disalbe Right click

Monday, February 26, 2018

போலீஸ் தாக்கியதால் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு

 ரூ.10 லட்சம் தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பஞ்சவர்ணம், இவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில்,
கோவையில் உள்ள ஒரு தோட்டத்தில், நாங்கள் பணியாற்றினோம். எனது கணவரின் பெயர் ஜெயபாண்டி. கடந்த  2008-ம் ஆண்டில், துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவரது சொந்த ஊருக்கு என் கணவர் ஜெயபாண்டி சென்றிருந்தார். அப்போது, அவர் தோட்ட உரிமையாளர் அனுமதியுடன், ஆழ்துளை கிணற்றுக்கு பயன்படுத்தப்படும், மின் ஒயரையும் உடன் எடுத்து சென்றார்.
வத்தல்பட்டி என்ற ஊருக்கு ஆட்டோவில் சென்ற போது, விருவீடு காவல் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் திரு சக்கரை, எஸ்.., பாண்டியம்மாள், ஏட்டு ஜெயபிரகாஷ் ஆகியோர், என் கணவரை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் எடுத்துச் சென்றிருந்த மின் ஒயரை, திருடியதாக ஏற்றுக்கொள்ளுபடி கூறி, அவரைத் தாக்கியுள்ளனர்.  அவர் அதனை திருடவில்லை என்ற உண்மை தெரிந்த பிறகு, எனது கணவரை காவல்துரையினர்  விடுவித்தனர். கோவைக்கு வந்த எனது கணவர் மறுநாள் இறந்து விட்டார். போலீசார் கடுமையாக தாக்கியதால்தான், எனது கணவர் இறந்துவிட்டார் எனவே, போலீசார் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனை விசாரித்த ஆணைய நீதிபதி, டி.ஜெயச்சந்திரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேரும் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் பஞ்சவர்ணத்திற்கு, நான்கு வாரத்திற்குள், 10 லட்சம் ரூபாயை, தமிழக அரசு, வழங்க வேண்டும்
இந்த தொகையை, இன்ஸ்பெக்டர் சக்கரை உட்பட, காவல்துறைஉயைச் சேர்ந்த மூவரிடமும் இருந்துதான் வசூலிக்க வேண்டும்மேலும், அந்த மூவர் மீதும், துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்கள் மீது, கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கும் பதிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு, அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 ************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.02.2018 

பதிவு செய்யப்படாத உயிலுக்கான நடைமுறை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத உயிலுக்கான  நடைமுறை :
உயிலை எழுதி வைத்தவர் இறந்து விட்ட பிறகு, அதை செல்லுபடியாக்க உயில் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நபர் அந்த உயிலின் நகலை எடுத்துக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். மேலும் உயில் எழுதியவரின் இறப்புச் சான்றிதழ் அவசியம்.
அத்துடன் உங்களுக்கு தான் உயில் எழுதி வைத்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக அரசு ஆவணமான "ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை" போன்ற முகவரி மற்றும் புகைப்படச் சான்றுகளையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
நீங்கள் தான் இன்னார் என சார்பதிவாளர் விசாரணை நடத்தி உறுதி செய்வார். அதன்பிறகு அந்த பதிவு செய்யப்படாத உயிலை பதிவு செய்வார். பிறகு சார்பதிவாளர் தன்னுடைய கையெழுத்து போட்டு அந்த உயிலின் நகலை தருவார். அந்த உயிலை வாங்கி கொண்டு வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று பட்டா மாறுதல் செய்து கொள்ள வேண்டும்.
உயிலை எழுதி வைத்தவர் பதிவு செய்யும் முன் இறந்து விட்டால், அதனை உயிலின் படி நிறைவேற்றுபவராக அல்லது வேறு வகையாகவோ உரிமை உடையவர் அதனை எந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுக்கு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு பதிவு விதி 69 மற்றும் பதிவுச் சட்டம் பிரிவு 40 கூறுகிறது.
பதிவு செய்யாமல் இறந்து விட்டார் என்ற காரணத்திற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். மனு அளிப்பவரின் வாக்குமூலத்தை சார்பதிவாளர் பெற்று தமிழ்நாடு பதிவு விதி 69-ன் படி விசாரணை நடத்துவார்.
உயிலின் படியும், மனுதாரரின் வாக்குமூலத்தின் படியும் யார் யாருக்கு விசாரணை பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட வேண்டுமோ அவர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்படும்.
உயில் எழுதி வைத்தவர் குடியிருந்த கிராமம், சொத்து இருக்கும் கிராமம், உயில் சம்பந்தப்பட்டவர்கள் குடியிருக்கும் கிராமம் ஆகிய இடங்களில் விசாரணை பற்றி அறிவிப்பு செய்யப்படும்.
உயில் எழுதி வைத்தவர் இருந்த மாவட்டம், அவரது சொத்து இருக்கும் மாவட்டம் ஆகிய குறித்து அரசிதழில் விசாரணை அறிவிப்பு செய்யப்படும். நிலை ஆணை எண் 603-ல் கண்டபடி கட்டணம் வசூலிக்கப்பட்டு அறிவிப்பு அனுப்பப்படும்.
உண்மையாகவே இறந்தவர் தான் உயில் எழுதி வைத்துள்ளாரா? இன்னாருக்கு தான் எழுதி வைத்துள்ளாரா? என்பதை தீர்மானிக்கவே அறிவிப்புகள் செய்யப்படுகிறது.
உயிலை பதிவு செய்யாமல் இறந்து விட்ட ஒருவரின் உயிலை பதிவு செய்ய அவரது ஏஜென்ட் யாரும் மனுத்தாக்கல் செய்ய முடியாது. பதிவுச் சட்டம் 41(2)ன்படி யாருக்கு உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதோ அவர் தான் சார்பதிவாளர் முன்பு ஆஜராகி மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட அந்த உயிலால் பயன்பெறுவர் மைனராக இருந்தால் அவரது கார்டியன் அவருக்காக உயிலை சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம். (நிலை ஆணை எண் 598)
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயில் எழுதலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால் உயில் எழுதி பதிவு செய்யாமல் இறந்து விட்டவர் மைனராக இருந்தாலும் அந்த உயிலையும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். (நிலை ஆணை எண் 619).
உயில் எழுதி வைத்தவர் வசித்த இடம், உயிலில் கையொப்பம் செய்த இடம், இதற்கான அதிகார வரம்பு எல்லை ஆகியவை பரிசீலனை செய்யப்படும்.
ஒருவேளை இதெல்லாம் இல்லாத நிலையில் சார்பதிவாளர் அது குறித்து மாவட்ட பதிவாளருக்கு அறிக்கை அனுப்புவார். (நிலை ஆணை எண் 599)
பதிவு செய்யப்படாத உயில் எழுதி வைத்து இறந்த ஒருவருடைய உயிலை ஓராண்டுக்கு பிறகு தாக்கல் செய்தாலும் மாவட்ட பதிவாளருக்கு, சார்பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும். (நிலை ஆணை எண் 599)... 
நன்றி : Thiruvarur raja nandhini
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018