disalbe Right click

Showing posts with label அரசு திட்டங்கள். Show all posts
Showing posts with label அரசு திட்டங்கள். Show all posts

Monday, February 10, 2020

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme -UYEGP)

தமிழக அரசால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008-ன் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்குடன், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட தொழில் மையம் மூலமாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
  1. இதில் பயன்பெற விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
  2. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
  3. விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  4. இதற்கான உரிய சான்றிதழை நோட்டரி பப்ளிக் அல்லது உறுதி மொழி ஆணையரிடம் இருந்து பெற வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கடன் தொகை எவ்வளவு?

  1. உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்ச தொழில் கடனாக ரூ.10 இலட்சம் வழங்கப்படுகிறது.
  2. சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படுகிறது.
  3. வியாபாரத்திற்கு ரூ.1 இலட்சம் வழங்கப்படுகிறது. 
  4. வழங்கப்படுகின்ற தொகைகள் வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.
  5. வழங்கப்படுகின்ற கடனுக்கு 25 சதவீதம் மானியம் உண்டு. அதிகபட்ச மானியம் 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
  6. நேரடி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது
  7. கடன் பெறுவோரில் பொதுப் பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 சதவீதம் பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும்
  8. ஏனைய பிரிவினர்களாகிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் திட்ட முதலீட்டில் 5 சதவீதம் பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும்
  9. எஞ்சிய தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க, மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.
விண்ணப்பபடிவத்துடன்  (Project Report) திட்ட அறிக்கை, விலைப்புள்ளி (GST Number கொண்டது). கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பட்சத்தில் அதற்கு உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

Tuesday, February 19, 2019

இனி அவசர உதவிக்கு 112

இனி அவசர உதவிக்கு 112
தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் 112 எண் சேவை தொடக்கம்: இனி அவசர உதவிகளுக்கு இந்த ஒரே எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி சேவை  19.02.2019 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி சேவை, நமது நாட்டில் முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் தமிழகம், ஆந்திரம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட் டையு, ஜம்மு -காஷ்மீர் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 19.02.2019   செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவிக்கும் ஒவ்வொரு எண்
இதற்கு முன்னர் காவல்துறைக்கு 100 என்ற எண்ணையும், தீயணைப்புத்துறைக்கு 101 என்ற எண்ணையும், சுகாதாரத் துறையினருக்கு 108என்ற எண்ணையும், பெண்கள் தொடர்பான உதவிகளுக்கு 1090 என்ற எண்ணையும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு வந்தனர்.
இனி 112 என்ற ஒரு எண் போதும்
பொதுமக்கள் இனி 112 என்ற ஒரே எண்ணிலேயே அனைத்து வகையான உதவிகளையும்  கோர முடியும்.
நெருக்கடி காலத்தில் உதவி கோர விரும்புவோர், (லேண்ட் லைன்) தொலைபேசியில் 112 என்ற எண்ணை அழுத்தினால் போதும், அந்த அழைப்பானது   அவசரகால   உதவி சேவை   மையத்துக்கு  அழைப்பு செல்லும்
ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசி என்றால், அதை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் பொத்தானை 3 முறை அழுத்தினால், அவசரகால உதவி சேவை மையத்துக்கு அழைப்பு செல்லும்
சாதாரண செல்லிடப்பேசி எனில், 5ஆம் எண் பொத்தான் அல்லது 9ஆம் எண் பொத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். 
மேலும், செல்லிடப்பேசியில் 112 என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதன்மூலமும் உதவி கோரலாம்அந்த அழைப்பு, 112 சேவை மையத்துக்கு செல்லும்
தொடர்பு கொண்டபின்னர் என்ன நடக்கும்?
தொடர்பு கிடைத்த பின்னர், அதன் மூலம் பேசும் அதிகாரிகள், பொதுமக்கள் கோரும் உதவி வகைகளை குறித்துக் கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார நிலையம் மற்றும் பிற உதவிகள் மையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு தகவல் அனுப்புவார்கள்.  அதன்மீது சம்பந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வர்.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 20.02.2019