disalbe Right click

Thursday, December 1, 2016

பிரசவ கால சிக்கல்கள்

பிரசவகால சிக்கல்கள் - என்ன செய்ய வேண்டும்?
பெரும்பாலான பிரசவங்கள் சுகப் பிரசவமாகவே நிகழ்கின்றன. ஆனால், சிலருக்குச் சிக்கலானதாக மாறிவிடுகின்றன. இதற்கு, தாயின் உடல்நிலையும் சிசுவின் உடல்நிலையும் காரணமாக இருக்கின்றன. 
சில நேரங்களில், கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் பெண்ணுக்கு இருந்த சில பிரச்னைகள்கூட கர்ப்ப காலத்தையும் பிரசவத்தையும் சிக்கலானதாக மாற்றிவிடுகின்றன. இதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்ற முடியும். 
போதுமான மருத்துவ வசதியின்மை, மருத்துவ வசதி பெற நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டிய நிலை, வறுமை, போதுமான விழிப்புணர்வு இன்மை உள்ளிட்ட காரணங்களால் பல கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு வருவது இல்லை.
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்…
❤  கருச்சிதைவு, இறந்தே பிறப்பது.
❤  உயர் ரத்த அழுத்தம்.
❤  கர்ப்ப கால சர்க்கரைநோய்.
`ப்ரீஎக்ளாம்சியா’ (Preeclampsia) எனப்படும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலை.
❤ குறை பிரசவம்.
பிரசவ காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்:
❤ பிரசவ வலி ஏற்படும். ஆனால் குழந்தையின் தலை கீழே இறங்காது. இதற்கு பெண்ணின் இடுப்புப் பகுதி, குழந்தை வெளிவரும் பாதையின் அளவில் குறைபாடு இருக்கலாம். இதை அப்ஸ்ட்ரக்டட் லேபர் (Obstructed labour) என்று சொல்வோம். இந்தச் சூழலில் சிசேரியன் செய்வதுதான் நல்லது.
பிரசவத்துக்குப் பிறகு, கர்ப்பப்பை சுருங்க வேண்டும். சில பெண்களுக்கு, சுருங்காமல் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக ரத்தப்போக்கு உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.
சிலருக்கு குழந்தையின் தலை வெளியே வருவதற்குப் பதிலாக கால் முதலில் வெளியே வரும். ஆனால், சிலருக்கு குழந்தையின் அதிக உடல் எடை காரணமாக தோள்பட்டை வெளியே வராது. இதனால், குழந்தைக்கு காயமோ உயிரிழப்போ ஏற்படலாம்.
தாய்சேயை காக்கும் வழிகள் என்னென்ன?
❤ கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்துக்கு முன், பிரசவத்தின்போது, பிரசவத்துக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த விழிப்புஉணர்வை அளிக்க வேண்டும்.
❤ கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன்பிருந்தே ஃபோலிக் அமிலம்  சாப்பிடுவது, கர்ப்பம் தரித்த பிறகு டாக்டர் பரிந்துரைப்படி கால்சியம், இரும்புச்சத்து மாத்திரையை எடு்த்துக்கொள்ள வேண்டும்.
❤ கர்ப்பம் தரித்த பிறகு, மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் மகப்பேறு மருத்துவரை சந்தித்து, எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
❤ ப்ரீஎக்ளாம்சியா பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தால், உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் எக்ளாம்சியா என்ற உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்வதைத் தடுக்கலாம்.
❤ மூன்று மற்றும் 5-வது மாதத்தில் ஸ்கேன் செய்து குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் அல்லது ஏதேனும் உடல் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
❤ கை தேர்ந்த மருத்துவர்கள் இருக்கும் இடத்தில் பிரசவம் நிகழ வேண்டும். அப்போதுதான், பிரசவச் சிக்கல் இருந்தால், விரைவான நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
❤ பிரசவ கால பாதிப்புகளில் அடுத்த முக்கியக் காரணியாக இருப்பது, நோய்த்தொற்றுக்கள். சரியான நேரத்தில் நோய்த்தொற்றைத் தவிர்த்து, தடுப்பூசி எடுத்துக்கொள்வது போன்ற பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தாய் சேயை நலனைப் பாதுகாக்கலாம்.
டாக்டர்கள் இலவச சேவை!
`உலக அளவில் ஒவ்வொரு நாளும் 830 கர்ப்பிணிகள் பிரசவச் சிக்கல் காரணமாக உயிரிழக்கின்றனர்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதில் 99 சதவிகித உயிரிழப்புகள், வளரும் நாடுகளில் நடக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பிரசவங்களில், 178 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட, சில கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஒரு முறைகூட மகப்பேறு மருத்துவரை சந்திக்காததுதான் காரணம். இந்தக் குறையைப் போக்க, ‘ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி ஒருநாள் மட்டும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள், ரேடியாலஜி நிபுணர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து கர்ப்பிணிகளுக்கு இலவசப் பரிசோதனை, ஆலோசனை வழங்க வேண்டும்’ என்று பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான புதிய திட்டம் ஒன்றை யுனிசெஃப் துணையுடன் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் மருத்துவர்கள் http://pmsma.nhp.gov.in என்ற இணை தளத்தில் நேரடியாக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். 5616115 என்ற எண்ணுக்கு PMSMA (பெயர்) டைப் செய்து அனுப்புவது அல்லது 1800 180 1104 என்ற டோல் ஃப்ரீ எண்ணை அழைப்பதன் மூலம் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.12.2016

No comments:

Post a Comment