disalbe Right click

Saturday, November 26, 2016

பவர் பத்திரம் - அதிகாரம்


பவர் பத்திரத்தின் பவர் - என்ன செய்ய வேண்டும்?

பவர் பத்திரம் மூலம் ஒருவர் தன்னுடைய முகவருக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்களைத் தன் சார்பாகச் செயல்பட வழங்க முடியும். இப்படி பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை முதன்மையாளர் (Principal) என்று சொல்வார்கள். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதன்மையாளர் மட்டும் பவர் பத்திரத்தில் கையெழுத்துப் போட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது பவர் பத்திரத்தில் முதன்மையாளர் கையெழுத்து மட்டுமல்ல, அவர் நியமிக்கும் முகவரும் கையொப்பம் இட வேண்டிடும் கட்டாயம்.

பவர் பத்திரத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 

ஒன்று, பொது அதிகாரப் பத்திரம், அடுத்தது, குறிப்பிட்ட அதிகாரப் பத்திரம். ஒரு வேளை பவர் பத்திரத்தில் காலத்தைக் குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லும். அதேசமயம் முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும். 

சில மாநிலங்களில் பவர் பத்திரத்தில் பின்பற்றப்படும் விசேஷ அம்சங்கள்:

தமிழ்நாடு

2010 நவம்பர் முதல் பவர் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் 1-ல் பதிவுசெய்யப்படுகிறது (முன்பு இது டீழுழுமு ஐஏ-ல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது).
இதன்மூலம் நவம்பர் 2010-க்குப் பிறகு பதிவு செய்த பவர் பத்திரத்தின் விவரங்கள், தமிழ் நாட்டின் சொத்து வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறுகின்றன. இந்த அம்சம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் செயலில் உள்ளது.

ஆந்திரப்பிரதேசம்

இந்தியாவிலே ஆன்லைன் மூலம் பவர் பத்திரத்தின் விவரங்களைச் சரி பார்க்கும் முறை ஆந்திராவில் மட்டும் உள்ளது.

ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட முதன்மையாளரின் பெயர், முகவரின் பெயர், சொத்தின் விவரங்கள், பவர் பத்திர எண், தேதி மற்றும் அந்த பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் விவரங்களைச் சரி பார்க்கலாம். இந்தச் சேவை தெலங்கனா மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட சொத்தின் மேல் பவர் பத்திரம் வழங்கினால் அது ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதே போல் சட்டீஸ்கரில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

பவர் பத்திர அம்சங்கள்

1. சொத்து சம்பந்தமாக பவர் பத்திரம் வழங்கினால், அதில் குறிப்பிட்ட முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

2. முதன்மையாளர் மற்றும் முகவரின் கையெழுத்து, புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. முதன்மையாளாரின் சொத்து உரிமை சரி பார்க்கப்பட வேண்டும் மற்றும் முதன்மையாளாரின் வருவாய், வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றிதழும் சரிபார்க்கப்பட வேண்டும்.

4. பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யும் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் முதலில் அந்த பவர் பத்திரம் ரத்து ஆகவில்லை என உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முதன்மையாளர் உயிருடன்தான் உள்ளார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. முகவருக்கு பவர் பத்திரத்தில் விற்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. ஒரு வேளை பில்டர் சொத்தின் உரிமையாளராக இருந்தால், சில சமயங்களில் தங்களின் ஊழியர்களுக்கு பவர் பத்திரத்தை அளிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் அந்த பில்டரிடம் இது சரிதானா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

7. ஒரு வேளை முதன்மையாளர் வெளிநாட்டிலும், அவரது முகவர் இந்தியாவிலும் இருந்தால் அந்த பவர் பத்திரம் நோட்டரி அல்லது சம்பந்தப்பட்ட அந்த நாட்டில் உள்ள இந்திய வெளியூறவுத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் முதன்மையாளர் பவர் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். பவர் பத்திர முதன்மையாளர் இந்தியாவில் வசிக்கும் முகவருக்கு அதை தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். முகவர் அந்த பவர் பத்திரத்தைச் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் 120 நாட்களுக்குள் (adjudicate) பதிவு செய்ய வேண்டும் அதன் செய்த பிறகுதான் வெளிநாட்டில் வாழும் முதன்மையாளர் வழங்கப்பட்ட பவர் பத்திரம் இந்தியாவில் செல்லுபடியாகும்.

8. கிரயப் பத்திரம் பதிவு செய்யும் முன், அசல் பவர் பத்திரத்தைச் சரி பார்க்க வேண்டும். பவர் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்றும் உறுதிப்படுத்திக் 
 கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: திரு ஷ்யாம் சுந்தர்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 26.11.2016

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு


JEE ENTRANCE EXAM - என்ன செய்ய வேண்டும்?
டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்!
ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். 

வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஏப்., 3ல் எழுத்துத் தேர்வும், ஏப்., 9, 10ல், ஆன்லைன் வழி தேர்வும் நடத்தப்படுகிறது. 

இதற்கு, டிச., 1 முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க, தமிழக அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., உட்பட, 54 பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும், 132 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. 

வெளிநாட்டில் இருப்போர், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுத, துபாய், பக்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

குஜராத்தியில் எழுதலாம்: 
ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுத அனுமதி உள்ளது. தமிழிலும், இத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் குஜராத்தி மொழி பேசுவோர் பரவலாக உள்ளனர்.

நன்றி : தினமலர்-கல்விமலர் - 26.11.2016


Tuesday, November 22, 2016

நீட் - நுழைவு


நீட் தேர்வுக்கு தயாராக - என்ன செய்ய வேண்டும்?
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முறை (National Eligibility cum Entrance Test - NEET) கட்டாயமாக்கப் பட்டுவிட்டது. இதனால் தற்போது பிளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள். 

புதிய தேர்வு முறை என்பதால் இதற்கு எப்படித் தயாராவது, தேர்வை எப்படி எதிர்கொள்வது, ஓஎம்ஆர் ஷீட்டில் (OMR sheet) எப்படி பதிலளிப்பது போன்ற பல கேள்விகள் எழும். 

இவை அனைத்துக்கும் உங்களுக்குப் பயிற்சி அளித்து நீட் தேர்வுக்கு முழுவதுமாகத் தயார்படுத்தும் விதத்தில் உண்மையான தேர்வுபோன்ற ஒரு மாதிரித் தேர்வை நடத்தும் முயற்சியை ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழின் இணைப்பிதழான எஜுகேஷன் பிளஸ்ஸும் ஸ்மார்ட் பயிற்சி மையமும் இணைந்து முன்னெடுத்து இருக்கின்றன.

வரும் ஆண்டில் நீட் தேர்வை எழுத முனைவோருக்கு மாநில அளவிலான மாதிரித் தேர்வைத் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மையங்களில் 2017 ஜனவரி 8 அன்று நடத்துகிறார்கள். 

இந்த மாதிரித் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெறும் முதல் 100 பேருக்கு நீட் தேர்வு எழுத இலவசமாகச் சிறப்புப் பயிற்சி அளிக்க ஸ்மார்ட் மையம் முன்வந்திருக்கிறது. மாநில அளவிலான இந்த மாதிரித் தேர்வு எழுத ரூ. 650/- கட்டணம் செலுத்த வேண்டும்.

பணி வாழ்க்கைக்குப் பயிற்சி அளிப்பதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஸ்மார்ட். அந்நிறுவனம் நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்த முடிவெடுத்திருக்கிறது. பொதுத் தேர்வுகளுக்குக் கேள்வித் தாளைத் தயாரிக்கும் கல்வியாளர்கள் மற்றும் தேர்வு ஆய்வாளர்களின் ஆலோசனையின்படி இந்தத் திட்டத்தை ஸ்மார்ட் நிறுவனம் வகுத்திருக்கிறது. “மாநில அளவிலான இந்த மாதிரித் தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அளவில் ராங்க் அளிப்போம்.

படிப்பில் அவர்களுடைய பலம் / பலவீனம் மற்றும் எந்தப் பாடப் பகுதிகளில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் ஆகியவற்றையும் விரிவான பகுப்பாய்வு அறிக்கையாகத் தருவோம். 

குறிப்பாக, இந்த மாதிரித் தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களும் நீட் புளூ பிரிண்ட்டை பின்பற்றும் ஆன்லைன் தொடர் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பை இலவசமாக அளிக்கவிருக்கிறோம்” என்கிறார் ஸ்மார்ட் மையத்தின் நிர்வாக இயக்குநரான அர்ச்சனா ராம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் (CBSE), மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டம் மற்றும் இதர வாரிய பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் அல்லது பிளஸ் டூ முடித்தவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்கள்.

தேர்வில் நேரடியாகப் பங்குபெற விரும்பும் மாணவர்கள் www.smartneet.in-ல் விண்ணப்பிக்கலாம். 

தங்களுடைய பள்ளி வளாகத்திலேயே மாநில அளவிலான மாதிரித் தேர்வை நடத்த விரும்பும் பள்ளிகள் தொடர்புக்கு: 

பிரவீன் 7401658483.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 22.11.2016



Monday, November 21, 2016

இறந்து போனவரின் ஏ.டி.எம். கார்டு


இறந்து போனவரின் ஏ.டி.எம். கார்டு - என்ன செய்ய வேண்டும்?

இறந்து போன ஒருவரின் ஏடிஎம் கார்டை பிறர் பயன்படுத்தலாமா?

 “வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டது. ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் (அவர் யாராக இருந்தாலும்)  பணத்தை எடுப்பது சட்டப்படி தவறாகும். எனவே, அவர் மீது சம்பந்தப்பட்டவங்கியில் இருந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். 

இறந்து போனவரின் பிள்ளைகளோ, அல்லது மனைவியோ இறந்து போனவரது கணக்கில் இருந்து பணம் எடுத்திருந்து , அதைப்பற்றி அந்தக் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் வங்கியில் புகார் அளித்தால் வங்கியானது சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்கும்.

அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டால் எந்த வங்கியிலிருந்தும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. 

வாரிசுதாரர்கள் அல்லது நாமினி என்ன செய்ய வேண்டும்?
ஒரு வங்கியில்  கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினியோ அல்லது அவரது வாரிசுதாரர்களோ அதை உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரிவிப்பது அவசியமானது ஆகும்.

 கணக்கு வைத்திருந்தவர் இறந்ததற்கான இறப்புச் சான்றிதழ் நகல் , ஏடிஎம் கார்டு அசல், பாஸ்புக் அசல், காசோலை புத்தகம் அசல் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி வங்கி மேலாளரிடம் நேரில்  தரவேண்டும். அவர்கள் அதனை வாங்கிக்கோண்டு, பரிசீலனை செய்து  வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு கணக்கை  மாற்றித்தருவார்கள்.

ஒருவேளை நாமினி பெயர் குறிப்பிடப்படாமல் இருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அந்தக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அந்த நபரிடம் கணக்கில் உளள பணத்தை வங்கி ஒப்படைக்கும். 

இருக்கின்ற வாரிசுகளில் யாராவது ஒருவர் இதற்கு உடன்பட மறுத்தாலும், இறந்தவரது பெயரில் கணக்கில் உள்ள பணத்தை யாருமே பெற முடியாது.

வாரிசுதாரர்களில் யாராவது வங்கி நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுத்தால், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

இது  மோசடியாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிட முடியாது. சம்பந்தப்பட்ட வாரிசுதாரர் அல்லது நாமினி புகார் கொடுத்தால் மட்டுமே வங்கியால் இதில் தலையிட முடியும். ஏனெனில், ஏடிஎம் கார்டு ஒருவரின் தனிப்பட்ட விஷயமாகும்.   

ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தால்....
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் – மனைவி அல்லது அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். 

ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அந்தப்பணம் இருவருக்குமே உரிமையானது. இருந்தபோதிலும், கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியமானதாகும்’’ .

ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும்  இதுபோன்ற  சூழ்நிலைகளில் சட்டப்படியான செயல்களை மேற்கொள்வதே நல்லதாகும்.

--------------------------------------------------------------------------------------செல்வம்பழனிச்சாமி-

Sunday, November 20, 2016

நெட் பேங்கிங் - அறிந்து கொள்ளுங்கள்


நெட் பேங்கிங் - அறிந்து கொள்ள வேண்டியவை - என்ன செய்ய வேண்டும்?

நெட் பேங்கிங்வசதி மூலம், பணப் பரி­வர்த்­தனை மேற்­கொள்­வது தவிர, மேலும் 
பல­வி­தங்­களில் வங்கிச் சேவை­களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இணையம் மூலம் வங்கிச் சேவையை பெற வழி செய்யும் நெட் பேங்கிங் வசதி, வேக­மாக பிர­ப­ல­மாகி வரு­கி­றது. 


