disalbe Right click

Friday, April 10, 2015

ஆதார் அட்டை பெறுவது எப்படி?


ஆதார் அட்டை பெறுவது எப்படி?
***************************************************

ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கைகளிலும் உள்ள  விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது.

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:
இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?
இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால் புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.
தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.
1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?
தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலையறிய:
https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLinkஇந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும். 


ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:
ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.
மேலதிக தகவலுக்கு:
புதுச்சேரியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 88070 82845, 97866 27066
தமிழகத்தில் கடலூரில் மட்டும் நிரந்தர ஆதார் மையம் உள்ளது. இதன் தொடர்பு எண்: 94861 43053
1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.
https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink ©ØÖ® http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: இது 2013ம் வருடம் அக்டோபர் மாதத்தில் புதியதலைமுறை வார இதழில் வெளி வந்த தகவல். 
இது குறித்து தெரியாதவர்களுக்காக மீண்டும் பதிவு செய்யப்படுகிறது. 
அன்புடன் செல்வம்பழனிச்சாமி

பாஸ்போர்ட் எடுப்பது எப்படி?


பாஸ்போர்ட் எடுப்பது எப்படி?
*****************************************
எளிய முறையில் பாஸ்போர்ட் வாங்குவது எப்படி தெரியுமா?
நம் நாட்டில் ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplomatic), ஜம்போ (Jumbo) என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்,
Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,
Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும்,
 Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
ஆவணங்கள்:
முக்கியமாக இரண்டு ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ்
2. பிறப்புச் சான்றிதழ்.
* இருப்பிடச் சான்றாக – குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடிநீர் வரி, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, வருமான வரி மதிப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றைக் காட்டலாம்.
* பிறந்த நாளுக்கான ஆதாரமாக பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களையோ, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, அல்லது பதிவுத்துறை வழங்கும் சான்றிதழ்களையோ ஆதாரமாகக் காட்டலாம்.
* ஜனவரி 26, 1989க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களையே ஆதாரமாகக் கட்ட வேண்டும்.
* விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு சான்றிதழ்களின் நகல்களின் இரண்டு படிகளை இணைக்க வேண்டும். நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறவர்கள் உண்மைச் சான்றிதழ்களை உடன் எடுத்துச் சென்றால், சமர்ப்பித்துள்ள நகல்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பார்கள்.
* சொந்த ஊர்விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம்.
* அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப்பதாயின், தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவரிடம் / முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.
பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அந்த அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பி, நீங்கள் அந்தப்பகுதியில்தான் வசிக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் கிரிமினல் குற்றம் புரிந்தவரா? அப்படி ஏதும் குற்றங்கள் உங்கள் பெயரில் உள்ளனவா என உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விசாரித்து நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே பாஸ்போர்ட் வழங்குவர்.
சிறுவர்-சிறுமியர்:
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிப்பர்.
கட்டணம்:
பொதுவாக சாதாரண பாஸ்போர்ட் பெற ரூ. 1000/- செலுத்தினால் போதுமானது . ஆனால் ஜம்போ பாஸ்போர்ட் பெற ரூ 1500/- கட்டணம் செலுத்த வேண்டும்.
(Jumbo) ஜம்போ பாஸ்போர்ட் – அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் (பெரு வணிகர்கள் போன்றோர்) பெறக்கூடியது. சிறுவர் சிறுமியர்க்கு கட்டணம் ரூ. 600/-.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன.
அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தத்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
காவல்துறை சான்றிதழ் பெற்றவர்கள், காவல்துறைச் சான்று தேவைப்படாத 14 வயதுக்கு உட்பட்ட (பாஸ்போர்ட் உடைய பெற்றோர்களின் குழந்தைகள்) சிறுவர் சிறுமியர், ஆட்சேபனை இல்லாச் சான்று பெற்ற அரசு ஊழியர்கள், அவர்களது துணைவியர் மற்றும் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டோர் மட்டுமே தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெற முடியும்.
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட்டை புதுப்பித்தல்:
பாஸ்போர்ட் பெற்றவர்கள் அதை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
தொலைந்து போனால் என்ன செய்வது?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :
பாஸ்போர்ட் ஆன்லைன் வெப்சைட்:

என் பேஸ்புக் அக்கவுண்ட் ரகசியமானதா?


என் பேஸ்புக் அக்கவுண்ட் ரகசியமானதா?
*******************************************************************
சமூக இணைய தளங்கள் என்று வருகையில், நாம் நம் தகவல்கள் எவ்வளவு தூரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன எனக் கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு சமூக இணைய தளமும், நம் தனிப்பட்ட தகவல் தொகுப்பினை நாம் விரும்பும் வகையில், விரும்பாதவர்கள் அறிய இயலாத வகையில் அமைக்க வழிகளைத் தருகின்றன. இருப்பினும், நம் தகவல்கள் திருடப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும்போது, நாம் அஞ்சுகிறோம். நம் தகவல்களை இன்னார் தான் பார்வையிட முடியும் என நாம் செட்டிங்ஸ் பிரிவில் அமைத்திருந்தாலும், நம் தகவல்கள் மற்றவர்களாலும் அறியப்படும் வாய்ப்புகள் உள்ளனவோ என்று சந்தேகப்படுகின்றோம். 

இந்த அச்சத்தினைப் போக்கும் வகையில் பேஸ்புக் தளம் Privacy Checkup என்ற டூல் ஒன்றை அண்மையில் தந்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக் இணைய தளத்தில் உள்ள நம் அக்கவுண்ட்டில், நாம் பதிவு செய்வதனை யார் எல்லாம் பார்க்க முடியும் என்பதனைக் கண்டறியலாம். அதனை மாற்றி அமைக்க விரும்பினால், இந்த டூல் அதற்கான செட்டிங்ஸ் அமைக்க உதவுகிறது. சில வேளைகளில் அல்லது சில அமைப்புகளினால், இந்த ஆப்ஷன் கட்டம், நாம் பேஸ்புக் செல்லும்போதே, தானாக எழுகிறது. அல்லது தளத்தில் மேலாகத் தரப்பட்டுள்ள பேட்லாக் (padlock) படத்தின் மீது கிளிக் செய்து பெறலாம். இதில் கிடைக்கும் மெனுவில் Privacy Checkup என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.
அமைப்பினை நம் விருப்பப்படி அமைக்க, யாரெல்லாம் நம் பதிவுத் தகவல்களைப் பார்க்கிறார்கள் என்பதனை அறிய Let’s Do It என்பதில் கிளிக் செய்து தொடங்க வேண்டும். Privacy Checkup தரும் முதல் நிலை, நம் பதிவுகளை யாரெல்லாம் பார்க்கிறார்கள் அல்லது பார்க்க முடியும் என்ற தகவலாகும். இதில் மாற்றங்கள் ஏற்படுத்த விரும்பினாலும், அதற்கு ஆப்ஷன் தரப்படுகிறது.
அடுத்து பேஸ்புக் இயக்கும் அப்ளிகேஷனப் பற்றியது. இதனைக் காண்கையில் நமக்கு ஆச்சரியம் வரலாம். ஏனென்றால், நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள் பல பின்னணியில் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டப்படும். சிலவற்றை நாம் தான் இன்ஸ்டால் செய்தோமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நம் நினைவில் இல்லாமல், நம்மால் பல காலம் பயன்படுத்தப்படாவதையாக இருக்கும்.
நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை அழித்துவிடலாம். நம் பதிவுகளை யாரெல்லாம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ, அதனையும் இங்கு செட் செய்திடலாம். அப்ளிகேஷன் ஒன்றை நீக்க, அதன் அருகே உள்ள X அடையாளத்தில் கிளிக் செய்தால் போதும். எப்படியும், நீங்கள் சோதனை செய்கையில் குறைந்தது பத்து அப்ளிகேஷனாவது நீங்கள் பயன்படுத்தாதவையாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் சோதனைக்குப் பின், உங்களைப் பற்றிய தகவல்களை யாரெல்லாம் பார்க்க அமைத்திருக்கிறீர்கள் என்பதனைக் காணலாம். நீங்கள் எங்கு படித்தீர்கள், எங்கு என்ன வேலை பார்க்கிறீர்கள், எங்கு வாழ்கிறீர்கள் என்ற விபரங்களை யாரெல்லாம் பார்க்க முடியும் என்பதைக் காணலாம். இதனை உங்கள் விருப்பப்படி திருத்தி அமைத்த பின்னர், Privacy Checkup டூல் மூடி வெளியேறலாம்.

பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்


பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்
*********************************************************************"
பெயிலில் விடுவிக்க முடியாத " என்பதன் பொருள் காவல் துறை அதிகாரியால் பெயிலில் விட முடியாது அதை ஒரு நீதிபதி தான் செய்ய முடியும் என்பதுதான்.
நீதிபதி குற்றவாளி குறித்த முதற்கட்ட முடிந்த பின் அவரை பெயிலில் விடுவிக்க கூடும். அவர் தான் குற்றம் புரிந்தார் என்பதற்கு நியாயமான காரணம் இல்லை என்பதாலும் வழக்கு முடிவதற்கு இடையிலும் பெயிலில் செல்ல நீதிபதி அனுமதிப்பார்.
பெயிலில் விட மறுக்க போலிஸ் பொதுவாக கூறும் காரணங்கள்
*****************************************************************************************************
1. குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்
2. சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்
3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்
4. காவல் துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை
5. திருட்டு போன பொருட்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை
6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றபட்வில்லை
7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்
குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்கவேண்டும். அவற்றை மறுக்கவிடில் பெயில் கிடைப்பது கடினம் பெயிலில் வர மனு குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப்ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை நியமிப்பது மிக நல்லது. அதற்கான மனு அவர் நீதிபதியின் முன் தரவேண்டும் (பெரும்பாலும் வெளியில் இருக்கும் நண்பர் அல்லது உறவினர் வழக்கறிஞரை பார்த்து விட்டு, அதற்கான கையெழுத்து மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் வாங்குவர் )
வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ள இயலாதென்றால் குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதிக்கு மனுசெய்யலாம். (பொது மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்பதால் தானே வாதிடுவதை பொதுவாய் தவிர்ப்பது நல்லது)
பெயில் மனுவில் பொதுவாய் சொல்லப்படுகின்ற  காரணங்கள்
***************************************************************************************************1. பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்
2. தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது
3. காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்
பெயில் மறுப்பும் மேல் முறையீடும்
******************************************************பெயிலில் விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.
ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்
ஆண்டிசிபேட்டரி பெயில் (Anticipatory Bail) ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு.
இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யலாம். வாரன்ட் இல்லாமல் போலிசால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது.

பான்கார்டு பெறுவது எப்படி?


பான்கார்டு பெறுவது எப்படி?
******************************************
வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது? குழந்தைகளுக்கும் வாங்க முடியுமா? பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் இங்கே பார்ப்போமா?

பான்கார்டு என்பது என்ன? 
ஆங்கில எழுத்துக்களும், எண்களும் கலந்த பத்து இலக்க எண் கொண்ட புகைப்பட அடையாள அட்டையாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

பான் கார்டின் அவசியம்:
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான டீமேட் கணக்கைத் துவக்க, வங்கியின் ஒரு கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மாற்ற / டெபாசிட் செய்ய / கணக்கிலிருந்து எடுக்க, மற்றும் வரி கழித்த தொகையினை திரும்பப் பெற ஆகியவற்றுக்கு பான்கார்டு அவசியம்.

பான் கார்டு பெறுவதற்கான தகுதிகள்: 
இந்திய குடிமக்கள் அனைவருமே பான்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. குழந்தைகளுக்குக் கூட பான்கார்டு பெற முடியும். பான் கார்டு பெறுவதற்கு ஒரு குழுமமோ, நிறுவனமோ, சங்கமோ, தனிநபரோ விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:
இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 105 ரூ கட்டணமும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 962 ரூ கட்டணமும் பெறப்படுகிறது. ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பித்தால் 250ரூ முதல் 300ரூ வரை செலவாகும்.

எங்கே விண்ணப்பிப்பது?
 மத்திய வருமான வரித்துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இதற்கான சேவை மையங்களைத் திறந்துள்ளது. இங்கு சென்று நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இந்தியர்கள் 49ஏ என்ற விண்ணப்பத்தையும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் 49ஏஏ என்ற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப்படிவத்தை https://www.tin-nsdl.com/என்ற தளத்திற்குச் சென்றும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:
பான் கார்டு பெற அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று தேவை.
அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

 இருப்பிடச் சான்றாக கடைசி 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம்
பிறந்த தேதிச் சான்றாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ் கொடுக்கலாம்.
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றிதழ்கள் போதுமானவை. மைனர் விண்ணப்பதாரருக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
ஒரு வேளை மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

மீண்டும் பான்கார்டு பெற:
ஏற்கனவே பான்கார்டு வழங்கப்பட்டு ஒருவேளை தொலைந்து போயிருந்தால் அல்லது  சேதமாகியிருந்தால்  அதே பான்நம்பரை வைத்து புதிய பான்கார்டு பெற 
மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கும் மேற்கூறிய சான்றுகள் தேவை. புதிய பான் கார்டுக்கான கட்டணமே இதற்கும் பொருந்தும். அப்படிப் பெறும்போது ஏற்கனவே உள்ள எண்ணே வழங்கப்படும்.

பான்கார்டில் பெயர் மாற்றமோ, பிறந்த தேதி மாற்றமோ, வேறு திருத்தங்களோ செய்ய வேண்டுமெனில் அதற்கான ஆதாரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பான் நம்பர் வைத்திருப்பவர்கள் மீண்டும் மற்றுமொரு பான் நம்பரைப் பெற முடியாது. அப்படி பெறுவதும் / வைத்திருப்பதும் சட்டப்படிக் குற்றமாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
ஆன்லைனில் http://www.myutiitsl.com/PANONLINE/ இத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி அனுப்புவது என்ற விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு அதை சரிபார்த்து பின் உறுதி செய்து அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அதில் கையெழுத்திட்டு அத்துடன் ஒரு புகைப்படத்தையும், தேவையான சான்றுகளையும் இணைத்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
PAN PDC Incharge – Chennai region
UTI Infrastructure Technology And Services Limited
STC Trade Centre, First Floor, A-29,
Thiru- Vi- Ka Industrial Estate, Guindy
CHENNAI – 600032
Tel No:(044) 22500426

உங்கள் விண்ணப்பத்தின் நிலையறிய :http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.doஇத்தளத்திற்கு சென்று கூப்பன் எண்ணைக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். அல்லது PAN என டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு 15 இலக்க அக்னாலெட்ஜ்மெண்ட் எண்ணை டைப் செய்து 53030 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

அருகிலுள்ள பான்கார்டு விண்ணப்பங்களைப் பெறும் மையங்களைத் தொடர்பு கொள்வதற்குhttp://www.myutitsl.co.in/intra/web/search_psa.jspஎன்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பகுதியை அல்லது ஊரை க்ளிக் செய்தால் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttps://www.tin-nsdl.com/ அல்லதுhttp://www.utitsl.co.in/ ஆகிய தளங்களுக்குச் செல்லவும்.

கிரெடிட் கார்டு தொலைந்து போனால்


கிரெடிட் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
********************************************************************நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை
15 வேலை நாட்கள்.

நடைமுறை :
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 
20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: 
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: 
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

மனைப் பட்டா தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*****************************************************************வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: 
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: 
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

டெபிட் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
 வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

பங்குச் சந்தை ஆவணம் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************************சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? 
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: 
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: 
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*************************************************************************மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: 
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
 காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

கிரயப் பத்திரம்

தொலைந்து போனால் யாரை அணுகுவது?!
****************************************************************
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? 
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: 
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: 
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.


இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்தால்



இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************************பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
 நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
***********************************************************************பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 
கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்? 
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: 
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: 
காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
****************************************************************
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது 
ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: 
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

பான் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*************************************************************


பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள்      அல்லது 
வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: 
விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
 பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
 —

யாரெல்லாம் வாரிசு?


யாரெல்லாம் வாரிசு?
*****************************

வாரிசுகள் யார் என்பதை தனியாக வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரை. ஒருவருக்குப் பிறகு அவரது பிள்ளைகள், மனைவி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்கள் வாரிசாக இருக்கலாம்.

இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? ஆனால் யாரெல்லாம் வாரிசாக முடியாது அல்லது வாரிசு என்பதற்கான சட்ட அனுமதிகள் ஏன் வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் வாரிசு சான்றிதழின் அவசியம் புரிந்து விடும்.

ஏன் வாரிசுச் சான்றிதழ்  வேண்டும்?
*****************************************
அரசுப் பணியிலிருந்து ஒருவர் இறந்துவிடுகிறார். முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலைக்கு அவரது மகனோ/ மகளோ வாரிசு என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இப்போது அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களின் மூலமோ மட்டும் உறுதிபடுத்த முடியாது.

சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப் படுகிறது. நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும், சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை / உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.

இந்த வாரிசு சான்றிதழ் வட்டாட்சியர் மூலமாக வாங்க வேண்டும். வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார்.

ஆனால் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன. எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது

ஒரு ஆண் இறந்துவிட்டார் அல்லது காணாமல் போனவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்றால் அவர் மூலமான சொத்துக்கள் மற்றும் பண பலன்களை பெறுவதற்கு சட்டபூர்வமான சான்றிதழ் தேவை. தங்களது சொத்துகள் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்துகொள்ளும் வாரிசுகள் அதன் மீதான உரிமை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை

யாரெல்லாம் வாரிசுகள்?
****************************
ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வாரிசுகளாக கருதப்படுவார்கள். இறந்தவரின் இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவர். இந்த வகையில் நேரடி வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவர்களது நெருங்கிய ரத்த உறவுமுறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

இறங்குரிமை சான்றிதழ்
******************************
இறந்தவரின் பெயரிலுள்ள முதலீடுகள், வங்கி சேமிப்பு, மற்றும் பண பலன்களை வங்கி அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு பெறாத வாரிசுகளுக்கு அவற்றை உரிமை மாற்ற தயங்குவார்கள்.

ஒருவருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கும்பட் சத்தில் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடுக்க முடியாது. அல்லது பிற்காலத்தில் வேறு நபர்கள் உரிமை கோரி வந்தால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட வாரிசுகள் நீதிமன்றத்தை அணுகி சட்டபூர்வ உரிமை வாங்கி வருவது இறங்குரிமை சான்றிதழ் எனப்படுகிறது .


இதனைப் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் இறந்தவருடைய வாரிசுகள் 

அனைவரும் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பண 

பலன்களை அல்லது வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித 

ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு 

சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

நடைமுறை என்ன?
***********************
இறந்தவரின் வாரிசுகள் நேரடியாக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் வாங்கலாம். இதற்கு சட்டபூர்வமான குடும்ப ஆவணங்களே சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.

குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.

குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார். போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.


ஃபான் கார்டு பற்றி முழுமையாகத் தெரியுமா?


ஃபான் கார்டு பற்றி முழுமையாகத் தெரியுமா?
***********************************************************

நீங்கள் இந்திய பிரஜையாக இருந்தாலும் சரி அல்லது வெளி நாட்டில் வாழும் இந்தியராக இருந்தாலும் சரி, இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டினாலோ அல்லது பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ உங்களிடம் கண்டிப்பாக பான்(PAN) கார்டு இருக்க வேண்டும். (4 reasons why you should not buy gold now)
பான் என்றால் என்ன?
*************************

பான்(PAN) என்பதன் விரிவாக்கம் "பெர்மனெண்ட் அக்கௌன்ட் நம்பர்" (நிரந்தர கணக்கு எண்). இது ஒரு 10 இலக்கு வரிவடிவ எண் குறியீடு. இதனை ஒரு பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் இந்திய வருமான வரி துறை வழங்குகிறது. ஒவ்வொரு தனி நபர், ஹிந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் முதலியவற்றுக்கு ஒரு தனித்தன்மையான எண் வழங்கப்படும். இந்த என்னை பற்றி விரிவாக சிறிது நேரத்தில் பார்ப்போம். பான் என்பது ஒரு நிரந்தரமான எண்ணாகும். உங்கள் முகவரி மாறினாலோ அல்லது நீங்கள் வாழும் மாநிலத்தை மாற்றினாலோ இதில் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

பான் கார்டு வழங்கும் முக்கிய காரணம்?
**********************************************

உலகளாவிய அடையாளத்தை ஏற்படுத்தவே. இதனை வைத்து வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் வரி கட்டுபவரின் இதர செயல்பாடுகளின் பல ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஒரு மையத்தில் இணைத்து கண்காணிக்கலாம். இதனை கண்காணிப்பதால் இவை மறைமுகமாக வரி ஏய்ப்பை தடுக்கிறது. இந்த எண் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அளிக்கும் சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு நிகரானவையாகும்.
பான் பற்றிய புனைகதை:
*****************************

பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பான்எண்கள் வருமான வரிக்காக தேவைபடுகிறது, ஆனால் அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பான் கார்டின் நகல் பல வணிக பரிமாற்றங்களுக்கு அடையாளத்தை நிரூபிக்க பயன்படுகிறது. உதாரணத்திற்கு புது வங்கி கணக்கு திறக்க, ஒரு சொத்தை அல்லது வண்டியை வாங்கவோ விற்கவோ, வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு பெற, டீமாட் மற்றும் மியூசுவல் பண்ட் போன்ற முதலீடுகள் செய்ய PAN கார்டின் நகல் தேவைப்படும்.

பான் கார்டிற்கு விண்ணப்பிக்க:
***********************************

பான் கார்டு வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் அதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதற்கு வயது, குடியுரிமை என்று எந்த வரம்பும் கிடையாது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மற்றும் பிறந்த குழந்தைக்கு கூட விண்ணப்பிக்கலாம். அவர்களுக்காக அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் கையெழுத்திட வேண்டும்.

புதிய பான்: -
**************

விண்ணப்பதாரர் இதற்கு முன் பான் கார்டிற்கு விண்ணப்பித்ததில்லை என்றாலும், அவருக்கு ஏற்கனவே பான் ஒதுக்கப்படாமல் இருந்தாலும் சரி, அவர் வருமான வரித்துறை (ITD) இணையதளத்திற்கு செல்லலாம். அவர்களுக்கு பான் ஒதுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதே முதல் படி. - ஒரு வேளை அவருக்கு பான் ஒதுக்கப்படாமல் இருந்தால் கீழ்கண்ட இணையதளத்தில் போய் விண்ணப்பிக்கலாம். அங்கயே உங்கள் விண்ணப்பத்தின் இருப்பு நிலையையும் அறிந்துக் கொள்ளலாம்.
அந்த இணையதளங்கள்:
*****************************

o யூடிய் பான்(UTI) கார்டு விண்ணப்ப படிவம் o என்ஸ்டிஎல்(NSDL) விண்ணப்ப படிவம் -

பான் - நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமென்றால் உங்கள் அருகில் இருக்கும் டின்-பான்(TIN-PAN) மையங்கள், என்ஸ்டிஎல் டின்(NSDL-TIN) அல்லது யூடிய் பான்(UTI PAN) விண்ணப்ப மையத்தை அனுகலாம். புதிய பான் கார்டு விண்ணப்பிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து குறைந்தது இரண்டு அடையாள சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும்: - மெட்ரிகுலேஷன் சான்றிதழ் - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன பட்டம் - கடன் அட்டை - வங்கி அறிக்கை - ரேஷன் கார்டு - ஓட்டுனர் உரிமம் - வாக்காளர் அடையாள அட்டை -

பாஸ்போர்ட் பான் கார்டின் மறு அச்சடிப்பு: -
***********************************************

உங்களுக்கு பான் எண் ஒதுக்கப்பட்ட பின்பு, பான் கார்டை பெறுவதற்கு விண்ணப்பத்தை உபயோகிக்க வேண்டும். இந்த புது பான் கார்டில் அதே பான் எண் தான் இருக்கும். என்ஸடிஎல்(NDSL) இணையதளத்திற்கு சென்று மறு அச்சடிப்புக்கு விண்ணப்பிக்கலாம். என்ஸடிஎல் மற்றும் யூடிய் இணையதளங்களில் உங்கள் பான் எண்ணை தேடி கண்டுப்பிடிக்கலாம்.

பான் எண்ணுடைய அமைப்பு:
*********************************

பான் எண்களின் புதிய அமைப்பு போனெடிக் சவுண்டெக்ஸ் கோட் நெறிமுறைபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு எண்ணும் தனித்தன்மையுடன் விளங்கும். இது போனெடிக் பான் (PAN) எண் உருவாக உதவி புரியும்: i. வரி கட்டுபவரின் முழுப்பெயர் ii. பிறந்த தேதி/நிறுவனம் தோன்றிய தேதி iii. ஸ்டேடஸ் iv. தனி நபர் என்றால் பாலினம் v. தனி நபர் என்றால் தந்தையின் பெயர் (திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி). பான் கார்டு வழங்கப்பட்ட தேதி பான் கார்டில் உங்கள் புகைப்படத்திற்கு வலது பக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
10 இலக்கு வரிவடிவ எண்ணின் வரிசை:
*********************************************

பான் எண்ணின் 10 இலக்கு எண்ணின் வரிசையத்தை பற்றி விலாவரியாக பார்ப்போமா:
 1. முதல் ஐந்து எழுத்துக்கள் முக்கியமானவை. அவை வரிவடிவ எண் அமைப்போடு இருக்கும்.

 2. அவைகளில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசைப்படி அமைந்திருக்கும். இந்த வரிசையம் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும்.
3. நான்காவது எழுத்து விண்ணப்பதாரரை பொறுத்து தீர்மானிக்கப்படும்: C - குழுமம் (கம்பெனி) P - தனி நபர் H - ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) F - நிறுவனம் A - தனி நபர்களின் இணக்கம் (AOP) T - அறக்கட்டளை B - பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) L - லோக்கல் அதாரிட்டி J - செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் G - அரசாங்கம் (உதாரணம் - கம்பெனி = AAACA; செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் = AAAJA; HUF = AAAHA;) 
4. ஐந்தாவது எழுத்து கீழ்கண்டவைகளின் முதல் எழுத்தாகும்:
 a) தனிநபர் என்றால் உங்கள் குடும்பப் பெயரின் முதல் எழுத்து       அல்லது
 b) மற்ற அனைவருக்கும் தங்களின் நிறுவனம், டிரஸ்ட், குழுமம் போன்றவற்றின் முதல் எழுத்து. (உதாரணத்திற்கு - லிசா சனமொலு [தனிநபர்] = AAAPC4444A; லிசா சனமொலு [HUF] = AAAHL4444A; பொது நிறுவனம் = AAAFG4444A) 

5. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-லிருந்து 9999 வரை செல்லும் வரிசைய எண்கள்.

 6. கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த சரிபார்ப்பு இலக்கம்

புதிய போனெடிக் பான் (PPAN):
*********************************

புதிய போனெடிக் பான் (PPAN)-ஆல் ஒரே பெயரைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பான்-னிற்கு மேல் ஒதுக்கப்படும் தவறு நடக்காது. பொருந்தும் பான் கார்டு கண்டுபிடிக்கப்பட்டால், பயனாளிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்படும். இரட்டிப்பான பான் கார்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்படும். இந்த நேரத்தில் சரிப்பார்க்கும் அதிகாரி இந்த பான் கார்டு இரட்டிப்பை நிராகரித்தால் தான் புதிய பான் ஒடுக்கப்படும். இந்த புதிய அமைப்பின் படி ஒரு தனித்துவம் பெற்ற பான் எண்ணை வரி கட்டுபவர்கள் 17 கோடி பேருக்கு ஒதுக்கலாம்.

முடிவுரை:
************

உங்கள் பான் கார்டின் முக்கியத்துவத்தை, அந்த கார்டு மற்றும் பான் எண்ணின் தேவைகளை இப்போது புரிந்திருப்பீர்கள்.

உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் சிறிது நேரம் செலவழித்து இன்றே விண்ணப்பம் செய்யவும்.


ரிட் மனு என்றால் என்ன?


ரிட் மனு என்றால் என்ன?
************************************

ஒரு “ரிட்” ட போடு!, 
தன்னால வழிக்கு வருவாய்ங்க!ன்னு சிலர் பேசுறத கேட்டுருப்பீங்க. அப்படீன்னா என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

"WRITTEN ORDER" என்பதைத்தான் ரிட் மனு என்று சொல்கிறோம். 
அதாவது அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்க சொல்லி நாம் தாக்கல் செய்யும் மனுவிற்கு பெயர்தான் ”ரிட்” மனு. இப்ப புரியுதா? சரி, எது எதுக்கெல்லாம் இந்த மனுவை தாக்கல் செய்யலாம்! என்பதை பார்ப்போமா? 

அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கல் தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.

பொதுநல வழக்குகளை (PUBLIC INTEREST LITIGATION), பொதுநலம் பாதிக்கும் போது வழக்கு தொடரலாம்.

உங்கள் ஏரியாவில், சாலை ரொம்ப மோசமாக இருந்து, அதனை சரிசெய்யச் சொல்லி நீங்கள் அதற்குரிய துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும், அவர்கள் அது சம்பந்தமாக ஏதும், நடவடிக்கை எடுக்கவில்லை! என்றால், அந்தத்துறை அதிகாரிக்கு, அதனை சரி செய்யச்சொல்லி உத்தரவு போட அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தொழிற்சாலையில் இருந்து புகை அல்லது தூசிகள் வந்து, அவை அந்தப்பகுதியின் சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் புகார் செய்யலாம். 
நீங்கள் புகார் அளித்து 60 நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கத்தை அதற்குரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி “ரிட்” மனு தாக்கல் செய்யலாம். 

“ரிட்” மனுவை ஐந்து வகைகளில் தாக்கல் செய்யலாம்.


1.Writ of Mandamus நீதிப்பேராணை:
***************************************************

தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்டவிரோதமான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று “ரிட்” மனு தாக்கல் செய்யலாம். இதற்கு நீதிப்பேராணை என்று பெயர். இதனை பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

2.Certiorari writ செர்ஷயோரரி ரிட் 
***********************************************

ஒரு ஹை கோர்ட் அதிகாரத்தில் உள்ள ஒரு கோர்ட் அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள அரசு அதிகாரி சட்ட விரோதமாக ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவோ அல்லது அந்த குறிப்பிட்ட நீதிமன்றத்துக்கோ/ அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக் கோரி கேட்பதுதான் இதன் அடிப்படை. இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

3.Quowarranto Writ கோவாரண்டோ ரிட் மனு
**************************************************************

எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அல்லது தனது பதவியுன் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது இந்த மனுவாகும். இதனை யார் வேண்டுமானாலும் போடலாம்.

4.Prohibition Writ பிராகிபிஷன் ரிட் மனு
********************************************************

ஒரு நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படும்போது, அதனை தடுக்க போடப்படும் மனு இதுவாகும். இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

5.Hebeas Corpus Writ ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு
**********************************************************************

இதற்கு ஆள் கொணர்வு ஆணை என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவரை காணவில்லை என்றாலோ, அல்லது ஒருவரை காவல்துறையினர் தவறாக காவலில் வைத்திருந்தாலோ, அல்லது ஒருவரை யாரோ கடத்தி எங்கோ அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரித்து, நீதிமன்றமானது அந்த நபரை நீதிம்ன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடும்


புகாரை காவல்துறை ஏற்க மறுத்தால்?


புகாரை காவல்துறை ஏற்க மறுத்தால்?

ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது.

எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான்.

காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம்தான்.

எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஒரு காவல்துறையின் அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படுகிறது.

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை! என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர்.

செல்வாக்கு மிக்கவர்களால் அனுப்பப்படும் புகார்களை புறக்கணித்தால், காவல்துறையினருக்கு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறில்லாத நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ஆதாயம் இல்லாத நிலையில் அந்தப் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை.

இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம். 

இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது.

ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை.

மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு.

குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது.

இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.

ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது.

இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது.

இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.

இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது.
குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது.

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும்.

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும்.

மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது.