disalbe Right click

Tuesday, January 9, 2018

சீரகத்தின் மகத்துவம்

நமது வீட்டின் சமையலறையில் இருக்கும் சீரகத்தின் மகத்துவம் அளவிடமுடியாதது. அகம் என்று சொல்லக்கூடிய உடலின் உட்புறத்தை சீராக்குவதாலேயே இதனை நமது முன்னோர்கள் சீரகம் என்றனர்.
அதன் பயன்களை கீழே காணலாம்.
சீரகத்தை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன், சீரகத்தை கலந்து பருகி வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்து வந்தால், மன நோய் குணமாகும்.
சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, பிசைந்து புளியங்கொட்டை அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து காயவைத்து, அதனை துாளாக இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்து சாப்பிட்டு, அதன்பிறகு மோர் குடித்து வந்தால், மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி கலந்து, சிறிது உப்பு சேர்த்து பருகினால், வாயுத் தொல்லை நீங்கும்.
சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சைப் பழச் சாற்றில் கலந்து, ஒருநாள் ஊற வைத்துக் கொண்டு அதனை, தினம் இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடியாக இடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால், உடலிலுள்ள எல்லா உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். மனித உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, தேகத்தை பளபளப்பாக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து அதனை வாயில் போட்டு மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி இலைகளை சேர்த்து வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை லேசாக பொன்னிறமாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்தை அரைத்து பவுடராக்கி. அதனை தேனுடன் கலந்து லேகியமாக சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாக மாறுவார்கள்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.01.2018

Monday, January 8, 2018

கொலை நடந்த நேரம் கண்டுபிடிக்க....?

கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது.
மரணம் நிகழ்ந்த பிறகு, பாக்டீரியாக்கள் சடலத்தின் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும் போது அவை துர்நாற்றம் வீசும் வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் திசுக்களின் அடியில் தங்குவதால் உடல் வீக்கமடைந்து விடுகிறது. சில சமயங்களில் இந்த வீக்கம் முகம் மற்றும் பாகங்களின் உருவ அமைப்பையே மாற்றி நெருங்கிய உறவினர்களால் கூட அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு சிதைத்து விடுகிறது.
மரணம் நிகழ்ந்து 36 மணி நேரத்துக்கு பிறகு சடலத்தின் இயற்கையான மற்றும் செயற்கையாக ஏற்பட்ட துவாரங்கள் (காயங்கள்) ஆகியவற்றில் ஈக்கள் முட்டை இடுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில், அந்த முட்டைகளிலிருந்து 'லார்வாக்கள்' எனப்படும் புழுக்கள் வெளிப்படுகிறது. அரிசியின் அளவே உடைய மண்புழு போன்ற தோற்றம் கொண்ட இந்த 'லார்வாக்கள்' சடலத்தின் மீது நெளிய ஆரம்பிக்கிறது. அடுத்த 4 அல்லது 5 நாட்களில் இந்த 'லார்வாக்கள்' பியூப்பா எனப்படும் கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன. அதற்கு அடுத்த 4 அல்லது 5 நாட்களில் 'பியூப்பாக்கள்' முழு வளர்ச்சி பெற்ற ஈக்களாகி பறந்து விடுகிறது. இதனடிப்படையில் மரணம் நிகழ்ந்த நேரத்தை தோராயமாக கணிக்கலாம்.
1. சடலத்தின் மீது ஈக்களின் முட்டைகள் காணப்பட்டால் மரணம் சுமார் 36 மணி நேரத்துக்கு முன்னர் நிகழந்திருக்க வேண்டும்.
2. சடலத்தின் மீது லார்வாக்கள் காணப்பட்டால் மரணம் நிகழ்ந்து 60 மணி நேரம் ஆகியிருக்கலாம்
3. சடலத்தின் மீது 'பியூப்பா' எனப்படும் கூட்டுப்புழுக்கள் காணப்பட்டால் மரணம் 6 நாட்களுக்கு முன்பு நிகழந்திருக்க வேண்டும். பொதுவாக மரணம் நிகழ்ந்து 2 நாட்களுக்கு பின்னர் சடலத்தின் மீது லார்வாக்கள் தோன்றுகின்றன. பின்னர் அவை பியூப்பாவாக மாற 4 தினங்கள் பிடிக்கின்றன.
4. சடலத்தின் மீது முழு வளர்ச்சி அடைந்து ஈக்களாகி பறந்து விட்ட பியூப்பாக்களின் காலியான வெளி ஓடுகள் மட்டுமே இருப்பின் மரணம் நிகழ்ந்து குறைந்தது 10 நாட்கள் ஆகி இருக்க வேண்டும்.
5. இறப்பு நேர்ந்த பின் 3 நாட்கள் கழித்து நகங்கள் பிடிமானம் இழந்துவிடும்.
6. அதேபோல் இறப்பு நிகழ்ந்து 4 நாட்கள் கழித்து பற்கள், ஈறுகளின் பிடிமானத்தை இழந்து ஆடத் தொடங்கும்.
7. சடலத்தின் மூளைப் பகுதி திரவமாக மாறி விட்டிருந்தால், இறப்பு நிகழ்ந்து 5 நாட்கள் ஆகி இருக்க வேண்டும்.
8. மரணம் நிகழ்ந்து 12 க்கும் 14 க்கும் இடைப்பட்ட நாட்களில் சடலத்தின் உள்ளே பாக்டீரியா நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படும் வாயுக்களால், வீக்கம் உச்சகட்டத்தை அடைந்து வயிறு வெடித்து விடும்.
9. மரணம் நிகழ்ந்த பிறகு உடலின் தசைகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்களின் விளைவாக தசைகள் சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். இந்த நிலை மரணம் நிகழ்ந்த மூன்றிலிருந்து 6 மணி நேரத்திற்குள் முழுமை அடையும்.
10. ஆனால் நம் நாட்டில் வெப்பம் அதிகமாக இருப்பதால் 2 அல்லது 3 மணி நேரங்களில் மரண விறைப்பு நிலை ஏற்பட்டுவிடும்.
11. குளிர் காலங்களில் விறைப்பு நிலை 24 முதல் 28 மணி நேரம் வரையிலும், கோடை காலத்தில் 18 லிருந்து 36 மணி நேரம் வரையிலும் நீடிக்கும்.
12. பிரேத பரிசோதனையின் போது உடல் விறைப்பாகவும், அதன் தலையை, மார்பை நோக்கி வளைக்க முடியாத நிலையிலும் இருந்தால், மரணம் பிரேத பரிசோதனை செய்யப்படும் நேரத்திலிருந்து 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாக நிகழ்ந்து இருக்க வேண்டும்.
13. அசைவ உணவு அதிகமாகவும், காய்கறிகள் குறைவாகவும் சாப்பிட்ட உணவு 4 லிருந்து 5 மணி நேரத்திற்குள் முழுமையாக செரிக்கப்பட்டு, கழிவுகள் ஜீரணப் பாதையை விட்டு வெளியேறிவிடும். சைவ உணவு 6 லிருந்து 7 மணி நேரத்திற்குள் முற்றிலுமாக ஜீரணிக்கப்பட்டு கழிவாக மாறிவிடும்.
14. படுக்கையில் இறந்து கிடப்பவரின் சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிறைய இருந்தால் அவர் படுத்த பின் சற்று நேரம் உயிரோடு இருந்திருக்கிறார் என்று அர்த்தம்.
15. சடலத்தின் சிறுநீர் பை காலியாக இருந்தால் அந்த நபர் காலையில் எழுந்து சிறுநீர் கழித்த பிறகுதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அர்த்தம்.
16. சடலத்தின் பெருங்குடலில் உணவு முற்றிலுமாக செரிக்கப்பட்டு மலமாக இருந்தால், அந்த நபர் காலைக் கடன்களை கழிப்பதற்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அர்த்தம்.

நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan