disalbe Right click

Friday, April 10, 2015

முதல் தகவல் அறிக்கை


முதல் தகவல் அறிக்கை
*********************************
ஒரு காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல்நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா? என்று முதலில் பார்ப்பார்.

அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார்.

ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் ஒரு காவல்துறை அதிகாரி உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து முதலில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பிணையில் விடத்தகுந்த குற்றம் , பிணையில் விடத்தகாத குற்றம்
**************************************************************************


இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை  (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் ஆகும்.

பிணை என்பது கைது செய்யப்பட்ட ஒரு நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன.

மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க்க்கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. 

இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை.
எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது. அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும்.

இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும்.

ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.
அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும்.

எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை
****************************


இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்தாகவோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப் படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம்.

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் காவல் நிலைய எழுத்தரால் பதிவு செய்யப்படும்.

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார்.

குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும்.

அனைத்து மத விவாகரத்து சம்பந்தமாக ......


அனைத்து மத விவாகரத்து சம்பந்தமாக ......
******************************************************
இரு மனங்கள் ஒத்து உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு ஒன்று நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் ஒன்றாக வாழ்வது தேவையில்லாதது.
‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’ (DIVORCE) என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் விளைவிக்கும்.

ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் கீழ்காணும் சட்டம் வழிகாட்டுகிறது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.


சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.
இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ அல்லது மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறியும் மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், 

திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ
... மனைவியானவர்  மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் 
மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.
மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி
நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,
மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,
கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,
கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,
கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் ...

...பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.
எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள். 

அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழமாகச் சிந்தித்துவிட்டு முடிவெடுங்கள்!

பொதுச்சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்

பொதுச்சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்
*****************************************************
 மேல் முறையீட்டு அதிகாரியிடம்  சிவில் நீதிமன்றத்தில் உள்ளது போல அலுவலர்களை அழைப்பது, கோப்புகளை கேட்பது போன்ற உரிமைகள் இச்சட்டத்தில் உண்டு. இந்த RPSA சட்டத்தை செயல்படுத்த ஒரு குறிப்பட்ட அரசுத் துறை நியமிக்கப்படும். அதேபோல் விண்ணப்பதாரர் கேட்ட பொது சேவை கொடுக்கப்படாதபோது, அதற்கான நஷ்டஈடும் சட்டத்தில் குறிப்பிடப்படும்.
RPSA சட்டத்தில் சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நிலம் தொடர்பான சான்றிதழ்கள் என்ற பல பொது சேவைகளை பெறுவது இந்த RPSA கீழ் வருகிறது.

RPSA அவசியம்
***********************
பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறு வதில் பொதுமக்களுக்கு  பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். அரசு செயல்பாடுகளில் எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும்  இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல்.
இவை யெல்லாம் ஊழல் விளைவுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் தவிப்பதற்கும் இருக்கும் காரணங்கள். இவற்றை களைவதே RPSAவின் நோக்கமாகும். ஒருவர் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றதாலேயே அவருக்கு அரசு செய்யவேண்டிய சேவைகள் பல உண்டு.
 எவ்வித செலவும் இல்லாமல் குடிமக்களுக்கு, குறித்த நேரத்தில் அச்சேவைகளை கொடுப்பது அரசின் கடமை, அச்சேவைகளை பெறுவது குடிமகனின் உரிமை. நமது தேர்தலில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் உரிமை, இந்த உரிமை நம் எல்ேலாருக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது சேவையை பெறுவதும் நமது உரிமை அதனை RPSA நிறைவேற்றுகிறது.
RPSA மேலும் செய்யவேண்டியது என்ன?
**********************************************************
இதுவரை RPSA அமலில் உள்ள மாநிலங் களில் எல்லாம் எல்லா அடிப்படை சேவைகளும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட வில்லை. இங்குள்ள அட்டவணையில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் RPSAயின் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழைகள் அதிக சிரமப்பட்டு பெற வேண்டிய நிலம் தொடர்பான சான்றிதழ்கள் இந்த சட்டத்தில் சேர்க்கப்படுவதில்லை.
அப்படி சேர்த்தால் நிலம் தொடர்பான எல்லா அரசு ஆவணங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு பல சிக்கல்கள் தீர்க்கப்படும். மேல்முறையீட்டு அதிகாரிகள் மாவட்ட தலைமை அலுவலகத்திலோ அல்லது மாநில தலைமை அலுவலகத்திலோ இருப்பதால் ஏழைகள் தங்கள் குறைகளைத் தீர்க்க சிரமப்படவேண்டியுள்ளது.
இதற்கு கம்ப்யூட்டர்-இணையம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல்முறையீட்டை எளிமைப்படுத்தவேண்டும். RPSA வந்த பிறகு பல அரசு அலுவலகங்கள் சீராக செயல்படத் துவங்கியுள்ளன. ஆனாலும் இவை மேலும் வளர வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற சட்டத்தை எப்போது கொண்டுவரும்?
ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது? என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல். இவையெல்லாம் ஊழலுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் இருப்பதற்கு காரணங்கள்.
(நன்றி திரு இராம. சீனுவாசன் அவர்களுக்கு)
தி இந்து நாளிதழ் செய்திகள், 09.02.2015

அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்


அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்
*********************************************************
இணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே. இவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன. 
பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரவுஸ் செய்திடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு கூடுதலான சிறப்பாகும். இந்த பிரவுசர்களின் முழு செயல்பாடும், மற்றவற்றில் தரப்படும் “private” அல்லது “incognito” நிலைக்கு இணையானவை என இவற்றைப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இவற்றை இயக்குவதும் எளிதானதாகும். இவை இலவசமாகவும் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.

1. ஒயிட்ஹேட் ஏவியேட்டர் (WhiteHat Aviator):


 நீங்கள் ஏற்கனவே கூகுள் குரோம் பயன்படுத்தி, பின்னர் இதனைப் பயன்படுத்தினால், இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடில்லை என எண்ணுவீர்கள். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். ஏனென்றால், இரண்டும் ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டவை. ஏவியேட்டர் பிரவுசரை வடிவமைத்த ஒயிட் ஹேட் செக்யூரிட்டி லேப்ஸ், இந்த பிரவுசரை “இணையத்தில் மிகவும் பாதுகாப்பான பிரவுசர்” என்று அறிவித்துள்ளது. மற்ற பிரவுசர்கள் போலின்றி, இது முழுமையான பாதுகாப்பு தரும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளருக்குத் தேவையான தனிநபர் பயன்பாட்டிற்கான அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும், பிரவுசருடனேயே தரப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்பிற்கென நாம் எதுவும் கூடுதலாக முயற்சிகள் எடுக்கத் தேவை இல்லை. இதில் கூகுள் குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம். ஏனென்றால், இரண்டிலும் ஒரே சோர்ஸ் கோட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குரோம் போலின்றி, இது குக்கீஸ் பைல்களை, விளம்பர நெட்வொர்க், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ் புரோகிராம்கள் பின்பற்றுவதனைத் தடுக்கிறது. இவ்வளவு வேலைகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டாலும், இது வேகமாகச் செயல்படுகிறது. நமக்கு விருப்பமான இணைய தளங்களை விரைவாக நமக்குப் பெற்றுத் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: https://www.whitehatsec.com/aviator/

2. மேக்ஸ்தான் க்ளவ்ட் பிரவுசர்: 

இந்த பிரவுசர், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. மொபைல் போனுக்கான வடிவமும் இதில் அடக்கம். இதனைத் தயாரித்த நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு க்ளவ்ட் சேவையை வழங்கி, பைல்களை சேவ் செய்திட இடம் தருகிறது. பைல்கள் மட்டுமின்றி, நாம் விரும்பும் இணைய தள முகவரிகள் (favorites), நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்கள், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் ஆகியவையும் சேவ் செய்யப்படுகின்றன. இது மற்ற எந்த பிரவுசரிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரவுசர் தானாகவே இயங்கி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கு நாம் செல்வதைத் தடுக்கிறது. அவற்றைத் திறக்கும் முன்னர், அந்த தளங்களை ஸ்கேன் செய்து, அவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. பிரவுசரின் கூடுதல் செயல்பாடுகளுக்கென, இந்த பிரவுசரிலேயே சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றைத் தேவை இருந்தால், நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பிரவுஸ் செய்திடும் தளம் குறித்த தகவல்கள் ஸ்டோர் செய்வதனைத் தடுக்க, private ஆகவும் இதில் பிரவுஸ் செய்திடலாம். மேக்ஸ்தான் பிரவுசரில் தரப்படும் snapshot வசதியை அனைத்துப் பயனாளர்களும் விரும்புவார்கள். ஒரே தளத்தை, ஒரே நேரத்தில், பல இடங்களில் திறந்து பயன்படுத்தும் வசதி, விளம்பரங்களைத் தடுக்க Ad Hunter என்னும் வசதி போன்றவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://www.maxthon.com/

3. ஆப்பரா பிரவுசர் (Opera): 

மேலே சொல்லப்பட்ட மேக்ஸ்தான் பிரவுசர் போல, ஆப்பரா பிரவுசரும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. தேடல் சாதனங்களைப் பயன்படுத்துகையிலும், சமூக இணைய தளங்களில் இயங்குகையிலும், நம் தேடல்களை வேறு புரோகிராம்கள் பின்பற்றுவதனை இது தானாகவே தடுக்கிறது. இதன் செயல்பாட்டு வேகம் எப்போதும் வேகமாகவே இருக்கிறது. நம் இணைய இணைப்பு சற்று குறைந்த வேகத்தில் செயல்படுகையில், இதில் உள்ள Turbo வசதி, நம் செயல்பாட்டினை வேகமாக மேற்கொள்ள உதவுகிறது. மொபைல் சாதனங்களில் ஆப்பரா பயன்படுத்துகையில், டேட்டாவினை சேவ் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது. பயனாளர் விருப்பப்படி ஆப்பராவினை வடிவமைக்க, அதிகமான எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் இந்த பிரவுசரிலேயே கிடைக்கின்றன. நாம் முதல் வரிசையில் வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நான்கு பிரவுசர்களைக் காட்டிலும், இது கூடுதல் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது என இதன் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரவுசரைப் பொறுத்தவரை ஒரு சிறிய குறை ஒன்று உள்ளது. தங்கள் இணைய தளங்களை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசரில் இயங்கும் வகையிலும், தங்கள் தளங்களை வடிவமைப்பதில்லை. எனவே, சில தளங்கள் இந்த பிரவுசரில் இயங்கா நிலை ஏற்படும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.opera.com/

4. கொமடோ ட்ரேகன் இன்டர்நெட் பிரவுசர் (Comodo Dragon Internet Browser):

 இணையத்திற்கான செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிக்கும் கொமடோ நிறுவனம், இதனையும் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. குரோம் மற்றும் ஏவியேட்டர் பிரவுசர்கள் வடிவமைப்பின் கட்டமைப்பான குரோமியம் குறியீட்டு வரிகளைப் பயன்படுத்தியே, இந்த பிரவுசரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மட்டுமே காணப்படும் சில வசதிகள், இதற்கு ஒரு தனித்தன்மையினை அளிக்கின்றன. நம் இணையத் தேடல்களை வேறு புரோகிராம்கள் எதுவும் கண்டு கொள்ள முடியாதபடி தடுக்கிறது. நாம் செல்லும் ஒவ்வொரு இணைய தளத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழ்கள் (SSL certificates) அனைத்தையும் இது சோதனை செய்து பார்க்கிறது. இணைய தளம் பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், கொமடோவின் ஐஸ் ட்ரேகன் (IceDragon) பதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசர் மாதிரியே இருப்பதனை உணர்வீர்கள். இந்த பிரவுசர் தற்போது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் வகையில் மட்டுமே கிடைக்கிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி.https://www.comodo.com/home/browsers-toolbars/browser.php

5. டார் பிரவுசர் (Tor browser): 

