disalbe Right click

Tuesday, May 18, 2021

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது...


 அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!
அரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் காலிமனை வாங்கும் போது அதற்கு உண்டான நிதி ஆதாரங்களை சமர்ப்பிப்பது போன்ற விதிமுறைகளை அரசுப்பணியாளர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி எண் 7
அசையும், அசையா மற்றும் விலை மதிப்புள்ள சொத்துக்கள்
(Movable, Immovable and Valuable Property)
(அ) அரசு பணியாளர் எவரும் தங்களுடைய பெயரிலோ, தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ, உரிய அலுவலருக்கு அறிவிக்காமல் குத்தகை அடைமானம் வாங்குதல் விற்பனை பரிசில் பரிமாற்றம் அல்லது பிற வழிகளில் அசையாச்சொத்து எதையும் பெறவோ தீர்வு செய்யவோ கூடாது.
  • அரசுப் பணியாளருடைய நிதி ஆதாரங்களில் இருந்து, அவருடைய குடும்ப உறுப்பினர் எவராலும் பெறப்படும் ஏதேனுமொரு இடம் பெயராச் சொத்துக்கும், அத்தகையதொரு அறிவிப்பு தேவைப் படுவதாகும்.
  • மேலும், இந்நடவடிக்கையானது அரசு பணியாளருடனான அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவர் உடனான நடவடிக்கையெனில் உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புப் பெறப்பட வேண்டும்.
  • இருப்பினும், அரசால் அரசுப் பணியாளருக்கு, வீட்டுமனை உரிமை மாற்றம் செய்யப்படும் நேர்வில் அந்த இடம்பெயராச் சொத்தினை பெற உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புத் தேவையில்லை.
விளக்கம்:-
அசையாச் சொத்தானது தொடர்புடைய அரசுப்பணியாளருடைய நிதி ஆதாரங்களில் இருந்து பெறப்படாத நேரத்தில், கூறு (அ) இன் கீழ் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களால் அசையாச் சொத்துகள் கையகப் படுத்தப்படுதற்கு அல்லது தீர்வு செய்யப் படுவதற்கு அந்த அரசுப் பணியாளர் உரிய அதிகாரிக்கு அறிவிக்கவோ உரிய அதிகாரியின் முன் அனுமதியைப் பெறவோ தேவையில்லை.
[அரசாணை எண். 409 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 24.12.1992
(G.O.Ms.No.409, P&AR dated 24.12.92) இல் சேர்க்கப் பட்டது.]
(ஆ) ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அல்லது விரிவுப்படுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கு அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் உரிய அதிகாரிக்கும் பின்வரும் முறையில் அறிவிக்க வேண்டும்.
  • அரசிடமிருந்து அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் அல்லது முன் பணம் அல்லது பொதுவைப்பு நிதியிலிருந்து பகுதி பெறுகையைக் கொண்டு அல்லது இறுதி பெறுகையைத் கொண்டு வீடு கட்டுவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கு அல்லது சொந்தமாக்கிக் கொள்வதற்கு உண்டான நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன் அவர் இவ்விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை – II -ல் உள்ள படிவம் VI அல்லது VI- இல் நேர்வுக்கேற்ப உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்பினைப் பெற வேண்டும்.
  • கட்டுமான அல்லது விரிவாக்க வேலை முடிந்ததும், அவர் இந்த விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை I-ல் உள்ள படிவம் VII-ல் அதனை நிரப்பி உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். முடிந்தால், இவ்விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை Iல் உள்ள படிவங்கள் VI மற்றும் VII-ல் இந்த விபரங்கள் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், அவ்விவரங்களை அளிக்க முடியாதபோது கட்டடம் எழுப்பப்பட்டுள்ள அல்லது எழுப்ப நினைத்துள்ள மனை பரப்பளவையும், கட்டிடத்தின் மதிப்பீட்டுச் செலவு விவரத்தையும் அரசுப் பணியாளர் குறிப்பிட வேண்டும்.
(இ) கூட்டு நிதியிலிருந்து பிரிக்கப்படாத கூட்டுக் குடும்பச் சொத்துக்களின் பழுதுபார்ப்பு செலவில், இந்து கூட்டு குடும்ப உறுப்பினராகவுள்ள அரசுப் பணியாளரின் பங்கானது ரூ.50,000/-க்கு மிகையாகும் போது அந்த பழுது பார்ப்புகள் தன்னுடைய கவனத்திற்கு வரும்போதெல்லாம் அரசுப் பணியாளர் அவ்விவரத்தை உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
[அரசாணை எண். 39 ப. 9(ம) நி.சீ.துறை
நாள். 9.3.2010
(G.O.Ms.No.39, P & AR dated 9.3.2010) இல் சேர்க்கப்பட்டது.]
  1. அரசுப் பணியாளர் எவரும் அரசு நிலங்களை அத்துமீறி கைப்பற்றக்கூடாது.
  2. A- தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.80,000, B-தொகுதி அலுவலர்களை பொறுத்து ரூ.60,000, C- அலுவலர்களைப் பொறுத்து ரூ.40,000 மற்றும் D-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ. 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள அசையும் சொத்துத் தொடர்பான விற்றல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள் அத்தகைய நடவடிக்கை ஒவ்வொன்றும் நடைபெற்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் அது குறித்த விவரத்தை உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.
  3. மேலும், அந்நடவடிக்கையானது அரசுப் பணியாளருடன் அலுவல் முறைத் தொடர்பு கொண்டுள்ள ஒருவருடனானது என்றால், உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
  4. இருப்பினும், தன்னுடைய அலுவல் சார்ந்த அதிகாரியின் எல்லையில்இருந்து வெளியேறவுள்ள அரசுப் பணியாளர், உரிய அதிகாரிக்குத் தெரிவிக்காமல், தன்னுடைய அசையும் சொத்து எதையும் அவற்றின் பட்டியல்களைப் பொதுவான முறையில் பொதுமக்களிடையே சுற்றறிக்கை விடுவதன் மூலம் அல்லது பொது ஏலத்தில் விற்பனை செய்தவன் மூலம் தீர்வு செய்யலாம்.
விளக்கம் : 1
இந்த உள் விதியின் நோக்கங்களுக்கான ‘அசையும் சொத்து” என்னும் வார்த்தையானது பின்வரும் சொத்துகளை உள்ளடக்கியதாகும்.
அவையாவன:-
  • (அ) நகைகள், ஈட்டுறுதி ஆவணங்கள், பங்குகள், பிணையங்கள் மற்றும் கடனீட்டு ஆவணங்கள்.
  • (ஆ) நீக்கப்பட்டது. காண்க : அரசாணை(நிலை) எண். 434 பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத்துறை நாள். 12.10.1990.
  • (இ) சீருந்து, மிதி இயக்கிகள், குதிரைகள் அல்லது பிற வகை ஊர்திகள்
  • (ஈ) குளிர்பதனிகள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் காணொலி பதிவுக் கருவிகள் (VCR)
அனுமதி வேண்டி விண்ணப்பம்
(2-A) உள் விதிகள் (1) & (2)-ல் குறிப்பிடப்பட்ட ஒப்பளிப்பு / அனுமதி வேண்டி அரசுப் பணியாளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை உரிய அதிகாரியானவர், அவ்விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத கால அளவுக்குள் தீர்வு செய்ய வேண்டும்.
விளக்கங்கள் அல்லது விவரங்கள் எவையேனும் அரசுப் பணியாளரிடம் கேட்கப்பட்டிருந்தால், மேற்கூறப்பட்ட ஆறு மாத கால அளவானது கேட்கப்பட்ட விளக்கங்கள் அல்லது விவரங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும்.
அவ்வாறான ஒப்பளிப்பு அல்லது அனுமதி அளிப்பு ஆணை எதுவும் மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவுக்குள் அளிக்கப்படவில்லை என்றால், மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவு முடிந்தவுடன் உரிய அதிகாரி தனது ஒப்பளிப்பினை வழங்கியதாக அல்லது அனுமதி அளித்ததாக கருதி, அசையும் சொத்தினை பெறலாம் அல்லது விற்பனை செய்யலாம்.
இடம் பெயர் சொத்தினை வாங்கலாம் அல்லது விற்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான/ விரிவாக்கப் பணியினை தொடங்கலாம்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
(3) அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் இவ்விதிகளுக்கு இணைப்பாக உள்ள அட்டவணை- Iல் காணப்படும் I முதல் VI வரையிலான படிவங்களில் பின்வருவன தொடர்பில் முழுமையான விவரங்களுடன் 31.12.1980ஆம் நாளன்று உள்ளவாறான சொத்துகள், கடன் பொறுப்புகள் குறித்த விவர அறிக்கையினை 31.03.1981 ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிப்பதுடன், அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கொருமுறை, அந்த அறிக்கைக்குத் தொடர்புடைய ஆண்டுக்கு மறு ஆண்டு மார்ச் மாதம், 31-ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிக்க வேண்டும்.
  • (அ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது அடையப்பெற்ற அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தமது பொறுப்பிலுள்ள, தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள அசையாச் சொத்து.
  • (ஆ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, அடையப்பெற்ற அல்லது தம் வசமுள்ள பங்குகள், கடனீட்டுஆவணங்கள் மற்றும் வங்கி வைப்புகள் உட்பட ரொக்கம்.
  • (இ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, பெறப்பட்ட அல்லது தம் வசமுள்ள பிற அசையும் சொத்து.
கடன் பற்றிய விபரங்கள்
(ஈ) நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தம்மால் ஏற்பட்ட கடன்கள் மற்றும் பிற கடன் பொறுப்புகள்.
மேலும், அரசுப்பணியாளர் ஒவ்வொருவரும் தாம் எந்தவொரு பணிக்கேனும் அல்லது பணியிடத்திற்கேனும் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் தாம் பணியில் சேர்ந்த காலத்தில் தமக்கிருந்த சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை மேற்கண்ட படிவங்களில் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் மேலே குறிப்பிடப்பட்டவாறு, தமது முதல் நியமனத்தின்போது தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கை அளிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவடையாத நிலையிலும் காலமுறைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் விவர அறிக்கையை அளிக்க வேண்டும்.
இருப்பினும், அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகள் இடைவெளிகளில், ஆண்டு தோறுமான தன்னுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை அளித்த பின்னர், தன்னுடைய வயது முதிர்வு ஓய்வு நாளுக்கு முந்தைய கடந்த ஐந்தாண்டுகளுக்கான தன்னுடைய ஆண்டுதோறுமான சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை இவ்விதிகளின் பின்னிணைப்பாக உள்ள அட்டவணை- I ல் உள்ள I முதல் V வரையிலான படிவங்களில் உரிய அதிகாரிக்கு அளித்தல் வேண்டும்.
இருப்பினும், உரிய அதிகாரியானவர், அரசுப் பணியாளர்களிடமிருந்து அத்தகைய அறிக்கைகள் பெறப்பட்ட நாளிலிருந்து இரு மாதத்திற்குள், அவர்களுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய முந்தைய விவர அறிக்கை நாளுக்கு பிறகு அனுமதியளிக்கப் பட்டது தொடர்பான ஆவணங்களை மறு ஆய்வு செய்து நேர்வுக்கேற்ப முந்தைய ஐந்து ஆண்டுகளில் / ஆண்டு தோறும் அளிக்கப்பட்ட அறிக்கைகளுடன் அவை ஒத்திசைவாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். அரசாணை எண்.149. ப (ம) நி.சீ.துறை நாள்.15.3.1996
(Added vide G.O.Ms.No.149, P&AR (A) Dept., dt.15.3.96)இல் சேர்க்கப்பட்டது)]
எடுத்துக்காட்டு:
1980 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25ஆம் நாளன்று பணியில் சேர்ந்தவர். தமது முதல் நியமன நாளன்று உள்ளபடியான தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கையினை 25.4.1980-க்கு முன்னர் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் அறிக்கைகளை 31.12.1980, 31.12.1985, 31.12.1990 நாளின் படியான சொத்துக்கள், பொறுப்புகள் ஆகியவற்றிற்கான விவர அறிக்கையினை 31.3.1981, 31.3.1986, 31.03.1991ம் நாளன்றோ அவ்வாறே தொடர்ந்து அளிக்க வேண்டும்.
விளக்கம்:-
  • எல்லா அறிக்கைகளிலும் ரூ.50,000/-க்குக் குறைந்த விலை மதிப்புடைய இடம் பெயர் சொத்துகளின் மதிப்புத் தொகையாவும் ஒன்றாகக் கூட்டப்பட்டு ஒட்டுமொத்தத் தொகையாகக் காண்பிக்கப்பட வேண்டும்.
  • துணிகள், பாத்திரங்கள், மண்பாண்டங்கள், புத்தகங்கள் முதலிய அன்றாடப் பயன்பாட்டிற்குரிய பொருள்களின் விலை மதிப்புகள் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை.
  • அரசு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஆதாரங்களின் மூலம் இடம் பெற்ற இடம் பெயர் மற்றும் இடம் பெயராச் சொத்துகளின் விவரங்கள் இவ்விவர அறிக்கையில் சேர்க்கப் பட வேண்டியதில்லை.
அரசாணை எண். 39 ப(ம) நி.சீ. துறை நாள். 09.03.2010),
அரசாணை எண். 409 ப(ம) நி.சீ. துறை நாள். 14.12.1992
(3A) உள்விதி (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள இவ்விவர அறிக்கையினை மறைவடக்க ஆவணமாகக் (secret document) கொள்ள வேண்டும். 10-ஆவது விதியின் காப்புரைகள் இயன்றவரையில் இவ்விவர அறிக்கைக்கும் பொருந்தும்.
சிறப்பு உத்தரவு
(4) அரசு மற்றும் ஆவணக்குழு எதுவும் அல்லது இதன்பொருட்டு அவற்றால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலவலர் எவரும் அல்லது உரிய அதிகாரி ஒருவர் அரசு பணியாளர் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர் எவரும் உடைமையாகக் கொண்டிருக்கும் அல்லது தேடிக் கொண்டிருக்கும் இடம் பெயர் அல்லது அசையாச் சொத்துப் பற்றிய அனைத்து முழு அறிக்கையினை ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுக்குள் அளிக்குமாறு எத்தருணத்திலும் பொது அல்லது சிறப்பு ஆணை மூலம், கேட்டுக் கொள்ளலாம்.
அரசால் அல்லது ஆணைக் குழுவால் அல்லது இதன் பொருட்டு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ள அலுவலரால் அல்லது உரிய அதிகாரியால் வேண்டப்பட்டால், அச்சொத்து அடையப் பெற்றமைக்குரிய வழிவகை அல்லது ஆதாரம் பற்றி விவரம் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்;.
மேலும், குறிப்பிட்ட ஊழல் விசாரணை ஒன்றுக்கு சொத்து விவர அறிக்கைதேவைப்பட்டால் உரிய அதிகாரி, அதனைப் பெற உள்விதியின் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.
விசாரணை அதிகாரி என்பவர்
(5) (அ) இவ்விதியின் நோக்கங்களுக்காக ‘உரிய அதிகாரி” எனப்படுவர்.
(i) துறைத்தலைவர் நேர்வில் ‘அரசு’
(ii) (அ) மாவட்ட ஆட்சியர் அனைவரும்.
(ஆ) மாவட்ட நீதிபதிகள்
(இ) மாவட்டக் குற்றவியல் நீதிபதிகள்
(ஈ) சென்னை மாநகர் உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி
(உ) தலைமை நீதிபதி, சிறுவழக்குகள் நீதிமன்றம், சென்னை.
(ஊ) மாநகர முதன்மை நீதிபதி, சென்னை
(எ) தங்கள் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ‘இ” மற்றும் ‘ஈ” பிரிவைச் சார்ந்த அரசு பணியாளர்களை பொறுத்தவரையில் மாநகரிலுள்ள சட்ட அலுவலர்கள் அனைவரும். (அலுவல் முறையிலான ஒப்படை பெற்றவர் நீங்கலாக)
(iii) மாவட்டங்களிலுள்ள நில அளவை மற்றும் பதிவுருக்கள் துறையில் உள்ள பின்வரும் பணியிட வகைகளைப் பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும், சென்னையிலுள்ள துத்தநாகத் தகடச்சு நிறழ்பட அச்சகம் உள்பட நில அளவை மற்றும் பதிவுருக்கள் இணை இளநிலை இயக்குநர் அலுவலகங்கள் மற்றம் மைய நில அளவை அலுவலகத்தில் உள்ள மேற்குறிப்பட்ட வகைகளைப் பொறுத்தவரையில் நில அளவை மற்றம் நிலவரித் திட்ட இயக்குநர்.
1. இளநிலை வரைஞர்கள், நிலைகள் - I மற்றும் II
2. நில அளவர்கள்
3. துணைஅளவர்கள்
4. இளநிலை உதவியாளர்கள்
5. உதவியாளர்கள்
(iv) மற்ற நேர்வுகளில் தொடர்புடைய துறைத் தலைவர்
இருப்பினும் துறைத்தலைவர், தாம் பொருத்தமெனக் கருதுகின்ற காப்பு அதிகாரங்களைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, இவ்விதியின் கீழ் அமைந்த தன்னுடைய அதிகாரங்களை தமது துறையிலுள்ள இரண்டாம் நிலை அலுவலர்களுள் ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.
