disalbe Right click

Sunday, August 18, 2019

புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பத்து முக்கிய அம்சங்கள்!

 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் புதிய பத்து முக்கிய அம்சங்கள்!
இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசால் இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்டு முப்பது ஆண்டுகளில் வர்த்தகத்தின் வளர்ச்சியானது நமது நாட்டில் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலை உருவானது

அதனால் இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு மாற்றாக, ‘இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019’ என்னும் புதிய சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நிறைவேற்றப் பட்டுள்ளது. இதிலுள்ள பத்து முக்கிய அம்சங்கள்  பற்றிக் காணலாம். 
1. ஒழுங்குமுறை ஆணையம்
செபி, .ஆர்.டி.. போன்று சில ஒழுங்குமுறை ஆணையங்கள் இருப்பதைப்போல, நுகர்வோர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கென்று ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.   மாவட்டமாநில மற்றும் தேசிய அளவில்  குழுக்கள் இருந்தாலும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்ய  அவற்றிற்குப் போதுமான அதிகாரம் இல்லையென்பதால், புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள்
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என்ற இந்த அமைப்புக்கு அனைத்து மண்டலங்களிலும் தனி  அலுவலகம் இருக்கும். நுகர்வோர்கள் தருகின்ற புகார்கள் மீது விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்குவதற்கும், பொருள்களின் தரத்திற்கு ஏற்படும் இழப்பீட்டுக்குத் தக்க நுகர்வோருக்கு  நஷ்ட ஈடு வழங்குவதற்கும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால் நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். 
2. தவறான விளம்பரம் மற்றும் முறைகேடான வர்த்தகம்
விளம்பரங்கள் மூலமாக விற்கப்படும் பொருள்கள்  தவறானது என்று தெரிய வந்தால், அதற்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் ரூ.பத்து லட்சம் அபராதத் தொகையும் வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே தவறைச் செய்பவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும் ரூ.ஐம்பது லட்சம் நஷ்ட ஈடும் வசூலிக்க நுகர்வோருக்கு இந்தச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
3.தவறான விளம்பரங்களுக்கு  நடிகர்கள் மற்றும் பிரபலங்கள்மீது நடவடிக்கை
தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலமாக, பொதுமக்கள் வாங்குகின்ற  பொருள்களைப் பற்றித் தவறான முறையில் விளம்பரம் செய்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
4. புகார் செய்யும் முறையில் தாராளமயம்
இந்த புதிய சட்டத்தின்படி, எந்த மாவட்டத்தில் இருந்தாலும், எந்த மாநிலத்தில்  இருந்தாலும்நுகர்வோர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நுகர்வோர் நீதிமன்றங்களை நாட வழி வகுக்கப்பட்டுள்ளது.
5. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரித்தல்
இந்தபுதிய சட்டத்தின்படி, சாட்சியாளரையோ புகார் தாரரையோ வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும். இதனால் வழக்குகள் துரிதமாக முடித்து வைக்கப்படும்
6. புகார் ஏன் நிராகரிக்கப்பட்டது?
புகார்தாரரை விசாரிக்காமல், ஒரு நுகர்வோரின் புகாரைஆணையத்தால் இனி தள்ளுபடி செய்ய முடியாது. பேச்சு வார்த்தைகளின் மூலம் சுமுகமாகத் தீர்க்கப்படவேண்டிய புகார் எனில், அதற்கும் இந்தச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
7. புகார்களை விரைவில் தீர்வு செய்தல்
தற்போது அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதற்கும் இந்தச் சட்டத்தின்  மூலம் விரைவில் தீர்வு காண்பதற்குப் புதிய நடைமுறைகளைக் கொண்டுவர வழி  வகுக்கப்பட்டுள்ளது.
8. முறையற்ற வர்த்தக நடைமுறைகள்
பழைய சட்டத்தில் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் ஏதும் இணைக்கப்படவில்லை. ஆனால், இந்த சட்டத்தில் 
ரசீது கொடுக்காமல் பொருள்கள் வழங்குவது
⧭ வாங்கிய பொருள்களைத் திரும்பப் பெறாமல் இருப்பது
⧭ சேவைகளை முன்கூட்டியே ரத்து செய்யமுடியாமல் போவது
⧭ முன்கூட்டியே கடனைச் செலுத்துவதை அனுமதிக்காதது
⧭ கூடுதலாக டெபாசிட் தொகையைக் கேட்பது
⧭ அதிகமாக அபராதம் கேட்பது 
போன்றவை  இணைக்கப்பட்டிருக்கிறது.
9. இழப்பீடுகள் பற்றி 
இந்த புதிய சட்டத்தில் உற்பத்தியாளர் அல்லது சேவையை வழங்குபவர்களுக்கு அதிக பொறுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையால்  பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் இச்சட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் இழப்பீடு பெறமுடியும்.
10. கலப்படத்துக்கு உண்டான தண்டனைகள்
எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத கலப்படமாக இருந்தாலும், அதற்கு ஆறு மாத கால  சிறைத்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஓரளவு சுமாரான பாதிப்பை ஏற்படுத்தும் கலப்படமாக இருந்தால், ஒரு வருடம் சிறைத்தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதனால், வருங்காலங்களில்  கலப்படம் கணிசமாகக் குறையும். 
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 19.08.2019 

Wednesday, August 14, 2019

வக்கீல் நோட்டீஸ் –ஐப் பற்றி தெரிந்து கொள்வோமா?

