disalbe Right click

Wednesday, June 28, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 4

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 4
அறிவோம் ஜிஎஸ்டி: ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன பயன்?
தொழில்நுட்ப வசதி இல்லாத சிறு விற்பனையாளர்கள் வரித் தாக்கல் செய்வது எப்படி?
வரித் தாக்கல் செய்வதற்கு நேரடியாக தொழில்நுட்ப வசதி இல்லையென்றாலும், அவர்களுடைய தேவைகளுக்கேற்ப பிறரது உதவுடன் வருமான வரி தாக்கல் தயாரித்தல் (TRPS) இணையதளத்தை பயன்படுத்தலாம். ஒரு வரி செலுத்தும் நபர் TRPS இணையதளத்தில் உள்ள படிவங்களில் தங்களது தகவல்களை உள்ளீடு செய்தால் வரித் தாக்கல் விவரங்களை தயார் செய்துவிடலாம். TRPS ல் தயார் செய்யப்பட்ட விவரங்களில் தவறுகள் இருந்தால், அதற்கான பொறுப்பு வரி செலுத்துபவரையே சேரும்.
இதுதவிர இதற்காக பதிவு பெற்ற உதவி மையங்களிலும் (Facilitation Centres) தாக்கல் செய்யலாம். இந்த உதவி மையங்களில் வரி செலுத்துகை படிவங்களை வரி செலுத்துபவர் களுக்கு அளிப்பார்கள். அதை பூர்த்தி செய்தபின் அடையாளக் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தரவுகளை பதிவேற்றம் செய்வார்கள். பதிவுக்கு பிறகு இவர்கள் தரும் ஆவணங்களை வாடிக்கையாளர் பத்திரப்படுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி பதிவு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள முடியுமா?
விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து 15 வேலை நாட்களுக்குள் தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் சில குறிப்பிட்ட முக்கியமான தகவல்களை திருத்தம் செய்ய அதற்குரிய அதிகாரிக்கு மட்டுமே அனுமதியுண்டு. எனினும் ஜிஎஸ்டி பதிவிற்கான இணையதளம் மூலம் பதிவு சான்றிதழின் இதர தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லாதவர்களும் பதிவு செய்ய வேண்டுமா?
ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லாத நபர்கள் பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும் அவசியமானது. தாமாகவே முன்வந்து பதிவு செய்வதன் மூலம் சட்ட முறைக்குள் வருபவர் ஆகிறார். வரி செலுத்தும் நபருக்குரிய சட்ட விதிமுறைகள் இவருக்கும் பொருந்தும். எதிர் காலத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.
ஜிஎஸ்டி சட்டத்தின்படி யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்?
வரி செலுத்துவதற்குட்பட்ட சரக்கு, சேவைகளை விற்பவர்கள் அனை வரும் பதிவு செய்ய வேண்டும். அதாவது, ஜிஎஸ்டி சட்டப்படி சரக்கு வழங்குதல் / அல்லது சேவைகள் வரி விதிக்கப்பட வேண்டியவை என வரையறுக்கப்படுகிறது. ஒருவரின் ஆண்டு மொத்த பரிவர்த்தனை ரூ. 20 லட்சத்துக்கு மேற்படும்பட்சத்தில் தானாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். தவிர இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 279A(4)(g)யின் படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் வர்த்தகம் செய்பவர்களின் ஆண்டு பரிவர்த்தனை ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்டாலும் பதிவு செய்ய வேண்டும்.
யாரெல்லாம் பதிவு செய்ய தேவையில்லை?
தான் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயி பதிவு செய்ய வேண்டியதில்லை. தவிர ஜிஎஸ்டி சட்டத்தின்படி வரியில்லாத பொருட்களை அல்லது மொத்தமும் வரி விலக்கு அளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அனைத்து வர்த்தகத்தையும் பதிவின்கீழ் கொண்டு வருவதை ஜிஎஸ்டி அறிவுறுத்துகிறது.
பல மாநிலங்களில் தொழில் செய்பவர் ஒரே ஒரு இடத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்து கொள்ளலாமா?
ஜிஎஸ்டி சட்டம் இதை அனுமதிக்கவில்லை. சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டப்படி ஒரு நபர் பல மாநிலங்களில் வர்த்தகம் செய்பவராக இருந்தால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும். அவர் எந்தெந்த மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறாரோ அந்தந்த இடத்தில் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத வர்த்தகர் வரியை வசூலிக்க முடியுமா? இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியுமா?
ஜிஎஸ்டி பதிவு பெறாத வர்த்தகர் அவருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியை வசூலிக்க முடியாது. அதுபோல ஜிஎஸ்டிக்கு செலுத்திய இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை பெறவும் உரிமை இல்லை.
ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன வகையான பயன் கிடைக்கும்?
சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு முறைப்படுத்தப்படுகிறது. வரி மேல் வரி விதிப்பு தவிர்க்கப்படுகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் முறையாக கணக்கில் காட்டப்பட்டு வரிகள் செலுத்தப்படுகின்றன.
சரக்கு அல்லது சேவைகள் வழங்குபவர் சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறார். உள்ளீட்டு சரக்கு / சேவைகளுக்கான வரியை, சரக்கு / சேவைகள் வழங்கலுக்கான வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். சரக்கு வாங்கியவர்களிடமிருந்து சட்டப்படி வரியை வாங்கலாம். ஜிஎஸ்டி சட்டப்படி அறிவிக்கப்படும் பலன்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
பெறுநர் சரக்குகளை வாங்காமல் திருப்பி அனுப்பினால் என்ன செய்வது?
பெறுநர் சரக்கை திருப்பி அனுப்பும்பட்சத்தில், சரக்கை அனுப்பிய நபர் அந்த சரக்குகளின் விவரங்கள் அடங்கிய கடன் குறிப்பை (credit note) அவருக்கு அனுப்ப வேண்டும். இந்த கடன் குறிப்பை (credit note) வழங்கிய மாதத்தின் வருமான வரி தாக்கலில் இந்த விவரங்களை அனுப்புநர் சேர்க்க வேண்டும்.
பெறுநர் தன்னுடைய வரி தாக்கல் கணக்கிலோ அல்லது இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை திரும்பப் பெறுவதற்கான ஆவணங்களில் இதை குறிப்பிடுவார். பெறுநருக்கும், அனுப்புநருக்கு மான இந்த கடன் குறிப்பு (credit note) விவரங்கள் ஒப்பிட்டு பார்க்கப்படும். இந்த தகவல்கள் இரு தரப்பினருக்கும் தெரிவிக்கப்படும்.
சரக்குகளை போக்குவரத்து மூலமாக அனுப்பும்போது, அந்த போக்குவரத்து தனி சேவையாக கணக்கிடப்பட்டால் அதற்கு யார் வரி செலுத்துவது?
ஒரே மாநிலத்துள்ளான அனுப்புகை என்றால் அந்த சரக்கை பெறுபவர் அல்லது அந்த நபரின் இடம்தான் பொருள் வழங்கும் இடமாகக் கருதப் படும். ஒருவேளை அவர் பதிவு செய்யாம லிருந்தால் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு எங்கே கொடுக்கப்படுகிறதோ அந்த இடம் பொருள் வழங்கல் இடமாகக் கருதப்படும்.
அதேபோல சர்வதேச பொருள் போக்குவரத்து சேவைகளைத் தவிர, உள்நாட்டு போக்குவரத்து சேவைகளைப் பொறுத்தவரையில் அந்த பொருள் சேரும் இடம்தான் சேவை வழங்கும் இடமாகக் கணக்கிடப்படும்.