(ஆ) அயல் பணிக்கு அல்லது வேறு ஏதேனும் அரசுப் பணிக்கு வேற்றுப் பணி முறையில் அனுப்பப்பட்டுள்ள அரசுப் பணியாளரைப் பொருத்த வரையில் உரிய அதிகாரி என்பது அவ்வரசுப் பணியாளர் முன்னர் பணியாற்றிய தாய்த்துறையை குறிப்பிடுவதாகும்.
(6) அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள அசையாச் சொத்துக்கு மரபுரிமை, வழியுரிமை அல்லது விருப்ப ஆவணம் வாயிலாக உரிமை பெறுமிடத்து அல்லது இவ்வதியில் கருதப்படுகின்றவாறு அந்த அசையாச் சொத்தில் சட்டப்படி உரிமை கொள்ளுமிடத்து அவர் அது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வழக்கமான வழிமுறையில் உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
(7) நீக்கப்பட்டது (அரசாணை நிலை எண்.638 பணியாளர் (ம) நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை (பணி.அ) நாள். 16.5.1980.)
சொந்த மாவட்டத்திற்கு மாறுதல்
(
😎
 அரசுப் பணியாளர் தமது உடைமையாக உள்ள அல்லது தாம் சட்டப்படி உரிமை கொண்டுள்ள அசையாச் சொத்து அமைந்துள்ள மாவட்டத்திற்கு மாறுதல் பெறுமிடத்து அவர் அவ்விவரத்தினைத் தன்னுடைய உடனடி மேலுள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
பதிவேடுகள் பராமரிப்பு
(9) பணியாளர்களின் மந்தணக் கோப்புகளையும் (Personal files) பதிவுருத் தாள்களையும் பராமரிக்கும் அலுவலர், தமது நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசுப் பணியாளர்கள் குறித்து இவ் விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை 2-ல் உள்ள படிவத்தில் பிரிவு வாரியாக பதிவேடுகளைப் பராமரிக்கவேண்டும்.
அப்பதிவேடுகளில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள அசையாச் சொத்துக்களின் விவரங்களைப் பதிவு செய்வதுடன் துணை விதி (3)-ல் குறிப்பிட்டவாறு அரசு பணியாளரால் அடுத்தடுத்து அளிக்கப்படும் விவர அறிக்கைகளின்படி அப்பதிவேட்டிலுள்ள பதிவுகளைத் தக்கவாறு திருத்திக் கொள்ளவும் வேண்டும்.
சரியான தகவல்கள் தரவில்லை என்றால்?
(10) அறிக்கைகளில் தவறான வழிகாட்டும் எந்த முயற்சியும் முழுமையான மற்றும் சரியான தகவல் தருவதில் எந்த தவறுகையும், தொடர்புடைய அரசு பணியாளரை கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தும்.
நிலம் வாங்க அனுமதி மறுப்பு
(11) வருவாய்த் தண்டல் அல்லது நீதி நிர்வாகப் பணியிலுள்ள அல்லது அதற்கு தொடர்பு உடையவருக்கு எந்த வணிக நோக்கத்திற்கும் இந்தியாவின் எப்பகுதியிலும் நிலம் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது.
வரையறைகள்
(12) அசையாச் சொத்தினைக் கையகப் படுத்துதலுக்கும் உடமையாகக் கொள்ளுதலுக்கும் உரிய வரையறைகள், அச்சொத்தின் மீதான எந்த ஒரு உரிமைக்கும் மற்றும் வேறொருவர் பெயரில் அரசுப் பணியாளர் அச் சொத்தினைக் கையகப்படுத்தி உடைமையாக்கிக் கொள்ளுதலுக்கும் பொருந்தும்.
ஆனால் அவை பொறுப்பாட்சியாக நிறைவேற்றுவராக, நிர்வாகியாக அச்சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கு அல்லது உரிமையாக்கிக் கொள்ளுதலுக்குப் பொருந்தாது.
தற்காலிக அரசுப்பணியாளர்கள்
(13) வருவாய் வாரிய நிலை ஆணைகளுக்கு இணக்கமில்லாமல் அரசு நிலம் எதுவும் நிலையாகவோ தற்காலிகமாகவோ பணிக்கமர்த்தப்பட்டுள்ள அரசுப் பணியாளர் எவருக்கும் விற்கப்படவோ குத்தகைக்கு விடப்படவோ கூடாது.
பணியாற்றும் மாவட்டத்திற்குள்...
(14) (அ) அரசுப் பணியாளர், தாம் பணியாற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி வேறெந்த நோக்கத்திற்காகவும் நிலத்தை உடைமை ஆக்கிக் கொள்ள அனுமதிக்கப் படமாட்டார்.
அம்மாவட்டத்தில் இருந்து அவர் மாற்றப்பட்ட பின்னரும், அவருடைய பணி மாற்றல் நாளில் இருந்து ஈராண்டுகள் வரை, அம்மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி பிற நோக்கங்களுக்காக நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அவர் அனுமதிக்கப்படமாட்டார்.
இருப்பினும் உள் விதி (1)-ன் பிரிவுக்கூறு (அ)க்கு உட்பட்டு, அரசுப் பணியாளர் தாம் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த வருவாய் மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டை வாங்கலாம்.
(ஆ) பொதுவாக, அரசு பணியாளர் தாம் பணிபுரியும் வருவாய் மாவட்டத்திற்கு வெளியே அசையாச் சொத்தினை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படலாம்.
ஆனால், அந்த அசையாச் சொத்தினை உடைமையாகக் கொண்டுள்ள மாவட்டத்திற்கு அரசுப் பணியாளர் மாற்றப்படுகையில் உள் விதி (17)-ல் கோரியுள்ள அறிக்கையை அளித்தவுடன் உரிய அதிகாரி அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்றுவார்.
இருப்பினும் ஒரு வருவாய் மாவட்டத்திலிருந்து மற்றொரு வருவாய் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட அரசு பணியாளர், அவர் எந்த வருவாய் மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டாரோ அந்த வருவாய் மாவட்டத்திற்குள்,அவருடைய மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு அல்லாத வேறு நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப் படமாட்டார்.
(இ) வருவாய் வாரியமும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள துறைத் தலைவர்களும், அரசுப்பணியாளர் மாற்றப்பட்டுள்ள மாவட்டத்தில் அவருக்குரிய அசையாச் சொத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கு, அத்துறை தலைவர்களால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதிகளின் நேர்வுகள் பற்றி ஒவ்வோராண்டும் மார்ச் 31-ம் நாளுக்குள் அரசுக்கு ஆண்டு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.
இதே போன்ற ஒப்பளிப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்ட சார்நிலை அலுவலர்களாலும் இவ்வறிக்கைகள் வருவாய் வாரியத்திற்கு அல்லது துறைத்தலைவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
வருவாய் வாரியத்தாலும்; துறைத் தலைவர்களாலும் அனுப்பப்படும் இந்த அறிக்கைகளில், அவர்களுக்குச் சார்நிலையில் உள்ள அலுவலர்கள் தீர்வு செய்த நேர்வுகளைக் குறிப்பிட வேண்டியதில்லை.
(ஈ) கூறுகள்
(அ), (ஆ), மற்றும் (இ)ல் உள்ள ‘வருவாய் மாவட்டம்’ மற்றும் ‘மாவட்டம்’ எனும் சொற்றாடரானது.
  • பதிவுத்துறையிலுள்ள துணைப்பதிவாளர்கள், எழுத்தர்கள், பதிவுரு எழுத்தர்கள், அடிப்படை அரசுப் பணியாளர்கள் ஆகியோரைப் பொறுத்தவரையில் ‘பதிவுத்துணை மாவட்டம்” என்றும் பதிவுத் துறையிலுள்ள மாவட்ட பதிவாளர்களைப் பொறுத்த வரையில் பதிவு மாவட்டம்” என்றும்,
  • ஆயத்துறை அல்லது மதுவிலக்குத் துறையின் தடுப்புக் கிளைகளில் உள்ள துணை ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் ‘ஆயத்துறை அல்லது மதுவிலக்கு வட்டம்” என்றும்,
  • தமிழ்நாடு பொது சார்நிலைப் பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணித் தொகுதிப் பணி உறுப்பினர்களல்லாத பொதுப்பணித்துறை சார்நிலைப் பணி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ‘பொதுப்பணித்துறை உட்கோட்டம்’ என்றும்,
  • தமிழ்நாடு வனப்பணித்தொகுதி மற்றும் தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணிப் தொகுதி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ‘வனக்கோட்டம்” என்றும் பொருள்படும்.
(உ) (அ) முதல் (ஈ) வரையிலான பிரிவுக்கூறுகளில் இடம்பெறாத எதுவும், 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியச் சட்டம் (1961ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 17) அல்லது மேற்குறிப்பிடப் பட்ட வாரியத்தால் நிறுவப்பட்ட எந்தவொரு வீட்டுவசதிப் பிரிவு அல்லது 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்சங்கங்கள் சட்டத்தின் கீழ் (1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 53) பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட சங்கம் வாயிலாக கையகப்படுத்தப் பட்ட வீட்டுமனைகள் உள்ளிட்ட நிலத்திற்கு பொருந்தாது.
(ஊ) குறிப்பிட்ட சொத்தானது அரசுப் பணியாளரால் கட்டப்பட்ட அல்லது மரபுரிமையாகப் பெறப்பட்ட வீடாக இருப்பின், பிரிவுக்கூறு (ஆ)-இல் உள்ள எதற்கும் பொருந்தாது.
(15) மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தான சட்டத்தினால் முறைப்படுத்தப்படும் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அக்குடும்பத்தின் சார்பில் மேலாண் உறுப்பினரால் அசையாச் சொத்து வாங்கப் படுகையில், பொதுவாக இளநிலை உறுப்பினராக உள்ள அரசுபணியாளர், இதற்கான அனுமதியினைப் பெற தேவையில்லை.
ஆனால் கையகப்படுத்துகை ஏதேனும் கர்ணவான் அல்லது எஜமான் பெயரில் செய்யப்பட்டிருந்து உள்ளபடியே அது அவ்வரசுப்பணியாளரின் சொந்தக் சொத்தாகக் கருத இடமளிக்கப் பட்டால் அது தொடர்பில் இவ்விலக்கு பொருந்தாது.
வருவாய் & நீதித்துறை அரசு பணியாளர்கள்
(16) வருவாய் அல்லது நீதித்துறையில் அரசுப் பணியாளர், அரசின் அனுமதியின்றி தாம் அப்போதைக்குப் பணியாற்றும் மாவட்டத்தில் அரசுக்கு சேர வேண்டி நிலுவைகள் காரணமாக அல்லது நீதிமன்ற ஆணைகளின்படி விறப்னைக்குரிய இடம் பெயர் அல்லது அசையாச் சொத்து எதனையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்குதல் இதன்மூலம் தடை செய்யப்படுகிறது.
(17) அரசுப் பணியாளர் தன்னுடைய சொந்த கணக்கில் அல்லது பொறுப்புஆட்சியர் நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி அல்லது கோயில் மிராசுதாரர் எனும் முறையில் உடைமையாகக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட அல்லது அவரது மனைவி அல்லது அவருடனுள்ள குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் அல்லது எவ்வகையிலேனும் அவரைச் சார்ந்தவராக உள்ள எவரேனும் ஒருவர் பெயரி; உரிமையாக் கொள்ளப் பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ல்லத அவர்களால் மேலாண்மை செய்யப்படும் அசையாச் சொத்து விவரம் அனைத்தும் ஆண்டு விவர அளிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தானம் சட்டத்தைப் பின்பற்றும் அரசுப் பணியாளர் நேர்வில் அவரது வாழ்க்தை; துணைவரால் உடைமையாக கொள்ளப்பட்ட அசையா சொத்தானது விவர அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இணையத்திலிருந்து
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 16.05.2021

உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?

UAN என்றால் என்ன? 
உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?

UAN என்றால் என்ன? உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது.
  • பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் பங்களிப்பாக செலுத்தப்படும்.
  • இந்த பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகையின் பேலன்ஸ் என்ன என அறிந்துக்கொள்ள UAN (Universal Account Number) என் முக்கியமான ஒன்றாக உள்ளது.
  • பொதுவாக UAN மாத சம்பளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அப்படியில்லை என்றால் பிஎஃப் எண், ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தி UAN எண்ணை கண்டறிவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
  • 1. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் உறுப்பினர்கள் சேவை வழங்கும் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • 2. மேலே குறிப்பிட்டுள்ள இணைய பக்கத்திற்கு சென்று வலது பக்கம் உள்ள Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 3. Know Your UAN என்ற பக்கத்திற்கு சென்ற உடன் பிஎஃப் எண், ஆதார் எண் அல்லது பான் எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், captcha போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
  • 4. பின்னர் Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 5. அடுத்த பக்கத்தில் I Agree என்பதை தேர்வு செய்து மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • 6. OTP எண்ணை பதிவிட்டு ‘சரிபார்க்கவும் (Validate)’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் UAN மற்றும் அதற்கான கடவுச்சொல்லும் எஸ்எம்எஸ் மூலம் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கு குறித்த விவரங்கள் மற்றும் பேலன்ஸ் என்ன என்பது குறித்த விவரங்களை சரிபார்க்க முடியும்.
  • நன்றி : நியூஸ் 18 சானல் - 15.04.2019
    https://tamil.news18.com/.../what-is-my-uan-how-to-find...


 

லஞ்ச ஒழிப்புத்துறை - புகார் - விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை - புகார் - விசாரணை

நம்மில் சிலர் ”லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததாகவும், அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள்.
அவர்கள் யார் மீது என்ன புகார் அனுப்பினார்கள்? எந்த முறையில் புகார் அனுப்பினார்கள் என்பதும், அவற்றின் மீது எதனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியாது.
அதனால், பொதுமக்கள் அளிக்கின்ற புகாரினை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எப்படி கையாள்கின்றனர் என்பது பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுவது என்று தீர்மானித்து, எனக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் இந்த பதிவை இங்கு வெளியிடுகிறேன்.
பொதுமக்கள் அளிக்கின்ற புகார்
  • உங்களில் ஒருவர் அரசு அதிகாரியின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளிப்பதாக இருந்தால், 293, எம்.கே.என். ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016 என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்ற லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரடியாக பதிவுத்தபால் மூலம் அதனை அனுப்புங்கள்.
  • ஏனென்றால், உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நீங்கள் நேரடியாக சென்று புகார் அளித்தாலும், அது சென்னையிலுள்ள இயக்குநர் அலுவலகத்திற்கு அவர்களால் அனுப்பப்பட்டு அவர் எடுக்கின்ற முடிவின்படி அதன்பிறகே உத்தரவு அவர்களுக்கு பிறப்பிக்கப்படுகிறது.
  • ஆகையால், நீங்கள் நேரடியாக சென்னைக்கு புகாரை அனுப்பினால், காலதாமதத்தை தவிர்க்கலாம்.
  • புகார்மனுவில் இருக்கின்ற உங்களது முகவரி மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கண்டிப்பாக உங்களது செல்போன் எண்ணை அதில் குறிப்பிட வேண்டும். இரண்டு தொடர்பு எண்கள் இருந்தால், அவற்றையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
  • புகாரில் உங்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிக்கு புகார் நகலை அனுப்பும் தவறை கண்டிப்பாகச் செய்யாதீர்கள். சிலர் இதனை தைரியம் என்றும், இதனால் அந்த அதிகாரி பயப்பட்டு தன்னைத் தேடி வருவார் என்றும் தவறாக நினைக்கிறார்கள்.
  • அது அந்த அதிகாரிக்கு விழிப்புணர்வை தோற்றுவிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உங்கள் மீது ஒரு கெட்ட அபிப்பிராயத்தையும் ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிடும்.
  • புகார்தாரர் கடைசி வரையிலும் நமக்கு ஒத்துழைப்பு அளிப்பார்! என்று உங்களது ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது.
  • நீங்கள் அனுப்புகின்ற புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியின் பெயர், அவரது பதவி, அவர் பணியாற்றுகின்ற அலுவலக முகவரி ஆகியவற்றை மிகத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • அவர் செய்துள்ள குற்றம் பற்றியும், அது நடைபெற்ற காலம், இடம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு அதற்குண்டான ஆவண நகல்களையும் புகாருடன் வரிசையாக இணைக்க வேண்டும்.
  • ஆதாரம் இல்லாமல் புகார் அனுப்பினாலோ, யூகத்தின் அடிப்படையில் புகார் அனுப்பினாலோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
முதல் நிலை விசாரணை (Preliminary Enquiry):
  • உங்களது புகார் இயக்குநர் கையில் கிடைத்தவுடன் அவர் அதனை படித்து பார்த்து, புகாருடன் இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, குற்றம் நடைபெற்று இருக்கிறது; நாம் நடவடிக்கை எடுக்கலாம்! என்று திருப்தி அடைந்தால், உங்களது புகார் நகலை மட்டும் நீங்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைப்பார்.
  • அது கிடைத்தவுடன், உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து உங்களது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களை ஒரு நாளில் விசாரணைக்கு அழைப்பார்கள்.
  • அவர்கள் அழைத்தவுடன் நீங்கள் உடனே விசாரணைக்கு சென்றால், அவர்களுக்கு உங்கள் மீது முதற்கட்ட நம்பிக்கை பிறக்கும் என்பதை மறக்காதீர்கள்.
  • அந்த விசாரணையில் உங்கள் புகார் நகலை காண்பித்து, நீங்கள்தான் புகார்தாரரா? இது நீங்கள் அனுப்பிய புகார்தானா? என்பதை உங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
  • ஏனென்றால், யாரோ ஒருவரது உண்மையான பெயர், முகவரி, செல்போன் எண்னை குறிப்பிட்டு, பொய்யான கையெழுத்து போடப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
  • இந்த விசாரனை முடிந்தவுடன் அவர்களால் அது பற்றிய அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்படும்.
விரிவான விசாரணை (Detailed Enquiry):
  • முதற்கட்ட விசாரணை முடிந்து அதில் திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டவுடன் விரிவான விசாரணைக்கான பணிகள் ஆரம்பமாகும்.
  • உதாரணமாக ஒரு அதிகாரி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என்பது பற்றிய புகாராக இருந்தால், அவரது பணியிடத்து அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி அவர் தனது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்து அளித்துள்ள அறிக்கைகளை பெறுவார்கள்.
  • பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பி அவரது பெயரில், அவரது நெருங்கிய உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கைகளை பெறுவார்கள்.
  • அதனையும், தாங்கள் புகாரில் அனுப்பிய ஆவணத்தையும் ஒப்பிட்டு பார்த்து அதற்கு தகுந்தாற்போல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021 

பிழை திருத்தப் பத்திரம்

பிழை திருத்தப் பத்திரம்
சொத்து சம்பந்தமான பத்திரங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஆவணங்களில் பிழை திருத்தப் பத்திரமும் ஒன்றாகும்.
ஆங்கிலத்தில் இதனை Amendment Deed என்றும் Rectification Deed என்றும் சொல்கிறார்கள்.
சொத்துக்களை வாங்குபவர்கள் அந்த சொத்து குறித்த பத்திரத்தை தாய்பத்திரத்துடன் ஒப்பிட்டு, வரிக்கு வரி மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும்.
எவற்றை சரிபார்க்க வேண்டும்?
  • பத்திரத்தின் முகப்பில் சொத்தின் மதிப்பு
  • சொத்தின் வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்றாற்போல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளதா?
  • நாள், மாதம் மற்றும் வருடம்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது தந்தையார்/கணவர் பெயர்
  • ஆதார் அட்டை எண்/வேறு அடையாள அட்டை எண்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது முகவரிகள்
  • தாய்பத்திரத்தில் உள்ள ஆவண எண், நாள், மாதம், வருடம் மற்றும் சார்பதிவகம் பெயர்
  • சொத்து இருக்கின்ற ஊரின் பெயர்
  • சொத்தின் பட்டா எண் மற்றும் சர்வே எண்கள்
  • சொத்தின் பரப்பளவு
  • சொத்தின் நான்குபுறமும் உள்ள அளவுகள்
  • சொத்தின் நான்குபுறமும் உள்ளவர்களின் பெயர்கள்
  • சொத்தின் மின் இணைப்பு எண்
  • சொத்தின் குழாய் இணைப்பு எண்
  • பவர் பத்திரம் மூலமாக அந்த சொத்தை வாங்கினால், அது சம்பந்தமான ஆவணங்கள்
பாத்து பாத்துத்தான் வாங்குனேன்;
இது மட்டும் எப்படியோ கண்ணுக்கு சிக்கல!
  • இப்படி பல பேர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அது போன்ற நேரங்களில் என்ன செய்வது?
  • சிறிய தவறுகளான கதவு எண், மின் இணைப்பு எண், குழாய் இணைப்பு எண், சர்வே எண், பட்டா எண், சொத்தின் நான்கு புறமுள்ள அளவுகள், திசைகள், ஊர் பெயர் மற்றும் தனது பெயரில் உள்ள தவறுகளை சாதாரணமாக பிழை திருத்தல் பத்திரம் மூலமாக திருத்தி விடலாம்.. எந்த பிரச்சனையும் வராது. ஒரு 1000 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
பிரச்சனையுள்ள திருத்தங்கள் என்ன?
  • சொத்தின் பரப்பளவை குறைத்து எழுதிவிட்டால், குறைத்து எழுதப்பட்ட பரப்பளவிற்காக மறுபடியும் பத்திரங்கள் வாங்க வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்தால் அவரையும் அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • அவர் உயிருடன் இல்லை என்றால், அவரது வாரிசுகளை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • ஒரு வேளை அவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லை என்றால், அவரது இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு ஆகியவர்களை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்து கையெழுத்துப் போட வரமாட்டேன் என்றாலோ, அவர் இறந்த பின் அவருக்கென்று வாரிசுகள் (இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு உள்பட ) யாருமே இல்லை என்றாலோ நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
  • இது போன்ற நிலையில் சொத்தை வாங்கியவருக்கு அது மிகுந்த மன உளைச்சலையும், செலவையும் அளிக்கும்.
ஆகவே சொத்துக்களை வாங்கும்போதே மிக கவனமுடன் வாங்குங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021
 

Sunday, February 28, 2021

அரசு மருத்துவமனை - சிகிச்சை - காயம் - மரணம் - இழப்பீட்


 அரசு மருத்துவமனை - சிகிச்சை - காயம் - மரணம் - இழப்பீடு!

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சிறுமியின் இறப்பு; தாயாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!
  • தமிழ் செல்வி என்பவரின் மகளின் பெயர் சங்கீதா. எட்டு வயது கொண்ட இந்த சிறுமி டான்சில் எனப்படும் (தொண்டையில் சதை வளர்ச்சி) நோயால் அவதிப்பட்டு வந்தார்.
  • சிகிச்சைக்காக கடந்த 07.04.2016 அன்று விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்படுகிறார்.
  • அறுவை சிகிச்சை செய்வதற்காக சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறது.
  • துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட சில சிக்கல்களினால், அந்த சிறுமி மதுரையிலுள்ள ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
  • கோமா நிலைக்கு சென்ற அந்த சிறுமி 05.07.2016 அன்று இறந்துவிடுகிறார்.
  • மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகள் இறந்ததாக தமிழ்செல்வி குற்றம் சாட்டி 20 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்கிறார்.
  • நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி, மருத்துவர்களின் மீது தவறு இல்லை என்று ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ( WP(MD)No.2721 of 2017 ) வழக்கை கனம் நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்கள் விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவு
  • அரசு மருத்துவமனையில் எதிர்பாராமல் நிகழ்கின்ற காயம், மரணத்திற்கு மருத்துவ அலட்சியம் காரணமாக இல்லாவிடினும் அரசு அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
  • G.O.(M.s) No:395 - 04.09.2018 ன்படி உருவாக்கப்பட்டுள்ள கார்பஸ் நிதியில் இருந்து இறந்து போன சிறுமியின் தாயாரான தமிழ்செல்விக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை எட்டு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்
  • என்று 01.02.2021 அன்று தீர்ப்பளித்துள்ளார்.
அந்த தீர்ப்பின் நகல் பெற கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.