disalbe Right click

Tuesday, February 6, 2018

பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்!

பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்!
குமரி மாவட்டம் கட்டையன்விளையைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு  ஒன்றைத் தொடுத்துள்ளார். 
அதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில், 'நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான நாகர்கோவில் நகராட்சி கமிஷனரை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுநாகர்கோவில் நகராட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாகர்கோவிலில் புதிய நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்ற பின்பு வருமானம் அதிகரித்துள்ளது. எனவே, மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தாக்கல்செய்துள்ளார் என்று வாதாடியுள்ளார் 
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்
'கோரிக்கையை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
நாகர்கோவில் நகராட்சி கமிஷனர் சிறப்பாகப் பணி புரிந்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்நோக்கத்துடன் மனுதாரர் மனுதாக்கல் செய்திருப்பதால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை மதுரை உயர் நீதிமன்ற சட்ட உதவி மையத்தில் வருகிற 19.02.2018-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என்று அறிவித்துள்ளனர்.
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.02.2018 

Sunday, February 4, 2018

விஜிலென்ஸ் விழிப்புணர்வு முகாம்

பயணியர்களின் அன்பான கவனத்திற்கு.....
தென்னக ரயில்வேயில், விஜிலென்ஸ் பிரிவின் சார்பாக பயணியர்களுக்கு விழிப்புணர்வு முகாம், வருகின்ற 10.02.2018ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
ரயில்வேயில் நடக்கின்ற ஊழல்கள், முறைகேடுகள், உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள், இரயில்வே ஊழியர்களின் அடாவடி மற்றும் ரயில் பயணத்தில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட, அனைத்து முறைகேடுகளையும், விஜிலென்ஸ்
உதவி மையத்திற்கு, 155210 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இணையதளம் மூலமாக, vigcomplaints@sr.railnet.gov.in என்ற முகவரியிலும் புகாரை பதிவு செய்யலாம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி மையத்தின் போன் எண் மற்றும் இணையதள முகவரி குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தெற்கு ரயில்வே முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், 22.01.2018 முதல் 28.01.2018 வரை, விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும், 10.02.2018 ம் தேதி வரை, முக்கிய ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முழுவதும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.02.2018

Friday, February 2, 2018

விடுதலைப் பத்திரம்

விடுதலைப் பத்திரம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு மிக அதிகமான பங்குதாரர்கள் இருந்தாலோ அல்லது பங்கு பிரிக்க முடியாதபடி சிறிய சொத்தாக இருந்தாலோ அல்லது அதனை யாரும் தனியாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை இருந்தாலோ, இருக்கின்ற பங்குதாரர்களில் ஒருவருக்கோ அல்லது சிலருக்கோ மற்ற பங்குதாரர்கள், (பங்கை அனுபவிக்க இருப்பவர்களிடமிருந்து அவர்கள் பங்குக்குரிய பணத்தை பெற்றுக் கொண்டு) விட்டுக்கொடுத்து அதனை ஒரு பத்திரம் மூலம் எழுதிக் கொள்வார்கள். இதனையே விடுதலைப் பத்திரம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் இதற்கு (Release Deed) என்று பெயர். தனி மனித உரிமைகளைக் கூட விட்டுக் கொடுப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை Releasor என்றும், விடுதலைப் பத்திரம் எழுதி வாங்குபவரை Releasee என்றும் சொல்கிறார்கள்
வித்தியாசங்கள் 
மற்ற பத்திரங்களுக்கும் இதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. 
1. இதற்கு நிரந்தரமான முத்திரைக் கட்டணம் கிடையாது. மற்ற பத்திரங்களுக்கு இருப்பது போல் ஒரே அளவாக இல்லாமல்  சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல மாறுபடும்.
2. மற்ற பத்திரங்கள் அசையாச் சொத்துகள் குறித்த நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால், விடுதலைப் பத்திரமானது அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகியவற்றில் உள்ள உரிமைகள் மட்டுமல்லாமல், கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் ஆகியோர்களுக்கிடையே இருக்கின்ற, தனி மனித உரிமைகளைக் கூட விட்டுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
3. சொத்துக்களை அடமானம் வைக்கும் போதோ அல்லது அந்த சொத்துக்களின்மீது கடன் வாங்கும் போதோ எழுதிக் கொடுக்கப்படுகின்ற விடுதலைப் பத்திரம், அந்த அடமானத்தை அல்லது அந்தக் கடனை முழுமையாக தீர்த்துவிட்டால், அடமானம் பெற்றவரிடமிருந்தோ, கடன் கொடுத்தவரிடமிருந்தோ அந்த சொத்தின் உரிமையாளரால் திரும்பப் பெறப்படுகிறது.
கவனம் தேவை
விடுதலைப் பத்திரம் என்பது உங்களது உரிமைகளை சில நேரங்களில் தற்காலிகமாகவும், சில நேரங்களில் நிரந்தரமாகவும் விட்டுக் கொடுத்து எழுதி பதிவு செய்யப்படுகின்ற ஒரு ஆவணமாகும்.  ஆகையால், மிக கவனமாக எழுத வேண்டும். ஒருமுறைக்கு பலமுறை படித்துப் பார்த்து கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் அதனை நாம் திரும்பப் பெற முடியும். 