மேலே சொல்லப்பட்ட பிரவுசர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்படும் பிரவுசராக டார் பிரவுசர் உள்ளது. இந்த பிரவுசரின் தனிச் சிறப்பு என்னவென்றால், இது தரும் நம் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்புதான். உலகெங்கும் இதன் நெட்வொர்க் கம்ப்யூட்டர்கள் இயங்கி இணைப்பு தருகின்றன. இதனால் இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் நம் கம்ப்யூட்டரை இந்த பிரவுசர் வழி நெருங்க முடியாது. பல தன்னார்வலர்கள், இந்த தனி நெட்வொர்க் கம்ப்யூட்டர் சர்வர்களை இயக்கி வருகின்றனர். இணையத்தில் பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதனை நிரூபிக்கும் வகையில், இந்த நெட்வொர்க்கினைப் பராமரித்து வருகின்றனர். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்க முறைமைகளில் இயங்கும் வகையில், இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இந்த பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் கூட இன்ஸ்டால் செய்து இயக்கலாம். எனவே, நம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பினைக் காட்டிலும், தனிப்பட்ட முறையில் இயங்க நினைப்பவர்களுக்கு இந்த பிரவுசர் உகந்ததாகும். இருப்பினும், இதனை வடிவமைத்தவர்கள், இணைய தள முகவரியில் “https” என்ற முன்னொட்டு கொண்ட தளங்களுக்கு மட்டுமே செல்லுமாறு, இதன் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர் . இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி.https://www.torproject.org/projects/torbrowser.html.en

ஆதார் அட்டை பெறுவது எப்படி?


ஆதார் அட்டை பெறுவது எப்படி?
***************************************************

ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கைகளிலும் உள்ள  விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது.

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:
இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?
இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால் புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.
தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.
1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?
தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலையறிய:
https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLinkஇந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும். 


ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:
ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.
மேலதிக தகவலுக்கு:
புதுச்சேரியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 88070 82845, 97866 27066
தமிழகத்தில் கடலூரில் மட்டும் நிரந்தர ஆதார் மையம் உள்ளது. இதன் தொடர்பு எண்: 94861 43053
1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.
https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink ©ØÖ® http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: இது 2013ம் வருடம் அக்டோபர் மாதத்தில் புதியதலைமுறை வார இதழில் வெளி வந்த தகவல். 
இது குறித்து தெரியாதவர்களுக்காக மீண்டும் பதிவு செய்யப்படுகிறது. 
அன்புடன் செல்வம்பழனிச்சாமி

பாஸ்போர்ட் எடுப்பது எப்படி?


பாஸ்போர்ட் எடுப்பது எப்படி?
*****************************************
எளிய முறையில் பாஸ்போர்ட் வாங்குவது எப்படி தெரியுமா?
நம் நாட்டில் ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplomatic), ஜம்போ (Jumbo) என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்,
Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,
Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும்,
 Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
ஆவணங்கள்:
முக்கியமாக இரண்டு ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ்
2. பிறப்புச் சான்றிதழ்.
* இருப்பிடச் சான்றாக – குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடிநீர் வரி, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, வருமான வரி மதிப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றைக் காட்டலாம்.
* பிறந்த நாளுக்கான ஆதாரமாக பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களையோ, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, அல்லது பதிவுத்துறை வழங்கும் சான்றிதழ்களையோ ஆதாரமாகக் காட்டலாம்.
* ஜனவரி 26, 1989க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களையே ஆதாரமாகக் கட்ட வேண்டும்.
* விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு சான்றிதழ்களின் நகல்களின் இரண்டு படிகளை இணைக்க வேண்டும். நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறவர்கள் உண்மைச் சான்றிதழ்களை உடன் எடுத்துச் சென்றால், சமர்ப்பித்துள்ள நகல்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பார்கள்.
* சொந்த ஊர்விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம்.
* அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப்பதாயின், தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவரிடம் / முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.
பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அந்த அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பி, நீங்கள் அந்தப்பகுதியில்தான் வசிக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் கிரிமினல் குற்றம் புரிந்தவரா? அப்படி ஏதும் குற்றங்கள் உங்கள் பெயரில் உள்ளனவா என உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விசாரித்து நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே பாஸ்போர்ட் வழங்குவர்.
சிறுவர்-சிறுமியர்:
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிப்பர்.
கட்டணம்:
பொதுவாக சாதாரண பாஸ்போர்ட் பெற ரூ. 1000/- செலுத்தினால் போதுமானது . ஆனால் ஜம்போ பாஸ்போர்ட் பெற ரூ 1500/- கட்டணம் செலுத்த வேண்டும்.
(Jumbo) ஜம்போ பாஸ்போர்ட் – அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் (பெரு வணிகர்கள் போன்றோர்) பெறக்கூடியது. சிறுவர் சிறுமியர்க்கு கட்டணம் ரூ. 600/-.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன.
அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தத்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
காவல்துறை சான்றிதழ் பெற்றவர்கள், காவல்துறைச் சான்று தேவைப்படாத 14 வயதுக்கு உட்பட்ட (பாஸ்போர்ட் உடைய பெற்றோர்களின் குழந்தைகள்) சிறுவர் சிறுமியர், ஆட்சேபனை இல்லாச் சான்று பெற்ற அரசு ஊழியர்கள், அவர்களது துணைவியர் மற்றும் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டோர் மட்டுமே தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெற முடியும்.
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட்டை புதுப்பித்தல்:
பாஸ்போர்ட் பெற்றவர்கள் அதை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
தொலைந்து போனால் என்ன செய்வது?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :
பாஸ்போர்ட் ஆன்லைன் வெப்சைட்:

என் பேஸ்புக் அக்கவுண்ட் ரகசியமானதா?


என் பேஸ்புக் அக்கவுண்ட் ரகசியமானதா?
*******************************************************************
சமூக இணைய தளங்கள் என்று வருகையில், நாம் நம் தகவல்கள் எவ்வளவு தூரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன எனக் கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு சமூக இணைய தளமும், நம் தனிப்பட்ட தகவல் தொகுப்பினை நாம் விரும்பும் வகையில், விரும்பாதவர்கள் அறிய இயலாத வகையில் அமைக்க வழிகளைத் தருகின்றன. இருப்பினும், நம் தகவல்கள் திருடப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும்போது, நாம் அஞ்சுகிறோம். நம் தகவல்களை இன்னார் தான் பார்வையிட முடியும் என நாம் செட்டிங்ஸ் பிரிவில் அமைத்திருந்தாலும், நம் தகவல்கள் மற்றவர்களாலும் அறியப்படும் வாய்ப்புகள் உள்ளனவோ என்று சந்தேகப்படுகின்றோம். 

இந்த அச்சத்தினைப் போக்கும் வகையில் பேஸ்புக் தளம் Privacy Checkup என்ற டூல் ஒன்றை அண்மையில் தந்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக் இணைய தளத்தில் உள்ள நம் அக்கவுண்ட்டில், நாம் பதிவு செய்வதனை யார் எல்லாம் பார்க்க முடியும் என்பதனைக் கண்டறியலாம். அதனை மாற்றி அமைக்க விரும்பினால், இந்த டூல் அதற்கான செட்டிங்ஸ் அமைக்க உதவுகிறது. சில வேளைகளில் அல்லது சில அமைப்புகளினால், இந்த ஆப்ஷன் கட்டம், நாம் பேஸ்புக் செல்லும்போதே, தானாக எழுகிறது. அல்லது தளத்தில் மேலாகத் தரப்பட்டுள்ள பேட்லாக் (padlock) படத்தின் மீது கிளிக் செய்து பெறலாம். இதில் கிடைக்கும் மெனுவில் Privacy Checkup என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.
அமைப்பினை நம் விருப்பப்படி அமைக்க, யாரெல்லாம் நம் பதிவுத் தகவல்களைப் பார்க்கிறார்கள் என்பதனை அறிய Let’s Do It என்பதில் கிளிக் செய்து தொடங்க வேண்டும். Privacy Checkup தரும் முதல் நிலை, நம் பதிவுகளை யாரெல்லாம் பார்க்கிறார்கள் அல்லது பார்க்க முடியும் என்ற தகவலாகும். இதில் மாற்றங்கள் ஏற்படுத்த விரும்பினாலும், அதற்கு ஆப்ஷன் தரப்படுகிறது.
அடுத்து பேஸ்புக் இயக்கும் அப்ளிகேஷனப் பற்றியது. இதனைக் காண்கையில் நமக்கு ஆச்சரியம் வரலாம். ஏனென்றால், நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள் பல பின்னணியில் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டப்படும். சிலவற்றை நாம் தான் இன்ஸ்டால் செய்தோமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நம் நினைவில் இல்லாமல், நம்மால் பல காலம் பயன்படுத்தப்படாவதையாக இருக்கும்.
நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை அழித்துவிடலாம். நம் பதிவுகளை யாரெல்லாம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ, அதனையும் இங்கு செட் செய்திடலாம். அப்ளிகேஷன் ஒன்றை நீக்க, அதன் அருகே உள்ள X அடையாளத்தில் கிளிக் செய்தால் போதும். எப்படியும், நீங்கள் சோதனை செய்கையில் குறைந்தது பத்து அப்ளிகேஷனாவது நீங்கள் பயன்படுத்தாதவையாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் சோதனைக்குப் பின், உங்களைப் பற்றிய தகவல்களை யாரெல்லாம் பார்க்க அமைத்திருக்கிறீர்கள் என்பதனைக் காணலாம். நீங்கள் எங்கு படித்தீர்கள், எங்கு என்ன வேலை பார்க்கிறீர்கள், எங்கு வாழ்கிறீர்கள் என்ற விபரங்களை யாரெல்லாம் பார்க்க முடியும் என்பதைக் காணலாம். இதனை உங்கள் விருப்பப்படி திருத்தி அமைத்த பின்னர், Privacy Checkup டூல் மூடி வெளியேறலாம்.

பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்


பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்
*********************************************************************"
பெயிலில் விடுவிக்க முடியாத " என்பதன் பொருள் காவல் துறை அதிகாரியால் பெயிலில் விட முடியாது அதை ஒரு நீதிபதி தான் செய்ய முடியும் என்பதுதான்.
நீதிபதி குற்றவாளி குறித்த முதற்கட்ட முடிந்த பின் அவரை பெயிலில் விடுவிக்க கூடும். அவர் தான் குற்றம் புரிந்தார் என்பதற்கு நியாயமான காரணம் இல்லை என்பதாலும் வழக்கு முடிவதற்கு இடையிலும் பெயிலில் செல்ல நீதிபதி அனுமதிப்பார்.
பெயிலில் விட மறுக்க போலிஸ் பொதுவாக கூறும் காரணங்கள்
*****************************************************************************************************
1. குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்
2. சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்
3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்
4. காவல் துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை
5. திருட்டு போன பொருட்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை
6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றபட்வில்லை
7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்
குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்கவேண்டும். அவற்றை மறுக்கவிடில் பெயில் கிடைப்பது கடினம் பெயிலில் வர மனு குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப்ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை நியமிப்பது மிக நல்லது. அதற்கான மனு அவர் நீதிபதியின் முன் தரவேண்டும் (பெரும்பாலும் வெளியில் இருக்கும் நண்பர் அல்லது உறவினர் வழக்கறிஞரை பார்த்து விட்டு, அதற்கான கையெழுத்து மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் வாங்குவர் )
வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ள இயலாதென்றால் குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதிக்கு மனுசெய்யலாம். (பொது மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்பதால் தானே வாதிடுவதை பொதுவாய் தவிர்ப்பது நல்லது)
பெயில் மனுவில் பொதுவாய் சொல்லப்படுகின்ற  காரணங்கள்
***************************************************************************************************1. பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்
2. தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது
3. காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்
பெயில் மறுப்பும் மேல் முறையீடும்
******************************************************பெயிலில் விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.
ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்
ஆண்டிசிபேட்டரி பெயில் (Anticipatory Bail) ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு.
இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யலாம். வாரன்ட் இல்லாமல் போலிசால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது.

பான்கார்டு பெறுவது எப்படி?


பான்கார்டு பெறுவது எப்படி?
******************************************
வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது? குழந்தைகளுக்கும் வாங்க முடியுமா? பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் இங்கே பார்ப்போமா?

பான்கார்டு என்பது என்ன? 
ஆங்கில எழுத்துக்களும், எண்களும் கலந்த பத்து இலக்க எண் கொண்ட புகைப்பட அடையாள அட்டையாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

பான் கார்டின் அவசியம்:
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான டீமேட் கணக்கைத் துவக்க, வங்கியின் ஒரு கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மாற்ற / டெபாசிட் செய்ய / கணக்கிலிருந்து எடுக்க, மற்றும் வரி கழித்த தொகையினை திரும்பப் பெற ஆகியவற்றுக்கு பான்கார்டு அவசியம்.

பான் கார்டு பெறுவதற்கான தகுதிகள்: 
இந்திய குடிமக்கள் அனைவருமே பான்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. குழந்தைகளுக்குக் கூட பான்கார்டு பெற முடியும். பான் கார்டு பெறுவதற்கு ஒரு குழுமமோ, நிறுவனமோ, சங்கமோ, தனிநபரோ விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:
இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 105 ரூ கட்டணமும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 962 ரூ கட்டணமும் பெறப்படுகிறது. ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பித்தால் 250ரூ முதல் 300ரூ வரை செலவாகும்.

எங்கே விண்ணப்பிப்பது?
 மத்திய வருமான வரித்துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இதற்கான சேவை மையங்களைத் திறந்துள்ளது. இங்கு சென்று நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இந்தியர்கள் 49ஏ என்ற விண்ணப்பத்தையும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் 49ஏஏ என்ற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப்படிவத்தை https://www.tin-nsdl.com/என்ற தளத்திற்குச் சென்றும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:
பான் கார்டு பெற அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று தேவை.
அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

 இருப்பிடச் சான்றாக கடைசி 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம்
பிறந்த தேதிச் சான்றாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ் கொடுக்கலாம்.
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றிதழ்கள் போதுமானவை. மைனர் விண்ணப்பதாரருக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
ஒரு வேளை மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

மீண்டும் பான்கார்டு பெற:
ஏற்கனவே பான்கார்டு வழங்கப்பட்டு ஒருவேளை தொலைந்து போயிருந்தால் அல்லது  சேதமாகியிருந்தால்  அதே பான்நம்பரை வைத்து புதிய பான்கார்டு பெற 
மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கும் மேற்கூறிய சான்றுகள் தேவை. புதிய பான் கார்டுக்கான கட்டணமே இதற்கும் பொருந்தும். அப்படிப் பெறும்போது ஏற்கனவே உள்ள எண்ணே வழங்கப்படும்.

பான்கார்டில் பெயர் மாற்றமோ, பிறந்த தேதி மாற்றமோ, வேறு திருத்தங்களோ செய்ய வேண்டுமெனில் அதற்கான ஆதாரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பான் நம்பர் வைத்திருப்பவர்கள் மீண்டும் மற்றுமொரு பான் நம்பரைப் பெற முடியாது. அப்படி பெறுவதும் / வைத்திருப்பதும் சட்டப்படிக் குற்றமாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
ஆன்லைனில் http://www.myutiitsl.com/PANONLINE/ இத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி அனுப்புவது என்ற விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு அதை சரிபார்த்து பின் உறுதி செய்து அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அதில் கையெழுத்திட்டு அத்துடன் ஒரு புகைப்படத்தையும், தேவையான சான்றுகளையும் இணைத்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
PAN PDC Incharge – Chennai region
UTI Infrastructure Technology And Services Limited
STC Trade Centre, First Floor, A-29,
Thiru- Vi- Ka Industrial Estate, Guindy
CHENNAI – 600032
Tel No:(044) 22500426

உங்கள் விண்ணப்பத்தின் நிலையறிய :http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.doஇத்தளத்திற்கு சென்று கூப்பன் எண்ணைக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். அல்லது PAN என டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு 15 இலக்க அக்னாலெட்ஜ்மெண்ட் எண்ணை டைப் செய்து 53030 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

அருகிலுள்ள பான்கார்டு விண்ணப்பங்களைப் பெறும் மையங்களைத் தொடர்பு கொள்வதற்குhttp://www.myutitsl.co.in/intra/web/search_psa.jspஎன்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பகுதியை அல்லது ஊரை க்ளிக் செய்தால் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttps://www.tin-nsdl.com/ அல்லதுhttp://www.utitsl.co.in/ ஆகிய தளங்களுக்குச் செல்லவும்.

கிரெடிட் கார்டு தொலைந்து போனால்


கிரெடிட் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
********************************************************************நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை
15 வேலை நாட்கள்.

நடைமுறை :
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 
20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: 
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: 
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

மனைப் பட்டா தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*****************************************************************வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: 
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: 
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

டெபிட் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
 வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

பங்குச் சந்தை ஆவணம் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************************சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? 
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: 
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: 
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*************************************************************************மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: 
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
 காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

கிரயப் பத்திரம்

தொலைந்து போனால் யாரை அணுகுவது?!
****************************************************************
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? 
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: 
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: 
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.


இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்தால்



இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************************பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
 நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
***********************************************************************பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 
கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்? 
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: 
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: 
காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
****************************************************************
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது 
ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: 
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

பான் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*************************************************************


பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள்      அல்லது 
வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: 
விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
 பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
 —