கூரியர் மூலமான சேவை எனில் பொருட்கள், கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் இடம்தான் பொருள் / சேவை வழங்கும் இடமாகக் கணக் கிடப்படும். அதேநேரத்தில் இப்படி கொடுக்கும் போது, அது சேர வேண்டிய இடம், சிறு அளவில் இந்தியாவில் இருந்தாலும் வழங்கல் இந்தியாவில் நடந்ததாகக் கருதப்படும்.
தொடரும்..
ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 27.06.2017
ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 3
அறிவோம் ஜிஎஸ்டி: ரசீது இல்லாமல் பொருட்களை அனுப்பலாமா?
ஜாப் ஒர்க் மேற்கொள்ள சரக்குகளை ஒப்படைக்கும்போது அதற்கு உரிமையாளர் யார் ?
வரி செலுத்தும் நபரால் அனுப்பப்படும் சரக்குகள் மீது கூடுதலாக மேற்கொள்ளப்படும் பணிகள் ஜாப் ஒர்க் என்று ஜிஎஸ்டி வரையறுக்கிறது. அதாவது வேறொருவரின் சரக்குகளைக் கையாள அல்லது பிராசஸ் செய்வதற்காக வாங்கப்படுகிறது என்று பொருள் தருகிறது. ஜாப் ஒர்க் வாங்குபவர் பணியாளர் என்றும், பணி அளிப்பவர் சரக்குகளுக்குச் சொந்தக்காரர் என்றும் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் தற்போது இப்படி ஒப்படைக்கப்பட்டால் உற்பத்தி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் பணி அளிப்பவர்தான் சரக்குகளின் உரிமையாளராக இருப்பார்.
ஜாப் ஒர்க் நிறுவனங்களும் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டுமா?
ஜாப் ஒர்க் என்பதும் சேவையின் கீழ் வருவதால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். வேலைப் பணி பெற்றவர் அல்லது நிறுவனத்தின் லாப வரம்பு, வரி விலக்கு வரம்புக்குள் இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும்.
ஜாப் ஒர்க் இடத்திலிருந்து சரக்குகளை திரும்ப எடுக்கவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு?
ஜாப் ஒர்க் இடத்திலிருந்து குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சரக்குகள் திரும்பப் பெறப்படாவிட்டால் பணி அளிப்பவர் சரக்குகளை வெளியே அனுப்பிய அதே நாளில் அவர் விற்பனை செய்ததாக கணக்கிடப்படும். அல்லது ஜாப் ஒர்க் இடத்துக்கு அனுப்பி, அவரால் பெறப்பட்ட தேதியில் விற்பனை செய்யப்பட்டதாக கணக்கிடப்படும்.
தற்போது 14 சதவீத வரி விதிப்பில் உள்ள ஒரு பொருள் ஜிஎஸ்டியில் 18 சதவீதமாகிறது என்று வைத்துக் கொள்வோம். ஜூலை மாதத்தில் இது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதற்கான பணத்தை முன்பணமாக ஏற்கெனவே வாங்கியிருந்தால் எத்தனை சதவீத வரி கணக்கிடப்படும்?
விற்பனைச் சரக்கும் அதற்கான ரசீதும் ஜூலை 01ம் தேதிக்கு பிறகே வழங்கப்படும் என்றால் புதிய வரி விகிதமான 18 சதவீதத்தின் அடிப்படையில் விற்பனை கணக்கு கணக்கிடப்பட வேண்டும்.
ரசீது இல்லாமல் பொருட்களை அனுப்பலாமா? அல்லது எத்தனை நாட்களில் ரசீது அளிக்க வேண்டும்?
ஜிஎஸ்டி சட்டப்படி ரசீதுகள் இல்லாமல் பொருளை அனுப்பக் கூடாது. வரி செலுத்தும் நபர் பொருட்களின் விவரம், அளவு, அதன் மதிப்பு மற்றும் அந்த மதிப்புக்கு செலுத்த வேண்டிய வரி என எல்லாவற்றையும் கணக்கிட்டு உடனடியாக ரசீதுகள் அளிக்க வேண்டும். பொருட்களை அனுப்பும்போது உடனடியாகவோ அல்லது டெலிவரி பெறுபவருக்கு பொருட்கள் கிடைக்கும்போதோ ரசீது அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக அளித்துவரும் சேவைகளுக்கு ரசீதும் உடனடியாக அளிக்க வேண்டுமா?
சேவைகள் தொடர்ச்சியாக அளிக்கும் பட்சத்தில், அதற்கான ஒப்பந்தத்தில் பணம் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே பணத்தை தரும் தேதிக்கு முன்னரோ அல்லது பிறகோ ரசீது வழங்க வேண்டும். ஒப்பந்தத்தில் பணம் பெறுவதற்கான தேதி குறிப்பிடவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் சேவை அளித்த பின்னர் வழங்கலாம். அல்லது பணம் பெறும் முன்னர் அல்லது பெற்ற பிறகு அளிக்கலாம். ஆனால் சேவைகளை அளிப்பவர் தனக்கு பணம் வருகிறதோ இல்லையோ இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் ரசீதுகளை வழங்க வேண்டும்.
வரித் தாக்கலுக்கு அளிக்கும் விவரங்கள் பொருந்தாமல் இருந்தால் என்ன செய்வது?
அளித்துள்ள பணத்துக்கு ஈடாக சரக்குகளின் மதிப்பு குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ அது குறித்து அதை விற்பனை செய்தவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது அவரது மாதாந்திர வரிக் கணக்கில் திருத்தப்பட வேண்டும். விற்பனையாளர் அளிக்க வேண்டிய நிலை இருந்தால், மாதத்தின் அடுத்த மாதம் அவர் செலுத்த வேண்டிய தொகையுடன் இது கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படும். அவரது மாதாந்திர நிலுவைத் தொகையுடன் சேர்த்து இந்த தொகைக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும். ஆனால் வர்த்தகத்தை முறையாக மேற்கொள்ளும்பட்சத்தில் விவரங்கள் பொருந்தாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
வரி செலுத்தாத மூன்றாவது நபருக்கு சரக்குகளை அனுப்பினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் யாருக்கு கிடைக்கும்?
வரி செலுத்தும் நபர் கேட்டுக் கொண்டதன் பேரில் மூன்றாவது நபருக்கு சரக்குகள் அனுப்பினால், பதிவு செய்துள்ள நபர் அல்லது நிறுவனம் பெற்றதாகவே எடுத்துக் கொள்ளப்படும். அல்லது யாருக்காக மூன்றாவது நபருக்கு சரக்கு அளிக்கப்பட்டதோ அவரது பெயரில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்கும்.
தள்ளுபடி சரக்குகளுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்குமா?
தள்ளுபடி சரக்குகளின் மீது இன்புட் டாக்ஸ் கிரெடிட் கேட்க முடியாது. தவிர பரிசாக கிடைத்த அல்லது இலவச மாதிரி பொருட்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்காது. முறையாக வாங்கப்பட்ட சரக்குகள் பல்வேறு காரணங்களால் அழிந்து அல்லது தொலைந்து போனாலும் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியாது.
நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக சரக்குகள் வாங்கினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்குமா?
அசையாச் சொத்துகளை கட்டுவதற்கு சரக்குகள் வாங்கினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்காது. ஆனால் பொருத்தப்பட்ட கருவிகள், இயந்திரம் வாங்குகிற பட்சத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுக்கலாம். நிலத்துக்கும் கட்டிடத்துக்கும் பெற முடியாது.
வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியுமா?
ஜிஎஸ்டியில் தனிப்பட்ட ஒவ்வொரு பரிவர்த் தனைக்கும் வரி தாக்கல் செய்யப்படுகிறது என்பதால், திருத்தப்பட்ட வரி தாக்கலுக்கு தேவை ஏற்படாது. ஆனால் பற்று/வரவு குறித்த விவரங்கள் மாற்றப்பட வேண்டும் என்றால் வரி தாக்கலிலும் மாற்றம் தேவைப்படும். ஆனால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வரி தாக்கலில் திருத்தங்கள் செய்வதற்கு பதிலாக மாற்றப்பட வேண்டிய விவரங்களை மட்டும் மாற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
தொடரும்..
- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 25.06.2017

