disalbe Right click

Monday, March 5, 2018

800 சதுர அடி மனைக்கும் கட்டட அனுமதி

நீண்ட கால சிக்கலுக்கு தீர்வு கண்ட தமிழக அரசு!
வீட்டு மனைகளின் அளவு, 800 சதுர அடியாக இருந்தாலும், கட்டிடம் கட்ட அனுமதி தரும் வகையில், தமிழக அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால், ரியல் எஸ்டேட் துறை இனி நல்ல வளர்ச்சியைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.
மனை வாங்கவே முடியவில்லை!
நடுத்தர மக்களின் கனவு ஒரு மனையை வாங்கி, நமக்குத் தகுந்தாற்போல் சின்னதாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், சென்னை பெருநகர் பகுதிகளில் உருவாக்கப்பட்ட மனைகளின் சதுர அடி குறைந்தபட்சம் 1500 சதுர அடி இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருந்ததால், பெரும்பாலானோர் தங்களது வீடு கட்டும் கனவை நனவாக்க முடியாமல் கனவாகவே வைத்திருந்தனர். ஏனென்றால் ஒரு மனை வாங்கவே பல லட்சங்கள் தேவைப்படும். இதில் வீடு எப்படி கட்டுவது?
விதியைத் தளர்த்திய தமிழக அரசு!
நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் விதமாக தமிழக அரசு விதிகளைத் தளர்த்தியுள்ளது.  புதிய லே - அவுட்களில், மனைகளின் குறைந்த பட்ச அளவு, 800 சதுரடியாக நிர்ணயிக்கப்பட்டு, கட்டுமான அனுமதியை, தற்போது சி.எம்.டி.., வழங்குகிறது. சென்னையைத் தவிர, பிற பகுதிகளில், கட்டுமான அனுமதியை, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., தருகிறது. மனையின் முன்பகுதியின் அளவு  30 அடியாகவும், மனையின் நீளம், 50 அடியாகவும் இருக்க வேண்டும் என இருந்த விதிகள் இருந்தன. இனி மனையின் முன்பகுதியின் அளவு  20  அடியாகவும், மனையின் நீளம், 40 அடியாகவும் இருந்தால் போதுமானது என்று நகர் ஊரமைப்பு   துறையானடி.டி.சி.பி, தெரிவித்துள்ளது.
டி.டி.சி.பி., புதிய சுற்றறிக்கை
மனைகளின் குறைந்தபட்ச அளவை மாற்றி அமைப்பது குறித்து, சமீபத்தில் நடந்த உயர் நிலை குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டு, மனைகளின் குறைந்தபட்ச அளவு, 1,500 சதுர அடியில் இருந்து, 800 சதுர அடியாக குறைக்கப்பட்டு. முகப்பு அகலம், 20 அடி; நீளம், 40 அடியாக இருக்கலாம் என, தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், திறந்த வெளி ஒதுக்கீடாக, சாலைக்கு ஒதுக்கிய இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில், 10 சதவீதத்தை ஒதுக்கும் வகையிலும், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக டி.டி.சி.பி., புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.03.2018 

Friday, March 2, 2018

ரயில் டிக்கெட் முன்பதிவு

பெண் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தனியாக பயணம் செய்ய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பெண் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வசதியாக, பாதுகாப்பாக மற்றும் பயணச் செலவு குறைவாக இருப்பதால் இப்போது பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆண்களது துணை இல்லாமல் தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ அல்லது குழுவாகவோ பயணம் செல்வதற்கு பெண்களுக்கு மிகவும் ஏற்ற ரயில் பயணத்திற்கு டிக்கட் கிடைப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. 
படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 6 இடங்கள்
தற்போது அந்த சிரமத்தை போக்குவதற்காக இரயில்வே நிர்வாகம் புதிய முடிவை அறிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஒதுக்கப்படாத படுக்கைகளை, பெண் பயணிக்கோ அல்லது பெண் பயணிகளின் குழுக்களுக்கோ முதலில் ஒதுக்குவது என்று முடிவு செய்திருக்கிறது. இதனால், படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 6 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை பெண் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு  ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், "இந்த ஆறு படுக்கை வசதி கொண்ட இருக்கைகளும், தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கோ அல்லது ஒரே PNR எண்ணில் பதிவு செய்யப்படும் பெண் பயணிகளுக்கோ ஒதுக்கப்படும். ரயில் பயணத்தின் முதல் சார்ட் தயாரிக்கப்படும் வரை 6 படுக்கை வசதிகளும் முன்பதிவு செய்யப்படாத நிலையில், அது வெயிட்-லிஸ்ட்டில் இருக்கும் பெண் பயணி அல்லது குழுவாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஒதுக்கப்படும். அதற்கடுத்ததாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையினை ரயில்வே வாரியம் கடந்த 15.02.2018ம் தேதி மத்திய ரயில்வே தகவல் மையம் (சிஆர்ஐஎஸ்) மற்றும் ஐஆர்சிடிசிக்கு அனுப்பியுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதற்குத் தேவையான வகையில் மாற்றங்களை செய்யப்படுவதற்கு ஏதுவாக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 02.03.2018 

Thursday, March 1, 2018

அதிகாரிகள் செய்த நிலமோசடி!

