disalbe Right click

Sunday, February 11, 2018

மின்கட்டண அறிவிப்பு

உங்கள் செல்போனில் மின்கட்டணம் குறித்த அறிவிப்பை பெற வேண்டுமா?
முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதற்கென்று  ஒவ்வொரு மாதத்தின் 15ம் தேதியை  கடைசி தேதியாக மின்சாரத் துறையினர் அறிவித்திருந்தனர். அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார்கள். அதிலும் மின்கட்டணம் கட்டுவதற்கு கடைசி தேதி 15ம் தேதிதான். இப்போது ரீடிங் எடுத்த நாளில் இருந்து இருபது நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தி  உள்ளனர். இங்குதான் நமக்கு குழப்பம் வந்துவிட்டது.  என்றைக்கு ரீடிங் எடுத்தார்கள். என்றைக்கு கடைசி கட்டணம் என்று ஞாபகம் வைத்துக் கொள்ள எல்லோரால் முடிவதில்லை.  
அபராதம் செலுத்துவது அதிகமானது
இரு மாதங்களுக்கு ஒருமுறை, நம் வீட்டிற்கே வந்து நம்ம வீட்டு மின் கட்டணம் எவ்வளவு? என்று மின் வாரியப் பணியாளர் கணக்கெடுத்து ,அந்தக் கட்டணம் எவ்வளவு என்பதையும்  அந்த மீட்டர் அருகில் நாம் வைத்திருக்கும் அட்டையில் எழுதியும் சென்றுவிடுவார்.  இருக்கின்ற  வேலைப் பளுவில் அதைப் பார்க்கத் தவறிவிட்டால், அல்லது அட்டை தொலைந்து விட்டால் நாம் கட்டணம் கட்ட மறந்திருப்போம். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு நமது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வயர்மேன் மூலமாக எச்சரிக்கப்பட்டு பிறகு அபராதத்துடன் அந்த மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிவரும்
இதற்கு தீர்வு இருக்கிறதா?
இருக்கிறது. நமது மொபைல் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்டால், மின்சார வாரிய ஊழியர் நமது மின் கட்டணத்தை எடுத்துச் சென்று மின்வாரிய அலுவலகக் கணினியில் கட்டணம் எவ்வளவு என்று பதியும்போது, நமது மொபைல் எண்ணுக்கும் அது மெசேஜாக வந்துவிடும். அந்த மெசேஜில் நாம் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகை, நமது மின் இணைப்பு எண் மற்றும் நாம் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்இந்த குறுஞ்செய்தி நமது மின் கட்டணத்தைக் கடைசித் தேதிக்கு முன்பாகச் செலுத்த உதவியாக இருக்கும். அபராதம் கட்டுவதை தவிர்க்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
நமது மின் இணைப்பு எண்ணை இரண்டு வழிகளில் நமது செல்போனுடன் இணைக்கலாம். முதல் வழி என்னவென்றால், மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று உங்களது பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய ஒரு விண்ணப்பத்தில் உங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு மின்சார வாரிய உதவிப் பொறியாளரிடம் விண்ணப்பித்தால், உங்களது எண் உங்கள் மின் இணைப்புடன் அவர்களது கணினியில் இணைக்கப்பட்டுவிடும்.
இரண்டாவது வழி என்னவென்றால், இணையதளம் மூலமாக உங்கள் மொபைல் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம்http://bit.ly/2H0wpRM என்ற இணையதளத்துக்குச் சென்று உங்கள் பகுதியை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் மொத்தம் 9 பிராந்திய (Region) பகுதியைக் கொண்டிருக்கும். அவற்றில் உங்கள் பிராந்தியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிராந்தியத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?
ஏற்கனவே பணம் கட்டியுள்ள உங்கள் மின் கட்டண ரசீதை எடுத்துப் பாருங்கள். அந்த ரசீதில் மின் கட்டண எண் 07 241 018 0062 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்  இந்த எண்ணை நீங்கள் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் இரண்டு எண்கள் (07) உங்கள் பிராந்திய எண், அதாவது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் 07 என்பது திருநெல்வேலி பிராந்திய எண் ஆகும்.. இரண்டாவதாக உள்ள மூன்று எண்கள் (241) உங்கள் ஊரின் (Section Number) எண்  அடுத்த மூன்று எண்கள் (018) ஊரின் (Zone number)  பகுதி எண் ஆகும்..
இவை ஒற்றை இலக்கத்திலிருந்தாலும் அவை மூன்றெழுத்து எண்ணாகத்தான் எழுதப்பட வேண்டும். உதாரணத்துக்கு 6 என்பதை 006 என்று எழுதப்பட வேண்டும். கடைசியாக இருக்கும் எண்கள்  நமது வீட்டின் மின்இணைப்பு எண் (62) ஆகும். அவை ஒற்றை இலக்கத்திலிருந்து நான்கு இலக்க எண்கள்வரை இருக்கலாம். இந்த எண்ணையும் நான்கு டிஜிட்டில் குறிப்பிட வேண்டும். நான்கு டிஜிட் இல்லையென்றால்,  முன்னால் தேவையான சைபரை (0062) சேர்த்துக் கொள்ள் வேண்டும். 
பிராந்திய எண்களும், பிராந்தியப் பெயர்களும்
01 சென்னை - வடக்கு, 
02 விழுப்புரம், 
03 கோயம்புத்துார்
04 ஈரோடு
05 மதுரை, 
06 திருச்சி
07 திருநெல்வேலி
08 வேலூர்
09 சென்னைதெற்கு
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
அடுத்த உள்ள கட்டத்தில் நமது மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். கடைசியாக உள்ள மூன்று கட்டத்தில் ஏற்கெனவே மேலே குறிப்பிட்டவாறு நமது மின் இணைப்பு எண்ணில் முதல் இரண்டு இலக்கம் (07) போக மீதமுள்ள எண்களை முதல் கட்டத்தில் மூன்று எண்கள், நடுவில் உள்ள கட்டத்தில் மூன்று எண்கள், கடைசி கட்டத்தில் நான்கு எண்கள்  உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு கீழே உள்ள பாக்ஸில் தெரிகின்ற Validate என்ற வார்த்தையை அழுத்தினால் நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் நமக்குத் தெரியும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.02.2018 

Saturday, February 10, 2018

நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவு

பிறந்த தேதியை விண்ணப்பத்தில் தவறாக குறிப்பிட்ட பெண் 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவிலுள்ள தாஞ்சூர் கிராமத்தை சேர்ந்த பெண் அமுதினி என்பவர் 'குரூப் - 2' பணியிடங்களுக்காக நடந்த, ஆரம்பகட்ட தேர்வு மற்றும் எழுத்து தேர்வில், வெற்றி பெற்றார்; இருந்த போதிலும் அவருக்கு நேர்முக தேர்வுக்கு, அழைப்பு கடிதம் வரவில்லை. காரணம் என்னவென்று ஆராந்தபோது, 'தகுதி நிபந்தனையை பூர்த்தி செய்திருக்கவில்லை' என, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
மனுத் தாக்கல்
இதனால், தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில், அமுதினி மனு தாக்கல் செய்தார்.  மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், யு.எம்.ரவிச்சந்திரன், அவர்கள் ஆஜரானார். அவர், அமுதினி தனது ''விண்ணப்பத்தில், பிறந்த தேதியாக, 06.12.1993     என்று குறிப்பிடுவதற்கு பதிலாக , 06.02.1993 என்று தவறுதலாக, குறிப்பிட்டு விட்டார்; அமுதினி ''வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்; அமுதினிக்கு எதிராக, துறை நடவடிக்கை, தண்டனை எதுவும் இல்லை; இது தவறுதலாக நடந்து விட்ட செயல்தான். ஆதாயம் பெறும் நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை! என்று அவர் வாதாடினார். 
அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லோகநாதன் அவர்கள், ''தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், அமுதினியின் விண்ணப்பத்தில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அது நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்   விண்ணப்பத்தை, சரியாக நிரப்பவில்லை; எனவே, நிராகரித்ததை குறை கூற முடியாது,'' என்று வாதாடினார்.
மனுவை விசாரித்த, நீதிபதி, டி.ராஜா அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
அமுதினி தனது பிறந்த தேதியை தவறுதலாக குறிப்பிட்டு விட்டார்தலைமை வனப் பாதுகாவலர் அளித்த சான்றிதழில், 'அமுதினிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை; எந்த தண்டனையும் இல்லை; அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க, ஆட்சேபனை எதுவும் இல்லை' என, கூறப்பட்டு உள்ளது
இதுபோன்ற வழக்கு ஒன்றை ஏற்கனவே விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம்,  விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டுள்ளதுஆதாயம், சலுகை பெறும் நோக்கம் இல்லை என்பதால்அமுதினியின் விண்ணப்பத்தை, தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும். நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அமுதினியை அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.02.2018 

