disalbe Right click

Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Tuesday, May 31, 2016

வேலைக்கு தேர்ந்தெடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள்


வேலைக்கு தேர்ந்தெடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
"பிளேஸ்மென்ட்' என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 சென்னையில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தியப் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

 பொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பை முடிப்பதற்கு முன்பே 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தை அளித்து, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களையும் காண்பித்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை ஈர்த்து வருகின்றன.

 இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, இதுபோன்ற பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குப் படிப்பை முடிக்கும் முன்பே வேலைவாய்ப்பு கிடைக்கும். படிப்பை முடித்த பின்னர் அந்த நிறுவனத்திலும் பணிக்குச் சேர்ந்துவிடுவார். ஆனால், 6 மாதம் கழித்து அந்த நிறுவனத்தின் சார்பில் மீண்டும் நடத்தப்படும் தேர்வில் 85 சதவீத மாணவர்கள் தோல்வியைச் சந்தித்து, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்
படுகின்றனர்.

 இப்படி, "எல் அண்ட் டி இன்ஃபோடெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியேற்றப்பட்ட மாணவர்கள்தான் சென்னை சோழிங்கநல்லூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 1500-க்கும் அதிமான மாணவர்களை இந்த நிறுவனம் இதுபோல நிராகரித்துள்ளது. கடந்த 2014-இல் இந்த மாணவர்களுக்கு பணி வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கிய இந்த நிறுவனம் அதன் பிறகு, பணியில் சேருவதற்கான தேதியை மாணவர்களுக்குத் தெரிவிக்காமலே இருந்து வந்துள்ளது.

 இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வை அந்த நிறுவனம் நடத்தியுள்ளது. அந்தத் தேர்வில் தகுதி பெறவில்லை என்று கூறி இந்த மாணவர்கள் அனைவரையும் நிராகரித்துள்ளது.

 "பிளேஸ்மென்ட்' விஷயத்தில் இந்த ஒரு சம்பவம்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வெளியில் தெரியாமல் பல ஆயிரம் பொறியியல் மாணவர்கள் இதுபோன்று வேலைவாய்ப்பை இழந்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
 நடவடிக்கை எடுக்க இயலாது: "பிளேஸ்மென்ட்' என்ற பெயரில் நூதனமாக மாணவர்கள் ஏமாற்றப் படுகின்றனர்.

 பெரும்பாலான கல்லூரிகள் மாணவருக்கு ரூ. 10 ஆயிரம் என்ற வீதத்தில் கமிஷன் கொடுத்தே நிறுவனங்களை வளாகத் தேர்வுக்கு கல்லூரிக்குள் அழைத்து வருகின்றன. அவ்வாறு வரும் நிறுவனங்கள் கல்லூரியில் நடத்தும் எழுத்துத் தேர்வில் மிக எளிமையான கேள்விகளையே கேட்கின்றன.

 இதில், சராசரிக்கும் குறைவாக படிக்கும் மாணவர்களும் தகுதி பெற்று, பணி வாய்ப்புக்கான கடிதத்தைப் பெற்று விடுகின்றனர்.

 பின்னர் படிப்பை முடித்ததும் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தில் 6 மாத கால பயிற்சியில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அந்தப் பயிற்சி முடிந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வை அந்த நிறுவனம் நடத்தும். அப்போது மிகவும் கடினமான கேள்விகளை நிறுவனங்கள் கேட்கின்றன.

 இதனால், தேர்வு செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் தோல்வியடைந்து, நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

 இந்த மோசடி குறித்து மாணவர்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க இயலாது. ஏனெனில், தெளிவாக தேர்வு வைத்து மாணவர்கள் அவர்கள் தகுதியிழக்கச் செய்கின்றனர்.

 எனவே, பொறியியல் சேர்க்கை நடைபெறும் இந்த நேரத்தில் கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் நன்கு விசாரித்து சிறந்த பொறியியல் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்கின்றனர் அண்ணா பல்கலைககழக பேராசிரியர்கள்.

 எங்கு புகார் தெரிவிப்பது?:

 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் நல மைய இயக்குநர் இளையபெருமாள் கூறியது:

 சோழிங்கநல்லூரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. மாணவர்கள் புகார் அளித்தால்தான், அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியுமா அல்லது முடியாதா என்பது தெரியவரும். 

கடந்த ஆண்டு, இதுபோல வளாகத் தேர்வே நடத்தாமல் வேலைவாய்ப்புக்கான போலியான கடிதத்தை மாணவர்களுக்கு அளித்தது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கல்லூரியை பல்கலைக்கழகம் எச்சரிக்கை செய்து அனுப்பியது.

 எனவே, போலியான பணிவாய்ப்பு தொடர்பாக 

044 - 22357080 மற்றும் 044-22357081 

என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம். 

அல்லது 

dsa@annauniv.edu 

என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

By  எம். மார்க் நெல்சன், சென்னை

நன்றி : தினமணி நாளிதழ் - 01.06.2016

Monday, May 23, 2016

அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராக

அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராக 
என்ன செய்ய வேண்டும்?

இப்போது எல்லாமே ஆப் மயம்தான். டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், கல்வி சார்ந்த ஆப்களும் கொட்டிக்கிடப்பதை நாம் அறிவோம். ஆனால், அதில் எந்த ஆப் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக அமையும், நம் வாழ்க்கையை எப்படி வளப்படுத்திக்கொள்ள உதவும் என்பதில்தான் நம் திறமை வெளிப்படும்.
இந்திய வரலாறு தொடங்கி , கணிதம், அகராதி, செயல்திறன், ஆங்கிலம், பொது அறிவு, போட்டித் தேர்வு... என துறைதோறும் குவிந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான ஆப்ஸில் சிறந்தது எது என்பது குறித்த ஒரு கண்ணோட்டம் இங்கே...
TNPSC தமிழ்
இதில், டி.என்.பி.எஸ்.சி-யின் குரூப் தேர்வுகள் , வி.ஏ.ஓ மற்றும் TET தேர்வுகளுக்கான தினசரி வினாக்கள், நடப்பு நிகழ்வுகள், தேர்வு வரைமுறைகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள உதவும். எந்தெந்த துறையில் அரசு பணிகளுக்கான வாய்ப்பு இருக்கிறது , எத்தனை இடங்கள் இருக்கின்றன என பல்வேறு தகவல்களைத் தெரிவித்துக்கொண்டே இருக்கும். இதில் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள், திறனாய்வு மற்றும் மனத்திறன் பயிற்சி, பாடத்திட்டம் என அரசு தேர்வுகளுக்கு படிக்கவும் பயிற்சி எடுத்துக்கொள்ளவும் உதவும் சூப்பர் ஆப்.
IAS
பெயரைப் பார்த்தவுடனே புரிந்திருக்கும். இது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது. நடப்பு நிகழ்வுகள், கேள்வி-பதில்கள், குறிப்புகள், தேர்வுமுறைக்கான பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் எனத் தேர்விலும் வாழ்விலும் தேர்ச்சி பெறுவதற்கான பெஸ்ட் ஆப்.
Indian History , Book & Quiz
இந்திய வரலாற்றை முழுமையாகத் தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஆப். 9000 BC பீம்பெட்கா ராக் ஷெல்டர்ஸ் (BHIMBETKA ROCK SHELTERS) தொடங்கி, சிந்துசமவெளி நாகரிகம் முதல் இந்தியாவின் மன்னர்கள் ஆட்சி , சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் என இந்திய வரலாற்றை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம். வரலாறு என்றவுடன் `ஐயய்யோ...அது பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்குமே!' என சோர்ந்து போக வேண்டாம். வரலாற்று நிகழ்வுகளில் நாம் தெரிந்துகொள்ளாத சுவாரஸ்ய தகவல்களையும் இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். கலிங்கப் போர் என்றால், வருட ரீதியிலான முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த ஆப்பில், அந்த முக்கிய நிகழ்வுகளுடன் அதற்கான பின்னணியை சொல்வதோடு நிகழ்வுகளுக்கான காரணங்களை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகச் சொல்லும். ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஆப்களில் இதுவும் ஒன்று.
Math Tricks
பிரைன் ட்ரெய்னர் ஆப்பான இதன் மூலம் கூட்டல், வகுத்தல், பெருக்கலைத் தாண்டி, கணிதத்தின் வெவ்வேறுவிதமான செயல்முறைகளையும், அதை சுலபமாகக் கையாளும் முறை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மேலும், சட்டென பதிலைச் சொல்லி சடுதியில் அசத்த, இந்த ஆப் நிச்சயம் உதவும்.
World G.K
பொதுஅறிவுப் பிரியரா நீங்கள்? உலகத்தில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுத் தருகிறது இந்த ஆப்.
Aptitude
போட்டித் தேர்வுகளிலேயே பொக்கிஷமாகத் திகழ்வது ஆப்டிட்யூட் கேள்விகள். காரணம், கேள்விகளுடன் பதில்களையும் கொடுத்து, கொள்குறியின் மூலம் பதில்களைத் தேர்வுசெய்தால் போதும் என்பதால் என்பதால், இந்த வகை தேர்வில் அநேகர் வெற்றி பெறுவர். இருப்பினும் அதில் சாதாரண வெற்றி பெறுவதைவிட மகத்தான வெற்றி பெற்று மதிப்பெண்கள் மூலம் நமக்கான பதவியைத் தேடித்தரக்கூடிய தோழமையான ஆப் இது.
English to Tamil
தமிழ் அகராதி ஆப். நாம் அன்றாடம் பழகக்கூடிய வார்த்தைகளைத் தவிர்த்து, தமிழின் சாரத்தை ஆழமாகப் பதியவைக்கக்கூடிய வார்த்தைகளுக்கான பொருள்கள் என்ன, அது எதைக் குறிக்கிறது என்பது போன்ற வார்த்தைகளுக்கான விளக்கங்களை தெரிந்துகொள்வதோடு, வார்த்தை விளையாட்டு விளையாடுவதற்கான தமிழ் வார்த்தைகளை சுலபமாகத் தெரிந்துகொள்ளவும், பொது அறிவு, தினசரி செய்தி சுருக்கம், திறனாய்வு என பல தரப்புகளில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கான பொருளை அறிந்துகொள்ளவும் இந்த ஆப் கைகொடுக்கும்.
- கே. அபிநயா
நன்றி : விகடன் செய்திகள் - 23.05.2016

Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-7


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி-7
***************************************************************************
நாம் கொடுக்கும் குடும்ப விசாரணை ஏற்கனவே வந்திருக்கும் விசாவுடன் சரிபார்த்து, மனைவி மற்றும் குழந்தைகளின் கடவுச்சீட்டில் (Passport) முத்திரை செய்வார்கள்.

கடவுச்சீட்டில் முத்திரை செய்யவும், ஏஜென்சிக்கு சர்வீஸ் தொகையாக பணம் தரவேண்டும்.

குடும்ப விசாவுடன் மனைவி, குழந்தைகள் கடவுச்சீட்டுக்கள் கைக்கு கிடைத்தவுடன் விமான பயணச்சீட்டு பெற்று, தேதியை உறுதி செய்யவேண்டும். இவர்கள் நீங்கள் பணிபுரியும் நாட்டில் விமான நிலையத்திற்கு வந்தவுடன், நீங்கள் சென்று, உங்கள் அடையாள (Work Permit) அங்குள்ள அதிகாரிகளிடம் காண்பித்து, மனைவி குழந்தைகளை உங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து வரலாம்.

வாழ்க வளமுடன்!


வேலை  வாய்ப்பு உள்ள தொழில்கள்:



வளைகுடா நாடுகளில் அடிப்படை தொழில்கள் தவிர, தொழிற்பயிற்சி முடித்து (I.T.I)  டர்னர், வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற தொழில்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உண்டு.

மேற்கத்திய நாடுகளில் ஐ.டி எனப்படும் கணினி தொழிற் சம்பந்தமான வேலைகளுக்கு வாய்ப்பு முதலில் அதிகமாக இருந்தாலும், தற்போது பாதியாக குறைந்து உள்ளது.

டாக்டர், என்ஜீனியர், நர்ஸ் போன்றவர்களுக்கு தங்களுடைய அடிப்படை படிப்புடன் மாஸ்டர்ஸ் டிகிரி (Master's Degree) எனப்படும் கூடுதல் தகுதி, உதாரணமாக MBBS உடன் MS  படிப்பும் இருந்தால் கூடுதல் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன.

என்ஜீனியர் படிப்பிலும் கூடுதலாக M.B.A மற்றும் M.E படிப்பு இருந்தால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் தற்போது வேலை வாய்ப்பு குறைந்தாலும், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளில் இன்றும் அதே வேலை வாய்ப்பு இருந்து கொண்டேதான் உள்ளது.

படிப்புடன், வேலைத் திறமையும் இருந்துவிட்டால் போதும் உலகத்தின் எந்த மூலையிலும்  நாம் பெருமையுடன் அதிக வருமானத்துடன் வலம் வரலாம்.

இந்த விஷயத்தில் உலகத்தில் தமிழன் முதல் இடத்தில் இருக்கிறான் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

கீழ்கண்ட  நிறுவனங்களில் நிரந்தரமாக தொடர்ந்து அதிக வேலை வாய்ப்பு உண்டு என்பது தினசரிகளில் வரும் விளம்பரங்களே சாட்சி.

1. ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்கள்

2. மின்வாரிய கட்டுமான பணிகள்

3. சாலை மற்றும் பில்டிங் கட்டுமான பணிகள்

4. தொழிற்சாலை பணிகள்

5. சேல்ஸ் மேன்

6. ஐ.டி. சம்பந்தமான  பணிகள்

7. மருத்துவமனை பணிகள்

8. பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள்

9. தொலைத் தொடர்பு சம்பந்தமான பணிகள்

10. ஹெவி  டிரைவர் பணிகள்

மேலும் வெளிநாடு வேலைகளுக்கு வரும் அன்பர்கள் முக்கியமா க தெரிந்து கொள்ள வேண்டியது;
பெரும்பாலும் உங்களுடைய ஒரு மாத சம்பளம் நிறுவனத்திடம் இருக்குமாறு, நிறுவனம் உஷாராக இருக்கும். நீங்கள் முடிவாக (EXIT) செல்லும்போது தான் உங்களுடைய சம்பள பிடித்தங்கள் அனைத்தும் கிளியர் செய்து அனுப்புவார்கள்.

உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதற்குரிய சம்பளமும் இல்லாமல் நீங்கள் வெளிநாட்டிற்கு வரக்கூடாது.

உங்களை அனுப்பும் ஏஜென்சிகள், உங்களுடைய அவசரத்தைப் பார்த்து. நீங்கள்  அங்கு செல்லுங்கள். ஓவர்டைம் உண்டு, இன்கிரிமெண்ட் உண்டு என பொய் சொல்லி விமானத்தில் ஏற்றி அனுப்பி விடப் பார்ப்பார்கள்.

ஒப்பந்த பத்திரத்தில் (Agreement) அனைத்தும் உங்களுக்கு திருப்தியாக இருந்தால் ஒழிய கையெழுத்து இடக்கூடாது. அதே நேரம் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களும் அதில் கையெழுத்து இட்டிருக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து, சவூதி அரேபியாவில் ஆடு மற்றும் ஒட்டகம் பராமரிக்க ஐடிஐ முடித்தவர்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி!

வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்பது உண்மைதான்! அதற்காக அவசரப்படாமல், முறையாக நல்ல வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகி, சர்வீஸ் சார்ஜ் அதிகம் வாங்காத நல்ல நிறுவனங்கள் மூலம், நல்ல வேலையாக தேர்ந்தெடுத்து, நமக்கு உணவு தங்கும் இடம் இலவசமாக தரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, சம்பளமும் சரியாக தரும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து  வெளிநாடு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் குடும்பமும் வசதியாக இருக்கும்.

சில நாடுகளுக்கு நாம் பணிக்குச் செல்வதை தவிர்த்து விட வேண்டும். குறிப்பாக மலேசியா, கொரியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் பணிக்குச் சென்றால், இன்றும் அங்கு கொத்தடிமை முறை இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் மூலமாகவும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் அறிகிறோம்.

அப்படி செல்வதாக இருந்தால் கூட ஒரு தடவைக்கு பல தடவை.. நான் முன்பு சொன்ன இணைய தளம் மூலமாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, நமக்கு திருப்தி ஏற்பட்டால் தான் பணிக்குச் செல்ல வேண்டும்.

நம்பகத்தன்மை இல்லாத அயல்நாடு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியை நம்பி அங்கு சென்று அவஸ்தை படக்கூடாது.

இன்னொரு முக்கியமான விஷயம். பெண்கள் அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும்போது கூடுதல் விழிப்புணர்வு தேவை.

