disalbe Right click

Saturday, October 15, 2016

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான நிபந்தனைகள்


அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான நிபந்தனைகள் 
என்ன செய்ய வேண்டும்?

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA) மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் (DTCP) இவை தமிழகத்தில் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் அதிகரம் பெற்ற அரசு அமைப்புகள். 

CMDA-வின் அதிகார வரையரை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குட்பட்ட அதிகார எல்லைகளுக்குள்ளேயே உள்ளது. 

மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் (DTCP)யின் அதிகார வரையறையுள்ளது. 
நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் பொறுப்பு 10 ஏக்கர் (5 ஏக்கரிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது) வரை உள்ளூர்த் திட்ட அதிகார அமைப்பால் (LPA) வழங்கப்படுகிறது. 

LPA, DTCP அமைப்பின் துணைக்குழு. 10 ஏக்கருக்கு மேல் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் பொறுப்பு சென்னையில் உள்ள DTCP தலைமை அலுவலகத்தில் உள்ளது.


நில அமைப்பு ஒப்புதல் வழங்குவதற்கான நிபந்தனைகள்:

1. தாசில்தாரிடமிருந்து ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் (NOC) பெறவேண்டும். அந்த நிலமானது புறம்போக்கு நிலமாக இருக்கக் கூடாது. நிலச் சீர்திருத்த சட்டம் 1961, நில உச்சவரம்புச் சட்டம் 1978 மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளின் கீழ் வரக் கூடாது.

2. தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணத்தில் FMB/டவுண் சர்வே ஸ்கெட்ச், பட்டா/ சிட்டா/ நில கணக்கெடுப்பு “A” சான்று பதிவு, யத்து அமைப்பு குறித்து பொதுமக்களிடையே போதுமான சட்டவிழிப்புணர்வு இல்லை.

 ‘பஞ்சாயத்து ஒப்புதல்’ என்று எந்தச் சொல்லியல் முறையும் இல்லை. CMDA, LPA மற்றும் DTCP ஆகியவை மட்டும் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்புகள். 

எந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கும் அவரவர் எல்லைப் பகுதியில்கூட நில அமைப்பு தொடர்பான ஒப்புதல் வழங்கும் அதிகாரம் இல்லை. 

மேலும் பஞ்சாயத்துத் தலைவர் DTCP/CMDAவால் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு மட்டும் கட்டிட அனுமதி வழங்கலாம்.

 கிராம வரைபடம், அந்த நிலபகுதியில் உள்ள நீரோட்டம் தொடர்பான விவரங்கள் கூறிப்பிடப்பட வேண்டும்

3. 2,500 சதுர மீட்டருக்கு மேல் (26900 Sq.ft) இருப்பின், 10 சதவீத நிலத்தை திறந்த வெளி இட ஒதுக்கீடு செய்ய (Open Space Reservation) வேண்டும். இந்த இடத்தைத் தான பத்திரம் மூலம் அரசுக்குப் பதிவுசெய்ய வேண்டும். 

10,000 சதுர மீட்டர்க்கு மேல் (107600 Sq.ft) இருப்பின் (ரோடுகளைத் தவிர்த்து) பொதுச் சேவைகளுக்கு (கல்விக் கட்டிடம், தபால் நிலையம், காவல் நிலையம், பூங்கா) ஒதுக்கீடுசெய்ய வேண்டும். மேலும் 10 சதவிகித நிலத்தைப் பொருளாதாரத்தில் பின் தங்கிய (Economically Weaker Section) நபர்களுக்கு ஒதுக்கீடுசெய்ய வேண்டும். 

ஒருவேளை ஒதுக்கீடுசெய்ய முடியாவிட்டால் அந்த 10 சதவீத நிலத்தை நில அமைப்பில் இருந்து 5 கீ.மி. சுற்றளவை உள்ள இடத்தில் அரசாங்கத்துக்குத் தானமாக வழங்க வேண்டும்.

4. மின்சார/ தொலைபேசி வரி தளம் அந்த பாதையில் இருந்தால் ஒரு மறுசீரமைப்பு சமர்ப்பிக்க வேண்டும்.

5. கீழ்க்கண்ட இடங்களில் உள்ள நிலத்துக்கு அது சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து NOC பெறுவது கட்டாயமாகும்.

a) நீர் நிலைகளில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இருந்தால் (பொதுப்பணித்துறை அல்லது சம்பந்தப்பட்ட துறை)

b) இரயில் பாதையிலிருந்து 30 மீட்டர் (இரயில்வே துறை)

c) ஒரு உர புறத்திலிருந்து (ComPost Yard) (உள்ளாட்சி)

d) இடுகாடு/ சுடுகாட்டிலிருந்து 90 மீட்டர் (சுகாதார அதிகாரி)

e) கல் குவாரியிலிருந்து 300 மீட்டர் (சுரங்க அதிகாரி)

f) 500 மீட்டர் நொறுக்கு (Crusher) ஆலையிலிருந்து. (சுரங்க அதிகாரி

g) 500 மீட்டர் விமான நிலையத்திலிருந்து (இந்திய விமான அதிகாரத் துறை)

6. TOPO நில அமைப்பு

2000-ம் ஆண்டு முதல் நில அமைப்பு ஒப்புதல் சரிபார்த்தலை CMDA இணையதளமான www.cmdachennai.gov.in என்ற இணையதளத்திலும் காணலாம். 

அதேபோல், 2011-2012-ம் ஆண்டு முதல் DTCP வழங்கிய அங்கிகரிக்கப்பட்ட ஒப்புதல்களை DTCP இணையதளமான www.tn.gov.in/tcp என்ற தளத்திலும் சரிபார்க்கலாம்.

கட்டுரையாளர் : 
வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர்
கேரளா அரசின் சட்ட ஆலோசகர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.10.2016

வீட்டு மனைகள் வாங்கலாமா


வீட்டு மனைகள் வாங்கலாமா - என்ன செய்ய  வேண்டும்?

சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு மனைகளின் விலை கோடியைத் தாண்டிவிட்டது. சிறுநகரங்களிலோ அவை லட்சங்கள். 

இந்நிலையில் வீட்டு மனைகளை முதலீட்டுக்காக வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குள் விற்பனை செய்யப்படும் வீட்டு மனைகளையே நாடுகிறார்கள்.

நடுத்தர மக்கள் கிராமப் பஞ்சாயத்துக்குட்பட்ட எல்லையில் வீட்டு மனைகளை வாங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ முதலீட்டுக் கோணத்தில் கிராமப் புறங்களில் மனைகளை வாங்குவதும் உண்டு. 

எல்லாம் சரிதான், இப்படி வாங்கப்படும் மனைகள் அரசின் அனுமதி பெற்றதா என்பதைக் கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

விளை நிலங்கள் மனைகளாக்கப்படுவதைத் தடுக்க சமீபத்தில் உயர் நீதி மன்றம் முக்கியமான உத்தரவைப் பிறத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள்தான் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரங்களைப் பெற்றிருக்கின்றன. 

பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இப்படி ஒரு அதிகாரம் கிடையவே கிடையாது.

குறைந்த விலையில் மனைகளை வாங்கும் பலரும் இந்த விஷயத்தை சரிவர கவனிப்பதில்லை. பஞ்சாயத்து அப்ரூவல் என்று சொல்லி மனைகளை விற்பவர்களும் உண்டு. பின்னர் அங்கீகாரம் வாங்கிக்கொள்ளலாம் என்றும்கூடச் சொல்லுவார்கள்.

சி.எம்.டி.ஏ., டிடிசிபி இந்த இரு அமைப்புகளின் அங்கீகாரங்களைப் பெறாமல் விற்கப்படும் மனைகளை வாங்கினால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.

வாங்கிய மனை, மனையாகவே இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்த மனையில் வீடு கட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போதுதான் பிரச்சினைகள் தெரிய வரும். 

முறையான அங்கீகாரம் இல்லாத மனையில் கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்காது. அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட மனையில் வீடு கட்ட வங்கிகளும் வீட்டுக் கடன் அளிப்பதில்லை. 

பின்னாளில் பிரச்சினை வரலாம் என்ற கோணத்தில் வங்கிகள் கடன் வழங்காமல் பின்வாங்கிவிடும்.

பஞ்சாயத்து மனையில் அரசின் திட்டங்கள், கட்டுமானங்கள் ஏதேனும் வருகின்றனவா, சாலை விரிவாக்கம் செய்யப்படக்கூடிய பகுதியா என்பதெல்லாம் சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. அமைப்புகளுக்குத்தான் தெரியும். 

எனவேதான் இந்த அமைப்புகளின் அங்கீகாரத்துக்கு இவ்வளவு மதிப்பும் கொடுக்கப்படுகிறது. அதனால் பஞ்சாயத்து அப்ரூவல் என்று சொல்லி விற்கப்படும் மனைகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.10.2016

Friday, October 14, 2016

ஆட்டிசம் - மனநலக் குறைபாடா?

ஆட்டிசம் மனநலக் குறைபாடா?
என் மகள் இவ்வளவு காலம் மற்ற குழந்தைகளைப் போலத்தான் இருந்தாள். ஆனால், இப்போது அவளது செயல்பாடுகளில் மாற்றம் காணப்படுகிறது. அருகிலுள்ள மருத்துவரிடம் காட்டியபோது, ஆட்டிசம் சார்ந்த சிறப்பு மருத்துவரிடம் காட்டச் சொன்னார். ஆட்டிசம் என்பது மனநலக் குறைபாடு போன்றதா? இதற்கு மாற்று மருத்துவத் தீர்வுகள் உண்டா?
------------------------------------------------------------------------------------------------------- தமிழரசி, தஞ்சாவூர்

இந்தியாவில் இருபது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும், இது குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரைக்கும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.
ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படும்.
குறைபாடு
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. இதைச் சரியான காலத்தில் அடையாளம் காணாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். இந்தக் குறைபாட்டைச் சீக்கிரமாகக் கண்டறிவதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். இவ்வகைக் குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்துக்கும் இக்குறைபாட்டுக்கும் தொடர்பில்லை.
ஆட்டிசம் அறிகுறிகள்
எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.
  கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது.
 தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.
  சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.
  பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.
  பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.
  வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.
 தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.
  காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.
  வலியை உணராமல் இருப்பது.
 வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்துகொண்டிருப்பது.
  வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.
  சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.
 தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசவுகரியமாக உணருவது.
  பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
  பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.
  எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.
  தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.
 சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனித்து இருப்பது.
இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படைக் கூறுகள். 1943-ல் டாக்டர் லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர்தான் ஆட்டிசம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். அவர் தனது `பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம்’ (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன்முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சினைகள் பேசப்பட்டன.
அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் (Asperger syndrome)
பெரும்பாலும் பதின்ம வயதுகளிலேயே இக்குறைபாடு கண்டறியப்படுகிறது. இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பேசுவதிலும் புரிந்துகொள்ளும் திறனிலும் எந்தக் குறைபாடும் இருக்காது. சொல்லப்போனால் இக்குறைபாடுள்ள குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் சராசரிக்கும் மேம்பட்ட அறிவுத் திறனைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களுடைய பிரச்சினையே, மற்றவர்களோடு கலந்து பழகமுடியாமல் இருப்பதுதான். எனவே, வளர வளரத்தான் இந்த பிரச்சினையைக் கண்டுபிடிக்க முடியும். உலகில் மிகவும் பிரபலமாக இருந்த பல பேர் இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குறைபாட்டை `கீக் சிண்ட்ரோம்’ (Geek Syndrome) அல்லது `லிட்டில் புரொபசர் சிண்ட்ரோம்’ (Little Professor Syndrome) என்றும் கூறுவதுண்டு.
ரெட் சிண்ட்ரோம் (Rett syndrome)
இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. தலை வளர்ச்சி மிகவும் மெதுவாக இருப்பது, கைகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாமலிருப்பது போன்றவை இதன் அடையாளங்கள். இது பெரும்பாலும் மரபணு மூலமாகக் கடத்தப்படுகிறது. மேலும் `ரெட்’ மட்டுமே ஆட்டிசம் தொடர்பான குறைபாடுகளில் மருத்துவ ரீதியாக சோதித்துக் கண்டறிய முடிவதாக உள்ளது.
சி.டி.டி (Childhood Disintegrative Disorder)
இவ்வகைக் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்ற ஆட்டிசக் குறைபாடுகளைப் போலின்றி, குறிப்பிட்ட வயதுவரை இயல்பான குழந்தைகள் போலவே பேசவும், மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். திடீரென இவர்கள் பேச்சுத் திறன், பழகும் திறன் ஆகியவற்றை இழந்து ஆட்டிச நிலைக்கு உள்ளாவார்கள்.
ஆட்டிச பாதிப்புடைய பலரும் சில நேரங்களில் மூர்க்கமாக நடந்துகொள்வது உண்டு. இது அவர்களுடைய பயம் அல்லது எரிச்சல் காரணமாகவோ, உடல் ரீதியான சில சிக்கல்களாலோ ஏற்படுவது மட்டுமே. ஆட்டிசத்தின் காரணமாக அவர்கள் குரூரமான வன்முறைகளில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்று.
ஆட்டிசமுடைய ஒரு சிலர், ஏதேனும் சில துறைகளில் அபாரமான ஞானம் உடையவர்களாக இருப்பது உண்மையே. ஆனால், அதற்காக ஆட்டிச பாதிப்புக்குள்ளான எல்லோருமே ஏதேனும் ஒரு துறையில் சிறப்பாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆட்டிச பாதிப்புக்குள்ளான ஒரு சிலரால் பேச முடியாமலும், சைகைகளால் மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாக இருப்பதும் நிஜமே.
எப்படி மனித உடலுக்குச் சர்க்கரை குறைபாடு வந்தாலோ, ரத்தக் கொதிப்பு வந்தாலோ 100 சதவீதம் குணப்படுத்த முடியாதோ, அதுபோலத்தான் ஆட்டிசமும். ஆனாலும் ஆட்டிச பாதிப்புக்கு உள்ளானவர்களைத் தொடர் பயிற்சியின் மூலம் ஓரளவுக்குச் சீரான நிலைக்குக் கொண்டுவர முடியும்.
இயல்பும் பிறழ்வும்
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் மூளையுடன் கொண்டுள்ள புறத் தொடர்பு, அதனால் உணரப்படுவதை புத்தி என்று சொல்லலாம். எந்தவொரு பொருளையும் அல்லது விஷயத்தையும் மூளை உணர்வது கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் வழியே அவை தரும் அடிப்படைத் தகவல்களைப் பரிசீலிப்பதன் மூலம்தான்.
அத்தகவல்களின் அடிப்படையில்தான் நாம் மேற்கொண்டு சிந்தித்து, உணர்வுபூர்வமாகவும் உடல் மூலமாகவும் எதிர்வினையாற்றுகிறோம். சாதாரணமாக இவையெல்லாம் அனிச்சையாகவே நடக்கும் என்பதால், நாம் இவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.
என்ன பிரச்சினை?
ஆட்டிச பாதிப்பு கொண்டவர்களுக்கு இந்த `சென்சரி’ - உணர்வு சார்ந்த தகவல்களைப் பெறுவதிலும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதிலும் நிறைய சிக்கல்கள் உண்டு. அச்சிக்கலில் மாட்டியவர்கள், மிகுந்த மனப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் உணர்வார்கள். ஒரு சில ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் உடல் ரீதியிலான வலியையும் உணர்வதுண்டு. இது அவர்களின் நடத்தையை உடனடியாக பாதிக்கும்.
இக்குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினை கேட்பதில் ஏற்படுவதுதான். ஏனெனில், சத்தங்களை உள்வாங்காதபோது மனிதனின் தகவல் தொடர்புத் திறன் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஒலிகள் மிகைப்படுத்தப்பட்டும் கேட்கலாம். அல்லது குழப்பமாகவும், தெளிவில்லாமலும் கேட்கலாம்.
டாக்டர் எல்.மகாதேவன்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 31.01.2015 

பேஸ்புக் பதிவுகள்


பேஸ்புக் பதிவுகள் -  என்ன செய்ய வேண்டும்?

எச்சரிக்கைப்பதிவு 

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பகிர்ந்த உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "மீரட் நகரின் சார்தானா நகரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர் முதாசிர் ரானா. 

இவர் நடந்து முடிந்த தசரா பண்டிகையின்போது பிரதமர் மோடி குறித்தும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குறித்தும் விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். 

பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் ராவணனின் பத்து தலைகளில் அடங்குவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு இந்துதுவா அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 

போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ரானா கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153-ஏ, ஐ.டி. சட்டம் 66-ஏ ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

டெலீட் செய்தும் நடவடிக்கை:

தனது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரானா தனது பதிவை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். இருந்தும் போலீஸில் கொடுக்கப்பட்ட புகாரின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணா, "யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அதனால்தான் அந்தப் பதிவை நீக்கினேன். 

எனது கருத்தால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். யாரையும் வேதனைப்படுத்த நினைக்கவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.10.2016

ரேஷன் கடைகளில் வழங்கும் பொருள்கள் குறைபாடு


ரேஷன் கடைகளில் வழங்கும் பொருள்கள் குறைபாடு 
என்ன செய்ய வேண்டும்?

ரேஷன் பொருள்கள் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்த குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் அலுவலகத்துக்கு 

044-28592828 என்ற எண்ணிலும், 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு 

9445190660, 
9445190661, 
9445190662 
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

நன்றி : தினமணி நாளிதழ் - 14.10.2016

Wednesday, October 12, 2016

தேசிய தகுதித் தேர்வு


தேசிய தகுதித் தேர்வு - என்ன செய்ய வேண்டும்?

’நெட்’ தகுதி தேர்வு; சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

கோவை: நெட் தகுதி தேர்வுக்கு, 2017 ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கு, வரும், 17ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

பல்கலை, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியில் சேர்வதற்கும், பி.எச்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும், மத்திய கல்வி வாரியத்தால் நெட் தகுதி தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, 2017ம் கல்வியாண்டிற்கான தேர்வு, ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது.

தேர்வர்கள் வரும், 17ம் தேதி முதல் நவ., 16ம் தேதி வரை,  "ஆன்-லைன்" மூலமாக விண்ணப்பிக்கலாம். 

இதற்கான கட்டணங்களை, நவ.,17ம் தேதிக்குள் செலுத்துவது அவசியம். 

தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, டிச., 21ம் தேதி சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, தெளிவான விபரங்களை சி.பி.எஸ்.இ., இணையதளம் www.cbsenet.nic.in மூலம் அறிந்து கொள்ளலாம்.

நன்றி : தினமலர் - கல்வி மலர் - 12.10.2016



Tuesday, October 11, 2016

ஆன்லைன் பர்சேஸ்


ஆன்லைன் பர்சேஸ் - என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் பர்ச்சேஸ்… நில்… கவனி… வாங்கு!
ராஜேஷ், சென்னையின் பிரபலமான ஐ.டி நிறுவனம் ஒன்றில் அட்டகாசமான சம்பளத்தில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இன்னும் திருமணமாகாத இளைஞன் என்பதால், தனி வீட்டில் வாசம். பேஸ்ட், பிரஷ் தொடங்கி காய்கறி, கம்ப்யூட்டர் வரை ஆன்லைன் ஷாப்பிங் அவருக்கு கைவந்த கலை.

நன்றாகச் சென்றுகொண்டிருந்த ஆன்லைன் ஷாப்பிங் வாழ்க்கையில், ஆசைக்காக ஒரு செல்போன் வாங்கப் போய் அவர் பட்டபாடு… செல்போன் மாடல், விலை எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்தவர் செய்த ஒரே தவறு, அதை பெயர் தெரியாத ஒரு விற்பனைத் தளத்தில் ஆர்டர் செய்ததுதான்.

செல்போனுக்காக ஆர்வமாகக் காத்திருந்தவருக்கு பார்சலில் வந்து சேர்ந்தது ஒரு செங்கல். அதிர்ந்து போனவர் கஸ்டமர்கேர்க்கு போன் போட்டால்,  பதிலாக எதிர்முனையில் கிடைத்தது வெறும் ‘பீப்’ ஒலி. 

இதில் கொசுறாக அவருடைய கிரெடிட் கார்டு நம்பரை அந்த ஆன்லைன் வெப்சைட் மூலமாக மனப்பாடம் செய்த மற்றொரு வெப்சைட், கிட்டதட்ட பத்தாயிரம் ரூபாயை அவருக்கே தெரியாமல் தீட்டிவிட்டது. 

என்ன செய்வதென்றே தெரியாமல் கஸ்டமர் கேருக்கும், கிரெடிட் கார்டு புகார் தரும் நம்பருக்கும் ஓயாமல் அழைத்து நொந்துபோன ராஜேஷ் இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்.

ஆனால் ராஜேஷைப் போல நம் எல்லோராலும் ஆன்லைன் பர்ச்சேஸை முழுவதுமாகத் தவிர்க்க இயலாது. உலக அளவில் மூன்று கோடி பேர் ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்குவதை பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். 

அப்படி இருக்கையில் ஆன்லைன் பர்ச்சேஸை  நம்மால் மட்டும் எப்படி தவிர்க்க முடியும்..? ஆனால், பர்ச்சேஸ் செய்யும்போது எதையெல்லாம் வாங்கலாம், எதையெல்லாம் வாங்கக்கூடாது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனப் பார்ப்போம்.

வெப்சைட்டின் நம்பகத்தன்மை!

உண்மையில் ஐந்து நிமிடத்தைக்கூட வேஸ்ட் செய்ய முடியாத டெக்னாலஜி வளர்ச்சி அடைந்துள்ள இந்த வைரல் உலகில், வெளியில் சென்று பொருள் வாங்க முடியாத பலருக்கும் ஆன்லைன் ஷாப்பிங்தான் தக்க சமயத்தில் கைகொடுக்கிறது. ஆனால், ஒரு பெட்டிக் கடையில்கூட பேரம் பேசி பொருள் வாங்கும் நாம், ஆன்லைன் தளங்களில் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு பொருள் கிடைத்தால் போதும் என க்ளிக் செய்து விடுகிறோம். 

அந்தத் தளத்தின் உண்மைத் தன்மை, இதுவரை பொருட்கள் வாங்கியவர் களின் கருத்துக்கள், பொருளின் தயாரிப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆன்லைன் ஷாப்பிங் உலகுக்குள் கொட்டிக் கிடக்கும் வெப்சைட்கள் கணக்கிலடங்காதவை.

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜபாங், லைம்ரோடு என்று ஆடைகள், புத்தகங்கள், கேட்ஜெட் என்னும் எலெக்ட்ரானிக் அயிட்டம்கள் தொடங்கி அரிசி, பருப்பு, கேக் என்று உணவுப் பொருட்கள் வரை விற்கும் தளங்களும் எக்கச்சக்கம். அதில் நியாயமான விலை, நம்பகத்தன்மை கொண்ட வெப்சைட்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே உங்கள் பொருள், பத்திரமாக உங்கள் கைகளுக்கு வந்துசேரும்.

 கவனிக்கவேண்டிய கஸ்டமர் ரெவியூ!

நீங்கள் ஒரு புடவையோ, டீ-சர்ட்டோ அழகாக இருக்கிறது. விலையும் கம்மி என்று முடிவு செய்து ஆர்டர் செய்திருப்பீர்கள். ஆனால், கைகளுக்கு வந்து சேர்வதோ நிறம் மங்கிய, இல்லையெனில் வேறு டிசைன், வேறு கலரில் என்று உங்களை கொலைவெறிக்கு உள்ளாக்கும் ஒரு ஆடையாக இருக்கும். 

இந்த பிரச்னைகளைத் தவிர்க்க, ஆடைகளை ஆன்லைனில் தேர்ந்தெடுக்கும்போது அதிக அளவிலான கஸ்டமர் ரெவியூக்கள் பெற்ற தளத்தினைத் தேர்ந்தெடுத்தல் அவசியம். ஆடையின் நிறம், சைஸ் ஆகியவற்றையும் ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்துகொள்ளுங்கள். கூடுமானவரையில் உங்களுக்கு பரிட்சயமான பிராண்ட் துணிகளையே தேர்ந்தெடுங்கள்.

விலை உயர்ந்த பொருட்களைத் தவிர்க்கலாம்!

ஒரு துணிக்கே இவ்வளவு யோசிக்க வேண்டுமென்றால், விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களான செல்போன், டிவி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்க எவ்வளவு யோசிக்க வேண்டும் என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்லைனில் கொட்டிக் கிடக்கும் கம்பேரிசன் வெப்சைட்கள் மூலமாக ஒரு பிராண்டின் விலை மாறுபாடுகள், தர நிர்ணயம் போன்றவற்றில் கவனமாக வையுங்கள். 

45 இன்ச் டிவிக்கு பதில், 16 இன்ச் டிவியையோ, பிராண்ட் செல்போ னுக்கு பதில் சைனா மேட் செல்போன் ஒன்றையோ ஆன்லைன் டீலர் உங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டால் அதை திருப்பி அனுப்பி, அவர்களிடமிருந்து ரீஃபண்ட் பெறுவதற்குள் நீங்கள் கடையிலேயே நேரடியாக அதை வாங்கியிருக்கலாம் என்று தோன்றிவிடும்.

பெரும்பாலும் விலையுயர்ந்த தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், முக்கியமாக உணவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதைத் தவிர்ப்பது நலம். 

ஏனெனில், தங்க நகைகளைப் பொறுத்தவரை, ஆன்லைன் பர்ச்சேஸில் ஒருமுறை விற்பனை செய்துவிட்டால், 15 நாட்கள் கெடுக்குள் திரும்பி மாற்றிக்கொள்ளமுடியும் என்கிற கெடுவெல்லாம் பெரும்பாலான விற்பனைத் தளங்களில் கிடையாது. 

அதேபோன்று ஆன்லை னில் விற்பனையாகும் பிராண்ட் இல்லாத எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பதும் முக்கியம். ஏனெனில், ஒரு சிறிய கோளாறு என்றால்கூட நீங்கள் வீதி வீதியாக சர்வீஸ் ஷோருமைத் தேடி அலைய வேண்டி வரும்.

உணவுப் பொருட்கள், உஷார்!

உணவுப் பொருட்களை வாங்கியே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் வாங்குங்கள். அடிக்கடி வாங்கிப் பழகிய வெப்சைட் என்றால் பிரச்னை இல்லை. 

புதிதாக வாங்கத் தொடங்கும்போது கூடியவரை கூகுள் சஜஷனில் முன்னிலையில் உள்ள வெப்சைட்டைத் தேர்ந்தெடுங்கள். தேதி முடிவடைந்த பொருட்களைக்கூட வேறு கவர்களில் மாற்றி விற்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆன்லைன் உணவுப் பொருள் ஷாப்பிங்கில் அதிகம்.

லெக்ட்ரானிக் பொருட்கள், எச்சரிக்கை!

எலெக்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்த வரையில், நம்பகமான தளத்தில் ஆஃபர்களைக் கணக்கிட்டு வாங்குங்கள். ஒரு நல்ல, தரமான பொருளுக்காகக் காத்திருப்பதில் தவறில்லை. அதை விட்டுவிட்டு ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தில் இரண்டே நாளில் பொருள் கைக்கு வந்துவிட வேண்டும் என்று ஓட்டை, உடைசல் செல்போனையோ, வாரண்டி இல்லாத டிவி, மிக்ஸியையோ வாங்கிவிட்டால் அவதிப்படப் போவது நீங்கள்தான். அதுவும், 

இஎம்ஐ போட்டு கடனில் வாங்கும் பொருட்களில் தரம் இல்லையென்றால், அதிக விலை கொடுத்தும் வேஸ்ட்தான். இவற்றையெல்லாம் தாண்டி குறைந்த விலையில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள், சார்ஜர், பர்னிச்சர் என்று எல்லாவற்றையும் முடிந்தவரை நேரில் சென்று ஒன்றுக்கு நான்கு பொருட்களின் விலை மாறுபாடுகளை ஆராய்ந்து வாங்குவதே நல்லது.

எனினும், ஆன்லைன் ஷாப்பிங்கில்தான் இவற்றையெல்லாம் வாங்குவேன் என்பவர்கள் பொருள் கைக்கு கிடைத்த அன்றே அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் வாங்கிய இணைய தளத்தில் புகாரினைப் பதிவு செய்துவிடுங்கள். 

அதிக அளவிலான பயனாளர்களின் வருகை இருக்கும் ஆன்லைன் வெப்சைட்களையே பொருட்கள் வாங்கத் தேர்ந்தெடுங்கள். ரீஃபண்ட் பாலிசிகளைத் தெளிவாக மெயின்டெய்ன் செய்யும் தளங்களில் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குங்கள். விலை அதிகமாக இருந்தாலும் தரமான, நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய பிராண்ட் பொருட்களையேத் தேர்ந்தெடுங்கள்.

பணம் பத்திரம்!

உங்கள் சொந்தக் கணினி இல்லாமல், வெளியில், அலுவலகக் கணினிகளில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது வைரஸோ, மால்வேரோ உள்நுழைந்து உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைத் திருடிவிடலாம். அதனால், ஹைப்பர் லிங்கில் தேவை இல்லாத இணையப் பக்கங்களுக்கு அழைத்துச் செல்லும் தளங்களில் பர்ச்சேஸ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஜிகினா ஆஃபர்களை நம்பாதீர்!

முக்கியமாக, ஆன்லைன் ஜிகினா வேலைகளை நம்பி பொருட்களை வாங்குவதைப் பழக்கமாக வைத்துக்கொள்வது ஆபத்து. முடிந்தவரை,  ‘இன்றே கடைசி’,  ‘விசாலமான ஹோட்டல் அறை 750 ரூபாய் மட்டுமே’ போன்ற ஆஃபர்களை தவிர்த்துவிடுங்கள். ஹோட்டல் ஆஃபர்களை ஏதோ ஒரு தளத்தில் புக் செய்துவிட்டு, புது ஊர், புது இடத்தில் சென்று தவிக்கும் நிலை ஏற்பட்டால் ரொம்பக் கஷ்டம்.

கடைசியாக ஒன்றே ஒன்று… இது ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட உலகம். முடிந்தவரை எச்சரிக்கை உணர்வோடு பர்ச்சேஸ் செய்வது மட்டுமே உங்கள் பணத்துக்கான பாதுகாப்பாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------பா.விஜயலட்சுமி

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

நாய்க்கடி


நாய்க்கடி - என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : 

நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போடுவார்கள் என்று பயமுறுத்துகிறார்களே, உண்மையா?

பதில் : 

நாய்க்கடி என்பது மிகவும் ஆபத்தானது... அதனால் வரும் விளைவுகள் பயங்கரமானவை.. சரியான முதலுதவியும் சிகிச்சையும் செய்துகொண்டால் அச்சப்படத் தேவையில்லை.

வீட்டில் நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் கடித்தால், தொற்றுத் தடுப்பு (டி.டி.) ஊசி போட்டாலே போதுமானது.

அது கிருமிகள் பரவுவதைத் தடுத்து விடும்.

ஆனால், தெரு நாயோ அல்லது வெறி நாயோ கடித்துவிட்டால், கடிபட்ட இடத்தை உடனே சோப்பால் கழுவ வேண்டும். பிறகு டெட்டால் போன்ற கிருமிநாசினியால் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். நாய்க்கடி பட்ட 48 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போட்டாக வேண்டும். இல்லையென்றால் ஆபத்துதான்.

அதுவும் வெறிநாய்கள் (சில நாய்கள் பார்ப்பதற்கே பயங்கரமாகவும், எப்போதும் நாக்கைத் தொங்கப்பட்டுக்கொண்டு, நாக்கில் இருந்து நீர் வழிந்துகொண்டு, இரைத்துக் கொண்டும் பயங்கரமாக முழித்துக் கொண்டும் இருக்கும்) கடித்துத்தான் ஆக வேண்டும் என்றில்லை. தனது நாக்கினால் நக்கினாலே போதும். அந்த இடத்தில் புண்ணோ, சிராய்ப்போ இருந்தால், அந்த வழியாக "ரேபிஸ் வைரஸ்' (கிருமிகள்) உடம்பின் உள்ளே புகுந்து விடும்.

கடிபட்ட இடத்திலிருந்து, நரம்பு வழியே இந்தக் கிருமி, ஸ்லோ மோஷனில் மூளையை நோக்கிப் பயணிக்கும். அதுவும் மூளைக்கு அருகில் தலையிலோ கழுத்திலோ நாய் கடித்திருந்தால் மேட்டர் ரொம்பவும் சீரியஸ். உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும்.

தொப்புளைச் சுற்றி, ஊசி போட்டு, நல்லா இருந்த வயிற்றைச் சல்லடையாக்கி, பொத்தல் போட்டு விடுவார்களோ என்று பயப்பட வேண்டாம். கையிலேயே போடும் ஊசி வந்து விட்டது.
------------------------------------------------------------------------------------------------------- ரொசிட்டா

நன்றி : தினமணி - சிறுவர் மணி - 11.10.2016

கன்ஸ்யூமர் லோன் கிடைக்க


கன்ஸ்யூமர் லோன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

கன்ஸ்யூமர் லோன்… உங்களுக்கு கிடைக்குமா?

பண்டிகை  என்றாலே ஷாப்பிங் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். அடுத்து ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து வர உள்ளன. இந்த பண்டிகை சமயங்களில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என ஏதாவது பொருட்களை நாம் வாங்குவோம்.

 நம்மில் பலரால் இந்த பொருட்களை முழுத் தொகை கட்டி வாங்க முடிவதில்லை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடனை வாங்கியே பல விதமான பொருட்களை வாங்குவது மிடில் கிளாஸ்வாசிகளான நமக்கு பழக்கமான விஷயமாகிவிட்டது. இது நுகர்வோர் கடன் (Consumer loan) எனப்படுகிறது.

இந்த கடன் எப்படி வழங்கப்படுகின்றன, இதற்கு என்ன ஆவணங்கள் தேவை, இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விசாரிக்க களமிறங்கினோம். ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய கடைகளில் இருக்கும் கன்ஸ்யூமர் லோன் வழங்கும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம்.

ஆவணங்கள்!

நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பவர்கள் தங்களுடைய முகவரிச் சான்று, அடையாளச் சான்று, கடைசி 3 மாத வங்கி அறிக்கை, காசோலை ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.   நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பம் செய்பவரின் முகவரி எல்லா ஆவணங்களிலும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் முகவரி மாறி இருந்தால் கடன் மறுக்கப்படலாம்.

கடன் வாங்கப் போகிறவர், எந்த வீட்டில் குடி இருக்கிறாரோ, அந்த வீட்டின் முகவரியைத்தான் முகவரிச் சான்றாக தரவேண்டும். 

ஒரு மாதத்துக்குமுன் வேறு ஒரு இடத்தில் வசித்துவிட்டு, கடன் வாங்கும்போது பழைய வீட்டின் முகவரியைத் தரக்கூடாது. கடைசியாக எந்த வீட்டில் வசிக்கிறாரோ, அந்த வீட்டின் முகவரியையே முகவரிச் சான்றாக வழங்க வேண்டும்.

 சிபில் ஸ்கோர்!

நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஆவணங்கள் அனைத்தும் ஒரிஜினலாக இருக்க வேண்டும். 

ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து வழங்கினாலும் ஒரிஜினல் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகுதான் இந்தக் கடன் வழங்கப்படும். 

ஆவணங்கள் சரியாக இருந்தாலும் அவருடைய சிபில் ஸ்கோரைப் பொறுத்தே கடன் வழங்கப்படும் என்பதால் கடன் பெற விண்ணப்பிக்கிறவரின் சிபில் ஸ்கோர் அதிகமாக இருப்பது அவசியம். 

கடன் தொகை!

ஒருவர் ரூ.30,000 மதிப்புள்ள டிவியை வாங்குகிறார் எனில், அதில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது 10,000 ரூபாயை முதலில் செலுத்த வேண்டும். 

மீதி 20,000 ரூபாயை எட்டு மாதத் தவணையில் திரும்பக் கட்டலாம். 

இதுவே  விலை உயர்ந்த பொருட்கள் எனில், உதாரணமாக ரூ.5 லட்சம் மதிப்புடைய பொருட்களை வாங்கும்போது அதற்கு 18 மாதத் தவணையாக எடுத்துக்கொண்டு, அதில் முதல் நான்கு மாத தவணையைக் கடன் வாங்குபவர் முதலில் செலுத்த வேண்டியிருக்கும். 

மீதியுள்ள தொகையை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும்.

நுகர்வோர் கடனுக்கு குறைந்தபட்ச பரிசீலனைக் கட்டணம் ரூ.500-ஆக உள்ளது. இது பொருட்களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும். 

உதாரணத்துக்கு, ரூ.20,000 மதிப்புடைய டிவி வாங்கினால், 2% பரிசீலனைக் கட்டணம் ரூ.400-ஆக இருந்தாலும் ரூ.500 வசூலிக்கப்படும். இதுவே வாங்கும் பொருளின் மதிப்பு ரூ.2,00,000 எனில், பரிசீலனைக் கட்டணமாக ரூ.4,000 வசூலிக்கப்படும். இது பிராண்டுக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.

எவ்வளவு கடன்?

மாதச் சம்பளதாரர்களின் சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்பட்டால் மட்டுமே கடன் கிடைக்கும். 

குறைந்தபட்சம் மாதச் சம்பளம் 10,000 ரூபாய் இருந்தால்தான் கடன் கிடைக்கும். 

ரூ.2 லட்சம் நுகர்வோர் கடன் வாங்கவேண்டும் எனில், அவருக்கு மாதச் சம்பளம் குறைந்தது ரூ.30,000-ஆக இருக்க வேண்டும். 

நுகர்வோர் ரூ.10,000 சம்பளம் பெறுகிறார் எனில், அவருக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே கன்ஸ்யூமர் லோன் வழங்கப்படும். இதுவே ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சம்பளம் பெறுகிறார் எனில் அவருக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கப்படும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நுகர்வோர் கடன் வேண்டும் எனில் அவர்களுடைய வங்கிப் பரிவர்த்தனையைப் பொறுத்தே கடன் வழங்கப்படுகிறது. 

வங்கிப் பரிவர்த்தனை மாதம் குறைந்தது ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை நடைபெற்று இருக்க வேண்டும்.

நுகர்வோர் ஒரே வங்கிக் கணக்கை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்; பான் கார்டை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளார். அவர் பெயரில்  எந்தவொரு செக் பவுன்ஸ் புகாரும் கிடையாது எனில் அவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை நுகர்வோர் கடன் கிடைக்கக்கூடும். வருமானம் குறித்த ஆவணங்களை வைத்தே இந்தக் கடன் தீர்மானிக்கப்படுவதால், அந்த ஆவணங்களைச் சரியாக வைத்திருப்பது அவசியம்.

தவணை உஷார்!

நுகர்வோர் கடன் கிடைத்தபிறகு ஒவ்வொரு மாதமும் எந்தத் தேதியில் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதை நிறுவனங்கள் தெரியப்படுத்தும். அந்த தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கடனைத் திருப்பிச் செலுத்துவது நல்லது. 

கெடு தேதிக்குப் பிறகு செலுத்தினால் 500 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டியதாக இருக்கும். மேலும், உங்களுடைய சிபில் ஸ்கோர் குறையவும் அது காரணமாக அமையும். அடுத்த முறை கடன் வாங்கும்போதும் சிரமங்கள் ஏற்படும். 

கடனை திருப்பிச் செலுத்த தவறினால், மூன்று மாதங்களுக்குப் பின் வாங்கிய பொருளை கடன் வழங்கிய நிறுவனம் எடுத்துச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

நுகர்வோர் கடன் வாங்குவதற்கு முன்னரே வேறு ஏதாவது கடன் வங்கிகளில் இருந்தால் அதற்கு தகுந்தாற்போல்தான் கடன் வழங்கப்படும்.

நுகர்வோரைக் கவரும் வகையில் பண்டிகைக் காலங்களில் பரிசீலனைக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆகையால் பொருட்களை வாங்கும்போது இதுகுறித்து விசாரித்து வாங்குவதே நல்லது. 

வட்டி விகிதம்!

நுகர்வோர் கடன்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு என்பது குறித்து தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் கேட்டோம்.

 ‘‘சில நிதி நிறுவனங்கள்தான் ஜீரோ இன்ட்ரஸ்ட் கடன் வழங்கி வருகின்றன. வங்கிகளால் இப்படிக் கடன் வழங்க முடியாது. வங்கியில் ரூ.1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் தனிநபர் கடன் வாங்கி, அதில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம். 

வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்து வட்டி 12% முதல் 20% வரை இருக்கும்” என்றார்.

பண்டிகை நாட்களில் புதிய பொருட்களை குறைந்த விலையில் கடனில் வாங்க முடியும் என்றாலும் மேலே கூறப்பட்ட விஷயங்களைக் கவனிப்பது அவசியம். 

கன்ஸ்யூமர் லோன் வாங்கப் போகும் முன்  டாக்குமென்டுகள் உள்பட எல்லா விஷயங்களையும் சரியாக வைத்துக்கொண்டால் மட்டுமே உங்களுக்குக் கடன் மறுக்கப்படாமல் கிடைக்க வாய்ப்புண்டு.   

சோ.கார்த்திகேயன்

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

தேசிய ஓய்வூதிய திட்டம்


தேசிய ஓய்வூதிய திட்டம் - மாற்றங்கள் - என்ன செய்ய வேண்டும்? 

தேசிய ஓய்வூதியத் திட்டம்…– புதிய மாற்றங்கள் நன்மை செய்யுமா?
இன்றைய தேதியில் அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டம் என்றால் அது என்பிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படுகிற ‘தேசிய ஓய்வூதியத் திட்டம்’.

இதில் முதலீடு செய்பவர்கள், தங்களுக்கு விருப்ப மான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வழி இருக் கிறது. ஆனால், எவ்வளவு சதவிகிதம் நிறுவனப் பங்குகளில் (ஈக்விட்டி) முதலீடு செய்யவேண்டும், எவ்வளவு சதவிகிதம் கடன் பத்திரங்களிலும் பாண்டுகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்று முதலீடு செய்பவரால் தீர்மானிக்க முடியாத நிலை நேற்று வரை இருந்தது.

அந்தக் குறையை இப்போது தீர்த்து வைத்திருக்கிறது என்பிஎஸ் திட்டத்தை நிர்வகிக்கும் பென்ஷன் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (பிஎஃப்ஆர்டிஏ). 

இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்திருக்கிறது பிஎஃப்ஆர்டிஏ. அந்த மாற்றங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளும் முன்பு முந்தைய திட்டம் எப்படி இருந்தது என்று முதலில் பார்ப்போம்.

முந்தைய திட்டம்!                
35 வயதுள்ள ஒருவர் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்றால், அவர் செய்யும் முதலீடுகளில் 50 சதவிகிதம் பங்குகளிலும், 30 சதவிகிதம் கார்ப்பரேட் பாண்டுகளிலும், 20 சதவிகிதம் அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யப்படும். இதுவே அவர்  55 வயதாகும்போது, அவருடைய பங்கு சார்ந்த முதலீடுகள், அவர் முதலீடு செய்திருக்கும் மொத்த பணத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே இருக்கும்.

10 சதவிகிதம் கார்ப்பரேட் பாண்டுகளில் இருக்கும். மீதமுள்ள 80 சதவிகிதம் அரசு பாண்டுகளில் இருக்கும்.

இவற்றில்தான் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றம் 1…
தற்போது வந்துள்ள புதிய மாற்றத்தின்படி, 35 வயதுக்குள் இருக்கும் ஒருவரின் மொத்த முதலீட்டில் 75 சதவிகிதம் வரை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களிலும், 10 சதவிகித முதலீடுகளை கார்ப்பரேட் பாண்டுகளிலும், மீதமுள்ள 15 சதவிகித முதலீடுகளை அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

இவரின் வயது 35-ஐ தாண்டும்போது படிப்படியாக ஈக்விட்டியிலிருந்து இருந்து கார்ப்பரேட் பாண்டு மற்றும் அரசு பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

இவர் 55 வயது அடையும்போது ஈக்விட்டி 15%, கார்ப்பரேட் பாண்டுகளில் 10% ஜி-செக் பாண்டுகளில் 75% என இருக்கும்.

இதில் ஈக்விட்டியில் அதிகம் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கலாமே தவிர, எதில் அல்லது எந்த வகையான திட்டங்களில், எந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்று பரிந்துரைக்க முடியாது.

மாற்றம் 2…
35 வயதுக்குள் இருக்கும் ஒருவரின் மொத்த முதலீட்டில் 25 சதவிகிதம் வரை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீட்டைக் குறைத்துக் கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து 45 சதவிகித முதலீடுகளை கார்ப்பரேட் பாண்டுகளிலும், மீதமுள்ள 30 சதவிகிதத்தை அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

இவரின் வயது 35-ஐ தாண்டும்போது படிப்படியாக ஈக்விட்டி மற்றும் கார்ப்பரேட் பாண்டு திட்டங்களில் இருந்து பணம் ஜி.செக் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

இவர் 55 வயது அடையும்போது ஈக்விட்டி 5 சதவிகிதம், கார்ப்பரேட் பாண்டுகளில் 5 சதவிகிதம், அரசு பாண்டுகளில் 90 சதவிகிதம் என முதலீட்டுத் தொகை இருக்கும்.

முடிவுகள் ஜாக்கிரதை!
இப்படி ஈக்விட்டி முதலீட்டைக் குறைத்துக் கொள்வதும், அதிகரித்துக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது என்றாலும், நன்றாக ஆராய்ந்தபின்பே நடவடிக்கை எடுப்பது நல்லது. 

இந்த மாற்றங்களில் உள்ள ஒரு பெரிய குறை என்னவெனில், ‘நமது முதலீடு ஈக்விட்டியில் அதிகம் இருக்கவேண்டும்’ என்று நினைப்பவர் களுக்கு இந்தத் திட்டம் சற்றே ஏமாற்றமளிப்பதாகவே இருக்கும்.

ஏனெனில் ஒருவருக்கு ஈக்விட்டியைப் பற்றிய சரியான புரிதல் வருவதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம் எனும்போது, 35 வயதிலேயே ஈக்விட்டி திட்டங்களில் இருந்து படிப்படியாக பாண்டுகளுக்கு முதலீடு மாற்றப்படும் விதமாக திட்டம் வரையறுக்கப்பட்டிருப்பதை ஒரு குறையாகவே சிலர் சொல்கிறார்கள்.

என்பிஎஸ் திட்டத்தைப் பொறுத்தவரை, அதில் நல்ல பல மாற்றங்கள் கொண்டுவந்த பின்பும் அதை மக்களிடம் இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எதுவும் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது.

நன்றி- நாணயம் விகடன் - 16.10.2016

Monday, October 10, 2016

லாபகரமான முதலீடு


லாபகரமான முதலீடு - என்ன செய்ய வேண்டும்?

லாபகரமான முதலீட்டுக்கு… 
கட்டாயம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்!

எந்தவொரு திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பும் முக்கியமான 10 கேள்விகளை முதலீட்டு ஆலோசகர்களிடமோ, விவரம் தெரிந்தவர்களிடமோ கேட்டு அதற்கான தெளிவான பதிலைத் தெரிந்துகொள்வது லாபகரமான முதலீட்டுக்கு கைகொடுக்கும். 

அந்த 10 கேள்விகள்…

1. குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

2. வருமானம் எவ்வளவு?

3. வருமானத்துக்கு உத்தரவாதம் இருக்கிறதா?

4. எவ்வளவு காலம் கழித்து முதலீட்டை எடுக்க முடியும்?

5. இடைப்பட்ட காலத்தில் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஏதாவது அபராதம் இருக்கிறதா?

6. முதலீட்டு திட்டத்தில் உள்ள ரிஸ்க்குகள் என்னென்ன?

7. முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறதா?

8. வட்டி அல்லது வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

9. வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்?

10. குறுகிய கால / நீண்ட கால மூலதன ஆதாய வரி எவ்வளவு?

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

நொறுங்கத் தின்றால் 100 வயது


நொறுங்கத் தின்றால் 100 வயது - என்ன செய்ய வேண்டும்?

பசித்துப் புசி, ருசித்துப் புசி’என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உணவையாவது ரசித்து, ருசித்து சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் இல்லை. டிவியைப் பார்த்துக்கொண்டும், செல்போனை பார்த்துக்கொண்டும் ஏதோ கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு எழுகிறோம்.

செரிமானம் என்ற செயல் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் நொதிப்பொருட்கள், வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் தொடங்கிவிடுகின்றன. 

உணவை, உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியம். சரியான தொடக்கம், பாதி வெற்றி என்பதைப் போல, சரியாக மென்று விழுங்கினாலே, செரிமானப் பணியில் 50 சதவிகிதம் முடிந்தது போலத்தான்.

உணவு உண்ணும் முறை

சிறிய சிறிய விள்ளல்களாக உண்ண வேண்டும்.

நிதானமாகச் சீராக மெல்ல வேண்டும்.

வாயில் உள்ள உணவு உமிழ்நீரோடு கலந்து, அதன் தன்மையை இழந்த பிறகே விழுங்க வேண்டும். ஒரு வாய் உணவை 32 முறை மெல்ல வேண்டும் எனக் கூறுவது ஒரு உதாரணம்தான். அதன் அர்த்தம், நன்றாக உணவு கூழாகும் வரை மெல்ல வேண்டும் என்பதே.

ஒரு வாய் உணவை முழுதாக மென்று விழுங்கிய பிறகே, அடுத்த வாய் உணவை உண்ண வேண்டும்.

பேசாமல் உணவு உண்பது நல்லது.

சரியாக மென்று உண்ணாவிட்டால்…

சரியாக மெல்லப்படாததால், இரைப்பைக்குள் சென்ற உணவு மீண்டும் உணவுக் குழாய்க்கு வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

உணவில் இருக்கும் சத்து முழுமையாக கிடைக்காது.

அதிக அளவு உணவை உட்கொள்ளும் நிலை ஏற்படும்.

பற்களுக்குப் போதிய செயல்பாடு இல்லாமல், வலுவற்றுப்போகும்.

மென்று உண்பதன் பலன்கள்

சராசரியாக நாம் உண்ண தொடங்கியதில் இருந்து 20 நிமிடங்களில் நம் மூளைக்கு நம் வயிறு நிறைந்துவிட்டது என்ற தகவல் செல்லும். நாம் மெதுவாக மென்று உண்ணும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும். இதனால், உடல் எடைக் குறைவதோடு, உடல் பருமன் 
ஏற்படாமல் தடுக்கவும் செய்யலாம்
நம் உமிழ்நீரில் உள்ள என்சைம், கொழுப்பை உடைக்கக்கூடியது. இதனால், நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு, நன்கு செரிமானம் ஆகும்.

உணவு சிறிய பகுதிகளாக மாறுவதால் சீக்கிரமாக ஜீரணமாகிவிடுகிறது.

உணவை மெல்லும்போது, பற்களுக்கு அது நல்ல பயிற்சியாக உள்ளது. மேலும், வாயில் சுரக்கும் உமிழ்நீர், வாயில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது.

உமிழ்நீர் நம் உணவில் உள்ள பச்சையம் (Starch), ஃப்ரக்டோஸ் (Fructose), மற்றும் குளுக்கோஸ் (Glucose) ஆகியவற்றைப் பிரித்து செரிமானத்துக்கு ஏற்ப மாற்றுகிறது.

மெதுவாக மென்று உண்பதால், உணவின் ருசியை உணர்ந்து உண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், மனதுக்கு முழுமையான திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

‘நொறுங்கத் தின்றால் நூறு ஆண்டு’ என்ற நம் மூத்தோர் வாக்கில் பொய் ஏதுமில்லை. பொறுமையாக மென்று உண்டால் ஆரோக்கிய வாழ்வு அனைவருக்குமே நிச்சயம்.

சுவிங்கம் மெல்வது நல்லதா?

சூயிங்கம் மெல்வதால் பற்களும் ஈறுகளும் வலுவாகின்றன என்று சொல்வார்கள். அதில் உண்மை இல்லை. அடிக்கடி சூயிங்கம் மெல்வதும் உடலுக்குத் தீங்கானதுதான். 

நாம் அதை மெல்ல ஆரம்பித்ததும், மூளைக்கு உணவு உள்ளே வருகிறது என்ற தகவல் அனுப்பப்படுகிறது. இதனால், செரிமானத்துக்குத் தேவையான ரசாயனங்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. 

ஆனால், உள்ளே உணவு போகாத நிலையில் அது வயிற்றில், குடலில் புண்களை ஏற்படுத்துகிறது. மேலும், தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்தில் வைத்து மெல்வதால், பல்வலி ஏற்படவும், தாடையில் பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நன்றி : டாக்டர் விகடன் - 01.10.2016

குழந்தைகளைக் காக்க புது இணையதளம்


குழந்தைகளைக் காக்க புது இணையதளம் - என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் இந்தச் சமூகத்தில்தான் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

குறிப்பாக இணையதளம் மூலம் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதும் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆன் லைன்களில் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக முதன்முறையாக நம் நாட்டில் aarambhindia.org என்ற இணையத்தைத் தொடங்க உள்ளது. இது இங்கிலாந்தைச் சேர்ந்த Internet Watch Foundation (WIF) -உடன் தொடர்புடையது. WIF- ஆன் லைனில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காவே இயங்கிவரும் நிறுவனம்.

நாம் ஆன் லைன் பயன்படுத்தும்போது குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டால் அதன் லிங்கை  aarambhindia.org  அனுப்பிவைத்தால் போதும். 

 உடனே அந்த லிங்க் செயல்படாமல் முடக்குவதுடன், அதை யார் செயல்படுத்துகிறார், இதற்கு காரணமானவர்கள் யார் எனக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இந்த இணையதளம் முயற்சிகளை எடுக்கும். 

பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய, குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் பற்றிய குறும்படங்களும் இந்தத் தளத்தில் உள்ளன.

தொடக்கமாக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர இருக்கும் aarambhindia.org இணையதளம், விரைவிலேயே இந்தியாவின் 22 பிரந்திய மொழிகளிலும் செயல்படும். 

அடுத்த வாரம் முதல் இந்த இணையதளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற செயல்கள் தொடர்புடைய 'லிங்க்' களைப் பதிவு செய்யலாம். 

இந்த இணையதளம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்.

குரூர எண்ணம் கொண்டவர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்போம்.

-------------------------------------------------------------------------------------------என்.மல்லிகார்ஜுனா

நன்றி : விகடன் செய்திகள் - 14.09.2016