disalbe Right click

Saturday, May 27, 2017

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது. இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக் கடன் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன் பெறலாம்.
தங்கள் மனுவின் நிலை பற்றியும், மாணவர்கள், இணையதளத்தில் அறியலாம்.
கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையும் பார்க்கலாம்.
சரியாக ஒத்துழைக்காத, வங்கி அதிகாரிகள் மீது, புகாரும் தரலாம்.
இந்த வசதி பற்றி, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம், சில வங்கிகள், வித்யாலட்சுமி இணையதளத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. இதுபற்றி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, புகார்கள் சென்றன. அதை தொடர்ந்து, வங்கிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், ’அனைத்து கல்விக் கடன் மனுக்களை, இந்த இணையதளம் வழியாகவே பெற வேண்டும். ’இந்த வசதி பற்றி, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், 2015 முதல், இதுவரை வழங்கிய கடன் பற்றி, இணையதளத்தில், வங்கிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டு உள்ளது.

நன்றி : தினமலர் - கல்விமலர் - 28.05.2017

போலி ஆவணங்களைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

போலி ஆவணங்களைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய தண்டணைச் சட்டத்தில் போலி (பொய்) ஆவணங்கள் பற்றி பிரிவு 463 முதல் பிரிவு 474 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 463
  • யாருக்காவது சேதம் அல்லது கேடு விளைவிக்கின்ற அல்லது மோசடி செய்ய அல்லது மோசடி செய்யப்படலாம் என்ற எண்ணத்துடன் ஒரு பொய்யான பத்திரம் அல்லது அதன் ஒரு பகுதியை தயாரிப்பவர் பொய் ஆவணம் புனைந்தவர் ஆவார்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 464
  • கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர், கையெழுத்து போட வேண்டிய இடத்தில் தன்னுடைய கையெழுத்தை போடாமல், தன்னுடைய பெயரை எழுதினால், அவர் பொய் ஆவணம் தயாரித்த குற்றம் செய்தவர் ஆகிறார்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 465
  • பொய்யாவணம் புனைகின்ற எவரொருவருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதித்து தீர்ப்பு வழங்கப்படும். இதற்கு பிடியாணை வேண்டும். ஜாமீன் உண்டு.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 466
  • ஒரு நீதிமன்றத்தில் உள்ள பதிவுக்கட்டு அல்லது பொது ஊழியரால் ஒரு துறையில் பதிவேடாக வைத்து பராமரித்து வருகின்ற பத்திரத்தை அல்லது ஆவணத்தை பொய்யாக புனைகின்ற எவரும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை வித்தித்து தண்டிக்கத் தக்கவராவார். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 467
  • மதிப்புமிக்க பத்திரம் அல்லது உயில் அல்லது காசோலை எதையும் பொய்யாக புனைகின்ற எவரும் ஆயுள் தண்டணை அல்லது பத்து ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 468
  • பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற உட்கருத்துடன் பொய் ஆவணம் புனைகின்ற எவரும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கத் தக்கவராவார்.
  • மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
  • இதுபோன்ற குற்றத்தைச் செய்தவரை கைது செய்ய பிடியாணை வேண்டியதில்லை.
  • மேலும் இக்குற்றம் புரிந்தவருக்கு ஜாமீனும் கிடையாது
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 469
  • யாருடைய பெயரையாவது கெடுக்க வேண்டும் என்று எண்ணி ஒரு பத்திரத்தினை பொய்யாக புனைகின்ற எவரும் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கத் தக்கவராவார்.
  • மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 470
  • ஒரு பத்திரத்தின் அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியானது பொய்யாக புனையப்பட்டு இருந்தால், அந்தப் பத்திரம் அல்லது அந்த ஆவணம் முழுவதுமே பொய் ஆவணம் ஆகும்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 471
  • பொய்யாக புனையப்பட்ட ஒரு பத்திரத்தை அல்லது ஒரு ஆவணத்தை அது பொய்யானது என்று தனக்குத் தெரிந்திருந்தே பயன்படுத்துபவர் எவரையும் அந்த பத்திரத்தை அவர் புனைந்தது போன்றே தண்டிக்கப்படுதல் வேண்டும்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 472
  • இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 467ல் கூறப்பட்டுள்ள பொய் ஆவணம் அல்லது போலி பத்திரம் தயாரிப்பதற்கு முத்திரை அல்லது வேறு கருவி ஏதேனும் அத்தகைய எண்னத்துடன் வைத்திருப்பவர் எவர் ஒருவரும் ஆயுள் சிறை அல்லது ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 473
  • இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 467ல் கூறப்பட்டுள்ள பிரிவின்படி இல்லாமல் இந்த அத்தியாயத்தில் இருக்கின்ற ஏதேனும் ஒரு பிரிவின்படி பொய் ஆவணம் புனையும் பொருட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்று முத்திரை அல்லது வேறு கருவி ஏதேனும் தயாரிக்கின்ற அல்லது அது கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டது என்று தெரிந்திருந்தே வைத்திருப்பவர் எவர் ஒருவரும் ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 474
  • இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 466 மற்றும் பிரிவு 467களில் கூறப்பட்டுள்ள பொய் ஆவணத்தை அல்லது போலி பத்திரத்தை அது போலியானது என்று தெரிந்தே தம்வசம் வைத்துள்ள எவர் ஒருவரும் ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

***********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Friday, May 26, 2017

வேலைக்குச் செல்லும் பெண்களின் உரிமைகள் என்ன?

வேலைக்குச் செல்லும் பெண்களின் உரிமைகள் என்ன?

பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! 

பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards

பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards 
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன.. அறிவோம்! #VikatanPhotoCards
நன்றி : விகடன் செய்திகள் - 27.05.2017


Thursday, May 25, 2017

அரசு ஊழியர்களுக்கு வருமானவரி கணக்கீடு செய்ய...

அரசு ஊழியர்களுக்கு வருமானவரி கணக்கீடு செய்ய...
அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
வருமான வரிதானே… பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும் இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்கு பலரும் உயர்ந்துள்ளனர்.
அரசு ஊழியர்களில் பலர் இப்போது வருமான வரி கட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப் பரிசீலனையில் உள்ள ஊதியச் சீரமைப்புக்குழு அறிக்கை நடைமுறைக்கு வரும்போது, இன்னும் பலர் வரி வட்டத்துக்குள் வந்துவிடக்கூடும். முன்பு ஆண்டுக்கொருமுறை கட்டிய வருமான வரியை தற்போது மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்.
ஊதியமும் ஓய்வூதியமும் ஒன்றே
வருமான வரிக் கணக்கீட்டைப் பொறுத்தவரை, ஊதியமும், ஓய்வூதியமும் ஒன்றுதான். மூத்தக் குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு வேறுபடும். அதுவும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு வரி விகிதம் ஒரே மாதிரியே இருக்கும்.
பணியில் உள்ள ஊழியருக்கு, அவருக்குச் சம்பளம் வழங்கும் அலுவலர் ஒவ்வொரு நிதியாண்டுக்கான வருமான வரியைக் கணக்கிட்டு டிடிஎஸ் பிடிப்பார். ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற ஆரம்பித்தபிறகு, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் வருமான வரியைக் கணக்கிட்டு வரி பிடிப்பார்.
சார்நிலைக் கருவூல அலுவலர், உதவிக் கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலர் எனப் பதவிப் பெயர்கள் பலவாக இருப்பினும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வேலையை இந்த அலுவலர்கள் செய்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, ஓய்வூதியம் வழங்குவதற்கென்றே அலுவலர் உள்ளார்.
இருவகை வருமான வரிக் கணக்கீடு
டியூ பேசிஸ் (Due basis) மற்றும் டிரான் பேசிஸ் (Drawn basis) என இரு வகையாக வருமான வரி கணக்கிடப்படக்கூடும். அதாவது, ஒரு நிதியாண்டு முழுக்க ஒருவர் பெறக்கூடிய அனைத்து வருவாய் இனங்களையும் கணக்கிட்டு, அதற்கான வருமான வரியை மார்ச் தொடங்கி பிப்ரவரி முடிய 12 மாத சமதவணைகளில் பிடித்தம் செய்வது டியூ பேசிஸ். வருமான வரியைக் கணக்கிட முடியாத இனங்கள், நிலுவை வரவுகள் போன்றவை முன்பே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தால், அவற்றைப் பட்டுவாடா செய்யும்போது வரியைப் பிடித்து விடுவது டிரான் பேசிஸ்.
டியூ பேசிஸ் அல்லது டிரான் பேசிஸ் இவற்றுள் எது முன்போ, அப்போதே வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதே டிடிஎஸ் விதிமுறை.
இவ்வாறு செய்வதால், ஒரு குறிப்பிட்ட தேதியில் வரி செலுத்த வேண்டியவரிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டிய வரி, நிலுவை இல்லாமல் அரசுக் கணக்கில் போய்ச் சேர்ந்துவிடும்.