டாக்டர், நர்ஸ் போன்ற பணிகளுக்கு பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

எந்த நாட்டிற்கும், வீட்டு பணிகளுக்கு என செல்லும்போது பெண்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லக் கேள்வி. அதிக வேலைப் பளு, பாலியல் தொந்தரவுகள் போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம்; சமயத்தில் அடி உதை ஆகியவையும் உண்டு. 

எனவே  பெண்களே உஷார்!
                                                                                                                                   -நிறைவடைந்தது-

நன்றி :திரு முத்துரத்தினம் அவர்களுக்கு
                                               

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-6


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி-6
******************************************************************************
சில நண்பர்கள் குடும்பத்தோடு வெளிநாடு சென்று தங்க நேரிடும்.

அப்போது அவர்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா?

அவ்வாறு பாதிக்கப்படாமல் இருக்க, நமது இந்திய அரசாங்கம், அந்தந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் இந்திய தூதரக கல்விக் கூடங்களை (INDIAN EMBASSY SCHOOL) நிறுவி திறம்பட நடத்தி வருகிறது.

எல் கே ஜி-யில் இருந்து, செகண்டரி பள்ளிவரை ஆசிரியர்களை பல்வேறு பாடங்களுக்கு நியமித்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கிறது.

மேற்படிப்புக்கு தொலை தூரக் கல்வி மூலம் பயன்பெற, ஆங்காங்கே பயிற்சி மையங்களை நிறுவி உதவி வருகிறது.

சில பல்கலைக்கழகங்களும், பயிற்சி மையங்களை நாடுகளின் முக்கிய நகரங்களில் நிறுவி, பயிற்சி பெற வைக்கின்றன.

தேர்வு மையங்களும் அமைத்து, தேர்வு எழுத வைத்து, பட்டங்கள் (DEGREES) பெற ஆவன செய்கிறார்கள்.

அவ்வாறு பெறும் பட்டங்கள், இந்திய அரசு அங்கீகாரம் அளித்து, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பெறலாம்.

அயல் நாடு செல்லும் தமிழர்கள் குறிப்பாக அந்தந்த நாட்டிலுள்ள நமது தமிழ்ச் சங்கங்களை அவசியம் தொடர்பு கொள்ளவேண்டும்.

அங்கு நடக்கும் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச்சங்க உறுப்பினராகி பங்கு கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பல தமிழ் அன்பர்களின் நட்பு ஏற்படும். இந்தியாவில் கொண்டாட முடியாத பண்டிகைகளை அங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடலாம்.

நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அங்கு தெளிவுபடுத்தி தீர்த்துக் கொள்ளலாம்.

அந்தந்த நாடுகளின் தமிழ்ச்சங்க முகவரிகளை இணையதளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புதியதாக வெளிநாடு செல்லும் அன்பர்கள் முதலிலேயே தமிழ்ச்சங்க நிர்வாகிகளை தொடர்பு  கொண்டு நமக்கு வேண்டிய உதவிகளைப் பெறலாம்.

இந்தியாவில் நாம் யாருக்காவது உதவி செய்ய விரும்பினாலும், பலர் சேர்ந்து கூட்டாக பொருள் உதவி தமிழ்ச்சங்கங்கள் மூலம் செய்யலாம். பல நிதி உதவி பெறும் நிறுவனங்கள் பலன் பெறும்.

அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தில் தெரிவித்து, தீர்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் உள்ள அயல்நாடு வாழ் இந்தியருக்கான நல வாரியத்தில் தொடர்பு கொண்டும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS,
9th FLOOR, AKBAR BHAWAN,
CHANAKYA PURI,
NEW DELHI - 110 021.

தொலைபேசி : +91 11 24197900
தொலைபேசி : +91 11 24674140


நல வாரிய சில முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள:

1. Mr Nirmal Singh
Secretary
Ministry of Overseas Indian Affairs
Tel: 24674143 / 24674144
email: secretary@moia.nic.in
email: jsds@moia.nic.in

2. Mr. Malay Mishra
Joint Secretary (Diaspora Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 26874240
email: jsds@moia.nic.in

3. Mr. G Gurucharan
Joint Secretary (Financial Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 24676210
email: jsfs@moia.nic.in

4. Mr.Jagadananda Panda
Protectpr General of Emigrants,
Ministry of Overseas Indian Affairs.
Tel: 26874250
e-mail: pge@moia.nic.in


வெளிநாடு வாழ் இந்தியருக்காக நமது அரசாங்கம், கடந்த மே மாதம்  2004ஆம் ஆண்டு  MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS-ஐ நிறுவியது.

மேலும் இத்துடன் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புக்கான இமிக்ரேசன் துறையையும் இணைத்தது.
                                                                                                                                  -இன்னும் இருக்கிறது-
 நன்றி :திரு முத்துரத்தினம் அவர்களுக்கு

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-5


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி - 5
**************************************************************************

வெளிநாடு வாழ்க்கை முடிந்து, முடிவாக இந்தியா வந்து நிரந்தரமாக தங்குவதாக இருந்தால், வ்ங்கியுடன் தொடர்பு கொண்டு மேற்கண்ட அயல்நாடு வாழ் இந்தியருக்கான வங்கிக் கணக்கை, ORDINARY ACCOUNT ஆக மாற்றிக் கொள்ளலாம்.


வங்கிகள் RESERVE BANK OF INDIA- விற்கு இதனை தெரியப்படுத்தி விடும்.

மேலும் தற்போது 'SPEED CASH'- எனப்படும் உடனடியாக பணம் அனுப்பும் வசதியும் தற்போது உள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது வெளிநாட்டு வங்கிகளில் 'speed cash' முறையில் அனுப்பிய பணத்தை இந்தியாவில் WESTERN UNION MONEY TRANSFER' மூலம் நமது தபால் நிலையங்களிலோ அல்லது இதனுடைய ஏஜெண்ட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் பணம் அனுப்பிய ரசீது-வில ஒரு அடையாள எண் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்திய தபால் நிலையத்தில் எந்த ஊரிலும் மற்றும் 'WESTERN UNION MONEY TRANSFER'-ஏஜெண்டுகளிடமும் யார் பெயருக்கு பணம் அனுப்புகிறோமோ - அவருடைய அடையாள அட்டையைக் காண்பித்து உடன் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்கு கால  தாமதம் ஏற்படாமல் அவசர தேவைக்கு பணம் பெற முடியும்.

ரூ.50,000-க்கு கீழ் தான் பணம் அனுப்ப முடியும். வங்கிக் கணக்கு மூலம் அனுப்பும் பணத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

விடுமுறையில் இந்தியா வரும்போது கடவுச் சீட்டு மற்றும் விமான பயணச் சீட்டில் கவனிக்க வேண்டியை.

நம் கடவுச் சீட்டில் இந்தியா வரும்போது, நிறுவனமானது இரண்டு வகையான விசாக்களை உபயோகித்து நம்மை அனுப்பலாம்.

ஒன்று, நிறுவனம் நம்மை தொடர்ந்து பணி செய்ய அனுமதித்தால் EXIT-RE-ENTRY விசாவை உபயோகித்து நம்மை விடுமுறையில் அனுப்புவார்கள்.

அதாவது EXIT - என்றால  இந்தியா செல்லவும், RE-ENTRY என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், விசா தேதி - கெடு முடிவதற்கு முன் - நாம் பணிபுரியும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.

இதில் சிறு கால தாமதம் ஏற்பட்டால் கூட நம்மை நாம் பணிபுரியும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.


பணி ஒப்பந்தம் முடித்து EXIT-ல் வரும் போது கவனிக்க வேண்டியது;

இரண்டு வருடமோ அல்லது அதற்கு மேலோ உங்களுடைய தேவையில்லை என திருப்பி அனுப்புகிறது என வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கடவுச் சீட்டில் EXIT-முத்திரை இடப்பட்டு இந்தியாவுக்கு வருகிறீர்கள்.

நீங்கள் என்ன என்ன பொருட்கள் கொண்டு வரலாம் என்பதை 'INDIA CUSTOMS RULES FOR TRANSFERRING RESIDENCY TO INDIA'-என்ற இணைய தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


நாம் வெளிநாட்டில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்களை 'கார்கோ' (Cargo) மூலம் இந்தியா கொண்டு வரலாம். இதற்கு கஸ்டம்ஸ் DUTY கிடையாது.

மற்றும் நீங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் போது விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்று மறுபடியும் அதை இந்தியா கொண்டு வர விரும்பினால், மறக்காமல் அந்த பொருட்களுக்கான EXPORT CERTIFICARE'-ஐ கஸ்டம்ஸ்-லிருந்து பெற்றுச் செல்லவேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் இந்தியா திரும்பும்போது அந்த பொருட்களுக்கு திரும்பவும் DUTY கட்ட வேண்டி வரும்.

PRAVASI BHARTIYA BIMA YOJANA, 2006

குறிப்பாக வேலை வாய்ப்புக்காக அயல் நாடு செல்லும் இந்தியர்களுக்காக கட்டாய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (INSURANCE) அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

அதன் பெயர் 'பிரவசி பாரதிய பீமா யோஜனா' என்பதாகும். (PRAVASI BHARATIYA BIMA YOJANA) (PBBY)

குறைந்தபட்ச தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் நாம் வேலை ஒப்பந்தம் செய்த காலம் முழுவதற்கும் சேர்த்து பயன் பெறலாம்.

2003ஆம் ஆண்டு இந்தத் தொகை ரூ.2 லட்சமாக இருந்தது. பிப்ரவரி 1, 2006 முதல் ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது.

இத்துடன் ரூ.25,000-க்கும் சேர்த்து கூடுதலாக சட்ட உதவி செலவுகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் என்ன நன்மைகள் :


1) ஒரு வேளை காப்பீடு செய்தவர் இறந்து விட்டால், அவர் குறிப்பிட்ட நபருக்கு (NOMINEE) ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கும். அல்லது காப்பீடு செய்தவர் பணியின்போது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் காப்பீடு நிறுவனம் அவருக்கு குறிப்பிட்ட பணம் கிடைக்கும்.

2) இறந்தவர் உடலை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டுவர ஒரு வழி வான ஊர்தி செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். உடலுடன் உதவியாளர் ஒருவருக்கும் வரும் செலவை நிறுவனம் ஏற்கும்.

3) பணியில் இருப்பவரை அவர் எந்த தவறும் செய்யாத பட்சத்தில், பணியிலிருந்து வெளியேற்றப்பட்டால், ஒரு வழிப்பாதை எகானமி பிரிவு விமான பயணச்சீட்டுக்கான தொகையை காப்பீடு செய்தவர், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு அந்நாட்டின் இந்தியத் தூதரக சான்றிதழ் தேவை.

4) பணியில் இருக்கும்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது மருத்துவ சோதனையில் அவரால் இனி பணியில் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்டாலோ மற்றும் காப்பீடு எடுத்த 12 மாதத்திற்குள் வெளிநாட்டு பணி நிறுவனம் பணி நீக்கம் செய்தாலோ, மேற்கண்ட ஒரு வழிப் பயணச்சீட்டு காப்பீட்டு நிறுவனம் காப்பீடு செய்தவருக்கு வழங்கும்.

5) இந்த காப்பீடு குறைந்தது இரண்டு வருடம் அல்லது வேலை ஒப்பந்தம் காலக்கெடு இதில் எது அதிகமோ அதுவரை செல்லுவடியாகும்.

6) பணியின்போது விபத்து, உடல் நலக்குறைவு, வியாதி இவற்றுக்காக மருத்துவமனையில், மருத்துவம் எடுத்துக் கொண்டால், மருத்துவத் தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 50,000/- காப்பீட்டு காலத்தில் இந்தியாவில் இருந்தாலும், அயல் நாட்டில் இருந்தாலும் காப்பீடு செய்தவருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

7) வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ பேறுக்காக ரூபாய் இருபதாயிரம் (20,000) காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இதற்கும் அந்நாட்டு இந்திய தூதரக சான்றிதழ் தேவை.

8) வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு (21 வயதிற்குள்) மருத்துவச் செலவுகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 25,000 (இருபத்தைந்தாயிரம்) பெற்றுக் கொள்ளலாம். 
இறந்தவர் அல்லது நிரந்திர ஊனமுற்று இந்தியா திரும்பிய பணியாளர், காப்பீடு செய்தவருக்குத்தான் மேற்கண்ட சலுகை கிடைக்கும்.

காப்பீட்டு நிறுவனங்கள் எவை :

1) ஐசிஐசிஐ லம்போர்டு இன்சூரன்ஸ் கம்பெனி
2) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
3) ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி
4) நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
5) ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
6) நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி
7) சோழமண்டலம் MS ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
8) பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி

மேற்கண்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன் பெறலாம்.

                                                                                                                                      -இன்னும் இருக்கிறது-
நன்றி : திரு முத்துரத்தினம் அவர்களுக்கு