disalbe Right click

Friday, January 13, 2017

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?
நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச்  சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், 
பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
பயனை எப்படி பெறுவது?
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். 
இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை,
புற்றுநோய் மருத்துவம், 
சிறுநீரக நோய்கள், 
மூளை மற்றும் நரம்பு மண்டலம், 
கண் நோய் சிகிச்சை, 
இரைப்பை (ம) குடல் நோய்கள்,
ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , 
காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், 
கருப்பை நோய்கள், 
ரத்த நோய்கள்.
மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை
சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து  5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். 
இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 
ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.
மேலதிக விவரங்களுக்கு
இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
http://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு
நன்றி : விகாஸ்பீடியா
****************************************************************
குறிப்பு:
இந்தத் திட்டத்தின் காப்பீட்டு நிறுவனத்துடனான உடன்படிக்கை ஜனவரி 10, 2017 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
இந்தக் காப்பீட்டு நிறுவனம், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1.50 லட்சம் காப்பீட்டு தொகை, ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: 
முதல் முறையாக இந்தத் திட்டத்தில், தமிழகத்தில் குடியேறி 6 மாதத்துக்கும் மேல் வசிக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்கள் முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு, தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள்.
 மேலும், மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும்.
நன்றி : தினமணி நாளிதழ் - 14.01.2017
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற 7373004974 என்ற செல் நம்பரிலும், 04562 252507 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 10.03.2017

மோசடி பதிவுகள் பற்றி சுற்றறிக்கை


மோசடி பதிவுகள் பற்றி சுற்றறிக்கை 


மோசடியான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யபடும் பத்திரபதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறைதலைவர் பிறப்பித்த சுற்றறிக்கை.


பத்திரப்பதிவு துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண். 67 / 03-11-2011-ன் படி, மோசடிப் பத்திரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு,
உயர்நீதிமன்றம், சென்னை, W. P. No. 16747 / 2015, நாள். 20-07-2015. தீர்ப்பின்படி
நிலமோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், போலி பத்திரங்களை ரத்து செய்யவும், பத்திர பதிவுத் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நில மோசடியால் பாதித்தவர்கள், பத்திர பதிவு அலுவலகத்தில் புகார் அளித்தாலும், பெரிதாக எதுவும் நடந்து விடாது. விசாரணை நடத்தும் பத்திர பதிவுத் துறை அதிகாரிகள், அனைத்து ஆவணங்களை சரிபாார்த்து, போலியானவை என, தெரிந்தும், பாதித்தவர்கள் பக்கம் இருப்பதில்லை.
'போலி பத்திர பதிவை நீக்க, தங்களுக்கு அதிகாரம் இல்லை. சிவில் கோர்ட்டிற்கு சென்று உத்தரவை பெற்று வாருங்கள்' என்று கைகழுவி விடுவர். காவல் துறை அதிகாரிகளும் நில மோசடியில் ஈடுபடுவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடுவதில்லை. இந்த பழங்கால நடைமுறைகள் களையப்பட்டு போலி பத்திரங்களை நீக்க, பத்திர பதிவு துறைக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் அண்மையில் நடந்த சிவில் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை இனி எப்படி நடைபெறும்?
இதன்படி, இனி, போலி பத்திரம் குறித்து புகார் எழுந்தால் மாவட்ட பதிவாளர் நேரடியாக விசாரிப்பார். இரு தரப்பின ருக்கும் சம்மன் கொடுக்கப்படும். இரண்டு தரப்பினரும் நேரில் ஆஜரானதும், அந்தந்த பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., சர்வேயர் உதவியுடன் சொத்து பத்திர ஆவணம் ஆராயப்படும். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இந்த விசாரணை முடிக்கப்படும்.
ஆவணம் போலியானது என தெரிந்தால் போலி பத்திரம் ரத்து செய்யப்படும். அத்துடன் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும் என, காவல் துறைக்கு, துறை ரீதியாக பரிந்துரை செய்யப்படும். இது தொடர்பாக, சார் பதிவாளர் பத்திர பதிவு அலுவலகங் களில் தனி ஆவணங்கள் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.









முதல் தகவல் அறிக்கை பதிவு சட்டம்

முதல் தகவல் அறிக்கை பதிவு சட்டம் 


நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்னைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.

வழக்குகள் இரண்டு வகை

முதலில் ஒரு குற்றச்சாட்டில் பல்வேறு தன்மைகள் உள்ளது. பொதுவாக குற்றங்கள் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் என்று இருவகைகள் உள்ளது. இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை. பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அதன் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்னைகளை உரிமையியல் (சிவில்) வழக்குகள் என்று வரையரை செய்யப்பட்டுள்ளது.
சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறுவது எப்போது?

இந்த உரிமையியல் பிரச்னைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் (கிரிமினல் வழக்கு) தன்மை பெறுகின்றன.
குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களாக கருதுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.

கிரிமினல் வழக்குகள் எவை?

பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாகும்.

கிரிமினல் வழக்குகளின் பிரிவுகள்

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை
1) நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள்

2)  நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாகும்.

அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சூறையாடுதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாகும்.

இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார், தன்மீது அவதூறு பரப்பிவிட்டார், அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார், பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்படுவோர் புகார் கொடுத்தால், காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படுகிறது

அதே சமயத்தில் காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விஷயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக கருதப்படுகின்றன.

சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறுவது எப்படி?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.
இந்திய தண்டணைச் சட்டம் - குறிப்பு

எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கடமை என்ன?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை - பதிவு எப்போது?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.
முதல் தகவல் அறிக்கை - பதிவு செய்ய மறுத்தால்?

அவ்வாறு காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர் தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும்.
மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர்  பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்து கொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

மேல்முறையீடு யாருக்கு செய்ய வேண்டும்?

குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.
நீதிமன்றம் செல்வது எப்போது?

புகார் பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.
கோர்ட் டைரக்‌ஷன்

புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை. மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம்.
இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை  நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பு இல்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156 (3)ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர் எதிர் எம். எஸ். கிருஷ்ணாபட் மற்றும் பிறர் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.

எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

நீதிமன்றத்தில் தனிப்புகார்

குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர் சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார். அவ்வாறு விசாரிக்கப்படும் போது  தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம்.
தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம். அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.  மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.

நீதிமன்றத்தின் அதிகாரம்

இதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது. அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.

நேரடியாக நீதிமன்றத்தில் புகார் செய்யலாம் (பிரிவு-482)

மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும்.

இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம்.

பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதி மன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 03.01.2017

Thursday, January 12, 2017

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்கு சேரும்?

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்கு சேரும்?
எனது  நண்பர் ஒருவர் பெருந்தொகையை வங்கி  ஒன்றில்  'டெபாசிட்’ செய்திருந்தார். அந்த டெபாசிட் தொகைக்கு தன்னுடைய  இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டார். வங்கியில் டெபாசிட் செய்திருந்த பணம் யாருக்கு சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. 
நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு அந்த டெபாசிட் தொகை சேரவேண்டுமா, அல்லது முதல்மனைவிக்கும் நண்பருக்கும் பிறந்த வாரிசுகளுக்கும் சேர வேண்டுமா என்பதில் பயங்கர குழப்பம். 
(முதல் மனைவிக்கும் அவரது குழந்தைகளுக்குமே அந்த டெபாசிட் தொகை சேர வேண்டும். இரண்டாவது மனைவி வாரிசு அல்ல.)
இப்படி ஒரு பிரச்னை  என்றால் எனது இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியான பிரச்சனை. திருமணமான சில ஆண்டுகளிலேயே அவரது மனைவி இறந்துவிட்டார்.  தன்னுடைய குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே என்று நினைத்து, தனது நெருங்கிய  உறவினர் ஒருவரை  அவரது சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் நாமினியாக நியமித்திருந்தார்.  
தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனது உறவினர் மூலமாக தனது சொத்துக்கள், தன்னுடைய குழந்தைகளுக்கு சிக்கல் இல்லாமல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு. நல்ல முன்னேற்பாடுதான்.
ஆனால் என்ன நடந்தது?  திடீரென மறைந்த நண்பரின்  குழந்தைகளுக்கு எதுவும் கொடுக்காமல் அந்த சொத்துக்கள் முழுவதையும்  அபகரிக்கப் பார்த்தார் அந்த நெருங்கிய உறவினர்.
இது போன்ற பிரச்னைகள் எழுவதற்கு மிக்கிய காரணம் நாம் நாமினி குறித்து  தெரிந்து  கொள்ளாததுதான். 
ரத்த சம்பந்தம் உள்ள மூன்றாம் நபரை நாமினியாக நியமித்தால், அல்லது எவரையும் நாமினியாக நியமிக்காவிட்டால், சொத்துக்குரியவரின் வாரிசுகள் அந்த சொத்துக்களைப் பெறுவதில் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றது. 
நாமினிக்கு  என்று சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன, இருக்கிறது? கடமைகள் என்ன இருக்கிறது?, வாரிசுகளுக்கு என்ன உரிமைகள் இருக்கிறது?  என்பதை தெரிந்து கொள்வோம், வாருங்கள்! 
யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
'ஒருவர்  மூன்றாம் நபரை தனது சொத்துக்களுக்கு நாமினியாக நியமித்துவிட்டு இறந்துவிட்டார் என்றால், அவரது சொத்துக்கள் முதலீடுகள், சேமிப்புகள், ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிறுவனங்கள் யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? 
எந்தவித ஆட்சேபனையும் வாரிசுகளிடமிருந்து இல்லாதபோது பலன் அல்லது முதலீடு நாமினியிடம் ஒப்படைக்கப் படும்.  வாரிசுகள் ஆட்சேபனை செய்தால் நீதிமன்றத்தை அணுகி  உத்தரவு பெற்று வருபவரிடம் அவைகள் ஒப்படைக்கப்படும்.
நாமினி நியமிக்கப்படவில்லை என்றால்?
 நாமினியை நியமிக்காமலே ஒருவர் இறந்துவிட்டால் பிரச்னைகள் எதுவும் இன்றி வாரிசுகளுக்கு அதாவது அவரது மனைவி, குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இவர்களில் யார் உரிமை உடையவர்களோ அவர்களுக்குப் போய் சேர்ந்துவிடும்.
 நாமினி என்று யாரையுமே ஒருவர் நியமிக்காதபோது வாரிசுச் சான்றிதழ் (legal heir certificate) அடிப்படையில் அவரது சொத்துக்களை/முதலீட்டைத் திருப்பி கொடுப்பார்கள். 
நாமினி என்று யாரையும் நியமிக்காத சூழ்நிலையில் இருக்கின்ற வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு  ”ஆட்சேபணை இல்லாச் சான்றிதழ்” வழங்கி அதன்மூலம் சொத்துக்களையோ முதலீட்டையோ பெற்று பின்பு அனைவரும் பிரித்துக் கொள்ளலாம்.
சில சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் (succession certification) பெற்று அதன் மூலம்தான் உரியவர்கள் அதற்குரிய பலனைப் பெற முடியும்.
நாமினியாக யாரை நியமிக்கலாம்?
வாரிசு என்று ஒருவர் இருக்கும்போது மூன்றாவது நபரை நாமினியாக நியமிக்கலாமா? வாரிசுகள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் நாமினி நியமிப்பது அவசியம்தான்.  நாமினியாக யாரை நியமிக்க வேண்டும்?, நாமினியாக யாரை  நியமிக்கக் கூடாது என எந்த விதிமுறையும் சட்டத்தில்  இல்லை. இருந்தபோதிலும், ரத்த உறவு முறை, பெற்றோர் அல்லது மனைவியை (spous)  நாமினியாக நியமிப்பதுதான் நடைமுறையில் உள்ளது.
மூன்றாம் நபரை நாமினியாக நியமிக்கலாமா?
நாமினியாக மூன்றாம் நபரை  ஒருவர் நியமிக்கும்போது, சட்டரீதியான பல கேள்வியும் சந்தேகங்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு எழும். 
 எடுத்துக்காட்டாக,  ஒருவர் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உறவினர் அல்லாத மூன்றாம் நபர் ஒருவரை அதற்கு நாமினியாக நியமிக்கும்போது, இது போன்ற சந்தேகம் வரும். ஒருவேளை பாலிசி எடுத்த நபருக்கு திடீரென்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டால் நாமினி மீது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நிச்சயமாக சந்தேகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.  இப்படி ஒரு சந்தேகம் அவர்களுக்கு எழும் சமயத்தில் நாமினியிடம்  கொடுக்காமல்,  உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு வாரிசுகளிடமே பணத்தைக் ஒப்படைப்பார்கள்.
நாமினி சொத்துக்களை அபகரிக்க நினைத்தால்?
ஒருவர் ஏதோ ஒரு சூழ்நிலையில் ரத்த சம்பந்தமில்லாத ஒரு நபரை நாமினியாக நியமித்து விட்டு திடீரென்று இறந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை அல்லது முதலீடுகளை நாமினியாக இருக்கும் நபர் அபகரிக்க நினைத்தால், வாரிசுதாரர்கள் அதனை  தடுப்பது எப்படி? இது போன்ற சூழ்நிலையில்  வாரிசுதாரர்களின் என்ன செய்ய வேண்டும்?
சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட நாமினி, அவற்றை வாரிசுகளிடம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அபகரித்தாலோ, வாரிசுதாரர்கள் நீதிமன்றத்தைத்தான்  நாடவேண்டும். வேறு வழியில்லை.
இறந்தவரின் வாரிசு என்பதை நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களின் மூலம் நிரூபித்தால்,  இறந்தவரின் சொத்துக்களை அல்லது முதலீட்டை  வாரிசுகளிடம் ஒப்படைக்க  நீதிமன்றம் நாமினிக்கு உத்தரவிடும்.
நாமினியின் அதிகாரம் என்ன?
 என்னதான் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், ரத்த சம்பந்தமில்லாத ஒருவருக்கு, இறந்தவரின் சொத்தில்  எவ்வித உரிமையும் கிடையாது என்பதை நாமினியாக நியமிக்கப்பட்டவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 
சொத்துக்களையோ அல்லது முதலீட்டையோ  வாரிசுகளிடம் ஒப்படைக்கும்  கடமை மட்டுமே அவருக்கு உண்டு! அவர் ஒரு காவல்காரர். அவ்வளவுதான்! 
அதே நேரத்தில் ஒருவருக்கு ஒரே ஒரு மகன் என்றால் வாரிசு யார் என்கிற பிரச்னை வராது. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட  மகன்களோ அல்லது மகள்களோ  இருந்தால், இதில் யாரை நாமினியாக நியமிப்பது என்கிற கேள்வி எழும். 
வாரிசாகவும், நாமினியாகவும், ஒருவரே இருக்கும்போது பிரச்னை ஏதும் எழ வாய்ப்பு இல்லை. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாரிசுகளாக இருந்து, அதில் ஒருவரை மட்டும் நாமினியாக நியமித்தால்,  குடும்பத்தில் உள்ள மற்ற வாரிசுகள் எவரும் ஆட்சேபனை செய்யவில்லை என்றால், நாமினியாக உள்ள வாரிசே சொத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற வாரிசுகளில் யாராவது ஒருவர் ஆட்சேபனை செய்தால்கூட  நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்.
நாமினி இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
நாமினியாக நியமிக்கப்பட்ட நபர் இறந்து விட்டாலோ அல்லது பைத்தியம் பிடித்திருந்தாலோ  நாமினியாக யாரையும் நியமிக்கப்படாததற்கு அது சமமாகும். நாமினி நியமிக்கப்படாத போது நேரடியாகவே வாரிசுகளிடம் சொத்துக்கள்  அல்லது முதலீடுகள் கொடுக்கப்படும். 
அசையும் சொத்துக்களில் நாமினி பெயர்
சிக்கல் எதுவும் இல்லாமல், மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் ஒருவர் இழப்பீடு பெறுவத்ற்கு,   நாமினி பெயரை  கட்டாயம் குறிப்பிட வேண்டும்  என்று (Insurance Regulatory and Development Authority)  ஐ.ஆர்.டி.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து பொதுக் காப்பீடு (ஜெனரல் இன்ஷூரன்ஸ்) நிறுவனங்களுக்கும் அந்த அமைப்பு அறிக்கையும் அனுப்பி உள்ளது. 
 தற்போது சட்டப்படியான வாரிசுகளுக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் இழப்பீட்டுத்  தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால்  இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஆண்டு கணக்கில் தாமதமாகிறது. அதை தவிர்க்கவேண்டும் என்பதற்காக நாமினி நியமிப்பது அவசியம் என்பதை ஐ.ஆர்.டி.ஏ. வலியுறுத்தி அதனை கட்டாயமாக்கியும் இருக்கிறது.
எந்தவிதமான  முதலீடு செய்தாலும், நாமினி என்பது ஒரு முக்கியமான விஷயம்.  பி.எப். எனப்படுகின்ற பிராவிடண்ட் பண்ட்டிற்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். 
பலர் வேலைக்குச் சேரும்போது  திருமணம் ஆகாமல் இருந்திருப்பார்கள். அதனால், அப்போது பெற்றோர்களின் பெயரை நாமினியாக பி.எப்-ல்  காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணம் ஆன பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியமானதாகும். 
அதைப்போல, நாம் நாமினியாக  காட்டியவர் திடீரென இறந்துபோய்விட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது முக்கியமாகும் . 
நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்குச் சென்றோ அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ ஒருவர் தனது புதிய நாமினியை நியமிக்கலாம். 
இந்த கட்டுரையை நான் எழுத காரணமாக இருந்த நண்பர் வழக்கறிஞர் திரு  Leenus Leo Edwards​ அவர்களுக்கு நன்றியுடன் இதனை சமர்ப்பிக்கிறேன்.

Wednesday, January 11, 2017

இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..!


இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..!


சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat

15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள்.

ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

ஜஸ்வந்த் சிங் ராவத் பாதுகாத்த எல்லைப் பகுதி

சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள்.

திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள்.

இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.

இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள்.

ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.

இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார்.

அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. "வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்" என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார்.

முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர்.

சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது.

ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார். ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார். நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.

சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. "இந்த பொடிப் பயலா, நமக்கு 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் "என்று கோபம் கொப்பளிக்க... ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள்.

சீனர்கள் வைத்த ஜஸ்வந்த் சிங் ராவத் சிலை

இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர்.

தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது.

இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள்.

இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது.

ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற வீர முழக்கங்களுக்கு எத்தனை பேரின் உயிரையும், ரத்தத்தையும் விலை கொடுத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

ஜெய்ஹிந்த்...!

நன்றி : விகடன் செய்திகள் - 10.01.2017

வழக்கு தாக்கல் செய்யும் நேரம் மாற்றம்


வழக்கு தாக்கல் செய்யும் நேரம் மாற்றம்

உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் நேரம் மாற்றம்

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு, அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக காலை 10:00 முதல் மதியம் 3:00 மணிவரை வழக்கு எண் இடப்படும். 

தற்போது ரிட், ஆட்கொணர்வு, கிரிமினல் மேல்முறையீடு, கிரிமினல் சீராய்வு மனுக்களுக்கு மதியம் 1:30 மணிக்குள் வழக்கு எண் இடும் வகையில், பழைய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மறுநாள் விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலை விரைந்து அச்சிடவும், அவற்றை உயர்நீதிமன்ற இணையதளத்தில் முதல் நாள் இரவு 8:30 மணிக்குள் பதிவேற்றம் செய்யும் வகையிலும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.01.2017

ஒவ்வொரு மாசமும் என்னென்ன செய்ய வேண்டும்..!


ஒவ்வொரு மாசமும் என்னென்ன செய்ய வேண்டும்..!

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வார இறுதி விடுமுறைகள் என அனைத்தும் முடிந்து இயல்பு நிலைக்கு அனைவரும் திரும்பியுள்ளோம். சரி, 2016ஆம் ஆண்டு எனக்கு மோசமான வருடம், உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை என்று எத்தனை பேர் புத்தாண்டு நாளில் நினைத்திருப்போம்.? 
கண்டிப்பாகப் பெரும்பாலானோர் நினைத்திருப்போம். இதற்கு என்ன காரணம் என்று என்பதை இப்போது தேவையில்லை. 2017ஆம் ஆண்டை எப்படிச் சிறப்பானதாக அமைக்க வேண்டும் என்பதில் நாம் கவனத்தைச் செலுத்தினாலே போதுமானது. அப்படி இந்த வருடம் முழுவதும் என்னென்ன செய்ய வேண்டும்.

ஜனவரி 1. 

இந்த ஆண்டுக்கான உங்கள் நிதி இலக்குகளைச் சரியாகத் திட்டமிடுங்கள். தற்காலிக முதலீடுகளைப் பட்டியலிடவும், செலவினம் மற்றும் பெரிய கொள்முதல் திட்டங்களைச் சரியாக மதிப்பிடவும். 2. அனைத்து காப்புறுதித் திட்டங்களுக்கான பிரீமியம் பணம் செலுத்தும் தேதிகளுக்கான நினைவூட்டல் அமைக்கவும். 3. மேலும் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான நாளை தெரிந்தெடுத்து பயன்பாட்டுப் பில்கள், கடன் அட்டைச் சீட்டுக்கள் போன்றவற்றைச் செலுத்த நினைவூட்டல் அமைக்கவும். 4. நீங்கள் முதலீடு செய்ததற்கான ஆதாரத்தைத் தங்களுடைய பணி நிறுவன தலைமைக்குச் சமர்ப்பிக்கவும்.
பிப்ரவரி 1

. நாட்டின் வரைவு திட்ட அறிவிப்பு. வரிவிதிப்பு விதிகள் மாற்றங்கள் பற்றிய குறிப்பு எடுத்து அது உங்கள் முதலீடுகளை எப்படிப் பாதிக்கும் என்று குறிப்பு எடுத்துக்கொள்ளவும் 2. இந்த நிதி ஆண்டு முடிவதற்குள் தங்களின் அனைத்து ஈட்டு ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ளவும். ஏனென்றால் வரிச் சமர்ப்பித்தபின் விடுப்பு பயண ஊதியம்(எல்டிஏ) போன்றவற்றைப் பெற இயலாது.
மார்ச் 1. 

2016 - 2017 ம் ஆண்டுக்கான நான்காவது மற்றும் இறுதி முன்கூடியே வரித் தவணை செலுத்த கடைசி நாள் 15 மார்ச். 2. தங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அடுத்த மாதம் நீங்கள் ஆண்டுப் பள்ளி கட்டணம் செலுத்துவதற்குப் போதுமான நிதி உங்கள் வங்கி கணக்கில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். 3. பீதியடையாமல், உங்களுடைய நிதி இலக்குகளுக்கு அப்பாற்பட்ட, கடைசி நிமிடத்தில் வரிச் சேமிப்பு முதலீடு செய்யவேண்டாம்.
ஏப்ரல் 1.

 உங்களுடைய குறிக்கோள்களுக்குப் பொருத்தமான வரிச் சேமிப்பு முதலீடு மற்றும் அவசர மதிப்பீடு செய்ய இது சரியான நேரம். தங்களுடைய வங்கி கணக்கில் ஒரு இசிஎஸ் தரவினை ஏற்படுத்திக்கொள்ளவும். அது சம்பளம் உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டவுடன் ஒரு தொகை நேரடியாகத் தங்களின் முதலீட்டுக்குச் சென்று விடும். 2. நீங்கள் ஒரு மே-ஜூன் விடுமுறைக்குச் செல்ல போகிறீர்கள் என்றால், விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓய்வு விடுதி புக் செய்வதற்கு அது சிறந்த ஒப்பந்தங்கள் பெற இது சரியான நேரம். 3. 28ம் தேதி அக்ஷய் திரிதி, தங்களுடைய "தங்கம் இருப்பு" 10 சதவீததற்கும் குறைவாக இருந்தால், தங்கம் வாங்க தயாராக இருக்கவும்.
மே 1. 

நீங்கள் ஒரு பதவி உயர்வு அல்லது போனஸ் பெற்றீர்கள் என்றால், ஒரு விலையுயர்ந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கோ அல்லது அதை முதலீடு செய்யாவதற்கோ பயன்படுத்தலாம். மேலும் உங்கள் குடும்பத்துடன் செலவழிக்கச் சிறு தொகை ஒதுக்கி வைப்பது நலம்! 2. உங்கள் கடன் மதிப்பீட்டைப் பாருங்கள். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், பில்கள், EMIS மற்றும் கடன் அட்டை கட்டணம் செலுத்தி கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 1. 

முன்கூட்டிய வரி முதல் தவணை செலுத்தும் கடைசித் தேதி 15. 2. ஒரு தேதியை நிர்ணயம் செய்து உங்களுடைய பேப்பர் வேலைகளை முடிப்பதற்கான திட்டமிடவும். அதாவது மோட்டார், உடல் நலம், வீட்டிற்கான காப்பீட்டுத் திட்டங்கள், உங்கள் வரவு செலவு திட்டத்தின் மறு ஆய்வு, பில்கள் மற்றும் ரசீதுகள் நிரப்புதல், உயில் அல்லது தங்களின் முதலீட்டுப் திட்டங்களை மறு ஆய்வு செய்தல் முதலியன. 3. உங்கள் ஸ்மார்ட்போன், இணையம் மற்றும் கேபிள் திட்டம் போன்றவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தெரிந்தெடுப்பது அல்லது திட்டங்களை மாற்றியமைப்பது.
ஜூலை 1. 

2016-17 ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய 31 ஆம் தேதி கடைசித் தேதியாகும். கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இணையத் தாக்கல் செய்யவும். தாக்கல் செய்யும் முன் ஒரு வாரம் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வைத்துக்கொள்வது நல்லது. 
ஆகஸ்ட் 1. 

15ம் தேதி சுதந்திர தினம், மனதை ரிலாக்ஸ் செய்ய நீண்ட வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளவும். 2. 2016-2017 ஆண்டுப் பிரிவு 80ஜி வரி விலக்கு பெறுவதற்காக ஒரு நன்கொடை அளிப்பதற்குத் திட்டமிடவும்.
செப்டம்பர் 1. 

முன்கூடிய வரி இரண்டாம் தவணை செலுத்தும் கடைசித் தேதி 15. 2. இந்த மாத இறுதியில் பண்டிகைக் காலம் துவங்குகிறது. செப்டம்பர் 21-29 நவராத்திரி மற்றும் செப்டம்பர் இருந்து 25-30 துர்கா பூஜைக்கான காலங்கள். நீங்கள் வாங்க வேண்டிய மற்றும் செலவழிக்கவேண்டிய பொருட்களுக்கான பட்டியல் மற்றும் பட்ஜெட் தயார் செய்யவும் மேலும் இதற்கான செலவு வரவு செலவு திட்டத்தை மீறிச் சென்று விடாதபடி பார்த்துக் கொள்வது நல்லது.
அக்டோபர் 1. 

நீங்கள் உங்களுடைய வீட்டை வண்ணம் தீட்ட அல்லது சீராக்கவேண்டும் திட்டமிட்டால், இப்போது பண்டிகை தள்ளுபடிகள் முழு மூச்சில் இருப்பதால் இது ஒரு நல்ல நேரம். மேலும் விற்பனை காலத் தள்ளுபடியை உபயோகப்படுத்திக் கொள்ள உடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்குவது நலம். 2. பண்டிகைக் காலத்தை நன்றாக அனுபவிக்கவும், ஆனால் அதிகமாகச் செலவிடும் முயற்சி கூடாது. தாந்திராஸ் (17 அக்டோபர்) அல்லது தீபாவளி (19 அக்டோபர்) போன்ற பண்டிகைகளை ஒட்டிப் பொழுதுபோக்கு டிக்கட்டுகளை வாங்கவும். ஆனால் இது உங்களுடைய பட்ஜெட்டுக்கு உள்ளே இருக்குமாறு பார்த்து கொள்ளவும். . 3. நீங்கள், டிசம்பர் மாதம் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், இப்போது உங்கள் விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓய்வு விடுதி யை புக் செய்யவும். 
நவம்பர் 1. 

இந்த மாதம் முடிந்தவரைக் குறைவாகச் செலவழித்து உங்களை மற்றும் உங்கள் பணத்திற்கு ஓய்வு கொடுக்கவும். நீங்கள் கடன் கொடுப்பதற்கும் ஒரு நல்ல ஓய்வு எடுப்பதற்கும் இது ஒரு நல்ல நேரம்.

டிசம்பர் 1. 

முன்கூடியே வருமான வரி செலுத்தும் மூன்றாவது தவணைக்கான தேதி 15. 2. உங்கள் நிதி மேலாண்மையை வருடாந்திர ஆய்வு நடத்தவும் மற்றும் உங்கள் இலக்குகளைச் சாதித்து விட்டீர்களா அல்லது பட்ஜெட்டுக்கு மிகையாகச் சென்றதா ? என்பதனை சரிபார்க்கவும். 3. இறுதியாக, அது ஒரு குளிர்கால இடைவேளைக்கான நேரம் இது. உங்கள் விடுமுறையை அனுபவிக்கவும்!

Written by: Prasanna VK

நன்றி : ஒன்இந்தியா» தமிழ் » செய்திகள் » 06.01.2017

தகவல்கள் எவ்வாறு 2(f)ன் கீழ் அமையாது?


தகவல்கள் எவ்வாறு 2(f)ன் கீழ் அமையாது?

கோரிய தகவல்கள், எவ்வாறு சட்டப்பிரிவு 2(F)-ன் கீழ் அமையாது? என்பதற்கு மேல் முறையீட்டு அலுவலர் விளக்கம் அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். 46411 / விசாரணை / டி / 2014, 27.05.2015
http://www.rtigovindaraj.com/…/4627-2f-tnsic-46411-2014-270…

No automatic alt text available.



Image may contain: text



No automatic alt text available.

Thanks to Mr A Govindaraj Tirupur

நீங்கள் இணையத்திற்குப் புதியவராக இருந்தால்


நீங்கள் இணையத்திற்குப் புதியவராக இருந்தால் 

தன் சார்பு தகவல்களைக் குறைக்கலாம்

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். 
மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும்.

எனவே, இந்தச் சூழ்நிலையில், நாம் நம்மைப் பற்றிய டேட்டாவினை, எப்படி கூகுள் நிறுவனத்திற்குக் குறைவாகக் கொடுக்கலாம் என்று பார்ப்போம். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. இருப்பினும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.

கூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்த விளம்பரங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கூகுள் தளத்தின் விளம்பர செட்டிங்ஸ் பக்கத்தில் (https://www.google.com/settings/u/0/ads) நீங்கள் சில நகாசு செட்டிங்ஸ் அமைப்பை மேற்கொண்டு, நீங்கள் தரும் தகவல்கள் துல்லிதமாகவும், ஆர்வம் கொண்டுள்ள விளம்பரங்கள் மட்டும் இருப்பதாகவும் ஏற்படுத்தலாம். 

கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் தேடுதல் தான். அதில் என்ன செய்யலாம் என்று அடுத்து பார்க்கலாம். கூகுள் நீங்கள் செல்லும், பார்க்கும் அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் ”கூகுள் நவ்” செயலியாக இருந்தாலும், தேடுதல் கட்டத்தில் என்னவெல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதைக் கூகுள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, கூகுள் இந்த தகவல்கள் எல்லாம் எளிதாகக் காணும்படி, நம் அக்கவுண்ட் ஹிஸ்டரி பக்கத்தில் மேல் பகுதியில் வைத்துள்ளது. இங்கு, இவற்றை சேவ் செய்திடாமல் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் பகுதியில் வழி தரப்பட்டுள்ளது. எனவே, நாம் கூகுள் எடுத்து வைத்துள்ள தகவல்களை சேவ் செய்திடாமல் நீக்கிவிடலாம். அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் பதியும்படி அமைத்துக் கொள்ளலாம்.

ஜிமெயில்

நாம் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்துகையில், கூகுள் சர்வர்கள் வழியாக நாம் அனுப்புவது அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து, கூகுள் வைத்துக் கொள்கிறது. மின் அஞ்சல் செயலி ஒன்றின் செயல்பாட்டின் அடிப்படையே இதுதான். ஆனால், கூகுள் அதற்கும் மேலாக ஒரு படி சென்று, நமக்கு விளம்பரங்களை அனுப்புவதற்காக, நம் அஞ்சல்களை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. நாம் அனுப்பும் டெக்ஸ்ட்டை மட்டுமல்ல; படங்களையும் ஸ்கேன் செய்கிறது. இவ்வாறு கூகுள் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நம் அக்கவுண்ட்டிலிருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை நீக்குவதுதான் ஒரே வழி.
தொடர்புகள் (Contacts)

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் நாம் பெறும் மிகப் பெரிய வசதி, நம் தொலைபேசி தொடர்புகளை எளிதாக, ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நம் தொடர்புகள் அனைத்தும் கூகுள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைக்கப்படுவதுதான். மொபைல் போனிலேயே, நம் தொடர்புகளின் மின் அஞ்சல் முகவரிகளும் தாமாக சேவ் செய்யப்படுவதும் இப்படித்தான். நாம் நீக்க வேண்டும் என எண்ணினால், ஒரு முயற்சியில், ஒரு தொடர்பினை மட்டுமே நீக்க முடியும். ஆனால், இந்த சாதனங்களில், நாம் நம் தொடர்புகளை சேவ் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.
பெரும்பாலான ஆண்ட்ராய்ட் இயக்கும் சாதனங்களில், உங்கள் போன் தொடர்புகளை, உங்கள் சிம் கார்டிற்கு மாற்றுவது எனில், People என்னும் அப்ளிகேஷன் சென்று, அதில் Settings தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், Export Contacts to SIM என்பதனைக் கிளிக் செய்திட முகவரிகள் அனைத்து தகவல்களுடன் மாற்றப்படும். ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த வழிமுறைகள் சற்று மாறுபடலாம்.

கூகுள் காலண்டர்

இதில் நாம் அமைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கூகுள் தளத்தினால் ஒருங்கிணைக்கப் படுகின்றன. இங்கு மட்டும், இதில் உள்ளவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது. கூகுள் காலண்டருடன் அனைத்து தொடர்புகளையும் நீக்கினால்தான் அது முடியும்.
கூகுள் ட்ரைவ்

ஜிமெயில் சர்வரில், நம் மெயில்கள், தொடர்புகள் அனைத்தும் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படுவது போல, ட்ரைவ் செயலிக்கான சர்வரிலும் சேமிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக அறியத் தரப்படவில்லை. ஆனால், ட்ரைவ் பயன்படுத்தும் சர்வரில் சேர்த்து வைக்கப்படும் ஆவணங்கள், படங்கள், விடியோக்கள் அனைத்தும், எந்த நேரமும் கூகுள் நிறுவனம் அறியக் கிடைக்கும் வகையில்தான் பதியப்படுகின்றன. 
நீங்கள் உங்கள் பைல்களை அழிக்கும்போதும் அழித்த பின்னர், ட்ரேஷ் பெட்டியிலிருந்து நீக்கும் போதும், அவை மறைக்கப்படுகின்றன. நிச்சயமாய், அவை கூகுளின் சர்வரிலிருந்து உடனடியாக, அறவே நீக்கப்படுவதில்லை. ஆனால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு யாரேனும், பின் நாளில் அணுகினால், அவர்களுக்கு நீங்கள் நீக்கியவை நிச்சயமாகக் கிடைக்காது.

உலவும் இடம் (Location)

உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கூகுள் ‘லொகேஷன்’ என்னும் வசதி மூலம், நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதனை அறிந்து பதிவு செய்கிறது. அந்த சாதனம் மூலம், கூகுள் மேப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த டூல் தான் அடிப்படையை அமைக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் மேப் பயன்படுத்துகையில், லொகேஷன் டூலை நாம் இயக்காமலேயே, மற்றவை மூலம், கூகுள் நாம் இயங்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த செயல்பாட்டினை, ஆண்ட்ராய்ட் சாதனத்தில் முடக்கிவிடலாம். 
கூகுள் ப்ளே

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. பல செயலிகள் இதன் வழியாகவே நமக்குக் கிடைக்கும். கூகுள், நீங்கள் இந்த ஸ்டோர் சென்று பெறும் அனைத்தையும் பட்டியலிட்டுத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். இது நாம் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாகும். ஆனால், வெளிப்படையாக இது தெரிவதில்லை. இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றால், ப்ளே ஸ்டோரினைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், அது சரியான வழி அல்ல. 
ஏனென்றால், இந்த ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பெற்ற அனைத்து செயலிகளையும் நீக்க வேண்டும். பின் எந்த பயன்பாடும் உங்களுக்குக் கிடைக்காது.

யு ட்யூப்

யு ட்யூப் தள செட்டிங்ஸ் அமைப்புகள் https://www.google.com/settings/accounthistory என்னும் இடத்தில் கிடைக்கும். இங்கு நீங்கள் தேடிய விடியோக்களின் பட்டியல் கிடைக்கும் இவற்றை நீக்க நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேடி நீக்கிவிடலாம். இங்கேயே, உங்கள் தேடலைப் பதிவு செய்ய வேண்டாம் என கூகுளுக்குக் கட்டளை இடலாம். அதே போல, நீங்கள் தேடிப் பார்த்த விடியோக்களின் பட்டியலையும் அணுகி, நீக்க விரும்புவதை நீக்கிவிடலாம்.
மேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, நீங்கள் கூகுள் சர்வர்களுக்கு, உங்களைப் பற்றிய தகவல்களை, அறிந்தோ அறியாமலோ, எந்த அளவிற்குத் தருகிறீர்கள் என்பதனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். 

கூகுள் நிறுவனம் தரும் எந்த வசதியை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய விருப்பங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள், அதன் சர்வரில் சென்று அடைவதையோ, அவற்றைப் பயன்படுத்தி நம்மை கூகுள் அணுகுவதையோ மாற்ற இயலாது. விருப்பப் பட்டால், நம்மிடமிருந்து செல்லும் தகவல்களைக் குறைத்துக் கொள்ளலாம். கூகுள் சேவையே, அதில் உள்ள நம் அக்கவுண்ட்டினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் டூல்களைத் தருகிறது. 

ஆனால், இதற்கு நாம் முயற்சி எடுத்து, செட்டிங்ஸ் அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கும் வேலையையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு ட்யூப் போன்றவை எல்லாம், தகவல்களைச் சேகரிக்கும் டூல்களைத் தாங்களாகவே இயக்கித் தங்கள் பணியைத் தொடர்கின்றன. நாம் இதனை அறிந்து, ஒவ்வொரு செட்டிங்ஸ் பக்கமும் அணுகி, இவற்றைத் தடுக்கலாம். 

ஆனால், அவ்வாறு தடுக்கும் வேளைகளில், சில வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால், தகவல்கள் தொடர்ந்து செல்வது நிறுத்தப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.01.2017

எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.


எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.

படித்ததில் பிடித்தது.

வக்கீல் ஒருவர் ரயிலில்  சென்று கொண்டு இருந்தார்...
அப்போ அழகான பொண்ணு ஒருவர் அவருக்கு முன்னாடி இருந்த சீட்டில் வந்து உட்கார்ந்தார்..

நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லை என்பதால் லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் விட்டார். அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பார்க்க, இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்படியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்.

கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட்டின் பக்கம் வந்து அமர,  நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு ஆயிருச்சி .

அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு,

இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சிடுச்சாம்.

நம்மாளுதான் புத்திசாலி வக்கீல் ஆச்சே. யோசிச்சாரு.

பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு அந்த பெண்ணிடம் எழுதி காட்டினார்.

அந்த பெண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாளோ, அதை அப்படியே எழுதி காட்டினாளாம்.

அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!!
(கொய்யால, யாருகிட்ட! )

" PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT"

எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.

Thanks to Mr. ADP Dhandapani வழக்கறிஞர்

மீசல்ஸ் ருபெல்லா - தடுப்பூசி


மீசல்ஸ் ருபெல்லா - தடுப்பூசி

6 -2- 2017 முதல்*  *28-2-2017*  வரை 

*9 மாதம் முதல்* *15 வயது* வரை உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் 

*மீசல்ஸ் - ருபெல்லா* *( Measles Rubella)* தடுப்பூசி போடப்படஉள்ளது.

*தட்டம்மை *

வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கப்படு்கிறது.. 
பாதுகாப்பான, பலனளிக்கக்கூடிய தடுப்பு மருந்து இருந்தும், குழந்தைச் சாவுக்கு இது ஒரு முக்கியக் காரணமாக விளங்குகிறது. 

இது  பாரோமைக்சோ வைரஸால் உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும். 

நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச் சளியின் மூலமாக இது மற்றவருக்கு பரவுகிறது.

*ரூபல்லா*

இது ஜெர்மானிய மணல்வாரி அம்மை எனப்படுகிறது.இது காற்றில் பரவும் தன்மை கொண்ட தொற்று நோய்க் கிருமி ஆகும். 

நோய்த் தொற்றுள்ள குழந்தை பிற குழந்தைகளோடு நெருங்கி விளையாடும்போது, சுலபமாக அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்றுவிடும்.

தகவல் உதவி : வழக்கறிஞர் திரு Leenus Leo Edwards

குறிப்பு : பள்ளிகளிலேயே போடுவதற்கு ஏ்ற்பாடு செய்யப்பட்டுள்ளது. இல்லையெனில் தங்கள் பகுதிக்குட்பட்ட “ஆரம்ப சுகாதார நிலையத்தை” அணுகுங்கள்.