ஓய்வு பெறுவோர்
பணியிலிருந்து ஓய்வு பெறுவோர், 1. பணிக்கொடை, இறப்புப் பணிக்கொடை மற்றும் ஓய்வுப் பணிக்கொடை, 2. ஓய்வூதியம் கணக்கீடு, 3. ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம், 4. சொந்தக் காரணங்களுக்கான ஈட்டாத விடுப்பு ஊதியம் ஆகிய நான்கு பணப் பயன்களைப் பெறுவார்கள். இவற்றுள் முதல் மூன்று இனங்கள் வருமான வரி விலக்குப் பெற்றவை. நான்காவது இனமாக உள்ள மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம், வருமான வரிக்கு உட்பட்டது. எனவே, பணியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கான வருமான வரிக் கணக்கீடு பின்வருமாறு அமையும்.
ஊழியர் ஒருவர் 28.02.2018 அன்று ஓய்வு பெற உள்ளதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-க்கான இவரது வருமான வரியை மார்ச் 2017-லேயே கணக்கிட வேண்டும். அந்தக் கணக்கீடு பின்வருமாறு இருக்கும்.
1. மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஊதியம், 2. மார்ச் 2018 அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். மேற்கண்ட இரண்டு இனங்களின் கூட்டுத் தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 முடிய சம்பளம் வழங்கும் அலுவலர் பிடிக்க வேண்டும்.
மார்ச் 2018 முதல் அவர் ஓய்வூதியம் பெற ஆரம்பித்துவிடுவார். அப்போது, 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரியானது, அவர் பெறப்போகும் ஓய்வூதியத்தின் கூட்டுத்தொகைக்குக் கணக்கிடப்பட்டு, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.
இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். இன்னொரு ஊழியர் 31.10.2017 ல் ஓய்வு பெறுவதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-ம் ஆண்டுக்கான இவரது வருமான வரிக் கணக்கீடு, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குரியதாக இருக்கும்.
1. மார்ச் 2017 முதல் அக்டோபர் 2017 வரை பெறப்போகும் ஊதியம், 2. நவம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஓய்வூதியம், 3. 1.11.2017 அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். இதற்கான வருமான வரி, 12 சம தவணைகளில் மார்ச் 2017 ஊதியம் தொடங்கிப் பிடித்தம் செய்யப்படும்.
21.11.2017 அன்று அவர் பணியிலிருந்து விடுபட்டு செல்லும்போது, அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி மற்றும் நிலுவையாக உள்ள வரி பற்றிய சான்று ஒன்றை சம்பளம் வழங்கும் அலுவலர் வழங்க வேண்டும். இந்தச் சான்றின் அடிப்படையில், மீதமுள்ள வருமான வரி இவரது ஓய்வூதியத்திலிருந்து, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.
தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களினால் இவரது ஈட்டாத விடுப்பு ஊதியத் தொகையை முன்கூட்டியே கணக்கிட முடியாதபோது, விடுப்பு ஊதியம் தவிர்த்து மற்ற இடங்களின் மீதான வரியைக் கணக்கிட்டுப் பிடித்தம் செய்யப்படும். பின்னர், விடுப்பு ஊதியம் கணக்கிடப்பட்டு வரி சீரமைக்கப்படும். அல்லது காலம் தாழ்ந்து விடுப்பு ஊதியம் வழங்கப்படுமானால், அப்போதே வரி பிடித்தம் செய்யப்படும். விடுப்பு ஊதியம் மூன்று மாதங்களுக்குக் குறைவாகவும் இருக்கலாம்.
மறுவேலைவாய்ப்பு
