disalbe Right click

Tuesday, March 10, 2020

போலி ஆவணம் புனைதல்

'பொய் ஆவணம் புனைந்தவர் மற்றும் தயாரித்தவர்களுக்கு 
தண்டனை வாங்கி கொடுக்க என்ன செய்ய வேண்டும்? .
திருமதி. டோர்ஸ் விக்டர் என்பவருக்கு வள்ளியூர் கிராமத்தில் வீட்டு மனைகள் இருந்தது. அந்த சொத்துக்களை ஜவகர்ராஜ் என்பவர் மோசடியாக அபகரித்து கொள்ள வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் உரிமையாளரான டோர்ஸ் விக்டர் என்பவருக்கு பதிலாக வேறொரு பெண்ணை ஆள்மாறாட்டம் செய்து அவர் பெயருக்கு ஒரு பவர் ஆவணத்தை பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த மோசடி பவர் ஆவணத்தை பயன்படுத்தி மேற்படி சொத்துக்களை ராஜபாண்டி என்பவரிடம் ரூ. 50,0000/-க்கு அடமானம் வைத்தார்.
மேற்படி தனது சொத்துக்கள் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிக்கப்பட்ட விஷயத்தை கேள்விப்பட்ட டோர்ஸ் விக்டர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஜவகர்ராஜ் மற்றும் ராஜபாண்டி ஆகியோர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420,423,424 465 மற்றும் 109 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் திருமதி. டோர்ஸ் விக்டர் இறந்து விட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜவகர்ராஜ் பிரிவு 465 ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனையும், ராஜபாண்டிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து எதிரிகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் எதிரிகளை விடுதலை செய்தது.
" இந்த வழக்கில் ஆள்மாறாட்டம் செய்த பெண்ணை பற்றி புலன்விசாரனை அதிகாரி தனது இறுதியறிக்கையில் எதுவுமே கூறவில்லை. முக்கிய குற்றவாளியான ஆள்மாறாட்டம் செய்த பெண்ணை விசாரிக்காமல், அந்தப் பெண்ணால் ஆதாயம் அடைந்த எதிரிகளை மட்டும் வழக்கில் சேர்த்தது தவறு. முக்கிய எதிரிக்கு தண்டனை வழங்காமல் மற்ற எதிரிகளுக்கு தண்டனை வழங்கியதை ஏற்க முடியாது " என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டோர்ஸ் விக்டரின் மகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுகளை தாக்கல் செய்தார். வழக்கை இரு நீதிபதிகள் விசாரித்தனர்.
பொய்யாவணம் புனைதல் என்பதற்கான விளக்கம் 
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 463 லும், பொய்யாவணம் புனைதல் என்கிற குற்றச் செயலுக்குள் எவையெல்லாம் அடங்கும் என பிரிவு 464 லும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு சட்டப் பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ள காரணிகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 465 ன் கீழ் தண்டனை வழங்க முடியும்.
உச்சநீதிமன்றம் " முகமது இப்ராகிம் மற்றும் பலர் Vs பீகார் மாநில அரசு மற்றுமொருவர் (2009-8-SCC-751)" என்ற வழக்கில், ஒரு நபர் பொய்யாவணம் புனைந்தவர் என்று கருதப்படுவதற்கு கீழ்க்கண்ட காரணிகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
1. ஒருவருக்கு சொந்தமான அல்லது வேறொருவரால் அங்கீக்கப்பட்டுள்ள உரிமை குறித்து ஓர் உரிமையை கோருதல் அல்லது ஓர் ஆவணத்தை புனைதல்
2. ஓர் ஆவணத்தில் மாற்றம் செய்தல் அல்லது மோசடி செய்தல் அல்லது
3. ஏமாற்றி ஓர் ஆவணத்தை எழுதிப் பெறுதல் அல்லது ஒரு நபர் சுயநினைவில்லாமல் உள்ளபோது அந்த நபரிடமிருந்து ஆவணத்தை எழுதிப் பெறுதல்
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 464 ல் விளக்கம் 2 ல் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் பார்க்கும் போது, ஓர் பொய்யாவணம் புனையப்பட்டிருந்து அந்தப் பொய்யாவணத்தை புனைந்த நபர்தான் அந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று கருதப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்த நபரை பொய்யாவணம் புனைந்தவர் என்று கருத முடியாது.
  1. பொய்யாவணம் என்பது மோசடி என்கிற விளக்கத்திற்குள் வருகிறது
  2. மேற்படி குற்றச்சாட்டுகளை நேரடி சாட்சியங்கள் அல்லது நிரூபிக்கப்பட்ட சங்கதிகள் மூலமாக அனுமானிக்க வேண்டும்
  3. இந்த வழக்கில் எதிரிகள் ஒரு பொய்யாவணத்தை புனைந்துள்ளார்கள் அல்லது ஓர் ஆவணத்தின் ஒரு பகுதியை பொய்யாக புனைந்து அதன் அடிப்படையில் அடமான ஆவணத்தை எழுதியுள்ளார்கள் என்று விசாரணை நீதிமன்றம் கூறவில்லை
  4. எனவே அவர்கள் பொய்யாவணத்தை புனைந்தவர்களாக கருத முடியாது
  5. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண்தான் பொய்யாவணத்தை புனைந்தவர் ஆவார்.
  6. வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண் குறித்து எந்த விசாரணையும் செய்யவில்லை
  7. இந்த எதிரிகளுக்கும், ஆள்மாறாட்டம் செய்த பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து எதுவும் கூறவில்லை

