disalbe Right click

Thursday, January 21, 2016

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

தஞ்சாவூர் புகைப்படங்கள் - பிரகதீஸ்வரர் கோயில்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பற்றிய தகவல்கள்


தமிழராய் பிறந்த நாம் எல்லோரும் பிறப்பால் எத்தகைய பெருமையை அடைந்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். இன்று உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மிகப்பழமையான மொழி. தோராயமாக பத்தாயிரம் ஆண்டு கால வரலாற்றினை கொண்டிருக்கும் மொழி. இன்றிருக்கும் மொழிகள் தோன்றும் முன்பே 'தொல்காப்பியம்' போன்ற மொழிக்கு செறிவூட்டும் இலக்கண நூல்களை கொண்டிருந்த மொழி. இன்று தன் கடவுளே சிறந்தவர், தான் சார்த்த மதமே முக்திக்கான மார்க்கம் என்று மூடர்கள் பிதற்றிக்கொண்டிருக்க ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் அனைவருக்கும் பொருந்தும் தமிழ் மறையாம் வள்ளுவம் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. இப்படியொரு புகழ் தமிழுக்கு கிடைக்க காரணம் அகத்தூய்மையும், அகண்ட அறியும் கொண்டிருந்த நம் முன்னோர்கள் தான். வெறும் சொல்லிலும், எழுத்திலும் மட்டுமில்லாது நவீன யுகத்தின் அறிவியலுக்கும் புதிராக இருக்கும் கட்டிடங்களையும் எழுப்பியிருக்கின்றனர் நம் மூதாதையர். அப்படிப்பட்ட கட்டிடங்களில் ஒன்று தான் ஆயிரம் வருடங்களை கடந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலாகும். தமிழர் கட்டிடக்கலையின் மனிமகுடமான இக்கோயிலை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

தஞ்சை பெரிய கோயில்!! கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயில் ஆயிரம் வருடங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இதனை கட்டியவர் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆவர்.  இன்று உலகில் இருக்கும் மிகத்துல்லியமான கணித அளவீடுகளுடன் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றான இக்கோயிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள். 
தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும்.



பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சை நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை.
எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது.
முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி ராஜகோபுரமன்று. இந்த ஆலயத்தில் கருவறை விமானக்கோபுரமே விண்ணை முட்டுவது போன்று வளாகத்தின் மையப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு விசேஷம் என்னவெனில் தென்னிந்திய கோபுரங்கள் யாவுமே தட்டையான சரிவுடன் மேல் நோக்கி உயர்ந்திருப்பதே அப்போதைய கோயிற்கலை மரபு. ஆனால் இக்கோயிலின் கோபுரம் ஒரு எகிப்தியபாணி பிரமிடு போன்று அடுக்கடுக்கான நுண்ணிய தளங்களாக மேனோக்கி சென்று உச்சியில் தட்டையான கடைசி பீடஅடுக்கில் பிரம்மாண்ட குமிழ் மாட கலச அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதோடு முடிவடைகிறது.
ஒரே விதமான ஒத்திசைவான அலங்கார நுட்பங்கள் ஒரு ஆபரண அட்டிகையைப்போன்று  கோபுரத்தின் உச்சிவரை நுணுக்கமாக வடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
ஒருவகையில் இந்த அலங்கார நுட்பம் அந்நாளில் தென்னிந்தியாவில் இருந்திராத தன்மையை கொண்டதாய் காட்சியளிக்கிறது. கொஞ்சம் கிழக்குத்தேச கோயில்களின் சாயலும் இந்த கோபுர அலங்கார நுட்பங்களில் தென்படுகிறது.
மற்றொரு முக்கிய அம்சம் வட நாட்டுக்கோயில்களை போன்றே பீட அமைப்பையும் இந்த கோயில் பெற்றுள்ளது என்பதாகும். இதில் மற்ற தமிழ்நாட்டு கோயில்கள் போன்று நாற்றிசை வாசல்கள் மற்றும் தீர்த்தக்குளம் ஆகிய அம்சங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தை அடிப்படை அறமாக கொண்டு முழுக்க முழுக்க ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் நோக்குடன் இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பதை இந்த பிரம்மாண்டத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நம்மால் உணர முடிகிறது.
வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த  முனைப்புடன் இந்த கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது இந்த கோயிலின் வடிவமைப்பை பார்க்கும் போதே புலனாகிறது.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு,  கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.
கோயிலின் நிர்வாகம் செம்மையாக நடைபெற விரிவான நடைமுறைகளும் முறைமைகளும் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை கோயில்பகுதியிலேயே இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 
இளம் வயதில் முடி சூடி பல போர்க்கள வெற்றிகளையும் கண்டு கலாரசனையும் அதீத மேலாண்மைத்திறனும் வாய்க்கப்பட்டிருந்த ராஜராஜ சோழர் நிச்சயம் அந்த கீர்த்திப்பெயருக்கு எல்லாவிதத்திலும் தகவமைந்தவர் என்பதற்கான சான்றுதான் இந்த ‘ராஜராஜுச்சரம் கோயில்’.
இந்த கோயிலில் எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான விமான கோபுரத்தின் உயரம் 190 அடி ஆகும். கோயில் வளாகத்தில் ‘முன் தாழ்வாரம்’, நந்தி மண்டபம், கருவூர்த்தேவர் கோயில், சுப்ரமணியர் கோயில் போன்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயிலின் கருவறையின் மேல் இருக்கும் விமான கோபுரமானது 216அடி உயரம் உடையதாகும். உலகிலிருக்கும் மிக உயரமான விமான கோபுரங்களில் ஒன்றான இதன் மேல் 80டன் எடையுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட கலச பீடம் இருக்கிறது.  ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் பெரிதாக தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத பொழுது எப்படி இவ்வளவு பெரிய எடையுள்ள பொருளை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. 
இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மறுக்க முடியா வரலாற்று ஆவணங்களாக பல தகவல்களை கொண்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் தொலைநோக்கு பார்வைமொரு முக்கியமான பிரமிக்க வைக்கும் அம்சமாக விளங்குகிறது.
இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நந்தி ஒரே கல்லால் ஆனதாக  வீற்றிருக்கிறது. இதன் எடை 25 டன் என்பதாக சொல்லப்படுகிறது. பிருகதீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் உறையும் இந்த திருக்கோயிலில் மே மாதத்தின்போது வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதேபோல இக்கோயிலில் இருக்கும் நந்தி சிலையும் ஒரே கல்லினால் வடிக்கப்பட்டது ஆகும். இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றான இது 16அடி நீளமும், 13அடி உயரமும் கொண்டதாகும்.  இதற்கு தேவையான கிராண்ட் கற்களை தஞ்சையில் இருந்து 60 கி.மீ தொலைவிலிருக்கும் திருச்சியில் இருந்து வெட்டி எடுத்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 
தஞ்சை பெரிய கோயிலின் தலைமை கட்டுமான பொறியாளராக 'குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சன்' என்பவர் இருந்ததாக கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.  தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட காலத்திற்கும் 2000 ஆண்டுகள் பழமையானதான சிந்து சமவெளி நாகரீகத்தில் நகரங்களை அமைக்க அவர்கள் பயன்படுத்திய கணித அளவீடுகளே இக்கோயிலுக்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


இக்கோயிலின் மூலவராக சிவ பெருமான் பிரகதீஸ்வரராக வணங்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி, சூரிய பகவான், சந்திர பகவான், வருண பகவான், குபேரர் ஆகியோரது சிலைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவர்கள் எல்லோரது சிலையும் ஒரு வளர்ந்த மனிதனின் சராசரி உயரமான 6 அடிக்கு இருக்கின்றன. இந்த உயரத்திற்கு கடவுளர்களின் சிலைகளை காண்பது அரிதானதாகும்.


தஞ்சை பெரிய கோயில்!! பெரிய கோயிலின் விமான கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையல்ல.   குறிப்பிட்ட சில கோணங்களில் சூரியன் இருக்கும் போது இதன் நிழல் கீழே விழாதே தவிர மற்ற நேரங்களில் எல்லா கட்டிடங்களையும் போல இதன் நிழல் கீழே விழுவதை நாம் காண முடியும். 


 1010ஆம் ஆண்டு இக்கோயில் கட்டிமுடிக்கப்பட்ட போது இக்கோயிலில் மட்டும் அர்ச்சகர்கள், நடன மங்கைகள், இசை வாத்திய கலைஞர்கள், கணக்கர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இருந்திருக்கின்றனர்.  இவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புகள் இக்கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளில் நாம் காண முடியும்.  


தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் முதலாம் ராஜ ராஜ சோழனின் கற்சிற்பம். இக்கோயிலில் நாம் மிக மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட சிற்பங்களை காண முடியும். கையில் உள்ள நுண்ணிய நரம்புகள் கூட சிலைகளில் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கும். 


பிரகதீஸ்வரர் கோயிலில் இருக்கும் ஆள் உயர கற் சிற்பங்கள். 


தஞ்சை பெரிய கோயில்!! சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் கருவறைக்கு அருகில் ரகசிய அறை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனுள் ராஜ ராஜன் தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பணிவாக நிற்பது போன்ற சுவரோவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சோழர்கள் சிற்பம் வடிப்பதில் மட்டுமில்லாமல் ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும். 


தஞ்சை கோயிலில் காணப்படும் மட்டுமொரு ஓவியம்.  இவையெல்லாம் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டிருகின்றன. இதனாலேயே தான் இந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருகின்றன.


தஞ்சை பெரிய கோயில்!! ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்றும், பௌர்ணமி தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.  மஹா சிவராத்திரியும் இங்கே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 


ஒரு மஹோன்னத பொற்காலத்தின் சாட்சியமாகவும் கல்லிலே பொறிக்கப்பட்ட ஆவணமாகவும் வீற்றிருக்கும் இந்த தட்சிண மேருவை தமிழர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம்.

“இதனை விட்டுச்சென்றார் நம் முன்னோர் – எதனை விட்டுச்செல்வோம் நாம் நாளை?” 
என்ற ஒரு கேள்வியும் காத்திருக்கிறது இக்கோயிலில் நமக்கு.


Tuesday, January 19, 2016

டைஃபாய்டு காய்ச்சல்

டைஃபாய்டு காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்வோமா?

1 டைபாய்டு காய்ச்சல் எப்போது வரும்?
சுற்றுச்சூழல் சீர்கெடுவதால் ஏற்படும் தொற்று நோய்களில் மிக முக்கியமானது டைபாய்டு. மழைக் காலங்களில், தெருக்களில் தேங்கும் மழைநீரில், குப்பை கழிவுகள் சேர்ந்து, நோய் கிருமிகள் வாழ வழிவகுக்கிறது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை, யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. 

2 இந்நோய் வரக் காரணம்?
‘சல்மோனெல்லா டைபி’ எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன.

3 நோய் கிருமிகள் எங்கு உற்பத்தியாகின்றன?
அசுத்தமான இடங்களிலும், தெருவோர கழிப்பிடங்களிலும் இந்தக் கிருமிகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள் மூலம், வீட்டில் பாதுகாக்கப்படாத குடிநீரிலும், உணவிலும் கிருமிகள் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த 
உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு, டைபாய்டு காய்ச்சல் ஏற்கிறது.

4 ஏற்கனவே டைபாய்டு வந்து குணமடைந்தோருக்கு இந்நோய் மறுபடியும் தாக்குமா? 
கண்டிப்பாக! அதுமட்டுமல்ல, ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில், இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள் வரை வசிக்கும். அப்போது, அந்த நபரின் மலத்திலும், சிறுநீரிலும் அவருக்கு தெரியாமலேயே அவை வெளியேறி, 
அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும்.

5 அறிகுறிகள் என்ன?
நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும், காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்று வலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்கு சோர்வு அதிகரித்து மயக்கம் வரும்.

6 காய்ச்சலின் பாதிப்புகள்?
குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு’ வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் துவக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக்குருதிநோய்’ ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரலாம்.

7 என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?
காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள், நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை அவசியம். குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்கு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை எடுக்க வேண்டும். ரத்தத்தை எடுத்து, ஒரு வளர் கருவியில் வைத்து, கிருமிகள் வளர்கின்றனவா என்று பார்க்கும் பரிசோதனை இது. 
இப்பரிசோதனை மூலம் தான், டைப்பாய்டு உள்ளதா என, உறுதியாக சொல்ல முடியும்.

8 ‘வைடால்’ டைபாய்டு ரத்தப் பரிசோதனை எடுக்கலாமா?
இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். டைபாய்டு வந்தவருக்கு இந்த நோய்க் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது. காய்ச்சல் கண்டு எட்டு நாட்களுக்கு பின், இப்பரிசோதனை செய்தால் மட்டுமே பயன் உண்டு.

9 டைபாய்டின் போது பசியின்மை இருக்குமா? உணவு என்ன எடுக்கலாம்?
கண்டிப்பாக. குடலில் புண் உண்டாகும் வாய்ப்பிருப்பதால், காரமான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளான கஞ்சி, பழங்கள், பழச்சாறுகள் போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம். வெந்நீர் மட்டுமே பருக வேண்டும். வெளி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சமைக்காத உணவுகளான தயிர் பச்சடி, ‘சாண்ட்விச்’ போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 

10 சிகிச்சைகள் என்னென்ன?
ஐந்து நாட்கள் கழித்து காய்ச்சல் இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இதற்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
By vayal on 18/01/2016

டைஃபாய்டு காய்ச்சலுக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள்சுற்றுப்புறச் சூழல் சீர்கெடுவதால் ஏற்படுகிற தொற்றுநோய்களில் மிக முக்கியமானது, டைபாய்டு காய்ச்சல். மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குவதால், குடிநீரும் தெருக் கழிவுகளும் கலந்து நோய்க் கிருமிகள் வாழ வசதியாகிறது. இதனால் அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம்வரை உள்ள காலத்தை டைபாய்டு காய்ச்சலுக்கான காலகட்டம் என்று சொல்கிறார்கள்.

இது, சிறு குழந்தைகள் முதல் முதியோர்வரை யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. என்றாலும், எங்கெல்லாம் சுத்தம் இல்லையோ, கழிப்பறை வசதி இல்லையோ, அங்கு வாழ்கிற குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை இந்த நோய் எளிதில் தாக்கிவிடுகிறது.

நோய் வரும் வழி
‘சால்மோனெல்லா டைபி’ (Salmonella typhi) எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன. இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள், இந்தக் கிருமிகளைச் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருகின்றன. வீட்டில் முறையாகப் பாதுகாக்கப்படாத குடிநீரிலும் உணவிலும் இவை கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும் குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது.

இந்த நோய் இன்னொரு முறையிலும் வருகிறது. ஏற்கெனவே, டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில் இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள்வரை வசிக்கும். அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் அவருக்குத் தெரியாமலேயே அவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய் கடத்துநர்கள்' (Carriers) என்கிறார்கள்.

அறிகுறிகள்
நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்றுவலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்குச் சோர்வு அதிகரித்து, மயக்கம் வரும்.

சிக்கல்கள்
இந்தக் காய்ச்சல் குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு' (Febrile Fits) வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் தொடக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக்குருதிநோய்’(Septicaemia) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து நேரலாம். இதற்கு சில பரிசோதனைகள் செய்து நிலைமையை அறியலாம். 

1. ரத்த அணுக்கள் பரிசோதனை

* காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் 90 சதவீதம் சரியாக இருக்கும்.

* டைபாய்டுக்கான ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு இதைச் செய்ய வேண்டியது முக்கியம்.

* வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count Test) செய்யப்படும். இதன்மூலம் நோயாளியின் பொது ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

* டைபாய்டு வந்தவருக்கு ரத்த வெள்ளையணுக்களின் மொத்த எண்ணிக்கையும் நியூட்ரோபில் அணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.

* குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்கு வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

2. ரத்த நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Blood Culture)

* காய்ச்சல் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்குள் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

* ரத்தத்தை எடுத்து ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை உறுதி செய்ய மிகச் சிறந்த பரிசோதனை இதுதான்.

3. வைடால் ரத்தப் பரிசோதனை (Widal Test).

* இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். டைபாய்டு வந்தவருக்கு இந்த நோய்க் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது.

* இதில் ‘டியூப்’ பரிசோதனை, ‘சிலைட்’ பரிசோதனை என்று இரண்டு வகைகள் உண்டு.

* இவற்றில் ஒன்றை, நோய் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் செய்துகொள்ள வேண்டும்.

* டைபாய்டு ஆன்டிஜெனை நோயாளியின் ரத்தத்தில் கலக்கும்போது அதில் எதிர் அணுக்கள் இருந்தால், அவற்றுடன் ஆன்டிஜென்கள் இணைந்து இணையணுக்களை (Agglutinin) உருவாக்கும்.

* இப்பரிசோதனையில் ஓ, ஹெச் என்று இரண்டு வகை இணையணுக்கள் அளக்கப்படுகின்றன.

* இவற்றில் ‘ஓ' இணையணு டைபாய்டு கிருமி வகையைச் சார்ந்ததால், இதன் அளவு முக்கியம்.

* டியூப் பரிசோதனையில் ‘ஓ’ இணையணு 1 : 180 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால், சிலைட் பரிசோதனையில் 1 : 80 எனும் அளவுக்கு அதிகமாக இருந்தால் டைபாய்டு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

* நோய் ஆரம்பித்த நான்கு மாதங்கள்வரை இந்த அளவுகள் குறையாமல் இருக்கும். எனவே, இதற்கிடையில் இந்தப் பரிசோதனையை மீண்டும் செய்துகொண்டு, இன்னமும் நோய் குணமாகவில்லை என்று தவறாக எண்ணுபவர்கள் உண்டு.

* சமீபத்தில் டைபாய்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்தப் பரிசோதனையைச் செய்ய நேரிட்டால், அவர்களுக்கு நோய் இல்லாவிட்டாலும், இந்த அளவுகள் அதிகமாக இருப்பதாகக் காண்பிக்கும்; பயப்படத் தேவையில்லை.

4. அட்டைப் பரிசோதனை (CARD Test)

* நோயாளியின் ரத்தத்தில் டைபாய்டு கிருமிகளுக்கான ஐஜி.எம். (IgM), ஐஜி.ஜி. (IgG) எதிர் அணுக்களை மிக விரைவாகக் கண்டறியும் பரிசோதனை இது.

* இந்த அணுக்கள் ரத்தத்தில் இருந்தால் 60 சதவீதம் நோய் உறுதி.

* பரிசோதனையின் முடிவு உடனே தெரிந்துவிடும்.

* நோய் ஏற்பட்ட முதல் வாரத்தில் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

5. மலம் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Feces Culture)

* காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதென்றால் மூன்றாம் வாரத் தொடக்கத்தில், இதைச் செய்துகொள்ள வேண்டும்.

* மலத்தை ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை உறுதிசெய்ய இதுவும் உதவும்.

6. சிறுநீர் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Urine Culture)

* காய்ச்சல் ஏற்பட்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டதென்றால், நான்காவது வாரத் தொடக்கத்தில் இதைச் செய்துகொள்ளலாம்.

* சிறுநீரை ஒரு வளர் ஊடகத்தில் ஊற்றி, கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை இதன்மூலமும் உறுதி செய்யலாம்.

7. பி.சி.ஆர். பரிசோதனை (PCR Polymerase Chain Reaction Test)
* நோயாளியின் ரத்தத்தில் டைபாய்டு பாக்டீரியாவின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து, நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

* 99 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

* மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டது.

* இப்போது இந்தப் பரிசோதனை பிரபலமாகிவருகிறது.

* செலவு கொஞ்சம் அதிகம்.

நன்றி : டாக்டர் கு.கணேசன், தி இந்து நாளிதழ் - 28.11.2015

கிரடிட் கார்டு - விதிமுறைகள்


கிரடிட் கார்டு - விதிமுறைகள் & புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி?

கிரடிட் கார்டு", 
இந்த வார்த்தையைக் கேட்டாலே சிலருக்குப் புன்னகையும், சிலருக்கு எரிச்சலும் வரும். 

