disalbe Right click

Thursday, March 23, 2017

கண் நலம் காப்போம்!


கண் நலம் காப்போம்!
கண்கள், நம் உடலின் ஜன்னல்கள். நாம் இந்த உலகைக் காணவும், இயற்கையின் அழகை, அற்புதத்தை அனுபவமாக்கிக்கொள்ளவும் உதவும் கண்களை, பஞ்சபூதங்களில் நெருப்புக்கு இணையாகச் சொல்கிறது சித்த மருத்துவம். இன்றைய நவீன யுகத்தில், நீண்டநேரம் கணிப்பொறி மற்றும் டி.வியைப் பார்ப்பது, விளக்கை அணைத்துவிட்டு நள்ளிரவு வரை மொபைல் பார்ப்பது என்று கண்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். மறுபுறம் ஆரோக்கியமற்ற உணவுகள் நம் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும் பாதிக்கும்போது, கண்களும் பாதிப்பு அடைகின்றன. இயற்கையான முறையில் கண்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் எப்படி எனக் காண்போம்.
கண்ணும் சித்தாவும்… 

நமது உடலில் வாதம், கபம், பித்தம் மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். பித்தம் சிறிது அதிகரித்தாலும் கண்பார்வையைப் பாதிக்கும். உதாரணமாக, பித்தம் அதிகரிப்பதால் காமாலை வருகிறது. இதனால், பார்வை பாதிப்படைகிறது. நாம் அன்றாடம் பருகும் காபி, தேநீரில் உள்ள காஃபின் ரசாயனம் முதல் சமைக்கப் பயன்படுத்தும் புளி வரை பல உணவுகளில் பித்தம் உள்ளது. சிலருக்கு, சைனஸ் பிரச்னையால் முன் நெற்றியிலும் கண்களுக்குக் கீழேயும் நீர் கோத்து, பார்வைக் கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நெடுங்கால மலச்சிக்கலால் ஏற்படும் உடல் அழுத்தத்தால் சிலருக்குப் பார்வைக் கோளாறு ஏற்படலாம். அதீத உடல் சூட்டினால் கண் சிவப்பாகுதல், ஒவ்வாமை ஏற்படும்.
பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்

கேரட், வெள்ளரி, பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இளநீர், நுங்கு, நீர்க் காய்கறிகள் போன்றவை கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
வைட்டமின் ஏ அதிகமாக உள்ள பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை, முருங்கைக் கீரை, அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது கண்ணுக்கு மிகவும் நல்லது.
கண்ணில் ஏற்படும் புரை மற்றும் இதர கண் நோய்களுக்கு பொன்னாங்கண்ணி மிகச்சிறந்த மருந்து.
கண்ணைக் காக்கும் திரிபலா
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயின் கலவையே திரிபலா சூரணம். இந்தச் சூரணம் ‘கர்ப்ப மாத்திரை’ என்ற பெயரில் சித்த மருந்துக் கடைகளில் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. அலோபதி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும்கூட இந்த மாத்திரைகளைச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை, தினமும் தேன் அல்லது நெய்யில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவருவதால் கண் நரம்புகள் வலுவடைகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் நீங்கும். குழந்தைகளுக்கு, நன்கு காய்ச்சிய நெய்யில் திரிபலா சூரணத்தைக் குழைத்துக் கொடுப்பது நல்லது. இதனால், தசைகளுக்குள் மருந்து சுலபமாக ஊடுருவிச்செல்கிறது.
எண்ணெய்க் குளியல்தட்பவெப்பம் மற்றும் காலநிலை மாறும்போது மெட்ராஸ் ஐ போன்ற காற்று மூலம் பரவும் நோய்தொற்றுகள் ஏற்படுகின்றன. கோடை காலத்தில் கண்ணில் உள்ள நீர் வற்றிப்போகிறது. ஆடிமாதக் காற்றில் பல கிருமிகள் கண்களைப் பாதிக்கின்றன. குளிர்காலங்களில் சைனஸ் பிரச்னை ஏற்பட்டு, அடுக்குத்தும்மல், கண்களைச் சுற்றி நீர்கோத்தலால் கண்கள் கன்ஜங்ட்டிவிடிஸ் (Conjunctivitis) பாதிப்புக்கு உள்ளாகின்றன. சனிக்கிழமை நல்லெண்ணைக் குளியல் இதற்கு நல்ல தீர்வு. கடுக்காய்த்தூள், நெல்லிக்காய், மிளகு, வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சளை நன்கு பொடியாக அரைத்து, பாலில் கலந்தால் கிடைப்பதுதான் பஞ்சகல்பம். இதை, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளித்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
சித்தா சிகிச்சைகள்
மரமஞ்சள், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலவையை ‘இளநீர்க்குழம்பு’ என்பார்கள். இது, கண்புரையைத் தடுக்கிறது. `அதிமதுரம்’ என்ற பசைபோன்ற சித்த மருந்தை வெயில் காலங்களில் கண்ணுக்கு மையிட்டுக்கொள்வதைப்போல கீழ் இமைகளின் அடியில் பூசிக்கொள்வதன் மூலம், கண் சூட்டைத் தணிக்கலாம். இந்த முறைகளை சித்தமருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும்.
கண்களுக்கான பயிற்சிகள்
தினமும் காலை எழுந்தவுடன் ஆறு முதல் எட்டு மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இளம் சூரியக் கதிர்களை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து பார்ப்பதன் மூலம், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
அலுவலகக் கணினி முன் நெடுநேரம் அமர்ந்து வேலைசெய்பவர்கள், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை 10 முறை தொடர்ந்து சிமிட்டுதல் நல்லது.
இரு கைகளையும் நன்றாகத் தேய்த்துச் சூடுகிளப்பி, கண்களில் ஒற்றி எடுத்தால், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டம் அதிகமாகும்.
அவ்வப்போது தொலைவில் உள்ளவற்றைப் பார்ப்பதன் மூலம், கண்களில் ஏற்படும் அழுத்தம் குறையும்.
அவ்வப்போது இடம், வலம், மேல், கீழ் எனக் கருவிழியை உருட்டிப் பார்ப்பது நல்லது.
வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்திரிபலா சூரணத்தை சுத்தமான நீரில் கலந்துகொள்ள வேண்டும். இந்த நீரை பஞ்சில் நனைத்து, கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது பேக் போல் கண்களைச் சுற்றித் தடவலாம்.
இதே நீரை வடிகட்டி, தினமும் இரண்டு சொட்டுகள் கண்ணில் விடுவதன் மூலம், கண் சோர்வு நீங்கும்.
வெயில் காலத்தில் கண்ணில் ஏற்படும் எரிச்சல், பாக்டீரியா தொற்று, அரிப்பு , நீர்வற்றுதல், கண் தசை வீக்கத்தைத் தவிர்க்க இது ஓர் எளிய வழி.
தோல் சீவிய சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை வைத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
நந்தியாவட்டைப் பூக்களின் இலைகளைக் கண்களை மூடி, அதன் மேல்பரப்பில் வைத்து, அதன் மேல் துணியால் கட்டிக்கொண்டு அரை மணி நேரம் ஓய்வெடுக்கலாம்.
கண் குளிர்ச்சிக்காக வெள்ளரிக்காயை நறுக்கி, காலை, மாலை இருவேளையும் கண்களில் வைக்கலாம்.
நன்றி : டாக்டர் விகடன் - 01.04.2016

Wednesday, March 22, 2017

உள்ளாட்சி: ஐந்து ஆண்டுகள்...


உள்ளாட்சி: ஐந்து ஆண்டுகள்...

ஏழரை லட்சம் வேலைகள்...

ரூ.25 ஆயிரம் கோடிகள்...

எங்கே போனது மக்கள் பணம்?

ஒரு சுற்றுலா செல்வோமா? இன்பச் சுற்றுலா.

ஆனால், கற்பனைச் சுற்றுலா.

விளையாட்டு அல்ல, சொல்லப்போனால் மன நல மருத்துவத்தில் கையாளப்படும் உளவியல் சிகிச்சைகளில் முக்கிய மான ஒன்று இது.

வரலாறு காணாத வறட்சியை காணப்போகும் தமிழகத் துக்கு இத்தகைய அவசர சிகிச்சை மிக, மிக அவசியம். சிகிச்சையை தொடங்குவோம். கண்களை மூடிக் கொள்ளுங்கள். தமிழகத்தை கழுகுப் பார்வையில் பாருங்கள்.

சென்னை எவ்வளவு அழகாக இருக்கிறது, செம்பரம்பாக்கம் ஏரி யும் மணிமங்கலம் ஏரியும் நிரம்பி வழிகின்றன. கூவத்திலும் பக்கிங் ஹாம் கால்வாயிலும் படகுகள் ஓடு கின்றன. பச்சைப் பசுமையாக காட்சியளிக்கிறது காஞ்சிபுரம். எங்கு பார்த்தாலும் ஏரிகள். சூரிய ஒளி பட்டு நீல நிற வைரங்களாக அவை கண்களை கூச வைக்கின்றன.

வேலூரில் கரை புரண்டு ஓடுகிறது பாலாறு. நொய்யலின் கழுத்தில் வைர மாலையைத் தொங்க விட்டதுபோல இருபுறமும் வரிசையாக இருக்கும் குளங்களில் தண்ணீர் தளும்புகிறது. சிறுவாணியும் பவானியும் மோயாறும் பளிங்குபோல தெளிந்து ஓடுகின்றன.

டெல்டாவை பார்க்கும்போதே குளிர் கிறது. எங்கும் பச்சை தரித்திருக்கிறது பூமி. வளைந்து நெளிந்து ஓடுகிறாள் காவிரி. வீதிதோறும் ஓடும் கால் வாய்களில் சிறுவர்கள் குதித்து விளையாடுகிறார்கள். விவசாயிகள் கலகலப்பாக வேலை செய்கிறார்கள். மதுரையிலும் ராமநாதபுரத்திலும் வைகை யும் அவற்றின் குழந்தைகளான குளங்களும் கண்கொள்ளாக் காட்சி களாய் விரிகின்றன. தவழ்ந்து வரும் தாமிரபரணியையும் நிரம்பிக் கிடக்கும் பாண்டியர் அணைக்கட்டுகளையும் காண கண்கோடி வேண்டும்.

சுற்றுலாவை முடித்துக்கொள்வோமா?

நிஜத்துக்கு வருவோம்.

இப்போது நீங்கள் பார்த்தது எதுவும் கற்பனை இல்லை.

முழுக்க முழுக்க உண்மை.

முகத்தில் அறையும் உண்மை.

அத்தனையும் சத்தியம்.

நான் சொல்ல வில்லை. அரசாங்கம் சொல்கிறது. அரசாங்கத்தின் ஆவணங்கள் சொல் கின்றன. ஆவணங்களின் புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

அந்த ஆவணங்களில் தமிழகம் ஒளிர்கிறது, மிளிர்கிறது, மிடுக்கு நடை போடு கிறது. அந்த ஆவணங்களில் எழுதப் பட்டுள்ள கணக்கின்படி பார்த்தால் மேற்கண்ட வர்ணனை கூட குறைவு தான்.

இன்னும் சொல்லப்போனால் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமல்ல, ஆசியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழக்கூடும்.

குறிப்பாக நீர் நிலைகளை மேம் படுத்தவும் வறட்சியை போக்கவும் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் செய்யப்பட்ட வேலைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒவ் வொரு வட்டாரத்துக்கும் இரண்டு பொறியாளர்கள், மூன்று பணி மேற்பார்வையாளர்கள், மூன்று கணினி இயக்குநர்கள், தலா ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அவர்களுக்கு தலா ஒரு உதவியாளர் என 1901 பேர் பணிபுரிகிறார்கள்.

இவர்களைக் கண்காணிக்கவும், திட் டங்களைத் தீட்டவும், வேலை வாங்க வும் நூற்றுக்கணக்கான உயர திகாரிகள், ஐ.ஏ.எஸ்-கள், மாவட்டந் தோறும் ஆட்சியர்கள் இருக்கி றார்கள். இவர்களுக்கு மேல் சட்டப் பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாண்புமிகு அமைச் சர்கள், முதலமைச்சர்.

இப்படியான மாபெரும் அதி காரமும் பணபலமும் பொருந்திய தமிழக அரசு இயந்திரம் கடந்த 2012-13 நிதியாண்டு தொடங்கி, 2016-17 நிதியாண்டின் இந்த மாதம் வரை தமிழகத்தின் நீர் நிலைகளில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் மட்டும் செய்துள்ள பணிகளைப் பார்ப்போமா?

மாநிலம் முழுவதும்

வெள்ளக் கட்டுப்பாடு திட்டத்தில் 4,064 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் ரூ.85 கோடி மனித உழைப்பு ஊதிய மாக வழங்கப்பட்டிருக்கிறது.

கருவி களின் செயல்பாட்டுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டி ருக்கிறது.

தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேமிப்பு திட்டத்தில் 92,856 பணிகள் நடந்திருக்கின்றன.

இதற்காக ரூ.2,673 கோடி ஊதியமாக வழங்கப் பட்டிருக்கிறது. கருவிகளின் செயல் பாட்டுக்கு ரூ.48 கோடி செலவிடப் பட்டிருக்கிறது.

பாரம்பரிய நீர் நிலைகள் புனரமைப்புத் திட்டத்தில் 3,13,710 பணிகள் நிறைவேற்றப்பட்டி ருக்கின்றன.

ரூ.11,096 கோடி ஊதிய மாக வழங்கப்பட்டிருக்கிறது.

கருவிகளின் செயல்பாட்டுக்கு ரூ.188 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

வறட்சி பாதுகாப்பு திட்டத்தில் 36,536 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூ.326 கோடி ஊதியமாக வழங்கியிருக்கிறார்கள்.

ரூ.14 கோடி கருவி களின் செயல்பாட்டுக்கு செலவிடப் பட்டிருக்கிறது.

கால்வாய்கள் புனரமைத்தல் திட்டத்தில் 72,745 பணிகள் செய்திருக்கி றார்கள்.

ரூ.1,875 கோடி ஊதியமாக வழங்கி இருக்கிறார்கள்.

ரூ.32 கோடி கருவிகளின் செயல்பாட்டுக்கு செலவிடப்பட்டிருக்கிறது.

பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தினரின் பாசன ஆதாரங்களை மேம்படுத்து வதற்காக 2,57,062 பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

ஊதியமாக ரூ.325 கோடி வழங்கியிருக்கிறார்கள்.

கருவிகளின் செயல்பாட்டுக்கு ரூ.77 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

மொத்தமாக கடந்த ஐந்து ஆண்டு களில் வறட்சியை தடுப்பது, நீர் நிலைகள் மற்றும் விவசாயி களின் மேம்பாட்டுக்காக மட்டும் 7,76,973 பணிகள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

ரூ.23,552 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

இதில் ரூ.18,788 கோடி ஊதியமாக வழங்கப் பட்டிருக்கிறது.

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மட்டுமே இத்தனை பணிகள்.

சுமார் கால் லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமா?

பொதுப்பணித் துறை,

வேளாண்மைத் துறை,

வேளாண்மைப் பொறியியல் துறை,

நீர் வள ஆதாரப் பிரிவு,

அணைப் பாதுகாப்புப் பிரிவு,

வடிவமைப்பு, ஆராய்ச்சிகள் மற்றும்

கட்டுமான ஆதரவுப் பிரிவு,

திட்ட உருவாக்கப் பிரிவு,

நிலத்தடி நீர்ப் பிரிவு,

நீர் வள மையம்

என துறை வாரியாக, பிரிவுகள் வாரியாக ஏராளமான திட்டங்களைச் செயல் படுத்தியிருக்கிறார்கள். மேற்கண்ட புள்ளிவிபர தொகையுடன் சேர்த்தால் தோராயமாக ஐந்து ஆண்டுகளில் அரை லட்சம் கோடி ரூபாயாவது நீர் நிலை ஆதாரங்களை மேம்படுத்த செலவழித்திருக்கக் கூடும்.

அரசு ஆவணங்கள் சொல்வது உண்மையெனில்

எங்கே போயின தூர் வாரிய குளங்கள்?

எங்கே போயின தூர் வாரிய ஏரிகள்?

எங்கே போயின தூர் வாரிய கண்மாய்கள்?

எங்கே போயின கால்வாய்கள்?

சேகரித்த தண்ணீர் எல்லாம் எங்கே போனது?

மக்களின் உழைப்பெல்லாம் என்ன ஆனது?

ஆவணங்களில் கணக்கு காட்டியது போல அரசாங்கம் செய்திருந்தால் தமிழக விவசாயி செத்து நாற்றமெடுக்கும் எலியை வாயில் கடித்துக்கொண்டு ஏன் போராட வேண்டும்?

மானங்கெட வெறும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு தலைநகரில் ஏன் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும்? யோசித் துப் பாருங்கள், நல்ல மன நிலையில் இருந்தால் அவர்கள் இவ்வாறு எல்லாம் செய்வார்களா? விவசாயிகளின் பணத்தைச் சாப்பிடுவது அசிங்கம் இல்லையா? அது பெற்ற தாயை விற்பதற்கு சமம் இல்லையா?

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

டி.எல்.சஞ்சீவிகுமார்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 22.03.2017

Tuesday, March 21, 2017

உயில் - முழு தகவல்கள்

Image may contain: 1 person, sunglasses and text
உயில் - முழு தகவல்கள்

ஒருவர், தன் வாழ்நாளுக்குப் பின்னர், அவரின் சொத்துக்களை, உயில் மூலம், அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்! அப்படி எந்த உயிலும் எழுதி வைக்காமல் அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவரின் சட்ட பூர்வ வாரிசுகளுக்குச் சென்று விடும்; உயில் எழுதி வைத்தால், அவர் விரும்பியவருக்கு கொடுத்து விடலாம்; உயில் எழுதாமல் இறந்தால், சட்டபூர்வ வாரிசுகளை அடையும்.

உயில் எழுதி வைக்காத சொத்துக்கள், அந்தந்த மதச் சட்டப்படி இறந்தவரின் வாரிசைச் சென்று அடையும்.

 இந்துவுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956” உள்ளது; (இது 2005-ல் திருத்தம் செய்யப் பட்டது).

 அதுபோலவே, கிறிஸ்தவருக்கு வேறு ஒரு வாரிசு சட்டம் உள்ளது; அதன் பெயர் “இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925”

 இதுபோலவே முகமதியர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) ஒரு வாரிசுரிமைச் சட்டம் உள்ளது; அதன் பெயர் “ஷரியத் சட்டம் 1937”; 

முதற்கட்ட வாரிசுகள்
இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், அவரின் சொத்தை உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அவரின் வாரிசுகளான, அவரின் தாயார் (அப்போது உயிருடன் இருந்தால்), மனைவி, மகன்கள், மகள்கள் இவர்களுக்கு மட்டும் போய்ச் சேரும். இவர்கள் அனைவருமே முதல்கட்ட வாரிசுகள் ஆவார்கள். 

இரண்டாம்கட்ட வாரிசுகள்
இறந்தவரின் தந்தை இரண்டாம் கட்ட வாரிசாக வருகிறார். முதல் கட்ட வாரிசுகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே, இரண்டாம் கட்ட வாரிசாக, தந்தை, அவரின் இறந்த மகனின் சொத்து முழுவதையும் அடைவார். முதல் கட்ட வாரிசுகள் யார் யார் அப்போது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்குவீதம் சொத்தை அடைவார்கள்.

இந்து மதத்தின்படி
இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர், தன் சொத்தை விட்டுவிட்டு, உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அந்தச் சொத்து, அவரின் கணவர், மகன்கள், மகள்கள் அடைவார்கள்.

 இந்துமதப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து வேறு மாதிரி வாரிசுகளை அடையும். அதாவது, 

(1)அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இறந்து விட்டால், இறந்த பெண்ணின் சொத்து சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவளின் கணவருக்குப் போய்ச் சேரும்; கணவரும் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்குப் போய் சேர்ந்துவிடும்.

(2)இறந்த பெண்ணுக்கு, குழந்தையும் இல்லாமல், இருந்தால், அவளின் சொத்து, தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த சொத்தாக இருந்தால், அந்த சொத்து, திரும்பவும் அவளின் தந்தைக்கே போய்ச் சேர்ந்துவிடும்.

(3) இறந்த பெண்ணின் சொத்து, கணவரின் தகப்பனாரான மாமனாரிடமிருந்து கிடைத்து இருந்தால், அது அவளின் மாமனாருக்கே போய்ச் சேர்ந்து விடும். 

இப்படியாக, குழந்தை இல்லாமல் இறந்த இந்து பெண்ணின் சொத்து மூன்று வகைகளில் அந்தந்த வாரிசுகளை அடையும்; 

கிறிஸ்தவ மதத்தின்படி
கிறிஸ்தவர்களுக்கு உள்ள வாரிசுரிமைச் சட்டமான, இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-த்தின் படி, கிறிஸ்தவ ஆணோ, பெண்ணோ, உயில் எழுதாமல், சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டால், அவரின் சொத்து அவரின் கணவர் அல்லது மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கும், அவரின் பிள்ளைகளுக்கு (மகன்கள், மகள்கள்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கும் போய்ச் சேரும். 

குழந்தைகள் இல்லையென்றால், அடுத்தடுத்த வாரிசுகளை போய் சேரும்.

முஸ்லீம் மதத்தின்படி
முகமதியர்கள் வாரிசுரிமைச் சட்டமான ஷரியத் சட்டம் 1937-ன்படி, முகமதியர் ஒருவர், இறந்து விட்டால், அவரின் மகன்களுக்கு தலைக்கு இரண்டு பங்கும், அவரின் மகள்களுக்கு தலைக்கு ஒருபங்கும், இறந்தவரின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கிடைக்கும்.

 இதுபோக, மீதியுள்ள பங்குகள் மற்ற பங்காளிகளுக்குக் கிடைக்கும்.

 சற்று குழப்பமாக இருந்தாலும், அதற்கென்று அந்த சட்டத்தில் சில கணக்குகள் கொடுத்துள்ளனர்.

இந்து மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; கிறிஸ்தவ மதத்திலும் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது.
ஆனால் முகமதிய சட்டத்தில் உயில் எழுத முடியாது; ஏனென்றால், முகமதியர்களின் புனித நூலான குரானின் வாக்குப்படி, ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லாமல் செய்யும்படி உயில் எழுத முடியாது என்று சொல்லப் பட்டுள்ளது. 

ஆனாலும், சொத்தை வைத்திருப்பவர், அந்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம் என்று சலுகை கொடுக்கப் பட்டுள்ளது.

 அந்த உயிலை எழுத வேண்டுமானால், அவரின் வாரிசுகள் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும் என்று கன்டிஷனும் போடப் பட்டுள்ளது.

 எனவேதான், முகமதியர் உயில் எழுத முடியாது என்று பொதுவாகச் சொல்லி விடுவர்;

இந்து, கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை; உயிலை எழுதி அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும், கொடுத்து விடலாம்.

அமுலுக்கு வருவது எப்போது?
 உயில் எப்போதும், அதை எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்கு பின்னர்தான் அமலுக்கு வரும். உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் நடைமுறைக்கு வரவே வராது. அவர் இறந்த பின்னர்தான் நடைமுறைக்கு வரும்.

எத்தனை உயில்கள் எழுதலாம்?
ஒருவர் ஒரு உயிலைத்தான் எழுதி வைக்க முடியும்; அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், கடைசி உயில்தான் செல்லும். மற்ற உயில்கள் செல்லாமல் போய்விடும். 

ஆனாலும், சிலர், தன்னிடம் உள்ள பல சொத்துக்களை, வேறு வேறு உயில்கள் மூலம் எழுதி, தன் வேறு வேறு பிள்ளைகளுக்கு தனித்தனியே கொடுத்து விடும் வழக்கம் உள்ளது. இது தவறு என்று சொல்வதற்கு ஆட்கள் இல்லை;

ஒரு உயிர், ஒரு உயில்!
உயில் என்றாலே, “அவரின் கடைசி ஆசை” என்றுதான் அதற்குப் பொருள்; உயில் என்பதற்கு ஆங்கிலத்தில் Will என்றே சொல்கின்றனர். அப்படிப் பார்த்தாலும், அவரின் விருப்பம் என்றுதான் பொருள் வருகிறது. எனவே ஒரு மனிதனுக்கு ஆசை என்பது கடைசி ஆசை மட்டுமே தன் கடைசி விருப்பமாக இருக்க முடியும். எனவே ஒருவர் ஒரு உயில் மட்டும்தான் எழுதி நடைமுறைப் படுத்த முடியும். 

ஏற்கனவே எழுதிய உயிலை மாற்றி எழுத வேண்டும் என்றால், அந்த உயிலை ரத்து செய்து விட்டு, வேறு ஒரு புதிய உயிலை எழுத வேண்டும். அல்லது பழைய உயிலை திருத்தம் செய்து மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

 இப்படிப் பார்த்தால், ஒரு உயிருக்கு ஒரு உயில்தான் இருக்க முடியும் என்பதே உண்மை.

கூட்டணி ஆகாது
உயில் எழுதும்போது தனியே தனக்கு மட்டுமே உயில் எழுதிக் கொள்வதே சிறந்தது. கூட்டாக இரண்டு பேர் எழுதும் உயிலில் நிறைய சட்டசிக்கல்கள் வருகின்றன. கணவர் சொத்தை கணவரும், மனைவி சொத்தை மனைவியும் தனித்தனி உயில்கள் மூலம் எழுதிக் கொள்ளலாம். அதைவிட்டு விட்டு, இருவரும் ஒரே உயிலில் எழுதுவார்கள். அதில் எழுதும் வாசகங்கள் அந்த கூட்டு உயிலை நடைமுறைப் படுத்துவதில் சட்ட சிக்கலை உண்டாக்கிவிடும்.

இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக எழுதும் உயிலுக்கு ஜாயிண்ட் உயில் (Joint Will) என்று பெயர். அதில், கணவர் முதலில் இறந்து விட்டால், கணவரின் சொத்து மனைவிக்குப் போய்ச் சேரும் என்றும், மனைவி முதலில் இறந்து விட்டால், மனைவியின் சொத்து கணவருக்கு போய்ச் சேரும் என்றும் எழுதுவார்கள். இப்படிப்பட்ட உயிலை கூட்டு உயில் என்று சொன்னாலும், அது உண்மையில் மியூச்சுவல் உயில் (Mutual Will) என்னும் வகையைச் சேர்ந்ததாகும்.

கணவனும் மனைவியும் கூட்டாக வாங்கிய சொத்தை, கூட்டாக ஒரே உயில் எழுதி அந்த சொத்தை தன் வாரிசுகளில் யாருக்காவது கொடுப்பர். இப்படிப்பட்ட உயிலில், கணவர் முதலில் இறந்தால், அந்த உயில் நடைமுறைக்கு வராது. மனைவி நினைத்தால் அந்த உயிலை ரத்து செய்து விடலாம் என்று சில சட்டத் தீர்ப்புகளும் உள்ளன என்பதால், அந்த குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு தெளிவாக உயிலை எழுதி வைக்க வேண்டும்.

உயிலை நிறைவேற்றுபவர்
உயில்களில் எக்சிகியூட்டார்கள் என்னும் நிறைவேற்றாளர்களை நியமித்து இருப்பர். உயிலை எழுதியவர் இறந்த பின்னர், இந்த உயிலில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று ஒரு பொதுவான நபரை அந்த உயிலிலேயே அதை எழுதி வைத்தவர் நியமித்து வைத்து விட்டு போய் இருப்பார். அவரைத்தான் எக்சிகியூட்டர் (Executor) என்பர்.

 சொத்துக்காரர் இறந்த பின்னர், அவரின் உயில்படி, அந்த எக்சிகியூட்டர் வந்து, அவரின் சொத்துக்களை கணக்கெடுத்து, அந்த உயிலில் சொல்லி கடன்கள், உயில் எழுதியவரின் இறப்புச் செலவு, உயில் எழுதியவர் யாருக்காவது பணம் கொடுக்கச் சொல்லி இருந்தால் அதைக் கொடுப்பது, அவரின் சொத்துக்களை, அந்த உயிலில் சொல்லி உள்ளபடி பிரித்துக் கொடுப்பது போன்ற பல வேலைகளைச் செய்வார். 

அவரே அந்த உயிலுக்கு அதிகாரி. இறந்தவரின் வாரிசுகள் அதில் தலையிட முடியாது.

ஒரு உயிலில் ஒரு எக்சிகியூட்டர் மட்டும் நியமித்திருப்பர். பொதுவாக இது போதும். ஆனால் செய்ய வேண்டிய வேலையைப் பொறுத்து இரண்டுக்கு மேற்பட்ட பல எக்சிகியூட்டர்களையும் நியமித்திருப்பார். அது உயிலை எழுதி வைப்பவரின் விருப்பத்தையும், நம்பிக்கையையும் பொருத்தது. 

ஒரு எக்சிகியூட்டர் அந்த வேலையை செய்ய விரும்பம் இல்லாமல் இருந்தாலும், மறுத்து விட்டாலும், இறந்து விட்டாலும், மற்ற எக்சிகியூட்டர்கள் இருந்து அந்த வேலையைச் செய்வர். கூட்டாகவும் செய்வர்.  தனித்தனியாகவும் செய்வர். அதை அந்த உயிலில் தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

எக்சிகியூட்டர்கள் அவசியமா?
எல்லா உயிலிலிலும் எக்சிகியூட்டர் நியமித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது உயில் எழுதி வைப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது. அப்படி எந்த எக்சிகியூட்டார்களும் நியமிக்கவில்லை என்றால், வாரிசுகளில் யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்து கொள்ளலாம், தவறில்லை. 

எனவே உயிலில் இரண்டு வகை; ஒன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயில். மற்றொன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்படாத உயில் அவ்வளவுதான்.

கோர்ட்டில் ஒரு உயிலை புரபேட் செய்ய மனுச் செய்யும் போது, எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயிலில், அவரே மனுச் செய்ய வேண்டும். எக்சிகியூட்டர் நியமிக்கப்படாத உயிலில், இறந்தவரின் வாரிசுகளில் யாராவது மனுச் செய்ய வேண்டும்.

உயிலை பதிவு செய்ய வேண்டுமா?
உயிலை எழுதி வைத்தால் மட்டும் போதாது; அதை சட்டபூர்வமாக ஏற்படுத்தி வைக்க வேண்டும். உயிலை கையாலும் எழுதி வைக்கலாம். தட்டச்சு, கம்யூட்டர் பிரிண்ட் மூலமும் ஏற்படுத்தலாம். எப்படி இருந்தாலும், அது ஒரு பேப்பரில் இருந்தால் போதும். அதற்கு முத்திரை தீர்வை என்னும் ஸ்டாம்ப் பேப்பர் தேவையே இல்லை! வெறும் வெள்ளைப் பேப்பரில் எழுதி வைக்கலாம். அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அதை ரிஜிஸ்டர் என்னும் பதிவும் செய்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

 ஆனாலும், அந்த உயிலைப் பதிவு செய்து வைத்தால் (ரிஜிஸ்டர் ஆபீஸூக்குச் சென்று அந்த உயில் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்தால்) நல்லது. பின்நாளில் அது மிகுந்த நம்பிக்கைக்கு உரிய பத்திரமாக இருக்கும். யாரும் ஒரு போலி உயில் என்று குற்றம் சொல்லி விட முடியாது. அதற்காக அந்த உயிலை பதிவு செய்து வைப்பது நல்லது.

சாட்சிகள் வேண்டுமா?
ஆனாலும், உயில் எழுதியவர், அந்த உயிலில் உள்ள எல்லாப் பேப்பரின் பக்கங்களிலிலும் அவரின் கையெழுத்தைச் செய்து வைக்க வேண்டும். கடைசி பக்கத்தில் அவரின் கையெழுத்துக்குக் கீழே கண்டிப்பாக இரண்டு சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்று இருக்க வேண்டும். 

ஒரு உயில் செல்லும் என்று சொல்வதற்கு மிக முக்கியமானதே இந்த இரண்டு சாட்சிகளின் கையெழுத்துத்தான்! உயிலுக்கு சாட்சிகளின் கையெழுத்து அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. 

சிலர் வெகு அஜாக்கிரதையாக சாட்சிகள் கையெழுத்தை வாங்காமல் வைத்திருப்பர். அப்படி இருந்தால், அந்த உயிலே செல்லாமல் போய்விடும்.

சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்?
இந்த இரண்டு சாட்சிகளும், அந்த உயிலை எழுதியவர் போடும் அவரின் கையெழுத்தை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் உயிலை எழுதியவரும், சாட்களும் அந்த உயிலில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். இதை சட்டம் கட்டாயப் படுத்துகிறது. இரண்டு சாட்சிகளும் உயில் எழுதியவரின் கையெழுத்து போடுவதை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அதில் ஒரு சாட்சியாவது கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும் என்றும், மற்றொரு சாட்சி, உயில் எழுதியவரின் கையெழுத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது. இப்படி இருக்கும்போது, பொதுவாக இரண்டு சாட்சிகளுமே நேரில் பார்த்த சாட்சிகளாக இருப்பது மிக நல்லது.

எனென்றால், உயிலை எழுதியவர் இறந்தபின்னர், இந்த சாட்சிகள் இருவர்தான் அந்த உயிலை உண்மையாக எழுதிய உயில் என்று நிரூபிக்க இருக்கும் சாட்சிகள் ஆகும். அந்த உயிலை, அதை எழுதியவர்தான் எழுதி வைத்தாரா என்பது, வேறு யாருக்கும் தெரியாது.  எனவேதான் உயிலுக்கு சாட்சிகள் முக்கியம், முக்கியம் என்று சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது;

சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? 
நியாயமானவராக இருக்க வேண்டும். குழப்பவாதியாக இருக்க கூடாது. எதிரியின் பக்கம் சாய்ந்து, பிறழ்ந்து சாட்சி சொல்பவராக இருக்க கூடாது. என்ன நடந்தது என்பதை உண்மையாகச் சொல்பவராக இருக்க வேண்டும். அப்படியென்றால், சாட்சிகள், பொதுவானவராக இருப்பதுதானே நல்லது!

மேலும், சாட்சிகள் இருவரும் நிரந்தர விலாசத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். சாட்சி போட்டவுடன் கண்காணாத இடத்துக்கு போய் சேருபவராக இருந்து விடக் கூடாது. வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விடுபவராக இருந்து விடக் கூடாது.

மேலும், குறிப்பாக வயதானவராக இருக்கக் கூடாது. உயிலை எழுதியவர் இறப்பதற்கு முன்னரே, அதில் கையெழுத்துப் போட்ட சாட்சி இறந்து விட்டால், யாரை வைத்து அந்த உயிலை நிரூபிப்பது? சிக்கல் வந்துவிடும் அல்லவா? அல்லது உயிலை நிரூபிப்பதற்கு முன்னரே சாட்சி இறந்தாலும் கஷ்டமே! எனவேதான், குறிப்பாக உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், இளையவராகவே, ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். (ஒவ்வொருவரின் ஆயுளின் விதி என்பது வேறு!) முடிந்தவரை சிறு வயதினராக இருப்பது நல்லது.

