disalbe Right click

Friday, January 22, 2016

ஸ்ட்ரோக் (பக்கவாதம்)

ஸ்ட்ரோக்! வேகம் முக்கியம்
என்னாச்சுன்னு தெரியலைங்க. திடீர்னு இரண்டு நாளுக்கு முன் கை, கால் ஒருபக்கமா இழுத்துக்கிடுச்சுஇப்போ பேச வேற முடியல. ஞாபகம் மங்கிட்டே வருதுன்னு சொல்றாங்க. பிழைக்கிறதே கஷ்டமாம்” – இது போன்ற உரையாடல்கள் தற்போது சர்வசாதாரணமாக, கிராமம், நகரம் என எங்கெங்கும் கேட்கிறது. பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஆனால், ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புஉணர்வு மட்டும் மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால், பலர் சரியான சிகிச்சை இன்றியே உயிரிழக்க நேரிடுகிறது.
பக்கவாதம் (ஸ்ட்ரோக்)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, மூளை செயலிழப்பதுதான்பிரெய்ன் அட்டாக்எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், `பக்கவாதம்’. மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து, மரணம் ஏற்படலாம்.
இளம் வயதில் ஸ்ட்ரோக்
ஸ்ட்ரோக் பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும். இவர்கள் புகைபிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவராகவோ இருந்தால் ரிஸ்க் அதிகம். தவிர, 40 வயதுக்குள் ஸ்ட்ரோக் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. உடலில், புரோட்டின் சி, புரோட்டின் எஸ் குறைதல், `ஹோமோசிஸ்டீன்என்னும் அமினோஅமிலம் அதிகரித்தல், ஆன்டித்ரோம்பின் – 3 குறைதல், கார்டியோலிபின் உடலில் தங்குதல் போன்றவற்றால் இளம் வயதில் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு ஸ்ட்ரோக்
ஒருசில குழந்தைகள் வளரும்போது, அவ்வப்போது திடீர், திடீரெனக் கீழே விழுந்துவிடுவார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அடிக்கடி ஸ்ட்ரோக்குக்கான அறிகுறி தெரியும். சில குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் அனைத்து ரத்தக் குழாய்களும் அவ்வப்போது சுருங்குவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னைக்குமொயா-மொயாநோய் என்று ஒரு பெயர் உண்டு.
பரிசோதனை
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், தைராய்டு அளவைப் பரிசோதிப்பதன் மூலம் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறியலாம்.
சிகிச்சை என்ன?
ஸ்ட்ரோக் வந்தவுடன் உடனடியாக ஸ்ட்ரோக் யூனிட், அவசரசிகிச்சைப் பிரிவு வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது. மூன்றரை மணி நேரத்துக்குள் சென்றுவிட்டால், அவருக்கு `இன்ட்ராவீனஸ் த்ரொம்போலைசிஸ்எனும் சிகிச்சை அளிக்கப்படும். இதை அளித்துவிட்டால், ஸ்ட்ரோக் வந்தவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட முடியும். நேரம் கடந்துவிட்டால், இந்த தெரப்பி பயன் அளிக்காது.
மூன்றரை மணி நேரத்தில் வர முடியாதவர்கள், ஸ்ட்ரோக் வந்த எட்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு `இன்ட்ரா ஆர்டிரியல் த்ரோம்போலைசிஸ்அல்லது `மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமிசிகிச்சை அளித்து, உயிரைக் காப்பாற்றலாம். சில சமயங்களில் பின்மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் இந்த தெரப்பி கொடுப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும்.
மருத்துவமனைக்கு 12 மணி நேரம் கழித்துச் சென்றால், பரிசோதனைக்குப் பிறகு மூளையின் வீக்கம் அளவிடப்படும். மூளையின் வீக்கம் அதிகமாக இருந்தால், `டீகம்ப்ரஸிவ் கிரேனியேக்டமி எனும் அறுவைசிகிச்சை செய்யப்படும். இதில், வீக்கம் உள்ள பகுதியில் மண்டைஓடு திறக்கப்பட்டு, வீக்கம் குறைந்த பின்னர், சில நாட்களில் அறுவைசிகிச்சை செய்தபின் மண்டைஓட்டை மூடிவிடுவார்கள். இவர்களுக்கு, கை, கால்கள், வாய் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு குறைவு. எனினும், உயிரைக் காப்பாற்ற முடியும்.
தடுப்புமுறைகள்