  1. காவல் ஆய்வாளர் முறையாக விசாரணை செய்யவில்லை என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம் ஆகும். 
  2. காவல் ஆய்வாளர் தன் கடமையை செய்யவில்லை. பொறுப்புடனும் செயல்படவில்லை
  3. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
  4. பவர் ஆவணம் டோர்ஸ் விக்டரால் எழுதிக் கொடுக்கப்படவில்லை என்பதும், அந்த பவர் ஆவணத்தின் மூலமாக எதிரிகள் பயனடைந்துள்ளார்கள் என்பதும் வழக்கு ஆவணங்களிலிருந்து தெரிய வந்ததாலும், எதிரிகளுக்கு தண்டனை அளிக்க முடியாது
  5. காவல் ஆய்வாளரின் மோசமான புலன் விசாரணை காரணமாக இந்த வழக்கு பாதிக்கப்பட்டுள்ளது
  6. காவல்துறையினரின் மோசமான செயல்களால் தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்
  7. எதிரிகளை விடுதலை செய்வதை தவிர வேறு வழியில்லை. பொய்யாவணத்தை யார் புனைந்துள்ளார்களோ அவர்களுக்கு தான் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 465 ன் கீழ் தண்டனை அளிக்க முடியும் என்று கூறி எதிரிகளை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் CRL. A. Nos - 359&360/2010 Dt - 11.05.2018
ஷீலா செபாஸ்டியன் Vs R. ஜவஹர்ராஜ் மற்றுமொருவர் 2018-3-MLJ-CRL-39

நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan

Saturday, March 7, 2020

விபத்து வழக்குகளில் மேல்முறையீடு - நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?