சாட்சிகளின் தன்மை
மேலும், சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயிலின்படி பலனை (சொத்தை) அடைபவராக கண்டிப்பாக இருக்கக் கூடாது. அப்படி, அந்த உயிலில் பங்கு வாங்குபவரே சாட்சியாகவும் இருந்தால், அந்த உயிலும் செல்லாது ஆகிவிடும். எனவே இதில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

சாட்சிகள் நெருங்கிய உறவினராக இருந்தால்?
மேலும், உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், நெருங்கிய உறவினராக இருந்தால் வேறு ஒரு சிக்கல் வரும். உதாரணமாக, உயிலில் ஒரு மகளுக்குச் சொத்தை கொடுத்திருப்பார். அதில் சாட்சி போட்டவர், ஒரு மகனாக இருப்பார். முதலில் அப்பாவுக்காக அரை மனதுடன் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருப்பார். அப்பா இறந்தவுடன், அந்த சொத்தில் மகனுக்கும் ஆசை வந்துவிடும். அப்போது, சொத்தைப் பெறும் மகள், அந்த சாட்சி போட்ட மகனின் சாட்சியத்தை (வாக்குமூலத்தை) பெற வேண்டும். அப்போது அந்த மகன் உதவுவதற்கு வர மாட்டார். சாக்குப்போக்கு சொல்வார். தேவையில்லாமல் திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல ஆகிவிடும். எனவே நெருக்கமான, அல்லது பின்நாளில் வில்லத்தனத்துடன் நடந்து கொள்ளும் நபரின் சாட்சியை இப்போதே பெறாமல் இருப்பது நல்லது!

நன்றி : திரு Advocate Balakrishnan (06.10.2016)
https://gblawfirm.blogspot.in -ல் இருந்து

Monday, March 20, 2017

சிவில் வழக்கை எந்தக் கோர்ட்டில் போட வேண்டும்?


சிவில் வழக்கை எந்தக் கோர்ட்டில் போட வேண்டும்?

சிவில் வழக்குகளை எந்த கோர்ட்டில் போட வேண்டும் என்பதில் சட்டம் தெளிவாக்கி உள்ளது. இது சிவில் நடைமுறைச் சட்டம் 1908 என்ற சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

எல்லாச் சிவில் வழக்குகளுக்கும் இதுதான் பைபிள். ஒரு சிவில் வழக்கை யார், எப்படி, யார்மீது, எப்போது, எந்த கோர்ட்டில் போடவேண்டும் என்று இதில் தெளிவு
படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வழக்கு “சிவில் வழக்குதான்” என்பதை எப்படி முடிவுக்கு வரமுடியும்? அந்த வழக்கில் சிவில் உரிமை இருந்தால் அது சிவில் வழக்கு. சிவில் உரிமை என்பது மனிதனின் எல்லா சிவில் உரிமைகளும் இதில் அடங்கும். 

வேறு தனிச் சட்டங்கள் அந்த சிவில் உரிமைக்கு ஏற்பட்டுத்தாதவரை, எல்லா சிவில் உரிமை வழக்குகளையும் சிவில் கோர்ட்டிலேயே தாக்கல் செய்யலாம்.

 பொதுவாகச் சொன்னால், கடன் கொடுத்த பணத்தை திரும்ப வசூல் செய்வது, அசையாச் சொத்தில் ஏற்படும் எல்லா உரிமைகளும், சிவில் உரிமைகளே! 

கிரிமினல் குற்றங்களைத் தவிர மற்ற எல்லா உரிமைகளும் சிவில் உரிமை என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். 

ஒரு கோயிலில் சாமி கும்பிடுவது, அந்த சாமியை நம்புவது, அந்த சாமியைப் பற்றி பிரசங்கம் செய்வது என்பது அவனின் சிவில் உரிமைதான் என்று சென்னை ஐகோர்ட் 1982ல் ஒரு வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியது (AIR 1982 Mad 170).

  அதேபோலவே சுப்ரீம் கோர்ட்டும் 1995ல் ஒரு வழக்கில் அப்படியே தீர்ப்பு கூறி உள்ளது (AIR 1995 SC 2001). சாமி கும்பிடுவது ஒருவனின் தனிப்பட்ட சிவில் உரிமை. எனவே அதில் மற்றவர் தலையிட முடியாது. 

ஆனாலும், எப்படிச் சாமி கும்பிடவேண்டும் என்றும் கோயிலில் பூஜை முறைகள் எப்படி இருக்க வேண்டும் என நினைப்பது அல்லது கேட்பது அவனது சிவில் உரிமை இல்லை என்று ஒரு விளக்கமான தீர்ப்பை 1994ல் சென்னை ஐகோர்ட் வழங்கி உள்ளது (AIR 1994 Mad 27).

அசையாச் சொத்துக்களின் மீது வழக்குப் போடுவது என்பது ஒருவரின் சிவில் உரிமை சார்ந்ததே! 

ஆனாலும், வேறு ஒரு சட்டப்படி அந்த பிரச்சனைக்கு தீர்வு இருந்தால், அதைச் சிவில் வழக்காக, சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியாது. உதாரணமாக, பொது உபயோகத்துக்காக நில எடுப்பு செய்யும் அரசாங்க வேலைகளில், அதற்கென தனியே நில எடுப்புச் சட்டம் இருப்பதால், அதில் பாதிக்கப்பட்டவர், அதை சிவில் வழக்காகக் கருதி, சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

இந்தியாவில் சிவில் கோர்ட்டுகள் பல அடுக்கு முறைகளில் உள்ளன. தாலுகா அளவில் மாவட்ட முன்சீப் கோர்ட்டுகளும், சப்-கோர்ட்டுகளும், மாவட்ட அளவில் மாவட்டக் கோர்ட்டுகளும், மாநில அளவில் ஐகோர்ட்டுகளும், தேசிய அளவில் சுப்ரீம் கோர்ட்டும் உள்ளன.

சிவில் நடைமுறைச் சட்டம் 1908ல் பிரிவு 16-ம், பிரிவு 20-ம், எங்கு ஒரு சிவில் வழக்கைப் போட வேண்டும் என சொல்கிறது.

பிரிவு 16
பிரிவு 16, அசையாச் சொத்துக்களைப் பற்றியவழக்குகளைச் சொல்கிறது.

அதன்படி, அசையாச் சொத்தில் ஒருவருக்கு உள்ள உரிமையை நிலைநாட்டவும், அடுத்தவர் தொந்தரவு செய்தால் அதைத் தடுக்கவும், பாகப்பிரிவினை வழக்குகளும், அசையாச் சொத்தின் கிரயம், அடமானம் தொடர்பான வழக்குகளையும், அந்த அசையாச் சொத்து எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது.

பிரிவு 20
பிரிவு 20, அசையாச் சொத்து அல்லாத பிற வழக்குகளை (அதாவது பணம் கொடுக்கல் வாங்கல், போன்ற பணப்பிரச்சனை கொண்ட வழக்குகளை) எதிர்பார்ட்டி எந்த இடத்தில் வசிக்கிறாரோ அல்லது எந்த இடத்தில் வியாபாரம் செய்து வருகிறாரோ, அந்த எல்லைக்குள் இருக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. 

மேலும், இந்த பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது, அல்லது ஒரு உடன்படிக்கை கையெழுத்து ஆகும்போது, அவை எந்த இடத்தில் நிகழ்ந்ததோ, அல்லது பல இடங்களில் நிகழ்ந்திருந்தால், அப்படி நடந்த ஏதாவது ஒரு இடத்தின் எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் அந்த வழக்கை தாக்கல் செய்யலாம் என்ற சலுகையும் உள்ளது.

எந்த எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் வழக்குப் போடலாம் என்று முடிவான பிறகு, வேறு ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அந்தச் சிவில் வழக்கு எவ்வளவு தொகை சம்மந்தப்பட்ட வழக்கு என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

 அந்த தொகைக்கு ஏற்ப அந்த வழக்கை மாவட்ட முன்சீப் கோர்ட், சப்-கோர்ட், மாவட்ட கோர்ட், ஐகோர்ட் என எங்கு அந்த வழக்கை தாக்கல் செய்யலாம் என முடிவு செய்ய வேண்டும். அதைpecuniary jurisdiction பெக்யூனரி வரையறை என்பர்.

சென்னை போன்ற நகரங்களில், ரூ.5,000/-க்கு குறைவான வழக்காக இருந்தால், அதை சென்னை ஸ்மால் காஸஸ் கோர்ட் என்னும் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

 சென்னை தவிர வேறு பகுதிகளாக இருந்தால், ரூ.1 லட்சம் வரையிலான தொகை கொண்ட வழக்குகளை மாவட்ட முன்சீப் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். 

ரூ.5 லட்சம் வரையிலான தொகை கொண்ட வழக்காக இருந்தால், சப்-கோர்ட் என்னும் சப்ஆர்டினேட் கோர்ட்டில் (Sub-Ordinate Court or Sub-Court) தாக்கல் செய்ய வேண்டும்.

 ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்காக இருந்தால் மாவட்ட அளவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் (District Court) தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை பெருநகரில் வேறு மாதிரி பிரிவுகள் உள்ளன. 

அதன்படி, ரூ.10 லட்சம் வரை சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் (Asst. City Civil Court) தாக்கல் செய்ய வேண்டும். 

ரூ.25 லட்சம் வரை சென்னை மாவட்ட சிட்டி சிவில் கோர்ட்டில் (Principal District Court and Addl. District Court) தாக்கல் செய்யலாம்.

மேலும் இன்னொரு சலுகையாக, சென்னை எல்லைக்குள் உள்ள வழக்குகளில் ரூ.25 லட்சத்துக்கு மேல் தொகை உள்ள வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாம். 

சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும் சிவில் வழக்குகளுக்கு நீதிமன்றக் கட்டணம் வெகுகுறைவு. அதாவது 1% கட்டணமே. 

ஆனால் மற்ற எல்லாக் கோர்ட்டுகளிலும் தாக்கல் செய்யும் சிவில் வழக்குகளுக்கு 7.5% நீதிமன்றக் கட்டணம். (இந்த 7.5% கட்டணம் அதிகம் என்று தமிழக அரசு மீது தொடர்ந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது).

இப்படியாக சிவில் வழக்குகளை அந்தந்த மட்டத்தில் உள்ள சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம்.

நன்றி : திரு Advocate Balakrishnan (17.11.2016)
https://gblawfirm.blogspot.in -ல் இருந்து

சாட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!


சாட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!

ஒரே ஒரு சாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்கலாம். 
நீதிமன்றம் சாட்சியம் அளித்த சாட்சியின் நம்பகத்தன்மையை தான் பார்க்க வேண்டுமே தவிர எத்தனை சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளார்கள் என்று பார்க்கக்கூடாது. ஒரே ஒரு சாட்சியின் வாக்குமூலம் மிகவும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவாக கூடுதல் சாட்சியம் தேவையில்லை.
P. V. Haridas and Smt. Anuja Prabhussai Mohammed Badshaha Sayyad and Others 
 Vs
State of Maharastra, (2016-Cri.LJ-70-NOC-Bom),
Criminal Appeal No - 580&100/2007
Thanks to : Mr. Dhanesh Balamurugan Advocate
குறிப்பு: இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-134லிலும் எந்த வழக்கிலும் ஏதாவதொரு சங்கதியை மெய்ப்பிப்பதற்கு இத்தனை எண்ணிக்கையுள்ள சாட்சிகள் வேண்டுமென்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி