disalbe Right click

Thursday, June 6, 2019

24 மணி நேரமும் இனிமேல் கடை - அரசாணை.


24 மணி நேரமும் இனிமேல் கடையை திறந்து வைக்கலாம்.
தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பைகளை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த அரசாணை 11.07.2019-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இது அமுலில் இருக்கும். இதன்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம்.
அரசாணையின் முக்கிய அம்சங்கள்
⧭ ஒவ்வொரு வேலைக்காரருக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்.
⧭ 'பார்ம் எஸ்' என்ற விண்ணப்பத்தின் மூலம் ஒவ்வொரு வேலைகாரரைப் பற்றிய தகவல்களை உரிமையாளர் பெற வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும், இன்று வேலை செய்பவர்கள் யார்? விடுமுறையில் இருப்பவர் யார் என்ற தகவலை அந்தந்த நிறுவனங்கள் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
⧭ ஒரு வேலையாளை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த முடியும். ஒரு வேளை கூடுதல் நேரம் அவரை வேலைக்கு பயன்படுத்த வேண்டியது இருந்தால், அந்த வேலைக்காரரிடம் எழுத்துப்பூர்வ அனுமதியை நிறுவனம் முன்கூட்டியே பெறவேண்டும்.
⧭ விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை விடகூடுதல் நேரமோ வேலையாட்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளருக்கு எதிராகவோ அல்லது மேலாளருக்கு எதிராகவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
⧭ வழக்கமாக வேலை செய்யும் 8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் வேலையாட்கள் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கி கணக்கில் தான் அந்த பணத்தை நிறுவனங்கள் சேர்க்க வேண்டும்.
⧭ வேலையாட்களுக்கு ஓய்வு அறை, குளியல் அறை,பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் அந்தந்த நிறுவனத்தில் இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 10.30 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது வாரத்திற்கு 57 மணி நேரத்திற்கு அதிகமாகவோ ஒரு வேலைக்காரரிடம் வேலை வாங்கக்கூடாது. 
பெண் வேலையாட்களுக்கான விதிமுறைகள்
⧭ இரவு 8 மணி வரை மட்டுமே பெண்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்
⧭ ஒரு வேளை பெண்கள் இரவில் வேலை செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி எழுதி வாங்க வேண்டும். மேலும், அவர்களுக்கு இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்கள் செய்து கொடுக்க வேண்டும்..
⧭ ஷிப்ட் அடிப்படையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, அந்த நிறுவனத்தின் மெயின் நுழைவு வாசல் வரை வாகன வசதிகளை அந்த நிறுவனம் கட்டாயம் அளிக்க வேண்டும்.
⧭ பாலியல் ரீதியான தொந்தரவுகள் இல்லாமல் இருக்க கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு ஒன்றை அந்தந்த நிறுவனத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
மேலே சொன்ன விஷயங்களில் கவனமாக இருப்பதை நீங்கள் உறுதி செய்தால், 24 மணிநேரமும் கடையை அல்லது நிறுவனத்தை திறக்க அனுமதி வேண்டி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் நேரில் வருகை தந்து உங்களது கடையை அல்லது நிறுவனத்தை ஆய்வு செய்து 24 மணி நேரமும் திறக்க அனுமதிப்பார்கள்.
Image may contain: text

No photo description available.

Related image

No photo description available.


****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 06.06.201

Sunday, May 26, 2019

லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன?

லுக் அவுட் நோட்டீஸ் பற்றி.......
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
லுக் அவுட் நோட்டீஸ்  என்றால் என்ன?
                                     இதனை ஆங்கிலத்தில் Look out Circular  சொல்கிறார்கள். தமிழில் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை என்று அழகாக கூறப்படுகிறது. குற்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் அல்லது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்ற ஒரு நபர் சொந்த நாட்டை விட்டு, வேறு நாட்டுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காகவும்,  வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி விடாமல் இருப்பதற்காகவும் வெளியிடப்படுகின்ற ஒரு அறிக்கை ஆகும்.
யாரால் வெளியிடப்படுகிறது?
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கின்ற ஒருவரின் நடவடிக்கைகளைப் பொறுத்து மத்திய அரசு ஆணையின்படி, அல்லது  CBI என்று சொல்லப்படுகின்ற (Central Bureau of Investigation)   மத்தியப் புலனாய்வுத் துறை தன் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்ற கைதிகளின் நடவடிக்கைகளைப் பொறுத்து,  இந்திய காவல்துறையால் வெளியிடப்படுகின்ற ஒரு அறிக்கை ஆகும்.
யாருக்கு இது அனுப்பி வைக்கப்படுகிறது?
இந்த அறிக்கையானது குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் நமது நாட்டை விட்டு வெளியில் தப்பிச் செல்ல முடியாதவாறு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பன்னாட்டு எல்லைச் சாவடிகள் செயல்படுகின்ற (Immigration Department) குடிவரவு துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும்  அனுப்பி வைக்கப்படும்.
அந்த அறிக்கையில் என்ன விபரங்கள் இருக்கும்?
அந்த சுற்றறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபரது பெயர், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விபரங்கள் இருக்கும். ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முற்படுகையில் மேற்கண்ட அதிகாரிகளால் கைது செய்யப்படுவார்.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கை ஆயுள் காலம் எவ்வளவு?
இதனது ஆயுள்காலம் அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டு காலம் ஆகும். அதற்குப் பிறகு இது காலாவதி ஆகிவிடும். தேவை என்றால், மறுபடி பிறப்பிக்கப்படும்.
இந்த அறிக்கையை சம்பந்தப்பட்டவர் எதிர்க்க முடியுமா?
முடியும். தன்னைப்பற்றிய முழு விபரங்கள் மற்றும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு , வழக்கு தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கைக்கு தடை பெறலாம். ஆனால், வழக்கின் போக்கை கருத்தில் கொண்டு தான் விதித்த தடையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில், வழக்கின் தன்மையைப் பொறுத்து, லுக் அவுட் நோட்டீஸிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் முதலிலேயே மறுப்பதும் உண்டு.