விடுதலைப் பத்திரம் மாதிரி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விடுதலை ஆவணம்

201_______ம் வருடம் _______ மாதம் _____ம் நாள் _________________________ விலாசத்தில் வசிக்கும் திரு.__________ அவர்களின் குமாரர் சுமார் ____ வயதுள்ள திரு. __________ (அடையாள அட்டை ______) (கைபேசி எண்.______) ஆகிய தங்களுக்கு

_________________________ விலாசத்தில் வசிக்கும் திரு.__________ அவர்களின் குமாரர் சுமார் ____ வயதுள்ள திரு. __________ (அடையாள அட்டை ______) (கைபேசி எண்.______) ஆகிய நான்

மனப்பூர்வமான சம்தத்துடன் சம்மதித்து எழுதிக்கொடுக்கும் விடுதலைப் பத்திரம் என்னவென்றால்.

இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘ஏ’ ஷெடியூல் சொத்தானது ____________. ________________ பதிவு மாவட்டம், ____________ சார்பதிவகம், ________________ கிராமம், சர்வே எண்.______ மனை எண்._____, கதவு எண்.______________________ இதற்கு உட்பட்ட விஸ்தீரணம் ____________ சதுரடிக்கொண்ட சொத்தினை, நமது தகப்பனார் திரு.________________ அவர்கள் கடந்த ____________ந் தேதியில் ________________ சார்பதிவாளர் அலுவலகம் 1 புத்தகம், _______ வருடத்திய __________ம் ஆவண எண்ணாக பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரப்படிக்கு, தமது பெயருக்கு கிரையம் கிடைக்கப் பெற்று அன்று முதல் அவர் மேற்படி சொத்தினை அவருடைய சுவாதீனத்தில் சர்வ அக்கு உரிமைகளுடன் சர்வ வில்லங்கச் சுத்தியாய் ஆண்டனுபவித்துக்கொண்டு வந்தார்.

அவ்வாறு ஆண்டனுபவித்து வருகையில் நமது தகப்பனார் பிரஸ்தாப சொத்தைப் பொருத்து எந்தவித ஏற்பாடும் செய்யாமல் ______ தேதியில் காலமாகிவிட்டார். அவர் காலத்திற்கு பிறகு அவரது வாரிசுகள் என _______ வட்டாட்சியர் வழங்கிய வாரிசுரிமை சான்று எண்.______ நாள்.________ன்படி நமது தாயார் திருமதி.___________ மற்றும் நாம் இருவரும் வாரிசுகள் ஆவோம்.

இந்நிலையில் ______ தேதியில் நமது தாயாரும் இயற்கை எய்திவிட்ட நிலையில், பிரஸ்தாப சொத்தை நமது தந்தையின் நேரடி வாரிசுகளாக நாம் இருவர் மட்டும் கூட்டாக அனுபவித்து வருகிறோம்.