நான் தீர்த்து வைத்த வழக்கு

கடந்த சில வருடங்களுக்கு முன்னால், ஒரு நாள்!
உள்ளூர் நண்பர் ஒருவரிடமிருந்து செல்போன் மூலமாக அழைப்பு வந்தது. அவசரமாக வரச் சொன்னதால் உடனே கிளம்பி அவரது மளிகைக் கடைக்குச் சென்றேன். எனது நண்பர் அங்கிருந்த இன்னொருவரை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். நானும் சரி என்றேன். நண்பரின் நண்பர் என்னிடம் தனது பிரச்சனையைக் கூறினார். 
இவரது பிரச்சனை என்ன?
இவர் ஒரு அரிசி மொத்த வியாபாரி. ஒரு மளிகைக் கடைக்காரருக்கு கடனுக்கு அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். நாளடைவில் அந்தக் கடன் ரூ.இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது. கடனை நெருக்கி கேட்டபோது, கடன் வாங்கியவர் வேறு வழியின்றி, தன்னுடைய குடும்பச் சொத்து ஒன்று உள்ளதாகவும், அதில் தனது பங்கை, தரவேண்டிய கடனுக்காக இவருக்கு தருவதாகவும் இவரிடம்  கூறியுள்ளார். இவரும் அந்தச் சொத்தை நேரில் சென்று பார்த்துள்ளார். எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு அது. நான்கு சகோதரர்களுக்குப் பாத்தியப்பட்டது. மீதியுள்ள மூன்று பங்குதாரர்களையும் சந்தித்து அவர்களுக்கும் பணம் கொடுத்து அந்த வீட்டை முழுதாக எழுதிக் கொள்ளலாம் என்று வேறு வழியின்றி இவர் முடிவு செய்துள்ளார்.
பத்திரம் பதிவு
மீதியுள்ள மூன்று பங்குதாரர்களில் ஒருவர் இறந்துவிட்டார். உயிரோடு இருந்த அவர்களில் இருவர் தங்களுக்கு இருந்த கஷ்டம் காரணமாக, இவருக்கு எப்படியாவது சொத்தை விற்றுவிடுவோம் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர். அதனால் இறந்து போன பங்குதாரரின் குடும்பத்தை அணுகியுள்ளனர். அந்தக் குடும்பத்தில் இறந்தவருடைய மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் என்று நான்கு  வாரிசுதாரர்கள்.   இவர்களில் மகள்கள் இரண்டு பேரும் திருமணம் ஆனவர்கள். உள்ளூரில் வசிப்பவர்கள். திருமணமாகாத மகனுடன் அவரது தாய்  வெளிநாட்டில் இருந்துள்ளார். தாயை தொடர்பு கொண்ட போது அவரும் விற்பனைக்கு சம்மதித்துள்ளார். ஆனால், பத்திரத்தில் கையெழுத்துப் போட வரமுடியாத சூழ்நிலை. ஆகையால் இங்கிருந்த மகள்கள் மட்டும் கையெழுத்து போட்டு அவர்களின் தந்தைக்குரிய பங்கை பெற்றுக் கொண்டனர். 
அம்மாவுக்கு வந்த ஆசை
ஒரு வருடம் கழித்து வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த அம்மாவிடம் மகள்கள் பணத்தைக் கொடுத்தனர். நால்வரும் பணத்தை பங்கு போட்டு பிரித்துக் கொண்டுள்ளனர். இன்னும் பணம்  வேண்டும் என்ற ஆசை அம்மாவுக்கு வந்துள்ளது. தன்னுடைய கையெழுத்தும், தன்னுடைய மகன் கையெழுத்தும் இல்லாத காரணத்தால், அந்த பத்திரம் செல்லாது! என்று வழக்கறிஞர் அறிவிப்பை அரிசி வியாபாரிக்கு அனுப்பியுள்ளார் அந்த அம்மா.