விபத்து வழக்குகளில் மேல்முறையீடு - நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது
ஆணையங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: விபத்து இழப்பீடு வழக்குகளில் அறிவிக்கப்படும் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றால் நிறுவனங்களின் மேல்முறையீடு வழக்குகளை பட்டியலிடக்கூடாது என்று உயர் நீதிமன்ற பதிவகம் மற்றும் மேல்முறையீடு ஆணையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
  • கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் 22 வயது இளைஞர் பலியானார்
  • இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தொழிலாளர் துணை ஆணையரிடம் முறையிட்டனர்
  • அவர்களின் மனுவை விசாரித்த துணை ஆணையர் இளைஞர் பணியாற்றிய நிறுவனம் ₹2 லட்சத்து 93 ஆயிரத்து 502 இழப்பீடு தருமாறு உத்தரவிட்டார்
  • இந்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனத்தை சேர்ந்த நஸர் அக்தர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
  • இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது
மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு
  • இந்த வழக்கில் விபத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
  • ஆனால், அந்த இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் டெபாசிட் செய்யவில்லை
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் நிறுவனங்களோ, இன்சூரன்ஸ் நிறுவனங்களோ மேல்முறையீடு செய்யக்கூடாது
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் நிறுவனங்களின் பின்னால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒழிந்துகொள்ளக்கூடாது.
  • எனவே, இந்த வழக்கில் தொழிலாளர் துணை ஆணையரின் உத்தரவின்படி இழப்பீடு தொகையை 3 மாதத்திற்குள் விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் மேல் முறையீடு செய்பவர் டெபாசிட் செய்ய வேண்டும்.
  • மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும்போது இழப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை உயர் நீதிமன்ற பதிவகம் உறுதி செய்ய வேண்டும்
  • அதன் பிறகே மேல்முறையீடு வழக்கை பட்டியலிட வேண்டும்
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீடு வழக்குகளை நீதிமன்றங்கள் மற்றும் மேல் முறையீடு ஆணையங்கள் விசாரிக்க கூடாது
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 08.03.2020

Wednesday, March 4, 2020

பவர் பத்திரம் மூலம் சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு.....

பவர் பத்திரம் மூலம் சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு.....
முதலில் என்ன செய்ய வேண்டும்?
  1. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் அந்த பத்திரத்தை ரத்து செய்துள்ளாரா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
  2. அந்த பவர் பத்திரத்தை எழுதுவதற்கு அவர் தகுதியானவர்தானா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
  3. அதற்கு அந்த சொத்தின் தாய்பத்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
  4. அந்த சொத்து பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் பெயரில் மட்டும் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.
  5. வேறு யாருக்காவது அந்த சொத்து விற்கப்பட்டுள்ளதா? என்பதை வில்லங்கம் போட்டு பார்க்க வேண்டும்.
  6. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டும்.
  7. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்  இறந்து எத்தனை நாளாயிற்று? என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும், இது சம்பந்தமாக கடந்த 09.10.2018 அன்று பதிவுத்துறைத்தலைவர் அவர்கள் பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளையும் சொத்து வாங்குபவர்கள் பின்பற்ற வேண்டும்.
பதிவுத்தலைவர் அவர்களின் சுற்றறிக்கை என்ன சொல்கிறது?
பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்கள் சம்பந்தமாக பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் சில அறிவுரைகளை பதிவாளர்களுக்கு வழங்கியுள்ளார். அவற்றை கீழே காணலாம்.
  1. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்ததன்படி ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட பதிவாளர் அவர்களிடம் தாக்கல் செய்யப்படுகின்றபோது அதை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழும் இணைத்து தாக்கல் செய்யப்பட வேண்டும். 
  2. அந்த பத்திரம் பதிவு செய்யப்படுவதற்கு முன் உள்ள முப்பது நாட்களுக்குள் அந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
  3. அதற்கு முன்பாக அந்த சான்றிதழ் பெறப்பட்டு இருந்தால் கண்டிப்பாக செல்லாது. அதனால் அந்த பத்திரத்தை பதிவு செய்யக்கூடாது.
  4. அதே நேரத்தில் பவர் பத்திரம் எழுதப்பட்டு முப்பது நாட்களுக்குள் அந்த சொத்தை வேறு ஒருவருக்கு முகவர் விற்பதாக இருந்தால் மேற்கண்ட சான்றை இணைக்க வேண்டியது இல்லை.
  5. பவர் பத்திரங்கள் மூலம் விற்கப்படுகின்ற சொத்துக்களுக்குத்தான் மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தும். 
  6. பவர் பத்திரங்கள் மூலம் வாங்கப்படுகின்ற சொத்துக்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தாது. 
பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கையின் நகலை கீழே காணலாம்.



*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.03.2020 

Tuesday, March 3, 2020

தகவல் ஆணையத்தின் ஆணைக்கு மதிப்பு இருக்கிறதா?