வக்கீல் நோட்டீஸ்ஐப் பற்றி தெரிந்து கொள்வோமா?
ஒருவர் மீதோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீதோ சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடர்வதற்கு முன்னால், அது பற்றிய அறிவிப்பை அவருக்கு அல்லது அவர்களுக்கு வழக்கறிஞர் மூலம் நாம் கொடுக்கின்ற அறிவிப்பையே வக்கீல் நோட்டீஸ் என்று சொல்கிறோம்.  
வழக்கறிஞர் மூலமாகத்தான் இதை கொடுக்க வேண்டுமா?
அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. சட்டம் தெரிந்தால் நாமே இதனை அனுப்பலாம். பொதுவாக இதற்குப் சட்ட அறிவிப்பு என்பதே சரியானது. விபரம் தெரியாதவர்கள் வழக்கறிஞர் மூலம் இதனை அனுப்புவதால் இதனை வக்கீல் நோட்டீஸ் என்கிறார்கள்.
இந்த அறிவிப்பில் என்ன சங்கதி இருக்கும்?
ஒரு செயலை செய்ய வேண்டும் என்றோ அல்லது ஒரு செயலை செய்யாமல் இருக்க வேண்டும் என்றோ அல்லது செய்யப்பட இருக்கும் சில செயல்களால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை குறித்து அறிவுறுத்தி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு அல்லது நபர்களுக்கு எழுத்து மூலமாக கொடுக்கும் எச்சரிக்கைதான் "சட்ட அறிவிப்பு" எனப்படுகிறது.
இதனை அனுப்பாமல் வழக்கு தொடுக்க முடியாதா?
பொதுவாக நாம் தாக்கல் செய்யப்போகின்ற வழக்கு எதுவாக இருந்தாலும், அதற்கு முன்பு எதிர் தரப்பினருக்கு அந்த வழக்கு பற்றிய அறிவிப்பு ஒன்றை கொடுப்பதுதான் நல்லது. தான் செய்தது அல்லது செய்யப்போவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை எதிர்தரப்பினர் உணர்ந்து கொண்டு அதை செய்யாமல் இருக்கவும், சமாதானத்திற்கு வரவும் அது உதவும். வழக்கிற்கான செலவு மிச்சமாகும். நேரமும் மிச்சம் ஆகும்.
சட்ட அறிவிப்பு கொடுக்காமல் வழக்கு தொடர்ந்தால், அதனாலேயே சில சமயங்களில் வழக்கு தள்ளுபடி ஆகலாம்.  ஆகையால் சில வழக்குகளுக்கு கண்டிப்பாக சட்ட அறிவிப்பு கொடுத்தே ஆகவேண்டும்.
இதற்கு உதாரணமாக
அரசாங்கத்திற்கு எதிராக நாம் வழக்கு தொடரும் முன்பாக உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 80 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு
சொத்துரிமை மாற்றுச் சட்டம் 106 வது பிரிவின்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு
இரயில்வே சட்டம் பிரிவு 106 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு
ஆகியவற்றைக் கூறலாம்.
சட்ட அறிவிப்பில் என்னென்ன இருக்க வேண்டும்?
பொதுவாக சட்ட அறிவிப்பில் நாம் தாக்கல் செய்ய இருக்கும் வழக்கின் சங்கதிகள் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும்.
⧭ சட்ட அறிவிப்பை கொடுக்கிறவரின் பெயர் மற்றும் முகவரி
⧭ சட்ட அறிவிப்பு பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி
⧭ வழக்கின் பிரச்சினை குறித்த விபரம்
⧭ சட்ட அறிவிப்பிற்கான வழக்கு மூலம்
⧭ வேண்டுகின்ற பரிகாரம்
⧭ பரிகாரத்தை நிறைவேற்றவில்லை என்றால், அதனால் ஏற்படும் விளைவுகள்
⧭ எத்தனை நாட்களுக்குள் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்?
⧭ சட்ட அறிவிப்பு வழக்கறிஞர் மூலமாக கொடுக்கப்பட்டால் இறுதியில் வலது புறம் அவரது கையொப்பம் அல்லது அனுப்புபவரின் கையொப்பம்
⧭ சட்ட அறிவிப்பின் கடைசியில் இடதுபுறம் அனுப்புபவரின் ஊரும், தேதியும் குறிப்பிட வேண்டும்.
அறிவிப்பை எப்படி அனுப்ப வேண்டும்?
யாருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டுமோ,  அவரது பெயரைக் குறிப்பிட்டு முகவரிக்கு பதிவுத் தபாலில் ஒப்புகை அட்டை இணைத்து, இந்திய தபால்துறை மூலம் அனுப்பி வைக்க வேண்டும். கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பாதீர்கள். இ மெயில் மூலம், வாட்ஸப் மூலமும் இப்போது அனுப்புகிறார்கள். முக்கியமாக பெறுபவரின் பெயர் மற்றும் முகவரியில் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுப்பியதற்கான ரசீது மற்றும் ஒப்புதல் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கின் போது அவைகளும் ஒரு ஆதாரமாக பதிவு செய்யப்படும்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 14.08.2019