மேலும் நம்மால் இச்சொத்தை கூட்டாக ஆண்டனுபவிக்க முடியாத காரணத்தினாலும், தங்கள் மீது எனக்குண்டான அன்புனாலும், பிரியத்தினாலும் இதனடியில் ‘பி’ ஷெடியூலில் கண்ட எனக்குண்டான பிரிபடாத 1/2 பாக சொத்தினை, இன்றைய தேதியில் நான் தங்களின் பெயருக்கு இந்த விடுதலை பத்திரப்படிக்கு விடுதலை செய்து தங்களின் சுவாதீனத்தில் ஒப்படைத்து விட்டேன்.

ஆகையால் இன்று முதல் தாங்கள் இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘பி’ ஷெடியூல் சொத்தினை தங்கள் பெயரில் மனைக்குரிய ரெவின்யு ரிக்கார்டுகளையும், பட்டாவையும் சப்-டிவிஷன் செய்துக்கொண்டும், கட்டிட கட்ட அனுமதி பெற்றக்கொண்டு, மாநகராட்சி கட்டிட வரிவகையறாக்கள், மின்இணைப்பு வரி வகையறாக்கள், குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி வகையறாக்கள் உள்ள பாகத்திற்கு பெயர் மாற்றிப் பெற்றுக்கொண்டு, தங்களின் இஷ்டம்போல் தங்களின் புத்திர பௌத்திர பாரம் பரியமாய், வித்தொத்தி தானாதி வினிமிய விக்கிரையங்களக்கு உரித்த யோக்கியங்களுடன் சர்வ சுதந்திர பாத்தியதைகளுடன் சர்வ வில்லங்க சத்தியாய் ஆண்டனுபவித்துக்கொள்ள வேண்டியது.

அப்படி தாங்கள் இன்று முதல் இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘பி’ ஷெடியூல் சொத்தினை ஆண்டனுபவித்துக் கொள்வதில் எனக்கும், எனது வாரிசுகளுக்கும், சந்ததிகளுக்கம் மற்ற உள்ள எவருக்கும் எவ்விதமான சொந்தமும், சம்மந்தமும், பாக அக்கு வாரிசு உரிமையும், பின்தொடர்ச்சி தாவாக்களும் ஏதும் கிடையாது என்று இதன் மூலம் நான் உறுதி அளிக்கிறேன்.

சொத்து விவரம்
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

ஆக இந்தப்படிக்கு நான் கீழ்கண்ட சாட்சிகள் முன்னிலையில் மனப்பூர்வமான சம்மதித்து எழுதிக் கொடுத்த விடுதலை ஆவணம் ஆகும்.

சாட்சிகள்.


1.

2.

******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 03.02.2018 

Wednesday, January 31, 2018

காசோலையைப் பற்றி

காசோலை என்றால் என்ன?
காசோலை என்பதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காசோலை என்றால் என்ன? என்பதைத் தெரியாத பாமர மக்கள்கூட இன்று காசோலைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களிடம் காசோலையை செக் என்று சொன்னால்தான்  அவர்களுக்குத் தெரியும். 
ஒரு வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கமாக அதே நேரத்தில் பாதுகாப்பாக பணத்தைச் செலுத்துவதற்கு, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படுவது காசோலை ஆகும். இன்றைய சூழலில் ஆன்லைன் மூலமாகவும், கிரடிட் கார்டு மூலமாகவும் பணப்பரிமாற்றம் நடந்து வந்தாலும் காசோலைகளின் பயன்பாடு குறையவில்லை. அந்த காசோலை பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.
மாற்றத்தக்க ஆவணச் சட்டம் (Negotiable Instruments Act)
காசோலை பற்றி  மாற்றத்தக்க ஆவணச் சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.  காசோலையை பொறுத்த வரையில் அது  (1) (Drawer) காசோலை எழுதிக் கொடுப்பவர், (2) (Payee) காசோலையை பெற்றவர், (3)  (Drawee) காசோலைக்கு பணம் அளிப்பவர் என்ற மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டதாகும். மேற்கண்ட மூவருக்குமே இதில் முக்கிய பொறுப்புகள் உண்டு.
காசோலை அளிப்பவருக்குள்ள (Drawer) பொறுப்புகள் என்ன?
1 ஒருவருக்கு காசோலை அளிப்பதற்கு முன், வங்கியில் உள்ள தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விபரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
2. காசோலையில் நிரப்புகின்ற தொகை இருப்புத் தொகையைவிட குறைவாக இருக்க வேண்டும்.
3.  காசோலையில் தேதி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
4. பணம் பெறுகின்றவரது பெயர் அல்லது நிறுவனத்தின் பெயர்,  ஊர் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும். 
5. தனி நபர் ஒருவருக்கு காசோலை மூலமாக பணம் அளிப்பதாக இருந்தால் அந்தக் காசோலையின் இடது பக்க மேல் மூலையில் மறக்காமல் குறுக்குக் கோடு (crossed cheque) இட வேண்டும்.
6. அளிக்க இருக்கின்ற தொகையினை அதற்குரிய இடத்தில் எண்ணாலும் எழுத்தாலும் எழுத வேண்டும்.
7. கண்டிப்பாக காசோலையில் மறக்காமல் கையெழுத்து இட வேண்டும். 
8. காசோலைகளின் எந்த இடத்திலும் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது.
9. காசோலைகளில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் இருக்க வேண்டும்.
10. ஒரு காசோலையில் வேறு வேறு பேனாக்களின் மூலமாகவோ, வேறு வேறு வண்ண மைகளைக் கொண்டோ எழுதக்கூடாது.
11. நீங்கள் கொடுத்த காசோலை தொலைந்துவிட்ட தகவல் உங்களுக்கு கிடைத்தவுடன் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு எழுத்து மூலமாகவும் அறிவிக்க வேண்டும்.
காசோலை பெற்றவருக்குள்ள (Payee) பொறுப்புகள் என்ன?
1.  காசோலை பெற்றவுடன் அதனைப் பெற்ற நாள், அதனை வழங்கிய நபர், காசோலையின் எண், வங்கியின் பெயர்,  அதில் எழுதப்பட்டுள்ள தொகை ஆகியவற்றை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். 
2. பெற்ற காசோலையில் உள்ள தேதியை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்தத் தேதிக்குப் பின்னரே அதனை அந்த வங்கியில் அளித்து தொகையைப் பெற முடியும்.
3. காசோலையில் குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் அதனை பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அது செல்லாதது ஆகிவிடும்.
4. காசோலையின் பின்புறம் கையெழுத்து இட வேண்டும். குறுக்குக் கோடிட்ட காசோலையாக இருந்தால் அந்தக் காசோலையின் பின்புறத்தில் அந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணையும் எழுத வேண்டும். 
5. காசோலை அளிக்கப்பட்ட வங்கியில் உங்களுக்கு கணக்கு இல்லை என்றால், உங்களுக்கு எந்த வங்கியில் அக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியில் அந்தக் காசோலையை செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சில நாட்கள் கழித்தே பணம் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து சேரும். 
6. பெற்ற காசோலை தொலைந்துவிட்டால், அதனை உடனடியாக காசோலை வழங்கியவருக்கும், வங்கிக்கும் தெரியப்படுத்த வேண்டும்
காசோலைக்கு பணம் அளிப்பவருக்குள்ள (Drawee) பொறுப்புகள் என்ன?  
1. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்குக் குறைவாக அதனை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இருந்தால், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
2. பெறப்பட்ட காசோலை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
3. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னர் வங்கியில் செலுத்தப்பட்டால் அதற்கு பணம் வழங்க வேண்டியதில்லை.
4. வங்கியின் நேரம் முடிந்த பிறகு கொடுக்கப்படுகின்ற காசோலைக்கு பணம் வழங்க வேண்டியதில்லை.
5. காசோலையில் அடித்தல், திருத்தல் இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
6. காசோலையினை வழங்கிய நபர் இறந்திருந்து அந்த செய்தி வங்கி ஊழியருக்கு தெரிந்திருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
7. காசோலையினை வழங்கிய நபர் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு அறிவித்து இருந்தாலும் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
8. காசோலையினை வழங்கிய நபர் கணக்கிலிருந்து யாருக்கும் பணம் அளிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்தாலும், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
9. காசோலையினை வழங்கிய நபர் வங்கிக்கு ஏதேனும் பணம் கொடுக்க வேண்டியது இருந்தால், அந்த பற்றுத்தொகைக்கு மட்டுமே அவரது அக்கவுண்டில் பணம் இருந்தால்,  
அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
10. குறுக்குக் கோடு (crossed cheque) இடப்பட்ட காசோலையை கொண்டு வருபவருக்கு அந்த வங்கியில் அக்கவுண்ட் இல்லை என்றால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
11. கையெழுத்து இல்லாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.  
12. வேறு வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
13. முழுமையாக நிரப்பப்படாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
14. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மூன்று மாதங்களுக்கு முந்தியது என்றால்,   அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.02.2018 

Tuesday, January 30, 2018

உடந்தை குற்றவாளி

Indian Penal Code - Sec 107 & 306
தற்கொலை செய்துகொண்ட நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இவர்தான் காரணம் என்று, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரால் எழுதப்பட்ட கடிதத்தை மட்டும் (Suicide Note) அடிப்படையாக கொண்டு "தற்கொலைக்கு உடந்தையாயிருந்தார்" (Abetment to Suicide) என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபருக்கு தண்டனை வழங்க முடியாது.
இ. த. ச பிரிவு 306 தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது.
அவ்வாறு தண்டனை வழங்குவதற்கு
  • (1)- ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்.
  • (2)- தற்கொலைக்கு ஒருவர் உடந்தையாக இருக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் உடந்தையாக இருந்தவருக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான குற்ற மனம் இருக்க வேண்டும். மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள் நோக்கத்தோடு, அந்த செயலை செய்வதற்கு உடந்தையாக ஒருவர் இருக்க வேண்டும். பொதுவாக பேச்சுவாக்கில் கூறப்படும் வார்த்தைகளையும் உடந்தையாக இருந்ததாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொள்கிற நபர் அதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தில், ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற காரணத்தினால், அந்த நபர் இ. த. ச பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்கிற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக்கூடாது.
  • உடந்தையாக இருத்தல் என்பதற்கு பிரிவு 306ல் எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
  • ஒரு நபரை சில செயல்களை செய்யும்படியோ அல்லது செய்யாது இருக்கும்படியோ தூண்டி விடுவது என்பதுதான் உடந்தை என்பதற்கு பொருளாகும்.
  • அவ்வாறு தூண்டிவிடும் செயலானது வார்த்தைகள், செயல்கள் அல்லது எழுத்துக்கள் மூலம் அல்லது செய்கைகள் மூலமாகவும் இருக்கலாம்.
  • மற்றவர்கள் முன்பு ஒருவரை அவமானப்படுத்திய செயலாகவும் இருக்கலாம்.
  • எனவே ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவினை எடுப்பதற்கு எதிரி ஒரு முக்கியமான பங்கினை ஆற்றியிருக்க வேண்டும்.
  • காதல் தோல்வியால் காதலன் தற்கொலை செய்து கொள்வது, தேர்வை சரியாக எழுதாததால் மாணவர் தற்கொலை செய்து கொள்வது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கட்சிக்காரன் தற்கொலை செய்து கொள்வது போன்ற தற்கொலை சம்பவங்களில் காதலித்த பெண், ஆசிரியர், வழக்கறிஞர் போன்ற நபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று கூற முடியாது.
  • ஒரு நபர் கோழைத்தனமாக, முட்டாள்தனமாக, பலவீனமான மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டால், அதற்காக மற்றொரு நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்த முடியாது.
  • தற்கொலை செய்து கொள்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் கிடையாது.
  • ஆனால் தற்கொலைக்கு தூண்டும் செயல் குற்றமாகும்.
  • தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை செய்து கொண்ட நபரின் விருப்பமாக இல்லாமல், அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது எதிரியின் விருப்பமாக இருக்க வேண்டும்.
  • ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு எதிரி செயல்பட்டிருக்க வேண்டும்.
  • அந்த செயல் வார்த்தைகளாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ நடைபெற்றிருக்கலாம்.
  • அதேசமயம் மிகவும் பலவீனமான மனநிலை கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதனை ஒருவர் தூண்டிவிட்டதாக கருதுவது தவறு.
  • ஒருவருடைய முட்டாள்தனமான செயலுக்காக மற்றொரு நபரை பொறுப்பாளியாக்க முடியாது.
  • எனவே ஒரு பெண் முட்டாள்தனமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காதலனை தண்டிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
  • எனவே பெண்கள் காதலனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டால் அந்த காதலனுக்கு தண்டனை கிடைக்காது என்பதை புரிந்து கொள்ளவும்.
CRL. OP. NO - 142/2016, DT - 16.06.2016,
Manikandan Vs Inspector of police, Tiruneelakkudi Police Station, Thanjavur District
(2016-4-MLJ-CRL-240)
Thanks to: https://m.facebook.com/adpdhandapani/

இறந்தவர்களின் சொத்துகளை மீட்க


இறந்தவர்களின் சொத்துகளை மீட்க என்ன செய்ய வேண்டும்?
இறப்பு என்பது யாருக்கு எந்த நேரத்தில் வரும் என்று சொல்லமுடியாது. ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் திடீரென்று இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் எங்கெல்லாம் இருக்கிறது? என்பதை அவரது குடும்பத்தினர்கூட தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. கணவர், மனைவி மற்றும் பிள்ளைகள், ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் சொத்து வாங்குவது இது போன்ற நேரங்களில் மற்றவர்களுக்கு நஷ்டத்தையும், மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்திவிடும். இது போன்ற சூழ்நிலைகளில் குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம், வாருங்கள்.
உயில் இருந்தால்.....!

இறந்தவர் உயில் எழுதி வைத்திருந்தால் பிரச்சனையே இல்லை. எங்கு, எவ்வளவு சொத்து இருக்கிறது? எந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது? என்ற விபரம் உயிலில் கண்டிப்பாக இறந்தவரால் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இறப்புச் சான்றிதழ் & வாரிசுச் சான்றிதழ் அவசியம்
பதிவுத் துறையில் அல்லது எந்த ஒரு நிதி நிறுவனத்தில் இறந்து போனவருடைய சொத்து அல்லது சேமிப்பு சம்பந்தமாக தகவல்கள் பெற நீங்கள் அணுக வேண்டும் என்றால் அவருடைய இறப்புச் சான்றிதழ் மிக அவசியம் ஆகும். 
ஒருவருடைய இறப்புச் சான்றிதழ் மட்டும் இருந்தால் போதுமா? நீங்கள் கேட்கும் தகவல்களை அவர்கள் தந்துவிடுவார்களா? 
யார் நீங்கள்? எதற்காக இதையெல்லாம் கேட்கிறீர்கள்? என்ற கேள்வியை அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். அவற்றை தர மறுப்பார்கள். 
வாரிசுச் சான்றிதழ் உங்களிடம் இருந்தால் மேற்கண்ட கேள்விகளை உங்களிடம் அவர்கள் கேட்க முடியாது. நீங்கள் கேட்கும் தகவல்களை அவர்கள் கண்டிப்பாக கொடுத்துத்தான் ஆகவேண்டும். 
மேற்கண்ட இரண்டு சான்றிதழ்களையும் பெற்ற பிறகு, அவற்றை வைத்து இறந்தவரின் பெயரிலுள்ள சொத்துக்கள் முதலீடுகள் மற்றும் கடன்கள் எங்கு உள்ளது? என்ற விவரங்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். 
ஒருவரின் பெயரில்தான்.........!
வங்கி கணக்குகள், முதலீடுகள், பி.எஃப். தொகை, இன்சூரன்ஸ் ஆகியவற்றைப் பெறுவதற்கு இறந்தவருடைய வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு முதலீடுகள் பெருகின்ற அதிகாரத்தை மற்ற வாரிசுகள் அளிக்க வேண்டும். முதலீடு செய்யப்பட்டத் தொகையை நிதி நிறுவனம் அவரது பெயருக்கு அளிக்கும். அதன்பிறகு மற்றவர்களுடன் அவர் அந்த தொகையை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதுவே இலகுவான முறையாகும்.
உடன்பாடு இல்லையென்றால்.........?
இறந்தவருடைய வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள உடன்பாடு ஏற்படவில்லை என்றால், நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
************************************************** செல்வம் பழனிச்சாமி -31.01.2018