ஆசிரியர்களுக்கு மறுவேலை வாய்ப்பு (Re-Employment) என்ற சலுகை உண்டு. அதாவது, ஓர் ஆசிரியரின் ஓய்வு பெறும் நாள் 31.12.2017 என்று வைத்துக் கொள்வோம். மற்ற அரசு ஊழியர் களைப் போல் ஓய்வுபெற்ற அன்றே ஆசிரியர், பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுச் சென்றுவிடுவது கிடையாது.
ஓய்வு பெறும் மாதம் எதுவாக இருந்தாலும், ஆசிரியர்கள் அந்த கல்வியாண்டின் கடைசி நாள் வரை பணியில் தொடர அனுமதிக்கப் படுகிறார்கள். கல்வியாண்டு என்பது ஜூன் முதல் நாள் தொடங்கி மே 31 வரை ஆகும். இதன்படி மேற்சொன்ன ஆசிரியர் 31.12.2017 அன்று ஓய்வு பெற்றிருந்தாலும் 01.01.2018 முதல் 31.05.2018 முடிய பணியில் தொடர்ந்து நீடிப்பார். இது அவரது மறுவேலை வாய்ப்புக் காலம் ஆகும்.
மறுவேலைவாய்ப்புக் கால ஊதியம் என்பது, அவர் ஓய்வுபெற்ற கடைசி மாதமான 2017 டிசம்பரில் பெற்ற ஊதியத்திலிருந்து, 01.01.2018 முதல் அவர் பெறப்போகும் ஓய்வூதியத்தைக் கழித்தால் கிடைப்பது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒருவர் ஜனவரி 2018-ல் பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியமும், ஜனவரி 2018-ல் பெற உள்ள ஓய்வூதியமும் சேர்த்துதான் டிசம்பர் 2017-க்கான அவரது ஊதியம் ஆகும். அதன்படி 2017-2018 நிதியாண்டுக்கான அந்த ஆசிரியரின் வருமான வரி, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப்பட வேண்டும்.
1. மார்ச் 2017 முதல் டிசம்பர் 2017 வரை பெறும் ஊதியம், 2. ஜனவரி 2018 முதல் பிப்ரவரி 2018 வரை பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியம், 3. ஜனவரி 2018 பிப்ரவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்குரிய ஓய்வூதியம், 4. ஓய்வு பெற்ற மறுநாளுக்குப்பின் அவர் பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். இவற்றுக்கான வருமான வரி மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை சம்பளம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.
இவர் 31.05.2018 வரை மறுவேலை வாய்ப்பில் – பணியில் தொடர்வதால் 2018-2019-க்கான வருமான வரிக் கணக்கீடும் இதே சம்பளம் வழங்கும் அலுவலரால் கணக்கிடப்படக்கூடும். அது பின்கண்டவாறு இருக்கும்.
1. மார்ச் 2018 முதல் மே 2018 முடிய பெற உள்ள மறுவேலைவாய்ப்பு ஊதியம்,
2. ஏப்ரல் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை பெறப்போகும் ஓய்வூதியம்.
குறிப்பு: மறுவேலைவாய்ப்பு காலத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி வழங்கப்படாது. மறுவேலை வாய்ப்பு முடிந்து, ஓய்வூதியம் மட்டும் பெறும் ஜூன் 2018 முதல் ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி + மருத்துவப்படி சேர்த்துத் தரப்படும். வரிசை எண் 1 + 2-ல் கண்ட தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, அதை 12 சம தவணைகளாக்கி மார்ச் 2018 முதல் மே 2018 வரை, சம்பளம் வழங்கும் அலுவலரே பிடித்தம் செய்துவிடுவார். ஜூன் 2018 முதல் இவரது வருமான வரிக் கணக்கீடு, இவர் ஓய்வூதியம் பெற தேர்வு செய்துள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு, பிடித்தம் செய்யப்படும்.
ஊதியம் + ஓய்வூதியம் + மறுவேலை வாய்ப்பு ஊதியம் + விடுப்பு ஊதியங்களை வருமான வரிக்குக் கணக்கிட்டு, அதை 12 தவணைகளில் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை. அரசு ஊழியர்கள் இந்த வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொண்டால், வரி கட்டுவது சுமையாக இருக்காது.

நன்றி : நாணயம் விகடன் – 28.05.2017

ரூபாய் நோட்டு வாபஸ்! 5 லட்சம் கோடி ரூபாய் லாபம்!

ரூபாய் நோட்டு வாபஸ்! 5 லட்சம் கோடி ரூபாய் லாபம்! 
10 அம்சங்கள்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவ., 8 ம் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார். இந்த நடவடிக்கை, டிச., 19ம் தேதி வரை அமலில் இருந்தது. இதனால் நாட்டுக்கு பல நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இது குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன் நாட்டில், 17.77 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இதில், 15.44 லட்சம் கோடி ரூபாய் அதிக மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள். 2.33 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 100 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதே நிலையை கடைப்பிடித்து இருந்தால், நடப்பு மே மாதத்தில் புழக்கத்தில் இருக்க வேண்டிய கரன்சி நோட்டுகளின் மதிப்பு, 19.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்து இருக்கும். ஆனால், ரிசர்வ் வங்கியின் குறிப்புகளின்படி கடந்த ஏப்ரல் இறுதியில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகளின் மதிப்பு, 14.2 லட்சம் கோடி ரூபாய் தான். 
2.
அதாவது, 14.2 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்திலேயே நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்காமல்விட்டு இருந்தால் கூடுதலாக, 5 லட்சம் கோடி ரூபாய் கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருந்து இருக்கும். தற்போது அந்த தொகைக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. 
3.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2016 - 17 நிதியாண்டில், வருமான வரி கணக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, 23.8 சதவீதம் அதிகரித்துள்ளது.இதில், 10 சதவீதம் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் வந்தது என்பது மிகையல்ல. இந்த நிதியாண்டில், 91 லட்சம் பேர் புதிதாக வருமான வரி வரம்புக்குள் வந்துள்ளனர். வழக்கமாக, ஆண்டுதோறும், 20 லட்சம் முதல், 25 லட்சம் பேர் வரை தான் புதிதாக வருமான வரி வரம்புக்குள் வருவார்கள். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன், தினமும், ஒரு லட்சம் பேர் பான் கார்டு கேட்டு விண்ணப்பித்து வந்தனர். தற்போது இது,தினமும் 2 லட்சம் முதல், 3 லட்சம் பேர் வரை என அதிகரித்துள்ளது. 
4. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளது. 2016 -17 நிதியாண்டில், மொத்தம் 300 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ன. இதே நிலை நீடித்தால், நடப்பு 207 -18 நிதியாண்டில், 2,500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மொபைல் போனில் உள்ள பேடிஎம், எஸ்.பி.ஐ., பட்டி, பிரிசார்ஜ் போன்ற ஆப்கள் மூலம் தினமும், 200 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை நடக்கிறது. அரசு சார்பில் பீம் ஆப் ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை, 2 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பீம் மற்றும் யு.பி.ஐ., மூலம், தினமும், 140 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதே போல் டெபிட் கார்டு பயன்பாடும் அதிகரித்துள்ளது. 2015 - 16 நிதியாண்டில், டெபிட் கார்டு மூலம், 117 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பண மதிப்பு, 1.58 லட்சம் கோடி ரூபாய். 2016 - 17 நிதியாண்டில் இது, 240 கோடி பரிவர்த்தனைகள், 3.3 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
5.
ரூபாய் வாபஸ் நடவடிக்கையால், வங்கிகளுக்கு பண வரத்து அதிகரித்துள்ளது. வங்கிகளில், 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிப்பு கணக்குகளில் டிபாசிட்செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரிசர்வ் வங்கி அறிவிக்கு வட்டி குறைப்பு நடவடிக்கைகளின் பலன் மக்களுக்கு போய் சேரும் அளவுக்கு வங்கிகளின் நடவடிக்கை மாறி உள்ளது. குறிப்பாக கடன்களுக்கான வட்டி குறைப்பு சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மிகவும் பலன் அளிப்பதாக இருக்கும். இதேபோல், வீட்டுகடன்களுக்கான வட்டி, 9.3 சதவீதத்தில் இருந்து, 8.2 சதவீதமாக குறைந்துள்ளது. 
6. இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் சேமநல நிதியில், பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன், 3.7 கோடியாக இருந்தது. இது, கடந்த மார்ச் மாதம், 4.5 கோடி பேராக அதிகரித்துள்ளது. ஏராளமான புது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இ.பி.எப்., தொகை செலுத்துவதையே இது காட்டுகிறது. 
7. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, மாநில மின் வாரியங்களுக்கு பெரிதும் உதவி உள்ளது. மின் வாரியங்கள், மின் கட்டணமாக, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட, 4,500 கோடி ரூபாய் அதிகம். இதே போல், உள்ளாட்சி அமைப்புகளின் வரி வசூலும் அதிகரித்துள்ளது. 
8.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்துது, 3 சதவீதமாக இருந்தது. தற்போது இது, 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
9.
பெட்ரோல் பங்க்குகளில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்துவது, 4,500 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது இது, 12 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சதவீத கணக்கில், 9 சதவீத்தில் இருந்து, 20 சதவீதமாக அதிரித்துள்ளது. 
10.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முன், இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் ஆன் லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு மொத்த முன்பதிவில், 50 சதவீதமாக இருந்தது. தற்போது இது, 68 சதவீதமாக அதிகரித்துள்ளது

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.05.2017

வீட்டு மனை தொடர்பான பத்திரங்களை பதியாதீர்!

வீட்டு மனை தொடர்பான பத்திரங்களை பதியாதீர்!
மனை விற்பனையை பதிய வேண்டாம், சார் - பதிவாளர்களுக்கு உத்தரவு
'வீட்டுமனை மற்றும் மனைப்பிரிவு தொடர் பான விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய வேண்டாம்' என, சார் பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அங்கீகாரமில்லா மனை விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, சென்னை உயர் நீதி
மன்றம், 2016, செப்., 9ல், தடை விதித்தது. இது மே, 12ல், தளர்த்தப்பட்டது. அங்கீகாரமில்லா மனை மறுவிற்பனையை மட்டும் அனுமதிக்கும் வகையில், தமிழக அரசின், 2016 அக்., 20ல், அரசாணைப்படி, பத்திரப்பதிவு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதித்தது. இதன்படி, தமிழக அரசு அறிவித்துள்ள மனைகள் வரன்முறைத் திட்டத் தைச் செயல்படுத்த, நீதி மன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும், மனை விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, சார் - பதி வாளர்கள் மறுத்து வருகின்றனர். இதனால், சார் - பதிவாளர்களுடன், மக்கள் வாக்கு வாதத்தில் ஈடு படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி, மனை மறு விற்பனை பத்திரங்களை பதிவு செய்யலாம். ஆனால், அந்த உத்தரவைஅமல்படுத்துவதில், சட்ட வல்லுனர்கள் இரு வேறு கருத்துகளை தெரிவித் துள்ளதால், அமல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள் ளது.
எனவே, 'தற்போதைக்கு, மனைப்பிரிவு, மனை கள் தொடர்பத்திரங்களை பதிவு செய்ய வேண்டாம்' என, சார் - பதிவாளர்களுக்கு, மேலதிகாரிகள் உத்தரவு இட்டுள்ளனர். வழக்கின் இறுதி விசாரணை நாளான, ஜூன், 12 வரை இதே நிலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.உயர் நீதிமன்றம் தடையை தளர்த்திய பிறகும், மறு விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, சார் - பதிவாளர்கள் மறுப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.05.2017


Tuesday, May 23, 2017

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்
மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது
சென்னை: வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல், மூன்று நிறங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்பட உள்ளன. அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத்தேர்வும் அமலாக உள்ளது.
புதிய மதிப்பெண் முறை
இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில், வினாத்தாள் முறை மற்றும் மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முதலில், பிளஸ் 1க்கும், அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2க்கும் புதிய மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, தற்போது பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கு, தலா, 1,200 ஆக இருக்கும் மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்படும்.
மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலத்திற்கு, தலா, 100 மதிப்பெண்களும், முக்கிய பாடங்களுக்கு தலா, 100 மதிப்பெண்களும் வழங்கப்படலாம் என, ஆலோசிக்கப்படுகிறது.
அரசாணையாக
இதில், செய்முறை தேர்வு இருக்கும் பாடங்களில் அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுக்கு, தலா, 10 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு, 80 மதிப்பெண்களும் இருக்கும் என, தெரிகிறது.
மேலும், நான்கு முக்கிய பாடங்களில், ஒரு பாடம் மட்டும், விருப்பப் பாடமாக வழங்கப்பட உள்ளது.
அதேபோல், தேர்வு எழுதும் நேரத்தையும், மதிப்பெண்ணுக்குஏற்ப குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'இதற்கான கோப்பு, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின், அரசாணையாக வெளியிடப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வினாத்தாளும் மாறுகிறது!
பொதுத்தேர்வுகளில் மாற்றம் வரும் போது, வினாத்தாள் தயாரிப்பு முறையும் மாற்றப்பட உள்ளது. மாணவர்கள், புத்தகத்தில் உள்ள வரிகளை மனப்பாடம் செய்து, கட்டுரை வடிவில் எழுதும் தேர்வு முறை, தற்போது உள்ளது.
இதில், அதிக மதிப்பெண் பெற்றாலும், போட்டி தேர்வுகளிலும், உயர் கல்வியிலும், மாணவர்களால் ஜொலிக்க முடிவதில்லை. எனவே, வினாத்தாளில், சி.பி.எஸ்.இ., போல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதில், சரியான விடையை தேர்வு செய்யும், 'அப்ஜெக்டிவ்' முறை வினாக்கள் அதிகமாக இருக்கும். மேலும், பாடத்தில் உள்ள அடிப்படை சூத்திரங்களை பயன்படுத்தி, சிந்தித்து விடை எழுதும் வகையிலான, புதிய வினாக்களும் இடம்பெற உள்ளன.
நன்றி : தினமலர் நாளிதழ் – 22.05.2017

Sunday, May 21, 2017

நீதிபதிகளை விமர்சிக்கலாமா?