உண்மைதான் எரிச்சல் படும் பெரும்பாலானோர் கிரேடிட் கார்டின் முழுமையான நன்மைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தவர்கள். நாம் கிரேடிட் கார்டுகளை வாங்குவதற்கான முக்கியக் காரணம், திடீர் செலவுகளுக்காகப் பிறரிடம் கடன் கேட்கும் நிலையைத் தவிர்க்கவும், பர்ஸை பதம் பார்க்கும் செலவுகளைத் தடுக்கவும், பெற்ற கடனை செலுத்த போதுமான கடன் இருப்பதாலே கிரெடிட் கார்டுகளை வரும்பி வாங்குகிறோம்.

இது ஏறக்குறைய ஒரு ஷாப்பிங் லோனைப் போலத்தான். ஒரு குறிப்பிட்டத் தேதிக்குள் செலுத்தி விட்டால் வட்டி கூடக் கட்டத் தேவையில்லை. ஒருவேளை நிலுவையைக் கட்டத் தவறினால், நீங்கள் அதற்குண்டான வட்டியையும் அபராதத்தையும் கட்ட வேண்டியிருக்கும். 

இதை உபயோகிக்கும்போது நீங்கள் அறிந்திராத பல்வேறு விதிமுறைகள் உள்ளன. நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ள அவற்றைச் சுருக்கமாகத் தருகிறோம்.

வருடாந்திரக் கட்டணம் 
பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திரக் கட்டணங்களை வசூலிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் முதல் வருடத்திற்கு மட்டும் இந்தக் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கின்றன. இந்த வருடாந்திரக் கட்டணம் முழுவதும் வங்கி மற்றும் கார்டின் வகையைப் பொருத்தது.

வருடாந்திர வட்டி விகிதம் 
இது கட்டணங்கள், நிலுவைத் தொகை மீது ஏற்படும் செலவுகளை உள்ளடக்கிய வருடாந்திர வட்டி விகிதத்தைக் குறிக்கும். ஒருவர் தன்னுடைய நிலுவைத் தொகை முழுவதையும் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செலுத்திவிட்டால், இந்த வருடாந்திர வட்டி விகிதம் பொருந்தாது என்பதோடு எந்த வட்டியையும் செலுத்த தேவையில்லை.

கட்டணச் சுழற்சி (Billing cycle)
பில்லிங் சைக்கிள் என அழைக்கப்படும் இது, உங்கள் கார்டுக்கான மாதாந்திர கட்டண விவரப்பட்டியல் தரப்படும் தேதியைக் குறிக்கும். டியு-டேட் எனப்படும் இது நீங்கள் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதியாகும். இந்த இரண்டு தேதி குறித்த விவரங்களும் உங்களுக்குக் கிரெடிட் கார்டு வழங்கப்படும்போது தெரிவிக்கப்படும்.

நிலுவை மாற்றம்
ஒருவர் தன்னுடைய ஒரு கிரெடிட் கார்டிலுள்ள நிலுவைத் தொகையை மற்றொன்றிற்கு மாற்றிக் கொண்டால் அதற்குப் பாலண்ஸ் டிரான்ஸ்ஃபர் என்று பெயர். இது பொதுவாக நிலுவைத் தொகை மீதான வருடாந்திரக் கட்டணங்களைக் குறைத்துக் கொள்ளச் செய்யப்படுவதுடன் முதல் கார்டிலுள்ள வட்டிவிகிதம் இரண்டாவது கார்டிலுள்ள வட்டிவிகிதத்தை விடக் குறைவானதாக இருந்தால் மட்டுமே பயன் தரும். ஆனால் அவ்வாறு மாற்றுவதற்கும் கட்டணமுண்டு.

கடன் வரம்பு 
இது உங்கள் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பெறக்கூடிய கடனின் உச்ச வரம்பைக் குறிக்கும். நீங்கள் இந்த அளவைப் பயன்படுத்தும் விதத்தைப் பொருத்து உங்கள் கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் பெறும் திறன் மதிப்பீடும் மாறும். கடன் வரம்பு உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனையும் பொருத்து அமையும். எனவே வரம்பு மீறிய செலவுகளைச் செய்து உங்கள் கடன் வரம்பை அதிகரிக்க முயலாதீர்கள்.

பண வரம்பு
கடன் வரம்பு மற்றும் பணவரம்பு ஆகியவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. பணவரம்பு என்பது உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி எந்த அளவு பணத்தை எடுக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இந்த இரண்டிற்கும் வரம்பு வேறுபடுவதுடன் பண வரம்பிற்கான வட்டி விகிதம் எடுத்த நாளிலிருந்தே தொடங்கிவிடும். பணவரம்பிற்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்பதால் அதை அவசரக் காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்

கார்டு சரிபார்ப்பு மதிப்பு (சிவிவி) 
உங்கள் கார்டின் பின் பகுதியில் இந்த மூன்று இலக்க எண் குறிப்பிடப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். இது இணைய அல்லது மின்னணு பரிமாற்றங்களில் செய்யப்படும் செலவுகளுக்குத் தேவைப்படும் ஒரு குறியீடு. இதன் மூலம் உங்கள் கார்டின் நம்பகத் தன்மை உறுதிசெய்யப்படும்.

தாமதக் கட்டணம்
உங்கள் நிலுவைத் தொகையில் செலுத்தவேண்டிய குறைந்த அளவையும் நிலுவைத் தேதிக்குள் கட்டத் தவறும்போது இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

கேஷ்பேக் 
இது சில சிறப்பான காலக் கட்டங்களுக்காகத் தரப்படும் சலுகை. நீங்கள் கார்டின் மூலம் செய்யும் செலவுகளைப் பொருத்துச் சலுகை புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கிற்குப் பணமாகக் கிடைக்கும். ஆனால் நீங்கள் நிலுவைகளைச் சரியாகச் செலுத்தினால் மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைக்கும்.

சிபில் ஸ்கோர் 
உங்களுடைய கடன்பெறும் நம்பகத்தன்மையை அதிகரிக்க இந்தச் சிபில் ஸ்கோர் எனப்படும் கடன் நம்பகத்தன்மை மதிப்பீட்டுப் புள்ளிகள் அவசியம். ஒருவர் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருந்து அவற்றில் சிலவற்றை ரத்துச் செய்ய விரும்பினால் (அவற்றின் மொத்த கடன் வரம்பு 2 லட்சம் என வைத்துக்கொண்டால்), உங்கள் கடன்வரம்பு குறைக்கப் படுவதுடன் உங்கள் சிபில் ஸ்கோரும் குறையும்.

சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி?
நீங்க ஏதாவது தேவைக்காக லோன் வேண்டி விண்ணப்பிக்கும்போது ஏறத்தாழ எல்லா வங்கிகளுமே உங்களுடைய சிபில் ஸ்கோர் அதாவது கடன் பெறும் திறனைப் பற்றி உங்களுக்குக் கடனைத் தருவதற்கு முன் விசாரிக்கும். 

உங்களுடைய ஸ்கோர் அல்லது புள்ளிகள் இதில் குறைவாக இருந்தால் நீங்க இதுக்கு முன்னாடி வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருந்துள்ளதை என்பதைக் காட்டும். அதனால் உங்களுக்கு லோன் கிடைக்கிறது சிரமம் தான் அல்லது கிடைக்காமல் கூடப் போகலாம். 

கடனை திருப்பிச் செலுத்தாததைத் தவிரச் செலுத்துவதில் தாமதம் கடனை முன்கூடியே அடைத்துவிடுதல் போன்ற பல காரணங்கள் உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். 

உண்மையில், 750-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் உங்களுக்கு லோன் கிடைக்க 79 சதவிகித வாய்ப்புகள் உண்டு. எனவே ஒரு கடன் வாங்குவதற்கு முன் ஒரு முறை உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

எப்படித் தெரிந்துகொள்வது? 
அண்மையில், ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடனைப் பெற முயற்சித்த போது வங்கிப் பிரதிநிதி அந்த வாடிக்கையாளரின் சிபில் புள்ளிகளை ஆன்லைன் மூலமாக அறிந்து அவருக்குத் தெரிவிக்கவும் அவருடைய கடன் விண்ணப்பத்தை அனுமதியை அளிக்கவும் முடிந்தது.

ஆனால் இது எப்போதுமே சாத்தியமாகாது. ஏனென்றால் இது சரியான நடைமுறை அல்ல. நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இது இலவச சேவை இல்லை - நீங்கள் 500 ரூபாயை இதற்காகக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை தொடர்பு கொள்ளலாம்
https://www.cibil.com/online/credit-score-check.do 

இந்த இணையதளம் உங்களுடைய பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் தொலைபெசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்கும்.. அவற்றைக் கொடுத்துப் பின்னர்க் கட்டணத்தைச் செலுத்தலாம். 

அதன் பிறகு உங்கள் சிபில் தொடர்பான விவரங்கள் உங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். இது பொதுவாக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி விரைவாகக் கிடைத்துவிடும் 

நீங்கள் ஒரு வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதற்கான ஆவணங்களைத் தயார் செய்வதிலிருந்து அதற்குண்டான விதிமுறைகளுக்கு உங்களைத் தயார் செய்வது வரை நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். 

ஒருவேளை நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள முயலவில்லையென்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகலாம். 

எனவே உங்கள் சிபில் ஸ்கோரை முதலில் தெரிந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். ஒருவேளை உங்கள் ஸ்கோர் குறைவாக இருக்குமானால் உங்களுக்கு லோன் கிடைக்காது என்பதை இன்னொரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறோம். 

இல்லையென்றால், நீங்கள் ஒரு அதிகம் வட்டி விதிக்கும் ஒரு கடனையோ அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து கடனையோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில நிறுவனங்களும் நபர்களும் கடன் தொகை பெரியதாக இருந்தால் பயந்து ஒதுங்கிவிடக்கூடும். 

முடிவாக... ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உங்கள் சிபில் ஸ்கோரை கடன் வாங்குவதற்கு முன்பாகவே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயமல்ல. சில நிமிடங்களைச் செலவழித்தால் போதுமானது. பின்னர் வரும் சிக்கல்களைச் சமாளிக்க இது உதவியாக இருக்கும்.

நன்றி :குட்ரிட்டன்ஸ் » தமிழ் -11.01.2016


கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் 5 வழிமுறைகள்

சென்னை: மார்க்கெட் அருகில் உள்ள ஒரு பிரபலமான இடத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை அதனை பயன்படுத்தியவர் ஒருவர் கவனித்தார். அந்த இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்து 'ஸ்கிம்மர்' என்ற அம்சம் தான் அது. 


ஸ்கிம்மர் என்றால் என்ன?

ஸ்கிம்மர் என்பது நீங்கள் ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது இந்த ஸ்கிம்மர் உங்களுடைய அட்டை பற்றிய தகவல்களை எடுத்துக் கொள்ளும். இந்த தகவல்கள் வேறொரு வடிவத்தில் உங்களுடைய பணத்தை திருட பயன்படுத்தப்படும். 

மேலே படித்த விஷயத்தில், அந்த இயந்திரத்தை பயன்படுத்தியவர் உடனடியாக சம்மந்தப்பட்ட (Market Security) அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அந்த ஸ்கிம்மர் எவ்வளவு நாட்களாக தொடர்புடைய இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது என்றோ அல்லது எத்தனை கிரெடிட் கார்டுகளை பிரதி எடுத்திருந்தது என்றோ யாருக்கும் தெரியவில்லை!! மிகவும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்படும் வாடிக்கையாளர்களையும் கூட இந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகள் பயப்படுத்துகின்றன. 

நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டின் எண் வேறொருவரிடம் இருப்பது தெரிய வந்தால், உங்களுக்கு கார்டு வழங்கியவர்களுக்கு போன் செய்யவும், போலீஸாரிடம் தகவல்களை கொடுக்கவும் வேண்டும். ஆனால் இதற்குள்ளாக உங்கள் கார்டை வைத்திருப்பவர் அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே இங்கே தரப்பட்டுள்ள சில தவறான பயன்பாடுகளை தெரிந்து கொண்டு இது போன்ற ஏமாற்று வேலைகளிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பிக்க முயற்சி செய்யுங்கள்.

ஸ்கிம்மர்கள் இருப்பதை கண்டறியாமல் இருத்தல் 

உங்களுக்கான தனிநபர் அடையாள எண்ணை (PIN) கேட்கும் ஏடிஎம் அல்லது விற்பனை புள்ளிகளில் ஸ்கிம்மிங் கருவிகள் பொருத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் கார்டை தேய்க்கும் முன்னர் சற்றே கவனிப்பது நல்லது. 'ஏதாவது வெளிப்படையான அறிகுறிகள் தென்படுகிறதா என்று எப்பொழுதும் சோதித்துப் பார்ப்பது நல்லது. அதாவது பசை அல்லது உராய்வு ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளனவா என்றும் அல்லது தனிநபர் அடையாள எண்ணை அடிக்கும் இடத்தில் ஏதாவது அடையாளங்கள் உள்ளனவா என்றும் அல்லது நீங்கள் கார்டை சொருகும் இடத்தில் ஏதாவது அறிகுறிகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டியது அவசியமாகும்' என்கிறார் மனீஷா தாகோர். 



நீங்கள் அதிக ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களுக்குள் செல்லும் போது இந்த கவனத்தை சற்றே அதிகமாக காட்ட வேண்டும். ஏனெனில் இத்தகைய சூழலில் உள்ள இயந்திரங்களில் எளிதில் ஏதாவது ஒரு ஸ்கிம்மரை இணைத்து விட முடியும். உங்களுக்கு சந்தேகம் வந்தால் வேறு ஒரு ATM-ஐ பயன்படுத்துங்கள்.

இண்டர்நெட் மையங்களில் வங்கி பரிமாற்றம் செய்தல்

 நீங்கள் ஃபேவரிட்டாக சென்று வரும் இணையதள மையங்களில் வை-ஃபை வசதிகள் இருந்தாலும் கூட, அந்த இடங்களில் உங்களுடைய வங்கி பரிமாற்றங்களை செய்ய வேண்டாம். நீங்கள் ஓபன் வயர்லஸ் நெட்வொர்க்கை பயன்படுத்தினால், ஹாக்கர்ஸ் உங்களுடைய இணைய வழி பரிமாற்றங்களையும், கடவுச்சொற்களையும் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களையும் எளிதில் சேகரித்து விடுவார்கள். எனவே, 'உங்களுடைய வங்கி பரிமாற்றங்கள் அல்லது ஷாப்பிங் செய்ய இணையதள மையங்கள் சரியான இடம் இல்லை என்பதை புர்pந்து கொள்ளுங்கள்' என்று பிரபலமான பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிமான்டெக் (Symantec)-ஐ சேர்ந்த மரியான் மெர்ரிட் என்ற இணைய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிடுகிறார். 



நீங்கள் பயன்படுத்துவது HTTP மற்றும் HTTPS என எந்த வகை இணைய தளமாக இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தும் காஃபி ஷாப் அல்லது இணைய தள மையங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பது உங்கள் கையில் இல்லை. 'மேன் இன் தி மிடில்' என்ற வகை தாக்குதல்களின் மூலம் ஹாக்கர்கள் உங்களுடைய கடவுச் சொல், அட்டை எண் மற்றும் பிற தகவல்களை பொது நெட்வொர்க்கில் இருந்து எளிதில் எடுத்து விடுவார்கள். எனவே, காஃபி ஷாப் போனால் காஃபி மட்டும் குடியுங்கள், வங்கி கணக்கை பாதூகப்பாக வீட்டில் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிஷ்ஸிங் (Phishing) செய்திகளுக்கு பதில் அனுப்புதல் 

உங்களுடைய மொபைலுக்கு வந்துள்ள குறுஞ்செய்தியில், நீங்கள் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கிற்கு சென்று பார்க்குமாறும், இடையில் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தால், அங்கே உங்களுடைய பகுத்தறிவை சற்றே பயன்படுத்துங்கள். இதே போன்ற செய்திகள், முகநூல், டுவிட்டர் அல்லது பிற வகை தகவல் தொடர்பு ஊடகங்களின் வழியாகவும் வரலாம். 'அடையாளம் தெரியாத வகையில் எந்த ஒரு தொலைபேசி அழைப்போ, மின்னஞ்சலோ அல்லது சமூக வலைத்தள செய்தியோ வந்தால் அதை பிஷ்ஸிங் தாக்குதல்' என்று சொல்லலாம் என்று மாஸ்டர் கார்டு வேர்ல்டுவைடு அமைப்பின் பேமண்ட் சிஸ்டம் இன்டிகிரிட்டி பிரிவின் துணைத்தலைவர் எரிக் முய்லர் சொல்லுகிறார்.



 'இந்த செய்திகளை சந்தேகக் கண்ணுடனேயே அணுகுங்கள், குறிப்பாக அவை உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஏதாவதொரு இணைய தளத்திற்கு தொடர்பு கொள்ளச் சொல்லியோ வரும் போது' என்கிறார் அவர். ஏனெனில், இந்த பிஷ்ஸிங் தகவல்களுக்கு பதிலாக நாம் சரியான தகவல்களை அனுப்பினால், எந்த ஒரு பிஷ்ஸிங் அனுப்பிய நபரும் எளிதில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தகிடுதத்தங்கள் செய்து விடுவார். உங்களுக்கு வந்த செய்தி சரியானது என்றோ அல்லது சந்தேத்தை தூண்டுவதாகவோ, இருந்தால் உங்களுக்கு கார்டு வழங்கிய நிறுவனத்தினருடைய வாடிக்கையாளர் மைய எண்ணுக்கு (அட்டையின் பின்பகுதியில் இருக்கும் தொடர்பு எண்) உடனடியாக தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்.

உரிமைகள் மற்றும் கடமைகளை மறுத்தல்

 நீங்கள் உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டை தொலைத்து விட்டாலோ, திருடப்பட்டு விட்டதாக சந்தேகப்பட்டாலோ அல்லது உங்களுடைய அட்டை எண்ணை யாரோ ஒருவர் இணையத்திலிருந்து எடுத்து விட்டதாகவோ நீங்கள் நினைத்தால், உடனடியாக கார்டை வழங்கியவருக்கு தகவல் கொடுங்கள். 



இந்த வகை ஏமாற்று வேலைகளிலிருந்து விடுபட கிரெடிட் கார்டுகள் மிகவும் அதிகமான பாதுகாப்பை கொடுக்கின்றன. பெரும்பாலான கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஜீரோ-லையபிலிட்டி ஃப்ராட் பாதுகாப்புகளை (Zero-Liability Fraud Protection) வழங்குகின்றன. மேலும், உங்களுயை அட்டை தொலைந்து விட்டது அல்லது திருடப்படடு விட்டது என்று நீங்கள் ஒருமுறை தகவல் தெரிவித்து விட்டால் போதும், 

அதன் பின் அந்த கார்டு மூலம் நடக்கும் எந்தவிதமான பரிமாற்றங்களுக்கும் சட்டப்படியாகவே நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். இந்த வகையான பரிமாற்றங்களுக்கு அதிகபட்ச வரம்புகளும் சட்டப்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரையிலும் உங்களுடைய உரிமைகளும், கடமைகளும் மாறுபட்டிருக்கின்றன. உங்களுடைய டெபிட் கார்டுகளுக்கு ஜீரோ-லையபிலிட்டி ஃப்ராடு பாதுகாப்பு இருந்தாலும், தனிநபர் அடையாள எண் அல்லது ஏடிஎம் பரிமாற்றங்களுக்கு இந்த விதி பொருந்துவதில்லை. டெபிட் கார்டு பரிமாற்றங்களுக்காகவே சில பிரத்யோகமான சட்ட விதிகள் இயற்றப்பட்டுள்ளன. 

யாராவது ஒருவர் உங்களுடைய டெபிட் கார்டை பயன்படுத்தி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டு பொருட்களை வாங்கும் போது, நீங்கள் அது தொலைந்து போன தகவலை தெரிவிக்காமல் இருந்தால் முழுப்பொறுப்பும் உங்களையே சேரும். மேலும், 60 நாட்களுக்குள்ளாக நீங்கள் தகவல் அளிக்காவிட்டால் உங்கள் கதி அதோகதி தான். இது மட்டுமல்லாமல், உங்களுடைய அட்டையத் திருடியவர், உங்கள் கணக்கை முழுமையாக சுரண்டி விட்டால், உங்கள் வங்கி விதிக்கும் அபராதத்தைக் கூட உங்களால் கட்ட முடியாது.

இலவசமான ஃப்ராடு பாதுகாப்பை பயன்படுத்தாமல் இருத்தல்

 எண்ணற்ற கார்டு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இலவசமாகவே ஃப்ராடு பாதுகாப்புகளை வழங்கி வருகின்றன. இதற்கு சிறிதளவு விசாரணையோ அல்லது பதிவு செய்து கொள்ளவோ வேண்டும். 

உதாரணமாக, விஸா அட்டை வைத்திருப்பவர்கள் இணைய வழியாக வர்த்தக பரிமாற்றங்கள் செய்யும் போது, வெரிஃபைடு பை விஸா (Verified-by-Visa) என்ற திட்டத்தின் படி அவர்கள் மற்றொரு இரகசிய கடவுச் சொல்லை டைப் செய்ய வேண்டியிருக்கும். 

அதே போல தான் மாஸ்டர் கார்டு செக்யூர் கோடு (MasterCard SecureCode) என்ற கடவுச் சொல்லும் மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்காக செயல்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்துபவர், 



இணைய வழியில் வர்த்தகத்தை முடிக்கும் போதும் சரியான தனிநபர் அடையாள எண்ணை டைப் செய்ய வேண்டும் என்று கேட்கும். மற்றுமொரு வழிமுறை : சிட்டிப பேங்க் அல்லது பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்றவை இவ்வகையான இணைய வழி பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவோ 'விர்ச்சுவல்' கிரெடிட் கார்டுகள் அல்லது ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. 

இவற்றை ஒருமுறை பயன்படுத்தி விட்டால், மறுமுறை பயன்படுத்த முடியாது. எனவே, இந்த கார்டுகளை எங்கே தேய்த்தோம் அல்லது யார் எனது பணத்தை திருடுவது என்று பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இலவசமான கணக்கு எச்சரிக்கை தகவல்கள் கொடுக்கும் வசதிகளில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகளிலிருந்து தப்பிக்க முடியும். இந்த வசதிகளில் பதிவு செய்து கொள்வதன் மூலமாக எந்தவிதமான பரிமாற்றங்கள் அல்லது மாற்றங்கள் உங்களுடைய அட்டைகளைக் கொண்டு செய்யப்பட்டாலும், அல்லது ஒரு டாருக்கும் அதிகமாகவோ அல்லது வெளிநாடுகளில் பொருட்களை வாங்கினாலோ அந்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாக வந்து விடும். 

உங்களுக்கு கார்டு வழங்கும் நிறுவனத்தினர் இது போன்ற திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்களா அல்லது பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அவர்களுடைய இணைய தளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மார்கெட்டில் நடமாடும் ஸ்கிம்மர்கள்

 வாசகரின் வேண்டுகோள் ஏற்று, சில ஸ்கிம்மர்களை நாங்கள் கண்டறிந்தோம். .



உங்கள் பார்வைக்காக படத்தில் காண்பித்துள்ளோம். இனி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது இனி உஷாராக இருக்கவும்

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 17.01.2014

மாதச்சம்பளத்தில் குறிப்பிடும் CTC என்றால்


மாதச்சம்பளத்தில் குறிப்பிடும் CTC என்றால் என்ன என்று தெரியுமா?

நீங்கள் மாத சம்பளம் பெறுபவரா? உங்களுடைய வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள CTC என்ற மாத சம்பளத்திற்கும், உங்கள் கையில் கிடைக்கும் உண்மையான தொகையை பார்க்கும் போது, சற்று வருத்தப்பட்டதுண்டா?? 

உங்களின் வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள தொகைக்கும் (CTC), நீங்கள் இறுதியாக கையில் பெறும் தொகைக்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உங்களை யோசிக்க வைத்திருக்கும்.

நிறுவனம்
இந்த ஏமாற்றத்திற்காக உங்களுடைய கம்பெனியை குறை சொல்லி எந்த பலனும் இல்லை. 
ஆனால், CTC என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாமல் போனது நம்முடைய தவறுதான்.

CTC (cost to company) என்றால் என்ன? 
CTC என்பது அதன் பெயரைப் பொறுத்தே விளங்கும். அதாவது உங்களை பணிக்கு அமர்த்துவதால் அந்நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது என்பது தான் இதன் விளக்கம். இவை மட்டுமல்லாமல், சில நேரங்களில் போனஸ் போன்றவைகளும் நன்மதிப்பிற்காக சேர்க்கப்படலாம். உங்களுடைய சேமநல நிதி (PF) உட்பட எல்லா வகையான கணக்குகளையும் உள்ளடக்கி இருப்பது தான் CTC ஆகும்.

20 சதவீத சம்பளம் 
நீங்கள் புதிய நிறுவனத்தில் அல்லது முதல் முறையாக நிறுவனத்தில் மாத வருமானம் பற்றி விவாதிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வரி, சேமநல நிதி போன்றவைகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எப்படி குறைகிறது? 
ஒரு எடுத்துக்காட்டு மூலம் இதைக் கணக்கிடுவோம். 
இப்போது அஜய் என்பவரின் ஊதியத்தைக் கணக்கிடுவோம். 
அடிப்படை ஊதியம் (Basic Salary) - ரூ.300,000 
வீட்டு வாடகை படி (HRA) - ரூ.60,000 
மருத்துவ பதிலீடு (Medical Reimbursement) - ரூ.15,000 போக்குவரத்து படி (Conveyance) - ரூ.8,000 
ஆண்டுக்கான மொத்த ஊதியம் (CTC Per Annum) - ரூ.3,83,000 
(மாத சம்பளம் ரூ.31,917)

பிடித்தங்கள்
அடிப்படை ஊதியம் மற்றும் 
வீட்டு வாடகை படியில் வரி - ரூ.11,000 
தொழிலாளர் சேமநல நிதி 
(அடிப்படை ஊதியத்தில் 12%)(EPF) - ரூ.36,000 
மருத்துவ காப்பீடு (Medical Insurance) - ரூ.4000
தொழில் வரி (Professional Tax)- ரூ.3600 
நிகர வருமானம் (Net Salary per Annum) - ரூ.3,39,400 (நிகர மாதாந்திர வருமானம் (Net Salary Per Month- ரூ.28,283) இந்த 28,283 ரூபாய் தான் உங்களது takehome salary.

வித்தியாசம் 
மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து CTC-க்கும் கையில் பெறும் ஊதியத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.

வருமான வரிச் சலுகை 
எனவே, நீங்கள் ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படும் போது, எந்தெந்த வகையில் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உங்களுக்கு சேமநல நிதி வேண்டாம் என்று சொல்ல முடியும். அந்த வகையில் வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் பெறும் வரி சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது.

வரி மற்றும் மருத்துவ காப்பீடு 
வரிகளையும் மற்றும் கூட்டு மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களையும் உங்களால் தவிர்க்க முடியாது. எனவே, உங்களுடைய ஊதியத்தைப் பற்றி மிகவும் கவனமாக விவாதிப்பதும் மற்றும் பல்வேறு வகையான பிடித்தங்களை புரிந்து கொள்வதும் அவசியமானதாகும்.

கூப்பன்கள் 
சில நிறுவனங்களின் பணியாளர்கள் பணத்திற்கு பதிலாக சலுகை கூப்பன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களுடைய கையில் கிடைக்கும் ஊதியத்திலிருந்து வரி பிடித்தம் செய்யப்படுவது குறைகிறது. 

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் - 13.10.2015

கோவிலுக்குச் செல்வது எதற்காக


கோவிலுக்குச் செல்வது எதற்காக என்று தெரியுமா?

கோவிலுக்கு செல்வது பற்றிய விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள்! 

வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இந்த நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற இந்து கோவில்கள் உள்ளது. பெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். 

இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து வைத்துள்ளனர். இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்! கோவில்களுக்கு செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது, 

இத்தகைய புனிதமான இடங்களில் கிடைக்கும் நேர்மறையான ஆற்றல் திறன்கள் அனைத்தையும் உறிஞ்சிடவே. மேலும், நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் முனைப்புடன் செயல்படும் போது மட்டுமே இந்த நேர்மறையான ஆற்றல் உறிஞ்சப்படும். அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!! இந்த ஐம்புலன்கள் கோவிலுக்குள் உள்ள எண்ணிலடங்கா செயல்கள் மூலம் தூண்டப்படலாம். 

அதனால் இந்து சமயத்திரு நூல்களின் படி, கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான காரணத்தைப் பற்றி பார்க்க போகிறோம்.

கோவிலின் கட்டமைப்பு & இருப்பிடம் - பின்னணியில் உள்ள காரணம்

எப்போதுமே அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல் திறன்களால் சூழப்பட்டுள்ள இடத்தில் கோவிலின் இருப்பிடம் இருக்கவே விருப்பப்படுகிறது. வடக்கு இறுதியில் இருந்து தெற்கு இறுதிக்கு காந்த மற்றும் மின்சார அலைகள் சுலபமாக பாயும் இடம் தான் கோவிலுக்கான சிறந்த இடமாகும்.

கடவுளின் சிலை 

கோவிலின் இதயப்பகுதியான மூலஸ்தானம் அல்லது கர்ப்பகிரகத்தில் தான் கடவுளின் சிலை வைக்கப்படும். மூலஸ்தானத்தில் தான் பூமி அதிகபட்சமான காந்த அலைகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சிலையை வைத்த பிறகு தான் கோவிலின் கட்டமைப்பு எழுப்பப்படும்.
வெறும் காலுடன் கோவிலுக்குள் நுழைவதற்கு  காரணம் 

பழங்காலத்தில், நேர்மறை ஆற்றல்களின் சிறந்த கடத்தியாக இருக்கும் விதத்திலான தொழில்நுட்பத்தில் கோவில்களின் தரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் திறன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதம் வழியாக அவர்களுக்குள் ஊடுருவும். அதனால் தான் கோவிலுக்குள் வெறும் காலுடன் செல்ல சொல்கிறார்கள். 

கோவில் மணியை அடிப்பதற்கான காரணம் 

கோவிலுக்குள் நுழையும் போதெல்லாம், மூலஸ்தானத்திற்குள் நுழைவதற்கு முன்பாக கோவில் மணியை அடிக்க சொல்வார்கள். இந்த மணி எழுப்பும் ஒலி உங்கள் கேட்கும் திறனை முனைப்பாக்கும். கோவில் மணியை அடிக்கும் போது, அது கூர்மையான ஒலியை எழுப்பும். அது ஏழு வினாடிகளுக்கு எதிரொலிக்கும். உங்கள் உடலில் உள்ள ஏழு ஹீலிங் மையங்களை முனைப்பாக்க இந்த 7 வினாடி காலம் போதுமானது.

சாமி சிலை முன் கற்பூரம் காட்டுவதற்கான காரணம் 

கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான காரணத்தைப் பார்க்கும் போது, கடவுள் சிலைக்கு முன் கற்பூரம் ஏற்றும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும். இருட்டான கோவிலுக்குள் சாமி சிலை முன்பு கற்பூரம் ஏற்றுவதனால், உங்களது பார்வை உணர்வு முனைப்பாகும். மேலும் அதுவே அதற்கான காரணமாகும்.

தீபாராதனை தட்டில் உங்கள் கைகளை ஒத்தி எடுப்பது எதற்காக? 

தீபாராதனை காட்டும் போது, கற்பூரம் ஏற்றப்பட்டுள்ள தட்டில், கைகளால் ஒத்த எடுப்போம். பின் கைகளால் கண்களை ஒத்திக் கொள்வோம். இதனால் வெதுவெதுப்பான உங்கள் கைகள் கண்களின் பார்க்கும் உணர்வை முனைப்பாக்கும்.

கடவுள் சிலைக்கு மலர்களால் அர்ச்சனை செய்வதற்கான காரணம்

பூக்கள் என்பது மென்மையாகவும், தூய்மையானதாகவும், நல்ல நறுமணத்துடனும் இருக்க கூடியவை. அதனை நாம் கோவிலில் உள்ள கடவுளுக்கு படைக்கிறோம். இருப்பினும், திடமான நறுமணத்தை கொண்ட சில மலர்களை மட்டுமே கடவுளுக்கு அர்பணிக்க முடியும். உதாரணத்திற்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்றவைகள். பூக்களின் நறுமணம், ஊதுபத்தி மற்றும் கற்பூரத்தின் நறுமணம் ஒன்றாக சேர்ந்து உங்களின் வாசனை உணர்வை முனைப்பாக்கும்.

தீர்த்தம் குடிப்பதற்கு பின்னணியில் உள்ள காரணம் 

கடவுளுக்கு பூஜைகள் செய்து முடித்த பிறகு, பக்தர்களுக்கு நீர் வடிவிலான தீர்த்தம் பிரசாதமாக அளிக்கப்படும். நெய், பால் மற்றும் தயிரை கொண்டு இது செய்யப்படும். தீர்த்தத்தை செப்பு அல்லது வெள்ளி பாத்திரத்தில் தான் பொதுவாக வைத்திருப்பார்கள். நம் உடலில் உள்ள 3 வகையான தோஷங்களை சமநிலையுடன் வைத்துக் கொள்ளவே தீர்த்தத்தை செப்பு பாத்திரத்தில் வைக்கிறார்கள். இது உங்கள் சுவை உணர்வை முனைப்பாக்கும்.

மூலஸ்தானத்தைச் சுற்றி வருவதற்கான காரணம் 
பிரார்த்தனை முடிந்த பிறகு, மூலஸ்தானத்தை சுற்றி 8-9 முறை கடிகார திசையில் சுற்றி வர வேண்டும். இப்படி சுற்றி வருவதால், உங்கள் உடல் கோவிலுக்குள் இயங்கி கொண்டிருக்கும் ஒட்டுமொத்த நேர்மறையான ஆற்றல் திறன்களையும் உறிஞ்சிவிடும். இதனால் உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கும்.

போல்ட் ஸ்கை » தமிழ் » 12.01.201
6

கைக்குழந்தைகளின் திடீர் அழுகை


கைக்குழந்தைகளின் திடீர் அழுகைக்கு காரணம் என்ன?

பால் கொடுக்கும் தாய்மார்கள், எதை தின்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பலகாரங்கள், புளித்த, பழைய உணவு பொருட்கள், பாக்கெட் உணவுகளை சாப்பிட்டால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமையால், அடிக்கடி வாந்தி வர வாய்ப்புள்ளது. 

பொதுவாக, கிராமங்களில் பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை, குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள்.மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் செய்வர்.

இதில், பலனில்லை என்கிற பட்சத்தில் மட்டுமே, மருந்து, மாத்திரைகள் கொடுப்பர். ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கான, பாட்டி மருத்துவ குறிப்புகள் இதோ: பிறந்த குழந்தைகளின் தலையில், நல்லெண்ணெய் தேய்க்கக்கூடாது. அதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் காய்ச்சி, அதோடு ஒரு ஸ்பூன் தேங்காய் பால் விட்டால், படபடவென்று கொதிக்கும் சத்தம் வரும்.

இதோடு, கஸ்தூரி பொடியை சேர்த்து இறக்கிய பின், தேய்த்து குளிப்பாட்டலாம். எண்ணெய் பிசுக்கு போக, பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டலாம். இப்படி செய்வதால், சொறி, சிரங்கு உள்ளிட்ட, தோல் வியாதிகள் வராது.

.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது, தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் மிளகு மற்றும் பூண்டை இடித்து போட்டால், நல்ல வாசனை வரும். இந்த எண்ணெயை தேய்த்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது.

ஐந்து மாதத்திற்குட்பட்ட குழந்தை அழுதால், வயிறு வலியாக கூட இருக்கலாம். இதற்கு, கடுக்காயை நன்கு அரைத்து, வயிறு பகுதியில் பூச வேண்டும். பின், ஒரு வெற்றிலையை விளக்கில் காட்டி, இளம் சூடு பதத்தில், தொப்புளில் போடலாம். இரு நிமிடத்தில், வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.


ஆறு மாதக்குழந்தைக்கு, பத்து நாட்களுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் என, அனைத்தையும் அரைத்து, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு கொடுத்தால், வாயுத்தொல்லை இருக்காது.

குழந்தைகளுக்கு வாயில், வெள்ளை நிறத்தில் மாவு போல் படிந்தால், சரிவர பால் குடிக்க மாட்டார்கள். அதற்கு, மாசிக்காயை உரசி நாக்கில் தடவ வேண்டும்.

அடிக்கடி வாந்தியெடுக்கும் குழந்தைகளுக்கு, வசம்பை சுட்டு பொடி செய்து, ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவ வேண்டும். இதனால்தான், வசம்புக்கு பிள்ளை வளர்ப்பான்னு பேரே உண்டு.

இப்படி, சின்ன சின்ன கை வைத்தியங்களை செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.



ஆங்கில மருந்துகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் கொடுத்தால், விஷமாகிவிடும். சாதாரண சளிக்கே, அடிக்கடி மருந்துகளை மாற்றி மாற்றி கொடுப்பது, பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தலாம்.

By vayal on 

எந்தக் காய்கறியில் என்னென்ன சத்துக்கள்


எந்தக் காய்கறியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது?


இயற்கை டாக்டர் காய்கறி கைடு!


நாக்குக்கு அடிமையாகிப்போன தலைமுறை நாம். பெரியவர்களேகூட குழந்தைகளைப் போல ‘எனக்கு பீட்ரூட் பிடிக்காது’, ‘பாகற்காய் பிடிக்காது’ என்கிறார்கள். பிடிக்கும், பிடிக்காது என்பதைவிட, காய்கறி உடலுக்கு மிகவும் நல்லது, அவசியமானது என்ற எளிய புரிதல் இருந்தால் போதும், ஆரோக்கியத்துக்கு நம்மைப் பிடித்துவிடும். `தினசரி உணவில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்’ என்கின்றனர் மருத்துவர்கள். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடல்பருமன், சர்க்கரைநோய், இதய நோய்கள் உள்ளிட்டவற்றைத் தடுக்க முடியும்.

இன்றைக்குக் கிடைக்கும் காய்கறிகள், பூச்சிமருந்து, ரசாயன உரங்கள் கொண்டவையாக இருக்கின்றன. காய்கறிகளை உப்பு, மஞ்சள், புளி கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவிட்ட பின் அலசி, பாதுகாப்பான முறையில் சமைத்துச் சாப்பிட்டால், அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் குறையும். 

இன்சுலின் ஊசி, கசப்பு மிகுந்த மாத்திரை, மருந்துகளைவிட பாகற்காயும் வாழைப்பூவும் எவ்வளவோ சிறந்தவை. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பலன் அறிந்து சாப்பிட்டாலே, நோய்கள் நம்மை நெருங்காது. நீர்க் காய்கள், நார்க் காய்கள், மாவாக இருக்கும் கிழங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. அதுபோலவே அதன் பலன்களும் ஒவ்வொரு விதம். எந்தக் காயில், என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவற்றின் பலன்கள் என்னென்ன என விளக்குகிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.

தக்காளி

 

வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.

ஆல்பா-டொமாட்டின் (Alpha-tomatine) என்ற சத்து, ப்ராஸ்டேட், வயிறு, நுரையீரல், மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

லைகோபீன், இதய நோய்களைத் தடுக்கும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

பார்வைத்திறனை மேம்படுத்தும்.

உடல் எடை குறைய உதவும்.

ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும்.

பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

இயற்கையான ஆன்டிசெப்ட்டிக் இது.

சருமம் பொலிவு பெறும்.

வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

பாகற்காய்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

கல்லீரலைப் பலப்படுத்தும்.

இளநரை வராமல் தடுக்கும்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சரும நோய்களைக் குணமாக்கும்.

மாரடைப்பைத் தடுக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

கொழுப்பைப் படியவிடாது.

தொற்றுநோய்களைப் போக்கும்.

பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.

மூலநோய் பிரச்னை இருப்போர், வாரம் இருமுறை சாப்பிடலாம்.

ரத்தத்தைச் சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்புழுக்களை நீக்கும்.

காளான்



சிறுநீரகத்துக்கு நல்லது.

எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அசைவத்தில் இருக்கும் சத்துக்கள் இதில் உள்ளன.

உடல் எடையைக் குறைக்க உதவும்.

ரத்தசோகையைப் போக்கும்.