தகவல் ஆணையத்தின் ஆணைக்கு மதிப்பு இருக்கிறதா?
பொது தகவல் அலுவலர்களின் நம்பிக்கை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படுகின்ற தகவல்களை எந்த ஒரு பொது தகவல் அலுவலர்களும் தற்போது வழங்குவதே இல்லை. அதற்கு முழு முதல் காரணம் தமிழ்நாடு தகவல் ஆணையம்தான். காரணம் அந்த சட்டத்தின் ஷரத்துகளை தகவல் ஆணையர்கள் எவருமே பின்பற்றுவது இல்லை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(1)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1) ன் கீழ் அனுப்பப்படுகின்ற விண்ணப்பத்தில் மனுதாரரால் கேட்கப்படுகின்ற தகவல்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் அல்லது பிரிவு 8 அல்லது பிரிவு 9ல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(2)
மேற்கண்டவாறு மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்றால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததாக கருதப்படும் என்று இந்த பிரிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல மனுக்களுக்கு  எந்தவித தகவலையும் பொது தகவல் அலுவலர்கள் வழங்குவதே இல்லை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)
மனுதாரரின் கோரிய தகவலை பொது தகவல் அலுவலர் அளிக்க  மறுத்திருந்தால், தகவல் அளிக்கின்ற நாள்வரை நாள் ஒன்றுக்கு ரூ. 250/- தண்டமாக  விதித்தல் வேண்டும் என்று இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதன்படி எத்தனை பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது? 
இந்த பிரிவின்படி தண்டம் விதிப்பதென்றால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திலுள்ள பொது தகவல் அலுவலர் கூட தப்ப முடியாது. 
தகவல் ஆணையர்களது ஆணைக்கு மதிப்பிருக்கிறதா?
தகவல் ஆணையர்கள் தகவலை வழங்க வேண்டும் என்று கூறி ஆணை பிறப்பித்தாலும் அந்த ஆணைக்குப் பிறகும்கூட பொது தகவல் அலுவலர்கள் தகவல்களை தருவதில்லை.  
ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா?
  1. நாங்கள் தகவல்களை வழங்கச் சொல்லி ஆணை இடுவோம்; ஆனால், நீங்கள் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 
  2. நீங்கள் வழங்காவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லுவோம்; ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டோம் 
என்று தகவல் ஆணையர்களுக்கும், பொது தகவல் அலுவலர்களுக்கும் வாய்மொழியாக ஏதேனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதோ  என்று அனைவரும் நம்புகின்ற  அளவிற்கு, இந்த சட்டம் ஒரு கேலிப் பொருளாகிவிட்டது. ஏனென்றால், தகவல் ஆணையர்கள் மேற்கண்ட சட்டப்பிரிவுகளை  பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதே இல்லை. அதனால், ஆணையர்களின் ஆணையை பொது தகவல் அலுவலர்கள் மதிப்பதே இல்லை.
ஆனையரின் ஆணையை மதிக்காத பொது தகவல் அலுவலருக்கு ஆணையர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தை கீழே பதிவிட்டுள்ளேன். அதனை படித்துப் பாருங்கள். நான் சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்பது உங்களுக்கு விளங்கும்.




