disalbe Right click

Thursday, June 23, 2016

அடுத்தவர்களுக்கு விபத்து நேர்ந்தால்


அடுத்தவர்களுக்கு விபத்து நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
விபத்தில் சிக்கியவர்களுக்கு அச்சமின்றி உதவலாம் 
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் காவல் துறை அலைக்கழிக்குமோ என அச்சப்படத் தேவையில்லை. உச்சநீதிமன்றமே அதற்கான வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் வாகனம் மோதி படுகாயத்துடன் சாலையில் உயிருக்குப் போராடினர். அவர்களை மீட்க யாரும் முன்வரவில்லை. மாறாக பலரும் தங்களது செல்லிடப்பேசியில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இதேபோல, இளைஞர் ஒருவரது உடல் இரண்டு துண்டாகி சாலையில் கிடந்ததையும் செல்லிடப்பேசியில் பதிவேற்ற மட்டும் செய்தனர். உதவி கோரி கடைசி நேரத்தில் போராடியவர்களுக்கு யாரும் முன்வரவில்லை. போலீஸாரின் விசாரணை மற்றும் அலைக்கழிப்புகள், சாட்சியம் ஆகியவற்றுக்கு அஞ்சியே இந்த அவலநிலை அரங்கேறி வருவதை மறுப்பதற்கில்லை.

நாடு முழுவதும் விபத்தில் சிக்குவோர் சரியான நேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைத்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, சாலை விபத்துகளில் சிக்குவோரை காப்பாற்ற நினைப்பவர்களை போலீஸ் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் சென்றால் வழக்கு வருமோ என இனி அச்சமடையத் தேவையில்லை.

சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறி, சேவ் லைஃப் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில், சாலை போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் சுந்தர், முன்னாள் தலைமை விஞ்ஞானி நிஷி மிட்டல் அடங்கிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்.

இக் குழுவின் அறிக்கையில், மாநில சாலைப் பாதுகாப்பு கவுன்சில், விபத்து பகுதிகளை அடையாளம் காண்பது, நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை தடை செய்வது, ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளை வழங்கியது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சாலைப் பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்தது. விபத்துகளில் சிக்கும் நபர்களுக்கு உதவி புரிந்தால் போலீஸாரின் தொல்லைகள், அலைக்கழிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.

இதுதொடர்பாக, திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் திருஞானம் கூறுகையில், உச்சநீதிமன்ற புதிய வழிகாட்டுதல்களின்படி பொதுமக்கள் எந்தவித அச்சம், தயக்கமும் இன்றி, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்கலாம். அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து அனைத்து உதவிகளையும் வழங்கி உயிரைக் காக்கலாம் என்றார்.

காவல்துறை நிர்பந்தம் கூடாது

சாலை விபத்தில் காயமடைந்த நபர்களை மருத்துவமனையில் சேர்த்த நபர்கள் கண்ணால் கண்ட சாட்சியாக இல்லையெனில், அவர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து செல்ல அனுமதிக்க வேண்டும். கண்ணால் கண்ட சாட்சியிடம் முகவரி மட்டும் பெற்று அனுப்பவிட வேண்டும். சன்மானமும் வழங்க வேண்டும்.

விபத்து குறித்து நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தகவல் தரும் நபர்களது பெயர் விவரங்களை கேட்டு போலீஸார் நிர்பந்தப்படுத்தக் கூடாது. கண்ணால் கண்ட சாட்சியாக முன்வரும் நபர்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கக் கூடாது. மேலும், ஒரே கட்டமாக விசாரணையை முடித்து அனுப்ப வேண்டும். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்து வரும் நபர்களிடம் எந்தவித பணமும் கேட்டு மருத்துவமனை நிர்வாகம் நிர்பந்தம் செய்யக் கூடாது. முதலில் சிகிச்சையை தொடங்க வேண்டும். இல்லையெனில் உதாசீனப்படுத்தும் மருத்துவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் உதவி செய்வோரிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கமாட்டோம் என்பதை மருத்துவமனை நிர்வாகம் விளம்பரம் செய்ய வேண்டும். உதவி செய்யும் நபர்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்க தொடர்புடைய மருத்துவமனை அத்தாட்சி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பலி எண்ணிக்கை குறைய வாய்ப்பு!

உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்கள் மூலம் விபத்தில் சிக்கும் நபர்களுக்கு விரைந்து உதவிகள் கிடைக்கும். காலதாமதத்தால் உயிரிழக்கும் நிகழ்வுகள் குறையும். கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு நாடு முழுவதும் லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 2 ஆயிரம் விபத்துகள் நடைபெறுகின்றன. 400 முதல் 500 பேர் வரை உயிரிழக்கும் சூழல் உள்ளது. இதில், குழந்தைகள் அதிகம் என்பது கவலைக்குரியது. இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், கட்டாயம் பலி எண்ணிக்கையை குறைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நன்றி : தினமணி நாளிதழ் - 24.06.2016

Wednesday, June 22, 2016

ஃபேஸ்புக் - டாக் நீக்க


ஃபேஸ்புக் - டாக் நீக்க என்ன செய்ய வேண்டும்?
படங்களைப் பகிர்ந்து கொள்வதும், நண்பர்களை அந்தப் படங்களுக்கு டேக் (Tag) செய்வதும், பேஸ்புக்கில் வழக்கமான ஒரு பழக்கமாகும். 

சில வேளைகளில் நாம் ஒரு படத்தில் இருக்கிறோமோ இல்லையோ, அல்லது நமக்கு அந்தப் படம் பிடிக்கிறதோ இல்லையோ, நம் நண்பர்களில் சிலர் நம்மை இணைத்துவிடுகின்றனர். 

இது சில வேளைகளில் நமக்கு எரிச்சலைத் தருகிறது. ஒரு சில படங்கள் நம் நல்ல பெயரைக் கெடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது. 

அது போன்ற வேளைகளில், இதனைக் கட்டுப்படுத்த முடியாதா என்று ஆசைப்படுகிறோம். எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.

நிலை 1: 
முதலில் பேஸ்புக்கில் லாக் இன் செய்து, Settings கிளிக் செய்திடவும். இது வலது ஓரத்தில், தலைகீழாகக் காணப்படும் முக்கோணத்தில் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் இருக்கும். 

நிலை 2: 
இனி கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம் உள்ள மெனுவில் Timeline and Tagging என்பதைக் கிளிக் செய்திடவும். இப்போது Timeline and Tagging Settings என்ற விண்டோ கிடைக்கும். 

நிலை 3: 
இதில் மூன்றாவது பிரிவாக How can I manage tags people add and tagging suggestions?
என்ற பிரிவு இருக்கும். இதில் உங்களை டேக் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பல ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் வகையில் செட்டிங்ஸ் அமைத்து வெளியேறவும். 

இனி நீங்கள் இடம் தராமல், யாரும் உங்களை எந்த பதிவுடனோ அல்லது போட்டோவுடனோ டேக் செய்திட முடியாது.

ஏற்கனவே டேக் செய்த போட்டோக்களை என்ன செய்திடலாம்? 

இந்தப் போட்டோக்களை நீக்க, போட்டோவினை ஆல்பத்திலிருந்து திறக்கவும். 
உங்கள் பெயர் அருகே, கர்சரைக் கொண்டு சென்றால், Remove tag என்று காணப்படும். அதில் கிளிக் செய்திடவும். 

இந்த வசதி காட்டப்படவில்லை என்றால், கீழாக வலது பக்கம் கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலைக் காணவும். பின்னர் இதில், Remove Tag. என்பதில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவுடன் கிடைக்கும் கட்டத்தில், ஏன் நீங்கள் நீக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்படும். இதற்குப் பதில் அளிக்காமலும் விடலாம். டேக் நீக்கப்படும்.

சில வேளைகளில், சில போட்டோக்களில் நீங்கள் டேக் செய்யப்பட்டிருப்பீர்கள். அதனை நீக்க விரும்பமாட்டீர்கள். ஆனால், அது குறித்து வரும் லைக், கமெண்ட் குறித்து தகவல் உங்களுக்குத் தேவை இல்லை என எண்ணலாம். 

இதற்கு போட்டோவினைக் கிளிக் செய்து, கமெண்ட் பாக்ஸுக்கு மேலாக உள்ள, Unfollow Post என்பதில் கிளிக் செய்திடவும். 
இதன் பின்னர், நீங்கள் டேக் செய்த போட்டோவில் இணைக்கப்படும் தகவல்கள் கிடைக்காது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.06.2016

கோலம் போடுவதால் நன்மை


கோலம் போடுவதால் நன்மை-என்ன செய்ய வேண்டும்?
கோலம், தமிழ்ச் சமூகம் கண்டுபிடித்த அலங்காரக் கலை. உண்மையில் கோலத்தின் பின்னே இருப்பது வெறும் அழகியல் உணர்வு மட்டும் அல்ல. இது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் அற்புதப் பயிற்சி. நம் நலம் காக்கும் யோக முறை. தினமும் முறையாகக் கோலமிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை கிடைக்கும்.

யோகாவில் மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியமானது. கோலமிடுபவர்களுக்கு அவர்களையும் அறியாமலேயே சீரான மூச்சுப்பயிற்சி கிடைக்கிறது. குனியும்போது வயிறு சுருங்குகிறது. அப்போது மூச்சுக் காற்று பலமாக வெளியே செல்கிறது, நிமிரும்போது மீண்டும் காற்றை உள்ளே இழுக்கிறோம். இதனால், நுரையீரல் நன்மை பெறுகிறது. 

நாம் எப்படித் தொடர்ச்சியாக வார்த்தைகளை உபயோகித்துப் பேசுகிறோமோ... அதேபோல் தொடர்ச்சியாகக் கோலம் போட்டு பழகுபவர்களின் மூளை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தர்க்கமாக சிந்தித்துப் பழகும். இது மூளைக்கான ஜிம் பயிற்சி போன்றது.

கோலம் போடக் குனிந்து நிமிரும்போது, முதுகுத்தண்டுக்குக் கீழே இருக்கும் மூலாதாரச் சக்கரம் இயக்கம் பெறும். இதன் மூலம் உடல் முழுதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கும். உடல் சக்தி பெருகும்.

கண்களில் ஆறு ஆக்டேவ் தசைகள் உள்ளன. மருத்துவர்கள்கூட இதற்குத்தான் பயிற்சி கொடுப்பார்கள். மேல், கீழ், இடம், வலம் என அனைத்துப் பக்கங்களும் பார்ப்பது, கருவிழியைச் சுழற்றுவது போன்ற பயிற்சிகள் கோலமிடும்போது இயல்பாகவே நிகழ்வதால், பார்வைத்திறன் மேம்படும்.

உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதால், இதயம் முறையாக ரத்தத்தை பம்ப் செய்யும். இதயத்துடிப்பும் சீராக இருக்கும்.

குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஓர் உடற்பயிற்சிக்கு இணையானது. எனவே, கோலமிடுகையில் பெண்களுக்கே உரித்தான இயற்கையான நளினம் வெளிப்படும். அவ்வாறு தினமும் கோலமிட்டால் உடல்பருமனைத் தவிர்க்கலாம்.

கால் மூட்டுகளை மடக்கிக் கோலமிடுவதால் மூட்டுக்கு நல்ல பயிற்சியாக அமையும். மூட்டுவலி போன்ற பிரச்னைகள் வராது.

பெரிய கோலம் போட்ட பின் உள்ளே சிறு மாற்றம் செய்யும்போதோ, கலர் கொடுக்கும்போதோ, கோலத்தில் கால் படாமல் இருக்க, கால் கட்டைவிரல் மீது நிற்போம். இப்படி உடலின் மொத்த எடையையும் கால் கட்டைவிரல் மீது இறக்கும்போது, அது பாதத்துக்கு மிகுந்த வலுவைச் சேர்க்கிறது.

குனிந்து, நிமிரும்போது வயிறு சுருங்கி விரிந்து செயல்படுவதால், ஜீரணக் கோளாறு ஏற்படாது.

கர்ப்பப்பையும் சுருங்கி விரிவதால், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்காது. மேலும், சிறு வயதிலிருந்தே தொடர்ந்து கோலம் போடுவதன் மூலம் சுகப்பிரசவம் நடக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன!

- தா.நந்திதா

நன்றி : டாக்டர் விகடன் - 01.06.2016

பாஸ்போர்ட் - இனி போலீஸ் விசாரணை கிடையாது


பாஸ்போர்ட் - இனி போலீஸ் விசாரணை கிடையாது
என்ன செய்ய வேண்டும்?

பாஸ்போர்ட் வாங்கும் போது இனி போலீஸ் விசாரணை  இருக்காது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது பான்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்களார் அடையாள அட்டை, மூத்த குடிமக்களுக்கான அட்டை என ஏதாவது ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் ரேஷன் கார்டு, மின்சார கட்டணம் செலுத்தும் ரசீது, வீட்டு வாடகை ரசீது ஆகியவற்றை பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஆவணங்களாக  சமர்ப்பிக்க  வேண்டும். இப்படி செய்யும் போது அதிக சிக்கலாக மற்றும் கடினமாக இருக்கும் போலீஸ் விசாரணையைத்  தவிர்க்க முடியும். இது முதல் முறையாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்குதான்.

இப்போது இந்த மாற்றம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம் பல்வேறு மாநிலங்களிலும் போலீஸ் விசாரணையை  முடிப்பதற்கே பல நாட்கள் ஆகிகின்றன. இதனால் பாஸ்போர்ட் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதால்தான். 

வழக்கமாக போலீஸ் விசாரணையை முடிப்பதற்கு வளர்ச்சி அடைந்த மெட்ரோ நகரங்களில்  10-15 நாட்களும், கிராமப்புறங்களில்  20-30 நாட்களும் ஆகின்றன. தமிழகத்தில் 18 நாட்களும், குஜராத்தில் 27 நாட்களும், டெல்லியில் 12 நாட்களும், அசாமில் சராசரியாக 265 நாட்களும் ஆகின்றன.

இதைக் குறைக்கும் விதமாக பெங்களூருவில் ஆன்லைன் மூலம் போலீஸ் விசாரணை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வேலை எளிதாக முடிக்கப்பட்டு பாஸ்போர்ட் 10 நாட்களில் வழங்கப்படுகிறது. இது எல்லா மாநிலத்திலும் அமலானால் நன்றாக இருக்கும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கி இருக்கிறது எனலாம்.
  
இது குறித்து   மண்டல பாஸ்போர்ட் அதிகாரி (Regional Passport Officer) க.பாலமுருகனிடம் பேசினோம். 

"போலீஸ் விசாரணை என்பது ஒருவரின் குற்றப் பின்னணி குறித்து தெரிந்து கொள்வதற்காகத்தான். முன்பெல்லாம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் நேரில் வரமாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள முறையில் ஒருவருக்கு பாஸ்போர்ட் வேண்டுமெனில் கட்டாயம் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு நேரில் வரவேண்டும்.  அங்கு வைத்துதான் விண்ணப்பதாரரை புகைப்படம் எடுப்பது, கைரேகை  பதிவு செய்வது ஆகியவை செய்யப்படுகிறது.  அதோடு இரண்டு டிசிஎஸ் பணியாளர்கள், இரண்டு அரசு அதிகாரிகள் என 4 நபர்களின் விசாரணைக்கு பிறகுதான் பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்படும்  இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. இதனால் போலி பாஸ்போர்ட் பெறுவது மற்றும் குற்றப்  பின்னணி இருப்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவது குறைந்துள்ளது. 

ஆனால் இப்போது உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்பங்களின்படி, காவல் நிலையத்தில் பதிவாகும் புகார்களின் விவரங்கள் அனைத்தும்  பாஸ்போர்ட் வழங்கும் மையத்துடன் இணைக்கப்பட்டு விடும். இதன் மூலமாக குற்றப் பின்னணி இருப்பவர்களின் விவரத்தை எளிதாக  தெரிந்து கொள்ள முடியும்.  

இதற்கு முன்பு, போலீஸ் விசாரணை இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை இருந்தது. ஆனால் அந்த முறையில் பாஸ்போர்ட் வழங்கிய பிறகு போலீஸ் விசாரணை இருக்கும். அதாவது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகிய ஏதாவது ஒரு ஆவணத்துடன்,  விண்ணப்பதாரர், என் மீது எந்தவிதமான வழக்கும் இல்லை. நான் வெளிநாடு செல்வதால் எந்தவிதமான சிக்கலும் வராது' என இணைப்பு படிவம் 'ஐ' யில் கையெழுத்துப் போட்டு கொடுக்க வேண்டும். 

இதைக்  கொடுத்த பிறகு பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வந்த 4வது நாளில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். இதற்கு சாதாரண கட்டணம்தான். இருப்பினும் பாஸ்போர்ட் பெறுபவர் குறித்து அவரது வாழ்நாளில் ஒருமுறையாவது போலீஸ் விசாரணை இருக்கும்" என்றார்.

போலீஸ் விசாரணைக்கு பயந்தே பலரும் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை தவிர்ப்பார்கள். இனி அந்த கவலை இருக்காது. எளிதாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

- இரா. ரூபாவதி

நன்றி : விகடன் செய்திகள் = 20.06.2016

Tuesday, June 21, 2016

தங்கநகை வாங்கும்முன்


தங்கநகை வாங்கும்முன் என்ன செய்ய வேண்டும்?
தங்க நகை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை, , சென்னை, ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதன் வழங்குகிறார்…

1.சேதாரம்

வாங்கும் நகைகளின் வடிவமைப்புக்கு ஏற்ப சேதாரம் இருக்கும். பொதுவாக டிசைன் குறைவான நகைகளுக்கு சேதாரம் குறைவாக இருக்கும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். இது நகைக்கடைகளுக்கு ஏற்ப மாறுபடும். சில கடைகள், சேதாரம் குறைந்தபட்சம் 2%ல் இருந்து ஆரம்பிக்கும் நகைகளை விற்பனை செய்கின்றன. சில கடைகளில் குறைந்தபட்ச சேதாரமே 9%ல் இருந்துதான் ஆரம்பிக்கும்.

 2. தர முத்திரை

தங்க நகைகளில் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்றிதழான `பிஐஎஸ்’ (BIS – Bureau of Indian Standards) ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கவும்.

3.ஐந்து அம்சங்கள்

`பிஐஎஸ்’ முத்திரை என்பது கீழ்க்காணும் ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது…
** பிஐஎஸ் முத்திரை.

** தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). 875, 833, 792 என, தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும்.

** `பிஐஎஸ்’ முத்திரை வழங்கிய சென்டரின் முத்திரை.

** குறிப்பிட்ட நகைக்கு `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்து, 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்து, 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்து… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் ஆல்ஃபபெட் வரிசை நகர்ந்துகொண்டே வரும். நடப்பு ஆண்டுக்கு, அதாவது 2016-க்கு ‘Q’ என்ற எழுத்து இருக்கும்).

**நகை விற்பனையாளரின் முத்திரை.

4.ஆன்டிக் நகைகள்

ஆன்டிக் நகைகளுக்கு  (பழங்கால) சேதாரம் 25% – 30% வரை கூட செல்லும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதைத் தவிர்ப்பது நலம். அதேபோல், கல் நகைகளும் ஒப்பீட்டளவில் தங்க நகைகளை விட விலையில் எகிறும் என்பது குறிப் பிடத்தக்கது.

5.மெஷின் செயின் வேண்டாம்

மெஷினில் செய்யப்பட்டும் செயின்கள் அறுந்துவிட வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்கவும். ஆனால், எது மெஷின் கட் செயின், எது கையால் செய்யப்பட்டது என்பதை வாடிக்கையாளர்கள் கண்டறிந்துகொள்வது சிரமமே! நம்பிக்கையுள்ள நகைக்கடையில் வாங்கும்போது, அவர்களிடமே அதுபற்றி கேட்டுத் தெளிந்து கொள்ளலாம்

6.காரட், 916… விளக்கம்

தூய தங்கத்தை நகைகளாகச் செய்தால் உடைந்துவிடும். எனவே, அதன் ஸ்திரத்தன்மைக்காக மற்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. 24 கேரட் தங்கம் என்பது, 100% தூய தங்கம். 916 தங்கம் என்பது, 91.6% தூய தங்கம். அதாவது, அதில் மீதியுள்ள சதவிகிதம் மற்ற உலோகங்களின் கலவை. 22 காரட் சுத்த தங்கமான இதில், மற்ற இரண்டு காரட் உலோகக் கலவை சேர்ந்துள்ளது. இப்படி கலந்தால்தான் தங்கத்தை நகையாக வார்க்க முடியும். இதில் 19, 18, 17 காரட் எனச் செல்லச் செல்ல, தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும்.

7.எடையில் கவனம்

என்னதான் நகையில் பார் கோடு இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எடையை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. சிறிய நகைக்கடை, பெரிய நகைக்கடை என எங்கு நகை வாங்கினாலும், எடை தராசில் அதை செக் செய்துவிட வேண்டியது மிகவும் முக்கியம். மேலும், பில்லில் மொத்த தொகையை மட்டும் பார்த்துவிட்டு பணத்தைச் செலுத்தாமல், செய்கூலி, சேதாரம், கற்களுக்கான விலை என்று ஒவ்வொன்றையும் நிதானமாகப் பிரித்துப் படித்துப் பார்த்து, சந்தேகம் இருந்தால் நகைக்கடையில் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.

8.விலை

சுத்த தங்கத்தின் (24 காரட்) விலையும், ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலையும் வித்தியாசப்படும். கையில் பணம் வந்தவுடன் மொத்தமாக நகைககளில் முதலீடு செய்ய நினைக்காமல், தங்கத்தின் விலை ஏற்ற, இறக்க நிலவரத்தை சிறிது நாட்கள் கவனித்து, அது குறையவிருக்கிறதா, கூடவிருக்கிறதா என்பதை துறை சார்ந்த பத்திரிகைகள், வல்லுநர்கள் மூலமாக ஆலோசனை பெற்று, பின்னரே நகைக்கடைக்குச் செல்லவும்!

9.பழைய நகைகள்

பழைய நகையை மாற்றி புது நகை வாங்கும்போது, தரத்தை காரணம் சொல்லி பழைய நகையின் எடையில் அதிக கிராம்களை கழித்துவிடுவார்கள். எனவே, எப்போதும் இதற்கு வாய்ப்பில்லாத வகையில் `916′ நகைகளை வாங்கு வதுடன், வாங்கிய கடையிலேயே அதை மாற்ற வேண்டியதும் அவசியம்.

10.கூடுதல் வரி

ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகக் கொடுத்து தங்க நகைகள் வாங்கும்போது, ஒரு சதவிகிதம் மூல வரி செலுத்த வேண்டும். அதுவே அந்த விலைக்கு தங்க காயின்கள், பார்கள் வாங்கும்போது அதற்கு வரி செலுத்தத் தேவையில்லை. 

11.`கேடிஎம்’ தவிர்க்க…

`கேடிஎம்’ (KDM) முத்திரை என்பது, நகைக்கடையால் வழங்கப்படும் உத்தரவாதம். இதன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியது என்பதால், `கேடிஎம்’ என்பதை தங்கத்தின் தூய்மைக்கான சான்றாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, `பிஐஎஸ்’ முத்திரைக்கே முக்கியத்துவம் கொடுக்கவும்.

12.ரசீது அவசியம்

தங்க நகை வாங்கும்போது அதற்கு உண்டான ரசீது வாங்குவது அவசியம். ‘வரி வேண்டாம்’ என சிலர் ரசீது வாங்காமல் விட்டுவிடுவார்கள். இன்னும் சில கடைகளில் மதிப்பீட்டு ரசீதை பில் என்று சொல்லி கொடுப்பார்கள். பின்னாட்களில் நகையிலோ அல்லது அதன் தரத்திலோ ஏதேனும் பிரச்னை என்றால், ரசீதுடனேயே சம்பந்தப்பட்ட நகைக்கடையில் அதைக் கோர முடியும் என்பதால், தவறாமல் பில் கேட்டு வாங்கவும்.

நன்றி : அவள்விகடன் - 28.06.2016

உயிர் காக்கும் நிமிடங்கள்


உயிர் காக்கும் நிமிடங்கள் - என்ன செய்ய வேண்டும்?
கோல்டன் ஹவர்

“கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாமே… 10 நிமிஷத்துக்கு முன்னாடி கூட்டிட்டு வந்திருந்தா, உயிரைக் காப்பாத்தியிருக்கலாம்” என்று ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்னைகளுக்கு,  ‘பொன்னான நேரம்’ (Golden hour) என்று ஒன்று உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான சிகிச்சை கிடைக்கச் செய்துவிட்டால், உயிரிழப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது மருத்துவ உலகம்.

 இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வந்து பிழைத்தவர்களும் உண்டு. இரண்டு நிமிடத் தாமதத்தால் இறந்தவர்களும் உண்டு. ஒரு உயிரைக் காப்பாற்றும் இந்த ஒவ்வொரு மணித் துளியின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பொன்னான நேரத்தில் உயிருக்குப் போராடும் ஒருவரை எப்படிக் காப்பாற்றுவது? அவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி, சிகிச்சைகள் என்னென்ன?

சாலை விபத்து

கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

யாருக்கு அதிகமாக அடிபட்டு உள்ளதோ, அவரை முதலில் ஆம்புலன்ஸில் ஏற்ற உதவ வேண்டும். அடிபட்டவரைச் சுற்றிலும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பதால், மூச்சுவிட அதிக சிரமப்பட்டு, உடல்நிலை மேலும் பாதிக்கும்.

அதிகப்படியான ரத்தப்போக்கின்போது ஒரு சுத்தமான பருத்தித்துணியால் (துப்பட்டா, கைக்குட்டை, துண்டு) கட்டுப்போட்டால் ரத்தம் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். இதற்குப் பெயர் ‘ப்ரீ ஹாஸ்பிடல் டிராமா கேர்’ (Pre Hospital trauma care). இதனால், உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அடிபட்டவரை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

விபத்தில் முதுகு அல்லது கழுத்தில் காயம்

கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

விபத்தில் சிக்கியவருக்குக் கழுத்து, முதுகில் காயம் ஏற்பட்டிருந்தால் அல்லது அந்தப் பகுதியில் வலிக்கிறது என்றால், இன்னும் சற்று கவனத்துடன் அவர்களைக் கையாள வேண்டும். தலை தொங்குவது போல தூக்கக் கூடாது. தலையும் உடலும் நேர்க்கோட்டில் இருப்பது போல தூக்கிவைக்க வேண்டும். கவனம் இன்றித் தூக்கும்போது, உடைந்த முதுகெலும்போ கழுத்து எலும்போ மேலும் சேதமாகி, கோமா நிலைக்குப் போகலாம். முதுகு, கழுத்து எலும்பில் அடிபட்டவர்களை நேராகத் தூக்கிவைக்க ஸ்ட்ரெச்சரோ பலகையோ இல்லை என்றால், ஆம்புலன்ஸ் வரும் வரை தூக்காமல் இருப்பதே பேருதவி.

அடிபட்டவருக்கு ஜூஸ், பால், உணவுகளைக் கொடுக்கக் கூடாது. இதனால், வாந்தி வரக்கூடும். தலையில் அடிபட்டு இருந்தால், பெரும் சிக்கல் ஆகிவிடும். சிறிது தண்ணீர் வேண்டுமெனில் கொடுக்கலாம்.

அடிபட்ட, முதல் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய, முறையான முதலுதவியால் உயிர் பிழைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதம்

கோல்டன் ஹவர்: மூன்று மணி நேரத்துக்குள்

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ரத்தக்கசிவு காரணமாகப் பக்கவாதம் வரும். தலைசுற்றல், இரண்டு நிமிடங்களுக்கு சுயநினைவு இழந்துபோதல், கை, கால் இழுத்தல், வாய் ஒருபக்கம் இழுத்தல், பேச்சுக்குழறல் என்று சொன்னால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இதற்கு மூளை நரம்புகளில் ஏற்பட்ட அடைப்பைக் கரைப்பதற்கான மருந்தை மூன்று முதல் நான்கரை மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். எனவே, பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவமனையை அணுகினால், பக்கவாதப் பாதிப்பில் இருந்து முற்றிலும் நீங்கலாம்.

8 முதல் 12 மணி நேரத்துக்குள் வந்தால், உயிரிழப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அதற்குள் மூளையில் உள்ள நியூரான்கள் அதிக அளவில் உயிரிழந்திருக்கும். இதனால், உடலின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

12 மணி நேரத்துக்குப் பிறகு உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அப்படியே உயிரைக் காப்பாற்றினாலும், கை, கால் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது.

குடல்வால் வெடிப்பு – வயிற்றுவலி

கோல்டன் ஹவர்: 4-6 மணி நேரத்துக்குள்

வயிற்றுவலிக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல் அடைப்பால் ஏற்படும் வலி, குடல்வால் வீக்கம் (Appendicitis), குடல் முறுக்கு, அடைப்பு போன்ற தீவிரமான வலி எனில், 4-6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

குடல்வால் பிரச்னை என்றால் வாந்தி, தீவிர வயிற்று வலி இருக்கும். இதற்கு, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை அல்லது மாத்திரை, மருந்துகளால் சரிப்படுத்த முடியும். மிகவும் தீவிர நிலையில் இருக்கிறது என்றால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குடல்வால் வெடித்துவிட்டது என்றால், நோய்த்தொற்று குடல் முழுவதும் பரவிவிடும். இந்த நிலையில், குடல் வாலை அகற்றுவதுடன், நோய்த்தொற்றை நீக்க, குடல் பகுதியை முற்றிலும் சுத்தம் செய்ய வேண்டும்.  
காலராவால் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறிவிடும். இதனுடன், தாதுஉப்பும் வெளியேறிவிடும். குழந்தைகளைப் பாதிக்கும்போது, உயிரிழப்பு வாய்ப்பு அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எலெக்ட்ரோலைட் அல்லது உப்பு சர்க்கரை நீர்க் கரைசலைக் கொடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே, உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

பாம்புக் கடி 

கோல்டன் ஹவர்:  (3 மணி நேரத்துக்குள்)

சினிமாவில் காட்டுவது போல, பல்லால் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது, கத்தியால் வெட்டுவது என வித்தைகள் எதுவும் செய்யக் கூடாது. குழாய் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். கடித்த இடத்தை அதிக அசைவுகள் கொடுக்காமல் இருந்தாலே போதும். பாம்பு கடித்த, மூன்று மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது நல்லது. மருத்துவர் ஆன்டிவெனோம் மருந்தைக் கொடுத்தால், விஷம் முறிந்துவிடும். மருத்துவமனைக்கு வராமல் தாமதித்தால், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். ஆனால், இவற்றுக்கும் சிகிச்சைகள் உண்டு.

தீக்காயம்

கோல்டன் ஹவர்: (உடனடி – 1 மணி நேரத்துக்குள்)

பால், சுடுதண்ணீர், கஞ்சி போன்றவை மேலே ஊற்றிக்கொண்டால், உடனே குழாய் நீரைக் காயத்தின் மேல் விட்டு, ஈரமான பருத்தித் துணி, வாழை இலையால் போர்த்தி, மருத்துவமனைக்கு உடனே கொண்டுசெல்லவும். பஞ்சு, சாக்குப் பை, சிந்தடிக் துணி ஆகியவற்றால் துடைக்கவோ, போர்த்தவோ கூடாது. நூல் நூலாகப் பிரிந்த துணியைக் காயத்தின் மேல் போர்த்தக் கூடாது. இது, காயத்தை மேலும் பாதிக்கும்.

குழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டால் (உடனடி)

குழந்தைகள் விளையாட்டாகச் செய்யும் சில காரியங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். கையில் கிடைக்கும் காசு, சிறிய விளையாட்டுப் பொருட்கள், பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விழுங்கும்போது, அது மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம்.  இதை, உடனடியாகச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  தண்ணீர், உணவு கொடுக்கவே கூடாது.

தற்கொலைக்கு முயன்றவர்கள் (உடனடி)

பூச்சிக்கொல்லி, எலி மருந்து, வயலுக்கு அடிக்கும் மருந்தைக் குடித்துவிட்டால், உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மயங்கிய நிலையில் இருப்பவருக்கு, சோப்பு கரைசல், உப்புக் கரைசல் கொடுக்கக் கூடாது. இதனால், புறை ஏறி, நுரையீரல் பாதித்து உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகிவிடலாம்.

____________________________________________________

மாரடைப்பு, நெஞ்சு வலி

கோல்டன் ஹவர்: 1 மணி நேரம்

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்பு. ரத்தக்குழாயில், ரத்தம் உறையும்போதும், கொழுப்பு அடைத்துக்கொள்ளும்போதும், இதயத்தசைகள் பாதிக்கப்படும். செல்கள் உயிர்வாழ ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் தேவை. இதை, ரத்தம் மூலம்தான் உடல் பெறுகிறது. இதயத்திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காமல் போகும்போது, அது உயிரிழக்க ஆரம்பிக்கிறது. எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அந்த அளவுக்கு இதயத்திசுக்களின் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

 40 வயது கடந்த ஆண்கள், 45 வயது கடந்த பெண்கள் அவர்கள் வாழ்நாளில் சந்திக்காத வலி இடது கை, இடது பக்கத்தில் ஏற்படும், மயக்கம் வரும். இதுவே மாரடைப்பு.

மாரடைப்பில் தீவிரமானது மேசிவ் அட்டாக் (Massive attack), 50 சதவிகித இதயத் தசைகள் வேலை செய்யாமல் போக, இதயம் திணறும். அப்போது அவர்களுக்கு மூச்சு வாங்கும். அவர்களால் படுக்க முடியாது. ஆதலால், படுக்கக் கட்டாயப்படுத்தாமல் அவர்களைச் சாயவைத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

சளி, மூச்சுத் திணறல் இருப்பவர்களைப் படுக்கவைக்காமல், தலையணை வைத்து அதில் சாய்த்தது போல கொண்டு செல்லலாம். படுத்தால், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள், ஆஸ்பிரின் மாத்திரையைத் தண்ணீரில் கலந்து உடனே குடித்துவிட வேண்டும். மாரடைப்பு நோயாளியை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சீக்கிரம் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இதயம் பாதுகாக்கப்படும், தசைகள் அழிவது மற்றும் மாரடைப்பு திரும்ப வருவது தடுக்கப்படும்.

கவனிக்க: சர்க்கரை நோயாளிகளுக்கு பல நேரங்களில் மாரடைப்பின் அறிகுறிகள் வெளிப்படாமலேகூட இருக்கும். லேசாக நெஞ்சுவலி வந்தாலே, இவர்கள் மருத்துவமனையை அணுக வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மனச்சோர்வு, மனஅழுத்தம், உடலுழைப்பு இல்லாதவர்கள், முதியவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், 40 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆகியோர் வீட்டில் கட்டாயம் ‘ஆஸ்பிரின் மாத்திரை’ வைத்துக்கொள்ள வேண்டும்.

108 நம்பர், அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர எண் நம்பரை பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும்.

சடன் கார்டியாக் அரெஸ்ட்
சீராகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று, துடிப்பை நிறுத்திக்கொள்ளும். இதற்கு, சடன் கார்டியாக் அரெஸ்ட் (திடீர் இதயத்துடிப்பு முடக்கம்) என்று பெயர். பலரும் இதை மாரடைப்பு எனத் தவறாகக் கருதுகின்றனர்.

இதயத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதயம் இயங்காமல் நிற்பது, இதயத்துடிப்பு குறைந்து அப்படியே நின்றுவிடுவது, மாரடைப்பு வருவதால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுவது, சிறுநீரகச் செயலிழப்பு எனப் பல்வேறு காரணங்களால் சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் வரலாம்.

சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து 4-10 நிமிடங்களுக்கு, எந்த ஓர் உறுப்புக்கும் ரத்த ஓட்டம் செல்லவில்லை எனில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். உடனடியாக, அவசர உதவிக்கு அழைத்துவிட்டு, சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். இதயத்துக்குத் துடிப்பு கொடுக்கும் முதலுதவி செய்ய நெஞ்சுப் பகுதியில் மசாஜ், மூச்சுக்குழாயில் ஆக்சிஜன் கொடுத்துக் காப்பாற்றலாம். மீண்டும் இதயம் துடிக்கவில்லை எனில், நிமிடத்துக்கு 100- 120 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அவருக்கு டேஃபிபிரிலேட்டர் (Defibrillator) சிகிச்சை அளிக்க வேண்டும்.

நன்றி : டாக்டர் விகடன் - 01.06.2016

கிரடிட் கார்டு அக்கவுண்டை மூட


கிரடிட் கார்டு அக்கவுண்டை மூட என்ன செய்ய வேண்டும்?
உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூட உங்களுக்குச் சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதனைச் சரியான முறையில் மூடவில்லை என்றால் உங்களது கடன் புள்ளி எனப்படும் 

கிரேடிட் ஸ்கோர் அதிகளவில் பாதிப்படையும். நீங்களாகவே உங்கள் கிரெடிட் கார்ட்டை அழிப்பதன் மூலம் மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு கணக்கு மூடப்பட்டுவிடாது. கிரெடிட் கார்டு கணக்கை மூட சில குறிப்பிட்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றியாக வேண்டும். 

அப்போது தான் இந்தச் செயல்முறையில் உங்களது கடன் புள்ளிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அதிகமான கட்டணங்கள், கட்டுப்பட முடியாத ஷாப்பிங் பழக்கவழக்கம், உயர்ந்த அளவிலான வட்டி விகிதங்கள் எனப் பல்வேறு காரணங்களால் ஒருவர் தன் கிரெடிட் கார்டு கணக்கை மூட விரும்பலாம். 

உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள், இதோ!

நிலுவை தொகைகளை அடைத்தல் 
உங்கள் கிரெடிட் கார்டு கணக்கில் நீங்கள் கட்ட வேண்டிய நிலுவை தொகை ஏதேனும் இருந்தால், நீங்கள் தொகையை முழுவதுமாகச் செலுத்தாத வரையில் வங்கிகள் உங்கள் கணக்கை மூடாது. 

கணக்கை மூடுவதற்கு முன்பு, உங்கள் நிலுவை இருப்புப் பூஜ்யமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

இதனை உறுதி செய்ய, கிரெடிட் கார்டு பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். அந்த மாதத்திற்கான பில் வரும் வரை காத்திருக்கவும். கணக்கை மூடுவதற்கான படிவத்துடன் ஒருவர் தன்னுடைய பில் நகலையும் சேர்த்துச் சமர்ப்பிக்கலாம்.

வங்கிகளுக்குச் செல்ல வேண்டும்
கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதென்றால் நீங்கள் வங்கிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும், அதுதான் சரியான முறை. 

அப்போது தான் உங்களால் சான்றொப்ப நகலைப் பெற முடியும். கணக்கை மூடுதல் தொடர்பான வினாக்களுக்கு இது பெரிதும் உதவும். இருப்பினும், தொலைப்பேசி வங்கியியல் மூலமும் கூட ஒருவர் தன் கிரெடிட் கார்டு கணக்கை மூடிக்கொள்ளலாம். 

மூடுவதற்கான படிவத்தை நிரப்பி அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். ஆனால் வருங்கால மேற்கோள்களுக்கு, அதனை ஒரு நகல் எடுக்க மறந்து விடாதீர்கள். 

கணக்கு மூடப்பட்டதற்கான உறுதிப்பாடு கிடைக்காத வரை வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுவதை நிறுத்தி விடாதீர்கள்.

மீட்டு (ரிடீம்) புள்ளிகள், ஏதேனும் இருக்கிறதா..? 
கிரேடிட் கார்டு கணக்கை மூடும் அவசரத்தில், உங்கள் கார்ட்டில் ஏதேனும் ரிடீம் புள்ளிகள் உள்ளதா என்பதைக் கவனிக்க மறந்து விடாதீர்கள். 

உங்களுக்குச் சேர வேண்டிய கேஷ் பேக், வெகுமதிகள் அல்லது புள்ளிகளை எல்லாம் உரிய முறையில் பெற்று விடுங்கள். 

வருடாந்திர கட்டணம் செலுத்துதல் 
வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு முன்பாகவே உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூட அறிவுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் வருடாந்திர கட்டணத்தை உங்கள் மீது வங்கி திணித்து விடும்.

 கடன் புள்ளிகள்
 கடன் புள்ளிகள் கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதால் உங்கள் கடன் புள்ளிகள் பாதிப்படையும். அதற்குக் காரணம் உங்களது மொத்த கடன் வரம்பின் அளவு குறைந்து, பயன்பாடு விகிதம் அதிகரித்து விடும். 

உங்களது கடனை கட்ட முடியாமல் போவதால் கூட நீங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூட முற்படலாம். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு கணக்கை மூட வேண்டும் என்றால், அதனை ஒன்றின் பின் ஒன்றாக மெதுவாகச் செய்யவும்.

 பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டு கணக்குகளை மூடி விடுவது நல்லது. ஆனால் சமீபத்தில் வாங்கிய கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதே நல்லது; உங்களது செயலாற்றலை கணக்கிடப் பழைய கிரெடிட் கார்டு தான் உதவியாக இருக்கும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 15.06.2016

Sunday, June 19, 2016

பெண்களுக்கு சொத்துரிமை உண்டு


பெண்களுக்கு சொத்துரிமை உண்டு-என்ன செய்ய வேண்டும்?

நம் பெண்கள், தங்களுக்கு அனைத்து சட்டங்களும் தெரியும் என்கிற, மேலோட்டமான மனநிலையிலும், முழுதாக தெரிந்து ஒன்றும் செய்யப் போவதில்லை எனவும், வீட்டு ஆண்கள் பார்த்துக் கொள்வர் என்ற நினைப்பிலும் இருந்து விடுகின்றனர். 

மிகச் சரியான உதாரணம். பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்கிற சட்ட உண்மை. பொதுவாக ஆண்களுக்கு சமம் பெண்களும். இருபாலருக்கும் சொத்தில் பங்கு, உரிமை உண்டு என்று, மேலோட்டமாக தெரிந்து வைத்திருப்போம். 

ஆனால், பாக பிரிவினையில், பெண்களுக்கு எந்த சூழ்நிலைகளில், நேரிடையாக சொத்து கிடைக்கும் என்று தெரியாது. 

பெண்களுக்கான சொத்துரிமை பற்றிய சட்ட விழிப்புணர்வு, இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்கான உரிமையை தெளிவாக தெரிந்து கொண்டால் தான், அதற்காக நாம் போராட முடியும்.

நம் பாட்டி, கொள்ளு பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள், அந்தக் கால கொடுமைகளையெல்லாம் சொல்வர். அவர்கள் காலத்தில், இந்து பெண்கள் சொத்து சட்டம் என்று ஒன்று இருந்தது. இந்து வாரிசு சட்டம், 1956 என்கிற, 'பெண்களுக்கும் உரிமை உண்டு' என்ற சட்டம், 1956ல் இருந்தது. 
அது எதற்கு தெரியுமா? பெண்கள் பிறந்த வீட்டில் தங்குவதற்கு மட்டுமே. தங்கிக் கொள்ளலாம், படிக்கலாம், கல்யாணம் பண்ணிக்கலாம், சீர் சீதனம் செய்து அனுப்பி வைப்பர்; அவ்வளவு தான் பெண்களுக்கான சொத்து பங்கு. பரம்பரை சொத்திலோ, வீட்டு ஆண் சம்பாதித்த சொத்திலோ பங்கு கேட்கும் உரிமை கிடையாது.

இந்த சட்டத்தில், தமிழ்நாடு மாநில அரசு சட்ட இந்து மத வாரிசு சட்ட திருத்தம், 1990ன் படி, ஒரு ஆணின், அப்பாவின், கணவனின் சொத்து, அவனுக்கு பின் அவன் மனைவி, மகன், மகள் என, அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று, சொல்கிறபடி நடைமுறைக்கு வந்தது. 

மத்திய அரசின், 2005ம் ஆண்டு திருத்தம் செய்த இந்து மத வாரிசு சட்டத்தில், இதே சம உரிமை இருக்கிற சட்டத்தை கொண்டு வந்தது.

வாரிசு இல்லாத பெண்ணின் பரம்பரை சொத்து என்ன ஆகும்?

வழக்கமாக, ஆண் வாரிசுகள் இருந்தால், அந்த சொத்து எந்த பிரச்னையும் இன்றி, அடுத்த தலைமுறைக்கு மாறிவிடும். ஆனால், ஆண் வாரிசு இல்லாமல், பெண் மட்டுமே, அந்த தலைமுறையில் வாரிசாக இருந்தால், அந்த சொத்து அடுத்த தலைமுறைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்.

குறிப்பாக, தந்தையிடம் இருந்து, மகள் பெயருக்கு ஒரு பரம்பரை சொத்து மாறுகிறது என்றால், சொத்து பெற்ற மகள் திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்த சொத்து அக்குழந்தைகளின் பெயருக்கு, அந்த மகளின் விருப்பத்தின் அடிப்படையில் சென்றுவிடும்.

ஆனால், இத்தகைய வாரிசாகும் பெண் திருமணம், குழந்தைகள் என்று மாறாமல், தனி நபராகவே வாழ்கிறார் என்றால், அவருக்கு பின் அந்த சொத்து யார் பெயருக்கு சேரும் என்பதில் சிக்கல் ஏற்படும்.

 சொத்தை எழுதிக் கொடுத்த பெற்றோர் இருந்தால், மீண்டும் அவரிடமே போய் சேர்ந்துவிடும். அவர்களும் இறந்திருந்தால் அந்த பெண்ணின் சகோதர, சகோதரிகளுக்கு சென்றடையும்.

திருமணம் செய்யாமல், வாரிசு இல்லாமல் சொத்துடைய பெண் இறப்பதற்கு முன், தனக்கு விருப்பமானவர்களுக்கு அந்த சொத்தை முழுமனதுடன் எழுதி வைத்திருந்தால், அதன்படியே அந்த சொத்து அவர்களுக்கே போய் சேரும். பெற்றோரோ, சகோதர உறவுகளோ தலையிட முடியாது.

பெரும்பாலான நாட்டுச் சட்டங்கள், ஆணுக்குப் பெண் சமம் என்றே கூறுகின்றன. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லையென்பதே உண்மை. நம் சமுதாயத்தில் மதத்தின் அடிப்படையாகக் கொண்டு இருக்கும் சட்டமே முடிவு செய்கிறது.

இஸ்லாமியப் பெண்களைப் பொறுத்தவரை, எப்போதுமே ஆண்களுக்கு சமமாக சொத்தில் பங்கு கோர முடியாது. ஒரு ஆண் வாரிசு, இரண்டு பாகம் சொத்தில் பங்கு எடுக்கும் போது, பெண்ணுக்கு ஒரு பாகமே ஒதுக்கப்படும்.

கிறிஸ்துவப் பெண்களின் நிலை இன்னும் சரி செய்யப்படவில்லையென்றே கூறப்படுகிறது. கிறிஸ்துவ கைம்பெண்ணுக்கு மூன்றில் ஒரு பாகமும், மூன்றில் இரண்டு பாகம் மற்ற நபர்களுக்கும் போய் சேரும். 

இதை சரி செய்யவே இந்தியாவில் பெண்களின் சொத்துரிமை நிலையை, 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து சில சட்டங்கள் இயற்றப்பட்டன. பெண்களுக்கான சொத்தின் மீது உள்ள உரிமைகள் என்ன என்பது போன்றவை The Hindu Succession Act 1956ல் குறிப்பிடப்பட்டுள்ளன. 

கூட்டு குடும்பங்களில் பரம்பரை சொத்துக்களை பங்கிடுவதில் பல்வேறு பிரச்னைகள் எழும். குறிப்பாக, ஒவ்வொரு தலைமுறையிலும் யார் பிரதான வாரிசாக இருக்கின்றனர் என்ற அடிப்படையில் தான், அது அடுத்த தலைமுறைக்கு எப்படி சேரும் என்பது முடிவாகும்.

 ஆனால், பெண்ணுக்குரிய சொத்துரிமை, எதுவரை, எப்படி பிரிக்கப்படுகிறது, எதிலெல்லாம் உரிமை கோரலாம், நமக்கு பின், நாம் யாருக்கு அதை மாற்றி எழுதலாம் போன்ற அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. 

ஒன்றை நினைவில் வையுங்கள், சட்ட அறியாமையை சட்டம் ஏற்காது. எனவே, தெளிவாகவே பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை தெரிந்து கொள்வோம். பின் நமக்கான உரிமைக்காக போராடுவோம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 19.06.2016

பிறவிக் கோளாறு (ஃபோலிக் அமிலக் குறைபாடு)


பிறவிக் கோளாறு - என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பிணி பெண்களுக்குஉயிர் காக்கும்  ஃபோலிக் அமிலம்!

கர்ப்பம் உறுதியானதுமே பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஃபோலிக் அமில மாத்திரைகள். அதன்அவசியம் உணராமல்  அலட்சியப்படுத்துகிற பெண்களுக்கு, ஃபோலிக் அமிலக் குறைபாடு எப்படிப்பட்ட பயங்கரங்களை ஏற்படுத்தலாம் என விளக்குகிறார்  மருத்துவர் நிவேதிதா.ஃபோலிக் அமிலம் என்பது ஒருவகையான பி வைட்டமின். புதிய செல்கள் உருவாக உடலுக்கு மிக  அத்தியாவசியமானது அது. எல்லா மக்களுக்குமே ஃபோலிக் அமிலம் அவசியம் என்றாலும் கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு  அது மிக மிக அவசியம். கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஒரு பெண்ணின் உடலில் போதிய அளவு ஃபோலிக்  அமிலம் இருக்குமானால், அது குழந்தையின் பிறவிக் கோளாறுகள் பலவற்றைத் தவிர்க்கும்.

ஃபோலிக் அமிலக் குறைபாடு என்ன செய்யும்?

குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் முதுகெலும்பை பாதிக்கும் Spina bifida  என்கிற இந்தப் பிரச்னையால் முதுகெலும்பு மட்டுமின்றி,  கால் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளின் இயக்கமும் பாதிக்கப்படும். இப்படிப் பிறக்கும்  குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பிரச்னைகள் தொடரும். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியிருக்கும். ஃபோலிக் அமிலக் குறைபாட்டால் உண்டாகிற Anencephaly பிரச்னை குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்.  இதனால் குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த உடனேயோ இறந்து போகலாம். போதுமான ஃபோலிக் அமிலம்  இருக்கும் பட்சத்தில் ரத்தசோகை, இதயக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் அபாயங்களும் தவிர்க்கப்படுகின்றன.

யாருக்குத் தேவை?

கர்ப்பமாகும் திட்டத்தில் இருக்கிற பெண்களுக்கு தினசரி 400 முதல் 800 மைக்ரோகிராம் அளவுக்கு ஃபோலிக் அமிலம் தேவை.  கர்ப்பமாகிற திட்டம் இல்லாதவர்களுக்கும் இதே அளவு எடுத்துக் கொள்கிற பட்சத்தில், பின்னாளில் அவர்களுக்குக் குழந்தைகள்  பிறக்கும் போது பிறவிக் கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து கர்ப்ப  காலம் முழுவதற்குமான ஃபோலிக் அமில மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் இல்லை, குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றிக்  கொண்டிருப்பவர்கள்கூட ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்.மூளை  வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தை பெற்ற பெண்கள், மறுபடி இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தால்...

பெண்ணின் குடும்பத்தில் யாருக்காவது Spina bifida பிரச்னை இருந்தால்...வலிப்பு நோய், டைப் 2 நீரிழிவு, ருமட்டாயிட்  ஆர்த்ரைட்டிஸ், கல்லீரல் கோளாறு, சிறுநீரக பாதிப்பு, சோரியாசிஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின்  ஆலோசனைக்குப் பிறகே அவர்களுக்குத் தேவையான ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவில் உண்டா?

காய்கறிகள், கீரைகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், முழு தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையிலேயே ஃபோலிக் அமிலம் நிறைய  உள்ளது. ஆனாலும் உணவின் மூலம் கிடைக்கிற அளவு மட்டுமே ஒருவருக்குப் போதுமானதாக இருக்காது. மருத்துவரின்  பரிந்துரைக்கு மேல் அளவுக்கதிகமான ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொண்டால் வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால்  தெரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. அதுவும் ஆபத்தானது.

- வி.லஷ்மி

 Date: 2016-02-05@ 15:39:34
நன்றி குங்குமம் டாக்டர்

மின்புகார் அளிக்க


மின்புகார் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
மின்வெட்டு அல்லது கோளாறு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1912 என்ற 24 மணி நேர ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மின் இணைப்பு, மின்வெட்டு, மின்கோளாறு உள்ளிட்ட புகார்களை அந்தந்த மாநில அரசுகளும், மின்வாரியமும் நிர்ணயித்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தான் நுகர்வோர் தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் மின்சாரம் சம்பந்தமான புகார்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இதனால் மின் நுகர்வோர் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் மின் புகார்களை தெரிவிக்க 1912 என்ற ஒரே எண்ணை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

கோவா தலைநகர் பனாஜியில் அனைத்து மாநில மின்சார துறை அமைச்சர்களின் இரு நாள் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அப்போது மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடு முழுவதும் ஒரே புகார் எண்ணை அமல்படுத்தும் புதிய முறையை அறிமுகம் செய்தார்.

1912 என்ற இந்த தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். இந்த எண்ணை மின் நுகர்வோர் தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தந்த மாநில அரசு துறைகளுக்கோ அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டு அறைக்கோ அழைப்பு செல்லும்.

அப்போது மின்சாரம் சம்பந்தமான புகார்களை தெரிவித்தால், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர். மேலும் புகார் சம்பந்தமான அனைத்து விவரங்களும் இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் கிடைக்கும்.

நேரடி கண்காணிப்பு

தவிர மின் உதவி எண்ணை நுகர்வோர் ஒருவர் தொடர்பு கொண்டால், அவரது பிரச்சினை என்ன? எப்பொழுது அவர் புகார் தெரிவித்தார். பிரச்சினையின் தீவிரம் என்ன? என அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும்.

மத்திய அரசும் நேரடியாக இந்த சேவையை கண்காணிக்கவுள்ளது. இதனால் 1912 தொலைபேசி சேவை மின் நுகர்வோருக்கு மிகுந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.06.2016

Thursday, June 16, 2016

கால், கை வலிப்பு வந்தால்


கால், கை வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

கட்டுக் கதையா உண்மையா? வலிப்பு ஏன்?

வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?..

இடது கண் துடித்தால் நல்லது நடக்கும், கை அரித்தால் பணம் வரும், புரை ஏறினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என  நம் உடல் மாற்றங்களுக்கு பேச்சுவழக்கில் பல்வேறு காரணங்களைச் சொல் வார்கள். இதை அப்படியே நம்புபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

இதெல்லாம் உண்மையா?

இதற்கான அறிவியல் காரணங்கள் என்ன?

யாருக்காவது வலிப்பு வந்தால் கையில் சாவிக்கொத்து அல்லது இரும்புக் கம்பியைத் திணிப்பார்கள். இந்தக் காட்சியை சினிமாக்களில் அடிக்கடி பார்த்திருப்போம். சாவியை கையில் வாங்கியதும் வலிப்பு கொஞ்சம், கொஞ்சமாக சரியாகிவிடும். இது உண்மையா? இரும்பைக் கையில் கொடுத்தால் வலிப்பு சரியாகிவிடுமா? வலிப்பு நோய் ஏன் வருகிறது என விளக்குகிறார் நரம்பியல் மருத்துவர் திலோத்தம்மாள்.

மூளையின் நரம்பணுக்கள் நியூரான்ஸ் (Neurons) என்று அழைக்கப்படுகின்றன. மூளை, நரம்புகள், நரம்பணுக்கள் போன்றவற்றில் மின்னோட்டம் சென்று கொண்டிருக்கும். இது இயல்பு. தானாகவோ, காரணமே இல்லாமலோ, அதிகப்படியான மின்னோட்டம் நரம்பணுக்களில் பாய்ந்தால், வலிப்பு வரும். அதாவது நரம்பணுக்களின் இயல்பான நிலையிலிருந்து அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டால், அதுவே வலிப்பு நோய்.

கை, கால், வாய் போன்றவை கோணலாக இழுத்துக்கொள்வது மட்டும் வலிப்பு அல்ல. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இரண்டு நிமிடங்கள் எல்லாம் மறந்து, நாம் எங்கு, என்ன செய்கிறோம் என யோசித்து பின் நினைவுக்கு வந்தால், அதுவும்கூட வலிப்புதான். கண் முன்னால் வண்டி ஓடுவதுபோல தெரிவது, திடீர் வெளிச்சம் வருவது  என வலிப்பு வெவ்வேறு வடிவத்தில் வரலாம்.

அடிக்கடி வலிப்பு வந்தால் மட்டுமே, அவர் வலிப்பு நோயாளி. ஒரே ஒருமுறை வலிப்பு வந்தால், அவர் வலிப்பு நோயாளி கிடையாது. 

இரும்பைக் கையில் கொடுத்தால், வலிப்பு சரியாகிவிடாது. அதிகப்படியான மின்னோட்டம் பாய்வது சில நிமிடங்களே நீடிக்கும், அதன் பின்பு தானாகவே சரியாகிவிடும். மின்னோட்டம் சரியாகும்போது வலிப்பு நின்றுவிடும்.

 வலிப்பு வந்தவரை ஒருபக்கமாக திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். மல்லாந்து படுக்கவைத்தால், வாயில் நுரை தள்ளினாலோ, வாந்தி எடுத்தாலோ, அவை நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு  அதிகம். எனவே, கவனம் தேவை.

 கை, கால்களை அழுத்திப் பிடித்தல், நோயாளியின் மேல் ஏறி உட்காருதல், வாயில் எதையாவது அடைத்து வைத்தல், இரும்புப் பொருட்களை பிடிக்கக் கொடுத்தல் போன்றவற்றை செய்யவே கூடாது.

 அருகில் நோயாளியைக் காயப்படுத்தும் சூழல் இருந்தால் மட்டுமே, நோயாளிக்கு ஆதரவாக மென்மையாகப் பிடித்து அவரை நகர்த்தலாம். இறுக்கமான ஆடைகளைத் தளர்வுபடுத்தலாம்.

 சுற்றிலும் கூட்டமாக நின்று, சுவாசிப்பதை  சிரமப்படுத்தக் கூடாது. வீடு எனில் கதவு, ஜன்னல் அனைத்தையும் திறந்துவைக்கலாம்.

 முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. மயக்கத்தில் இருக்கும்போது குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. நினைவுக்கு வந்த பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொடுக்கலாம்.

-------------------------------------------------------------------ப்ரீத்தி

நன்றி : டாக்டர்விகடன் - 16.01.2015

ஜப்பானில் செலவின்றி படிக்க


ஜப்பானில் செலவின்றி படிக்க என்ன செய்ய வேண்டும்?
ஜப்பான் அரசின், எம்.இ.எக்ஸ்.டி., என்ற கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 2017ம் ஆண்டிற்கான சர்வதேச கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது.

தகுதிகள்:
 பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏப்ரல் 2, 1995 - ஏப்ரல் 1, 2000ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

சிறப்பு பயிற்சி கல்லூரி (3 ஆண்டுகள்): 
தொழில்நுட்பம், சுய கவனிப்பு மற்றும் உணவூட்டவியல், கல்வி மற்றும் நலத்துறை, வர்த்தகம், ஆடை வடிவமைத்தல் மற்றும் குடும்ப பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பொதுக்கல்வி உள்ளிட்ட படிப்புகள்.

தொழில்நுட்ப கல்லூரி (4 ஆண்டுகள்): 
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் அண்ட் நெட்வர்க் இன்ஜினியரிங், மெட்டீரியல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக் அண்ட் சிவில் இன்ஜினியரிங், மெரைன் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகம் (5 ஆண்டுகள்): 
சட்டம், அரசியல், ஆசிரியரியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் அறிவியல், மின் மற்றும் மின்னணு, மெக்கானிக்கல், கட்டடக்கலை மற்றும் சிவில் உள்ளிட்டவை.

விதிமுறைகள்: 
ஜப்பான் அரசு நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, கல்விக்கட்டணம், விமானக் கட்டணம் (தோராயமாக, மாதம் 71 ஆயிரம் ரூபாய்) உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சி காலத்தில், முதல் ஆண்டு ஜப்பானிய மொழியை கண்டிப்பாக பயில வேண்டும். மீதமுள்ள காலத்தில் மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் தொடர்புடைய பட்டப் படிப்புகளை அந்தந்த கல்லூரிகளில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17, 2016

மேலும் விவரங்களுக்கு:

 www.in.embjapan.go.jp ,

ஜப்பானிய தூதரக வளாகம்
(கலாசாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறை), சென்னை.

தொலைபேசி: 044- 24323860,
                           044-24323863.

நன்றி : தினமலர் - கல்வி மலர் - 16.06.2016

Tuesday, June 14, 2016

வருமானவரி கணக்குத் தாக்கல்


வருமானவரி கணக்குத் தாக்கல் - என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி கணக்குத் தாக்கல்… புதிய மாற்றங்களை கவனியுங்கள்! 
ஏ டு இசட் டிப்ஸ்

 வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது நுணுக்கமான பல விஷயங்களை கவனிக்க வேண்டும். எனவேதான், ஒரு ஆடிட்டரின் துணையோடு இதை செய்ய முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஆனால், சிற்சில விஷயங்களை உங்களால் கவனமாக செய்ய முடியும் எனில், நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் ரீஃபண்ட் கோரிப் பெறுவதும் சுலபமாகிவிட்டது.

ஆனால், இதை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது யார் எந்தப் படிவத்தை உபயோகிக்க வேண்டும், கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உள்ள மாறுதல்கள் என்ன, பொதுவாக ஏற்படக்கூடிய தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில், நிதி ஆண்டு 2015-16, மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2016-17-க்கான விவரங்களை பார்ப்போம்.

யாருக்கு எந்தப் படிவம்?

ஐடிஆர் 1 (சகஜ்) – ITR 1 (SAHAJ)

தனிநபர்கள் – இவர்களின் வருமானம் பின்வரும் வகையைச் சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 1 படிவம்தான்.

1. பென்ஷன் அல்லது சம்பளம்.

2. வீட்டு வாடகை – முன்வருடத்திய இழப்புக்களை (carry forward loss) இவ்வாண்டுக்கு கொண்டு வரப்படாததாக இருக்க வேண்டும். ஒரே ஒரு சொந்த வீடு மட்டும் தான் இருக்க வேண்டும்.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவைகளிலிருந்து வருமானம் இருக்கக்கூடாது.

4. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

5. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணமும் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது (Double Taxation Relief).

ஐடிஆர் 2 – (ITR 2)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப (HUF) அமைப்புக்களும் – வருமானம் பின்வரும் வகை சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 2 படிவம்தான்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால். 

3. முதலீட்டு வரவு (Capital  gains)

4. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம்

5. தனிநபர்கள், இந்தியர்களாக கருதப்பட்டு வெளிநாட்டு சொத்துக்கள் இருந்தால் அல்லது வெளிநாட்டு வருமானம் வந்தால்.

ஐடிஆர் 2ஏ ( ITR 2A)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்களும் – வருமானம் இந்த வகை சார்ந்ததாக இருந்தால்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை  –  ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வந்தாலும்

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் சேர்த்து

4. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணம் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது

5. வெளிநாட்டில் சொத்து அல்லது வெளிநாட்டு வருமானம் இருக்கக்கூடாது

ஐடிஆர் 4 எஸ் (ITR 4S -SUGAM)

தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களாக இருக்கக்கூடாது

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – இதில் முன்வருடத்திய நஷ்டம் இருக்கக் கூடாது.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் லாட்டரி குதிரைப் பந்தயம் தவிர்த்து.

4. தொழில் வருமானம் – இந்த வருமானம் செக்‌ஷன் 44 AD அல்லது செக்‌ஷன் 44 AE-ன் கீழ் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.

5. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. செக்‌ஷன் 90/91 அடியில் நிவாரணம் கேட்கப்பட்டிருக்கக் கூடாது.


ஐடிஆர்  3 (ITR 3)

தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புக்கள், பார்டனர்ஷிப் நிறுவனங்களில் பார்ட்னராக இருந்து இவர்கள் வேறு தனி உரிமை (proprietorship) நிறுவனத்திலிருந்து வருமானம் இல்லாது மற்றும் இவர்களின் வருமானம், வட்டி, கமிஷன் அல்லது ஊதியம் மற்றும் போனஸ், இப்படி ஒன்றாக இருக்குமென்றால்.

ஐடிஆர் 4 (ITR 4)

இது தனி உரிமை நிபுணத்துவ வணிகம் (proprietary business profession) நடத்துபவர்களுக்கு. வருமான வரம்பு கிடையாது. சம்பளம், வீட்டு வாடகை, மற்ற எல்லாவித வருமானங்களும், குதிரைப் பந்தயம் லாட்டரி உட்பட, இந்தப் படிவத்தில் காட்டலாம்.

இதுவரை குறிப்பிட்டவை தனிநபர்களுக்கான படிவங்கள். இவை தவிர, ஐடிஆர் 5, 6, 7 படிவங்கள் இருக்கின்றன. அவை முற்றிலும் நிறுவனங் களுக்கானவை என்பதால் அவற்றை விட்டுவிடலாம். 

இந்த வருடம் என்ன மாற்றங்கள்..?

இந்த வருடம் என்ன வகை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்று பார்ப்போம்.

1.  வரி செலுத்துபவரின் வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்குமானால், 
ஷெட்யூல் ஏஎல் (AL) பூர்த்தி செய்யவேண்டும். இந்த ஷெட்யூல் தனிநபரின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் கணக்காகும். இது ITR 1, 2, 2A, 3, 4, 4S படிவங்களுக்கும் பொருந்தும். அதாவது, 31.3.2016 நிலவரப்படி இருக்கும் நிலம், வீடு, கையிருப்பு பணம், நகை, தங்கம், வாகனம் (படகு, விமானம்) தவிர, இந்தப் பொருட்களின் மீதான கடன்.

ஏஎல் ஷெட்யூலில்  தரப்பட வேண்டிய சொத்துக்கள் அவை வாங்கப்பட்ட விலையில் காண் பிக்கப்படவேண்டும். அவை வெகுமதியால் அல்லது மரபுரிமை யால் பெற்றிருந்தால் அதன் முன் உரிமையாளரின் வாங்கப்பட்ட விலையைக் குறிப்பிட வேண்டும்.

2. வணிக அறக்கட்டளை அல்லது முதலீட்டு நிதியிலிருந்து (Business Trust or investment fund) பெறப்பட்ட வருமானம். 
ஷெட் யூல் பி.டி1-ல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது ஐடிஆர் 1, 2, 2ஏ, 3, 4-க்கு பொருந்தும்.

3. மூலத்தில் வரிப் பிடித்தம் (Tax Collected at Source – TCS): 
இந்த விவரங்கள் ஷெட்யூல் டிசிஎஸ்-ல் கொடுக்கலாம். ஐடிஆர் 1, 2, 2 ஏ-க்கு பொருந்தும். ரூ. 2 லட்சத்திற்கு மேல் தங்கம் அல்லது ரூ. 5 லட்சத்திற்கு மேல் நகை, ரொக்கம் கொடுத்து வாங்கும்போது, விற்பவர் நம்மிடம் அந்த தங்கத்தின் மேல் வரி விதித்து அதை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார். டிடிஎஸ் போல, இது டிசிஎஸ். போன வருடம் வரை இதற்கு படிவத்தில் இடம் இல்லாதிருந்தது. இப்போது படிவம் மாறுதலால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.


4 ஐசிடிஎஸ் (ICDS – Income computation and Disclosure Statement) – 
இது ஐடிஆர்4-க்கு பொருந்தும். இதை வர்த்தகத்தில் வரும் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்வது என சில விதிமுறைகள், சர்வதேச கணக்கியல் முறைப்படி (international accounting standard) அமைக்கப்பட்டுள்ளது. காண்பிக்கப்பட்ட வருமானக் கணக்கின்படி இதில் ஏதேனும் மாறுதல் இருப்பின், அதை இந்த ஷெட்யூலில் காண்பிக்க வேண்டும்.

ஐசிடிஎஸ் என்பது தனி மனித வருமானம் காட்டப்படும்போது வரும். உதாரணமாக, ரூ.10 லட்சம் டெபாசிட் மார்ச் மாதம் 20-ம் தேதி போடப்படுவதினால் அந்த வருட வட்டி வருமானத்தில் இந்த 11 நாட்களுக்கான வட்டி காட்டப்படாமல் அடுத்த வருடம் காண்பிக்கப்படும். ஆனால், சர்வதேச கணக்கியல் முறைப்படி, அக்குரூட் (Accrued) என்று காட்டப்பட்டு, இந்த வருட வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

செக்‌ஷன் 80 சிசிடி (1பி) {CCD(1B)}  கீழ் ரூ.50,000 வரை கூடுதல் வரிச் சலுகை உண்டு. அதாவது, தேசிய பென்ஷன் முறையில் (National Pension Scheme) இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டால். இதற்கான கூடுதல் இடமும் இந்தப் படிவத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவை தவிர, கூட்டாண்மை நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களுக்கான (Partnership, Trust, companies) மாறுதல்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாலும், அவை எல்லாம் நிறுவனங்களுக்கானவை என்பதால் அவற்றைப் பற்றி நாம் இங்கே விவரிக்கவில்லை. 
புதிய படிவங்களும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் கவனித்து வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம்!

லதா ரகுநாதன், ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.

நன்றி : நாணயம் விகடன் - 12.06.2016