பலரும் நெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்த துவங்­கி­யி­ருக்­கின்­றனர். எனினும் 
பெரும்­பா­லானோர் கணக்கில் மிச்­ச­முள்ள தொகையை அறி­யவும், பணப் பரி­வர்த்­தனை 
செய்­யவும் தான், இந்த சேவையை அதிகம் பயன்­ப­டுத்­து­கின்­றனர். நெட் பேங்கிங் 
வச­தியை மேலும் பல­வி­தங்­களில் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும்.
நெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்தும் போது, வங்­கிகள் அதற்­கான இணை­ய­த­ளத்தை அமைத்­துள்ள விதத்தை சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்­வொரு வங்கி 
இணை­ய­த­ளத்­திலும், பல்­வேறு வச­தி­களை அணுகும் வசதி வெவ்­வேறு இடங்­களில் இருக்­கலாம். 
உதா­ர­ண­மாக, எச்.டி.எப்.சி., வங்கி இணை­ய­த­ளத்தில் காசோலை புத்­த­கத்­திற்­கான கோரிக்கை வைக்கும் வசதி, ‘ரிக்வெஸ்ட்எனும் வேண்­டுகோள் பகு­தியில் இடம்­
பெற்­றுள்­ளது. ஸ்டேட் பேங்க் இணை­ய­த­ளத்தில் இந்த வசதி, இ- சர்­வீசஸ் எனும் 
பகு­தியின் கீழ் வரு­கி­றது. எனவே முதலில், வங்­கி­களின் இணை­ய­தள அமைப்பை புரிந்து கொண்டால், எந்­த­தெந்த சேவையை எப்­படி அணு­கலாம் என்­பதை தெரிந்து 
கொள்­ளலாம்.
மேலும் வச­திகள்இணை­ய­தளம் மூலம் காசோலை புத்­தகம் கோரு­வது தவிர
வழங்­கப்­பட்ட காசோ­லைக்­கான பணத்தை நிறுத்தி வைக்கும், ‘ஸ்டாப் பேமென்ட்’ 
கோரிக்­கை­யையும் வழங்­கலாம். இதற்­காக காசோலை விப­ரங்­களை குறிப்­பிட்டு, பணத்தை நிறுத்தி வைக்க கேட்­ப­தற்­கான கார­ணத்தை தெரி­விக்க வேண்டும். 

ஆனால் இந்த வச­தியை பயன்­ப­டுத்த கட்­டணம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கலாம் 
என்­பதை அறி­யவும்.இதே போலவே, இணையம் மூலமே வரை­வோலை எனப்­படும், ‘டிடிகோரும் வச­தியும் இருக்­கி­றது. உறுப்­பினர் தன் கணக்கில் இருந்து தொகை மற்றும் டிடியார் பெயரில் என, குறிப்­பிட வேண்டும். 
குறிப்­பிட்ட காலத்­திற்­கான வங்கி கணக்கு அறிக்கை விபரம் தேவை என்­றாலும் அதை இணை­ய­த­ளத்தில் பார்த்துக் கொள்­ளலாம் அல்­லது, ‘டவுன்­லோடுசெய்து கொள்­ளலாம். கே.ஒய்.சி., அப்டேட் கணக்கு தொடர்­பான தக­வல்­களை அறிந்து கொள்­வ­தோடு, கே.ஒய்.சி., விப­ரங்­களை அப்டேட் செய்­யவும் முடியும். இதற்­காக, இணை­ய­தளம் மூலமே கோரிக்கை வைக்­கலாம். மேலும் குறுஞ்­செய்தி மூலம் தக­வல்­களை கோரும் வச­தியில் இணை­யலாம்; அதி­லி­ருந்து விலகிக் கொள்­ளலாம். கணக்கில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நாமினி பெயரை மாற்­றவும் கோரலாம். 
வங்கி இணை­ய­த­ளங்­களில் இதற்­கான வழி­மு­றைகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.பலரும் வங்­கி­களில், பணப் பரி­வர்த்­தனை சேவைகள் தவிர முத­லீடு தொடர்­பான வசதி­யையும் நாடு­கின்­றனர். காப்­பீடு, மியூச்­சுவல் பண்ட் ஆகிய சேவை­க­ளையும் வங்­கிகள் மூலம் பெற முடி­கி­றது. இது போன்ற முத­லீட்டு வச­தி­களை நிர்­வ­கிப்­ப­தற்கும் கூட இணைய வச­தியை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, டிமெட் கணக்கு மூல­மான பங்கு பரிவர்த்­தனை, காப்­பீடு சேவைகள் உள்­ளிட்­ட­வற்றை வங்கி இணை­ய­தளம் மூலம் பெறலாம். இதற்­கான பணத்தை வாடிக்­கை­யாளர் தன் 
கணக்­கி­லி­ருந்து இணையம் மூலமே செலுத்­தி­வி­டலாம். பங்கு பரி­வர்த்­தனை 
போன்­ற­வற்­றுக்­காக, வங்­கியில் டிமெட் கணக்கு துவக்க வேண்டும் என்­றாலும் எளி­தாக செய்து கொள்­ளலாம். டிமெட் கணக்கு துவக்க கூடுதல் கட்­டணம் இல்லை என்­றாலும், சில வங்­கிகள் ஆண்டு பரா­ம­ரிப்பு கட்டணம் வசூ­லிக்­கலாம். 

பரி­வர்த்­தனைமின் கட்­டணம், தொலை­பேசி கட்டணம் உள்­ளிட்ட பெரும்­பா­லான பில் தொகையை நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்­தலாம். செலுத்­தப்­படும் தொகையை வாடிக்­கை­யாளர் பார்த்து பரி­சீ­லித்த பின் ஒப்­புதல் அளிக்கும் வச­தியும் இருக்­கி­றது. ஆனால் சில நேரங்­களில், பில் தொகை செலுத்­தப்­ப­டா­ம­லேயே பணம் பிடிக்­கப்­
ப­டு­வ­தாக சிலர் புகார் தெரி­விக்­கின்­றனர். 
இது போன்ற நேரங்­களில், வங்­கி­யிடம் முறை­யிட்டு சரி செய்து கொள்­ளலாம். இணையம் மூலம் பணம் செலுத்தும் போது தள்­ளு­படி கூப்­பன்கள் போன்ற 
சலு­கை­களை பெறும் வாய்ப்பும் இருக்­கி­றது.
எனினும் இணையம் வங்கிச் சேவையை பயன்­ப­டுத்தும் போது அது பாது­காப்­பான­தாக அமை­வ­திலும் கவனம் செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் நடை­முறை தொடர்­பாக 
சொல்­லப்­படும், ‘பாஸ்­வேர்டுபாது­காப்பு உள்­ளிட்ட அம்­சங்­களை தவ­றாமல் கடை­பி­டிக்க வேண்டும். சந்­தே­கத்­திற்கு இட­ம­ளிக்கும் வகை­யி­லான இ மெயில் இணைப்­பு­களை கிளிக் செய்­வது போன்­ற­வற்றை தவிர்க்க வேண்டும் என, வல்­லு­னர்கள் 
வலி­யு­றுத்­து­கின்­றர்.
நன்றி ; தினமலர் நாளிதழ் – 21.11.2016

நெட் பேங்கிங் - பணபரிமாற்றம்


நெட் பேங்கிங் - என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் மூலம் ஒரு வங்கியின் ஒரு கணக்கிலிருந்து, அதே வங்கியில் மற்றொரு வங்கி கணக்கிற்கு சுலபமாக பணத்தை மரிமாற்றம் செய்ய முடியும்.
வெவ்வேறு வங்கிகளில் உள்ள வங்கி கணக்குகளிடையே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய 
NEFT(National Electronic Fund Transfer), 
RTGS(Real Time Gross Settlement) என்ற இரண்டு முறைகள் உள்ளன.

