disalbe Right click

Saturday, August 26, 2017

பாதிக்கப்பட்டவருக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு!

மண்டபம் தராததால் கோவிலில் திருமணம், 
பாதிக்கப்பட்டவருக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு!
சென்னை : முன்பதிவு செய்தபடி, திருமண மண்டபத்தை வழங்காத நிர்வாகம், வாடிக்கையாளருக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், பீர்க்கன்காரணையைச் சேர்ந்த நடேசன் தாக்கல் செய்த மனு:
சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 2009ம் ஆண்டு, பிப்., 1ம் தேதி திருமண வரவேற்பும், 2ம் தேதி திருமணம் நடத்தவும் முன்கூட்டியே முன்பதிவு செய்தேன். மண்டப வாடகை மற்றும் அலங்காரம் செய்வதற்கான கட்டணமாக, 93 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். 
திட்டமிட்டபடி, 1ம் தேதி மதியம், 2:00 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்றபோது, அங்கு, வேறு ஒருவரின் திருமணத்திற்கு மண்டபம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த நான், நிர்வாகி மற்றும் மேலாளரிடம் கேட்டதற்கு, பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பினர். 
உடனடியாக குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் விசாரிக்க வந்தபோது, நிர்வாகியும், மேலாளரும் வெளியேறி விட்டனர். இக்கட்டான நிலையில், உடனடியாக வேறு திருமணம் மண்டபம் கிடைக்காததால், அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 
திருமணத்திற்கு, உணவு, இசை நிகழ்ச்சி, வாகன ஏற்பாடுகளுக்காக, 3.43 லட்சம் ரூபாய் சம்பந்தப்பட்டவர்களிடம் முன் கூட்டியே கொடுத்து விட்டேன். அனைத்தும் வீணானது. கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். இதனால், நாங்கள் திருமண மண்டபத்திற்கு செலுத்திய வாடகை மற்றும் உணவு மற்றும் இசை நிகழ்ச்சி உட்பட செலவான தொகையும் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். 
இவ்வாறு மனுவில், கோரி இருந்தார்.
இந்த வழக்கில், நீதித்துறை உறுப்பினர் ஜெயராம், உறுப்பினர் பாக்கியவதி, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: 
திருமண மண்டப நிர்வாகம், ஒப்புக்கொண்டபடி நடந்து கொள்ளாததால், மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளானது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்பட வாடகை, விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட, 3.35 லட்சம் ரூபாயும், மன உளைச்சலுக்கு, 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு, 20 ஆயிரம் ரூபாயும், மனுதாரருக்கு, திருமண மண்டப நிர்வாகிகளும், மேலாளரும் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2016

Friday, August 25, 2017

பீரியட்ஸ் எது நார்மல்?

பீரியட்ஸ் எது நார்மல்?
டி.வெண்ணிலா, மகப்பேறு மருத்துவர்
``பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டி.வெண்ணிலா. அப்படிச் சில அறிகுறிகளை அறிவோமா?
அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)
மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறு கின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
மாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)
சிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை செகண்டரி அமனோரியாஎன்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்னை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை பிரைமரி அமனோரியாஎன அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.
பயமுறுத்தும் பிசிஓடி (PCOD - PolyCystic Ovarian Syndrome)
சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.
வலிதரும் ஃபைப்ராய்டு (Fibroid)
சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.
கருக்கலைதல் (Miscarriage) கவலை
சிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.
துர்நாற்றமா? கவனம் தேவை!
மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.
உறவுக்குப் பின் உதிரம்
சிலருக்குத் தாம்பத்ய உறவுக்குப் பின்னர் ரத்தம் வெளியேறலாம். இது கர்ப்பவாயில் தொற்று அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடிப் பிரத்யேகப் பரிசோதனை, சிகிச்சை அவசியம்.
மெனோபாஸுக்குப் பின்னரும் உதிரப்போக்கு
மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
- ஆர்.ஜெயலெட்சுமி
நன்றி : டாக்டர் விகடன் - 01.09.2017 

மாதச் சம்பளதாரர்கள் ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம் எடுப்பது எப்படி?

மாதச் சம்பளதாரர்கள் ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம் எடுப்பது எப்படி?
நம் நாட்டில் மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும், பி.எஃப் கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை இதுவரை படிவம் மூலமாக விண்ணப்பித்துப் பெற்றுவந்தோம். இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
பி.எஃப் இதற்கு முன்...
உங்களுடைய பி.எஃப் பணத்தை நீங்கள் எடுக்க வேண்டுமெனில், நீங்கள் வேலைபார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியமாக இருந்தது. பி.எஃப் பணத்தை எடுக்கும்போது படிவம் எண் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்திசெய்து வேலைசெய்யும் நிறுவனத்திடம் தர வேண்டும். அதன் பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நிறுவனம் ஒப்புதல் அளித்த பிறகு, அந்தப் படிவம் பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். ஊழியர், பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அதனுடன் வங்கிக்கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைக்க வேண்டும். எல்லா வேலைகளும் முடிந்து இறுதியாக பி.எஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதுதான் இதுவரை பி.எஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையாக இருந்தது.
இதுமட்டுமின்றி நாம் பணிபுரியும் நிறுவனத்தில் ஏதோ ஒரு பிரச்னை காரணமாக அந்த நிறுவனத்தின் வேலையிலிருந்து விலகியவர்களுக்கு, பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறுவது என்பது பிரச்னையாகவும் சிக்கலாகவும் இருந்தது. இப்போது இந்த அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வேலைபார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எளிதாக ஆன்லைனில் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எடுக்கும் முன், உங்களுக்கு `யு.ஏ.என்' (Universal Account Number) எனச் சொல்லப்படும் யுனிவர்சல் கணக்கு எண் அவசியம். இந்த எண்ணை, நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். யு.ஏ.என் எண்ணைக் கேட்டு வாங்கிய பிறகு, இந்த எண்ணை பி.எஃப் வலைதளம் மூலம் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது நீங்கள் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் எந்தத் தொலைப்பேசி எண்ணை வழங்கினீர்களோ, அந்த எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அந்த எண்ணைப் பயன்படுத்தி யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம்!
யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்த பிறகு, பி.எஃப் http://www.epfindia.com வலைதளத்தில், உங்களுடைய பி.எஃப் கணக்கின் கே.ஒய்.சி ஆவணத்தில் ஆதார் விவரத்தை இணைத்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, பி.எஃப் சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என் எண்ணுடன், வங்கிக்கணக்கு, மொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால், பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பணம் எடுப்பதைப் பொறுத்தவரை மிக முக்கியமாக பி.எஃப் கணக்குடன் வங்கிக்கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் யு.ஏ.என் எண்ணை அவசியம் இணைத்திருக்க வேண்டும்.
சோ.கார்த்திகேயன்
நன்றி : விகடன் செய்திகள் - 24.08.2017 

பிடியாணை (Warrant) பற்றிய விளக்கம்

பிடியாணை (Warrant) பற்றிய விளக்கம்
குற்றம் செய்த ஒருவரை அல்லது குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருவரை எங்கு பார்த்தாலும் கைது செய்து தன் முன்னால் ஆஜர் படுத்துவதற்கு காவல்துறைக்கு  நீதிமன்றம் இடுகின்ற ஆணை பிடியாணை  (Warrant) ஆகும்.  
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-70
ஒரு பிடியாணை என்பது எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு, நீதிமன்றத்தில் தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற அலுவலரால் கையெழுத்து போடப்பட்டு, அந்த நீதிமன்றத்தின்  முத்திரையைக் கொண்டிருக்க  வேண்டும். இந்த பிடியாணை அதனை பிறப்பித்த நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்ற வரையிலோ அல்லது உரிய காவல்துறை அதிகாரியால் நிறைவேற்றப்படுகின்ற வரையிலோ அமுலில் இருக்கும்.
பிடியாணைகள் ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை, ஜாமீனில் விடமுடியாத பிடியாணை என்று இரண்டு  வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை (Cr.P.C:71 - Bailable Warrant)
ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் அவரிடமிருந்து தக்க பிணையத்தை (Surity) பெற்றுக்கொண்டு அவரை காவல்துறை பாதுகாப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று அந்தப் பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை ஆகும். 
ஜாமீனில் விட முடியாத பிடியாணை (Non-Bailable Warrant)
ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால்,  அவரை பிணையில் விடுவிக்க அந்த பிடியாணையில் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றால்  அது ஜாமீனில் விடமுடியாத  பிடியாணை ஆகும்.  இருந்த போதிலும், கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சமயத்தில், அவருக்கு அந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கலாம்.
வாரண்ட் இருக்கா?
சில திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். காவல்துறையினர் யாராவது ஒருவரை கைது செய்ய முற்படும் சமயத்தில், அவர் அவர்களிடம் “வாரண்ட் இருக்கா?” என்று கேட்பார்.   காவல்துறை அதிகாரி வாரண்டை எடுத்து காண்பிப்பார்.
பிடியாணையின் சாராம்சம்  (Cr.P.C:75)
பிடியாணையினை நிறைவேற்றுகின்ற காவல்துறை அலுவலர் அல்லது வேறு நபர் அதில் கூறப்பட்டுள்ள சாராம்சத்தை கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு அறிவிக்க வேண்டும். அவர் பிடியாணையை பார்க்க வேண்டும் என்று கேட்டால் அதனை அவருக்கு காண்பிக்க வேண்டும்.
24 மணி நேரத்திற்குள் ...  (Cr.P.C:76)
பிடியாணையின்படி கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடாத பட்சத்தில் அவரை 24 மணி நேரத்திற்குள் காவல்துறை அலுவலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.
பிடியாணையை நிறைவேற்றும் இடம் (Cr.P.C:77)
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு பிடியாணையை இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் நிறைவேற்றலாம்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-78
ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு ஒரு பிடியாணையை பிறப்பிக்கும் நீதிமன்றம், அதன் அதிகார வரம்பிற்கு வெளியே அந்த பிடியாணையானது நிறைவேற்றப்பட வேண்டியதிருக்கும்போது, அந்த மாவட்ட நீதித்துறை நடுவர் அல்லது காவல் ஆணையர் அல்லது மாவட்ட கண்காணிப்பாளர்  ஆகியவர்களில் ஒருவருக்கு தபால் மூலமாகவோ, அதனை அனுப்பி அதனை நிறைவேற்றச் செய்யவேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-79
ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையானது, அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நிறைவேற்றப்பட வேண்டியதிருந்தால்,  அந்தப் பகுதிக்குரிய நீதிமன்ற நடுவரிடமோ, தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரியிடமோ ஒப்புதல் கையொப்பம் பெறுவதற்கு அந்த பிடியாணை கடிதம் காவல்துறை அலுவலர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.  அப்பிடியாணையில் மேற்கண்ட அதிகாரிகளால் ஒப்புதல் செய்யப்பட்டால் அந்த காவல்துறை அலுவலர் அந்த பிடியாணையை நிரைவேற்றும் அதிகாரத்தை பெற்றவர் ஆவார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-80
சரி, பிடியாணையின்படி  அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நியமிக்கப்பட்ட காவல்துறை அலுவலர் ஒருவரை கைது செய்து விட்டார்.  அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?
பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றமானது (பிடியாணை கைதி)  கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இல்லை என்றால், அந்த வட்டார எல்லைக்குள் அதிகாரமுடைய காவல்துறை அதிகாரி முன்னால் கைதியை ஆஜர் படுத்த வேண்டும். 
கைது செய்யப்பட்ட நபர் பிடியாணையில் குறிப்பிட்டுள்ளவர்தான் என்று தங்களுக்கு தோன்றினால், நீதித்துறை நடுவர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையர் அந்த கைதியை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட வேண்டும். பிணையம் கொடுக்கக்கூடிய குற்றம் என்றால் பிணையம் கொடுக்கலாம். அந்த பிணைய பத்திரத்தை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.  
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-81
பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால், எந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதோ அந்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அல்லது செஷன்ஸ் கோர்ட் நீதிபதியோ தக்க பரிசீலணை செய்து அந்த கைதியை பிணையில் விட  உத்தரவிடலாம்.
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Thursday, August 24, 2017

