disalbe Right click

Wednesday, October 26, 2016

உங்களுக்கான வாய்ப்புகள்


உங்களுக்கான வாய்ப்புகள் - என்ன செய்ய வேண்டும்?

"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைஞ்சா என்ன செய்விங்க? 

அட முதல்வரா கூட வேணாங்க. அலுவலகத்திலோ கல்லூரியிலோ எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு நண்பர்கள் தின விழாவை நடத்த வேண்டும் என்பது போன்ற ஒரு பொறுப்பு உங்களுக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். என்ன செய்வோம்?  

நம்மில் நிறைய பேர் நமக்கெதுக்குங்க வம்பு என அந்த பொறுப்பிலிருந்து தப்பவே பார்ப்போம். 

அதற்கு நாம் சொல்லும் காரணங்கள்

"நம்ம வேலை கெட்டுடும்"

"இவங்க கொடுக்குற சம்பளத்தக்கு இத வேற செய்யணுமா?"

" நாம மட்டும் தனியா தெரிவோம்" என்பதாகத்தான் இருக்கும்.

இதில் "நம்ம வேலை கெட்டுடும்" என்ற டயலாக்கை தினமும் நினைத்துப்பார்த்து வேலை செய்தால் போதும்.

 உங்கள் அலுவலகத்தில் உங்களை யாருமே அடிச்சுக்க முடியாது தானே!? 

வாய்ப்புகள் எல்லா நேரமும் வந்து நம் வீட்டு கதவை தட்டிக் கொண்டு இருக்காது. நமக்கான வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

தற்போதிருக்கும் இடத்திலிருந்து அடுத்தக் கட்டத்தை நோக்கிய முயற்சியை மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும்.

யாரோ ஒருவரால் உங்களுக்கான வாய்ப்புகளும் உங்கள் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படுவதை விடவும் உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கி கொள்வது தான் சிறந்த பலனைத் தரும்.

ஒவ்வொரு நாளும் இன்று வேறு ஒரு உச்சத்தைத் தொட வேண்டும் என்றோ, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள கொள்ள வேண்டும் என்ற மனநிலையுடன் உற்சாகமாக தொடங்குங்கள். 

மேலோட்டமாகவும், அது வரையில் அனுபவத்திடாத ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் பொழுது எப்போதுமே மனதில் ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செய்யும். 

அந்த தயக்கத்துக்கு அடி பணிந்தால் வாய்ப்புகள் கை நழுவிப் போகத்தான் செய்யும்.  தைரியமாக கெத்தாக ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக்கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள்.

ரகுவரன் விட்ட சவாலை ஏற்காமல் பின் வாங்குவது போன்ற ஒரு காட்சி படத்தில் வந்திருந்தால். முதல்வனை அவ்வளவு ரசித்திருக்க மாட்டோம் அல்லவா? 

ஆம், ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக் கொண்டு போராடுபவனைத்தான் உலகம் விரும்பும்.

நன்றி : விகடன் செய்திகள் - 27.10.2016


மாதவிலக்கை தள்ளிப் போடலாமா


மாதவிலக்கை தள்ளிப் போடலாமா - என்ன செய்ய வேண்டும்?

பீரியட்ஸ் பில்ஸ் சரியா? தப்பா?

மிக முக்கியமான திருமணம், கோயில் திருவிழா, சுற்றுலா, குடும்ப விழாக்கள்… என விசேஷ நாட்கள் வரும்போதெல்லாம்,  ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடும்போது எல்லாம் பெண்கள் வேகமாய் காலண்டரைப் புரட்டுவார்கள். 

முக்கியமான நாட்களில் மாதவிலக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமும் பரபரப்பும் அவர்களிடம் தொற்றிக்கொள்ளும். இதுவே, அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

இப்போதுள்ள இளம் பெண்கள் அப்படிப் பரபரப்படைவது இல்லை. ‘நாளைக்கு ஃபங்ஷனா? நோ ப்ராப்ளம்! அதுதான் மாத்திரை இருக்கே…’ என கூலாக இருக்கிறார்கள். 

மாதவிடாய் நாட்களை எளிதாகத் தள்ளிப்போடும் மாத்திரைகள் இப்போது அனைத்து மருந்துக்கடைகளிலும் கிடைக்கின்றன. இவற்றைப் பெண்களும் சர்வ சாதாரணமாக வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இது சரியா? 

இப்படி இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாமா? 

இதனால் பக்கவிளைவுகள் ஏதும் உண்டா?

பூப்பெய்திய பிறகு, மெனோபாஸ் வரை… 

பெண்ணுக்கு 28 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். அதாவது, கருத்தரிக்க ஏதுவாக,  சினைப்பையில்  முட்டை வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். கடந்த மாதம் கரு உருவாகாததால், கரு தங்கி வளர்ச்சியடைய கர்ப்பப்பையில் உருவாகியிருந்த எண்டோமெட்ரியம் என்ற மெத்தைபோன்ற அமைப்பு வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.

 ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்போடு வேலை செய்தால்தான், இந்தச் சுழற்சி சீராக நடக்கும். மாதவிடாய் நாட்களைத் தள்ளிப்போட நினைத்து மாத்திரை சாப்பிடுவதன் மூலம், இந்தச் சுழற்சியை நாம் இடையூறு செய்கிறோம். 

இதனால் உடலின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் இருக்கும் சீர்மை பாதிக்கப்படுகிறது. இது, ஒரு கட்டத்தில் நம் உடலையும் பாதிக்கிறது. நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டரின்  செயல்பாட்டில் வைரஸ் ஏதாவது புகுந்து தடை செய்வது போலத்தான், இந்த மாத்திரையைச் சாப்பிட்டு மாதாந்திர சுழற்சியை பாதிப்படைய வைக்கிறோம்.

மாதவிடாயைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த மாத்திரைகளின் வேலை. இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பும் ஏற்படலாம்.

என்னென்ன பாதிப்புகள்?

தலைவலி, உடலில் நீர் கோத்தல் போன்ற பிரச்னை, மார்பகங்களில் வலி,  ஹார்மோன் கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை ஆகியவற்றுடன் சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்ற முறையில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உள்ளவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் ஆகியோர் மாத்திரையை தவிர்ப்பது நல்லது.

பொதுவாக, மாதவிலக்கு வந்த நாளில் இருந்து 14ம் நாளில், சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதல் (Ovulation) நிகழும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், முட்டை வெளிப்படுதல் தாமதமாகலாம். 

இதனால், திருமணம் ஆனவர்கள், குழந்தைப்பேறை தற்காலிமாகத் தள்ளிப்போட அல்லது தவிர்க்க கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, ஓவலேஷன் ஆகும் தினத்தை கணிக்க முடியாமையால் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அந்தக் கருவின் (Fetus) வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக, இயல்பானதாக இல்லாமல் இருக்கும். எனவே, பீீரியட்ஸை தாமதமாக்கும் மாத்திரைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது?

மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. மருந்து கடைகளில் வாங்கி சுயமாக சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரும்.

தவிர்க்கவே முடியாது என்றால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி, எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அடிக்கடி இது தொடரும்போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. எனவே, பெண்களே உஷார்!

மிருதுபாஷினி,
மகளி்ர் நல மருத்துவர், கோவை.

நன்றி : டாக்டர் விகடன் - 01.11.2016

விதவை மறுமண நிதி உதவி


விதவை மறுமண நிதி உதவி - என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்காக அரசு தரப்பில் பெண்களுக்காக பல்வேறு நிதிஉதவி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கனவனை இழந்த பெண்களுக்கு அரசு வழங்கும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண   நிதி உதவியைப் பெறுவதற்கு தேவையான அடிப்படையான தகவல்களைத் தெரிந்து இங்கு கொள்ளலாம்.

1. விண்ணப்பம்:

 உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கிடைக்கும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் என்ற படிவத்தைப் பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ கொடுக்க வேண்டும்.

2. நிதி விபரம்: 

 பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்கும் விதவைப் பெண் என்றால் ரூபாய் 30,000-க்கான காசோலையும், ரூபாய் 20,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். படிக்காத விதவைப் பெண் என்றால் ரூபாய் 15,000-க்கான காசோலையும், ரூபாய் 10,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

கணவனை இழந்த விதவைப் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்கு 20 வயதிற்கு மேலும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணுக்கு 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

4.எப்போது விண்ணப்பிக்க வேண்டும்

விதவை என்பதற்கான சான்று, மறுமண பத்திரிக்கை, மணமக்களின் வயதுச்சான்று, கல்விச் சான்றிதழ்.

5. தகுதி

இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டுமானால் குறிக்கப்பட்ட திருமணம் நடந்து முடிந்த ஆறுமாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6. இணைக்க வேண்டியவை

படித்த விதவைப் பெண்ணுக்கான நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பட்டப் படிப்போ, பட்டயப் படிப்போ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. குறிப்பு

நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

 இது தொடர்பான மேலும் அதிக தகவல்களுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நலத்துறையை அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகவும்.

--------------------------------------------------------------------------------------------- சு.சூர்யா கோமதி

நன்றி : விகடன் செய்திகள் - 26.10.2016

Tuesday, October 25, 2016

பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால்


பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால் 
என்ன செய்ய வேண்டும்?

நடுவானில் எஞ்சின்கள் செயலிழந்தாலும் விமானம் தொடர்ந்து பறக்கும்... எப்படி தெரியுமா?
நடுவானில் பறக்கும்போது விமானத்தின் எஞ்சின்கள் செயலிழந்து போனால், விமானம் தொப்பென தரையில் விழுந்துவிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், எஞ்சின்கள் செயலிழந்தாலும், விமானம் பறக்கும்.

பொதுவாக விமான எஞ்சின்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனினும், தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற சில அரிதான காரணங்களால் விமான எஞ்சின்கள் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அப்படியும் ஒன்றுக்கும் மேற்பட்ட எஞ்சின்களில் ஒரு எஞ்சின் பழுதானால் கூட மற்றொரு எஞ்சினை வைத்து பாதுகாப்பாக தரையிறக்கிவிடும் வாய்ப்புள்ளது. 

ஆனால், விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எல்லா எஞ்சின்களுமே செயலிழந்து போனால் என்ன செய்வது? விமானம் தொப்பென தரையில் விழுந்துவிடும் என்றுதான் நினைக்கத் தோன்றும்.

ஏனெனில், விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும்.

ஆனால், பறக்கும் திறனை இழக்காது. ஆம். அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம்தான். தினசரி விமானத்தில் பயணிப்பவர்கள் கூட இந்த செய்தி புதிதாக இருக்கலாம்.

விமானத்தில் எஞ்சின்கள் செயலிழக்கும்போது த்ரஸ்ட் விசை கிடைக்காமல், விமானம் முன்னோக்கி செல்லாது. அதேநேரத்தில், படிப்படியாக கீழே இறங்க துவங்கும். இந்த நேரத்தில்தான் அறிவியல் தொழில்நுட்பமும், அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும்.

'மே டே' அலர்ட் எனப்படும் அவசரமாக தரையிறக்கும் அறிவிப்பையும் விமானிகள் அருகிலுள்ள விமான நிலையத்திற்கு கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு, அந்த விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தின் உதவி மற்றும் ஆலோசனைகளுடன் விமானிகள் செயல்படுவர்.

ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு விகிதத்தில் தரையிறங்கும். உதாரணத்திற்கு, டெல்லி - சான்பிரான்சிஸ்கோ நகருக்கு இடையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் உலகின் மிக நீண்ட தூர விமானமான போயிங் 777-200 விமானமானது 1:18 என்ற விகிதத்தில் தரையிறங்கும்.

அதாவது, ஒரு அடி உயரம் குறையும்போது, 18 அடி தூரம் முன்னோக்கி சென்றிருக்கும். எஞ்சின்கள் செயலிழக்கும்போது 32,000 அடியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தால், 175 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதனை கணக்கிட்டு, அருகிலுள்ள விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை விமானிகள் தரையிறக்க வேண்டும்.

ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை வட்ட மடித்து அல்லது விமானத்தின் பேலன்ஸ் குறையாமல் குறிப்பிட்ட முறையில் வளைந்து சென்று விமானத்தின் இறங்கும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து ஓடுபாதையில் சரியாக இறக்க விமானிகள் முற்படுவர்.

இப்போது மற்றொரு விஷயம். எஞ்சின்கள் செயலிழக்கும்போது ஆட்டோபைலட் கட்டுப்பாட்டு சாதனங்களும் செயலிழக்கும். அப்போது எரிபொருள் சப்ளை தானியங்கி முறையில் நிறுத்தப்பட்டுவிடும்.

இந்த சூழலில் எஞ்சின்கள் செயலிழந்ததை சென்சார் உதவியுடன் கண்டுகொள்ளும், ராம் ஏர் டர்பைன் என்ற விசிறி தானாக இயங்கும். விமானத்தின் அடிப்பாகத்தில் மின் விசிறி போன்றே இருக்கும் இந்த கருவியானது வெளிக்காற்று விசை மூலமாக சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும்.

இந்த கருவியின் மூலமாக விமானத்தின் கட்டுப்பாட்டு சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை பெற முடியும். அதேநேரத்தில், இந்த சாதனம் மூலமாக எஞ்சின்கள் போன்று த்ரஸ்ட் எனப்படும் முன்னோக்கி செலுத்தும் விசையை பெற முடியாது.

மேலும், விமானத்தின் பின்புறத்தில் இருக்கும் துணை பேட்டரி யூனிட்டிலிருந்து ஹைட்ராலிக் கருவிகளை இயக்குவதற்கான மின்சாரம் பெறப்படும். இந்த மின்சாரத்திலிருந்து திசை மாற்றும் அமைப்பு, பிரேக்குகள், லேண்டிங் கியர்கள் எனப்படும் விமான சக்கரங்களையும் இயக்க முடியும்.

ஆனால், இதற்கு விமானத்தின் எடை,  சீதோஷ்ண நிலை, காற்று வீசும் திசை, விமான நிலையம் அமைந்திருக்கும் தொலைவு, விமானிகளின் சாமர்த்தியம் ஆகிய அனைத்தும் சரியாக அமைய வேண்டும். ஹெட்விண்ட்ஸ் எனப்படும் எதிர்க்காற்றைவிட, டெயில்விண்ட்ஸ் எனப்படும் தள்ளுக்காற்று இருந்தால் சற்றே கூடுதல் தொலைவு பறக்கும் வாய்ப்புள்ளது.

பொதுவாக நடுத்தர வகை மற்றும் பெரிய வகை விமானங்களில் இரண்டு அல்லது நான்கு எஞ்சின்கள் பொருத்தப்படுகின்றன. அனைத்து எஞ்சின்களுமே ஒரேநேரத்தில் செயலிழப்பது அரிதான விஷயமே. ஆனால், அப்படியும் எஞ்சின்கள் செயலிழந்து பின்னர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவங்களும் உண்டு.

2001ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் மேலே பறந்துகொண்டிருந்த ஏர் டிரான்ஸ்சாட் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330-243 என்ற விமானமானது எரிபொருள் இல்லாமல் ஒரு எஞ்சின் செயலிழந்தது.

அப்போது, பைலட்டுகள் உடனடியாக 300 கிமீ தூரத்தில் இருந்த விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க கேட்டுக் கொண்டனர். அப்போது விமானமானது 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

விமானத்தின் எடையுடன் ஒப்பிடும்போது, அந்த ஒற்றை எஞ்சினை வைத்து எளிதாக தரையிறக்க விடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், விமான நிலையத்திற்கு 120 கிமீ தொலைவில் இருந்தபோது எரிபொருள் முற்றிலும் தீர்ந்துபோய் மற்றொரு எஞ்சினும் செயலிழந்தது.

இதையடுத்து, மேற்சொன்ன முறையில் விமானத்தின் இறங்கும் விகிதத்தை வட்டமடித்தும், எஸ் டர்ன் அடித்தும் சரியாக குறைத்து பாதுகாப்பாக தரையிறக்கினர். மணிக்கு 370 கிமீ வேகத்தில் அந்த விமானமானது தரையிறங்கியது.

ஆனால், இங்கு மற்றொரு சிக்கல், அந்த ஏர்பஸ் ஏ330 விமானத்தை தரையிறக்குவதற்கு ஓடுபாதையின் நீளம் போதுமானதாக இல்லை. மேலும், ஓடுபாதை முடிவில் மலைக்குன்று ஒன்றும் இருந்தது. இதையடுத்து, சமார்த்தியமாக விமானத்தின் 8 டயர்களையும் வெடிக்கச் செய்து விமானத்தின் வேகத்தை அதிரடியாக குறைத்து நிறுத்தினர்.

விமானத்தை கேப்டன் ராபர்ட் பிச் மற்றும் விமானத்தின் முதன்மை அலுவலர் டர்க் டி ஜாகர் ஆகியோர் பத்திரமாகவும், சாமர்த்தியமாகவும் தரையிறக்கி சாதித்தனர். விமான போக்குவரத்து வரலாற்றில் விமான எஞ்சின்கள் செயலிழந்த பின் நீண்ட தூரம் விமானத்தை இயக்கிய பெருமையும் இவர்களுக்கு உண்டு.

விமானத்தின் ஒரு எஞ்சினில் தவறான உதிரிபாகத்தை பொருத்தியதால், எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு சம்பவத்தில் விமானி எரிபொருள் நிரப்புவதற்கு கொடுத்த எடை அளவை, தவறாக புரிந்து கொண்டு கிலோவுக்கு பதில் பவுண்ட் மதிப்பில் பணியாளர் ஒருவர் எரிபொருள் நிரப்பிவிட்டார்.

இதனால், பாதியளவே எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக காட்டியதும் விமானி அதிர்ந்து, பின்னர் எஞ்சின் செயலிழந்தத நிலையில் விமானத்தை தரையிறக்கிவிட்டார். பின்னர் விசாரணையில் இந்த குழப்பம் தெரியவந்தது. இதற்கு Dead stick Landing என்று குறிப்பிடப்படுகிறது.

Written By: Saravana Rajan

நன்றி : டிரைவ் ஸ்பார்க்     ஆஃப் பீட் – 25.10.2016

Monday, October 24, 2016

முதல் பதிவுக்கு மட்டுமே தடை


முதல் பதிவுக்கு மட்டுமே தடை - என்ன செய்ய வேண்டும்?

அங்கீகாரம் இல்லாத பழைய வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்யலாம்; அங்கீகாரம் இன்றி விற்கப்படும் மனைகளின் முதல் பதிவுக்கு மட்டுமே தடை உள்ளது' என, பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது.

அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க, பத்திரப்பதிவு சட்டத்தின், '22 அ' பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதை அமல்படுத்த, எட்டு ஆண்டுகளுக்கு பின், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து, பதிவுத்துறை தலைவரிடம் இருந்து, சுற்றறிக்கை வரும் என, சார் பதிவாளர்கள் காத்து இருந்தனர்.

ஆனால், அரசாணை நகலின் கீழ் பகுதியில், 'தகவலுக்காக' என, குறிப்பிட்டு பதிவுத்துறை தலைவரின் பெயரில், சார் பதிவாளர்களுக்கு, நகல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், இதை அமல்படுத்துவதா, வேண்டாமா என, சார் பதிவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளில் உள்ளபடி, அங்கீகாரம் இன்றி வீட்டு மனையாக பதிவான பத்திரங்களை வைத்து இருப்பவர்கள், அடுத்தடுத்து விற்றால், அந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படும்; அதற்கு தடை இல்லை. 

புதிதாக விவசாய நிலத்தை, வீட்டு மனையாக பதிவு செய்ய வரும் பத்திரங்களுக்கு மட்டுமே, தமிழக அரசு தடை விதித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.10.2016

சிபில் ஸ்டேட்மெண்ட் இனி இலவசம்


சிபில் ஸ்டேட்மெண்ட் இனி இலவசம் - என்ன செய்ய வேண்டும்?

இனி சிபில் அறிக்கை இலவசம்

செப்டம்பர் 1-ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய மான உத்தரவை தனியார் கடன் தகவல் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. 

அந்த உத்தரவில் தனிநபர்களின் கடன் தர மதிப்பு அறிக்கையை தனியார் கிரெடிட் ரேட் டிங் நிறுவனங்கள் இனி ஆண்டு தோறும் ஒருமுறை அவர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி சிபில் அமைப்பின் (Credit Information Bureau (India) Ltd - CIBIL) கடன் மதிப்பை தனிநபர்கள் தெரிந்து கொள்வதுடன், கடன் விவகாரங் களில் தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளவும் முடியும் என குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து தனிநபர் கிரெடிட் ரேட்டிங் நிறுவனங் களும் சிபில் ஸ்கோர் அறிக்கையை இலவசமாக கேட்பவர்களுக்கு அளிக்க உள்ளன.

சிபில் அறிக்கை

2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிபில் நிறுவனத்தின் முதன்மையான பணி கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுவதுதான். குறிப்பாக கடன் வழங்கும் நிறு வனங்கள் தங்களிடம் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கின்றன. 

இப்படி திரட்டப்படும் தகவல்களை வைத்து சம்பந்தப்பட்ட தனிநபர் களின் கடன் பெறும் தகுதி தீர்மானிக்கப்படுகிறது. இதற்கான புள்ளிகள் அளிக்கப்படுகின்றன.

வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றாலோ, அல்லது கடனை திருப்பி செலுத்து வதில் காலதாமதம் ஏற்பட்டாலோ வாடிக்கையாளரின் கடன் மதிப்பு குறைக்கப்படும். 

இதனால் சம்பந்தப்பட்ட தனிநபர் வேறொரு நிறு வனத்திடம் கடன் வாங்க முயற் சித்தால், சிபிலில் அவரது மதிப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு கடன் மறுக்கப்படும். பொதுவாக கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சிபில் மதிப்பின் அடிப்படையிலேயே கடன் கொடுக்கின்றன.

சிபில் அறிக்கைபடி 750-900 புள்ளி கள் சிறப்பான கடன் மதிப்பாகும். அதற்கு கீழே 650-750 சராசரியான புள்ளிகள். 550- 650 புள்ளிகள் மோசமானதாகவும், 350-550 புள்ளிகள் மிக மோசமானதாகவும் மதிப்பிடப்படும். கிரெடிட் கார்டில் தவணைக் காலம் தவறுவதுகூட இந்த புள்ளிகள் மதிப்பு குறைய காரணமாக அமையும். 

பான் எண் அடிப்படையில் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் ஒரு கடனை வாங்கி செலுத்தாமல், வேறொரு முகவரியிலிருந்து வேறொரு நிறுவனத்தில் கடன் வாங்குவதும் தடுக்கப்படுகிறது.

ஆனால் இந்த கடன் மதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் பல மக்களுக்கு சென்று சேரவில்லை. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்குகூட தங்களுடைய கடன் மதிப்பு என்ன என்பது பற்றிய முழுமையான தெளிவு கிடையாது. அல்லது இழந்த மதிப்பை உயர்த்துவதற்கான வழிகள் என்ன என்பதையும் அறிந்து வைத்திருக்கவில்லை. 

தற்போது தனிநபர்கள் இந்த அறிக்கையை ஒருமுறை வாங்குவதற்கு ரூ.550 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு என ஏதாவது ஒரு வகையில் நாம் இந்த சங்கிலியில் பிணைந்துள்ளோம். இதனால் குறைந்தபட்சம் தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்கிற விவரத்தை ஆண்டுதோறும் தெரிந்து கொள்ளவாவது இது பயன்படும். 

தவிர நமது நிதியியல் தவறுகளை திருத்திக் கொள்ளவும், எதிர்கால கடன் மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் சிபில் கடன் மதிப்பு அறிக்கையை இலவசமாகக் கேட்டுப் பெறலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 24.10.2016

Sunday, October 23, 2016

டெபிட் கார்டு பாதுகாப்பு


டெபிட் கார்டு பாதுகாப்பு - என்ன செய்ய வேண்டும்?

வங்­கி­களின், ‘டெபிட் கார்டு’ தக­வல்கள் திரு­டப்­பட்­டது தொடர்­பான செய்­திகள்,கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், கார்டு பயன்­பாட்டின் பாது­காப்பை உறுதி செய்யும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அறிந்­தி­ருப்­பது அவ­சியம்.

டெபிட் கார்டு, ‘பின்’ எண்ணை மாற்­று­மாறு கோரும் செய்தி, வங்­கி­யிடம் இருந்து உங்­க­ளுக்கு வந்­தி­ருக்­கலாம். எனில், உங்கள் டெபிட் கார்டு, ஏ.டி.எம்., பின் எண்ணை உட­ன­டி­யாக மாற்­று­வது நல்லது. 

இத்­த­கைய செய்­தியை, நீங்கள் பெற­வில்லை என்­றாலும் கூட, ஏ.டி.எம்., பின் எண்ணை மாற்­று­வது நல்­லது. 

ஏனெனில், டெபிட் கார்டு பயன்­பாட்­டிற்­ கான ரக­சிய பின் எண்ணை, குறைந்­தது, ஆண்டில் ஒரு முறை­யேனும் மாற்­று­வது நல்­லது என, வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்றனர். ஹேக்­கர்­களால் டெபிட் கார்டு தக­வல்கள் திரு­டப்­பட்டு, தவ­றாக பயன்­ப­டுத்­தப்­படும் வாய்ப்பை தவிர்க்க, இத்­த­கைய முன்­னெச்­ச­ரிக்கை அவ­சியம் என்­கின்­றனர்.

பாதிப்பு என்ன?

அண்­மையில், நாட்டின் முன்­னணி வங்­கி­களில் டெபிட் கார்ட் தொடர்­பான பாது­காப்பு மீறல் ஏற்­பட்­டுள்­ள­தாக செய்திகள் வெளி­யாகும் பின்­ன­ணியில், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. 

மர்ம மனி­தர்கள் வங்­கி­களின் டெபிட் கார்டு தக­வல்­களை திருடி 
பயன்­ப­டுத்தி உள்­ளனர் என்­பதும், சீனாவில், பணப் பரி­வர்த்­த­னைக்­காக இவை பயன்­ப­டுத்­தப்­பட்­டது பற்­றிய தக­வல்­களும் தெரிய வந்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யாகி உள்­ளன.

குறிப்­பிட்ட வெளி­நாட்டு பணப் பரி­வர்த்­தனை சேவை நிறு­வ­னத்தின் கம்ப்­யூட்­டர்கள் மால்வேர் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னதே, இதற்கு காரணம் என்றும் கூறப்­ப­டு­கி­றது. மால்வேர் தாக்­கு­தலால் டெபிட் கார்டு தக­வல்கள் திரு­டப்­பட்­டுள்ள நிலையில், பல வங்­கிகள் தங்கள் வாடிக்­கை­யா­ளர்கள் சொந்த வங்கி, ஏ.டி.எம்., களை மட்­டுமே பயன்­ப­டுத்­து­மாறும் கேட்­டுக்­கொண்டு உள்­ளன. 

பொது­வாக, வங்­கிகள் அளவில் பாது­காப்பு மீறல் நடை­பெற்று, அதனால் வாடிக்­கை­யாளர்­க­ளுக்கு இழப்பு ஏற்­பட்டால், அதற்கு வங்­கி­களே பொறுப்பு என, ரிசர்வ் வங்கி சுற்ற­றிக்கை மூலம் அண்­மையில் வலியுறுத்தி உள்­ளது. 

எனவே, ஏதேனும் இழப்பு ஏற்­பட்­டி­ருந்தால், உடனே வங்­கிக்கு அது­பற்றி தகவல் தெரி­விக்க வேண்டும். 

கார்­டு­தாரர் தவறால் இழப்பு ஏற்­பட்­டி­ருந்தால், அவரே அதற்கு பொறுப்பு. 

பொது­வாக, ஏ.டி.எம்., கார்டு பயன்­பாடு பாது­காப்­பா­னது என்றே வாடிக்­கை­யா­ளர்கள் கரு­து­கின்­றனர். 

ஆனால், பிரச்னை என்­ன­வென்றால், இந்­தி­யாவில் உள்ள, 70 சத­வீத ஏ.டி.எம்.,கள் காலா­வ­தி­யான இயங்கு­த­ளத்தை பயன்­ப­டுத்­து­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. 

இது, ஹேக்­கர்­களின் தாக்­குதல் அபா­யத்தை அதி­க­மாக்­கு­கி­றது. 

மேலும், பல்­வேறு வங்­கிகள் வெவ்­வேறு வெண்­டர்­களின், ஏ.டி.எம்., இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்­து­வதால், இதில் ஒருங்­கி­ணைந்த தர நிர்­ணயம் மற்றும் தொழில்­நுட்ப வேறு­பா­டு­களும் இருப்­பது, மேலும் சிக்­கலை உண்­டாக்­கு­கி­றது. 

இத­னாலும் தாக்­குதல் நடக்கும் வாய்ப்பு இருப்­ப­தாக, ‘சைபர்’ பாது­காப்பு வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். தாக்­குதல் நடத்த பயன்­படுத்­தப்­பட்ட மால்வேர் கண்­ட­றி­யப்­பட்டு, அது தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும். 

ரக­சிய எண் மாற்றம்

பணப் பரி­வர்த்­த­னை பாதுகாப்பை உறுதி செய்­வது, வங்­கிகள் உள்­ளிட்ட அமைப்­பு­களின் பொறுப்பு என்­றாலும், வாடிக்­கை­யா­ளர்­களும் தங்கள் தரப்பில் விழிப்­பு­ணர்­வுடன் இருப்­பது அவ­சியம். அடிப்­ப­டை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை, எல்­லாரும் பின்­பற்ற வேண்டும் என, வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

டெபிட் கார்டு பாது­காப்­பிற்­காக செய்ய வேண்­டி­யவை:

* வங்­கி­க­ளிடம், மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான தக­வல்­களை, உடனுக்­குடன் பெற வேண்டும்

* டெபிட் கார்டு பரி­வர்த்­த­னையை, தொடர்ந்து கண்­கா­ணித்து சந்­தே­கத்­திற்கு உரிய பரி­வர்த்­த­னையை கண்­ட­றி­வதில் கவ­ன­மாக இருக்க வேண்டும்

* ரக­சி­ய­மான பின் எண்ணை, அடிக்­கடி மாற்ற வேண்டும். ஒவ்­வொரு மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­முறை மாற்ற வேண்டும் அல்­லது குறைந்­த­பட்சம், ஆண்­டுக்கு ஒரு­முறை மாற்ற வேண்டும்

* வேறு வேறு கார்­டு­க­ளுக்கு, வேறு பின் எண்­களை பயன்­ப­டுத்த வேண்டும்

* பின் எண் அல்­லது மற்ற தக­வல்­களை, யாரிடமும் தெரி­விக்க வேண்டாம்

* வங்­கிகள் ஒரு­போதும் பின் எண் போன்ற­வற்றை கோரு­வ­தில்லை. இத்­த­கைய செய்­திகள், மோசடி வலை­யாக இருக்­கலாம் என அறி­யவும்

* விற்­பனை மையங்கள் கார்டு பயன்­படுத்தும் போது, கார்டை ஊழி­யர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­பது அல்­லது பின் எண்ணை தெரி­விப்­பது போன்­ற­வற்றை தவிர்க்­கவும்

* பின் எண்ணை டைப் செய்யும் போது, யாரது கண்­ணிலும் படாமல் அல்­லது கண்­கா­ணிப்பு கேம­ராவில் பதி­வா­காத வகையில், கைகளால் மறைத்துக் கொள்­ளவும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.10.2016

கர்ப்பப்பையை பாதிக்கும் பீகாஸ் சிண்ட்ரோம்


கர்ப்பப்பையை பாதிக்கும் பீகாஸ் சிண்ட்ரோம் - என்ன செய்ய வேண்டும்?

பெண்களின் பருவ வயதுக்குப் பின் அவர்களின் கர்ப்பப்பையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களுக்குத் துணைபுரிவது, பூப்படைந்தவுடன் அவர்களது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான். 

ஆனால், இந்த ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்க வேண்டும். அளவு மாறுபட்டால், பல பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற ஹார்மோன் கோளாறுகளால் இளம் பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

ஹார்மோன் கோளாறால் பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியக் குறைபாடு, பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம். மார்பகப் புற்று, கர்ப்பப்பைவாய்ப் புற்று, தைராய்டு பிரச்னைகள், இரும்புச்சத்துக் குறைபாடு எனப் பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகளின் வரிசையில், அடுத்த சவாலாக வந்து நிற்பதுதான் இந்த பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம். 

இது எந்த இளம்பெண்ணுக்கு வேண்டுமானாலும் வரலாம். வளர்ந்துவரும் நாடுகளில் பத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பி.சி.ஓ.எஸ் பாதிப்பு உள்ளது.    

பெண்களின் கர்பப்பையில் உருவாகும் சிறு சிறு கட்டிகளே பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம் என்னும் குறைபாடு. (Poly Cystic Ovary Syndrome - PCOS).

என்னென்ன பாதிப்புகள்?

பூப்படைந்த பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும். ஆண்களுக்குச் சுரக்கும் ஆன்ட்ரஜன் ஹார்மோன்கள் மிகக் குறைந்த அளவிலேயே பெண்களுக்குச் சுரக்கும். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தினால் பெண்களுக்கு ஆன்ட்ரஜன் சுரப்பு சற்று அதிகமாகிவிடும். 

இதனால் ஆண்களைப்போல கை, கால்,  முகத்தில் முடி முளைக்கும். கன்னங்களின் ஓரம், மூக்கின் கீழ் மீசைபோல மெலிதான 'பூனை முடி' ஆகியவை முளைத்தால், ஹார்மோன் குறைபாடு உள்ளது என அர்த்தம்.

இன்சுலின் ஹார்மோன் கணையத்தில் சுரக்கும். பி.சி.ஓ.எஸ் குறைபாட்டால், இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இதனால், வழக்கத்தைவிட இன்சுலின் சுரப்பு அதிகமாகிவிடும். இதனால் பி.சி.ஓ.எஸ் குறைபாடுடைய பெண்களுக்குச் சர்க்கரை மற்றும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

திடீரென உடல் எடை கூடும். மனஅழுத்தம், முகத்தில் எண்ணெய்ப் பிசுக்குள்ள சிறுசிறு கட்டிகள் ஆகியவை ஏற்படும். திடீரென ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சீரற்ற மாதவிலக்கு, அதீத ரத்தப் போக்கு ஏற்படலாம்

என்ன காரணம்?

பி.சி.ஓ.எஸ் குறைபாடு ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்னும் அலோபதி மருத்துவத்தில் கண்டறியப்படவில்லை. இது பரம்பரை நோயாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

என்ன சிகிச்சை?

இதனை முற்றிலுமாகக் குணமாக்க மருந்துகள், சிகிச்சைகள் இல்லை. இந்தக் குறைபாடு உள்ளதா, கர்பப்பையில் கட்டிகள் உள்ளனவா என அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை மூலமாக மருத்துவர்களால் கண்டறியப்படும். பின்னர், அதற்குண்டான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

புகை / மதுப் பழக்கங்களைக் கைவிடுதல், முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றுதல், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்!

வைட்டமின் ஏ, டி, ஈ, சி, பி ஆகியவை பி.சி.ஓ.எஸ் குறைபாடுடைய பெண்களுக்கு மிகவும் அவசியம். அன்றாட உணவில் இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ- 

கேரட், பசலைக் கீரை, முலாம்பழம், முட்டை, அவகேடோ, சால்மன் மீன்.

வைட்டமின் டி- 

புரோகோலி, காளான், சூரிய ஒளியில் நிற்பது.

வைட்டமின் சி- 

பேரீச்சை, உலர் திராட்சை, தக்காளி, கொய்யா, ஆரஞ்சுப் பழம்.

வைட்டமின் பி - 

அவகேடோ, மீன், இறைச்சி, முட்டை, ஆஸ்பராகஸ், பருப்பு வகைகள்.

வைட்டமின் ஈ - 

குடமிளகாய், நட்ஸ், வேர்க்கடலை, கீரைகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

பால்

பெண்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்பாட்டை கால்சியம் தூண்டிவிடும். இதனால் முகத்திலும் உடலிலும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்தக் குறைபாடு உள்ள பெண்கள் முடிந்தவரை பால் மற்றும் பால் பொருட்களை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

சோயா

சோயாவில் அதிகப் புரதம் உள்ளது. கருமுட்டை உருவாகுவதின் வேகத்தைக் குறைக்கும். எனவே, கர்ப்பக்காலத்தில் சோயா பாலைத் தவிர்க்க வேண்டும்.
அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகள்
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடுவது 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' என்னும் அளவுகோல். 

அரிசி சாதம், தோசை, இட்லி, கிழங்கு வகைகள் ஆகியவற்றில் உள்ள மாவுச்சத்து காரணமாக, கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகரிக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சாச்சுரேட்டட் கொழுப்பு

இறைச்சி மற்றும் பாலில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவை அதிகரிக்கும். இதனால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், உடலில் சேர்வது தடைப்படும்.

டரான்ஸ் ஃபேட்

நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பாக மாறுவதே டிரான்ஸ் ஃபேட். சமையலில், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, உடல் பருமன், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

பி.சி.ஓ.எஸ் குறைபாடு உள்ள பெண்களுக்கு, இந்த நோய்கள் வர இரு மடங்கு அதிகம் என்பதால் ஹோட்டல் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், எண்ணெய் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

நன்றி : விகடன் செய்திகள் – 21.10.2016

கணையம் காக்க

கணையம் காக்க என்ன செய்ய வேண்டும்?
.இன்சுலின் போதுமான அளவில் சுரக்கவில்லை எனில், கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும்.
இன்சுலின் என்ற நாளமில்லா சுரப்பையும், சில என்சைம்களையும் சுரக்கும் மிக முக்கிய வேலைகளை கணையம் செய்கிறது என்பதால், நம் உடலின் மிக முக்கிய பாகம் கணையம்.
1. உணவைச் செரிக்க, சில வகையான என்சைம்களை கணையம் சுரக்கிறது. இதை ஆல்கஹால் தடுத்துவிடுகிறது. இதனால், கணையத்தில் சுரக்கப்படும் என்சைம்கள் கணையத்திலேயே தங்கி, அதன் செல்களைப் பாதிக்கிறது. மது அருந்துவதால் அதிக அளவில் கணைய அழற்சி ஏற்படும். ஆல்கஹால் கணையத்துக்கு அரக்கன் என்பதை உணர வேண்டும்.
2. சிகரெட் புகைப்பதால் நுரையீரல் மட்டுமல்ல, கணையமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கணையத்தில் உற்பத்தியாகும் என்சைம் சிறுகுடலுக்குச் சென்றபிறகுதான், செயல்திறன் பெறும். ஆனால், புகைப் பழக்கமானது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, என்சைம்களை கணையத்தில் இருக்கும்போதே செயல்படத் தூண்டி, பாதிப்பை ஏற்படுத்தும். புகை கணையத்துக்குப் பகை.
3. அதிக உடல் எடை, உடல் பருமன் கணைய பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
4. தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யும்போது, உடல் உறுப்பு, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள் சென்று சேருவது எளிதாகும். இதனால், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகச் செயல்படும்.
5. ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பதால், கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகள், கொழுப்பு இல்லாத கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடலாம். ரெட் மீட் எனப்படும் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
6. பதப்படுத்தப்பட்ட, மைதா, சர்க்கரை போன்ற அதிகம் சுத்தகரிக்கப்பட்ட, நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
7.. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும்போது, அது கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்தச் செயல்பாடு காரணமாக, கணையம் பாதிக்கப்படலாம். கிளைசமிக் இண்டெக்ஸ் (ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன்) குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
8. கார்போஹைட்ரேட் போலவே, புரதச்சத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்குத் தேவையான அளவு மட்டுமே புரதச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப் புரதத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதைச் செரிப்பதற்கு, கணையம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
9. பித்தப்பை கல்கூட கணையத்தைப் பாதிக்கலாம். பித்தப்பை கல் காரணமாக, கணையத்தில் இருந்து சிறுகுடலுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கணைய நீரானது மீண்டும் கணையத்துக்கே செல்லத் தூண்டப்படும். இதனால், கணைய செல்கள் பாதிக்கப்பட்டு, கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் பிரச்னையை முன்கூட்டியே கண்டறிந்து, பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
10. விலங்குக் கொழுப்பு, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்த காய்கறி, முழுதானியம், தேன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மாட்டுப் பாலுக்குப் பதிலாக, தாவரங்களிலிருந்து பெறப்படும் பாலை பயன்படுத்தலாம்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.08.2015

டயாபடிக் ரெட்டினோபதி

டயாபடிக் ரெட்டினோபதி - என்ன செய்ய வேண்டும்?
விழிப்புடன் இருப்போம்! விழித்திரை காப்போம்!
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்புமண்டலம், ரத்தக் குழாய், சிறுநீரகம், இதயம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கும்.
சர்க்கரை அளவு அதிகரிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை டயாபடீக் நியூரோபதி என்றும், சிறுநீரகம் பாதிக்கப்படும்போது டயாபடீக் நெப்ரோபதி என்றும், கண்கள் பாதிக்கப்படும்போது டயாபடீக் ரெட்டினோபதி என்றும் அழைக்கிறோம்.
டயாபடீக் ரெட்டினோபதி
நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணின் லென்ஸ் வழியாகச் சென்று, விழித்திரையில் (ரெட்டினா) விழும். அங்கிருந்து நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு, அது என்ன பொருள் என்று மூளை அதன் படத்தை உருவகப்படுத்தும். எந்த ஒரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு இந்த விழித்திரை அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அதைக் கட்டுப்படுத்தாமல் விடும்போது, விழித்திரைக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும். புதிது புதிதாக ரத்தக்குழாய்கள் வளர ஆரம்பிக்கும். இதனால் பார்வை மங்கலாகத் தெரியும். ஒரு கட்டத்தில் ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய்விடும்.
பொதுவாக, 40 – 50 வயதில் பார்வைத்திறன் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை பரிந்துரைக்கப்படும்.
பெரும்பாலானோர் அப்போதுதான் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைத் தெரிந்துகொள்கின்றனர்.
சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறை மாற்றம், மாத்திரை மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னையை இயன்றவரை தடுக்க முடியும்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
குடும்பத்தில் யாரேனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 40 வயதைத் தாண்டிய குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு இருமுறையும் கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண்புரை, டயாபடீக் ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண் பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவைப் பரிசோதிக்க வேண்டும்.
மருத்துவர்கள், கண்ணில் சொட்டு மருந்தைவிட்டு, இன்டேரக்ட் ஆப்தல்மோஸ்கோப்பி (Indirect Opthalmoscopy) என்ற பரிசோதனை மூலம் ரத்தக்குழாயில் விரிசல், ரத்தக் கசிவு ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனைசெய்து, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிப்பர்.
சிகிச்சை என்ன?
டயாபடீக் ரெட்டினோபதியில் 10 விதமான நிலைகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்பட்சத்தில் எந்தவித சிகிச்சையும் தேவை இல்லை.
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், டயாபடீக் ரெட்டினோபதியின் தீவிரத்தைத் தடுக்க முடியும். 6 முதல் 10 நிலைகளில் இருந்தால், ரத்தக்குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது, புது ரத்தக்குழாய்கள் வளர்ந்தி ருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் லேசர் முறையில் கண்ணுக்குள், வெள்ளைப்பகுதியில் 0.5 -0.7 மி.மி அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டுவிட்ரேக்டமிஎனும் நுண்ணிய அறுவைசிகிச்சை செய்யப்படும்.
கண்புரை பிரச்னை உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் மீண்டும் புரையால் இழந்த பார்வைத்திறனைப் பெற முடியும். டயாபடீக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம், மீதமிருக்கும் பார்வைத்திறனை காப்பாற்றிக்கொள்ளலாம்.
ரெட்டினோபதியைத் தவிர்க்கலாம்!
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக பார்வை இழப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் ரெட்டினோபதியும் ஒன்று.
ஆனால், இந்தப் பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும். சர்க்கரை நோயாளிகளில் 90 சதவிகிதம் பேருக்கு ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் வந்தவுடன், உடனடியாக பாதிப்பு இருக்காது.
சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்காதபோதுதான் பாதிப்பு ஏற்படும்.
15 – 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயுடன் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னை இருந்தால், கண்ணின் ரெட்டினா பகுதி பாதிக்கப்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும்.
எனவே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம். முற்றிய நிலையில் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.08.201