disalbe Right click

Monday, August 27, 2018

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை
அரசு அலுவலர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் அளிக்கப்படுகின்ற மனுக்கள் மீது அந்த அலுவலகத்திலுள்ள அதிகாரியால் எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்? என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாத நேரங்களில் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்றும் சில திருத்தங்களை  தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் (ஏ) துறை அரசாணை (எண்:73) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  
அலுவலக நடைமுறை நூல் - அத்தியாயம் 22 - மனுக்கள் - அனுப்புதல் & முடிவு செய்தல்
➽  குறை களைவு மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் அந்த மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு, மனுதாரருக்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.
➽      குறை களைவு மனுக்கள் பெறப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் குறைகள் களையப்பட வேண்டும். 
➽     மனுக்களை அனுப்பியவர்கள்  அரசுத்துறை அலுவலர்களை அணுகி  கேட்கும்போது, அவர்களது குறை களைவு மனுக்களின் மீதான நடவடிக்கை தொடர்பான நிலையினை அவர்களிடன் தெரிவித்தல் வேண்டும்.
➽    ஏதேனும் காரணங்களால்,  மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க கூடுதலாக அவகாசம் தேவைப்படும்போது, அதுபற்றிய நீட்டிக்கப்பட்ட கால அளவு குறித்து எழுத்துபூர்வமாக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
➽    மனுதாரரின் மனுக்களை ஏற்க இயலாது என்றால், அதற்குரிய காரணத்துடன் கூடிய பதிலை மனுதாரருக்கு ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். 
ஆளுநர் அவர்களது ஆணையின்படி அரசு தலைமைச் செயலாளர் இதனை வெளியிட்டு அனைத்து அரசுத்துறைகளுக்கும் அனுப்பியுள்ளார்.
அரசாணையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.08.2018  

ஆற்றை சுத்தப்படுவது குற்றமா.. போலீஸை கண்டித்த கோர்ட்..

ஆற்றை சுத்தப்படுவது குற்றமா.. போலீஸை கண்டித்த கோர்ட்..
நாம் தமிழரை ரிமாண்ட் செய்ய மறுப்பு 

கரூர்: அமராவதி ஆற்றில் அனுமதியின்றி சீமைக்கருவேல மரங்களை அகற்றியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 12 பேரை ரிமாண்ட் செய்ய நீதிபதி மறுத்துவிட்டார். அதோடு அவர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சுமார் 12 பேர் அமராவதி ஆற்றில் தூர் வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். புதிய மற்றும் பழைய ஆற்றுப்பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொக்லைன் மிஷினை கொண்டு இந்த வேலையில் இறங்கினர். அங்கு ஏராளமான குப்பைகளுடன் நிறைய சீமைக்கருவேல மரங்களும் இருந்தன. அதனால் எல்லாவற்றையுமே 12 பேரும் அகற்றிக் கொண்டே வந்தனர்.
விரைந்து வந்த அதிகாரிகள்
விரைந்து வந்த அதிகாரிகள் இந்த தகவல் அறிந்து பொதுப்பணி, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆற்றுப் பகுதிக்கே வந்துவிட்டனர். அனுமதி பெற்றுக் கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டுங்கள் என அவர்களிடம் சொன்னார்கள். ஆனால் 12 பேரும் தொடர்ந்து அனுமதி வாங்காமலேயே சுத்தப்படுத்தி கொண்டு இருந்தனர்.
12 பேரும் கைது
12 பேரும் கைது
இந்த தகவல் புகாராக அளிக்கப்பட்டு, கரூர் டவுன் போலீசார் வந்துவிட்டார்கள். அனுமதியின்றி தூர் வாரிக் கொண்டிருந்த 12 நாம் தமிழர் கட்சியினரையும் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் கூறுவது என்னவென்றால், "இப்படி ஆற்றில் தூர் வாரி, சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு உரிய பதில் இல்லாததால் நாங்களே இப்படி தூர் வார வந்துவிட்டோம்" என்றனர்.
மண்ணில் புதையாதா?
கைது செய்யப்பட்டவர்கள் இப்படி கூறுகிறார்களே என்று அதிகாரிகளிடத்தில் கேட்டால், "கரூர் லைட்அவுஸ் அமராவதி ஆற்றுபாலம் 90 வருஷத்துக்கு மேல் பழமையானது. இப்போதான் ஆற்றில் வெள்ள அபாயம் நீங்கியுள்ளது. இந்த நேரத்தில் பொக்லைன் மிஷினை ஆற்றுக்குள் இறக்கில் மண்ணில் புதைந்துவிடாதா?" என்று கேள்வி எழுப்பினர்.
ரிமாண்ட் செய்ய மறுப்பு
ரிமாண்ட் செய்ய மறுப்பு
கடைசியில் கைது செய்யப்பட்ட 12 பேரும் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, "இவர்கள் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில்தானே ஈடுபட்டனர்? இது ஒரு சமூக சேவைதான். அதனால், அவர்களை ரிமாண்ட் செய்ய வேண்டிய தேவையில்லை. அப்படி ரிமாண்ட் செய்துவிட்டால், இளைஞர்கள் சமூக சேவையில் ஈடுபட என்றுமே முன்வர மாட்டார்கள்" என்று போலீசாரை கண்டித்தார்.
அதோடு ரிமாண்ட் மனுவையும் தள்ளுபடி செய்து 12 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து 12 பேரும் சிறைக்கு செல்லாமல் அவரவர் வீடு திரும்பினர்.
நன்றி : ஒன் இந்தியா தமிழ் செய்திகள் - 27.08.2018