வழக்கின் சுருக்கம்
கோவையில் உள்ள 14 ஏர்ஸ் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வி.வி.ஆனந்தபாரதி என்பவரிடமிருந்து 06.11.1992 அன்று எம்.விஜயமோகன் என்பவர் கிரையம் பெறுகிறார். அந்த நிலத்தை எம்.விஜயமோகனிடமிருந்து 31.01.2005 அன்று உதயகுமார் என்பவர் கிரையம் பெறுகிறார். உதயகுமார் பெயரில் பட்டாவும் வாங்கப்படுகிறது. இந்த இடத்தின் சர்வே எண்:27/4 ஆகும். எதிர்பாராவிதமாக உதயகுமார் இறந்துவிடுகிறார். இவரது நிலமானது கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால் மோசடியாக புல எண்:27/4-A, 27/4-B என்று உட்பிரிவு செய்யப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமாரின் மனைவி திருமதி கே.மலர் என்பவர் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 19.02.2014 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன்கீழ் மூலம் மேற்கண்ட மோசடி குறித்து சில தகவல்கள் கேட்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7(1)ன்கீழ் 30 நாட்களுக்குள் தகவல் வழங்காத காரணத்தால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(1)ன்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவை 21.03.2014 அன்று (கோவை வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தவறுதலாக) வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பிவிடுகிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(3)ன்கீழ், வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் அந்த முதல் மேல்முறையீட்டு மனுவை 5 நாட்களுக்குள் கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் 15 நாட்கள் கழித்து, காலதாமதமாக, அந்த மனுவை கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த மனுவை 07.04.2014 அன்று பெற்றுக் கொண்ட கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(6)ன்கீழ் மனுதாரருக்கு தகவல் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மனுதாரர் கே.மலர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(3)ன்கீழ் மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறார்.
மாநில தகவல் ஆணையமானது அவரது மனுவை ஏற்றுக் கொண்டு 12.02.2015 அன்று விசாரனை செய்து சில ஆனைகளை பிறப்பிக்கிறது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக 23.04.2015 அன்று மாநில தகவல் ஆணையம் மீண்டும் விசாரனையை நடத்தி கீழ்க்கண்ட ஆணையை பிறப்பிக்கிறது.
குறிப்பு: கீழ்க்கண்ட ஆணையை மட்டும் பார்த்தால் எதுவும் புரியாது என்பதற்காக வழக்கைப் பற்றிய விபரம் என்னால் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
*********************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 01.03.2018




நன்றி : ஆவண காப்பகர் திரு   A Govindaraj Tirupur 

Wednesday, February 28, 2018

நடிகையின் உடலுக்கு அரசு மரியாதை!

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் - சிவகாசி தாலுகாவிலுள்ள மீனம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். தெற்கிலிருந்து வடக்கே சென்று திரையிலகில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகைகளான பத்மினி, வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி ஆகியோர்கள் வரிசையில் இணைந்தவர். ஏற்கனவே மணமான போனிகபூரை மணந்த இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருக்கின்றனர். 
அரசு மரியாதையுடன் தகனம்
ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக  துபாய் நாட்டிற்குச் சென்ற இவர் கடந்த 24ம் தேதி குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டார்.  பல தடைகளைக் கடந்து இந்தியா வந்த அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் இறந்த ஒரு நடிகைக்கு இதுபோல அரசு மரியாதை செய்வது சரிதான? என்று பலரும் புருவத்தை உயர்த்துகிறார்கள். நாட்டுக்காக அவர் என்ன செய்துவிட்டார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழத்தான் செய்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
நமது நாட்டில் உள்ள முக்கியமானவர்களில் குடியரசுத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் இறந்தால் மட்டுமே அவர்களுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.  முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு தற்போது மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் இப்போது யாருக்கு முழு அரசு மரியாதை தரவேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம்
கலைத்துறையில் செய்த சேவையினால்தான்!
மறைந்து போன ஒருவருக்குஇருக்கின்ற புகழ் மற்றும் அவர் சமுதாயத்துக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கோ ஆற்றிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முழு அரசு மரியாதை தரலாம் என விதிகள் சட்டத்தில் ஏற்டுத்தப்பட்டுள்ளது.. இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் இறக்கும்போது அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கலாமா? அளிக்கக்கூடாதா? என்பது பற்றி அந்த மாநிலத்தின் முதல்வர், தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம்
காவல்துறையின் பொறுப்பு
முடிவெடுத்த பின்னர் இறந்தவருக்கு  முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு அந்த மாநிலத்தின் காவல்துறைக்கு வழங்கப்படும். அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள். 
அதுபோன்றுதான் நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.
************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.03.2018

Tuesday, February 27, 2018

தேசிய தகுதித் தேர்வு 2018

நாடெங்கும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test) பற்றிய அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) தற்போது வெளியிட்டுள்ளது. இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய தகுதித் தேர்வு: 
2018ம் ஆண்டுக்குரிய இந்தத் தேர்வு ஜூலை 8ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை மூன்று தாள்கள் கொண்ட தேர்வானது இந்த முறையிலிருந்து இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்ட முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும் (மொத்தம் 1 மணி நேரம் மட்டும்) நடத்தப்படும். இதில் மொத்தம் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு 1000 ரூபாய் கட்டணமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) 500 ரூபாய் கட்டணமும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு 250 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்..
வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற தேசிய தகுதித் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை. ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்காக தேசிய தகுதித் தேர்வை எழுதுபவர்களுக்கு இதற்குமுன் அதிகபட்சமாக 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது..
விண்ணப்பிக்கும் நாள்
கல்லூரி ஆசிரியர் பணிக்கு  தேசிய தகுதித்  தேர்வுக்கான முழுமையான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education)  வெளியிட்டுள்ளது. இதற்கு மார்ச் மாதம் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 5 ம் தேதி கடைசி நாளாகும்.
Website : https://cbsenet.nic.in/
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.02.2018 

நன்றி!

உங்களது பேராதரவோடு
www.selvampalanisamy.com

நன்றி, நன்றி, நன்றி!
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, February 26, 2018

நன்றி, நன்றி, நன்றி!




நன்றி, நன்றி, நன்றி!
தங்களின் பேராதரவோடு
www.selvampalanisamy.com