************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.05.2019 

Thursday, April 18, 2019

தேர்தல் விதிகள் – தெரிந்து கொள்வோம்!

தேர்தல் விதிகள் – தெரிந்து கொள்வோம்!
விதி எண்: 49 - M
வாக்கு அளிக்கின்ற அனைத்து வாக்காளரும் 'நான் வாக்களிக்கும் ரகசியத்தை கண்டிப்பாக பின்பற்றுவேன்' என '17 ' படிவத்தில் கையொப்பமிட வேண்டும். இவ்வாறு கையெழுத்திட்டபின் மற்ற நடைமுறையை பின்பற்ற மறுத்தால் அவர் ஓட்டு போட பிரிவு '49 M' கீழ் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறான இனங்களில் '17 ' பதிவேட்டில் குறிப்பு பகுதியில் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படவில்லை; ஓட்டுப்பதிவு நடைமுறை மீறப்பட்டது என குறிப்பிட வேண்டும். அந்தப் பதிவின் கீழ் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் தனது முழு கையொப்பமிட வேண்டும்.
விதி எண்: 49 – N  உதவியாளருடன் செல்லலாம்!
பார்வையற்றோர் மற்றும் உடல் நலிவடைந்தோர் விதி எண்  '49 - N' ன்படி உதவியாளர் ஒருவர் உதவியுடன் வருகை தந்து வாக்கு அளிக்கலாம்.  ஆனால், அந்த உதவியாளர் 18 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். அவரிடம் அவர் அழைத்து வந்த வாக்காளர் சார்பில் பதிவு செய்த ஓட்டின் ரகசியத்தை நான் காப்பாற்றுவேன்! என்றும், அந்த நாளில் வேறு ஓட்டுச் சாவடிகளில் வேறு யாருக்கும் உதவியாளராக நான் செயல்படவில்லை என்றும் உறுதிமொழி பெற வேண்டும்.
விதி எண் : '49 -O'  ஓட்டளிக்காவிட்டால் ?
ஒவ்வொரு வாக்காளர்களும் அடையாளம் சரிபார்க்கப்பட்டு 17 ஏ பதிவேட்டில் கையெழுத்திட அழைக்கப்படுவார்கள். கையெழுத்திட்ட பின்னர் அந்த வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். அடையாளம் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒரு வாக்காளர் '17 ' பதிவேட்டில் கையொப்பமிட்ட பின் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் வாக்குப்பதிவு செய்யும்படி அவரை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக 17பதிவேட்டில் அவரது வரிசை எண்ணுக்கு எதிரே குறிப்புரையில் வாக்களிக்க மறுத்தார்; வாக்களிக்காமல் சென்றார் என பதிவு செய்து அதில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அவரது முழு கையெழுத்திட வேண்டும்.

Image result for வாக்குச்சாவடி
'டெண்டர்டு' ஓட்டு என்றால் என்ன?
ஓட்டுச்சாவடியில் ஒருவர் வாக்கை மற்றொருவர் தவறுதலாக போட்டுவிட்டு சென்றிருந்தால் வாக்களிக்க வந்த வாக்காளரின் அடையாளச் சான்றுகளை சரி பார்த்த பின் ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு வழியே அவரை வாக்களிக்க அனுமதிக்கவேண்டும். ஆனால், அவரை ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. அந்த வாக்காளர் ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டை பெற்று ரப்பர் முத்திரையை பயன்படுத்தி வாக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குச்சீட்டை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் வாக்கு ஆய்வுக்குரிய வாக்கு அல்லது 'டெண்டர்டு ஓட்டு' எனப்படுகிறது.
'சேலஞ்ச்' ஓட் என்றால் என்ன?
வாக்குச்சாவடியில் இருக்கின்ற வேட்பாளர்களின் முகவர்கள் யாராவது வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாளம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தால், எதிர்ப்பு தெரிவித்த முகவர் தேர்தல் அலுவலரிடம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த முகவரின் எதிர்ப்பு குறித்து வாக்குச்சாவரி அதிகாரியால் முழு விசாரணை நடத்த வேண்டும். எதிர்ப்பு நிரூபிக்கப்படவில்லை என்றால் அந்த வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆள் மாறாட்டம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அந்த மோசடி நபரை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
'டெஸ்ட் ஓட்டு' என்றால் என்ன?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் வாக்களித்த சின்னம் தெரியாமல் வேறு ஒரு சின்னமும் பெயரும் தெரிவதாக ஒரு வாக்காளர் கூறினால் அவரிடம் தேர்தல் நடத்தை விதி '49 M - ' துணை விதியின் கீழ் உரிய படிவத்தில் உறுதிமொழியை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன்பின் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடி அலுவலர்களுடன்  வாக்களிப்பு பகுதிக்கு சென்று அந்த வாக்காளரை மீண்டும் முகவர்கள் முன் ஒரு வாக்கை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

Image result for வாக்குச்சாவடி

அந்த வாக்காளர் எந்த வேட்பாளருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தார் என்பதை '17 - ' மற்றும் '17 - சி' பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். ஒரு வேளை அவர் பதிவு செய்த ஓட்டு சரியாக பதிவாகி இருந்தால், வாக்காளர் வேண்டுமென்றே தவறான புகார் கொடுத்ததாக இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 182ன்படி அவர் தண்டனைக்குரியவராவார். அந்த வாக்காளரை உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.
வாக்காளர்  புகார் அளித்தது போல் ஓட்டளித்த சின்னம் மற்றும் நபர் விபரங்கள் ஒளிராமல் வேறு சின்னங்களும் வேட்பாளரும் இயந்திரத்தில் ஒளிர்ந்தால் வாக்குச்சாவடி அலுவலர் ஓட்டுப்பதிவை உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக மண்டல தேர்தல் அலுவலருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
 *********************************************** செல்வம் பழனிச்சாமி, 18.04.2019 

Wednesday, April 17, 2019

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 182 & 211 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?


இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 182 & 211 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
  • இந்திய தண்டணைச் சட்டம்-1860ல் 182-வது பிரிவும், 211வது பிரிவும் பொது ஊழியருக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப்படியான அதிகாரத்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கு கேடு விளைவிக்க பொய்யான தகவலை தருவதைப் பற்றியும், அதற்கான தண்டணையைப் பற்றியும் நமக்குத் தெரிவிக்கின்ற பிரிவுகள் ஆகும்.
  • இந்த இரண்டு பிரிவுகளும் ஒன்றுபோல இருந்தாலும், இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
இந்திய தண்டணைச் சட்டம், 182-வது பிரிவு
  • அது ஒரு பொய்யான தகவல் என்பதையும், அந்த தகவலினால், வேறு ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு நேரிடும் என்பதையும் தாம் நன்கு அறிந்திருந்தும் பொது ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடன் அந்த பொது ஊழியரிடம் பொய்யான தகவலைத்தருவது ஆகும்.
  • உதாரணமாக ஒரு பொது ஊழியரிடம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வேட்பாளர் ஒருவர் குடோனில் மூட்டை, மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒருவர் (அது பொய்யான தகவல் என்பதையும், அதனால், அந்த வேட்பாளருக்கு தொல்லைகள் நேரிடும் என்பதையும் நன்கு அறிந்தே) தகவல் அளிக்கிறார்! என்றால் அவருக்கு இந்தப் பிரிவின் கீழ் ஆறு மாத சிறைத்தண்டணை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
இந்திய தண்டணைச் சட்டம், 211-வது பிரிவு
  • ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடன், அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதும் இல்லை என்று தான் நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் மீது அல்லது பலரின் மீது காவல்நிலையத்தில் பொய்புகார் அளிக்கின்ற அல்லது நீதிமன்றத்தில் வழக்கு எதனையும் தொடுக்கின்ற எவர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகள் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
  • இதில் மரணம், ஆயுள் சிறை அல்லது ஏழு ஆண்டுகள் தண்டணை விதிக்கக்கூடிய ஒரு குற்றம் பற்றி, அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதும் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் அல்லது பலரின் மீது பொய்யான புகார் அளிப்பவரை அல்லது பொய்யான வழக்கு தொடுப்பவர் எவர் ஒருவருக்கும் ஏழு ஆண்டுகள் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
சுருக்கமாகச் சொன்னால்,
  • இந்திய தண்டணைச் சட்டம், 182-வது பிரிவு என்பது அது பொய்யான தகவல் என்பதையும், அதனால், ஒருவருக்கு அல்லது பலருக்கு தொல்லைகள் நேரிடும் என்பதையும் நன்கு அறிந்த ஒருவர், பொது ஊழியரிடம் பொய்யான தகவல் அளிப்பது (மட்டும்) ஆகும்.
  • இந்திய தண்டணைச் சட்டம், 211-வது பிரிவு என்பது அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதுமில்லை என்று நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் அல்லது பலரின் மீது பொது ஊழியரிடம் பொய்யான புகார் அளிக்கும் அல்லது நீதிமன்றத்தில் பொய்யான வழக்கு தொடுக்கும் குற்றம் சம்பந்தப்பட்டது ஆகும்
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.04.2019