Friday, August 24, 2018

விபத்து நிவாரணத் திட்டங்கள்

தமிழ்நாடு அரசு விபத்து நிவாரண திட்டங்கள் 
விபத்து நிவாரணத் திட்டம்-1
இந்த விபத்து நிவாரணத் திட்டம் ஒன்றின் கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ.10,000/- மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5,000/- ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
பயன் பெறுவதற்கான தகுதியுடையவர்கள்
தமிழ்நாடு அரசாணை 471, நிதித்துறை, (மு..பொ.நி.நி) நாள் 23.5.1989)-ல்
கீழே குறிப்பிடப்பட்ட 44 வகை தொழிலாளர்களின் ஏழை வாரிசுதாரர்கள்.
சலவைத் தொழிலாளி
 காலணித் தொழிலாளி
 தச்சர்கள், மரவண்டி கட்டுவோர்.
 விலங்குகள் இழுத்துச் செல்லும் வண்டியோட்டிகள்
 கருமார், சுத்தியல் கருமார்
 பொன் வேலை செய்வோர் வெள்ளி வேலை செய்வோர்.
 கூடை முடைவோர்.
 கல் தச்சர்கள், கல்லில் குடைவோர், கட்டிடத் தொழிலாளி
 ஓடு தொழிலாளாகள்
 செங்கல் அடுக்குவோர்
 கிணறு தோண்டுவோர்
 கிணறு கட்டுவோர்கள்
 வேளாண்மைத் தொழிலாளர்கள் சிறுவிவசாயிகள் மற்றும் குறு விவசாயிகள் 
       (2.5 ஏக்கருக்கு குறைவாக நில முள்ளவர்கள்)
 பதனீர் இறக்குவோர்
 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள்
 பூச்சி மருத்து தெளிப்பவர்கள்
 பனை மரம் / தென்னை மரம் ஏறுவோர்.
 மீனவர்கள் (கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக அல்லாதவர்).
 கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்.
 டிரக் ஓட்டுபவர்கள்.
 ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள்
 தனியார் கார், வாடகைக்கார் மற்றும் பஸ் ஓட்டுபவர்கள்.
(வாகனங்கள் சொந்தமாக இல்லாதவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.)
 முடி திருத்துபவர்.
 கை வண்டி இழுப்போர்.
 மிதி வண்டி ஓட்டுநர்
 தனியார் துறையிலுள்ள கைத்தறி நெசவாளர்கள்.
 மண்பாண்டம் மற்றும் மண் பொம்மைகள் செய்யும் குயவர்,குல்லாளர் மற்றும் வேளார்.
 வீடுகளில் பணிபுரிவோர்.
 பாம்பு பிடிக்கும் தொழில் ஈடுபடுவோர்.
 சினிமா படப்பிடிப்பின்போது சம்பந்தப்பட்ட சினிமா தொழிலாளர்கள் என்ற வகையில் அமையும் சினிமா நடிகர்கள்.
 தினக்கூலி பெறும் செங்கல் தொழிலாளர்கள்
 லாரிகளில் பாரம்/ ஏற்றி இறக்கும் ஏழைத் தொழிலாளர்கள்
 ஏழைத் தையல் தொழிலாளர்கள்.
 வெள்ளை அடிப்போர் வண்ணம் பூசுவோர் மற்றும் மின்வினைஞர்கள்.
 கிராமிய நடனக் கலைஞர்கள்
