disalbe Right click

Tuesday, January 30, 2018

தொழிலாளர் நலவாரியத்தில்

Unorganised Workers Welfare Board
நமது தமிழ்நாடு அரசு உடலுழைப்பு தொழிலாளர்களுக்காக நலவாரியம் ஒன்றை அமைத்து அவர்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதற்குரிய அலுவலகங்கள் உள்ளது. கீழ்க்கண்ட வாரியங்களில் அதற்குரிய தொழிலாளர்கள் இணைந்து பயன் பெறலாம்.
1.    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், 
2.    தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம், 
3.    தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம், 
4.    தமிழ்நாடு தையல் தொழிலாளர் நலவாரியம், 
5.    தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலவாரியம், 
6.    தமிழ்நாடு சலவைத்  தொழிலாளர் நலவாரியம், 
7.    தமிழ்நாடு பனைமரத்  தொழிலாளர் நலவாரியம், 
8.    தமிழ்நாடு  கைவினைத் தொழிலாளர் நலவாரியம், 
9.    தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம், 
10. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நலவாரியம், 
11.  தமிழ்நாடு ஓவியர்  நலவாரியம், 
12.  தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம், 
13.  தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியம், 
14.  தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நலவாரியம், 
15.  தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் நல வாரியம்,  
16.  தமிழநாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில்   பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம், 
17.  தமிழ்நாடு சமையல் தொழிலாளர் நல வாரியம் 
நலத்திட்ட உதவிகள் என்னென்ன?
விபத்தினால் மரணம் மற்றும் ஈமச்சடங்கு செய்ய உதவி, விபத்தினால் ஊனம், இயற்கையான மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவி, கல்வி உதவித் தொகை, திருமணத்திற்கு உதவி, மகப்பேறு உதவி, கண்களுக்கு கண்ணாடி வாங்க உதவி,  ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்க ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் இந்நலத்திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் அலுவலர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாரியங்கள் மூலம் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு மின்னணு பரிமாற்றத்தின் மூலம் நேரடியாக சென்றடைகிறது.
உங்கள் பெயரை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய, அரசு பதிவு பெற்ற கட்டிட காண்ட்ராக்டர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகின்ற அரசு அமைப்புகள் அல்லது பதிவு பெற்ற  கட்டுமானத் தொழிற்சங்கத்தினர் ஆகிய யாராவது ஒருவரிடம் விண்ணப்பிக்கும்  விண்ணப்பத்தில் சான்று பெறவேண்டும்
சென்னையை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்று பெறவேண்டும்
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட இதர 15 நல வாரியங்களில் உங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும் என்றால், உங்கள் பகுதியிலுள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அல்லது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநரிடம் உங்கள் விண்னப்பத்தில் சான்று பெறவேண்டும். தொழிற்சங்கத்தினர் உங்களுக்கு   பணிச்சான்று வழங்கினால், அந்த சங்கத்தின் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய (ரப்பர் ஸ்டாம்ப்) முத்திரை அவசியம்.
விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கவேண்டும்?
பள்ளி அல்லது கல்லூரிச் சான்று நகல்
வாகன ஓட்டுநர் உரிம நகல்
குடும்ப அட்டை நகல்
அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட வயதுச் சான்று நகல்
உள்ளிட்டவற்றில் சான்றொப்பம் பெற்று இணைக்கவேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள உங்கள் சேமிப்புக் கணக்கு எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இவற்றை உங்கள் மாவட்டத்திலுள்ள மாவட்டத் தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்கினால், பரிசீலனை செய்து உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
எத்தனை ஆண்டுகள் கழித்து அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும்?
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். இதற்கென்று உள்ள  புதுப்பித்தல் விண்ணப்பத்தை, மாவட்ட  தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதனை சரிபார்த்து, உறுப்பினரிடம் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை அவர்கள் வழங்குவார்கள். இதற்கு  கட்டணம் எதுவும் கிடையாது.
எத்தனை வயது வரை பதிவை புதுப்பிக்கலாம்?
நலவாரியத்தில் செய்த பதிவை உங்களது 60 வயது வரை நீங்கள் புதுப்பித்துக்கொள்ளலாம். 60 வயதுக்கு மேல் , பதிவைப் புதுப்பிக்க இயலாது.
அடையாள அட்டை தொலைந்துபோனால் ......?
நலவாரிய அடையாள அட்டை தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்துவிட்டால் மாற்று (Duplicate) அட்டை வழங்கப்படும். இதற்கு ரூ.20 கட்டணத்துடன் அந்தந்த மாவட்டத் தொழிலாளர் அலுவலத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) உள்ள அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். தொழிலாளர் அலுவலர் அவர்கள் விசாரணை நடத்தி உங்களுக்கு மாற்று அடையாள அட்டை வழங்குவார்.
இதன் தலைமை அலுவலக முகவரி:
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம்
ஜி-133, சிந்தாமணி வளாகம், 
அண்ணா நகர் கிழக்கு,
சென்னை- 600 102
தொலைபேசி எண்: 044- 26632776  & 044- 26631149
சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணை





********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.01.2018  

Monday, January 29, 2018

போக்குவரத்து காவலர்கள் பணி

தமிழ்நாடு காவல் ஆணையர் .கே.விஸ்வநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களை அழைத்து தானே நேரடியாக ஆலோசனை வழங்கி, போக்குவரத்து  காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை நேற்று வழங்கியுள்ளார்.
போக்குவரத்து  காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாயிண்டில் நியமிக்கப்பட்ட இடத்தில் நின்று பணி  முடியும் நேரம் வரை அலுவல் புரிய வேண்டும். நியமிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் உதவி ஆய்வாளர் அனுமதி பெற்று வேறு ஒருவரை அந்த இடத்தில் நிற்க வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
பாயிண்டில் நிற்பவரை தவிர வேறு இடத்தில் உள்ள காவலர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து நின்று கொண்டு அலுவல் புரிய கூடாது. சுத்தமான சீருடையில் பணிக்கு வரவேண்டும்.
2. பாயிண்ட் அலுவலின் போது செல்போனில் குறுந்தகவல்களை அனுப்பிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருக்ககூடாது. தவிர்க்க முடியாத முக்கியமான அழைப்பாக இருந்தால் மட்டும் சிறிது நேரத்தில் பேசி முடித்து விட்டு பணியாற்ற வேண்டும். நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க கூடாது.
3. காவலர்கள் சாதாரண  உடையிலோ, சீருடையிலோ இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். இதை மீறிச்சென்றால் உயர் அதிகாரிகள் தணிக்கையின் போது கடும் நடவடிக்கை இருக்கும்.
4. காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை தணிக்கை செய்யக்கூடாது.  போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது பி-டயரி (B,diary) வழக்குகள் பதிவு செய்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் விதி மீறும் வாகனங்களை துரத்தி பிடிக்க கூடாது.
5. J,walk- ஜெ.வால்க் பணியாற்றும் காவலர்கள் பாதசாரிகளை விசில் ஊதித்தான் சைகையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். பாதசாரிகள் சுரங்கப்பாதையை உபயோகிக்காமல் சாலையை கடக்கும் போது விசில் ஊதி அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
6. காவல் ஆணையர் உத்தரவுப்படி மாலை 6 மணிக்கு மேல் பாயிண்ட் அலுவலில் உள்ள காவலர்கள் ரிஃப்லக்ட் ஜாக்கெட், மற்றும் மிளிரும் விளக்கு கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு : J,walk என்றால் என்ன? Jay walk என்ற வார்த்தையையே சுருக்கி J,walk என்று குறிப்பிடுகிறார்கள். J,walk என்றால் பாதசாரிகள் நடக்க தடைசெய்யப்பட்ட சாலையில் பொதுமக்களை வழிநடத்துகின்ற போக்குவரத்து காவலர்கள் பார்க்கின்ற பணியாகும்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.01.2018