மினி ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு, அவரவர் உடல்நிலையைப் பொருத்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, ஆஸ்ப்ரின் போன்ற ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை அளிக்கப்படும். உடலில் ஹோமோசிஸ்டீன் அதிகமாக இருந்தால், ஃபோலிக்அமிலம் மற்றும் மெத்தில் கோபாலமைன் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டுவந்தால், ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.
நவீன சிகிச்சைமுறைகள்
ஸ்ட்ரோக், மினிஸ்ட்ரோக் வந்தால் தற்போது உள்ள சில நவீன சிகிச்சைமுறைகள் மூலம் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. மினி ஸ்ட்ரோக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால், இதயச் செயல்பாட்டை ஆய்வுசெய்ய வேண்டும். பின்னர், கழுத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, டாப்ளர் பரிசோதனையும், சி.டி ஆஞ்ஜியோகிராபி பரிசோதனையும் செய்யப்படும். பரிசோதனையில், ரத்தக் குழாய்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டால், கரோட்டிட் என்டார்டெரக்டமி (Carotid endarterectomy) என்ற அறுவைசிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்படும். ஒருவேளை, கழுத்தில் இருக்கும் ஏதாவது ஒரு ரத்தக் குழாய் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு மூளைக்கு வெளியே இருக்கும் ரத்தக் குழாயை எடுத்து, மூளைக்கு உள்ளே வைத்து பைபாஸ் அறுவைசிகிச்சை (Cerebaral bypass) செய்து, ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க முடியும்.
மறுவாழ்வு சிகிச்சைகள்
ஸ்ட்ரோக் வந்த குறிப்பிட்ட நேரம் கடந்த பின்னர், சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டாலும், சிலரால் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கான வரம்தான் மறுவாழ்வு சிகிச்சைகள். பிசியோதெரப்பி மூலம் அவர்களை சக்கர நாற்காலியில் உட்காரும் அளவுக்கோ, தனியாக நடக்கும் அளவுக்கோ தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படும். 60 சதவிகிதம் வரை மறுவாழ்வு சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. மறுவாழ்வு சிகிச்சைகள் மூலம் தற்போது பலர் மீண்டுவருகிறார்கள். எனவே, நம்பிக்கை இழக்க வேண்டாம்.
– -------------------------------------------------------------------------------பு.விவேக் ஆனந்த்
ஸ்ட்ரோக் யாருக்கு வரும்?
யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனினும், ஸ்ட்ரோக் ஏற்பட ஆறு முக்கியமான காரணிகளைச் சொல்ல முடியும்.
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அழுத்தம் அதிகரிக்கும்போது, அவை சுருங்கும். ரத்தக் குழாய் சுருங்கும்போது, மூளைக்கு ரத்தம் செல்வது, படிப்படியாகத் தடைப்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
டயாபடீஸ்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, ரத்தக் குழாய்களில் இருக்கும் புரதங்களால் ஆன அடுக்கு பாதிப்படையும். இதனால், குளுக்கோஸ், சிறுசிறு கொழுப்புக்கட்டிகள்போல, ரத்தக் குழாய்களில் படியும். இந்தக் கொழுப்புக்கட்டிகள் காரணமாக, கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
கொலஸ்ட்ரால்: ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் படிந்து, அடைப்பை ஏற்படுத்தலாம்.
புகைபிடிப்பவர்கள்: நிக்கோட்டின் ரத்தக் குழாயில் படியும்போது, அவை, ரத்தக் குழாய்களில் விரிசலை ஏற்படுத்தும். விரிசலில், ரத்தத் தட்டணுக்கள் ஆங்காங்கே ஒட்டிக்கொள்ளும். இதனாலும் அடைப்பு ஏற்படலாம்.
ஆல்கஹால்: மது அருந்துபவர்களுக்கு, மேற்சொன்ன நான்கு வகையிலும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
மரபியல் காரணி: பரம்பரையில் யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால், கவனமாக இருக்க வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்பட, மரபியல்ரீதியான வாய்ப்புகளும் அதிகம்.
ரத்தக் குழாய் அடைப்பு (Ischemic stroke)
கழுத்தில் இருந்து முன்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும், பின்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும் மூளைக்குச் செல்கின்றன. இந்த நான்கு ரத்தக் குழாய்களும் மூளைப்பகுதியில் சந்தித்துப் பிரியும்.
இதயம் ஒழுங்கின்றி திடீரென வேகமாகத் துடிக்கும் பிரச்னையான ரூமாட்டிக் இதய நோய் உள்ளவர்களுக்கு, இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் திடீரென அடைப்பு ஏற்படுவதால் ஸ்ட்ரோக் ஏற்படலாம். கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் முன்பக்க ரத்தக் குழாய்களிலும், மூளைக்கு உட்புறமாகச் செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்களிலும் கொழுப்புகள் படிந்து, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
ரத்தக்கசிவு ஸ்ட்ரோக் (Hemorrhagic Stroke)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்தம் கசிவதாலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதில் இரண்டு வகை உள்ளன.
வயதானவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் மூளைக்கு உள்ளே செல்லும் ரத்தக் குழாய்களில் கீறல் விழுந்து, ரத்தக் குழாய் வெடித்து, ரத்தம் கசியும். பெரும்பாலும், மூளையில் உள்ள பேசல் காங்கிலியா (Basal ganglia) செரபெல்லம், பான்ஸ் பகுதிகளில் இருக்கும் ரத்தக் குழாய்களில் இத்தகையக் கசிவு ஏற்படலாம்.
மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பலூன் போல வீக்கம் ஏற்பட்டு, பின்னர் ரத்தக் குழாய்கள் வெடிப்பதாலும், ரத்தம் கசிந்து, மூளைக்கு ரத்தம் செல்லாமல் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு, .எஸ்.ஹெச் (Aneurysm sub arachnoid hemorrhage) என்று பெயர்.
மினி ஸ்ட்ரோக்
`டி..எனச் சொல்லப்படும் டிரான்சியன்ட் இஸ்கீமிக் அட்டாக்கை `மினி ஸ்ட்ரோக்என்கின்றனர். ஸ்ட்ரோக் வரப்போகிறது என்பதை, முன்கூட்டியே நமக்குத் தெரிவிப்பதுதான் மினி ஸ்ட்ரோக். மினி ஸ்ட்ரோக் ஏற்பட்டால், திடீரென வாய் கோணி, பேச்சுக் குழறும்; கண் ஒரு பக்கமாக மங்கலாகத் தெரியும்; சில சமயம் பார்வை பறிபோனதுபோல இருட்டாகத் தெரியும். இந்தப் பிரச்னை சில நொடிகளில், நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். இவர்களுக்கு, மறுநாளோ, அடுத்த வாரமோகூட ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவர்களை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம். அதைப் புறக்கணித்தோம் என்றால், ரிண்ட் (RIND) எனப்படும் அடுத்த நிலை ஸ்ட்ரோக் வரலாம். இந்த நிலைவந்தால், ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து, வாய்க் குழறல், கை, கால்கள் சரியாகிவிடும். கை, முகம், பேச்சு மூன்றும் ஒரு சேர இழுத்து கொள்ளும்போதுதான் ஸ்ட்ரோக் என்கிறோம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் மருத்துவர்கள் FAST என்பதை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும் எனகிறார்கள்.
F – Face Drooping: (முகம் ஒரு பக்கமாகக் கோணுதல்) குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.
S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.
T – Time: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க எட்டு டிப்ஸ்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்.
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வேண்டும்.
மது அருந்துவதை அறவே நிறுத்தவும்.
புகைபிடிப்பதை உடனே விட்டுவிடுங்கள்.
எப்போதும் நீர்ச்சத்து தேவை, தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.
உடற்பயிற்சி, சமச்சீர் உணவின் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள்வைப்பது அவசியம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் வலது மூளை பாதிக்கப்பட்டால், உடலின் இடது பக்கம் பாதிக்கப்படும், கை,கால்கள் செயல் இழக்கும். இடது மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் செயல் இழந்துபோவதுடன், பேச்சுத்திறனும், பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறனும் பாதிக்கப்படும். வலது பக்க மூளையைவிட இடது பக்க மூளை பாதித்தால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.
நன்றி : டாக்டர் விகடன் - 16.01.201

