு சிலிண்டரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. கியாஸ் கசிவு முதல் சிலிண்டர் வெடிப்பது வரை பல அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகம். காலாவதித் தேதியைக் கடந்து இருந்தாலோ, மிக நெருக்கத்தில் இருந்தாலோ,  அந்த சிலிண்டரை நிராகரிக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு!

காப்பீடு பெற...

சென்னைப் புறநகர் பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''கியாஸ் ஏஜென்சி தரப்பில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். கியாஸ் கம்பெனி தரப்பில் எடுக்கணீப்படும் இன்ஷூரன்ஸ் தனி. என் அனுபவத்தில் இதுவரை யாரும் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணியது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அடுப்பு, லைட்டர், டியூப் போன்றவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக எங்கள் பிரதிநிதிகள் சென்றால் மக்கள் யாரும் ஒத்துழைப்பதும் கிடையாது. ஒருவேளை இனிமேல் யாரேனும் இப்படி தரச் சான்றிதழ் பெற்று உரிய முறையில் பராமரித்தால், ஏதேனும் விபத்து ஏற்படும்போது இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம்'' என்றார்.

நன்றி : விகடன் செய்திகள் - 07.05.2015

Monday, May 4, 2015

தமிழ்நாட்டில் மத்திய பல்கலைக்கழகம்


தமிழ்நாட்டில் மத்திய பல்கலைக்கழகம்
*************************************************
தமிழ்நாட்டிலும் இருக்கிறது மத்திய பல்கலைகழகம்..!
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் அடுத்த என்ன படிக்கலாம் என பெற்றோர்களும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதை பிள்ளைகளும் இணையத்தையும், சுற்றத்தாரையும் நாடி தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
“இந்த கல்லூரி சிறந்தது, அந்த கல்வி நிறுவனம் சூப்பர்...இங்கே படித்தால் உடனே வேலை கிடைக்கும், அங்கு படித்தால் எல்லோரும்  கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகலாம்...' என விளம்பரங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, நாம் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வழக்கம்போல் அதிகம் பேரின் விருப்பம் டாக்டர், என்ஜினியர் கோர்ஸ்கள்தான். ஆனால், இவற்றையும் தாண்டி பட்டப்படிப்பு என ஒன்று இருக்கிறது அல்லவா ? அதற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது - தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகம் ( CUTN - Central University of Tamil Nadu ).

அப்படின்னா என்ன...அதுல என்ன ஸ்பெஷல் ? 

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 42 மத்திய பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT போன்ற முக்கிய கல்விநிறுவனங்கள் வரிசையில் மத்திய பல்கலைகழகமும் இடம் பெறுகிறது.  இதில் படித்து நாம் பெறுகிற பட்டம் என்பது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய பல்கலைகழகம் தமிழகத்தில் அமைந்திருப்பது பலரும் அறியாததாக இருப்பதுதான் அறியாமையின் உச்சம். ஏனெனில், தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது தமிழக மக்கள் கல்வியில் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிற காரணத்தினால். ஆனால், இங்கு படிக்கக் கூடிய தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  மற்ற மாநில மாணவர்கள் அதிகம் படித்தாலும் அவர்களோடு போட்டி போட்டு படிக்கும் திறன் படைத்த தமிழ் மாணவர்கள் இதை பற்றி அறியாமலே பல்வேறு வகையில் தங்கள் வட்டத்தை சுருக்கி கொள்கின்றனர்.

விவசாயத்தை பெரும்பாலும் நம்பி இருக்கக் கூடிய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடியது தான் இந்த மத்திய பல்கலைக்கழகம் (CUTN - Central University of Tamil Nadu ) . திருவாரூருக்கு செல்லக் கூடிய மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றாங்கரை ஓரம் அமைந்திருக்கக் கூடியது சியுடிஎன். திருவாரூர் மாவட்டத்தில் நீலக்குடி, நாகக்குடி எனும் இரு கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது சியுடிஎன். சுற்றுப்புற பகுதிகளுக்கு ஒத்துவராத, உயர் தர வடிவமைப்பிலான கட்டடங்கள், சியுடிஎன் என காட்டுகின்றன.
சுற்று வட்டாரத்தில் இப்படி ஒரு வடிவமைப்பு எங்கும் காணப்படவில்லை. செக் போஸ்ட் தாண்டி நேரே உள்ளே சென்றால், அங்கே பறந்து நிற்கிறது நிர்வாக அலுவலகம். அதை சூழ்ந்து நிற்கும் கட்டடங்கள் என்ன? அங்கே என்ன படிக்கலாம்? அதனால் என்ன வாய்ப்புகள் கிடைக்கிறது?
ஹாஸ்டல் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? போன்ற முழு விவரங்களையும் அறிந்துகொள்ள உதவினர் இதன் துணைவேந்தர் (பொ) முனைவர் பேராசிரியர் செங்கதிர் மற்றும் ஊடகம் & தகவல் தொடர்பியல் துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜமும் வந்தார்.

பல்கலைகழகத்தில் ஹாஸ்டல் வசதி உள்ளது.  இதில் இரண்டு பேருக்கு ஒரு அறை எனும் விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், வெந்நீர் குளிர் நீர் என வகைபடுத்தி தண்ணீர் தாரளமாக கிடைக்கிறது.  உணவுக்கு தட்டுப்பாடு இல்லை.  ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு மெஸ் தனியாக வைக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் வாசிகளுக்கு உணவுக்குத் தான் கொஞ்சம் செலவாகிறது. மற்றபடி செலவு இங்கு குறைவாக இருக்கிறது. பிஹெச்டி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு தனித் தனியாக வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திருமணம் ஆனவர்கள் தங்கள் துணைகளுடன் இருந்தும் படிக்கலாம் என்ற ஒரு முறையும் பின்பற்றப்படுகிறது.

சியுடிஎன் கேம்பஸ்ஸில் வைபை இணைய வசதி  தரப்பட்டுள்ளது. பல்கலை முழுமையும் வெளிச்சமான காற்றோட்டமான அறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் முறை பின்பற்றப்படுகிறது. அறிவியல் ஆய்வகங்கள் முழு வசதிகளுடான் தரப்பட்டுள்ளன. இலவச இணைய வசதி நூலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடம் தொடர்பான புத்தகங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு உள்ளன. இரவு பகல் என வித்தியாசம் பாராது ஏதேனும் ஒரு நிகழ்வு பல்கலை வளாகத்தினுள் நடந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. 'அல்லைட்' எனும் துணைப் பாடங்களை தானே தேர்ந்தெடுக்கும் முறையும் இங்கு மாணவர்களுக்கு தரப்பட இருக்கிறது. இன்னும் பல்கலைகழகத்தில் பொறியியல் கொண்டு வரவில்லையே என கேட்டதற்கு, அதுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறதே என பதில் வருகிறது. இந்த வருடத்திலிருந்து எம்.டெக் கோர்ஸ்கள் கூட ஆரம்பமாகிறது.

பல்கலைகழகம் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குவதால் ஏராளமான வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பெறும் செம்மொழி தமிழ் எம் ஏ படிப்பிறகு குறிப்பிட்ட அளவு ஸ்டைபண்ட் வழங்கப்பெறுகிறது. இது மட்டுமில்லாமல் ஆய்வக வசதிகள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. எம் ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் துறைக்கு அதிகமான தொழில் நுட்பபொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மாணவர்களால் இலகுவாக கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. கேமரா, வீடியோ மிக்சர் என பல வகைகளிலும் இந்த துறை மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜம் தெரிவித்தார்.

தினமும் ஏதாவது கருத்தரங்கம் (கான்பரன்ஸ்) நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு இருக்கக் கூடிய பேராசிரியர்கள் அனைவரும் கல்வியில் முதன்மை இடம் பிடித்துள்ளவர்கள். வெளி நாட்டில் பிஎஹ்டி க்கு மேலே படித்தவர்களும் இங்கு வேலை பார்கின்றனர். வெளி நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எளிதில் கிட்டுகிறது.  எல்லா மாநிலத்து மாணவர்களும் இங்கு படிப்பதால் கலாச்சார ஒற்றுமை மேம்படுகிறது. பயிற்று மொழி ஆங்கிலமாக உள்ளது.

இதில் என்ன கோர்ஸ் இருக்கிறது பார்க்கும் போது, ஐந்து வருட எம்.எஸ்ஸி இன்டக்ரேட்டட் பிரிவும், இரண்டு வருட எம்.ஏ பிரிவும் இரண்டு வருட எம்.எஸ்ஸி பிரிவும் பிஎஹ்டி படிப்பும் இருக்கிறது. சியுடிஎன் பின் வரும் நிறுவனங்களுடன் சில கற்றல் நிலைகளை ஒப்பந்த முறையில் கொண்டு சில படிப்புகளை வழங்குகிறது, அவை: Madras School of Economics (MSE) , Central Institute of Classial Tamil   (CICT) National Law School of India (NLSIU) and Tamil Nadu Agricultrual University (TNAU).

 
என்னவெல்லாம் கோர்ஸ்கள் இருக்கின்றன? 