Tuesday, June 27, 2017

15: நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட!

15: நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட!

எதையும் முறைப்படி செய்வது நல்லது. முதலில் எப்படியாவது தொழில் தொடங்கினால் போதும் என்று இருக்கும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம் மேலோங்கி நிற்கும். குறிப்பாக இரண்டு விஷயங்களில் தவறு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
தடபுடலான தொடக்கம்
ஒன்று உங்கள் தொழில் பற்றிய சட்ட திட்டங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது. அதற்கான ஆவணங்களைச் சரியாகப் பெறாமல் இருப்பது. இப்போதைக்கு இது போதும் என முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பிக்கும்போது திடீரென ஒரு நோட்டீஸ் வந்து உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
நண்பர் ஒருவர் சென்னையின் மிக நவ நாகரிகப் பகுதி ஒன்றில் ஒரு குளிர்பானக் கடை தொடங்கத் திட்டமிட்டார். ஒரு முக்கியச் சாலையில், ஒரு வீட்டின் முன் பகுதியை வாடகைக்கு எடுத்தார். வீட்டுக்காரருக்கும் அரசாங்கம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கானவர். பல ஆண்டுகளாக அங்கு இருப்பதால் மிகவும் பிரபலமானவரும்கூட. நல்ல வாடகை, அதிகச் சிக்கல் இல்லாத தொழில், படித்தவர் ஆரம்பிக்கிறார் என்று முழு ஆதரவு தந்தார். நண்பரும் மொத்த முதலீடும் செய்தார். இதற்காக வீட்டை மாற்றி, கடை அருகிலேயே புது வீடு புகுந்தார். தடபுடலாக நண்பர்களை அழைத்துத் தொழில் தொடங்கினார்.
இரண்டுமே கடினம்தான்!
சரியாக மூன்றாம் நாள் மாநகராட்சி ஆட்கள் வந்தார்கள். குடும்பங்கள் வாழும் பகுதியில் கடை நடத்த ஆட்சேபம் தெரிவித்து அங்கிருந்த குடியிருப்போர் சங்கம் புகார் தெரிவித்திருந்தது. சாலை நடை பாதை ஆக்கிரமிப்பு உட்படப் பல பிரிவுகளில் புகார்கள் இருந்தன. விசாரிக்கையில் அந்த வீடே அனுமதியின்றி விதிகள் மீறிக் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. நண்பரும் வீட்டுக்காரரும் நடையாய் நடந்தார்கள். எல்லா வழிகளிலும் முயன்றார்கள். பின்னணியில் வீட்டுக்காரருக்கு ஆகாத ஒரு காவல்துறை அதிகாரி செயல்படுவது தெரிந்தது. எதுவாயிருப்பின் என்ன? நண்பர் கடையை மூடினார். பெருத்த நஷ்டம். பின்னர் அதேபோல இடம் தேடி, குடும்பத்தைப் பழைய இடத்துக்கு மாற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.
நீங்கள் தொழில் செய்ய யாருடைய ஆட்சேபணையும் இருக்கக் கூடாது. குறிப்பாக நீங்கள் சிறு தொழில் தொடங்குபவராகவோ அல்லது முதல் முறை தொழில் தொடங்குபவராகவோ இருந்தால் ஒரு முறைக்குப் பல முறை அனைத்தும் சரியாக உள்ளனவா என்று பார்த்துப் பின் முதலிடுவது நல்லது.
இந்தியாவில் தொழில் தொடங்குவது, அதைத் தொடர்ந்து நடத்துவது இரண்டுமே கடினமான காரியங்கள். Ease of Doing Business Index என்று ஒன்று உண்டு. எந்தெந்த நாடுகளில் தொழில் தொடங்குவது, நடத்துவது எளிது என்ற பட்டியல் இது. 160 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது புரிகிறதா இங்கு தொழில் செய்ய ஏன் இவ்வளவு சிரமங்கள் என்று?
ஆவணங்களைப் பாதுகாக்கவும்
அதனால் தொழில் தொடங்குவதற்கு முன் அனைத்து அரசாங்க சட்டத் திட்டங்கள் அறிந்து தகுந்த ஆவணங்கள் பெறுதல் முக்கியம். அதே போல என்னென்ன மாதாந்தர வருடாந்தர அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்க வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன? தொழிலாளர் வருகைப்பதிவு போன்றவை நமக்காக மட்டுமல்ல. தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் வந்து சோதனையிடலாம். அதனால் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் சரிவரப் பாதுகாத்துச் சமர்ப்பிப்பது நல்லது.
சட்டத்துக்குச் சின்ன வகையில்கூடப் புறம்பாகச் செயல்படாமல் இருப்பது நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட.
அடுத்த விஷயம், நிதி தொடர்பானது. உங்கள் வியாபாரத்துக்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பது முதல் நிதி தொடர்பான எல்லாப் பரிமாற்றங்களையும் தகுந்த ஆதாரத்துடன் ஆவணப்படுத்துங்கள். வரி ஏய்ப்பு செய்யக் கறுப்பு பணத்தில் பரிமாற்றங்கள் நடத்தினால் என்றுமே ஆபத்துதான்.
பலர் தங்கள் லாபத்தைக் குறைத்துக் காண்பிப்பதையும், வங்கிக் கணக்குக்குப் பணம் வராமல் பார்த்துக்கொள்வதையும் சாமர்த்தியம் என்று நினைக்கின்றனர். இது குறுகிய காலச் சிந்தனை. உங்கள் வியாபாரத்தைப் பெருக்க நினைத்தால் இது உதவாது.
நீங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுவந்து, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்து, லாபக் கணக்கு எழுதினால் தான் உங்கள் நிறுவனத்தின் மதிப்பீடு பெருகும். வங்கிக் கடன் தாராளமாகக் கிடைக்கும். வெளி முதலீட்டாளர்கள் வருவார்கள். உங்கள் தொழில் பெருகும்.
நாணயமாக இருந்து என்ன பயன்?
ஆனால், குறுகிய காலத்தில் வரிகள் உங்களை வாட்டியெடுக்கலாம். பணத் தட்டுப்பாடு வரலாம். உங்கள் நலம் விரும்பிகள் ‘பேசாமல் கறுப்பில் பரிமாற்றம் செய்’ என்பார்கள். இவ்வளவு நாணயமாக இருந்து என்ன பயன் என்று உங்களுக்கே தோன்றலாம்.
இதே அளவில் தொழிலில் இயங்க இந்தச் சிந்தனை உதவலாம். பன்மடங்காகப் பெருக உதவாது. வங்கிகள், வெளி முதலீட்டாளர்கள், தொழில் துறை நண்பர்கள் உங்கள் தொழிலைப் பரிசீலனை செய்ய உங்களுக்குப் போதிய சான்றுகள் வேண்டும்.
99 சதவீதத்தினர் தங்கள் வியாபாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர் அல்லது ஓரளவுக்கு உயர்த்துகின்றனர். 1 சதவீதத்துக்கும் குறைவானோர்தான் வியாபாரத்தைப் பன்மடங்காகப் பெருக்குபவர்கள். அவர்கள் அரசாங்கத்தையும் நிதி நிர்வாகத்தையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் என்பதுதான் உண்மை.
லாபத்தை மறைத்து நஷ்டக் கணக்கு எழுதுவதை விட லாபத்தைக் காட்டித் தொழிலைப் பெருக்குவதுதான் வியாபாரச் சூட்சமம்.
நம் பெரும்பாலான வியாபாரத் தவறுகள் பயத்தாலும் பேராசையினாலும் செய்யப்படுபவை. வரி ஏய்ப்புகள், அரசாங்க விதி மீறல்கள், கறுப்புப் பண நடமாட்டம் இவை யாவும் தொழில் தொடங்குவோர் கவனமாகத் தவிர்க்க வேண்டிய தவறுகள்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 16.05.2017

14: திட்டத்தை எழுதுங்கள்!

14: திட்டத்தை எழுதுங்கள்!

இதுதான் தொழில் என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஓரளவு ஆராய்ச்சி செய்துவிட்டீர்கள். அடுத்தது என்ன? நல்ல தொழில் திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்யுங்கள். பிசினஸ் பிளான் எழுதுவது கடன் வாங்க மட்டுமல்ல. உங்கள் எண்ணத்தைத் தெளிவுபடுத்தவும்தான்.
இது பிசினஸ் பிளான் அல்ல!
என்னைப் பொறுத்தவரை பிசினஸ் பிளான் எழுதுவது திரைக்கதை எழுதுவது போலத்தான். மனதில் உள்ள கதையை நம் பார்வைக்குக் காட்சிவாரியாக வரிசைப்படுத்தித் தெளிவாகச் சொல்வது திரைக்கதை. அதே போல பிசினஸ் ஐடியாவைச் செயல்முறையில் வடிவமைத்துத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் தெளிவாகச் சொல்வது பிசினஸ் பிளான்.
எதையும் யோசிக்கையில் சுலபமாக இருக்கும். பார்வைக்குப் பகட்டாக இருக்கும். உட்கார்ந்து எழுதினால் நிதர்சனங்கள் புலப்படும். “இந்த ஏரியாவில் செம்ம கூட்டம். ஒரு டிஃபன் சென்டர் போடலாம். ஒரு ஆள் 50 ரூபாய்க்குச் சாப்பிட்டாக்கூட ஒரு நாளைக்கு 20,000 ரூபாய்க்கு விற்பனையாகும். நல்ல லாபம் பார்க்கலாம்” என்று தோராயக் கணக்குப்போடுவது பிசினஸ் பிளான் அல்ல.
அடுக்கடுக்காகக் கேள்விகள்
எவ்வளவு முதலீடு தேவைப்படும்? எத்தனை தொழிலாளிகள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்? தொழிலாளிகள் தொடர்ந்து கிடைக்க என்ன வழி? செலவு போக லாபம் எவ்வளவு நிற்கும்? உங்களின் நேரடி மேற்பார்வை எவ்வளவு நேரம் தேவைப்படும்? நீங்கள் இல்லாவிட்டால் யார் பார்ப்பார்கள்? ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் கடை இருக்கும்? போட்டியாளர்கள் யார்? கடை வாடகைக்கு உள்ளது என்றால் மாற்ற வேண்டிவந்தால் என்ன செய்ய? சாலையோரக் கடை என்றால் சாலை விரிவாக்கத்தில் அடிபடுமா? இந்தக் கடை சார்ந்த அனைத்து அரசாங்க விதிகளும் உங்களுக்குத் தெரியுமா? போட்ட முதலீடு எத்தனை மாதங்களில்/ வருடங்களில் திரும்பக் கிடைக்கும்?
வங்கிக் கடன் கிடைக்குமா? அதற்கான தகுதி உள்ளதா? அல்லது வேறு ஏற்பாடு என்ன? மாதந்தோறும் கட்ட வேண்டிய கடன் எவ்வளவு? வருமானத்தில் கடனும் செலவும் போனால் நிற்கின்ற லாபத்தில் குடும்பம் நடத்த முடியுமா? அதற்கு வேறு ஏற்பாடு செய்தால் அதன் பாதிப்பு உங்கள் தொழிலில்/ வாழ்க்கையில் உண்டா? எத்தனை வருடங்கள் இந்தத் தொழிலை நடத்த எண்ணம்? நிர்வாகத்தில் உங்களுடன் பங்கு கொள்ளப்போவது யார்? இந்தத் தொழிலை விட்டு அடுத்த தொழிலுக்குப் போக நினைத்தால் இதை நல்ல விலைக்கு விற்க முடியுமா? லாபத்துடன் வெளியேற முடியுமா?
இதை எல்லாம் நீங்களும் நினைத்து வைத்திருப்பீர்கள். ஆனால் எழுத்தில் நிரப்பப்பட்ட அறிக்கை உள்ளதா? எழுதியதை மாற்றலாம், திருத்தலாம். ஆனால் ஆதார அறிக்கை ஒன்று அவசியம் வேண்டும். இப்படி எழுதுவதால் பல நஷ்டங்களை ஆரம்பக் காலத்திலேயே தவிர்க்கலாம்.
சிற்றூரில் நடக்குமா?
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தொழில் ஆலோசனைக்கு வந்தார். ஒரு சின்ன ஊரில் திருமண ஒப்பந்தக்காரர் ஆக அவருக்கு ஆசை. முதல் உள்ளது. சொந்தமாக இடம் உள்ளது. தெரிந்த மக்கள். மனைவியும் ஒத்தாசையாக இருக்கிறார். சொந்தக்காரர்களின் திருமணங்களை நடத்திவைத்தாலே நல்ல காசு பார்க்கலாம் என்றார். திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் குறைந்த செலவில் செய்துதரலாம் என்றார். மண்டபம், பத்திரிகை, சாப்பாடு, அலங்காரம், ஃபோட்டோ, வீடியோ என்று கட்டு சாப்பாடு வரை செய்யலாம் என்று பட்டியல் இட்டார். பெரிய நகரங்களில் இது பெரிய இண்டஸ்ட்ரியாக வளர்ந்து வருகிறது. ஆனால் அவர் வசிக்கும் சிற்றூரில் நடக்குமா? அதனால் பிசினஸ் பிளான் எழுதச் சொன்னேன். ஒரு மாதம் கழித்து விரிவாக எழுதி வந்தார்.
எழுதும்போதே பல தெளிவுகள் வந்தது அவருக்கு. பெரிய ஆஃபீஸ் போட்டு வாடிக்கையாளர்கள் பிடிக்கலாம் என்ற எண்ணம் மாறியிருந்தது. முதலீடு பணமாக அதிகம் வேண்டாம். சரியான முயற்சிகள்தான் தேவை எனப் புரிந்துகொண்டார். பின்னர் நான் பரிசீலிக்கையில் அவர் தன் தொழிலை B2C (Business to Consumers), அதாவது நுகர்வோரை நேரடியாகத் தொடர்புகொண்டு செய்யும் வணிகம் மாடலில் வடிவமைத்திருந்தார். நான் B2B (Business to Business), அதாவது தொழில் நிறுவனங்களுடன் தொழில் புரிவது எனும் வணிகம் செய்யலாம் என்று சொன்னேன்.
மனமாற்றம் தொழிலைக் காப்பாற்றியது
கல்யாணம் முடிவான குடும்பங்கள்தான் வாடிக்கையாளர்கள் என்று நினைத்தவருக்குக் கல்யாண மண்டப முதலாளிகள்தான் (பல இடங்களில் மேலாளர்கள்தான்!) வாடிக்கையாளர்கள் என்பது புரியவந்தது. ஆஃபிஸுக்குக் கொடுத்த அட்வான்ஸைச் சந்தோஷமாகத் திருப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணத்துக்கு வேலை / சேவை செய்யும் அனைத்து வியாபாரிகளிடமும் தன் வியாபாரத்தை அறிமுகப்படுத்தினார். இந்த மாடலில் ஒரு ஊர் என்று சுருங்கத் தேவையில்லை என்று புரிந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள எல்லா மண்டபங்களுடனும் ஒப்பந்தம் போட்டார்.
தானே இறங்கி வேலை செய்து விலையைக் குறைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறித் தரமான சேவையைச் சற்று அதிக விலைக்குக் கொடுக்கலாம் என்ற நிலைக்குவந்தார். இந்த மன மாற்றம் அவர் தொழிலைக் காப்பாற்றியது. முதலாண்டு செலவுக்கு இரண்டு லட்சம் என்று எடுத்து வைத்திருந்தவர் ஒரு ப்ரீ பெய்ட் மொபைலையும் மோட்டார் பைக்கையும் வைத்து வெற்றிகரமாகத் தொழிலை ஆரம்பித்தார்.
தொழில் திட்டத்தை எழுதுங்கள். ஆயிரம் கேள்விகள் வரும். சில கேள்விகளுக்கு விடை தெரியும். பல கேள்விகளுக்கு விடை தெரியாது. ஆனால் இந்தக் கேள்விகளைத் தொழில் தொடங்கும் முன் கேட்பது நல்லது. ஒரு தொழில் இப்படித்தான் நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஆனால் தொழில் பற்றிய முதலீட்டு முடிவுகள் எடுப்பதற்கு முன் ஆயிரம் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 09.05.2017

13: சம்பாதிப்பதைச் சேமிக்கிறோமா?

13: சம்பாதிப்பதைச் சேமிக்கிறோமா?

உயிர் வாழ மூச்சு காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம். தொழில் தொடங்க, தொடர்ந்து நடத்த, தொழிலை முடிவுக்குக் கொண்டுவர என எல்லா நிலைகளிலும் பணம் தேவை. அதனால் நிதி பற்றிய அறிவும் முக்கியமாகிறது.
நுகர்வோர் சந்தையின் நிஜம்!
நம்மில் பலர் நீட்டிய பக்கத்திலெல்லாம் கையெழுத்து போடும் மனோபாவம் கொண்டவர்கள்தான். ஒரு கடனுக்கு விண்ணப்பித்தால்கூடக் கத்தை கத்தையாய்த் தாள்கள் கொடுத்துக் கையெழுத்து வாங்குவார்கள். சுழித்த இடங்களில் கையொப்பம் இடுவதற்கு முன்னால் அதைப் படித்துப் பார்க்கும் மனோபாவம் வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். புரியாதது நம் தவறில்லை. முட்டாளாகத் தெரியக்கூடாது என்று கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள். கேள்வி கேட்பது முட்டாள்தனம் அல்ல. தவறாக முடிவு செய்வதும், தகவல் இல்லாமல் முடிவு செய்வதும்தான் முட்டாள்தனம்.
இன்னொரு மனோபாவம் ஆபத்தானது. பணம் கிடைத்தால் வாரியிறைத்துச் செலவு செய்யலாம் என்பதுதான் அது. இன்றைய இளைஞர்கள் சேமிப்பதைவிட சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அமெரிக்க வாழ்வியல் பாதிப்பு இன்று நம்மைக் கடன் கலாசாரத்துக்குத் தள்ளிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்னால் வசதியல்லாதவர்கள் மளிகை கடைகளில் நோட்டு போட்டுக் கடன் சொல்லிப் பொருள் வாங்குவார்கள். இன்று வசதி படைத்தோர், இல்லாதோர் அனைவரும் கிரெடிட் கார்டில் (கடன் அட்டையில்) பொருள் வாங்கிப் பிறகு கடன் கட்டும் வழக்கத்துக்கு வந்துவிட்டோம். அதனால் பணம் இல்லாமல் (பல நேரங்களில் தேவைகூட இல்லாமல்) பொருள் வாங்குவது இன்றைய நுகர்வோர் சந்தையின் நிஜம்.
ரெண்டு யானை கொடுங்க!
ஒருவர் யானை விற்க வந்தாராம், வாடிக்கையாளர் சாதா சம்பளக்காரர். “எனக்கு எதற்கப்பா யானை? தவிர இதற்குத் தீனி போட்டு வளர்க்க, பணம், இடம், நேரம் எதுவுமே இல்லை. அதனால் வேண்டாம்!” என்றாராம். விற்பனை சிப்பந்தியோ யானையின் பெருமைகளை எடுத்துரைத்தார். “இந்த யானைக்கு மீதமுள்ள சோறு போட்டால் போதும். தெருவிலேயே விட்டுவிடலாம். எல்லோரும் யானையைப் பார்த்துக் காசு போடுவார்கள். யானைச் சாணத்தை விற்கலாம்…” என்றெல்லாம் சொன்னபோது மசியாதவர் கடைசியில் இதைக் கேட்டதில் விழுந்துவிட்டாராம். “சார், இப்போ பணம் எதுவும் கட்ட வேண்டாம். சுலபத் தவணை (ஈ.எம்.ஐ.) உண்டு. எப்ப முடியலைன்னாலும் ‘பே பேக்’ பாலிசியில் பாதி விலைக்கு எடுத்துக்குறோம்!”
“அப்ப ரெண்டு யானை கொடுங்க சார்!”
இந்தக் கடன் வாங்கிச் செலவு செய்யும் மனோபாவம் தொழிலுக்குக் உதவாது. தொழிலுக்கு கடன் வாங்கினால், கடன் கட்டும் தொகைக்கு மேல் பன்மடங்கு வருமானம் வரும் என்றால்தான் கடன் வாங்க வேண்டும். அதற்கு நுட்பமான நிதி அறிவு வேண்டும். எல்லாப் பெரிய நிறுவனங்களும் தொழிலுக்குக் கடன்வாங்குவதற்கு முன் அதன் நிதி மேலாளர்களைக் கொண்டு தீவிர ஆய்வு மேற்கொள்கின்றன. கடன், வட்டி, வருமானம், சந்தைப்போக்கு என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் தான் கடன் பெறுகின்றன.
சிறிதாகத் தொழில் ஆரம்பிப்பவர்களும் இதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது அறிவுரை. ரூபாய் ஐம்பது லட்சம் மூலதனம் போட்டு மேலும் தேவைக்குத் தொழில் கடனில் வியாபாரத்தை ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். எப்போதிலிருந்து லாபம் சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள், எப்போது கடன் முடியும், எதிர்பாராத சூழல் வந்தால் அதற்கு மாற்றுத்திட்டங்கள் என்பதை முதலிலேயே யோசிக்க வேண்டும்.
தவறினால் இங்குப் பலருக்கு இருக்கும் ‘ரொட்டேஷன்’ வியாதி வந்துவிடும். இதை வாங்கி அதில் போட்டு, அதை வாங்கி இதில் போட்டு, சொந்தப் பணம், தொழில் பணம் எல்லாம் கரைந்து கடைசியில் கடனாளியாக்கும். தொழிலை ஒரு சூதாட்டமாக்கும். வெளியிலிருந்து பணம் கிடைத்தால் கரையேறலாம் என்ற தவறான மனப்போக்கைக் கொண்டுவரும். கடன் வாங்குவது பெரிதல்ல. கடனைத் தொழிலில் சரியாகச் செலுத்தி விரைவில் லாபம் பார்ப்பதுதான் திறமை.
உங்கள் தொழில் ஆரோக்கியத்தின் டாக்டர்
ஒரு நல்ல ஆடிட்டர் அனைவருக்கும் அவசியம். நாம் சொன்னதைச்செய்யும், வரியைக் குறைக்கும், கடன் வாங்க ஆலோசனை சொல்லும் ஆடிட்டர் போதும் என்பது தவறான அணுகுமுறை. உங்கள் தொழிலுக்குப் பணம் மூச்சு காற்று என்றால் அதைச் சீராக இயக்குகிறீர்களா என்று ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு உங்கள் ஆடிட்டர் செயலாற்ற வேண்டும். உங்கள் தொழில் ஆரோக்கியத்தின் டாக்டர் உங்கள் ஆடிட்டர்.
தொழிலின் ஆதாரம் நிதி என்றால் அந்த நிதியை நிர்வாகம் செய்யத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு தொழில் முனைவோரின் அத்தியாவசியத் தேவை. நிதியறிவு இல்லாமல் யாரும் ஜெயித்ததில்லை. அப்படியே ஜெயித்தாலும் நிலைத்ததில்லை!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.05.2017

12: மல்லையா அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லையே!

12: மல்லையா அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லையே!

யாரிடம் பணம் கேட்பது என்ற கேள்வி தொழில் தொடங்குவதில் முக்கியக் கேள்வி. முதல் போட்டால்தானே முதலாளி? முதலுக்கு எங்குப் போவது? யாரைக் கேட்பது? எப்படிக் கேட்பது? எவ்வளவு கேட்பது? இவை புதிதாகத் தொழில் யோசிப்போரை அலைக்கழிக்கும் கேள்விகள்.
வெறும் கை முழம் போடாது
பணம் இருந்தால் போதும் தொழில் செய்துவிடலாம் என்று நம்புவது எவ்வளவு மடத்தனமோ அதே போலப் பணமே இல்லாமல் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று எண்ணுவதும் மடமையே. விசிட்டிங் கார்ட் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் சேவைத் துறை தொழில்களுக்கும் முதல் தேவை.
அளவில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் வெறும் கை முழம் போடாது. பெரும்பாலும்! அதையும் மீறிப் போட்டவர்கள் இருக்கலாம். பல கிரிமினல் கதைகளில் இப்படி வெறும் கையால் முழம் போட்டு மேலே வந்தவர்கள் இருக்கலாம். ஆனால், உழைத்து வெற்றி பெறத் துடிக்கும் சிறு வியாபாரிகளுக்கு முதல் அவசியம் முதல்தான்.
தேவைப்படுவோருக்குப் போய்ச் சேர்கிறதா?
இந்தியச் சூழலில் தொழில் தொடங்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். பெரும்பாலான குடும்பங்கள் தொழில் என்றதும் பயப்படுவார்கள். தொழில் கடனுக்கு வங்கிகளை அணுகுவதில் பொது மக்களுக்குப் பெரும் தயக்கம் உள்ளது. தற்போது நிலைமை சிறிது மாறினாலும், வங்கிகள் என்றாலே கையை விரிப்பார்கள் என்ற எண்ணத்தைத்தான் அவர்கள் இதுநாள்வரை தோற்றுவித்துள்ளனர்.
சொல்லப்போனால் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை தேவைப்படுவோருக்கு முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்றால் பதில் உங்களுக்கே தெரியும். தவிர அரசாங்க அலுவலகத்தில் சென்று ஒரு காரியம் முடிக்க வேண்டும் என்றால் நிறைய தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அது முதல் முறையாகத் தொழில் முனைய நினைப்போரைச் சோர்வடையச் செய்துவிடும்.
சொல்லப்போனால் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை தேவைப்படுவோருக்கு முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்றால் பதில் உங்களுக்கே தெரியும். தவிர அரசாங்க அலுவலகத்தில் சென்று ஒரு காரியம் முடிக்க வேண்டும் என்றால் நிறைய தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அது முதல் முறையாகத் தொழில் முனைய நினைப்போரைச் சோர்வடையச் செய்துவிடும்.
வறுமையின் அபராதம்
இந்தக் காரணங்களால்தான் சொத்தை அடமானம் வைத்துத் தொழில் தொடங்குகிறார்கள் வசதி படைத்தவர்கள். நடுத்தர வர்க்கப் பாட்டு இதுதான்: “தங்கமே உன்ன நான் தேடி வந்தேன் நானே…” நலிந்த பிரிவினர் எல்லாம் அநியாய வட்டிக்கு அடிமையாகிவிடுகின்றனர். மறைந்த நிர்வாக மேதை சி.கே. பிரகலாத் இதை வறுமையின் அபராதம் என்று கூறுவார். அங்காடிகளில் முதல் புரட்டுபவர்கள் வாங்கும் கடனின் வருடாந்தர வட்டி சினிமா வட்டியை விடப் பன்மடங்கு அதிகம். காலையில் 900 ரூபாய் கொடுத்து மாலையில் 1000 ரூபாய் வசூலிப்பவர்கள் இருக்கிறார்கள். காலையில் கடன் வாங்கிப் பொருள் எடுத்து, நாள் முழுவதும் உழைத்து, விற்று, லாபத்தில் மாலையில் கடனை அடைக்கும் தினசரிச் சிறு வியாபாரிகள் இதனால் பலன் அடைகிறார்கள். அவர்கள் அன்றாட பிழைப்புக்கு வாங்கும் இந்த வட்டி விகிதத்தைக் கணக்கு போட்டுப் பாருங்கள். தலை சுற்றும்!
எது பெருமை?
இந்தியா முன்னேறச் சிறு மற்றும் குறு வியாபாரிகள் தழைக்க வேண்டும். உலகப் பணக்காரர்களில் முதல் நூறில் இந்தியாவின் பணக்காரர்கள் இருப்பது நமக்குப் பெருமை இல்லை. வறுமை நாடுகள் பட்டியலில் இந்தியா வெளியேற வேண்டும். அதுதான் பெருமை. அதற்கு ஒரே வழி சிறு தொழில் மேம்பாடுதான். வங்க தேசத்தில் பேராசிரியர் முகமது யூனஸ் கிராமீன் வங்கி (Grameen Bank) எனும் வங்கி மூலம் கடனுக்குத் தகுதியில்லாத நலிந்த பிரிவினருக்குக் கடனுதவி செய்து சாதனை படைத்தார். அதுவரை நிலவிவந்த ஒரு பெரும் பொய்யான பிம்பத்தை உடைத்ததுதான் என்னைப் பொறுத்த வரை நிஜமான சாதனை. பொருளாதார வசதி இல்லாதவருக்குக் கடன் தந்தால் திரும்ப வராது என்பதைப் பொய்யாக்கி ஏழை எளியவர்கள், மத்திய, மேல் தட்டு மக்களை விடக் கடன் தொகையைச் சரியாகத் திருப்பிக் கட்டுகிறார்கள் என்று வருடா வருடம் நிரூபித்தார். நம் நாட்டு வங்கி முதலாளிகள் மல்லையாவை நம்பும் அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லை.
நம் கிராமங்களில் அபாரத் தொழில் எண்ணமும் ஆர்வமும் கொண்ட பலர் தொழில் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் பிழைப்புக்காக வேறு வேலைக்குப் போய்த் தங்கள் தொழில் ஆசையைத் தொலைத்துவிடுகிறார்கள். ஒரு கிராமத்துக்கு ஒருவர் நல்ல தொழில் புரிந்தாலே அந்தக் கிராமம் சுபிட்சம் பெறும். லட்சக்கணக்கான தொழிலதிபர்கள் வரும் அளவுக்கு இந்தியாவில் வளமும் சந்தையும் உள்ளது. இவர்களுக்குத் தேவை முதல் தொழிலுக்கான பயிற்சியும் ஊக்குவிப்பும் கடனுதவியும்தான்.
வணிகம் செய்யும் சவால்
கல்விக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோம், வேலையே கிடைக்காவிட்டாலும். கல்யாணத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோம், அது வாழ்க்கைக்குப் பயன்படாவிட்டாலும். ஆனால், தொழில் செய்ய என்றால் முதல் கிடைப்பது மிகவும் சிரமம். இதுதான் நிதர்சனம்.
இதனால்தான் இங்கு தனியார் வங்கியில் தனிப்பட்ட கடன் (பர்சனல்லோன்) எடுப்பது. சீட்டு பணத்தைத் தள்ளி எடுப்பது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துக்களை விற்பது எல்லாம் சகஜம். அவசரப் பணத் தேவைக்கு உள்ளவர்களை உறிஞ்சிக் கொழுக்கும் அமைப்புகள் செழிக்கின்றன. ஆனால், நல்ல தொழில் திட்டத்துக்கு நியாயமான வட்டியில் கடனுதவியும் கிடைப்பது அரிதாகிறது.
இந்த வறண்ட பூமியைப் பிளந்து வருவதுதான் வீரிய விதையின் சவால். தொழில் செய்பவர்களுக்கு எந்த வகையிலும் சலுகை காட்டாத சமூகத்தில் வணிகம் செய்யும் சவால் அது!
முடியாதது என்று எதுவுமில்லை. முடியும். முதலைப் பெறும் வெற்றிதான் தொழில் முனைவோரின் முதல் வெற்றி!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 25.04.2017

