நீண்ட கால சிக்கலுக்கு தீர்வு கண்ட தமிழக அரசு!
வீட்டு மனைகளின் அளவு, 800 சதுர அடியாக இருந்தாலும், கட்டிடம் கட்ட அனுமதி தரும் வகையில், தமிழக அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால், ரியல் எஸ்டேட் துறை இனி நல்ல வளர்ச்சியைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.
மனை வாங்கவே முடியவில்லை!
நடுத்தர மக்களின் கனவு ஒரு மனையை வாங்கி, நமக்குத் தகுந்தாற்போல் சின்னதாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், சென்னை பெருநகர் பகுதிகளில் உருவாக்கப்பட்ட மனைகளின் சதுர அடி குறைந்தபட்சம் 1500 சதுர அடி இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருந்ததால், பெரும்பாலானோர் தங்களது வீடு கட்டும் கனவை நனவாக்க முடியாமல் கனவாகவே வைத்திருந்தனர். ஏனென்றால் ஒரு மனை வாங்கவே பல லட்சங்கள் தேவைப்படும். இதில் வீடு எப்படி கட்டுவது?
விதியைத் தளர்த்திய தமிழக அரசு!
நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் விதமாக தமிழக அரசு விதிகளைத் தளர்த்தியுள்ளது. புதிய லே - அவுட்களில், மனைகளின் குறைந்த பட்ச அளவு, 800 சதுரடியாக நிர்ணயிக்கப்பட்டு, கட்டுமான அனுமதியை, தற்போது சி.எம்.டி.ஏ., வழங்குகிறது. சென்னையைத் தவிர, பிற பகுதிகளில், கட்டுமான அனுமதியை, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., தருகிறது. மனையின் முன்பகுதியின் அளவு 30 அடியாகவும், மனையின் நீளம், 50 அடியாகவும் இருக்க வேண்டும் என இருந்த விதிகள் இருந்தன. இனி மனையின் முன்பகுதியின் அளவு 20 அடியாகவும், மனையின் நீளம், 40 அடியாகவும் இருந்தால் போதுமானது என்று நகர் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி, தெரிவித்துள்ளது.
டி.டி.சி.பி., புதிய சுற்றறிக்கை
மனைகளின் குறைந்தபட்ச அளவை மாற்றி அமைப்பது குறித்து, சமீபத்தில் நடந்த உயர் நிலை குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டு, மனைகளின் குறைந்தபட்ச அளவு, 1,500 சதுர அடியில் இருந்து, 800 சதுர அடியாக குறைக்கப்பட்டு. முகப்பு அகலம், 20 அடி; நீளம், 40 அடியாக இருக்கலாம் என, தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், திறந்த வெளி ஒதுக்கீடாக, சாலைக்கு ஒதுக்கிய இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில், 10 சதவீதத்தை ஒதுக்கும் வகையிலும், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக டி.டி.சி.பி., புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.03.2018