NEFT (National Electronic Fund Transfer)
ஆன்லைனில் ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கியின் கிளைக்கு மிகவும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணத்தை அனுப்புவதற்காக முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முறை தான் NEFT(National Electronic Fund Transfer).

NEFT 2005ம் வருடம் அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியினால் அறிமுகப்படுத்தபட்டது.

NEFT இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையாகும்.

NEFTன் அடிப்படை IFSC(Indian Financial System Code) ஆகும்.

IFSC என்பது, 11இலக்கங்கள் கொண்ட எண்ணாலும், எழுத்தாலும் ஆனா ஒரு குறியீட்டு எண்ணாகும். 

இதில் முதல் 4 இலக்கங்கள் வங்கியின் பெயராக இருக்கும். இந்த 4இலக்கங்களுக்குப் பின் ஒரு பூஜ்ஜியம் இருக்கும். அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் வங்கியின் கிளையைக் குறிக்கும்.

உதாரணத்திற்கு CUB00000104 என்ற அக்கவுன்ட் எண்ணில், 
CUB என்பது சிட்டி யூனியன் பேங்க் என்பதையும். 
அதப் பின் ஒரு பூஜ்ஜியமும், அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் சிட்டி யூனியன் பேங்க் தமிழ் நாடு, 
சென்னை, நங்கநல்லூர் கிளையையும் குறிக்கிறது.

இந்த IFSC எண் வங்கிக் கணக்குப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். வங்கியில் நேரிடையாக அல்லது http://bankifsccode.com/ என்ற இணையத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

NEFT செயல்படும் முறை
நாம் ஒரு வங்கியின் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம், மற்றொரு வங்கியின் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியவுடன், அந்த தகவல் NEFT சேவை மையத்திற்கு (NEFT service centre) செல்லும்.
இந்த தகவலைப் பற்று கொள்ளும் NEFT சேவை மையம் அதை NEFT பட்டுவாடா மையத்துக்கு (NEFT Clearing Centre)க்கு அனுப்பி வைக்கும்.

இதனை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா செயலகம் (National Clearing Cell) பெற்றுக் கொள்ளும்.
இப்போது NEFT பட்டுவாடா மையம், வங்கி வாரியாகக் கணக்கினைத் தயார் செய்யும், அதாவது எந்த வங்கியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும், எந்த வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்ற பட்டியல் தயாராகும். பணத்தை அனுப்பி வைக்க வேண்டிய வங்கிக்கான பட்டியல் தயாரானதும், அது NEFT சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

NEFT சேவை மையத்தில் இருந்து குறிப்பிட்ட பணம் பெரும் வங்கிகளுக்குச் செய்தி வந்தவுடன், வங்கிகள் அந்த பணத்தைக் குறிப்பிட்ட வங்கி கணக்கில் கிரெடிட் செய்துவிடும்.

அதாவது அன்றாடம் நடைபெறுகின்ற ஒவ்வொரு பணப்பரிமாற்றமும் NEFT பட்டுவாடா மையத்துக்குப் போய்விடும். அம்மையம் அவற்றை உடனடியாக செயல்படுத்தாது. மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் வந்தவுடன் அவற்றை செயல்படுத்தும்.

எனவே, NEFT மூலம் நாம் பரிவர்த்தனை செய்யும் பணம் உடனுக்குடன், பட்டுவாடா செய்யப்பட மாட்டாது. குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப் படுகிறது.

NEFT – சில முக்கிய தகவல்கள்
NEFT மூலம், வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணம் அனுப்பலாம். 9.00/ 11.00/ 12.00/1.00 /3.00 /5.00 என்று வார நாட்களில் 6 சுற்றுக்களில் பணப்பரிமாற்றம் நடைபெறும். உதாரணத்துக்கு 1.05க்கு நாம் பணம் அனுப்பினால் அது 3 மணி சுற்றில் சேர்ந்து விடும். 5 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகி விடும்.

சனிக்கிழமைகளில் 9.00 மணி 11.00 மணி, 12.00 மணி என்று 3 சுற்றுக்களில் பணபரிமாற்றம் நடைபெறும். உதாராணத்துக்கு 12.05 மணிக்கு நாம் பணம் அனுப்பினால், அது வங்கியின் அடுத்த வேலை நாளான திங்கள் அன்று 9 மணி சுற்றில் தான் வரும். 11 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகிவிடும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.

NEFT மூலம் குறைந்தபட்சத தொகையாக 1ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,00,௦௦௦ லட்சம் ரூபாய் வரை பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
NEFT மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணபரிமாற்றம் செய்ய முடியும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் NRE, NRO கணக்குகள் வைத்திருந்தால், அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியும்.

NEFT மூலம் அனுப்பபடுகின்ற பணத்தை பெறுபவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் பணத்தை அனுப்புபவருக்கு சேவை கட்டணமும், சேவை வரியும் உண்டு. இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.

வங்கியில் Savings Account, Current Account, ODCC Account, NRE, NRO வைத்திருப்பவர்கள் NEFT மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Muhammadh

நன்றி : ஆதிரைப்பிறை - 08.09.2015

Saturday, November 19, 2016

ஃபேஸ்புக் மார்க் சக்கர் பெர்க்


”ஃபேஸ்புக்” மார்க் சக்கர்பெர்க் வரலாறு - என்ன செய்ய வேண்டும்?
மார்க் சக்கர்பெர்க்... காலத்தை வென்ற இளைஞன்!
“உன்கிட்ட ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லையா....” என்று சொல்லி கலாய்க்கும் அளவுக்கு ஃபேஸ்புக் நம்முடைய அத்தியாவசிய சொத்துக்களில் ஒன்றாகவே மாறிவிட்டது.
கணினியும் இணையமும் எப்படி 20-ம் நூற்றாண்டு மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்டிப் படைத்ததோ அதே போல், 21-ம் நூற்றாண்டு மக்களை ஃபேஸ்புக் ஆட்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே மக்களின் மனம் கவர்ந்த தலைவனாக நிமிர்ந்து நிற்கிறார் மார்க் சக்கர்பெர்க். இத்தனைக்கும் இவருக்கு வயது 32. இவருடைய சொத்து மதிப்போ ரூ.2.38 லட்சம் கோடி.
மார்க் சக்கர்பெர்க்கின் இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்?, அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் தலைவர்களோடு ஒப்பிட்டு அவர்களைவிட நல்ல தகுதிகள் மார்க்குக்கு இருப்பதாகவும் சொல்கிறார்களே, அப்படி என்ன செய்துவிட்டார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன் மார்க்கின் ஆரம்ப காலத்தைப் பார்ப்போம்.
மார்க் ஒரு மேதை!
1984-ம் ஆண்டு மே 14 அன்று பிறந்தார் மார்க் சக்கர்பெர்க். அவரது தந்தை எட்வர்ட் சக்கர்பெர்க், ஒரு பல் மருத்துவர். அவருடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வரிசைப் படி, சிகிச்சைக்கு அழைக்க ஒரு அப்ளிகேஷனை உருவாக்கிய போது அவருக்கு வயது வெறும் 12. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, ‘மெர்ஸி’ கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டார். மார்க்கின் புரோகிராமிங் திறமையை வளர்க்கப் பெற்றோரால் நியமிக்கப்பட்ட ஆசிரியர், இவரது திறமையைப் பார்த்து ’மார்க் ஒரு மேதை’ என்று குறிப்பிட்டார்.
2004-ம் ஆண்டு, தான் படித்துகொண்டிருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தூங்கும் அறையிலிருந்து விளையாட்டாக ஆரம்பித்ததுதான் ஃபேஸ்மேஷ். கல்லூரி மாணவர்கள் தங்களுக்கிடையே உரையாடிக் கொள்ளவும், தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் மட்டுமே தொடங்கப்பட்டது.
அப்போது அவருக்கே தெரிந்திருக்கவில்லை இதன் வீரியம் உலகை ஆளப் போகிறது என்று. இதற்காகக் கல்லூரி டேட்டா பேஸைத் திருடி தண்டனையும் பெற்றார். ஆனாலும் தொடர்ந்து அதன் ஆராய்ச்சியிலேயே இருந்ததால் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப் பட்டார்.
உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியதும் அவருக்கு புரோகிராமிங் ஆராய்ச்சியே முழுநேர வேலை யாகிப் போனது. ‘தி ஃபேஸ்புக்’ உருவானது. சிவப்பு, பச்சை நிறத்தைப் பிரித்தறிய முடியாத நிறக்குருடு நோய் காரணமாக நீல நிறத்தில் உருவாக்கினார்.
ஜாம்பவான்களை மிஞ்சிய மார்க்!
இன்று ஃபேஸ்புக்கை 160 கோடிக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர். ஒருசில நாடுகளில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும் மறை முகமாக அந்நாட்டு மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்து கிறார்கள். ஃபேஸ்புக் வலை தளத்தை ஹேக் செய்ய ஒரு நாளுக்கு 6 லட்சம் முயற்சிகள் நடக்கின்றன.
2006-ல் ஃபேஸ்புக்கை ஹேக் செய்த கிரிஸ் புட்னாமை தனது நிறுவனத்திலேயே வேலைக்கு எடுத்துக்கொண்டார் மார்க். ஆனால் அதற்குப் பின் யாராலும் ஃபேஸ்புக்கை ஹேக் செய்ய முடியவில்லை. சராசரியாக ஒவ்வொரு ஃபேஸ்புக் யூசரும் நாள் ஒன்றுக்கு 40 நிமிடமாவது ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
ஃபேஸ்புக்கில் மாதம் ஒன்றுக்கு சுமார் 250 கோடி போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகிறது. வீடியோக்கள் தற்போது ஃபேஸ்புக்கில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் மெருகேறி வளர்ந்து கொண்டிருக்கிறது.
கணினி மற்றும் இணைய உலகில் ஜாம்பவான்களாக இருக்கும் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவரின் சாதனைகளை எல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கிறார் மார்க். பில் கேட்ஸ் மைக்ரோ சாஃப்ட்டை தொடங்கும்போது வயது 20. மார்க் ஃபேஸ்புக்கை தொடங் கும்போது வயது 19. மார்க் 23 வயதிலெல்லாம் பில்லினியர் என்ற தகுதியைப் பெற்றார். ஆனால், பில்கேட்ஸ் 30 வயதாகிய நிலையிலும் பில்லினியர்் என்ற நிலையை அடையவில்லை. பில்கேட்ஸ் 30 வயதில்தான் ஐபிஓ வெளியிட்டார். ஆனால் மார்க் 28 வயதிலேயே ஐபிஓ வெளியிட்டு விட்டார். மார்க் 2010-ல் தனது 26 வயதில் டைம் இதழின் ‘பர்சன் ஆஃப் தி இயர்’ என்றப் பட்டத்தை பெற்றார். ஆனால், பில்கேட்ஸ் தனது 50 வயதில்தான் அந்த இடத்தைப் பிடித்தார்.
இனி ஃபேஸ்புக்தான் கூகுளுக்கே கேட்வே!
இணையத்தின் வளர்ச்சி அதிகரித்தபோது எவ்வளவோ தேடுதல் பொறிகள் வந்த போதும் கூகுளை மிஞ்ச யாராலும் முடியவில்லை. ஆனால், கூகுளில் நாம் தேடும் தகவலை அவ்வளவு விரைவாகப் பார்க்க முடியாமல் போனது. அதற்கு கூகுள் விளம்பரங்களும் அதன் விளம்பர தாரர்களின் செய்திகள் முன்னிலையில் வருவதும் காரணமாக இருந்தது.
ஆனால், ஃபேஸ்புக் அதை மாற்றியது. ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு தேவையானதை விரல்நுனியில் கொண்டு வந்தது. அல்காரிதம் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகள் அனைவரையும் அதில் பங்கு பெறும்படி மாற்றியதால் அது எல்லோராலும் தவிர்க்க முடியாதபடி மாறியது.
இளைஞன், கணவன், தலைவன்!
சுருட்டை முடியும், குழந்தை முகமும், சாம்பல் நிற டிசர்ட்டும் போட்டுத் திரிந்த இளைஞனும், சிலிகன் வேலியின் செல்லப் பிள்ளையுமான மார்க் ஒரு அன்பான கணவனாகவும், அழகான தந்தையாகவும் மாறியிருக்கிறார்.
சமீபத்தில் பிறந்த தனது மகள் மேக்ஸிலா சான் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தன்னை தனது ஃபேஸ்புக்கின் முதல் பயனாளியாகவும், ரசிகனாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். இது எல்லோரின் வரவேற்பையும் பெற்றது.
2010-ல் ஏற்கெனவே தனது சொத்தில் பாதியை அறக்கட்டளைக்காக அளித்த மார்க், தனது மகளின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், உலகக் குழந்தை களின் நலனுக்காகவும் ஃபேஸ்புக்கின் 99 சதவிகிதப் பங்குகளை நன்கொடை செய்துள்ளார். இவரது மனைவி பிரிசில்லா சான், ஏழை குழந்தை களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஒரு அமைப்பும் தொடங்கி உள்ளார்.
இதையெல்லாம்விட, இளைஞன் மார்க் அமெரிக்க அதிபராவதற்கு அத்தனை தகுதி களையும் கொண்டிருப்பதாக மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். காரணம், அனைவரையும் அரவணைக்கும் அவரது பண்பு. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் வரவிட மாட்டேன் என்று சொன்னதை மார்க் தவறு என்று சொன்னார்.
அதோடு ஃபேஸ்புக் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தெரிந்து அதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு பல பாதுகாப்பு ஏற்பாடுகள் வைக்கப் பட்டு உள்ளதாகவும் கூறினார்.
“அதற்காக அவர்களுக்கு இணையத்தையும் ஃபேஸ்புக்கையும் தடை செய்வது நியாயமாகாது. நான் இணையத்தை மட்டும் மாற்ற நினைக்கவில்லை, உலகையே மாற்ற நினைக்கிறேன். ஏற்கெனவே மக்கள் குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை மேலும் மேலும் பிரிக்காமல் ஒருங்கிணைக்க முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர்களிலேயே ஒபாமாவை சிறந்தவராகக் குறிப்பிடக் காரணம், அவர் அனைவரையும் அன்பு என்ற விஷயத்தினால் அரவணைத்ததுதான் என்கிறார்.
மக்களோடு மக்களாகப் பயணிக்கும் பண்பு, உலக மக்களின் நலனுக்காக தன் சொத்துக்களைப் பகிர்ந்தளிக்கும் தாராள குணம், தகவல் மற்றும் இணைய தொழில்நுட்பத்தில் யாரும் அடையாத முடியாத உச்சம் என தனது 30 வயதிலேயே பணமும் பாசமும் காதலும் புகழும் வாய்க்கப் பெற்று காலத்தை வென்ற இளைஞனாக ஜொலிக்கும் மார்க்குக்கு லைக்கோ லைக்ஸ்தான்.
ஜெ.சரவணன்
நன்றி : நாணயம்விகடன் - 29.05.2016

Friday, November 18, 2016

இணையதளத்தில் எப்.ஐ.ஆர்


இணையதளத்தில் எஃப்.ஐ.ஆர் - என்ன செய்ய வேண்டும்?

கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தகவல்

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை 24 மணி நேரத்தில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காவல் குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தீவிரவாதம், இளம் சிறார் மற்றும் சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகள் நீங்கலாக அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) 24 மணி நேரத்திற்குள் காவல்துறை வலை தளத்தில் பதிவிறக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொலை தொடர்பு வசதிகளில் சிரமம் உள்ள காவல் நிலையங்களில் மட்டும் காவல் நிலைய வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு காவல்துறை http://eservices.tnpolice.gov.in என்ற தமிழ்நாடு காவல்துறை வலை தளத்தில் முதல் தகவல் அறிக்கையினை பொது மக்கள் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கடந்த 14-ம் தேதிக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காவல்துறை வலை தளத்தினுள் பொது மக்கள் செல்ல தங்களது செல்போன் எண்ணினை பதிவு செய்த உடன் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரும். 

ஒரு முறை கடவுச் சொல்லினை (ஓடிபி) உள்ளீடு செய்து பின்னரே முதல் தகவல் அறிக்கையை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.11.2016

இனிமேல் சட்டம் ஈஸிதான்


இனிமேல் சட்டம் ஈஸிதான் - என்ன செய்ய வேண்டும்?

இந்தியச் சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்கக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப் பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களைக்கூட எளிதாகத் தேடிக்கொள்ளலாம்.

ஆனால், நீதித்துறை குறித்து அவ்வளவாகத் தெளிவு இல்லாத சாமானியர்களுக்குச் சட்ட நுணுக்கங்கள் மட்டுமல்ல, சட்டப் பிரிவுகளின் வாசகங்களேகூடக் குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு இவற்றைப் புரிந்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை.

எளிமையான ஆங்கிலத்தில் 

இந்த நிலையில்தான் ‘நியாயா.இன்’ எனும் புதிய வலைதளம் அறிமுகமாகியிருக்கிறது. இந்தியச் சட்டங்களுக்கான இணையக் களஞ்சியமாக விளங்க வேண்டும் எனும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. 

சட்ட ஷரத்துக்களை, சட்டம் படிக்காதவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையான ஆங்கில விளக்கத்துடன் தந்திருப்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இதுவரை 773 மத்தியச் சட்டங்களுக்கான விளக்கம் குற்றவியல் சட்டங்களின் 10 பிரிவுகளுக்கான வழிகாட்டி விளக்கம் ஆகியவை இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. 

முகப்புப் பக்கத்திலேயே இதற்கான ஐகான்கள் இடம்பெற்றுள்ளன. சட்டப் பிரிவுகளுக்கான பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பிரிவை கிளிக் செய்தவுடன், அதற்கான விளக்கத்தைக் காணலாம். சட்டப் பிரிவுகள் எனில் இடப்பக்கத்தில் மூல ஷரத்துகளும், அருகே அவற்றுக்கான எளிய ஆங்கில விளக்கமும் இடம்பெறுகின்றன. முக்கியமான சொற்களுக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டிப் பகுதியில், அனைவருக்கும் கல்வி உரிமை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, ஊழலுக்கு எதிரான பிரிவு உள்ளிட்டவற்றுக்கான விரிவான விளக்கத்தைக் காணலாம். சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன.

பயனர் நோக்கில் உருவாக்கம்

இணைய உலகில் எல்லாமே பயனர் நோக்கிலேயே அமையும்போது சட்டத்திற்கான விளக்கத்தையும் பயனர் நோக்கில் அளிக்கிறது இந்தத் தளம். 

சட்டங்கள் பயனர்களை மனதில் கொண்டு எழுதப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கவே இந்த முயற்சி என்கிறார் இந்தத் தளத்தை உருவாக்கிய குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஸ்ரீ ஜோனி சென். 

பெங்களூரு மற்றும் அமெரிக்காவில் சட்டம் பயின்ற சென், மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.

இவர் கடந்த ஆண்டு டெல்லியில் சட்டம் தொடர்பான‌ ஆய்வு மையமான ‘விதி சென்டரில்’ பணியாற்றிக்கொண்டிருந்த போது, சட்டத்தை எளிமையாகப் புரியவைக்க உதவும் வலைதளத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக ‘ஸ்க்ரோல்.இன்’ இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

“நீர் தொடர்பான முக்கியத் தகவல்களை அளிக்கும் 'இந்தியா வாட்டர் போர்ட்டல்' தளத்தை நடத்திவரும் ரோகினி நிலேகனியுடன் இதுபற்றி விவாதித்தபோது, சட்டத் துறைக்கான இதே போன்ற இணையதளம் தேவை எனும் உணர்வு வலுப்பட்டது. 

அதன் பிறகு 3 வழக்கறிஞர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைந்து இதனை அமைத்திருக்கிறோம்” என்கிறார். நாடு முழுவதும் உள்ள சட்ட மாணவர்கள், சட்ட வல்லுந‌ர்கள் இதன் உருவாக்கத்தில் உதவியுள்ளதாக சென் குறிப்பிடுகிறார்.

இந்தியச் சட்டங்களுக்கான இணையக் களஞ்சியமாக இந்தத் தளம் உருவாக வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார் அவர்.

மாநில மொழிகளிலும்...

இந்தத் தளத்தில் இணையவாசிகளும் பங்கேற்கலாம். இதில் உள்ள விளக்கத்தை மேம்படுத்த அல்லது திருத்தும் முயற்சியில் பங்களிப்புச் செலுத்தலாம். இவை தளத்தின் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தளத்தில் இன்னமும் முழுமையாக எல்லா சட்டங்களும் இடம்பெறவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆங்கிலத்தில் அமைந்திருந்தாலும் எதிர்காலத்தில் மாநில மொழிகளிலும் சேவை வழங்கும் திட்டம் இருக்கிறது என்கிறார் சென். அதே போல மாநிலச் சட்டங்கள் குறித்துத் தனிக் கவனம் செலுத்த இருப்பதாகவும், சட்டம் தொடர்பான அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள் போன்றவையும் இதில் இடம்பெறும் என்கிறார் சென்.

சட்டம் தொடர்பான அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்தத் தளம் உதவியாக இருக்கும். ஒரு குற்றத்தைப் புகார் செய்தவுடன் என்ன நடக்கிறது, கைது செய்யப்படும் போது ஒருவரின் உரிமைகள் என்ன என்பது போன்ற‌ கேள்விகளுக்கான பதில்களையும் அறியலாம். சட்ட வல்லுந‌ர்களுடன் ஆலோசனை செய்து பொதுவாக மக்கள் மனதில் எழக்கூடிய கேள்விகளைத் தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் இதில் உள்ள விளக்கங்கள் சட்ட ஆலோசனையும் அல்ல, அவற்றுக்கு மாற்றும் அல்ல, இவை தகவல் நோக்கிலானவை மட்டுமே என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://nyaaya.in/ 

சைபர் சிம்மன்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.11.2016


Thursday, November 17, 2016

ஃபேஸ்புக் - மோசடி விளம்பரம்


ஃபேஸ்புக் மூலம் மோசடி வலை - என்ன செய்ய வேண்டும்? 

கரன்சி டிரேடிங் உஷார்!
***********************************
இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கைத் திறந்தாலே ஒரு விளம்பரம் தவறாமல் கண்ணில்படுகிறது. ‘ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஒரே நாளில் 10,000 ரூபாய் சம்பாதித்தேன், 20 ஆயிரம் சம்பாதித்தேன்’ என்று பற்பல பெயர்களுடன் ஹாயாக சிரித்தபடி சொல்லும் ஸ்டேட்மென்ட்டுகளை பார்த்தால், அட, ஒரே நாளில் இவ்வளவு லாபமா என்று யாருக்குத் தான் வாய் பிளக்கத் தோணாது!

பங்குச் சந்தை டே டிரேடிங், கமாடிட்டி டிரேடிங்கில் ருசி கண்ட நம்மவர்கள், இப்போது ஃபாரெக்ஸ் (கரன்சி) டிரேடிங் கில் இறங்கி இருக்கிறார்கள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஃபேஸ்புக் பரவி இருப்பதால், இந்த விளம்பரத்தை பார்த்து ஃபாரெக்ஸ் டிரேடிங் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமலேயே அதில் சிக்கி, சீரழிகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. 

அது என்ன ஃபாரெக்ஸ் டிரேடிங், இதில் இவ்வளவு லாபம் கிடைக்குமா?

ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் டிரேட் என்பதைத்தான் சுருக்கி ஃபாரெக்ஸ் டிரேட் என்று அழைக்கிறோம். அமெரிக்க டாலர், ஐரோப்பாவின் யூரோ, இங்கிலாந்தின் பவுண்ட், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களை (கரன்சி) வாங்கி விற்பது ஃபாரெக்ஸ் டிரேடிங். இதில் கரன்சியை வாங்கியும் விற்கலாம் (லாங்); விற்றும் வாங்கலாம் (ஷார்ட்).

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் இரண்டு வகை உண்டு. 

முதல் வகை நம் அரசாங்கத்தின் அனுமதியுடன் நடப்பது. இது எப்படி நடக்கிறது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

ஈக்விட்டி டிரேடிங், கமாடிட்டி டிரேடிங் பற்றி நன்கு தெரிந்தவர்கள், ஃபாரெக்ஸ் டிரேடிங்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துதான் அதை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

ஒரு பங்கின் விலை ஏறினால் லாபத்தில் விற்கலாம். விலை குறைந்தால் நஷ்டத்தில் விற்கலாம். ஆனால், அமெரிக்க டாலரின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை தனியாக அளவிட முடியாது. அதை இன்னொரு நாணயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உதாரணமாக, அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்க்கு நிகராக ஏறுகிறதா, இந்திய ரூபாய் யூரோவுக்கு நிகராக குறைகிறதா என்று பார்க்க வேண்டும்.

ஒரு அமெரிக்க டாலர் = ரூ.65 என்று வைத்துக்கொள்ளலாம். 1000 டாலர் வாங்குகிறோம். 65 ரூபாய் 66 ரூபாயாக உயர்கிறது எனில், நமக்கு 1000 ரூபாய் லாபம். 10,000 டாலரை ரூபாய் 65 என்கிற மதிப்பில் வாங்கி அது 66 ரூபாயாக உயர்ந்தால், நமக்கு 10,000 லாபம். அட! என்று சொல்லத் தோன்றுகிறதில்லையா?

ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 65 ரூபாய் எனில், 1000 டாலர் வாங்க 65,000 ரூபாய் தரவேண்டுமே! அவ்வளவு பணம் நம்மிடம் இல்லையே என்று நினைக்காதீர்கள். 

முழுப் பணத்தையும் நீங்கள் தரவேண்டிய தில்லை. ஆயிரம் டாலரின் (ஒரு லாட்) மதிப்பு ரூ.65,000 எனில், அதன் மதிப்பில் வெறும் 3 சதவிகித பணத்தை மட்டும் கட்டி மொத்த மதிப்புக்கும் சொந்தம் கொண்டாடலாம். இதைத்தான் லீவரேஜ் என்கிறார்கள்.

ஆனால், மிகக் குறைந்த அளவு பணத்தையே முன்பணமாக கட்டுவதால், டாலர் மதிப்பு உயர்வதற்கு பதிலாக குறையும்பட்சத்தில் நாம் முன்பணமாக கட்டிய பணம் காணாமலே போக வாய்ப்புண்டு. லீவரேஜ்-ல் இருக்கும் மிகப் பெரிய அபாயம் இது.

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங்கை டாலர் – ரூபாய் மட்டுமல்ல, இன்னும் மூன்று விதமான கரன்ஸியிலும் செய்யலாம். அவை EUR – INR, GBP – INR, YEN - INR. இதில் முதலில் வருவது பேஸ் கரன்சி (Base Currency). யூரோ என்பது ஐரோப்பிய பணம். ஜிபிபி என்பது கிரேட் பிரிட்டன் பவுண்ட். யென் என்பது ஜப்பான் நாட்டு நாணயம். இந்த நான்கு கரன்சிகளையும் ரூபாய்க்கு நிகராக உயரும் என்று நினைத்தால் வாங்கி விற்கலாம். குறையும் என்று நினைத்தால், விற்று வாங்கலாம்.

ஒரு லாட் என்பது 1000 அமெரிக்க டாலர் அல்லது யூரோ அல்லது பவுண்ட் ஆகும். ஜப்பான் யென் மட்டும் ஒரு லாட் என்பது ஒரு லட்சம் எண்ணிக்கையில் இருக்கும். இதன் மதிப்பில் வெறும் 3%, அதாவது ரூ.1,950 மட்டும் கட்டி வாங்கிவிடலாம். இவ்வளவு குறைவாக முன்பணம் வாங்கக் காரணம், ஒரு நாளைக்கு இந்த நாணயங்களின் மதிப்பு 3 சதவிகிதத்துக்கு மேல் மாறியதில்லை என்பதால்தான்.

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் இந்திய பங்குச் சந்தைகளான என்.எஸ்.இ., பி.எஸ்.இ., எம்சிஎக்ஸ் எக்ஸ்சேஞ்சுகளில் நடக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்சுகள் செபியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த வர்த்தகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.

ஆனால், இப்போது ஃபேஸ்புக்கில் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் ஃபாரெக்ஸ் டிரேடிங் இதுவரை நாம் பார்த்த மாதிரியானதல்ல. இன்டர்நேஷனல் அளவில் நடக்கும் இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்பவர்கள் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படாத கரன்சியில் வர்த்தகத்தை எல்லாம் செய்வார்கள். இங்கே ரூபாய் என்பதே இருக்காது. EUR – USD, USD – JPY, EUR – JPY, GBP - USD, GBP – JPY என்று உலக அளவிலான நாணயங்களின் மதிப்புகள் வர்த்தகமாகும். ஃபேஸ்புக்கில் அடிக்கடி வரும் இந்த விளம்பரங்களை பார்த்து, இதில் பணத்தை போடலாமா?

நிச்சயம் போடக்கூடாது. 
காரணம், இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் இதற்கு இல்லை. 1973-ல் கொண்டு வரப்பட்ட ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ரெகுலேஷன் ஆக்ட் (FERA), 1998-ல் கொண்டு வரப்பட்ட FERA ஆகிய சட்டங்களின் அடிப்படையில் ஓடிசி மார்க்கெட்டும், செபியின் கண்காணிப்பில் கரன்சி வர்த்தகமும் இயங்குவது போல, எந்த சட்டவிதிமுறையும் இதற்கு இல்லை. 

இந்த வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட நினைத்தால், இன்டர்நேஷனல் புரோக்கர்கள் உங்களை டாலரில் பணம் கட்டச் சொல்வார்கள் (கிரெடிட் கார்டிலோ அல்லது டெபிட் கார்டிலோ). இதுவே சட்ட விரோதமான காரியத்தில் ஈடுபடும் ஒரு செயலாகக்கூட இருக்கலாம். 

இந்த வியாபாரத்தில் சிறு வியாபாரிகளை குறிவைப்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதாவது, $100 போடுங்கள், $200 போடுங்கள் என்று குறைந்த தொகையில் ஆரம்பிக்க சொல்வார்கள். அதிக லீவரெஜ் தருவதாக ஆசை காட்டுவார்கள். லாபம் சம்பாதித்தால், அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவோம் என்பார்கள். 

ஆனால், பலரையும் விசாரித்ததில், பணம் வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்றே சொல்கிறார்கள். இன்னும் சிலர், லாபம் வந்தால்தானே பணம் வர்றதுக்கு! பெரும்பாலும் நஷ்டத்தில்தானே வியாபாரம் முடிகிறது. பிறகு எங்கே பணம் வரும் என்று கேட்கிறார்கள்.

சரி, ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஏதாவது முறைகேடு நடந்தால், சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் நீங்கள் முறையிடலாம். ஆனால், இந்த இன்டர்நேஷனல் புரோக்கர்களிடம் ஃபாரெக்ஸ் டிரேட் செய்து, பிரச்னையில் மாட்டினால் யாரிடம் முறையிடுவது?

இந்த ஃபாரெக்ஸ் டிரேட் செய்த புரோக்கர் இங்கிலாந்தில் இருந்தால், அங்கே இருக்கிற மத்திய வங்கியிடம்தான் நீங்கள் முறையிட வேண்டும். அமெரிக்கா எனில், ஃபெட் ரிசர்வ் வைத்துள்ள அமைப்பிடம் முறையிடலாம். 

அதுபோல, நீங்கள் வியாபாரம் செய்யும் புரோக்கர் நிறுவனம் தன் தலைமை அலுவலகத்தை எந்த நாட்டில் வைத்திருக்கிறாரோ, அங்கேதான் போய் முறையிட வேண்டும். 

லோக்கலில் நம்மை ஏமாற்றியவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க முடியாமல் நாம் திணறும்போது, அமெரிக்கா, இங்கிலாந்து என எல்லா வெளிநாடுகளுக்கும் போய் நடவடிக்கை எடுக்க வைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை. 

50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டால், அதை திரும்பப் பெற அமெரிக்கா போய்வர அதற்கு மேல் செலவாகும்தானே? எனவே, அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு, பல லட்சம் ரூபாயை இழந்தவர்கள், வெளியே சொல்ல முடியாமல், அப்படியே மென்று முழுங்கிவிடுகிறார்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்று ஒரு பழமொழி உண்டு. 

முதலில் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட டிரேடிங்கில் நம் திறமையைக் காட்டுவோம். அங்கீகாரம் இல்லாத வேறு எந்த டிரேடிங்கிலும் தலைகாட்டா மல் இருப்பதே நல்லது.

நன்றி : நாணயம் விகடன் - 15.11.2015