*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

தலைமை தகவல் ஆணையர் அவர்களின் எச்சரிக்கை கடிதம்

தலைமை தகவல் ஆணையர் அவர்களின் எச்சரிக்கை கடிதம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(ஜே) -ன்படி விண்ணப்பம்
கடந்த 31.08.2019 அன்று விருதுநகர் மாவட்ட பதிவாளர் அவர்களது அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(ஜே) -ன்படி எங்களது சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த ஆவணங்களை நேரில் ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தேன்.
சம்பந்தமே இல்லாத தகவல்கள்
அதற்கு பொது தகவல் அலுவலரான மாவட்டப் பதிவாளர் அவர்கள், தகவல் ஆணையம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டி, சம்பந்தமே இல்லாத தகவல்களை எனக்கு வழங்கி இருந்தார்.
இணையத்தில் கிடைத்த தீர்ப்பு
அவர் குறிப்பிட்டு இருந்த தீர்ப்பை தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து தேடி எடுத்து பார்த்தேன். நான் கோரி இருந்த அனுமதிக்கும், அந்த தீர்ப்பிற்கும் சம்பந்தமே இல்லை.  
பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களுக்கு முதல் மேல்முறையீடு
மதுரை ஒத்தக்கடை பகுதியிலுள்ள, பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களுக்கு எனது முதல் மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். அவர் மிகவும் உத்தமர். எந்த பதிலும் வழங்கவில்லை. 
இரண்டாம் மேல்முறையீடு
முதல் மேல்முறையீட்டை 03.10.2019 அன்று அனுப்பி எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், எனது இரண்டாம் மேல்முறையீட்டை 21.11.2019 அன்று தகவல் ஆணையத்திற்கு அனுப்பினேன். 
ஆணையத்திடம் இருந்து வந்த ஆணை 
தகவல் ஆணையத்திடம் இருந்து 28.02.2020 அன்று அனுப்பிய ஆணை எனக்கு 02.03.2020 அன்று கிடைத்தது. அதனை கீழே தங்களது பார்வைக்காக பதிவிட்டுள்ளேன். 





இதற்கு பொது தகவல் அலுவலர் பதில் அளித்தவுடன் அதனையும் பதிவேற்றுகிறேன்.

***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

Monday, March 2, 2020

பள்ளிகளில் இருக்க வேண்டிய இட வசதி

பள்ளிகளில் இருக்க வேண்டிய இட வசதி 
தமிழகத்தில் தனியார் பள்ளிகளை தொடங்குவதற்கும், அதற்கு அரசு (கல்வித்துறை) அங்கீகாரம் வழங்குவதற்கும் குறைந்தபட்சமாக இடவசதி (பரப்பளவு) இவ்வளவு இருக்க வேண்டும் என்று அங்கீகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளின் தன்மைக்கேற்ப இதனை அரசு வரையறுத்துள்ளது. 
ஏற்கனவே இருந்த அரசாணைகள்
இதற்கான அரசாணை கடந்த 2004ம் ஆண்டில் கல்வித்துறையால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அரசாணை எண்: பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை (2டி) எண்: 48, நாள்:21.07.2004 ஆகும்.
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளிகளால் மேற்கண்ட அரசாணையில் குறிப்பிட்டபடி தங்களது இடவசதியை அதிகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆகையால், அந்த பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்களின் நலன் கருதி மேலும் மூன்றாண்டுகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு, ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.  அந்த அரசாணை எண்: பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை எண்: 238, நாள்:26.11.2008 ஆகும்.
திருத்தப்பட்ட அரசாணை
பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை (2டி) எண்: 48, நாள்:21.07.2004 ல் உள்ளபடி.தனியார் பள்ளிகளால் இடவசதியை மேம்படுத்த முடியாத காரணத்தால் அந்த பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்களின் நலன் கருதி அந்த அரசானையில் இடவசதி பற்றி குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை தளர்த்தி 23.04.2010 அன்று அரசாணை நிலை எண்: 24 வெளியிடப்பட்டது.
வல்லுநர் குழு அமைத்தல் பற்றிய அரசாணை
ஆனால், அதன் பிறகும் இந்த அரசாணையில் குறிப்பிட்டபடி தனியார் பள்ளிகளில் இடவசதியை ஏற்படுத்த பள்ளி நிர்வாகத்தால் முடியவில்லை. ஆகவே வல்லுநர் குழு அமைப்பது குறித்து பள்ளி கல்வித்துறை, அரசாணை நிலை (1டி) எண்: 54, நாள்:05.03.2013 ஐ வெளியிட்டது அதன் நகல் கீழே உள்ளது.



மேற்கண்ட அரசானையில் குறிப்பிட்டுள்ள வல்லுநர் குழு அமைக்கப்பட்டதா, அதன்பிறகு ஏதேனும் அரசானை வெளியிடப்பட்டதா? என்ற விபரம் எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் அவற்றினை பதிவிடுகிறேன்.
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020