’நெட்’ தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

 
நெட்தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்
பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், ’நெட்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, ’நெட்தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கு, ஆக., 11ல் ஆன்லைன் பதிவு துவங்கியது; செப்., 12 வரை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவில் பலர், ஆதார் எண் விபரங்களை குறிப்பிடாமல் உள்ளனர்.
இது குறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களின் சுய விபரங்களில் தவறு ஏற்படாமல் இருக்க, ஆதார் எண், பிறந்த தேதி போன்ற விபரங்கள், கட்டாயம் தேவை. காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தவர் மட்டும், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.08.2017 

Wednesday, August 23, 2017

கம்ப்யூட்டர் கீ போர்டு ஷார்ட்கட்ஸ்



 
கம்ப்யூட்டர் கீ போர்டு ஷார்ட்கட்ஸ்
உங்கள் கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 காம்பினேஷன் ஷார்ட்கட்ஸ்.
இன்று உலக அளவில் கணினியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, கணினி மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்டது எனக் கூறப்படுகிறது, மேலும் கல்வி, மருத்துவம், அலுவலகப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் அதிகம் பயன்படுகிறது இந்த கணினி. 
அலுவலகப் பணிகளுக்கும் கணினியின் பயன் அளவிடற்கரியதாகும். அலுவலகக் கோப்புகளையும் ஊழியர்களின் விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வதற்குக் கணினி பெரும் துணைபுரிகிறது. கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தாயாரித்தலிலும் கணினி உதவுகிறது 
கணினியில் மவுசைதான் நாம் அதிகம் உபயோகம் செய்கின்றோம், ஆனால் மிக எளிமையாக ஷார்ட் கட் பயன்படுத்தினால் கணினியில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யதுவிடலாம், மேலும் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலார்கள் அனைவரும் இந்த கீபோர்டு ஷார்ட் கட் பயன்பாட்டை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு பல வழிமுறைகள் உள்ளன, பின் வரும் ஸ்லைடர்களில் அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம் 
வழமுறை- 1:
வழிமுறை-1: Windows: 
விண்டோஸ் என்ற பொத்தானை அழுத்தினால் அனைத்து மெனுவும் திறக்கப்படும், தேவையான விருப்பத்தை தேர்வு செய்ய முடியும். 
Win + A: விண்டோஸ் 10-இல் கணியின் மையத்தை திறக்கிறது. 
Win + B: அறிவிப்புப் பகுதியின் முதல் ஐகானைத் தேர்வுசெய்கிறது அம்புக்குறி விசையைப் பயன்படுத்தி சின்னங்களை மாற்றலாம். 
வழிமுறை-2: Win + Ctrl + B:
அறிவிப்புப் பகுதியில் புதிய செய்தியை கொண்டுவந்து கொடுக்கும். 
Win + C: இந்தப் பயன்பாடு விண்டோஸ் 10-இல் உள்ளது, ஆதரிக்கப்படும் மொழியைப் பயன்படுத்த முடியும். 
Win + D: உடனடியாக டெஸ்க்டாப்பைக் காட்டுகிறது. 
வழிமுறை-3:
வழிமுறை-3: Win + E: 
இந்தப் பயன்பாடு விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் திறக்கிறது. 
Win + F: கோப்புகள் மற்றும் கோப்புறைகள் கண்டுபிடிக்க உதவுகிறது. 
Win + Ctrl + F : கணினியைப் பற்றி தெரிந்துகொள்ள இவை உதவுகிறது. 
வழிமுறை-4: Win + G: 
விண்டோஸ் 7, விஸ்டா, விண்டோஸ் 10 போன்றவற்றில் விளையாட்டு பட்டியலைக் கொடுக்கிறது. 
Win + K:ஒரு புதிய தொடக்க மெனுவை திறக்கிறது, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1-இல் பயன்படுகிறது. 
Win + L: விண்டோஸ் லாக் செய்ய இந்த பயன்பாடு உள்ளது. 
வழிமுறை-5:
வழிமுறை-5: Win + M: 
உங்கள் திரையை மினிமைஸ் செய்ய உதவுகிறது. 
Win + Shift + M: நீங்கள் மினிமைஸ் செய்த பகுதியை ரீஸ்டோர் செய்ய உதவுகிறது. 
Win + O : இந்தப் பயன்பாடு கீரோஸ்கோப் செயல்பாட்டை முடக்குகிறது. 
வழிமுறை-6:
வழிமுறை-6: Win + P : 
வெளிப்புற மானிட்டர் ஃ ப்ரொஜெக்டருக்கு இயக்க உதவியாக உள்ளது. 
Win + Q: மெனுவில் பயன்பாடுகளுக்கான தேடல் எனக் கூறப்படுகிறது. 
Win + R : பொதுவாக ரன் டயலாக் பாக்ஸ் திறக்க உதவுகிறது. 
வழிமுறை-7: Win + T:
தேவையான டாஸ்க்பார் ஒபன் செய்ய உதவுகிறது. 
Win + U:  யுடிலிட்டி மேனேஜர் பகுதியை திறக்க உதவுகிறது. 
Win + W:  விண்டோஸ் இன்க் பகுதியை பயன்படுத்த முடியும். 
Win + X: விண்டோஸ் மொபைல் அப்ளிகேஷன் சென்டர் திறக்க உதவுகிறது. Win + Y: யாஹூ மெஸ்சென்ஜ்ர் பகுதிக்கு செல்ல முடியும். 
மேக் ஒஎஸ் கீபோர்டு வழமுறை-1:
மேக் ஒஎஸ் கீபோர்டு 
வழிமுறை-1: Command + Up Arrow: 
விரைவாக வலைதளத்திற்க்கு செல்ல முடியும். 
Command + Down Arrow: வலைதளம் பக்கத்தில் இவற்றைப் பயன்படுத்த முடியும். 
Command + Semicolon: தவறாக எழுதப்பட்ட சொற்களை இந்த பயன்பாடு காட்டும். 
வழிமுறை-2: Command + 1 (2, 3): வரிசையாக உங்களது டேப் திறக்க இவைப் பயன்படும். 
Option + Delete : இந்தப் பயன்பாடு அனைத்து ஆவனங்களையும் டெலிட் செய்ய பயன்படும். 
Command + H: மறைந்துள்ள அனைத்து ஆப் பயன்படுகளை திறக்கப் பயன்படும். 
வழிமுறை-3: Command + Shift + T : இந்தப் பயன்பாடு யுஆர்எல் நினைவில் கொள்ள பயன்படும். 
Command + F3 : தேவையில்லாத ஆப் நீக்க இந்த பயன்பாடு உதவியாக உள்ளது. 
Option + Shift + Volume Up/Volume down: ஒலி வெளியீடு நிலைகளை அறிந்துகொள்ள முடியும்.
Written By: Prakash
நன்றி : கிஸ்பாட் - தமிழ் - 23.08.2017

Tuesday, August 22, 2017

உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்!

Image may contain: 1 person, text
உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்!
எஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: 
வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்!
டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.

இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.
ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.
தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட  மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்! என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
-கிருத்திகா மாடசாமி-
நன்றி :  விகடன் செய்திகள் (23/08/2015)

Monday, August 21, 2017

குற்ற உடந்தை Abetment

குற்ற உடந்தை Abetment
கடந்த 17.02.2017 அன்று கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, நடிகை பாவனா அவர்கள் கடத்தப்பட்டார். அந்தக் காரில் வைத்தே, கடத்தியவர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
  • அடுத்த சில நாட்களில் குற்றவாளிகளான அந்த கார் டிரைவர் மார்ட்டின் மற்றும் பல்சர் சுனில் என்ற இருவர் உள்பட 6 பேர்கள் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
  • இந்நிலையில், அந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கேரள மாநில பிரபல நடிகர் திலீப் அவர்கள் 10.07.2017 அன்று கைது செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தைச் செய்ய மேற்கண்ட ஆறு பேர்களையும் தூண்டிய காரணத்தினாலேயே நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
  • உடந்தைக் குற்றவாளி என்றால் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே அனைவருக்கும் தெரிந்த மேற்கண்ட நிகழ்வை முதலிலேயே இங்கு கூறியுள்ளேன்.
இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்ற உடந்தை என்றால் என்ன? உடந்தைக் குற்றவாளிகள் என்றால் யார்? என்பதைப் பற்றி விரிவாக கீழே காண்போம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 107
ஒரு குற்றச் செயலை செய்வதற்கு ஒருவருடன் வேறு ஒருவர் கீழ்க்கண்ட மூன்று வழிகளில் உடந்தையாக இருந்தால் அவர் உடந்தைக் குற்றவாளி ஆவார்.
  • ➤ முதலாவதாக, ஒரு குற்றச் செயலை யாரையாவது செய்யத் தூண்டுவது.
  • ➤ இரண்டாவதாக, ஒரு குற்றச் செயலை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் இணைந்து சட்டவிரோதமாக அதனைச் செய்வது.
  • ➤ மூன்றாவதாக, ஒரு குற்றச் செயலை செய்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஆலோசணை வழங்குவது.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 108
குற்ற உடந்தையர் (Abettor)
  • ஒரு குற்றச் செயலுக்கு யார் உடந்தையாக இருக்கிறாரோ அல்லது ஒரு குற்றத்தில் முடிகின்ற செயலுக்கு யார் உடந்தையாக இருக்கிறாரோ அவர் அந்தக் குற்றத்தின் உடந்தையர் ஆவார்.
  • ஆனால், செய்யப்பட்ட குற்றமானது குற்ற உடந்தையருக்கு இருக்கின்ற ஒத்த கருத்துடனும், அறிவுடனும் கூடிய திறனுடைய நபரால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
குற்ற உடந்தையின் முக்கியமான ஐந்து ஆக்கக் கூறுகள்
  1. சட்டப்படி செய்ய வேண்டிய செயலை செய்யாமலிருப்பவருக்கு உடந்தையாக இருப்பதும் குற்ற உடந்தையாகும்.
  2. ஒருவர் ஒரு குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்து, ஆனால் அந்தச் செயலின் விளைவானது குற்றமாக அமையாவிட்டாலும் அவர் குற்ற உடந்தையராகவே கொள்ளப்படுவார்.
  3. குற்ற உடந்தையாக இருக்கின்ற நபர் சட்டத் தகுதி பெற்றிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அதே போல அந்தக் குற்றத்தை புரிபவன் அதே கருத்தை கொண்டிருக்க வேண்டும் என்பத்ம் அவசியமில்லை.
  4. குற்ற உடந்தைக்கே உடந்தையாக இருப்பதும் குற்றம்தான்.
  5. சதி ஒன்று நடைபெறுவதற்கு உடந்தையாக இருக்கின்ற குற்ற உடந்தையாளர் அந்த சதியின் மூலமாக நடைபெறுகின்ற குற்றத்தில் பங்கு பெற வேண்டும் என்பது இல்லை.
குற்ற உடந்தைக்கு தண்டணை- பிரிவு 109
எந்தக் குற்றம் ந்டைபெற உடந்தையாக ஒருவர் இருக்கின்றாரோ, அவரும் அந்தக் குற்றத்திற்கு இந்திய தண்டணைச் சட்டம் வகுத்துள்ள தண்டணையை அனுபவிக்க வேண்டும்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி

”குற்றமுறு சதி”யின்னா என்னாங்க?

”குற்றமுறு சதி”யின்னா என்னாங்க?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-120A
இந்திய தண்டணைச் சட்டத்தில், பிரிவு 120A குற்றமுறு சதியைப் பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது.
  • குறைந்தது இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு விரோதமான ஒரு செயலை அல்லது சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு செயலை செய்வதற்கு அவர்கள் உடன்படுகின்ற செயலானது “குற்றமுறு சதி” எனப்படும்.
  • இந்த குற்றமுறு சதியைப் பொறுத்த அளவில் ஒரு செயலை செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் உடன்பட்டிருக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும்.
சரி, இதற்கு சட்டம் தருகின்ற தண்டணை என்ன?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-120B
  • மரணதண்டணை, ஆயுள் தண்டணை வழங்கப்படும் குற்றங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டணை அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிற்கு சிறைத்தண்டணை விதித்து தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தை செய்வதற்கான குற்றமுறு சதியில் பங்கு கொள்கின்ற யாராக இருந்தாலும் (அது போன்ற ஒரு குற்றமுறு சதியை இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கு வழிமுறைகள் எதுவும் ஏற்படுத்தாமல் இருந்தால்) அத்தகைய குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது போலவே அவர் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
  • மேலே கூறப்பட்ட கடுமையான குற்றங்களாக இல்லாமல் இருந்து வேறு சிறிய குற்றங்களுக்கு என சதி செய்யப்பட்டு இருந்தால், சதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேற்படாத கடுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
  • செயல் நடைபெறாமல் குற்றமுறு சதிக்காக மட்டும் நடவடிக்கை எடுக்கலாம்
  • குற்றச் செயல்கள் எதுவும் நடைபெற்று இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை.
  • குற்றச் செயலை செய்வதற்கு இரண்டு நபர்கள் உடன்பட்டாலே போதும். அதனைக் கொண்டே குற்றமுறு சதிக்காக அவர்களை தண்டிக்கலாம்.
  • உதாரணமாக, ஒரு பெண்ணை அவளது மாமியாரும், கணவரும் சேர்ந்து விஷம் கொடுத்து கொல்ல வேண்டும் என்று சதி செய்கின்றனர்! என்று வைத்துக் கொள்வோம்.
  • அதனை நிறைவேற்ற செயலில் இறங்கினர் என்று நிரூபிக்க வேண்டியதில்லை. இரண்டு பேரும் அதற்கு உடன்பட்டனர் என்பதற்கான திட்டத்தை நிரூபித்தாலே போதுமானது.
State of Andhra Pradesh vs I.B.S.Prasad Rao and Others - A.I.R. 1970 S.C.648
  • மேற்கண்ட வழக்கில் நான்கு பேர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
  • அவர்கள் நால்வரும் ஆந்திர மாநில மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை செய்பவர்கள்.
  • போலியான வரைவோலைகள் மற்றும் ரசீதுகளை தயார் செய்து தாங்கள் வேலை செய்கின்ற வங்கியை ஏமாற்ற இவர்கள் நால்வரும் சதித்திட்டம் தீட்டினர்.
  • ஆனால், ஏமாற்றவில்லை. அதற்குள் இவர்களது சதி கண்டுபிடிக்கப்பட்டு நால்வரும் இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 420 மற்றும் 120B ன் கீழ் தண்டிக்கப்பட்டனர்.
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி