disalbe Right click

Thursday, January 26, 2017

நீட் நுழைவுத்தேர்வு

Image may contain: 2 people, people sitting and text

நீட் நுழைவுத்தேர்வு

மருத்துவம் படிக்க ஆர்வமா? ‘நீட்’ தேர்வுக்குத் தயாராகுங்கள்!

இதோ… பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள். அடுத்து என்ன படிக்கலாம் என அவர்களோடு சேர்ந்து பெற்றோரும் யோசிக்கும் நேரம் இது. 
பெரும்பாலானோரின் கனவு மருத்துவக் கல்விதான். ஆனால், அதிக மதிப்பெண் மட்டுமே போதாது என்கிற நிலை இன்று உருவாகியுள்ளது.  சி.பி.எஸ்.சி நடத்துகிற `நீட்’ தேர்வு (National Eligibility cum Entrance Test) எழுத வேண்டும். இதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றால்தான் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியும்.

`இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்வ தற்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்’ என்கிற கோரிக்கையின் அடிப்படையில், இத்தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய 
அரசு கடந்த ஆண்டு இதைச் சட்டமாக்கியது. தமிழக அரசின் கோரிக் கையை ஏற்றுக் கடந்த ஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வு இல்லாமலே தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மீண்டும் தமிழக அரசு மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி, `நீட்’ தேர்வில் இருந்து விலக்களிக்க கேட்டுவருகிறது. ஆனால், கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் கறாராக `நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கு மாணவர் களைச் சேர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டது. ஆகவே, இந்த ஆண்டு `நீட்’ தேர்வின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் சேர முடியும் என்பதையும், `நீட்’ தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கவுன்சலிங்கில் கலந்துகொள்ள முடியும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

இதற்கேற்ப, `நீட்’ தேர்வு தமிழ்மொழி யிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசின் சுகாதாரத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அரசுப் பள்ளிகளில் `நீட்’ தேர்வுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்று  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொல்லி இருக்கிறார்.

நீண்ட காலமாக `நீட்’ தேர்வு குறித்து தமிழ கத்தில் குரல் கொடுத்துவரும் மருத்துவரும், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ரவீந்திரநாத்திடம் இதுபற்றிப் பேசினோம். “தமிழ்நாட்டில் ஏற்கெனவே மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதே அடிப்படை யில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம். 

ஆனால், மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி வந்தது. இதைத்தவிர, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் கீழ் மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் என ஒவ்வொன்றும் தனித்தனியே நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கை நடத்தின. இதன் மூலம் மாணவர் கள் பல நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவ தும், மன அழுத்தத்துக்கு உள்ளாவதுமாக இருந்தார்கள். அதோடு, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், அவர்களுக்கு உகந்த வகையில் கட்டணம் நிர்ணயித்து இருந்தார்கள்.

இதனை எல்லாம் கருத்தில்கொண்டே பல நுழைவுத்தேர்வுகளுக்கு மாற்றாக மத்திய அரசு நடத்தும் ஒரே நுழைவுத்தேர்வே சரி யானது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு இருக்கிறது. `நுழைவுத்தேர்வே நடத்தக்கூடாது’ என்று மீண்டும் கோரிக்கை வைத்தால், அது பின்னோக்கிச் செல்வதா கவே அமையும்.

தமிழக மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பிடிக்க இந்த நுழைவுத் தேர்வு சரியான வழிதான். தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் சேர முடியும். புகழ்பெற்ற எய்ம்ஸ் கல்வி நிறுவனம், ராணுவ மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் என 24 ஆயிரத்துக்கும் அதிக இடங்களில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஆண்டு ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் `நீட்’ தேர்வு எழுதி இருக் கிறார்கள். இதில் நான்கு லட்சம் பேர் கட் ஆஃப் மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றிருக் கிறார்கள்.