Thursday, January 21, 2016

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

தஞ்சாவூர் புகைப்படங்கள் - பிரகதீஸ்வரர் கோயில்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பற்றிய தகவல்கள்


தமிழராய் பிறந்த நாம் எல்லோரும் பிறப்பால் எத்தகைய பெருமையை அடைந்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். இன்று உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மிகப்பழமையான மொழி. தோராயமாக பத்தாயிரம் ஆண்டு கால வரலாற்றினை கொண்டிருக்கும் மொழி. இன்றிருக்கும் மொழிகள் தோன்றும் முன்பே 'தொல்காப்பியம்' போன்ற மொழிக்கு செறிவூட்டும் இலக்கண நூல்களை கொண்டிருந்த மொழி. இன்று தன் கடவுளே சிறந்தவர், தான் சார்த்த மதமே முக்திக்கான மார்க்கம் என்று மூடர்கள் பிதற்றிக்கொண்டிருக்க ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் அனைவருக்கும் பொருந்தும் தமிழ் மறையாம் வள்ளுவம் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. இப்படியொரு புகழ் தமிழுக்கு கிடைக்க காரணம் அகத்தூய்மையும், அகண்ட அறியும் கொண்டிருந்த நம் முன்னோர்கள் தான். வெறும் சொல்லிலும், எழுத்திலும் மட்டுமில்லாது நவீன யுகத்தின் அறிவியலுக்கும் புதிராக இருக்கும் கட்டிடங்களையும் எழுப்பியிருக்கின்றனர் நம் மூதாதையர். அப்படிப்பட்ட கட்டிடங்களில் ஒன்று தான் ஆயிரம் வருடங்களை கடந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலாகும். தமிழர் கட்டிடக்கலையின் மனிமகுடமான இக்கோயிலை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

தஞ்சை பெரிய கோயில்!! கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயில் ஆயிரம் வருடங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இதனை கட்டியவர் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆவர்.  இன்று உலகில் இருக்கும் மிகத்துல்லியமான கணித அளவீடுகளுடன் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றான இக்கோயிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள். 
தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும்.



பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சை நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை.
எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது.
முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி ராஜகோபுரமன்று. இந்த ஆலயத்தில் கருவறை விமானக்கோபுரமே விண்ணை முட்டுவது போன்று வளாகத்தின் மையப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு விசேஷம் என்னவெனில் தென்னிந்திய கோபுரங்கள் யாவுமே தட்டையான சரிவுடன் மேல் நோக்கி உயர்ந்திருப்பதே அப்போதைய கோயிற்கலை மரபு. ஆனால் இக்கோயிலின் கோபுரம் ஒரு எகிப்தியபாணி பிரமிடு போன்று அடுக்கடுக்கான நுண்ணிய தளங்களாக மேனோக்கி சென்று உச்சியில் தட்டையான கடைசி பீடஅடுக்கில் பிரம்மாண்ட குமிழ் மாட கலச அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதோடு முடிவடைகிறது.
ஒரே விதமான ஒத்திசைவான அலங்கார நுட்பங்கள் ஒரு ஆபரண அட்டிகையைப்போன்று  கோபுரத்தின் உச்சிவரை நுணுக்கமாக வடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
ஒருவகையில் இந்த அலங்கார நுட்பம் அந்நாளில் தென்னிந்தியாவில் இருந்திராத தன்மையை கொண்டதாய் காட்சியளிக்கிறது. கொஞ்சம் கிழக்குத்தேச கோயில்களின் சாயலும் இந்த கோபுர அலங்கார நுட்பங்களில் தென்படுகிறது.
மற்றொரு முக்கிய அம்சம் வட நாட்டுக்கோயில்களை போன்றே பீட அமைப்பையும் இந்த கோயில் பெற்றுள்ளது என்பதாகும். இதில் மற்ற தமிழ்நாட்டு கோயில்கள் போன்று நாற்றிசை வாசல்கள் மற்றும் தீர்த்தக்குளம் ஆகிய அம்சங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தை அடிப்படை அறமாக கொண்டு முழுக்க முழுக்க ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் நோக்குடன் இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பதை இந்த பிரம்மாண்டத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நம்மால் உணர முடிகிறது.
வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த  முனைப்புடன் இந்த கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது இந்த கோயிலின் வடிவமைப்பை பார்க்கும் போதே புலனாகிறது.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு,  கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.
கோயிலின் நிர்வாகம் செம்மையாக நடைபெற விரிவான நடைமுறைகளும் முறைமைகளும் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை கோயில்பகுதியிலேயே இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 
இளம் வயதில் முடி சூடி பல போர்க்கள வெற்றிகளையும் கண்டு கலாரசனையும் அதீத மேலாண்மைத்திறனும் வாய்க்கப்பட்டிருந்த ராஜராஜ சோழர் நிச்சயம் அந்த கீர்த்திப்பெயருக்கு எல்லாவிதத்திலும் தகவமைந்தவர் என்பதற்கான சான்றுதான் இந்த ‘ராஜராஜுச்சரம் கோயில்’.
இந்த கோயிலில் எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான விமான கோபுரத்தின் உயரம் 190 அடி ஆகும். கோயில் வளாகத்தில் ‘முன் தாழ்வாரம்’, நந்தி மண்டபம், கருவூர்த்தேவர் கோயில், சுப்ரமணியர் கோயில் போன்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயிலின் கருவறையின் மேல் இருக்கும் விமான கோபுரமானது 216அடி உயரம் உடையதாகும். உலகிலிருக்கும் மிக உயரமான விமான கோபுரங்களில் ஒன்றான இதன் மேல் 80டன் எடையுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட கலச பீடம் இருக்கிறது.  ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் பெரிதாக தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத பொழுது எப்படி இவ்வளவு பெரிய எடையுள்ள பொருளை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. 
இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மறுக்க முடியா வரலாற்று ஆவணங்களாக பல தகவல்களை கொண்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் தொலைநோக்கு பார்வைமொரு முக்கியமான பிரமிக்க வைக்கும் அம்சமாக விளங்குகிறது.
இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நந்தி ஒரே கல்லால் ஆனதாக  வீற்றிருக்கிறது. இதன் எடை 25 டன் என்பதாக சொல்லப்படுகிறது. பிருகதீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் உறையும் இந்த திருக்கோயிலில் மே மாதத்தின்போது வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதேபோல இக்கோயிலில் இருக்கும் நந்தி சிலையும் ஒரே கல்லினால் வடிக்கப்பட்டது ஆகும். இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றான இது 16அடி நீளமும், 13அடி உயரமும் கொண்டதாகும்.  இதற்கு தேவையான கிராண்ட் கற்களை தஞ்சையில் இருந்து 60 கி.மீ தொலைவிலிருக்கும் திருச்சியில் இருந்து வெட்டி எடுத்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 
தஞ்சை பெரிய கோயிலின் தலைமை கட்டுமான பொறியாளராக 'குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சன்' என்பவர் இருந்ததாக கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.  தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட காலத்திற்கும் 2000 ஆண்டுகள் பழமையானதான சிந்து சமவெளி நாகரீகத்தில் நகரங்களை அமைக்க அவர்கள் பயன்படுத்திய கணித அளவீடுகளே இக்கோயிலுக்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


இக்கோயிலின் மூலவராக சிவ பெருமான் பிரகதீஸ்வரராக வணங்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி, சூரிய பகவான், சந்திர பகவான், வருண பகவான், குபேரர் ஆகியோரது சிலைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவர்கள் எல்லோரது சிலையும் ஒரு வளர்ந்த மனிதனின் சராசரி உயரமான 6 அடிக்கு இருக்கின்றன. இந்த உயரத்திற்கு கடவுளர்களின் சிலைகளை காண்பது அரிதானதாகும்.


