disalbe Right click

Showing posts with label சர்க்கரை நோய். Show all posts
Showing posts with label சர்க்கரை நோய். Show all posts

Sunday, October 23, 2016

கணையம் காக்க

கணையம் காக்க என்ன செய்ய வேண்டும்?
.இன்சுலின் போதுமான அளவில் சுரக்கவில்லை எனில், கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும்.
இன்சுலின் என்ற நாளமில்லா சுரப்பையும், சில என்சைம்களையும் சுரக்கும் மிக முக்கிய வேலைகளை கணையம் செய்கிறது என்பதால், நம் உடலின் மிக முக்கிய பாகம் கணையம்.
1. உணவைச் செரிக்க, சில வகையான என்சைம்களை கணையம் சுரக்கிறது. இதை ஆல்கஹால் தடுத்துவிடுகிறது. இதனால், கணையத்தில் சுரக்கப்படும் என்சைம்கள் கணையத்திலேயே தங்கி, அதன் செல்களைப் பாதிக்கிறது. மது அருந்துவதால் அதிக அளவில் கணைய அழற்சி ஏற்படும். ஆல்கஹால் கணையத்துக்கு அரக்கன் என்பதை உணர வேண்டும்.
2. சிகரெட் புகைப்பதால் நுரையீரல் மட்டுமல்ல, கணையமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கணையத்தில் உற்பத்தியாகும் என்சைம் சிறுகுடலுக்குச் சென்றபிறகுதான், செயல்திறன் பெறும். ஆனால், புகைப் பழக்கமானது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, என்சைம்களை கணையத்தில் இருக்கும்போதே செயல்படத் தூண்டி, பாதிப்பை ஏற்படுத்தும். புகை கணையத்துக்குப் பகை.
3. அதிக உடல் எடை, உடல் பருமன் கணைய பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
4. தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யும்போது, உடல் உறுப்பு, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள் சென்று சேருவது எளிதாகும். இதனால், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகச் செயல்படும்.
5. ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பதால், கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகள், கொழுப்பு இல்லாத கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடலாம். ரெட் மீட் எனப்படும் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
6. பதப்படுத்தப்பட்ட, மைதா, சர்க்கரை போன்ற அதிகம் சுத்தகரிக்கப்பட்ட, நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
7.. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும்போது, அது கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்தச் செயல்பாடு காரணமாக, கணையம் பாதிக்கப்படலாம். கிளைசமிக் இண்டெக்ஸ் (ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன்) குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
8. கார்போஹைட்ரேட் போலவே, புரதச்சத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்குத் தேவையான அளவு மட்டுமே புரதச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப் புரதத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதைச் செரிப்பதற்கு, கணையம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
9. பித்தப்பை கல்கூட கணையத்தைப் பாதிக்கலாம். பித்தப்பை கல் காரணமாக, கணையத்தில் இருந்து சிறுகுடலுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கணைய நீரானது மீண்டும் கணையத்துக்கே செல்லத் தூண்டப்படும். இதனால், கணைய செல்கள் பாதிக்கப்பட்டு, கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் பிரச்னையை முன்கூட்டியே கண்டறிந்து, பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
10. விலங்குக் கொழுப்பு, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்த காய்கறி, முழுதானியம், தேன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மாட்டுப் பாலுக்குப் பதிலாக, தாவரங்களிலிருந்து பெறப்படும் பாலை பயன்படுத்தலாம்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.08.2015

டயாபடிக் ரெட்டினோபதி

டயாபடிக் ரெட்டினோபதி - என்ன செய்ய வேண்டும்?
விழிப்புடன் இருப்போம்! விழித்திரை காப்போம்!
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்புமண்டலம், ரத்தக் குழாய், சிறுநீரகம், இதயம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கும்.
சர்க்கரை அளவு அதிகரிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை டயாபடீக் நியூரோபதி என்றும், சிறுநீரகம் பாதிக்கப்படும்போது டயாபடீக் நெப்ரோபதி என்றும், கண்கள் பாதிக்கப்படும்போது டயாபடீக் ரெட்டினோபதி என்றும் அழைக்கிறோம்.
டயாபடீக் ரெட்டினோபதி
நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணின் லென்ஸ் வழியாகச் சென்று, விழித்திரையில் (ரெட்டினா) விழும். அங்கிருந்து நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு, அது என்ன பொருள் என்று மூளை அதன் படத்தை உருவகப்படுத்தும். எந்த ஒரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு இந்த விழித்திரை அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அதைக் கட்டுப்படுத்தாமல் விடும்போது, விழித்திரைக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும். புதிது புதிதாக ரத்தக்குழாய்கள் வளர ஆரம்பிக்கும். இதனால் பார்வை மங்கலாகத் தெரியும். ஒரு கட்டத்தில் ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய்விடும்.
பொதுவாக, 40 – 50 வயதில் பார்வைத்திறன் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை பரிந்துரைக்கப்படும்.
பெரும்பாலானோர் அப்போதுதான் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைத் தெரிந்துகொள்கின்றனர்.
சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறை மாற்றம், மாத்திரை மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னையை இயன்றவரை தடுக்க முடியும்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
குடும்பத்தில் யாரேனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 40 வயதைத் தாண்டிய குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு இருமுறையும் கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண்புரை, டயாபடீக் ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண் பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவைப் பரிசோதிக்க வேண்டும்.
மருத்துவர்கள், கண்ணில் சொட்டு மருந்தைவிட்டு, இன்டேரக்ட் ஆப்தல்மோஸ்கோப்பி (Indirect Opthalmoscopy) என்ற பரிசோதனை மூலம் ரத்தக்குழாயில் விரிசல், ரத்தக் கசிவு ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனைசெய்து, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிப்பர்.
சிகிச்சை என்ன?
டயாபடீக் ரெட்டினோபதியில் 10 விதமான நிலைகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்பட்சத்தில் எந்தவித சிகிச்சையும் தேவை இல்லை.
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், டயாபடீக் ரெட்டினோபதியின் தீவிரத்தைத் தடுக்க முடியும். 6 முதல் 10 நிலைகளில் இருந்தால், ரத்தக்குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது, புது ரத்தக்குழாய்கள் வளர்ந்தி ருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் லேசர் முறையில் கண்ணுக்குள், வெள்ளைப்பகுதியில் 0.5 -0.7 மி.மி அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டுவிட்ரேக்டமிஎனும் நுண்ணிய அறுவைசிகிச்சை செய்யப்படும்.
கண்புரை பிரச்னை உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் மீண்டும் புரையால் இழந்த பார்வைத்திறனைப் பெற முடியும். டயாபடீக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம், மீதமிருக்கும் பார்வைத்திறனை காப்பாற்றிக்கொள்ளலாம்.
ரெட்டினோபதியைத் தவிர்க்கலாம்!
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக பார்வை இழப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் ரெட்டினோபதியும் ஒன்று.
ஆனால், இந்தப் பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும். சர்க்கரை நோயாளிகளில் 90 சதவிகிதம் பேருக்கு ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் வந்தவுடன், உடனடியாக பாதிப்பு இருக்காது.
சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்காதபோதுதான் பாதிப்பு ஏற்படும்.
15 – 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயுடன் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னை இருந்தால், கண்ணின் ரெட்டினா பகுதி பாதிக்கப்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும்.
எனவே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம். முற்றிய நிலையில் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.08.201

டயாபடிக் நியுரோபதி

டயாபடிக் நியுரோபதி - என்ன செய்ய வேண்டும்?
டயாபடிக் நியூரோபதி என்றால் என்ன?
நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது நரம்பு இழைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவது டயாபடிக் நியூரோபதி.
இப்பிரச்னையால் நரம்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது மிக நுண்ணிய ரத்தக் குழாய் சுவர்களை பாதிப்படையச் செய்கிறது. இதனால், நரம்புகளுக்குப் போதுமான அளவு பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.
நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் நியூரோபதி பாதிப்பு ஏற்படுமா?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் இப்பாதிப்புகளிலிருந்து தப்பலாம்.
டயாபடிக் பாதிப்பால் சிறுநீரக கோளாறு ஏற்படுவது ஏன்?
180 மி.கிராம் வரை சிறுநீரகங்கள் சர்க்கரையை சேமிக்கும் திறன் கொண்டவை. இந்த அளவைத் தாண்டும் பொழுது, மைக்ரோ அல்புமின் எனப்படும் புரதம் வெளியேறத் துவங்கும். 300 மி.கிராமிற்கு மேல் புரதம் வெளியேறினால் சிறுநீரகங்களை பாதிக்கும்.
புகை மற்றும் மது குடிக்கும் பழக்கம்இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
சிகரெட்டில் உள்ள நிகோடின் ரத்தக் குழாய்களின் உட்புற சுவரில் படிந்து, ரத்தக்குழாய் சுவர்களை சுருங்கச் செய்கிறது. இதனால், கால் பாதங்களுக்குச் செல்லக் கூடிய ரத்தத்தின் அளவு குறைந்து, காலில் ஏற்படும் காயங்கள், புண்கள் சரியாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
டயாபடிக் நியூரோபதியில் வகைகள் உள்ளனவா?
பெரிபெரல் நியூரோபதி, ஆடானமிக் நியூரோபதி, பராக்ஸிமல் நியூரோபதி, போகல் நியூரோபதி என, நான்கு வகைகள் உள்ளன.
அறிகுறிகள்?
கால் மரத்துப் போகும், கால் பாதங்களில் ஊசி குத்தும் உணர்வு, பாதம் மென்மையான பொருள் மீது நடப்பது போல் இருக்கும். காலில் ஏதாவது பொருட்கள் குத்தினால் கூட உணர்வு இருக்காது.
தடுக்கும் வழிமுறைகள்?
மது, புகைப் பழக்கத்தை கைவிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது தான் இதற்கு தீர்வு.
டயாபடிக் நியூரோபதி வராமல் தடுக்க உணவுக் கட்டுப்பாடு தேவையா?
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு அட்டவணையை பின்பற்ற வேண்டும். அதோடு தினமும் உடற்பயிற்சி அவசியம்.
தீர்வு என்ன?
டயாபடிக் நியூரோபதி வந்துவிட்டால் தீர்வு இல்லை. இதைத் தடுக்க ஒரே வழி, மேற்சொன்னவாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதே.
மருத்துவரின் அறிவுரையின் படியே மருந்துகள் எடுக்க வேண்டும்.

கே.பரணிதரன்பொது மற்றும் நீரிழிவு சிறப்பு நிபுணர்
நன்றி : தினமலர் நாளிதழ் – 18.10.201