இதய நோய்களைத் தடுக்கும்.

நரம்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும்.

மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கும்.

மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பைச் சீராக்கும்.

டைப் 2 சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டுவர, இன்சுலின் சுரப்பு சீராகும்.

பீட்டாகுளுகன், நார்ச்சத்து இருப்பதால், சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும்.

ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸைத் தாமதப்படுத்தும்.

கேரட்



வைட்டமின் ஏ, சி, கே, பி8, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.

பார்வைத்திறனை அதிகரிக்கும்.

கொழுப்பைக் கரைக்கும்.

சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

எலும்பு, பற்களுக்கு நல்லது.

கல்லீரலைப் பலப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சருமப் பொலிவு மேம்படும்.

வயிற்றுப்புண்கள் குணமாகும்.

செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

நுரையீரல், ப்ராஸ்டேட், பெருங்குடல், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

இதில் உள்ள தாதுஉப்புக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், உமிழ்நீரை சீராகச் சுரக்கச்செய்து, பற்சொத்தை வராமல் தடுக்கும். ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தும்.

முள்ளங்கி



சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.

மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.

மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.

ரத்தத்தில் உள்ள பிலுருபினை சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும்.

மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும்.

ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள், தொண்டை எரிச்சல், தொற்று, அலர்ஜி சரியாகும்.

சிகரெட்டால் பாதித்த நுரையீரலைச் சரிசெய்ய உதவும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்.

வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெங்காயம்

பற்சிதைவைப் போக்கும்.

சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

வறண்ட தொண்டை, இருமலைச் சரிசெய்யும்.

எலும்பு மெலிதலைத் தடுக்கும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

ரத்தசோகையைக் குணமாக்கும்.

தசைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

மாதவிலக்கை சீராக்கும்.

வெங்காயத்தில் உள்ள குரோமியம், ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். கந்தகம், தோல் நோய்களைப் தடுக்கும்.

`குவர்சிடின்’ என்ற ஃப்ளேவனாய்டு இருப்பதால், புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

காஸ்ட்ரிக் அல்சர் வராமல் காக்கும்.

ஆன்டிசெப்டிக், ஆன்டிபயாடிக், ஆன்டி மைக்ரோபயல் தன்மை கொண்டிருப்பதால், தொற்றுக்கள் வராமல் காக்கும்.

பரங்கிக்காய்



கிட்டப்பார்வை, தூரப்பார்வையைச் சரிசெய்யும்.

புற்றுநோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

உடல் எடை அதிகரிக்க உதவும்.

தசைகள் வலுவாகும்.

நல்ல உணர்வுகளை உண்டாக்கும்.

பெப்டிக் அல்சரை சரிசெய்யும். ப்ராஸ்டேட் வீக்கத்தைச் சரிசெய்யும்.

உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

பொலிவான சருமம் கிடைக்கும்.

இதய நோய்களைத் தடுக்கும்.

நல்ல உறக்கத்தைத் தரும்.

கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.

உடல் எடை அதிகரிக்க, இதைச் சாப்பிடலாம்.

இனப்பெருக்க உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

வெண்டைக்காய்



ஃபோலிக் ஆசிட் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

உடல் எடையைக் குறைக்கும்.

வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பார்வைத்திறனை அதிகரிக்கும்.

ரத்தசோகையைத் தடுக்கும்.

வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கலை சரிசெய்யும்.

ஆஸ்துமாவின் வீரியத்தைக் குறைக்கும்.

வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் உள்ளதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

பீட்ரூட்

நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன.

மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

ரத்தசோகையைக் குணமாக்கும்.

சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடலாம்.

பீட்டாசயனின் இதில் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

ரத்தத்தை சுத்திகரிக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

செரிமானப்பாதையை ஆரோக்கியப்படுத்தும்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

எலும்பு அடர்த்திக் குறைதல் நோயைத் தடுக்கும்.

ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும்.

கணையம், மார்பகம், ப்ராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும்.

இதில் உள்ள நைட்ரிக் அமிலம் பிராணவாயுவை சீராக்கி, ரத்தஓட்டத்தை மேம்படுத்தும்.

மறதி நோயைத் தவிர்க்கும்.

சேப்பக் கிழங்கு


வைட்டமின் ஏ, இ இருப்பதால், சருமத்துக்கு நல்லது.

சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்கு நல்லது.

பால் ஊட்டும் தாய்மார்களுக்கு நல்லது.

உடல் எடையை அதிகரிக்கும்.

நச்சுக்களை வெளியேற்றும்.

மூப்பினால் பார்வைக்குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும்.

தசைகள், எலும்புகள் வலுவாகும்.

உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

வைட்டமின் ஏ, சி, இ, ஃபோலேட், மக்னீசியம், காப்பர் நிறைந்துள்ளன.

சருமப் புண்கள், காயங்கள், சருமத் தொல்லைகள் தீர, இதைச் சாப்பிடலாம்.

வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும். மூட்டுவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

அமினோ ஆசிட், ஒமேகா 3 சத்துக்கள் இருப்பதால், இதய நோய்கள் வராமல் காக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு



வைட்டமின் பி6, சி, டி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன.

கார்டினாய்டு, பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ இருப்பதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

தைராய்டு சுரப்பியின் இயக்கத்தைச் சீராக்கும்.

ரத்த செல்கள் உருவாக உதவும்.

எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

பளபளக்கும் சருமத்தைப் பெறலாம்.

உடல் எடை கூடும்.

சர்க்கரை நோயாளிகள் அளவாகச் சாப்பிடலாம்.

மாரடைப்பு வராமல் தடுக்கும்.

சருமத்துக்குத் தேவையான இழுதன்மை (Elasticity) அதிகரிக்கும்; சருமம் அழகாகும்.

செரிமானப்பாதைக்கு நன்மையைச்செய்யும்.

உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

உருளைக் கிழங்கு


வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் இருப்பதால், சருமத்துக்கு நல்லது.

கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன.

செரடோனின், டோபோமைன் உள்ளதால், மனம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

தீக்காயங்களைச் சரிசெய்யும்.

மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும்.

மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை கூடும்.

செரிமான சக்திக்கு உதவும்.

மூளை வளர்ச்சிக்கு உதவும்.

புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்.

எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

மூளை செல்களைத் தூண்டி, புத்துயிர் பெறச் செய்யும்.

அதிகமாக வியர்ப்பவர்கள் அவசியம் சாப்பிட நல்லது.

உதடுவெடிப்பு, ரத்தம் கசியும் ஈறுகள், வைரல் தொற்று, ஸ்கர்வி நோய்கள் சரியாகும்.

குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டிய உணவு.

வாழைப்பூ



இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகையைக் குணமாக்கும்.

அல்சர் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

மலச்சிக்கலைத் தீர்க்கும்.

மக்னீசியம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

கர்ப்பப்பை நோய்களைச் சரிசெய்யும்.

மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியைத் தடுக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டுவர, பால் அதிகமாகச் சுரக்க உதவும்.

கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

சுவாசப்பாதை சீராகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

காலிஃபிளவர்



கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்.

ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

செரிமானப்பாதையைச் சீர்செய்யும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.

தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

நினைவுத்திறனை அதிகரிக்கிறது.

எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்துகிறது.

சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும்.

மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும்.

பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், நாள்பட்ட நோய்களின் தீவிரம் குறையும்.

முருங்கைக்காய்



வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைத்திறன் அதிகமாகும்.

வறண்ட தொண்டையைச் சரிசெய்யும்.

சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

கால்சியம் உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கு உதவும். ஆண்மையைப் பெருக்கும்.

நுரையீரல் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது. குழந்தையின்மை, இனப்பெருக்கக் குறைபாடுகள் குணமாக வாய்ப்புகள் அதிகம்.

தொற்றுக்கள் உருவாவதைத் தடுக்கும்.

இதனை சூப்வைத்துக் குடிக்க, சுவாசம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும்.

கத்திரிக்காய்



டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும்.

பைட்டோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்பைக் கரைக்கும்.

புற்றுநோய் வராமல் காக்கும்.

இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தைச் சமன்படுத்தும்.

மூளைச் செல்களைப் பாதுகாக்கும்.

இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும்.

முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஜீரணசக்தியை மேம்படுத்தும்.

குடமிளகாய்



வைட்டமின் ஏ, பி6, சி, கே, நார்ச்சத்து நிறைந்துள்ளன.

மூட்டு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

மெனோபாஸின் தொல்லைகளை ஓரளவுக்குக் குறைக்கும்.

பெப்டிக் அல்சரை சரிசெய்யும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

பாதித்த மூளை செல்களைச் சரிசெய்யும்.

சருமத்தின் ஆரோக்கியத்தைக் கூட்டும்.

மன அழுத்தம், இதய நோய்களை வராமல் செய்யும்.

வைட்டமின் சி இருப்பதால், பளபளப்பான சருமம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்பு தொடர்பாக ஏற்படும் வலிகள் சரியாகும்.

உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சீராகும்.

இரைப்பை தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும்.

முட்டைகோஸ்



உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.

வைட்டமின் பி6, சி, கே நிறைந்துள்ளன.

இதில் உள்ள பீட்டாகரோட்டின் பார்வைத்திறனை மேம்படுத்தும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், புற்றுநோயைத் தடுக்கும்.

கவனச்சிதறல்களைச் சரிசெய்யும்.

மூட்டுவலிகளைச் சரிசெய்யும்.

அல்சரைத் தடுக்கும். செரிமான உறுப்புகளைச் சீராக்கும்.

ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

சல்ஃபர் இருப்பதால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

மூளைக்கான உணவுப்பட்டியலில் அவசியம் இருக்க வேண்டியது இது.

நூல்கோல்



வைட்டமின் ஏ, சி, இ, பீட்டாகரோட்டின், நார்ச்சத்து நிறைவாக உள்ளன.

கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன.

மாரடைப்பைத் தடுக்கும்.

புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்; வராமல் தடுக்கும்.

நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

செரிமானத்தைத் தூண்டும்.

எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

கலோரிகள் குறைவு, உடல் எடை அதிகரிக்காது.

உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும்.

வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், மாங்கனீசு போன்றவை செல்களில் உள்ள ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தைத் குறைக்கும்.

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை ஆஸ்துமா பிரச்னையைக் குறைக்கும்.

பச்சைப் பட்டாணி



வைட்டமின் சி, பி, கே நிறைந்துள்ளன.

புரதம், நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.

மறதி நோய் வராமல் காக்கும்.

சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

இதயத்தைப் பாதுகாக்கும்.

எனர்ஜி கொடுக்கும் சிறப்பான உணவு இது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சமன்செய்யும்.

லூட்டின் சத்து இருப்பதால், கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, முதல் திட உணவாகத் தரலாம்.

சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

செரிமான மண்டலம் மேம்படும்.

அவரைக்காய்



வைட்டமின்கள் ஏ, சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளன.

இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும்.

புதிய செல்கள் உருவாக உதவும்.

கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய நோய்களைத் தடுக்கும். சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.

நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் தீரும்.

கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்கள் கிடைக்கின்றன.

வைட்டமின் சி நிறைந்துள்ளதால், புற்றுநோய் வராமல் காக்கும்.

பீன்ஸ்


நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீசு உள்ளன.

ரத்தம் உறையாமல் பாதுகாக்கும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்.

இரும்புச்சத்தைக் கிரகிக்கும்.

ஒருநாளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்களைத் தரும்.

வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும்.

இரைப்பை பிரச்னைகளைச் சரிசெய்யும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

செரடோனின், டோபோமைன் போன்ற நல்ல ஹார்மோன்களின் உற்பத்தியைச் சீராக்கும்.

உடைந்த எலும்புகள் விரைவில் சேர உதவும்.

கர்ப்பிணிகள் சாப்பிட, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

மனம் தொடர்பான பிரச்னைகளின் தீவிரம் குறைய உதவும்.

புரோகோலி



நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கொழுப்பைக் குறைக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும்.

கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்யும்

இளநரையைத் தடுக்கும்.

மூளையின் திறனை அதிகரிக்கும். அல்சைமரைத் தடுக்கும்.

ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

ஆரம்ப நிலை மார்பகப் புற்றுநோயைக் குணமாக்க உதவும்.

உணவுக்குழாய், ப்ராஸ்டேட், கணையப் புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகள் குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

இஞ்சி


வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும்.

மலச்சிக்கலைப் போக்கும்.

ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும்.

சளி, தும்மல், இருமலைக் கட்டுப்படுத்தும்.

நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும்.

சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

உடல் எடையைச் சீராகவைத்திருக்க உதவும்.

மாதவிலக்கு வலியைக் குறைக்கும்.

சிறந்த நச்சுநீக்கியாகச் செயல்படும்.

இஞ்சியில் ‘ஜிஞ்சரால்’ எனும் சத்து இருக்கிறது. இது, செரிமானமண்டலத்தைச் சீர்செய்கிறது. மைக்ரேன் தலைவலியைப் போக்கும்.

இஞ்சியில் வைட்டமின் இ, மக்னீசியம் நிறைந்துள்ளன. தினமும் ஏதாவது ஒருவகையில் இஞ்சியைச் சமையலில் சேர்த்துவருவது நல்லது.

வாந்திக்கு, இஞ்சி சிறந்த நிவாரணி. பசியின்மை, ஏப்பம் போன்றவற்றையும் சரிசெய்யும்.

பூண்டு


ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எலும்புகளை உறுதியாக்கும்.

மறதி நோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

வைட்டமின் சி, பி6, மாங்கனீசு நிறைந்துள்ளன.

குடலில் ஏற்படக்கூடிய தொற்றுகளைத் தடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

உடலில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றும்.

உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

பல் வலியைக் குறைக்கும். டான்ஸில்ஸ் பிரச்னை குணமாகும்.

கபம், வாதம் போன்றவை அதிகரிக்கும்போது, பூண்டு சாப்பிடுவது நல்லது. பூண்டு சாப்பிட்டுவந்தால், ஆண்மைசக்தி பெருகும்.

பார்வையைத் தெளிவாக்கும். நல்ல குரல் வளம் கிடைக்க உதவும். ரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்யும். கந்தகச்சத்து நிறைந்தது. பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும்.

கொத்தவரங்காய்



கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியப்படுத்தும்.

உடலில் ரத்த உற்பத்தி சீராகும்.

உடலுக்குத் தேவையான உயிர்சக்தி கிடைக்கும்.

இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சீர்செய்யும்.

கால்சியம், பாஸ்பரஸ் உள்ளதால், எலும்புகள் உறுதியாகும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கலைத் தீர்க்கும்.

மன அழுத்தம், அதீத உணர்வுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

வைட்டமின் ஏ, பி, கே, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளன.

ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டும்.

குறைந்த கிளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது.

பீர்க்கங்காய்



வைட்டமின் சி, தயமின், ரிபோஃபிளேவின், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

ஃபிளேவனாய்டு, ஃபீனாலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.

இந்தக் காயில் உள்ள சத்துக்கள் மூளை செல்கள், திசுக்களைப் பாதுகாக்கும்.

இதன் சாறு இ-கோலி, பி சப்டிலிஸ் (B. Subtilis) போன்ற கிருமிகளை அழிக்கும்.

சீஸனல் அலர்ஜிக்கு, இந்தக் காயை 48 நாட்கள் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும்.

அதிக அளவு நீர்சத்து இருப்பதால், உடல் எடை குறைக்க உதவியாக இருக்கும்.

குடியால் பாதித்த கல்லீரலைப் பலப்படுத்தும்.

மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்களுக்கு பீர்க்கங்காயைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதில் உள்ள செல்லுலோஸ் சத்துக்கள், மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

சுரைக்காய்



சிறுநீர்த்தொற்றைத் தடுக்கும்.

கோடை காலத்தில் சாப்பிட்டால், சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

நார்ச்சத்து நிறைந்து, மலச்சிக்கல் சரியாகும்.

அசிடிட்டி, செரிமானப் பிரச்னை, அல்சர் ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வு.

இதில், 96 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால், உடல் எடையைப் பராமரிக்க உதவும்.

தயமின், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன.

பற்சொத்தை, பற்கள் பாதிப்பைத் தடுக்க உதவும்.

கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் பாதிப்பைக் குறைக்கும்.

இளநரையைத் தடுக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதயத்தைப் பலப்படுத்தும்.

உடலுக்குத் தேவையான எலெக்ட்ரோலைட் சத்துக்களைச் சமன்படுத்தும்.

கோவைக்காய்



பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு.

மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும்.

பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ, சி, பி1, பி2 நிறைந்துள்ளன.

சுவாசப் பிரச்னைகளைத் தடுக்கும்.

தொழுநோய், ஸ்காபீஸ், சொரியாசிஸ் பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும்.

இதன் சாறு, சருமத்தைப் பளபளப்பாக்கும். நீர்ச்சத்தின் தேவையைப் பூர்த்திசெய்யும்.

ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்

இதயப் படபடப்பு, மன அழுத்தப் பாதிப்புகளைக் குணப்படுத்தும்.

வயிறு தொடர்பான புண்களை சரிசெய்யும்.

நார்ச்சத்து நிறைந்தது, செர்மானத்துக்கு ஏற்றது.

புடலங்காய்



அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள் குறைவு. உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.

வைட்டமின் ஏ,பி,சி, தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன

படபடப்பு உணர்வு குறையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

மார்பகம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

டீடாக்ஸ் ஏஜென்டாகச் செயல்படும் என்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

மஞ்சள்காமாலை, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளைச் சரிசெய்யும்.

வாயுத் தொல்லை, மலச்சிக்கல் பிரச்னைகளைச் சரியாக்கும்.

செரிமான சக்தியை மேம்படுத்தும். இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சரிசெய்யும்.

சரும வறட்சி, சருமப் பிரச்னைகள் தீரும்.

அசிடிட்டி, அல்சர், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு.

வைட்டமின் சி, பி, ஏ, புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வாழைத்தண்டு



வைட்டமின் ஏ, பி6, சி, ஃபோலேட்ஸ், நியாசின் உள்ளன.

சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் உள்ள கற்களைக் கரைக்கும்.

ரத்தசோகை, கரோனரி இதய நோய், நரம்பு மண்டலப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது.

ரத்த அழுத்தம், அதிகப்படியான இதயத் துடிப்பு கட்டுக்குள் வரும்.

நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்லது.

இதில் உள்ள மக்னீசியம், எலும்புகளை வலிமையாக்கும்.

கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை உண்ணலாம்.

உடலில் உள்ள தொற்றுக்கள், கழிவுகள் வெளியேறும்.

உடல் எடை குறைக்க நினைப்போருக்கு சிறந்த தீர்வு

பைட்டோகெமிக்கல்ஸ் சத்துக்கள் உள்ளதால், அல்சரைத் தடுக்கும்.

வெள்ளைப் பூசணி

உடல் எடை குறைக்க நினைப்போருக்கு சிறந்த உணவு.

நீர்ச்சத்து மிகுந்துள்ளதால், சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்பட்டு, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்.

நரம்பு மண்டலத்தைச் சரிசெய்யும்.

குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

வாரம் இருமுறை சர்க்கரை நோயாளிகள் அவசியம் சாப்பிடவும்.

உடலுக்குக் குளிர்ச்சி என்பதால், கோடை காலத்தில் சாப்பிடலாம்.

உடலில் பிஹெச் (pH) நிலையைச் சமநிலைப்படுத்த உதவும்.

சிறுநீரகம், கல்லீரல், குடல் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுத்தம்செய்யும்.

புரதம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளன.

பித்தப்பைக் கற்கள் வெளியேற, இதன் சாறு பயன்படும்.

செளசெள



ஃபோலேட், வைட்டமின் பி, அமினோ அமிலங்கள் இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், மாங்கனீசு, காப்பர், துத்தநாகம், பொட்டாசியம் நிறைந்துள்ளன.

ரத்தசோகையைச் சரிசெய்யும்.

செலினியம், வைட்டமின் பி6 ஆகியவை கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும்

தசைப்பிடிப்பு, மறதி, சருமப் பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகள் சரியாகும்.

நன்றி : டாக்டர் விகடன் - 16.01.2016