Five Years M.Sc  Integrated Courses (after 10+2)

                Integrated MSc. Chemistry

                Integrated MSc. Economics *

                Integrated MSc. Life Sciences

                Integrated MSc. Mathematics

                Integrated MSc. Physics


Two Year M.Sc Couses (after graduation)

               MSc. Chemistry

               MSc General Economics**

               MSc Financial Economics**

              MSc Acturarial Economics**

              MSc Environmental Economics**

              MSc Aplied Quantitative Finance **



Two Year M.Tech Courses *** ( after graduation)

M.Tech Material Science & Nano Technology

M.Tech Energy & Environmental Technology



Two Year M. A Courses ( after graduation)


M.A English Studies

M.A HIndhi

M.A Media & Communication

M.A Social Work

M.A Tamil



Ph D ( after post graduation)

Ph D in Chemistry

Ph D in Economics

Ph D in English

Ph D in Lifescience

Ph D in Mathematics

Ph D in Physics

Ph D in Tamil

    

*Academic Mentoring by Madras School of Economics, Chennai

**  Conducted at Madras School of Ecoonomics (MSE) Chennai

*** Programmes provisionallu proposed from the academic year 2015-2016



 இங்கு படிக்கும் அனுபவம் எப்படி என சில மாணவர்களிடம் கேட்டபோது...

பிந்துஜா ( எம்.ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் இரண்டாமாண்டு, கேரளா)

கேரள மத்திய பல்கலை கழகத்தில் படிக்க முயற்சி செய்தேன்.  ஆனால், சியுடிஎன் சீட் கிடைச்சது. கிட்டத்தட்ட மலையாளம் தமிழ் போல, ஆகவே, இங்கே எனக்கு ஒத்து வரும் என்று தோன்றியது. எல்லாரும் நல்லா பழகுவாங்க. நாமேளே எல்லா பொருட்களையும் இலகுவாக உபயோகப்படுத்தலாம். இங்கே படிக்கறது கொஞ்சம் ஜாலிதான் என கொஞ்சும் குரலில் முடித்தார்.


அருண் குமார் ( எம்.ஏ தமிழ் இரண்டாமாண்டு, திருவண்ணாமலை)

நான் சென்னையில் ஜர்னலிசம் படித்தேன். பின் அச்சு ஊடகம் மீது ஆர்வம் இருந்ததால் எனக்கு தமிழ் படிக்க ஆசை. அதனால் இங்க தமிழ் தேர்ந்தெடுத்தேன்.  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முடிச்சிட்டு தில்லியில் எம்.பில் பண்ணப் போறேன்.  இங்க படிப்பதால் நிறைய அறிஞர்களின் தொடர்புகள் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் ஸ்டைபன்ட் வேற உண்டு. நல்ல காற்றோட்டமான வகுப்பு, ஹாஸ்டல் ரூம் இதை தவிர வேற என்ன வேணும் பாஸ்.


ஜெய்கரன் ( கணிதம் மூன்றாமாண்டு, உ.பி.)

நான் நாலைந்து இடங்களில் விண்ணப்பம் போட்டிருந்தேன். இங்க வந்து மூன்று வருடம் முடியப் போகுது. ஹாஸ்டல் வசதி எல்லாம் பரவாயில்லை. நல்ல செமினாரெல்லாம் கண்டக்ட் பண்ணுவாங்க.பயனுள்ளதாக இருக்கும். இப்போதுதான் வளர்ந்து வரதால சியுடிஎன்-க்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாணவர்கள் நிறைய கற்றுக் கொள்ள இங்க இருக்க உபகரணங்கள் உதவும்.

வெங்கடேஸ்வரி (வேதியியல் இரண்டாமாண்டு, தஞ்சாவூர்)

நான் ப்ளஸ் டூவில் 75%க்கு மேல  மார்க் எடுத்தேன். இங்க படிச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னங்க. இருந்தாலும், 'ஹாஸ்டல் ஒத்துக்குமா? அஞ்சு வருடம் தொடர்ந்து படிக்கணுமே...?'ன்னு  கேள்வி வந்துச்சு. சேர்ந்ததுக்கு அப்புறம் அந்த கவலை இல்லை. நான் சேர்ந்தப்ப 3௦ சீட் ஒரு கிளாசுக்கு.  Sc/St 15 பேர்,  Obc 8 பேர்,  General Quota 7 பேர் என்ற முறையில்தான் சேர்த்தாங்க. இப்பவும் அந்த சிஸ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் மூணு வருசத்துக்கு படிப்பு சம்பந்தமா கவலை இல்லை.

நுழைவுத் தேர்வில் தேர்வாகிற நபர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதில் தேர்வாகிற நபர்கள் இங்கு படிக்க தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒருகிணைந்த முதுகலை படிப்பில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்" என்றார்.

ஏப்ரல் ஆறாம் தேதி துவங்குகிற ஆன்லைன் விண்ணப்பம் மே ஐந்தாம் தேதியோடு முடிவடைகிறது.  நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டு 21.௦5.2௦15 முதல் தரப்படுகிறது. மத்திய பல்கலை கழகத்துக்கான நுழைவுத் தேர்வு ஜூன் ௦6 & ௦7 தேதி. ஜூன் 2௦ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு. இந்த தேர்வு முறை  பெரும்பாலும் அப்ஜெக்டிவ் டைப் தேர்வாகவே இருக்கும்.

 மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைகழகம் இருந்தாலும் அங்கே போட்டி அதிகம் காணப்படும். அங்கே நுழைவு தேர்வு எழுதி மாணவர்கள் இங்கு வந்து படிக்கலாகின்றனர். அவர்களுக்கு போட்டியாக நாளைய தமிழகத்தை தாங்கப் போகிற, இந்தியாவை வலுப்படுத்தப் போகிற தமிழகத்து மாணவர்களும் நிறைய பேர் இதற்கு விண்ணபித்து சியுடிஎன்-னை நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கையில் அந்த வளாகத்தை விட்டு வெளி ஏறினோம். சவாலை சந்தியுங்கள்.

 மத்திய பல்கலை நுழைவுக்கான இணையதளம் :http://www.cucet2015.co.in/ 


-த.க.தமிழ் பாரதன் (மாணவ பத்திரிகையாளர்)

நன்றி : விகடன் செய்திகள் - 04.05.2015

Sunday, May 3, 2015

பெண்கள் வாட்ஸ் அப்பில் நல்ல ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க


பெண்கள் வாட்ஸ் அப்பில் நல்ல ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க 
என்ன செய்ய வேண்டும்?
****************************************************************************
வாட்ஸ்ஆப் போன்றவை பரவலான பின்னர், அதில் பரப்பப்படும் செய்திகள் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களைப் பொதுவெளியில் கடைபரப்பிவிடுகின்றன. நெருக்கமானவர்கள் என்று நம்பியவர்களால் தங்கள் அந்தரங்கம் காற்றில் பரவுவதை எதிர்கொள்ளும் வழி தெரியாமல் தவித்துவருகின்றனர்.
யார் நல்லவர், யாரிடம் சில தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சந்தேகங்களை எல்லாம் தீர்க்கும் அப்ளிகேஷனை அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு ஈடு கொடுக்கும் ஒரு அப்ளிகேஷனை மேட்ச்ஃபை சர்வீஸஸ் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்டவட்டமாக...
மேட்சிஃபை (Matchify) என்ற இந்த அப்ளிகேஷனில் பெண்களுக்கு உகந்த பல அம்சங்கள் உள்ளன. இந்த அப்ளிகேஷன் மூலம் ஆண்களின் புரொஃபைல் விவரங்களை முழுவதும் அறிந்துகொள்ள முடியும். அந்த நபர் சரியானவரா என்பதை அவர்கள் அறிந்துகொண்ட பின்னர், பாதுகாப்பான உரையாடலை நிகழ்த்துவதற்கு இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. அதேபோல் யாரெல்லாம் தங்கள் புரொஃபைல் விவரங்களைப் பார்க்கலாம் என்பதைப் பெண்கள் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். விருப்பமற்ற நபரைத் தவிர்த்துவிடவும் முடியும்.
இன்றைய நவீனப் பெண்ணுக்குத் தேவையான நிம்மதியான உறவுகளை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டே இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டதாக மேட்சிஃபை நிறுவனத்தின் தலைவர் சாய்சித்ரா தெரிவிக்கிறார். இந்த அப்ளிகேஷனை கூகுள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நன்றி : தி இந்து நாளிதழ் - 03.05.2015

Saturday, May 2, 2015

ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த


ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த என்னசெய்ய வேண்டும்?
************************************************************************
பத்தாண்டுகளுக்கும் மேலாக மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நண்பர்கள் ஜி மெயிலைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதன் வசதிகளை முழுமையாக அனுபவிக்கிறோமா? அவசரத்துக்கு நமக்கு உதவும் என்பதற்காக நம்மில் பலர் டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற பெரும்பாலான ஆவணங்களின் விவரங்களை மெயிலில் சேமித்து வைப்பதை வழக்கமாக்கிவைத்துள்ளனர். வங்கிகள் பலமுறை தொடர்ந்து எச்சரித்துவருகிறபோதும் சிலர் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டுகளைக்கூட மெயிலில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.

நமது மெயிலை யார் பார்க்கப் போகிறார்கள் நம்மிடம் தானே பாஸ்வேர்டு என நினைத்துக்கொள்கிறார்கள். இது அறியாமை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெயில்களின் பாஸ்வேர்டுகள் கண்டறியப்பட்டுத் தனிநபர் தகவல்களைத் திருடுவது சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. இதைத் தடுக்க மின்னஞ்சல் நிறுவனங்களும் பல்வேறு வகையான பாதுகாப்பு உத்திகளை அறிமுகப்படுத்திவருகின்றன.

ஜி மெயிலைப் பொறுத்தவரை அதன் ‘டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்’ என்னும் வசதி பாதுகாப்புக்காக உள்ளது. ஆனால் அதை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த வசதியை மிகவும் சுலமாக நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் நமது ஜி மெயிலை ஹேக்கர்களிடமிருந்து எளிதாக நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.

இதனால் என்ன நன்மை என்று கேட்டால் இந்த வசதியை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜி மெயில் அக்கவுண்டில் லாக் இன் செய்யும்போது உங்கள் மொபைலுக்கு எண்களால் ஆன சங்கேதக் குறியீடு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டும்.

அதை உள்ளீடு செய்தால் மட்டுமே உங்கள் மெயிலைத் திறக்க முடியும். தவறான நபர்கள் உங்கள் மெயிலின் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்தால்கூட உங்கள் மொபைலுக்கு வரும் சங்கேதக் குறியீடு அவர்களுக்குத் தெரியாது என்பதால் மெயில் பாதுகாப்பாக இருக்கும்.

தினந்தோறும் நாம் பயன்படுத்தும் கணினியில் தினமும் சங்கேதக் குறியீடு கேட்குமோ எனப் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட கணினியில் நீங்கள் ஒருமுறை சங்கேதக் குறியீட்டை உள்ளீடு செய்து, அதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி பணித்தால் போதும்.

மறுமுறை அதே கணினிக்கு சங்கேதக் குறியீடு தேவைப்படாது. ஆனால் புதிதாக நீங்கள் ஒரு கணினியில் மெயிலைத் திறக்க முயன்றால் அது சங்கேதக் குறியீடு கேட்கும். அதை உள்ளீடு செய்தால் மட்டுமே மெயில் திறக்கும். 

 ‘2 ஸ்டெப் வெரிஃபிகேஷன்’ வசதியை எப்படிப் பெறுவது?

ஜி மெயில் அக்கவுண்டை லாக் இன் செய்துகொள்ளுங்கள். இப்போது, மேலே தெரியும் பட்டையின் வலது மூலையில் வட்ட வடிவமாகத் தெரியும் உங்கள் புரொஃபைல் ஐகான் மீது மவுஸை நகர்த்திச் சொடுக்குங்கள்.
கீழே தென்படும் உங்கள் பெயர், மெயில் ஐடி ஆகியவற்றுக் கீழே அக்கவுண்ட் என்னும் சொற்கள் தெரியும். அதில் அக்கவுண்ட் என்னும் சொல்லின் மீது மவுஸை வைத்துச் சொடுக்குங்கள்.
பின்னர் தென்படும் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் signing in என்னும் தலைப்பின் கீழே ‘2-Step Verification’ என்னும் சொற்கள் காணப்படும். அது ஆஃப் என்றிருக்கும். அதைச் சொடுக்கினால் தென்படும் பக்கத்தில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண் கேட்கப்படும்.
மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் கூகுளில் இருந்து மொபைல் எண்ணைச் சரிபார்ப்பதற்காகச் சங்கேதக் குறியீட்டை அனுப்புவார்கள். அதைக் கணினியில் உள்ளீடு செய்துவிட்டால் போதும். இந்த வசதி செயல்பட ஆரம்பித்துவிடும். மொபைல் போன் இல்லாதவர்கள் எண்களாலான சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தலாம் அதற்கும் வசதி உள்ளது.
மொத்தம் 10 சங்கேத எண்கள் தரப்படும். அவற்றைப் பயன்படுத்திய பின்னர் மீண்டும் சங்கேத எண்களைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவோர் இந்த வசதியை இதுவரை பயன்படுத்தவில்லை என்றால் இப்போதே பயன்படுத்தத் தொடங்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: http://bit.ly/ZjTQPp
                                                                                                                                                         -ரோஹின்-
நன்றி : தி இந்து நாளிதழ், 01.05.2015