தஞ்சை பெரிய கோயில்!! பெரிய கோயிலின் விமான கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையல்ல.   குறிப்பிட்ட சில கோணங்களில் சூரியன் இருக்கும் போது இதன் நிழல் கீழே விழாதே தவிர மற்ற நேரங்களில் எல்லா கட்டிடங்களையும் போல இதன் நிழல் கீழே விழுவதை நாம் காண முடியும். 


 1010ஆம் ஆண்டு இக்கோயில் கட்டிமுடிக்கப்பட்ட போது இக்கோயிலில் மட்டும் அர்ச்சகர்கள், நடன மங்கைகள், இசை வாத்திய கலைஞர்கள், கணக்கர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இருந்திருக்கின்றனர்.  இவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புகள் இக்கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளில் நாம் காண முடியும்.  


தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் முதலாம் ராஜ ராஜ சோழனின் கற்சிற்பம். இக்கோயிலில் நாம் மிக மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட சிற்பங்களை காண முடியும். கையில் உள்ள நுண்ணிய நரம்புகள் கூட சிலைகளில் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கும். 


பிரகதீஸ்வரர் கோயிலில் இருக்கும் ஆள் உயர கற் சிற்பங்கள். 


தஞ்சை பெரிய கோயில்!! சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் கருவறைக்கு அருகில் ரகசிய அறை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனுள் ராஜ ராஜன் தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பணிவாக நிற்பது போன்ற சுவரோவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சோழர்கள் சிற்பம் வடிப்பதில் மட்டுமில்லாமல் ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும். 


தஞ்சை கோயிலில் காணப்படும் மட்டுமொரு ஓவியம்.  இவையெல்லாம் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டிருகின்றன. இதனாலேயே தான் இந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருகின்றன.


தஞ்சை பெரிய கோயில்!! ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்றும், பௌர்ணமி தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.  மஹா சிவராத்திரியும் இங்கே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 


ஒரு மஹோன்னத பொற்காலத்தின் சாட்சியமாகவும் கல்லிலே பொறிக்கப்பட்ட ஆவணமாகவும் வீற்றிருக்கும் இந்த தட்சிண மேருவை தமிழர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம்.

“இதனை விட்டுச்சென்றார் நம் முன்னோர் – எதனை விட்டுச்செல்வோம் நாம் நாளை?” 
என்ற ஒரு கேள்வியும் காத்திருக்கிறது இக்கோயிலில் நமக்கு.


Tuesday, January 19, 2016

டைஃபாய்டு காய்ச்சல்

டைஃபாய்டு காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்வோமா?

1 டைபாய்டு காய்ச்சல் எப்போது வரும்?
சுற்றுச்சூழல் சீர்கெடுவதால் ஏற்படும் தொற்று நோய்களில் மிக முக்கியமானது டைபாய்டு. மழைக் காலங்களில், தெருக்களில் தேங்கும் மழைநீரில், குப்பை கழிவுகள் சேர்ந்து, நோய் கிருமிகள் வாழ வழிவகுக்கிறது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை, யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. 

2 இந்நோய் வரக் காரணம்?
‘சல்மோனெல்லா டைபி’ எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன.

3 நோய் கிருமிகள் எங்கு உற்பத்தியாகின்றன?
அசுத்தமான இடங்களிலும், தெருவோர கழிப்பிடங்களிலும் இந்தக் கிருமிகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள் மூலம், வீட்டில் பாதுகாக்கப்படாத குடிநீரிலும், உணவிலும் கிருமிகள் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த 
உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு, டைபாய்டு காய்ச்சல் ஏற்கிறது.

4 ஏற்கனவே டைபாய்டு வந்து குணமடைந்தோருக்கு இந்நோய் மறுபடியும் தாக்குமா? 
கண்டிப்பாக! அதுமட்டுமல்ல, ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில், இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள் வரை வசிக்கும். அப்போது, அந்த நபரின் மலத்திலும், சிறுநீரிலும் அவருக்கு தெரியாமலேயே அவை வெளியேறி, 
அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும்.

5 அறிகுறிகள் என்ன?
நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும், காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்று வலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்கு சோர்வு அதிகரித்து மயக்கம் வரும்.

6 காய்ச்சலின் பாதிப்புகள்?
குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு’ வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் துவக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக்குருதிநோய்’ ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரலாம்.

7 என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?
காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள், நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை அவசியம். குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்கு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை எடுக்க வேண்டும். ரத்தத்தை எடுத்து, ஒரு வளர் கருவியில் வைத்து, கிருமிகள் வளர்கின்றனவா என்று பார்க்கும் பரிசோதனை இது. 
இப்பரிசோதனை மூலம் தான், டைப்பாய்டு உள்ளதா என, உறுதியாக சொல்ல முடியும்.

8 ‘வைடால்’ டைபாய்டு ரத்தப் பரிசோதனை எடுக்கலாமா?
இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். டைபாய்டு வந்தவருக்கு இந்த நோய்க் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது. காய்ச்சல் கண்டு எட்டு நாட்களுக்கு பின், இப்பரிசோதனை செய்தால் மட்டுமே பயன் உண்டு.

9 டைபாய்டின் போது பசியின்மை இருக்குமா? உணவு என்ன எடுக்கலாம்?
கண்டிப்பாக. குடலில் புண் உண்டாகும் வாய்ப்பிருப்பதால், காரமான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளான கஞ்சி, பழங்கள், பழச்சாறுகள் போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம். வெந்நீர் மட்டுமே பருக வேண்டும். வெளி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சமைக்காத உணவுகளான தயிர் பச்சடி, ‘சாண்ட்விச்’ போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 

10 சிகிச்சைகள் என்னென்ன?
ஐந்து நாட்கள் கழித்து காய்ச்சல் இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இதற்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
By vayal on 18/01/2016

டைஃபாய்டு காய்ச்சலுக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள்சுற்றுப்புறச் சூழல் சீர்கெடுவதால் ஏற்படுகிற தொற்றுநோய்களில் மிக முக்கியமானது, டைபாய்டு காய்ச்சல். மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குவதால், குடிநீரும் தெருக் கழிவுகளும் கலந்து நோய்க் கிருமிகள் வாழ வசதியாகிறது. இதனால் அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம்வரை உள்ள காலத்தை டைபாய்டு காய்ச்சலுக்கான காலகட்டம் என்று சொல்கிறார்கள்.

இது, சிறு குழந்தைகள் முதல் முதியோர்வரை யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. என்றாலும், எங்கெல்லாம் சுத்தம் இல்லையோ, கழிப்பறை வசதி இல்லையோ, அங்கு வாழ்கிற குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை இந்த நோய் எளிதில் தாக்கிவிடுகிறது.

நோய் வரும் வழி
‘சால்மோனெல்லா டைபி’ (Salmonella typhi) எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன. இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள், இந்தக் கிருமிகளைச் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருகின்றன. வீட்டில் முறையாகப் பாதுகாக்கப்படாத குடிநீரிலும் உணவிலும் இவை கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும் குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது.

இந்த நோய் இன்னொரு முறையிலும் வருகிறது. ஏற்கெனவே, டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில் இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள்வரை வசிக்கும். அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் அவருக்குத் தெரியாமலேயே அவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய் கடத்துநர்கள்' (Carriers) என்கிறார்கள்.

அறிகுறிகள்
நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்றுவலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்குச் சோர்வு அதிகரித்து, மயக்கம் வரும்.

சிக்கல்கள்
இந்தக் காய்ச்சல் குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு' (Febrile Fits) வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் தொடக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக்குருதிநோய்’(Septicaemia) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து நேரலாம். இதற்கு சில பரிசோதனைகள் செய்து நிலைமையை அறியலாம். 

1. ரத்த அணுக்கள் பரிசோதனை

* காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் 90 சதவீதம் சரியாக இருக்கும்.

* டைபாய்டுக்கான ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு இதைச் செய்ய வேண்டியது முக்கியம்.

* வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count Test) செய்யப்படும். இதன்மூலம் நோயாளியின் பொது ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

* டைபாய்டு வந்தவருக்கு ரத்த வெள்ளையணுக்களின் மொத்த எண்ணிக்கையும் நியூட்ரோபில் அணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.

* குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்கு வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

2. ரத்த நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Blood Culture)

* காய்ச்சல் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்குள் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

* ரத்தத்தை எடுத்து ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை உறுதி செய்ய மிகச் சிறந்த பரிசோதனை இதுதான்.

3. வைடால் ரத்தப் பரிசோதனை (Widal Test).

* இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். டைபாய்டு வந்தவருக்கு இந்த நோய்க் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது.

* இதில் ‘டியூப்’ பரிசோதனை, ‘சிலைட்’ பரிசோதனை என்று இரண்டு வகைகள் உண்டு.

* இவற்றில் ஒன்றை, நோய் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் செய்துகொள்ள வேண்டும்.

* டைபாய்டு ஆன்டிஜெனை நோயாளியின் ரத்தத்தில் கலக்கும்போது அதில் எதிர் அணுக்கள் இருந்தால், அவற்றுடன் ஆன்டிஜென்கள் இணைந்து இணையணுக்களை (Agglutinin) உருவாக்கும்.

* இப்பரிசோதனையில் ஓ, ஹெச் என்று இரண்டு வகை இணையணுக்கள் அளக்கப்படுகின்றன.

* இவற்றில் ‘ஓ' இணையணு டைபாய்டு கிருமி வகையைச் சார்ந்ததால், இதன் அளவு முக்கியம்.

* டியூப் பரிசோதனையில் ‘ஓ’ இணையணு 1 : 180 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால், சிலைட் பரிசோதனையில் 1 : 80 எனும் அளவுக்கு அதிகமாக இருந்தால் டைபாய்டு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

* நோய் ஆரம்பித்த நான்கு மாதங்கள்வரை இந்த அளவுகள் குறையாமல் இருக்கும். எனவே, இதற்கிடையில் இந்தப் பரிசோதனையை மீண்டும் செய்துகொண்டு, இன்னமும் நோய் குணமாகவில்லை என்று தவறாக எண்ணுபவர்கள் உண்டு.

* சமீபத்தில் டைபாய்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்தப் பரிசோதனையைச் செய்ய நேரிட்டால், அவர்களுக்கு நோய் இல்லாவிட்டாலும், இந்த அளவுகள் அதிகமாக இருப்பதாகக் காண்பிக்கும்; பயப்படத் தேவையில்லை.

4. அட்டைப் பரிசோதனை (CARD Test)

* நோயாளியின் ரத்தத்தில் டைபாய்டு கிருமிகளுக்கான ஐஜி.எம். (IgM), ஐஜி.ஜி. (IgG) எதிர் அணுக்களை மிக விரைவாகக் கண்டறியும் பரிசோதனை இது.

* இந்த அணுக்கள் ரத்தத்தில் இருந்தால் 60 சதவீதம் நோய் உறுதி.

* பரிசோதனையின் முடிவு உடனே தெரிந்துவிடும்.

* நோய் ஏற்பட்ட முதல் வாரத்தில் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

5. மலம் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Feces Culture)

* காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதென்றால் மூன்றாம் வாரத் தொடக்கத்தில், இதைச் செய்துகொள்ள வேண்டும்.

* மலத்தை ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை உறுதிசெய்ய இதுவும் உதவும்.

6. சிறுநீர் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Urine Culture)

* காய்ச்சல் ஏற்பட்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டதென்றால், நான்காவது வாரத் தொடக்கத்தில் இதைச் செய்துகொள்ளலாம்.

* சிறுநீரை ஒரு வளர் ஊடகத்தில் ஊற்றி, கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை இதன்மூலமும் உறுதி செய்யலாம்.

7. பி.சி.ஆர். பரிசோதனை (PCR Polymerase Chain Reaction Test)
* நோயாளியின் ரத்தத்தில் டைபாய்டு பாக்டீரியாவின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து, நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

* 99 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

* மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டது.

* இப்போது இந்தப் பரிசோதனை பிரபலமாகிவருகிறது.

* செலவு கொஞ்சம் அதிகம்.

நன்றி : டாக்டர் கு.கணேசன், தி இந்து நாளிதழ் - 28.11.2015