அதிர்ச்சியடைந்த அரிசி வியாபாரி
இதைக் கண்டவுடன் அந்த அரிசி வியாபாரிக்கு அட்டாக்கே வந்துவிட்டது. எட்டு லட்சம் போச்சா? என்று எனது நண்பரிடம் கூறி அவர் மிகவும் வருத்தமடைந்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட மீதமுள்ள மூன்று பங்குதாரர்களுக்கும் ஒரே சந்தோஷம். ஆஹா, இன்னும் நமக்கு பணம் தருவார்கள்! அல்லது இன்னொருவருக்கும் இந்த வீட்டை விற்கலாம்! என்ற எண்னத்தில் பேசாமல் இருந்தார்கள். 
இந்த நேரத்தில்தான் எனது ஞாபகம் வந்து என்னை அழைத்து ஆலோசனை கேட்டனர். என்ன முடிவில் நீங்கள் இருக்கிறீர்கள்? என்று அவர்களிடம் முதலில் கேட்டு அறிந்து கொண்டேன். அவர்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு இன்னும் ரூ.50 ஆயிரம் அவர்களுக்கு கொடுத்துவிடலாம் என்ற முடிவில் இருப்பதாக  அந்த அரிசி வியாபாரி கூறினார். சரி, நான் பேசிப் பார்க்கிறேன் என்று கூறி அவரை ஆறுதல் படுத்தினேன்.
சமாதானப் பேச்சு
அந்த அம்மாவின் முகவரி பெற்று வீட்டிற்குச் சென்றேன். அவரது மகன் வீட்டில் இல்லை. அந்த அம்மா  இரண்டு லட்சம் வாங்கிக் கொடுங்கள்; கையெழுத்து போட்டு விடுகிறோம் என்று கூறினார். முப்பதாயிரம் வாங்கித் தருவதாக கூறினேன். பேச்சுவார்த்தை பல நாட்கள் நடந்தது. பயன் ஒன்றும் இல்லை. வேறு வழியைத்தான் நாட வேண்டும் என்று அரிசி வியாபாரியிடம் கூறினேன். அதனை என்னவென்று அறிந்து கொண்டு அவரும் சம்மதித்தார்.
நாங்கள் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு
அரிசி வியாபாரியின் பேரில், விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்ட அனைவருக்கும் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில் மோசடியாக சொத்தை விற்பனை செய்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரத்தில், “இதில் எந்தவிதமான வில்லங்கமும் இல்லை. அவ்வாறு இருந்தால் அதனை எங்களது சொந்தச் செலவில் தங்களுக்கு தீர்த்து வைப்போம்!” என்று எழுதி அவர்கள் அனைவரும் கையொப்பம் இட்டிருந்ததை மேற்கோள் காட்டி இந்த வழக்கறிஞர் அறிவிப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
வழிக்கு வந்த அம்மா, கையெழுத்துப் போட்டார் சும்மா!
கையெழுத்துப் போட்ட அனைவருக்கும் வழக்கறிஞர் அறிவிப்பு  பயத்தை உண்டாக்கியது. அவர்கள் அனைவரும் அந்த அம்மாவிடம் சண்டைக்குச் சென்றனர். சமாதானம் பிறந்தது. அதன்பிறகு அவரை அழைத்துச் சென்று வேறோரு பத்திரத்தில், இந்த சொத்துக்குண்டான பணத்தை பெற்றுக் கொண்டதாக அவரிடமும், அவரது மகனிடமும் கையெழுத்துக்களைப் பெற்று, அதனை முறைப்படி பத்திர அலுவலகத்தில் பதிவு செய்தோம். பிரச்சனை முடிந்தது.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.02.2018 

Friday, February 9, 2018

கணவன் மனைவி கடைபிடிக்க வேண்டியவை

ஒரு மனமாக இணைந்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
உங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் உங்களது இருவரின் மனத்திலும் இருக்கும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், உங்களில் ஒருவரது திட்டம் ஒருவருக்கு(ம்) தெரியாமல் போய்விடக் கூடாது என்ற எண்னத்தில்தான் நான் இதனை எழுதுகிறேன். 
இதுவரை உங்களது பெற்றோரின் பின்னால் இருந்து செயலாற்றிக் கொண்டிருந்த உங்களுக்கு என்று ஒரு தலையாய பொறுப்பை இந்த சமூகம் வழங்கி இருக்கிறது. இனியும் மற்றவர்கள் உங்களுக்கு ஆலோசணை வழங்கலாம். ஆனால், நீங்கள் செய்யப் போகின்ற செயல்கள் ஒவ்வொன்றிற்கும் நீங்களே முழுப் பொறுப்பு என்பதை மறவாதீர்கள்.
என்ன செய்ய வேண்டும்?
1. உங்களது திருமணத்தை முதலில் பதிவு செய்யுங்கள்.
2. உங்கள் இருவருக்கும் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவை ஏற்கனவே இருக்கலாம். அதில் உள்ள முகவரியை இருவரும் முதலில் மாற்ற வேண்டியது முக்கியம். மனைவி தனது கணவன் பெயரை அதில் இணைப்பது முக்கியம்.
3. இருவருக்குமான குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
4. வங்கியில் உள்ள அக்கவுண்ட் மற்றும் நிதி சார்ந்த அக்கவுண்டையும் உங்களது இருவரின் பெயரிலும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.,உங்கள் இருவரில் யார் வேண்டுமானாலும் அதனை ‘ஆபரேட்செய்யும்படி உருவாக்கிக் கொள்ளுங்கள்
5. வருமான வரி செலுத்துவதற்கென்றோ அல்லது வேறு காரணங்களுக்காக தனித்தனியாக வங்கி மற்றும் நிதி சார்ந்த கணக்குகளை நீங்கள் வைத்துக்கொண்டால், உங்கள் இருவரில் ஒருவர் மற்றொருவரை நாமினியாக தேர்வு செய்துகொள்ளலாம்
6. உங்களில் ஒருவரின் அக்கவுண்டை மற்றொருவர் பார்க்கும்படி இருப்பதும் மிகவும் முக்கியம். யூஸர் .டி. மற்றும் பாஸ்வேர்டையும்  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தயவு செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
7. உங்களது மனைவி ஹவுஸ் ஒய்ஃப் என்றால், அவரை உங்களது  வங்கி  மற்றும் நிதி சார்ந்த அக்கவுண்ட் செயல்களைச் செய்ய வழிவகுத்து உற்சாகப்படுத்துங்கள். வீட்டிற்குத் தேவையான வேலைகளை அவர்களே முடிவெடுத்து செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.  
8.  நிதி சார்ந்த முடிவுகள் ஒவ்வொன்றையும் நீங்கள் இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்து எடுங்கள். 
9. உங்களில் ஒருவர் தங்களுடைய சொந்தங்களுக்கோ, நண்பர்களுக்கோ கைமாற்றாக பணம் கொடுத்தாலோ அல்லது அவர்களிடம் இருந்து கைமாற்றாக பணம் பெற்றாலோ அதனை  ஒரு டயரியில் தேதிவாரியாக எழுதி வருவது அவசியம். புரோ நோட்டின் அடிப்படையில் கடன் ஏதேனும் மேற்கண்டவர்களுக்கு கொடுத்திருந்தாலோ அல்லது வாங்கியிருந்தாலோ அவற்றிற்கு நகல் எடுத்து அவற்றை முறைப்படி ஃபைல் செய்து வையுங்கள்.
10. பங்குகள் மற்றும் டெபாசிட் போன்ற முதலீடுகளை இருவர் பெயரிலும் ஜாயிண்டாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை தனித்தனியாக செய்திருந்தால், அந்த முதலீடு பற்றிய ஆவணங்களை ஃபைல் செய்வதோடு, உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் மறக்காமல்  தெரிவியுங்கள்.
11. உங்களது நிதி ஆலோசகர், ஆடிட்டர், வங்கி மேலாளர் மற்றும் நிதி சம்பந்தமான தொடர்புகளின் முகவரி மற்றும் எண்களை ஒரு பொதுவான டைரியில் குறித்து வைத்து அதனைப் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தெரிவியுங்கள்.
12. உங்களது முதலீடுகள், கடன்கள்,  இன்ஷூரன்ஸ், வங்கி மற்றும் நிதி சார்ந்த அனைத்து பேப்பர் டாக்குமென்டுகளையும் ஒரே ஃபைலில் வைத்திருப்பதுபோல, உங்களது  கம்ப்யூட்டரிலும் ஒரே ஃபோல்டரில் போட்டு வைத்து அதனைப் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தெரியப்படுத்துங்கள்.
13. கணவன் மனைவி ஆகிய நீங்கள் இருவரும் தனித்தனியாக கிரெடிட் கார்டு வைத்துக்கொள்ளுங்கள். இதனால், உங்கள் இருவருக்கும் சிபிலில் கிரெடிட் ஸ்கோர் தனித்தனியாக பதிவாகும். அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கடன் வாங்க வங்கிக்குச் செல்லும்போது இது மிக உதவியாக இருக்கும். ஒருவேளை எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உங்களது லைப் பார்ட்னருக்கு இது கண்டிப்பாக உதவும்.
14. உங்களுக்கென்று மனை வாங்கினாலும் வீடு வாங்கினாலும் உங்கள் இருவரது பெயரிலும் ஜாயின்டாக வாங்குவது நல்லது. இதனால், இருவரும் தனித்தனியே வரிச் சலுகை  பெற முடியும்
15. நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்ணை எக்காரணம் கொண்டும் மாற்றாதீர்கள். ஒருவரது செல்போன் எண்ணை மற்றவர் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
16. உங்களது பான் கார்டுவாக்காளர் அடையாள அட்டைபாஸ்போர்ட் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு அட்டை, குடும்ப அட்டை, சொத்துப் பத்திரங்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து உங்களது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
17உங்களது பான் கார்டுவாக்காளர் அடையாள அட்டைபாஸ்போர்ட் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை எண் சொத்துப் பத்திரங்கள் ஆகியவற்றின் நகல்களையும்  தனியாக ஒரு பைலில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
வருங்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மேற்கண்ட நடவடிக்கைகள் உங்களுக்கு அல்லது உங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.02.2018