disalbe Right click

Friday, July 15, 2016

பாசிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி பெற


பாசிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி பெற என்ன செய்ய வேண்டும்?

ஒரு அறிவியல் பூர்வமான அலசல்

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம்.

இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

எளிய ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ள


எளிய ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாக எழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக் கொண்டும் எழுதலாம். 

எடுத்துக் காட்டாக, தமிழில் ‘ஜன்னல்’ என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்கு மொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள்.

 ‘சாளரம்’ என்று எழுதினால், “இதென்ன புலவர் தமிழாக உள்ளதே” எனச் சிலர் புரிந்து கொள்ளலாம். 

அதே ஜன்னலை, ‘காலதர்’ என எழுதினால், (கால்=காற்று, அதர்= வரும் வழி. காலதர் = காற்று வரும் வழி, ஜன்னல்) பெரும்பாலானவர்கள் பொருள் தெரியாமல் கலக்கமடைவார்கள். 

சொல்லில் மட்டுமின்றி, வாக்கியத்திலும் கூட இதே போல, எளிமையின்றி எழுதும் வகையும் உண்டு. ஆங்கிலத்தில் இது சற்று அதிகமாகவே இருக்கும். 

நமக்கு வேண்டிய பொருள் குறித்த கட்டுரை ஒன்று, சற்று கடினமான ஆங்கிலத்தில் இருந்தால், யாராவது இதனை எளிமைப்படுத்தி எழுதினால் நன்றாக இருக்குமே என்று நாம் விரும்புவோம். 

இந்த செயலில் நமக்கு உதவிட, இணையத்தில் ஒரு தளம் உள்ளது. Rewordify! என்பது இந்த தளத்தின் பெயர். 

இந்த தளத்திற்குச் சென்று, நாம் எளிமைப்படுத்த வேண்டிய கடினமான உரைக்கோவையினை இட்டால், அது அந்த டெக்ஸ்ட்டை எளிமைப்படுத்தித் தருகிறது. 

எடுத்துக் காட்டாக, இந்த தளத்தில் தரப்பட்டுள்ள வாக்கியத்தினையும், அது எளிமைப்படுத்தப்பட்டு தரப்படும் வாக்கியத்தினையும் நீங்கள் படித்துப் பார்த்தால், இதன் செயல்பாட்டினை அறியலாம்.

கடினமான வாக்கியம் (ஆங்கிலத்தில்): The ravenous throng scampered toward the delectable viands, which was impeccably arrayed on the table. 

இதன் எளிமையான வாக்கியம்: The extremely hungry crowd ran toward the delicious food, which was extremely well organized (into rows) on the table. 

இன்னொரு எடுத்துக் காட்டு: Four score and seven. படிக்கும் போது எளிமையாகத் தோன்றினாலும், சிலருக்கு மட்டுமே இது எளிமையாக இருக்கும். Score என்பது 20. எனவே, இது 87 ஐக் குறிக்கிறது.

இந்த செயல்பாடு மட்டுமின்றி, இந்த தளம் மூலம் நாம் ஆங்கிலத்தில் சொற்களைக் கற்றுக் கொள்ளலாம்.
பயனாளர்கள் இந்த தளத்தினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்; என்ன என்ன பயன்களை அடையலாம் என்று விரிவாக இந்த தளத்தின் முகப்பு பக்கத்திலேயே தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு. 

ஆங்கிலத்தில் கட்டுரைகளைத் தேடுவோர் மட்டுமின்றி, சொற்களைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும், இது ஒரு பயனுள்ள தளமாகும்.

இதன் இணைய முகவரி: https://rewordify.com/

நன்றி : தினமலர் நாளிதழ் - 04.07.2016


Wednesday, July 13, 2016

காசோலை பற்றிய முழு விபரம்


 காசோலை A-Z , என்ன செய்ய வேண்டும்?

காசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா?
 அ முதல் ஃ வரை உங்களுக்காக...
காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும். தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி. காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம். 

ஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:

1.   ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee)

2.   காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற  வேண்டும். (Drawer)

3.   காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee)

4.   காசோலையில் எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

5.   காசோலையில் கண்டிப்பாக தேதி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

காசோலைகளின் வகைப்பாடு:

பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றுதான், காசோலை. காரணம், ஒவ்வொரு காசோலை பரிமாற்றமும் வங்கிகளில் பதிவு செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்பட்டால் காசோலை விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.

இடத்தை மையப்படுத்தி காசோலைகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.

1.   உள்ளூர் காசோலை (Local cheque):

பணம் பெறுபவர் வசிக்கும் அதே ஊரிலுள்ள வங்கியில் காசோலை வழங்கப்பட்டால், அது உள்ளூர் காசோலை எனப்படும்.

2.   வெளியூர் காசோலை (Outstation cheque):

ஒரு குறிப்பிட்ட நகரின் உள்ளூர் காசோலை, பிற இடங்களில் வழங்கப்படுகிறது என்றால் அது வெளியூர் காசோலை எனப்படும். இந்த காசோலைகளைப் பயன்படுத்துவது மூலம், வங்கிகள் நம்மிடம் இருந்து நிலையான கட்டணங்களை வசூலிக்கலாம்.

3.   சம காசோலை (At Par cheque):

இது நாடு முழுவதும் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் இணையாக ஏற்கப்படுகின்ற ஒரு காசோலை. உள்ளூர் காசோலை போல கூடுதல் வங்கிக் கட்டணங்களை ஈர்க்காமல் நாடு முழுவதும் இந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மதிப்பின் அடிப்படையில் காசோலைகளின் வகைப்பாடு.

1.   சாதாரண மதிப்புடைய காசோலைகள் (Normal Value Cheque):

ரூ. 1 லட்சத்திற்கும் கீழ் மதிப்புடைய காசோலைகள் சாதாரண மதிப்புடைய காசோலை எனப்படும்.

2.   உயர் மதிப்புடைய காசோலைகள் (High value cheque):

ரூ. 1 லட்சத்தை விட அதிகளவு மதிப்புடைய காசோலைகள் உயர் மதிப்பு காசோலைகள் எனப்படும்.

3.   பரிசு காசோலைகள் (Gift Cheque):

அன்பிற்குரியவர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் காசோலைகள் பரிசு காசோலைகள் எனப்படும்.

காசோலைகள் பொதுவாக நான்கு வகைப்படும்.

1.   கீறாக் காசோலை (Open cheque):

வங்க்கியில் கவுண்டரிலேயே ஒரு காசோலையைக் கொடுத்து பணத்தைப் பெற முடிந்தால், அது கீறாக்காசோலை எனப்படும். ஒருவர் தனது சொந்தக் கணக்கில் இருந்து தானே பணத்தைப் பெறலாம். இல்லையெனில், வேறு யாரிடமாவது கையெழுத்திட்டு கொடுத்து பணத்தைப் பெற சொல்லலாம்.

2.   கொணர்பவர் காசோலை (Bearer cheque):

கொணர்பவர் காசோலை மூலம் ஒரு வங்கியில் காசோலை கொடுப்பவர் யாராயினும் பணத்தைப் பெற முடியும். இந்த காசோலையை ஒப்புதல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வேறொருவருக்குக் கொடுக்கலாம்.

3.   ஆணைக் காசோலை (Order cheque):

இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்படும் காசோலையாகும். இத்தகைய காசோலையில் “bearer” என்ற வார்த்தை அடிக்கப்பட்டு “order” என எழுதப்படலாம். பணம் பெறுபவர் (Payee), காசோலைக்குப் பின்புறத்தில் கையெழுத்திட்டு வேறொருவருக்கு அதே காசோலையை மாற்றிவிடலாம்.

4.   கோடிட்ட காசோலை (crossed cheque):

கோடிட்ட காசோலையை கவுண்டரில் கொடுத்து பணத்தை பெற முடியாது. இத்தகைய காசோலை மூலம் வங்கி, பணம் பெறுபவர் கணக்கில் மட்டுமே பணத்தை வரவாக வைக்கும். ஒரு காசோலையின் மேல் இடப்பக்கத்தில் 2 கோடுகள் வரையப்பட்டாலோ, “account payee”  என எழுதப் பட்டாலோ அது கோடிட்ட காசோலையாகக் கருதப்படும்.

இதுதவிர, பண உத்திரவாதம் அளிக்கும் பல காசோலைகளை வங்கிகள் வழங்க்குகின்றன.

சுய காசோலை (Self cheque):

சுய காசோலை என்பது, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் தனக்குத் தானே வரைந்து கொள்ளும் காசோலையாகும். இவர் கணக்கு வைத்திருக்கும் கிளையில் தானே சென்று பணத்தைப் பெற்றுக் கொள்வார். இதற்கு மாற்றாக ஏடிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின் தேதியிட்ட காசோலை (Post dated cheque):

இந்த காசோலை, எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பின் தேதியிட்டு அளிக்கப்படும். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை இது செல்லுபடியாகும்.

வங்கியாளரின் காசோலை (Banker’s cheque):

வங்கியாளரின் காசோலை மூலம் கணக்கை வைத்திருப்பவரிடம் இருந்து பணததைப் பெறாமல், தனது சொந்த நிதியில் இருந்து வங்கி பனத்தை எடுத்துக் கொள்ளும். சாதாரன காசோலையைப் போல வங்கியாளரின் காசோலையை நிராகரித்து விட முடியாது.

பயணியின் காசோலை (Traveller’s cheque):

ஒரு பயணி, வெளிநாட்டுப் பயணாத்தின்போது பணத்திற்குப் பதிலாகக் கொண்டு செல்லக் கூடிய காசோலை. பயணியின் காசோலை ஒரு திறந்த வகை காசோலை. ,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடியது. பயணியின் காசோலை உணவகங்களிலும், அனைத்து இடங்க்களிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பயணத்தின் போது, பயன்படுத்தாத காசோலைகளை மறு பயணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

-ந. ஆசிபா பாத்திமா பாவா

(மாணவப் பத்திரிக்கையாளர்)

நன்றி : நாணயம் விகடன் - 13.07.2016

காவல்நிலையத்தில் CSR பெற


காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்?

இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள (சில) பிரிவுகளின்படி  தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) பிரிவு 39ல் குறிப்பிடப் பட்டுள்ளது. 
ஆனால், பொதுமக்களாகிய நாம் நமக்கு சம்பந்தம் இருந்தால் மட்டுமே அல்லது நமக்கு துன்பம் நேர்ந்தால் மட்டுமே  போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து வருகின்றோம். இது மிகவும் தவறு.
எந்தத் தவறு நடந்து இருந்தாலும் முதலில் போலீஸ் ஸ்டேஷனில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் வகுத்தவர்கள் ஒரு மரபை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நீங்கள் நேரடியாக சென்று புகார் அளித்தாலும், அந்தப் புகாரை பற்றி விசாரணை செய்யச் சொல்லி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கே அவர் அனுப்பி வைப்பார்.
நீங்கள் நேரடியாக கோர்ட்டுக்கே சென்றால் கூட, அந்தப் புகார் பற்றி விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி,  அந்தப் புகாரானது நீதிமன்றத்தால் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆகவே, முதலிலேயே நாம் அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்தில் புகார் அளிப்பது நல்லது. 
 நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்போது அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டதாக காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் (CSR - Community Service Register)  என்று அழைக்கப்படுகிறது. 
எந்த ஒரு புகாராக இருந்தாலும் அதனை பதிவுசெய்து அந்தப்புகாரை தந்தவர்களுக்கு புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தருவது காவல்துறையினரின் கடமை ஆகும். 
மேலும், புகார் மனு ஏற்புச் சான்றிதழ் அளித்தது பற்றி அது பற்றிய குறிப்புடன் காவல்நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற பதிவேட்டில் பதிவு செய்யவும் வேண்டும்.
அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து  நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 
புகார் அளித்தவர்க்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும்.
ஒரு வேளை  கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 -  (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 
ஆன்லைன் மூலமாகவும் புகார் செய்து புகார் மனு ஏற்புச் சான்றிதழ் பெற முடியும். ஆனால், நேரில் செல்வதே சிறந்தது.
புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தாலோ அல்லது புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தர மறுத்தாலோ உங்கள் புகாரை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபாலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து புகார் செய்யப்பட்டதற்கான  ஒரு ஆதாரத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
எச்சரிக்கை:
பொய்யான புகாரைக் கொடுத்தால், புகார் கொடுத்தவர் இந்திய தண்டணைச் சட்ட்ம், பிரிவு - 211ன்படி இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டணை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார்.
காவல்துறை இயக்குநர் அவர்களின் ஆணை
காவல்நிலையங்களில் எந்தப்புகார் அளித்தாலும், அதற்கு தாமதமில்லாமல் உடனடியாக மனு ஏற்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட ஆணை நகல்,  காவல்துறை இயக்குநர் அவர்கள் வெளியிட்ட ஆணை நகல், மனு ஏற்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற  முகநூல் நண்பர் திரு Saravanan Palanisamy  அவர்கள் முகநூல் நண்பர் திரு  A.Govindaraj Tirupur அவர்கள் மூலமாக நமக்கு வழங்கி உதவியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் நன்றி. அதன் இணைப்பு கீழே உள்ளது.
https://drive.google.com/file/d/1-Lm3tVu8dHVE9eYQjwUtMEfvEpXht0Ky/view?fbclid=IwAR3xMs9rfQuFR04INEtS8uMmMOUwJiMNGcyPPsNuo7eEZaOgbfxYvoqWWto

********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.07.2016 

Tuesday, July 12, 2016

நல்ல நட்பு


நல்ல நட்பு - என்ன செய்ய வேண்டும்?
அறிவியலின் ஆற்றலை அறிய நமக்கு உறுதுணையாக அமைவது எண்களாகும். எண்களைப் பற்றிய சிந்தனைகள் நெடுங்காலமாக இந்தியாவில் தோன்றியுள்ளன. இன்றளவும் எண்களின் பண்புகளை விளக்குவதில் இந்தியர்கள் மிகவும் சிறந்து விளங்குவதை காண்கிறோம். உலகைத் தன்வசப்படுத்திய எண்களின் வெவ்வேறு பண்புகளையும் பரிமாணங்களையும் அறிய முற்படுவோம்.

இரு நபர்களில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டால் அவர்களை சிறந்த நண்பர்கள் என அழைப்போம். இவ்வாறு இருவரும் அதிக ஆண்டுகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் அவர்களை நட்புக்கு இலக்கணமானவர்கள் என இவ்வுலகம் போற்றும். மனித உறவுகளில் மட்டும்தான் நட்பைக் காண இயலுமா? சில எண்களிலும் இப்பண்பைக் காண முடியும் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக அமையும்.

எண்களின் தந்தை!

இதை விளக்குவதற்கு நாம் 2500 ஆண்டுகள் முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் பைதாகரஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் நிகழ்வைக் காணலாம்.

எண்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஓர் குழு அமைத்து மிகச் சிறப்பாக அதை விளக்கியவர் பைதாகரஸ். அக்காலத்தில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்பவர்களைக் கடவுளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எனக் கருதினார்கள். எனவே, பைதாகரஸ் அவரது சீடர்களுடன் இரவில் ரகசியமாக இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். எண்களில் பல புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்த இக்குழுவினரே உலகப் புகழ் பெற்ற பைதாகரஸ் தேற்றத்தையும் கண்டறிந்ததாக நம்பப்படுகிறது.

இன்று பைதாகரஸ் தேற்றம் இல்லையென்றால் உலகில் எந்தக் கட்டிடத்தையும் துல்லியமாகக் கட்ட இயலாது. பிரமிடு போன்ற பிரம்மாண்ட சின்னங்களில்கூட இந்தத் தேற்றம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பைதாகரஸ், அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான மேதையாக திகழ்ந்தார். எண்களின் தந்தையாகவும் இன்று அவர் கொண்டாடப்படுகிறார்.

ஆனால், பைதாகரஸ் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம் “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.

நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன், ஆனால், நான் எதிர்பார்க்கும் நபரைக் காண இயலவில்லை என பைதாகரஸ் பதிலளித்தார். அவ்வாறென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் மனிதருக்கு என்ன தகுதிகள் தேவைபடுகின்றன? என அந்த நபர் கேட்டார்.

நட்புக்கு இலக்கணமான எண்கள்

“220, 284 ஆகிய இரு எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க ஆசைப்படுகிறேன்” என பைதாகரஸ் கூறினார். “நீங்கள் கூறிய எண்களுக்கும், என் கேள்விக்கும் என்ன தொடர்புள்ளது?” என்று குழம்பிய நிலையில் அந்த நபர் கேட்டார்.

குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய பைதாகரஸ், 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படி கூறினார். சிறிது சிரமப்பட்டு அந்த நபர் இவ்விரு எண்களின் வகுத்திகளைப் பட்டியலிட்டார்.

220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220

284 →1,2,4,71,142,284

இந்தப் பட்டியலில் 220, 284 ஆகிய இரு எண்களை நீக்கி, இவ்விரு எண்களின் வகுத்திகளின் கூடுதலைக் கண்டறியும் படி பைதாகரஸ் கூறினார். அதன்படியே செய்த நபர் சிறிது நேரத்தில் ஆச்சரியமடைந்தார். இதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்? பைதாகரஸ் கூறியபடி கொடுத்த எண்களைத் தவிர்த்து மற்ற வகுத்திகளை கூட்டினால் கிடைப்பது,

220 → 1+2+4+5+10+11+20+22+44+55-110=284

284 →1+2+4+71+142=284

இதிலிருந்து 220 என்ற எண்ணிலிருந்து 284 என்ற எண் வெளிப்படுவதும், அதேபோல் 284 என்ற எண்ணிலிருந்து 220 என்ற எண் கிடைப்பதையும் உணர முடிகிறது. 220, 284 என்ற எண்களின் வகுத்திகளை, சம்பந்தப்பட்ட எண்களைத் தவிர்த்து, கூட்டினால் மற்றொரு எண் கிடைப்பதே அந்நபரின் வியப்புக்குக் காரணமாய் அமைந்தது. இவ்விரு எண்களில் எவ்வாறு ஒன்று மற்றொன்றை பிரதிபலிக்கிறதோ அதைப் போலவே நானும் என் நண்பரும் அமைய வேண்டும் என பைதாகரஸ் விளக்கினார்.

வியப்பின் விளிம்புக்கே சென்ற அந்நபர், இவரை ஏன் அனைவரும் “எண்களின் தந்தை” என போற்றுகின்றனர் என புரிந்துகொண்டார். எனவே ஒருவர், அவர் இல்லாத தருணத்தில்கூட மற்றொருவரை முழுமையாக வெளிப்படுத்தினால், அவ்விரு நபர்களும் நட்பின் இலக்கணமாக திகழ்வார்கள் என்பதே இந்நிகழ்வின் மூலம் பைதாகரஸ் புரிய வைக்கும் தத்துவமாகும்.

நட்பிலக்கண இணைகள்

நட்பின் பண்பை வெளிபடுத்தும் 220, 284 ஆகிய எண்களை நாம் ‘நட்பிலக்கண இணைகள்’ (Amicable Pairs) என அழைக்கலாம். இவ்விரு எண்கள் சிறிய அளவில் அமைந்த நட்பிலக்கண இணைகளாக அமைகின்றன. அதிவேகக் கணினியின் துணையுடன் இன்று நாம் கிட்டத்தட்ட 1.2 கோடி நட்பிலக்கண இணைகளை அறிவோம். பைதாகரஸ் கண்டறிந்த சிறிய நட்பிலக்கண இணைக்கு அடுத்த இணையான 1184, 1210 என்ற எண்களை நிக்காலோ பகணினி என்ற 15 வயது இத்தாலி மாணவர் 1866-ல் கண்டறிந்தார். இந்த நட்பிலக்கண இணையைப் பல கணித மேதைகள் தவறவிட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனவே, இன்றும் மாணவர்கள் சரியான முறையில் சிந்தித்தால் பல கணித உண்மைகளைக் கண்டறிந்து உலகை பிரமிக்க வைக்கலாம் என இது உணர்த்துகிறது.

நட்பின் மகத்துவத்தை உணர்த்தும் இந்த எண்களைக் கண்டு மகிழாதவர் இருக்க முடியுமா?

கட்டுரையாளர் :

கணிதப் பேராசிரியர், நிறுவனர், பை கணித மன்றம். 

தொடர்புக்கு: piemathematicians@yahoo.com

நன்றி : தி இந்து தமிழ் இந்து நாளிதழ் - 12.07.2016




பள்ளியில் ஆசிரியை ஆவதற்கு


பள்ளியில் ஆசிரியை ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?


இன்ஜினீயர், டாக்டர், விஞ்ஞானி போன்ற பணிகளில் சேர இன்றைய இளைஞர்கள் பெரிதும் ஆசைப்பட்டாலும் அவர்களுக்கு ஆசிரியர் பணி மீதான ஈர்ப்பும் குறைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்கள் ஆசிரியர் பணியை விரும்புகிறார்கள். இதர அலுவலகப் பணிகளைக் காட்டிலும் குடும்பத்தை நன்கு கவனித்துக்கொள்ள ஏற்ற பணியாக அவர்கள் கருதுவது ஆசிரியர் வேலையைத்தான்.
தயாராவது எப்படி?
இரண்டு வழிகளில் ஆசிரியர் பணியில் சேரலாம். ஒன்று பிளஸ் 2 முடித்துவிட்டு 2 ஆண்டுக் கால இடை நிலை ஆசிரியர் பயிற்சியை முடிக்க வேண்டும். அதன் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வெழுதிப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் ஆகலாம். மற்றொன்று பட்டதாரி ஆசிரியர் பணி. இதற்குப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு பி.எட். பட்டம் பெற வேண்டும். அதன் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்வெழுதிப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம். தற்போது பெரும்பாலானோர் பட்டதாரி ஆசிரியராகவே விருப்பப்படுகிறார்கள். முதுகலைப் பட்டதாரிகள் பி.எட். முடித்துவிட்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகலாம். எனவே, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அடிப்படைக் கல்வித்தகுதியாக இருப்பது பி.எட். பட்டம்.
இரண்டாண்டு காலப் படிப்பு
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி களும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பி.எட். பட்டம் வழங்கப்படுகிறது. முன்பு ஒரு ஆண்டுக் காலமாக இருந்த பி.எட். படிப்பு கடந்த ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுக் காலமாக மாற்றப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகிறது.
தனியார் கல்லூரிகளில் உள்ள பி.எட். இடங்களைக் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பி விடுவார்கள். அரசு மற்றும் அரசு கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் வழங்கப்படுகின்றன. ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை என்பதால் ஒரேயொரு விண்ணப்பம் போட்டால் போதும். கலந்தாய்வின்போது தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.
எங்கே படிக்கலாம்?
பி.எட். படிப்புக்கு அரசு கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500. தர அங்கீகாரம் பெறவில்லை எனில் கல்விக்கட்டணம் ரூ.41,500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி ரெகுலர் கல்லூரியில் சேர்ந்து பி.எட். படிப்பது ஒருபுறம், இன்னொரு புறம் தொலைதூரக் கல்வி திட்டத்தில் 2 ஆண்டுக் கால பி.எட்.-ஐ படிக்கலாம். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரிகள் இதில் சேரலாம்.
இதற்கு 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவமும் அவசியம். இதற்கான நுழைவுத்தேர்வு, சிறப்பு மதிப்பெண் (பட்டப் படிப்பு மதிப்பெண், ஆசிரியர் பணி அனுபவத்துக்கு மதிப்பெண்) அடிப்படையில் நடைபெறு கிறது. இதுபோன்று பணியில் இருந்துகொண்டும் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். பட்டம் பெறலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 12.07.2016

Sunday, July 10, 2016

காவல்துறை அதிகாரியையும் கைது செய்ய


காவல்துறை அதிகாரியையும் கைது செய்ய வைக்கலாம்!
என்ன செய்ய வேண்டும்?
                             ஒருவர் அரசு அதிகாரியாக இருந்து, நீதிமுறை நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும், சட்டத்திற்கு முரணானது என்று தெரிந்து இருந்தும், அவரால் அளிக்கப்படுகின்ற அறிக்கை, கட்டளை அல்லது தீர்ப்பு வேறு எதையாவது நெறிகேடான முறையில் அல்லது குரோத மனப்பான்மையுடன் செய்கின்ற அல்லது பகிர்கின்ற (காவல்துறை அதிகாரி மட்டுமல்ல) யாராக இருந்தாலும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடிய தண்டணை விதித்து தண்டிக்கப்படுவார். அபராதமும் விதிக்கப்படுவார். அல்லது இரண்டுமே விதித்து தண்டிக்கப்படுவார்.
                   கைது செய்யப்படக்கூடிய குற்றம் செய்தவரை, கைது செய்யாமல் விட்டு வைக்கும் காவல்துறை அதிகாரி இப்பிரிவின் கீழ் தண்டிக்கப் படுவார்.
                              முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டிய புகாரில், சி.எஸ்.ஆர். மட்டும் பதிவு செய்கின்ற காவல்துறை அதிகாரி இப்பிரிவின் கீழ் தண்டிக்கப் படுவார்.
                           
                              சட்டத்துக்கு முரணாக தீர்ப்பு வழங்கினாலும், ஊழல் முறையில் அல்லது தீய நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கினாலும் நீதிபதியைக்கூட   இந்தப்பிரிவின் கீழ் தண்டணைக்கு உள்ளாக்கலாம்.

Saturday, July 9, 2016

யாருக்கெல்லாம் வருமானவரி பொருந்தும்?


யாருக்கெல்லாம் வருமானவரி பொருந்தும் - என்ன செய்ய வேண்டும்?

யாருக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்? 
எத்தனைச் சதவீதம் வரி கட்ட வேண்டும்?

வருமான வரி நான் கட்ட வேண்டுமா, இல்லையா என்று சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு யாருக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்? எத்தனைச் சதவீதம் வரி கட்ட வேண்டும்? என்பதைப் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

வயதுக்கேற்ற பிரிவுகள் 

வருமான வரி செலுத்துபவர்களை வயதுக்கு ஏற்றவாறு மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். 

பொதுப் பிரிவினர்கள் - ஆண்/பெண் 60 வயதுக்குள் 

மூத்த குடிமக்கள் - 60 முதல் 80 வயதுக்குள்

மிகவும் மூத்த குடிமக்கள் - 80 வயதுக்கு மேல்.

அடிப்படை வருமான வரி விலக்கு 

பொதுப் பிரிவினர்களுக்கு ரூ.2,50,000 வரையும், 
மூத்த குடிமக்களுக்கு 3,00,000 வரியும், 
மிகவும் மூத்த குடிமக்களுக்கு - 5,00,000 வரியும் 

வரிவிலக்கு உண்டு.

10% வரி யாருக்குப் பொருந்தும் ?

 பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 2,50,001 முதல் 5,00,000 வரை இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 3,00,001 முதல் 5,00,000 வரை இருந்தால் நீங்கள் 10% வரி கட்ட வேண்டும். மிகவும் மூத்த குடிமக்களுக்கு வரி இல்லை.

20% வரி யாருக்குப் பொருந்தும் ?

 பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால் நீங்கள் 20% வரி கட்ட வேண்டும்.

30% வரி யாருக்குப் பொருந்தும்? 

பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரு.10,00,000 மேல் இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரு.10,00,000 மேல் இருந்தால், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரு.10,00,000 மேல் இருந்தால் நீங்கள் 30% வரி கட்ட வேண்டும்.

1 கோடிக்கும் மேல் வருமானம் இருந்தால்... 

உங்கள் வருமானம் 1 கோடிக்கும் மேல் இருந்தால் கூடுதல் கட்டணமாக 15% வரி மற்றும் கல்வி தீர்வையாக 3% வரி என மொத்தம் 18% கூடுதல் வரி நீங்கள் வரியாகச் செலுத்த வேண்டும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » பர்சனல் - 09.07.2016




பொய்யாவணம் புனைதல்-தண்டணை


பொய்யாவணம் புனைதல்-தண்டணை-என்ன செய்ய வேண்டும்?

பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு ”பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆவணத்தை பொய்யாக புனைபவர்” இந்தப் பிரிவின் கீழ் குற்றம் செய்தவர் ஆவார்.

உதாரணமாக, 
பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் அந்த சங்க நிர்வாகிகளால் நிறைவேற்றப் படுகின்றன. அதனை ஏற்றுக் கொண்டு உறுப்பினர்கள் கையெழுத்து போட வேண்டும். தேவையான கையெழுத்துக்களைப் போட அதிகமான உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 
உறுப்பினர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள் என்பதை மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நிரூபிப்பதற்காக பொய்யான பல கையெழுத்துக்கள் அந்த சங்க நிர்வாகிகளால் போடப் படுகிறது. மாவட்டப் பதிவாளர் அவர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பொய்யாவணம் தயாரிக்கப் படுகிறது. இதில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் இந்தப் பிரிவி்ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
அளிக்கப்படுகின்ற தண்டணை
பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு ”பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆவணத்தை பொய்யாக புனைபவர்” ஏழு ஆண்டுகள்வரை நீடிக்கக் கூடிய சிறைத் தண்டணைக்கு உள்ளாக்கப் படுவார். மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

மேலும் இதற்கு பிடியாணை தேவையில்லை. ஜாமீனும் கிடையாது.

Friday, July 8, 2016

வாடகை வீடு நல்லதா? சொந்த வீடு நல்லதா?


வாடகை வீடு நல்லதா? சொந்த வீடு நல்லதா? 
என்ன செய்ய வேண்டும்?

புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிடம் போய் எதற்காக வீடு கட்டியிருக் கிறீர்கள் என்று கேளுங்கள்... சிலர், ''வசதி வந்துவிட்டது; கட்டிவிட்டேன்'' என்பார்கள். வேறு சிலர், ''சொந்தக்காரர்கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் கட்டிவிட்டேன்'' என்பார்கள். ஆனால், பெரும் பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்தவீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்த போது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான்! 

ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்காமல் சொந்த வீடு கட்டிக் கொண்டு தப்பிப் போனவர்கள் தான் ஏராளம்!

ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றால், இன்னொரு பக்கம் வாடகைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட்டுக் காரரையே துரத்திவிட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை! இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட அவசியமில்லாமல், உறவு நீடித்து நிலைத்து நிற்க சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது நல்லது!

இதுகுறித்து சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான பி.பி. சுரேஷ்பாபுவை சந்தித்துப் பேசினோம்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கியமான வற்றை பட்டியல்போட்டுச் சொன்னார் அவர்.

அக்ரிமென்ட் அவசியம்..!

''வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முதலில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம். பிற் காலத்தில் ஏதாவது பிரச்னை வரும்போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பார்.

வீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடும். அதனால், 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசியம்.

பொதுவாக, வீட்டு உரிமை யாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா? ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத் துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்துவிட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவு வதாக அமைந்துவிடும் என்பதால் அல்ல! அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண்டாடிவிட முடியாது.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியிருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை!

பதிவுக் கட்டணம் எவ்வளவு?

அக்ரிமென்டில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால் அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப்பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான்ஸ், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு சுமாராக ஒரு சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத்து, பதினைந்து ஆண்டுகள் வரை போட்டுக் கொள்ளலாம்.

அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும். அதனால், கூடுமான வரை ஆரம்பத்திலேயே தேவையான அனைத்து விஷயங்களையும் அதில் சேர்த்துவிடுவது நல்லது.

அட்வான்ஸ்

''வீட்டுக்கான அட்வான்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வாங்குகிறார்கள். பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தியம்!''

வாடகை!

''வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை. புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம்.

அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லி வீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம். அதாவது தினசரி தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது குறைக்கச் சொல்லலாம்; கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினால் வாடகையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அதற்குக் குடித்தனக்காரருக்கு உரிமை உண்டு.  

ரசீது அவசியம்!

வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதிவாங்கிக்கொண்டாலே போதுமானது. தேவைப் பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.    

வாடகை தர மறுத்தால்..?

'வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அது போன்ற நேரங்களில் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.

வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில் மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.

இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்ப தற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.  

காலி செய்ய வைக்க..!

குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்ற வற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.

அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கிய தற்கான ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும்.

வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை  கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.

வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப் பயன்படுத்தாமல் பூட்டு போட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம். வீட்டை உள்வாடகைக்கு விடுவது பல நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்தும் ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் தெளிவுப் படுத்திக் கொள்வது நல்லது.

வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர் இழப்பீடு பெற்றுக் கொள்ள வழி இருக்கிறது.

இப்படி வீட்டை வாடகைக்கு விடுகிறவருக்கும் குடித்தனக்காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது தெரியாததால்தான் பல சமயங்களில் மோதல் வந்துவிடுகிறது. இப்போது தெரிந்து விட்டது அல்லவா? இனி சுமூகம்தான்!

நன்றி : நாணயம் விகடன் - 16.10.2011

பட்டாசுக் கடை உரிமம் பெற


பட்டாசுக் கடை உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

2008ம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின்படி பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கவனத்திற்கு,

*** பட்டாசுக் கடை உரிமம் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

***   குடோனுடன் கூடிய பெரிய பட்டாசுக்கடை லைசென்ஸ் எடுக்க   சென்னையில் உள்ள Revenue Officer, Greater Chennai Corporation, Chennai-3. என்ற முகவரியை அணுக வேண்டும்.


***  பட்டாசு கடை வைக்கும் இடமானது கல் மற்றும் தார்ச்சு (கான்கிரீட்) கட்டிடமாகத்தான் இருக்க வேண்டும் .

*** பட்டாசுக்  கடையின், இரு புறங்களிலும் வாசல் கட்டாயம் இருக்க வேண்டும். 

*** பட்டாசுக் கடையில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

***கடை வைக்கப்படும் இடமானது இருக்கும் பகுதியின் பஞ்சாயத்து அல்லது டவுன் பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டிட வரைபட பிரதிகள் ஆறு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

***போலீஸ், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை ஆகிய 3 முக்கிய துறைகளில் இருந்தும் அனுமதி (தடையின்மைச் சான்று) பெற வேண்டும். 

 ***தற்காலி பட்டாசுக் கடை வைத்து  விற்பனை செய்வதற்கும் லைசென்ஸ் எடுக்க வேண்டும். அதற்கும் தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, போலீஸார் ஆகியோரிடம் இருந்து தடையில்லா சானறிதழ் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

***நீங்கள் பட்டாசுக் கடை வைக்கப்போகும் இடம் அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரியிடம் இருந்து, உதாரணத்துக்கு மாநகராட்சி, நகராட்சியாக இருந்தால் கமிஷனர் அவர்களிடமிருந்து, டவுன் பஞ்சாயத்தாக இருந்தால் செயல் அலுவலர் அவர்களிடமிருந்து இருந்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். 

*** பட்டாசுக் கடையானது வாடகைக் கட்டிடமாக இருந்தால் நோட்டரி பப்ளிக் வக்கீல் கையெழுத்துடன் கூடிய வாடகை ஒப்பந்த பத்திரம், உரிம கட்டணம், 500 ரூபாய் செலுத்தி அதற்கான அசல் சலானுடன், மூன்று பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவுடன்  மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிக்கும் காலகட்டத்தில் மனு கொடுக்க வேண்டும்.

***பட்டாசு கடைக்கு உரிமம் பெற்றவர்கள் உரிமம் பெற்ற கட்டிடத்தில்  அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலும் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது. 

*** அனுமதி பெறாத இடங்களில் பட்டாசுகளை ஸ்டாக் வைக்கக்கூடாது.

***ஒரு பட்டாசுக் கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 15 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 

***உதிரிபட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. 

***வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுகளை வெடித்து காட்டக்கூடாது. 

***கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் சேரவிடக்கூடாது.

*** தீப்பற்றக்கூடிய பொருட்களை கடையில் வைத்திருக்கக் கூடாது.

*** பட்டாசுக் கடையிலோ அல்லது கடையின் அருகிலோ புகை பிடிக்கக் கூடாது. இது பற்றிய அறிவிப்பையும் பார்வையில் படும் இடங்களில் எழுத வேண்டும்.

*** பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் பெற்ற கடையில், இரு தீயணைப்பு கருவிகள், இரு வாளிகளில் தண்ணீர், மணல், ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.  

*** பட்டாசு கடைக்கு பெற்ற உரிமத்தை தணிக்கையின் போது அலுவர்களின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும்.

*** கடையின் வெளிச் சுவற்றில் பார்வையில் தெரியும்படியாக கடையின் பெயர்,  உரிமம் எண்,உரிமம் பெற்றவர் பெயர், அனுமதிக்கப்பட்ட பட்டாசு இருப்பு, அதன் வகைகளை பெயிண்டினால் எழுதி வைக்க வேண்டும்.

***பட்டாசுகளின் இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பாராமரிக்கப்பட வேண்டும்.

*** பட்டாசுக் கடை வைப்பதற்கு அனுமதி பெற்றவர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய  வேண்டும்.

*** 270 சதுர அடியில் மட்டுமே பட்டாசு கடை அமைக்க வேண்டும். அதிக அளவில் பட்டாசுகளை தேக்கி வைக்கக் கூடாது. பள்ளி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், வழிபாட்டுத் தலங்கள், மின் விநியோக பெட்டிகள் அருகே பட்டாசு கடை அமைக்க அனுமதி கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு கடை யில் வைத்து பட்டாசுகளை வெடித்துக் காட்ட கூடாது. கடைக்கு உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் தனித்தனி வழி அமைக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இதை மீறும் பட்டாசு விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிகளை மீறும் பட்டாசுக் கடைகள் பற்றி அப்பகுதியின்  கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது  வட்டாட்சியர் அவர்களிடம் புகார் கொடுக்கலாம்.

பட்டாசு கடைகளில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும், தாசில்தாருக்கும், உரிமம் வழங்கிய அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

Thursday, July 7, 2016

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை


மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற 
என்ன செய்ய வேண்டும்?

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நாகை  மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டு கல்வி உதவித் தொகையாக ரூ. 1,000-மும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலுவோருக்கு ரூ. 3 ஆயிரமும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நிலைகளில் பயிலுவோருக்கு ரூ. 4 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

பட்டப்படிப்பு உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரமும், முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ. 7 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நிலைகளில் பயிலுபவர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், பட்டப் படிப்புப் பயிலுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும், தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலுபவர்களுக்கு ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படும்.

இத்திட்ட உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை

na‌ga‌pa‌t‌t‌i‌na‌m.‌n‌ic.‌i‌n 

 என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்தும் பெற்றும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் - 08.07.2016