11: யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம்!

11: யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம்!

எதுவும் எழுத்து மூலம் இருக்க வேண்டும் என்று சொல்வது சட்டரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் மிக அவசியம்.
வெற்றிக்கான வழிமுறைகளில் ஒன்று உங்கள் இலக்கை எழுத்துக்களாய், எண்களாய் எழுதிவைப்பது. அதையும் ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக்குங்கள். சுவரில் தொங்க விடுங்கள். வீட்டிலும் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். எண்ணத் தெளிவு வரும். வைராக்கியம் வரும். உங்களுக்கு இலக்கு நோக்கி நகரத் தேவையான ஊக்கம் கிடைக்கும்.
தொடர்ந்து கவனம் செலுத்த…
மாணவர்கள் முதல் நிறுவனங்கள் வரை பின்பற்றுகின்ற உத்தி இது. 490 / 500 மதிப்பெண்கள் என்று எழுதிப் படிக்கும் மேஜை மேல் ஒட்டி வைத்தால் அது படிக்க உட்காரும்போதெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். பல உற்பத்தி நிறுவனங்கள் தரத்துக்கு, உற்பத்திக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதைப் பணியிடமெல்லாம் ஒட்டி வைத்திருப்பார்கள். அது அங்குள்ள அனைவரையும் ஊக்கமாகப் பணி செய்ய வைக்கும். விற்பனைத் துறையிலும் இதைப் பின்பற்றுவார்கள்.
நிதியாண்டு தொடக்கத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை மந்திரம் போல ஜெபிக்கத் தொடங்குவார்கள் வருடம் முழுவதும். ஒவ்வொரு மீட்டிங்கிலும் இது அலசப்படும். நினைவூட்டப்படும். சற்றுப் பதற்றம் அளித்தாலும் மனதை இலக்கில் தொடர்ந்து கவனம் செலுத்த இத்தகைய உத்திகள் பயன்படும்.
ஒரு ஐடியா கொடுங்கள் சார்!
இதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் பயன்படுத்தலாம். தொழில் தொடங்கும் முன்னரே தெளிவு பெற உங்கள் திட்டத்தை முதலில் எழுதிப் பாருங்கள். எப்படி எழுதுவது என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஒரு கதைபோலக்கூட எல்லாவற்றையும் விவரமாக எழுதுங்கள். பின் உங்கள் நெருங்கிய வட்டத்திடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாலே அவர்கள் சில தகவல்கள் இல்லாததைச் சுட்டிக் காட்டுவார்கள். ஓரளவு எல்லாத் தகவல்களும் வந்த பின் இதைச் சுருக்கி ஒரு பக்கத்தில் எழுத முடியுமா என்று பாருங்கள்.
என்னிடம் தொழில் பற்றி ஆலோசனை கேட்டு வரும் பல கேள்விகள் மிகவும் மேம்போக்காக வரும். “ நான் நாகப்பட்டினத்தில் இருக்கிறேன். என்ன தொழில் செய்யலாம்?” “மெயின் ரோட்டில் இடம் உள்ளது. என்ன செய்யலாம்? “வேலையில் நாட்டமில்லை. தொழில் பண்ண ஒரு ஐடியா கொடுங்கள் சார்!” “கோடி ரூபாய் வருமானம் வரும் தொழில்கள் என்னென்ன?” இவை அனைத்தும் தொழிலைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலை எண்ணங்கள். இதற்கு ஆலோசனை சொல்வது கடினம்.
“இந்தத் தொழில், இவ்வளவு முதலீடு, இது என் அனுபவம், இந்தச் சந்தையில் இப்படிச் செய்யலாமா?” என்று எழுதினால் ஓரளவு தொழில் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்று புலப்படும். பின் ஒரு நல்ல தொழில் திட்டம் எழுதவைத்தால் அவர்களுக்குத் தொழில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஆலோசனை கேளுங்கள்
எழுதாமல் பேசிக்கொண்டே இருந்தால் தினம் ஒரு புது எண்ணம் வரும். யாருக்குமே முதலில் பல தொழில் எண்ணங்கள் வருவது இயற்கை. பல தொழில்களைப் பரிசீலிப்பதும் நியாயமானதுதான். ஆனால் ஒரு கால கட்டத்தில் “இதுதான் உகந்தது” என்று ஒன்றை முடிவு செய்து தொழில் திட்டம் எழுதுவது நல்லது. எழுதும் போதுதான் உங்களுக்குப் பல கேள்விகள் வரும். படிப்பவர்களுக்கும் பல கேள்விகள் வரும். தொடர்ந்து அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுவதும், திட்டத்தை மெருகேற்றுவதும் நடக்கும்.
உங்கள் திட்டத்தை மற்றவர்களிடம் படிக்கக் கொடுத்து ஆலோசனை கேளுங்கள். அவர்கள் நிபுணர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் எதிர்மறை உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பயப்படாதீர்கள். அவர்கள் சொல்கிற விஷயம் தர்க்கரீதியாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம். யாரையும் உதாசீனப்படுத்தவும் வேண்டாம். உங்கள் ஐடியா களவு போய்விடும் என்று பயப்படாதீர்கள். அப்படி ஒரு மனிதராக இருந்தால் அவர் இந்நேரம் பெரிய தொழிலதிபராக ஆகியிருப்பார். அப்படிக் களவு கொள்ளத் தக்க தொழில் திட்டம் ஒன்று கையில் இருந்தால் அதை விடச் சிறப்பான இன்னொரு தொழில் திட்டத்தையும் உங்களால் உருவாக்க முடியும். அதனால் கவலை வேண்டாம்.
சட்ட உதவியை நாடலாம்
“எனக்கு நம்பிக்கை இல்லை சார். ஆரம்பிக்கும்வரை யாரிடமும் சொல்ல மாட்டேன்!” என்கிறீர்களா? நீங்கள் தொழில் முறை ஆலோசகர்களிடம் செல்லலாம். “அவர்களும் என் ஐடியாவை யாருக்காவது விற்றுவிட்டால்?” அதற்கும் வழி உள்ளது. பெரிய நிறுவனங்கள் Non Disclosure Agreement என்ற ஒன்றில் கண்டிப்பாக ஆலோசகர்களிடம் கையெழுத்து வாங்குவார்கள். நீங்களும் அப்படி ஒன்றை (சட்ட உதவியுடன்) தயார் செய்து, அதை ஆலோசனையின்போது ‘இந்தத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட எந்தத் தகவலும் என் மூலம் வெளியே போகாது என்று உறுதியளிக்கிறேன்’ என வாங்கிக்கொள்ளலாம்.
ஆலோசனை பெறுவதன் நோக்கம் உங்கள் தொழில் திட்டத்தைத் திடமானதாக ஆக்குவது. சரி, எழுதலாம். அதற்கான படிவம் என்று ஏதாவது உண்டா? உண்டு. ஆனால் அதற்கு முன் ஒரு பால பாடம். உங்கள் ஒரு பக்கத் திட்டத்தில் இந்த 7 கேள்விகளுக்குப் பதில் உள்ளதா என்று பாருங்கள்.
என்ன? (What?)
ஏன்? (Why?)
யார்?/ யாருக்கு? (Who?/ Whom?)
எப்போது? (When?)
எங்கு? (Where?)
எப்படி? (How?)
என்ன கணக்கு? (How much?)
5W2H என்ற இந்தச் சின்னச் சூத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கத் தொழில் திட்டம் தயார் செய்யுங்கள். பின் விரிவான திட்டம் தீட்டலாம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.04.2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 2

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 2
அறிவோம் ஜிஎஸ்டி: வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் அபராதம்..
வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது?
வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கை தாக்கல் செய்ய பல வழிகள் உள்ளன. தற்போதுள்ளதுபோல வருமானம் மற்றும் செலவு விவரங்களை நேரடியாக வருமான வரித்துறை இணைய தளத்தின் வழியாக தாக்கல் செய்யலாம். ஆனால் முன்னேற்பாடு இல்லாமல் செய்தால் ஏராளமான ஆவணங்களை இணைக்க வேண்டி இருக்கும். எனவே வரி செலுத்துபவர்கள் வரித்துறை இணையதளத்தில் உள்ள பிரத்யேக விவர குறிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து வரித்துறை இணையதளம் வாயிலாகவே தாக்கல் செய்யலாம். அல்லது ஜிஎஸ்டிக்கு என்று உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் வாழியாகவும் தாக்கல் செய்யலாம்.
வருமானத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்பப் பெறுவது எப்படி?
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரியை பிடித்தம் செய்தவர், தான் யாரிடமிருந்து வரியை பிடித்தம் செய்தாரோ அவரது விவரத்தை பிடித்தம் செய்த மாதத்தின் அடுத்த மாதத்தில் 10-ம் தேதிக்குள் தனது ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தில் பூர்த்தி செய்து வருமான வரி தாக்கல் அறிக்கையில் அளிப்பார். தவிர தான் மேற்கொண்ட அனைத்து பிடித்தங்களையும் இந்த வகையில் அவர் அளிக்க வேண்டும். வரிப் பிடித்தம் செய்தவர் தன் விவரங்களை பதிவேற்றம் செய்த பிறகு, யாரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டதோ அவரது ஜிஎஸ்டிஆர்-2 படிவத்துக்கு தானாகவே இந்த விவரங்கள் சென்றுவிடும். இதற்கு அடுத்து வரி பிடித்தம் செய்யப்பட்ட நபர் தொகையைப் திரும்ப பெறுவதற்கு தனது ஜிஎஸ்டிஆர்-2 படிவத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக டிடிஎஸ் சான்றிதழ் அல்லது மின்னணு படிவங்களையுயோ சமர்ப்பிக்கத் தேவை யில்லை. தேவையெனில் டிடிஎஸ் ஆவணத்தை வருமான வரித்துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட தேதிக்குள் வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதிவு செய்துள்ள ஒரு நபர் அல்லது நிறுவனம் குறிப்பிட்ட தேதிக்குள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக தாமதித்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும். இது அதிகபட்சமாக ரூ.5,000 வரையில் செல்லும். கெடு அளிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆண்டு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யத் தவறினாலும், ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அறிக்கை தாக்கல் செய்வதை திட்டமிட்டே தாமதப்படுத்தினால் அதிகபட்சமாக அவரது மொத்த பரிவர்த்தனையில் இருந்து 0.25% வரை அபராதம் கணக்கிட்டு வசூலிக்கப்படும்.
ஜிஎஸ்டி சட்டத்தின் படி எவையெல்லாம் குற்றங்களாகக் கருதப்படும்?
வரி ஏய்ப்பு குற்றங்களுக்கு தற்போதுள்ள சட்ட வரையறைகள் அனைத்தும் பொருந்தும் என்றாலும் ஜிஎஸ்டி சட்டப்படி சில குறிப்பிட்ட சட்ட வரையறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பொருட்களை அளிக்காமல் விற்பனை ரசீது மட்டும் அளிப்பது, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன் தவறான தகவல்களை தருவது, பொய்யான நிதிநிலை அறிக்கை தயார் செய்வது, சட்டவிரோத சரக்குகளை சேமிப்பது, வழங்குவது, வாகனங்களில் கொண்டுசெல்வது போன்றவற்றுக்கு இப்போதுள்ள சட்ட நடவடிக்கைகள் ஜிஎஸ்டிக்கும் பொருந்தும். அதே நேரத்தில் முறையான விற்பனை ரசீதுகள் இல்லாமலோ அல்லது தவறான விற்பனை ரசீதுகளின் அடிப்படையிலோ விற்பனை செய்வது, வரி பிடித்தம் செய்யாமல் இருப்பது அல்லது குறைவாக வரிப் பிடித்தம் செய்வது போன்றவற்றுக்கு நடவடிக்கை இருக்கும்.
வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட வரியை மூன்று மாதங்களுக்கு மேலாக வரி ஆணையத்திடம் செலுத்தாமல் இருப்பது, சரக்குகளை அல்லது சேவையைப் பெறாமல் உள்ளீட்டு வரிக் கடனை பெறுவது அல்லது பயன்படுத்துவது. ஆவணங்கள் இன்றி சரக்குப் போக்குவரத்து மேற்கொள்வது போன்றவையும், மற்றொரு நபருடைய ஜிஎஸ்டி எண்ணைப் பயன்படுத்தி விற்பனை செய்வது, அல்லது ஆவணங்களை அளிப்பது தண்டனைக்குரிய நடவடிக்கையாக என்கிறது.
வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் ஜிஎஸ்டி சட்டப்படி எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?
ஜிஎஸ்டி சட்டப்படி வரி ஏய்ப்பில் ஈடுபடு பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது வரி ஏய்ப்பு செய்த தொகை, மோசடியான வழிகளில் பெறப் பட்ட கூடுதல் தொகை, குறைவாக வசூலிக்கப் பட்ட தொகை இவற்றிலிருந்து 10 சதவீதம் அபரா தமாக விதிக்கப்படும். வரி ஏய்ப்பு தொகையை பொறுத்து 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
வரி விலக்கு பெற்ற சரக்குகளை எடுத்துச் செல்லும்போதும் உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டுமா?
சட்டப்படியான ஆவணங்கள், அல்லது விற்பனை, கொள்முதல் ரசீதுகள் இல்லாமல் சரக்குகளை எடுத்துச் செல்வது குற்றமாகும். அல்லது பயண வழியில் ஆவணங்கள் இல்லாமல் சரக்குகளை சேகரித்துக் கொண்டு செல்வதும் குற்றமாகும். இதனால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம். சரக்குகள் ஏற்றப்பட்ட வாகனத்தோடு தடுத்து நிறுத்தப்படலாம். இதற்கு ஜிஎஸ்டி சட்டம் அனுமதிக்கிறது.
வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் என்றா லும் அவற்றின் மதிப்பில் 2% அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும். வரி விதிப்பு சரக்கு எனில் அவற்றுக்கென விதிக்கப்படும் வரியையும், அதைப்போல 100% அபராதமாகவும் கட்ட வேண்டும். அல்லது அதற்க இணையாக உறுதிமொழி பத்திரங்களை அளிக்க வேண்டும்.
பல மாநிலங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு எங்கிருந்து வரி செலுத்துவது?
எந்த ஒரு சேவையாக இருந்தாலும் அந்த சேவையைப் பெறுபவர் பதிவு செய்த நபராக இருந்தால், இந்த சேவையை அளிக்கும் நபர் எங்கிருக்கிறாரோ, அவர் இருக்கும் இடம் சேவை வழங்கும் இடமாக கணக்கிடப்படும். அதேநேரத்தில் சேவையைப் பெறுபவர் பதிவு செய்யாதவராக இருந்தால் அந்த நிகழ்வு நடக்கும் இடத்தை சேவை வழங்கும் இடமாகக் கருதப்படும்.
எனவே இதற்கேற்ப வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு சேவை பல மாநிலங்களிலும் நடைபெற்றால் அது நடை பெறும் ஒவ்வொரு இடத்திலும் சேவையின் அளவுக்கு ஏற்ப மதிப்பிடப்படும்.
தொடரும்..

- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 24.06.2017

Monday, June 26, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் :1


ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 1
சரக்குகள் மற்றும் சேவைகள் என இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே வரி விதிப்பு இருக்கும். மாநிலத்துக்குள் நடக்கும் சரக்கு பரிமாற்றத்துக்கு சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி மற்றும் யுடிஜிஎஸ்டி என விதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சரக்குகள் பரிவர்த்தனைகளின் மீது ஐஜிஎஸ்டி என விதிக்கப்படும்.
ஜிஎஸ்டி வரியை எப்படி செலுத்துவது?
நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாகவே வரியைச் செலுத்தலாம். ஆனால் இதன் மூலம் வரி மட்டுமே செலுத்த முடியும். அபராதம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த முடியாது. அதேபோல ஆன்லைன் வழியாக செலுத்தப்பட்ட வரிகளை இன்புட் டேக்ஸ் கிரெட்டாக எடுத்துக்கொள்ளலாம். அவற்றை அவுட்புட் டேக்ஸ் செலுத்தலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படும். ஆனாலும், சிஜிஎஸ்டியின் இன்புட் டேக்ஸ் கிரெடிட்டை எஸ்ஜிஎஸ்டி வரிச் செலுத்தலுக்காகப் பயன்படுத்த முடியாது. அதாவது ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி என்ற வரிசையில்தான் பயன்படுத்த முடியும். வரி செலுத்துபவர் ரொக்கமாகவும் செலுத்தலாம். தவிர மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் ஆர்டிஜிஎஸ். என்இஎப்டி வழியாகவும், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் மூலமாகவும் ஜிஎஸ்டியை செலுத்தலாம்.
ஜிஎஸ்டி வரியை மாதத்தில் எந்த நாட்களில் செலுத்த வேண்டும்?
ஒவ்வொரு வரி செலுத்துபவரும் மாதாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய வேண்டும். முதல் மாதத்தின் விற்பனையை அடுத்து வரும் மாதத்தின் 20ஆம் தேதியில் செலுத்த வேண்டும். பணமாக செலுத்துவதாக இருந்தால் முதலில் வங்கிக் கணக்கில் அவை வைப்பு வைக்கப்பட வேண்டும். வரி செலுத்தும்போது அதிலிருந்து செலுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு வரி செலுத்து தலின்போதும் எடுக்கப்படும் தொகை பதிவு செய்யப்படும். உதாரணமாக மார்ச் மாதத்துக்கான வரி ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செலுத்தப்பட வேண்டும். நிறுவனம் சார்பாக வரி செலுத்துவோர் காலாண்டு அடிப்படையில் வரி செலுத்தலாம்.
வரிக் கணக்கு தாக்கல் செய்து, வரிச் செலுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்?
இதுபோன்ற சமயங்களில் வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக எடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. தாக்கல் செய்யப்பட்ட கணக்குக்கான முழு வரியையும் செலுத்தியிருந்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்பட்ட வரித் தாக்கல் ஆகும். அந்த வரித் தாக்கலுக்கு மட்டுமே பொருட்களைப் பெறுபவர் இன்புட் டேக்ஸ் கிரெடிட்டை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது வரிக் கணக்கு தாக்கல் செய்து முழு செல்ஃப்-அசெஸ்டு வரியையும் செலுத்தினால் மட்டுமே, பொருளைப் பெற்றவர் தாக்கல் செய்த வரிக்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட் வசதி ஏற்றுக்கொள்ளப்படும்.
அறக்கட்டளை மூலம் அளிக்கப்படும் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டுமா?
எந்த பரிவர்த்தனையாக இருந்தாலும் வர்த்தக நோக்கில் மேற்கொள்ளும்பட்சத்தில் வழங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படும். ஆனால் வர்த்தக நோக்கம் இல்லாமல் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை. அதாவது கொடுக்கல் வாங்கல் என்பது வர்த்தக நடவடிக்கையாக இருக்கக்கூடாது.
ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனங்களுக்கு சரக்கை அனுப்பினால் ஜிஎஸ்டி வரி கணக்கிடப்படுமா?
விநியோகம் என்பது விற்பனை, இடமாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதால் இது விநியோகமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எனினும் நிபந்தனைகளும் உள்ளன. வரி செலுத்தும் பணி அளிக்கும் நிறுவனம் அல்லது நபர் எவ்வளவு சரக்குகளையும் வரியின்றி ஜாப் ஒர்க் செய்யும் நபருக்கு அனுப்பலாம். அங்கிருந்தும் அது பிற ஜாப் ஒர்க் நபர் / நிறுவனங்களுக்கும் அதைக் கொண்டு செல்லலாம். வரி செலுத்துபவர் அந்த சரக்குகளை ஜாப் ஒர்க் முடிந்த பிறகு அந்த இடத்திலிருந்து அவை அனுப்பப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் திரும்ப எடுக்கும்போது வரி செலுத்த வேண்டும். அல்லது ஏற்றுமதிச் சரக்கு என்றால் வரி செலுத்தாமலோ திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
ஜாப் ஒர்க் செய்யும் இடத்திலிருந்து சரக்குகள் நேரடியாக சப்ளை செய்யட்டால் அது யாருடைய வரிக் கணக்கில் வரும்?
ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கணக்கில் இது சேராது. அது பணி அளிக்கும் நிறுவனங்களில் கணக்கில்தான் வரும். எனினும் வேலையைச் செய்து முடிக்க ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பயன்படுத்தும் சரக்குகள் / சேவைகளின் மதிப்பும் பொருளில் சேரும் என்பதால், அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் சேவையாக கணக்கிடப்பட்டு வரி கணக்கிடப்படும்.
பணி அளிப்பவரும், பணியை பெறுபவரும் வெவ்வேறு மாநிலமாக இருந்தால் எப்படி கணக்கிடப்படும்?
ஜாப் ஒர்க் பணிகளுக்கான சட்டப் பிரிவுகள் ஐஜிஎஸ்டி சட்டத்திலும் யுடிஜிஎஸ்டி சட்டத்திலும் உள்ளன. இதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, பணி அளிக்கும் நிறுவனமும், அதை செய்து கொடுக்கும் நிறுவனமும் ஒரே மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வெவ்வேறு மாநிலம் யூனியன் பிரதேசமாகவும் இருக்கலாம்.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் ஆரம்பத்தில் எழும் சந்தேகங்களை எப்படி தீர்ப்பது?
இதற்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் பல்வேறு வகைகளில் வரி செலுத்துபவர்களுக்கு உதவி செய்கிறது. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் இணையதளத்தில் இது தொடர்பாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வரி செலுத்துபவர்களில் சந்தேகங்களை இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழிகளிலும் உள்ளன. ஆரம்ப சிக்கல்களுக்கு இவை தீர்வை அளிக்கும். மேலும் உதவி தேவையெனில் வரிஆணைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
தொடரும்..
- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 23.06.2017