நீதிபதிகளை விமர்சிக்கலாமா? 
விமர்சனத்துக்கான அளவுகோல் என்ன?
ஜெயலலிதாவை நிரபராதி என்று விடுதலை செய்கிறேன். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு இந்த வழக்கில் பெரிய பங்கு இல்லை என்பதால், அவர்களையும் விடுதலை செய்கிறேன்” என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, மே 11, 2015 அன்று, தீர்ப்பை வாசித்ததும், இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ‘நெட் டிராஃபிக்’ பிரச்னையில் சிக்கித் திணறின. அடுத்த சில நொடிகளில், சமூக வலைத்தளங்களின் ‘டிரெண்ட்’டில், டாப்பில் இருந்தவர்கள், ஜெயலலிதாவும் நீதிபதி குமாரசாமியும்தான்.
அந்த சமயத்தில், சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார், தமிழ்நாடு – பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம். அதில், ‘நீதிபதி குமாரசாமியையையும் அவருடைய தீர்ப்பையும் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார். அந்த அறிக்கையும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
பார் கவுன்சில் தலைவர் செல்வத்தின் அறிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதில், ‘‘செல்வத்தின் இந்தக் கருத்து தவறானது. ஜனநாயக அமைப்பில், நீதிமன்றத் தீர்ப்பை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். தமிழ்நாடு – பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாதா?என்ற கேள்விகளை, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் முன்பாக வைத்தோம். அவர்களின் கருத்துகள்…
‘‘அப்படியானால் மேல்முறையீடு செய்வதே தவறா?”
மூத்த வழக்கறிஞர் துரைசாமி: “நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்றால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாதே. மேல்முறையீட்டு வழக்கை நடத்தும் வழக்கறிஞர், ‘கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது. பொருத்தமில்லாதது. நீதிபதி இந்த வழக்குக்குப் பொருந்தாத வகையில் தீர்ப்பளித்துள்ளார்’ என்று சொல்லித்தான் மனுச் செய்கிறார். அதை ஏற்றுக்கொண்டுதான் அந்த மனுவையே விசாரணைக்கு எடுக்கிறது, மேல் நீதிமன்றம்.
கீழ் நீதிமன்றத்தில் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறானது என்று மேல் நீதிமன்றத்தில் குறிப்பிடப்படுவதற்கு என்ன அர்த்தம்? அங்கு நீதிபதியும் விமர்சிக்கப்படுகிறார் என்றுதான் அர்த்தம். அதேசமயம், நீதிபதிகளின் மீதான விமர்சனம், அவர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இருக்கலாமே தவிர, தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ஜெயலலிதா வழக்கில் கணக்கைக் தவறாகப் போட்டுக் காட்டி, ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை விமர்சிக்கலாம். குமாரசாமி தனக்கிருக்கும் அறிவை சரியாகப் பயன்படுத்தாமல் அல்லது முழுமையாகப் பயன்படுத்தாமல், தீர்ப்பை வழங்குவதில் தவறு செய்துள்ளார் என்று குறிப்பிட்டால் அது தவறில்லை. அதாவது, விமர்சனம் தவறில்லை. ஆனால், உள்நோக்கம் கற்பிப்பது தவறு. ஒரு நீதிபதி உள்நோக்கத்துடன் இந்தத் தீர்ப்பை எழுதி உள்ளார், ஆதாயம் அடைந்துள்ளார், பணம் வாங்கி உள்ளார் என்று விமர்சித்தால், அது உள்நோக்கம் கொண்ட விமர்சனம். அது தவறு.
1956-ம் ஆண்டு, திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்தவர் மலையப்பன். அவர் பிறப்பித்த மாவட்ட உத்தரவு ஒன்றை எதிர்த்து, அந்தப் பகுதி நிலச்சுவான்தார்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில், வழக்குக்கும் தீர்ப்புக்கும் சம்பந்தம் இல்லாத வகையில், தனிப்பட்ட முறையில் கலெக்டர் மலையப்பனைக் கடுமையாகச் சாடி இருந்தனர். அத்துடன், மலையப்பனுக்கு பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டு தீர்ப்பெழுதி இருந்தனர். இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளின் தீர்ப்பில் உள்நோக்கம் உள்ளது என்று சொல்லி அந்தத் தீர்ப்பை பெரியார் தீயிட்டுக் கொளுத்தினார். பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.வி.ராஜமன்னார், பஞ்சாபசேச அய்யர் ஆகியோர் முன்பாக, பெரியார் 75 பக்கத்தில் தனது பதிலைக் கொடுத்தார். அதில், மலையப்பன் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான், டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அவரை இப்படிச் சாடி உள்ளனர் என்று குற்றம்சாட்டினார் பெரியார். இதையடுத்து நீதிபதிகள், ‘தீர்ப்பை பெரியார் விமர்சனம் செய்தது தவறில்லை. ஆனால், தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் சாதியைக் குறிப்பிட்டு பெரியார் உள்நோக்கம் கற்பித்தது தவறு’ என்று சொல்லி அவருக்கு நூறு ரூபாய் அபராதம் விதித்தனர். ஒரு தீர்ப்பைப் பற்றிய விமர்சனத்துக்கும் உள்நோக்கத்தோடு விமர்சிப்பதுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு இந்த வழக்குதான் சிறந்த உதாரணம்.”
கண்ணியமான மொழியில் விமர்சிக்கலாம்!
மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்: “கண்ணியமான மொழியில் எந்த ஒரு தீர்ப்பையும் அதை வழங்கிய நீதிபதியையும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்; அது குற்றமாகாது. சட்டத்தின் துணைகொண்டு தீர்ப்புகளை விமர்சிக்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் நலனைக் கருத்தில் கொண்டு விமர்சிக்கலாம். சமூக மேம்பாடு என்னும் லட்சியத்துடன் தீர்ப்புகளை விமர்சிக்கலாம். ஆனால், இந்த விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டும்.
ஆனால், நியாயமான விமர்சனம் என்பது எது? அதற்கான அளவுகோல் என்ன என்பதே கேள்வியாக இருக்கிறது. 
ஒரு நீதிபதி, தீர்ப்பில் இழைத்துள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி தீர்ப்பு திருத்தப்பட வேண்டும் என்று பேசுவதும் விமர்சிப்பதும் நியாயமான விமர்சனம். அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கொள்ளமுடியாது. 
ஆனால், குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகவே நீதிபதி தீர்ப்பை எழுதியிருக்கிறார். அதற்காக அவர் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்று பேசுவது, நீதிமன்ற அவமதிப்பு.”
ஆரோக்கியமான விமர்சனங்களுக்குத் தடையில்லை!
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு: “தீர்ப்புகளை ஆரோக்கியமாக விமர்சனம் செய்வதற்கு சட்டத்தில் தடையில்லை. 1971-ம் வருட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் ஐந்தாவது பிரிவில், ‘ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாகத் தீர்ப்பு வழங்கியபின் அதன்மீது வைக்கப்படும் நியாயமான விமர்சனம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. 1993-ல் உச்ச நீதிமன்றம் ரோஷன்லால் அகுஜா என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பில், ‘நீதிபதிகளும், நீதிமன்றங்களும் முறையான, நியாயமான விமர்சனங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படாமலும், பாதிக்கப்படாமலும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மற்ற நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சமீபகாலங்களில், இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொதுவெளியில் கவனத்தைப் பெறுவதுடன் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றன.
ஒரு வகையில், இந்தப் போக்கு வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில், மக்கள் தாங்கள் விரும்பும் தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் குற்றத்துக்கு உள்ளாகி தண்டனை பெறும்போது உணர்ச்சிவசப்பட்டு சட்டத்தின் வரையறை புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்க முயலுவது வருந்தத்தக்கது. சட்டத்தின் மாட்சியை அது அவமானத்துக்கு உள்ளாக்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் அட்வகேட் ஜெனரல் அல்லது அவருடைய அனுமதியைப் பெற்ற தனிநபர் மட்டுமே அவதூறு வழக்குத் தொடரலாம். நினைத்தவர்கள் எல்லாம் வழக்குத் தொடங்க முடியாது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் சிறை அல்லது 2,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். இப்படி நீதிமன்றங்களை முறைகேடாக விமர்சனம் செய்து தண்டனை பெற்றவர்கள் ஏராளம்!”
நன்றி : ஜூனியர் விகடன் - 24.05.2015