 சமையல் தொழில் செய்பவர்கள்.
 மாவு மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
 தனியார் பேருந்தில் பணிபுரியும் நடத்துநர்கள்.
 பந்தல் மேடை, மண்டபம், மாநாடு திருமணப் பந்தல், அலங்கார வளைவுகள் அமைக்கும் தொழிலாளர்கள்
 மலைகளிலுள்ள மரங்கள் மற்றும் பாறைகளில் ஏறி கல்பாசம் கடுக்காய் மற்றும் தேன் போன்ற வனப்பொருள்களைச் சேகரம் செய்யும் தொழிலாளர்கள் 
(கூட்டுறவுச் சங்கத்து உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மட்டும்).
 தனியாருக்குச் சொந்தமான கார், லாரி, டிரக் வேன்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கிளீனர்கள்.
 பிளம்பர்.
 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்.
 ஓவியர்கள்.
மேற்குறிப்பிட்ட 44 வகை தொழில்களில் ஏதாவது ஒன்று செய்பவராக இருக்க வேண்டும். அவ்வாறு மேற்குறிப்பிட்ட 44 தொழில்களில் ஏதாவது ஒரு தொழில் செய்பவராக இருந்து தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது சாதாரணமாக இறப்பு நேரிட்டாலோ நிவாரணம் பெற தகுதியுடையவராவார்.
விண்ணப்பப் படிவம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, முழுமையாக நிரப்பி செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நிரப்பப்பட்ட இந்த விண்ணப்பத்துடன் முதல் தகவல் அறிக்கைஇறப்புச் சான்று சான்றுகளையும் இணைக்க வேண்டும். (மரணமடைந்த தேதியிலிருந்து 1.5 வருடங்களுக்குள் மனு செய்ய வேண்டும்)
விபத்து நிவாரணத் திட்டம்-2
இந்த விபத்து நிவாரணத் திட்டம் இரண்டின் கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ.10,000/- மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5,000/- ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
பயன் பெறுவதற்கான தகுதியுடையவர்கள்
 கட்டிடத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள்
விண்ணப்பப் படிவம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, முழுமையாக நிரப்பி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நிரப்பப்பட்ட இந்த விண்ணப்பத்துடன் முதல்   தகவல்  அறிக்கை.   பிரேதப் பரிசோதனை அறிக்கை, இறப்புச் சான்று சான்றுகளையும் இணைக்க வேண்டும்
(மரணமடைந்த தேதியிலிருந்து 1.5 வருடங்களுக்குள் மனு செய்ய வேண்டும்.)
http://ta.vikaspedia.in  இணையதளத்திலிருந்து
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 24.08.2018