தமிழ்வழி கற்கும் மாணவர்கள் தமிழில் `நீட்’ தேர்வு எழுதுவதன் மூலம் எளிதில் அதை எதிர்கொள்ள முடியும். என்றாலும், தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பழைய பாடத்திட்டத்தையே படித்து வருகிறார்கள் இதனை நிச்சயம் மாற்ற வேண்டும். `நீட்’ தேர்வில் மத்திய அரசு பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.சி) இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதால், அதற்கு இணையான பாடத்திட்டம் தமிழ்நாட்டிலும் வேண்டும்.

`நீட்’ தேர்வால், ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்களும் பின்னடைவும் இருந்தாலும், ஓரிரு ஆண்டுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள்” என்று நம்பிக்கை அளிக்கிறார் ரவீந்திரநாத்.

நீட் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகி, மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறக்கூடும். பொதுத்தேர்வுக்குப் பின்னர், இரண்டு மாத கால அவகாசமே உள்ள சூழலில் `நீட்’ தேர்வுக்கு தயாராவது  எப்படி?

மொத்தம் 180 கேள்விகள். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 45 கேள்விகள் இடம்பெறும். சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்கள். தவறு எனில் ஒரு மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும். அதனால் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்வது அவசியம்.

ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட நூல்களை ஆழ்ந்து படித்துக்கொள்ள வேண்டும். ப்ளஸ் ஒன் பாடப்புத்தகத்தில் இருந்து 50% கேள்விகளும், ப்ளஸ் டூ பாடங்களில் இருந்து 50% கேள்விகளும் கேட்கப்படுகின்றன. என்.சி.இ.ஆர்.டி (NCERT) வெளியிட்டுள்ள ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ புத்தகங்களை ஆழ்ந்து படித்துக்கொள்ள வேண்டும். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

கடந்த ஆண்டு கேள்வித்தாள் மற்றும் விடைகள் உள்பட இணையத்தில் `நீட்’ தேர்வுக் கான மாதிரி கேள்வித்தாள்கள் நிறையவே  இருக்கின்றன. இவற்றை டவுன்லோடு செய்து மாதிரித்தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதன் மூலம் எந்தெந்தப் பிரிவுகளில் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை அறிந்து, கூடுதல் கவனம் செலுத்த முடியும். கேள்விகளை சற்று நீளமானதாகவும், கணக்கீட்டே பதிலை தேர்ந்தெடுக்கும் வகையிலும் அமைத் திருக்கிறார்கள். பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் மாதிரித்தேர்வு நடத்துகின்றன. அதில் கலந்துகொண்டு நீங்கள் எந்த அளவுக்குத் தயாராகி இருக்கிறீர்கள் என்பதையும் சோதித்துக்கொள்ளலாம்.

  படிக்கும்போதே குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிப்புகளை தேர்வுக்குச் செல்வதற்கு ஒரு வாரம் முன்பு திரும்பப் பார்க்கும்போது நிச்சயம் உதவும்; நேரமும் மிச்சமாகும்.

`நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் குறிப்பிடவேண்டி இருக்கும். அதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனே விண்ணப்பித்துப் பெறுவது அவசியம்!

அகில இந்திய மருத்துவக் கல்லூரியில் இரண்டாயிரம் ரூபாய் கட்டணம், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 12 ஆயிரம் ரூபாய் கட்டணம். சுயநிதி கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் மட்டுமே. ஆனால், பல்வேறு கட்டணங்கள் வழியாக ரூபாய் பத்து லட்சம் முதல் பதினைந்து லட்சம் வரை கல்விக் கட்டணம் பெறப்படுகிறது.

நன்றி : அவள் விகடன் - 24.01.2017
*****************************************************************
’நீட்’ தேர்வை 3 முறை எழுதலாம்!

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான ’நீட்’ தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூ.ஜி.சி., தெரிவித்துள்ளது.
டில்லியில் நேற்று நடந்த யூ.ஜி.சி., ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். 

பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் ’நீட்’ தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். 

யூ.ஜி.சி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.01.2017

Wednesday, January 25, 2017

குடியரசு தினம் - வரலாறு

No automatic alt text available.

குடியரசு தினம் - வரலாறு

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், குடியரசு தினம் ஆகும்.

ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர்.
அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.
ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்த பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர்.
அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர்.
நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள்.
குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது.
‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது.
ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது.
முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்!!



தவறான சொத்து விபரம் தந்த கவுன்சிலர்

Image may contain: 1 person, text

தவறான சொத்து விபரம் தந்த கவுன்சிலர் 

நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு உத்தரவு

சென்னை: 'சொத்துக்களே இல்லை என, வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்த, முன்னாள் கவுன்சிலர் மீது, மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த, பொன்.தங்கவேலு தாக்கல் செய்த மனுவில், 'சென்னையில், 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு, தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்' என, கோரியிருந்தார்.மனுவில், 196வது வார்டு கவுன்சிலர் அண்ணாமலையின் சொத்துக்களுக்கு, சொத்து வரி மிக குறைவாக விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியிருந்தார். 

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள், தேர்தலின் போது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த சொத்து விபரங்களை தாக்கல் செய்யும்படி, உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

'தனக்கு சொத்து ஏதும் இல்லை' என, வேட்பு மனுவில், அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். ஆனால், 12 சொத்துக்கள் இருப்பதாக, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கை, தலைமை நீதிபதியின் விசாரணைக்கு, நீதிபதி கிருபாகரன் அனுப்பி வைத்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

தேர்தல் அதிகாரியிடம், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அண்ணாமலை தாக்கல் செய்த ஆவணங்களில், அசையா சொத்துக்கள் இல்லை என, குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், தவறுதலாக அவ்வாறு குறிப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஏராளமான சொத்துக்களை வைத்திருந்தும், ஒன்றுமே இல்லை என, கூறியிருப்பதை நிராகரிக்கிறோம். சொத்து விபரங்களை தெரிவிக்காமல் இருந்துள்ளார். எனவே, சொத்து விபரங்களை தெரிவிக்காமல் இருந்ததற்காக, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேட்பு மனுவில் மட்டும் சொத்து விபரங்களை தெரிவிக்க மறந்தாரா அல்லது வருமான வரி துறைக்கு தாக்கல் செய்த கணக்கிலும் மறந்தாரா என்பதை, வருமான வரித்துறை சரிபார்க்க வேண்டும். அனுமதியின்றி, அவர் மேற்கொண்ட கட்டுமானங்களை அகற்ற வேண்டும்; அதற்கு போலீசார் உதவ வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை, மார்ச், 2க்கு தள்ளி வைத்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.01.2017

Tuesday, January 24, 2017

கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!

கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
கடன் அளிக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் எப்படி வட்டியைக் கணக்கிடுகிறது என்பதைக் கவனிப்பது முக்கியம். அதாவது, மொத்தக் கடன் தொகைக்கும் ஆரம்பத்திலேயே வட்டியைக் கணக்கிடும் முறையில் வட்டி கணக்கிடப்பட்டால் உங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படும். இந்த முறையை ஆங்கிலத்தில் ஃப்ளாட் ரேட் (Flat Rate) என்பார்கள்.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கு வட்டியைக் கணக்கிடுகிறார்களா அல்லது கடன் தொகைக்கு ஆண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒருமுறை, காலாண்டுக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒருமுறை என எந்த முறையில் கணக்கிடுகிறார்கள் என்று பாருங்கள். 
உதாரணமாக, ஒருவர் 10 லட்சம் ரூபாய் கடன் (14% வட்டி) வாங்கி, அதனை 5 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். 
இதில் ஃப்ளாட் ரேட்டில், (10,00,000 x 0.14 x 5) + 10,00,000) / 60= 28,333. மாதத் தவணை 28,333 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். 
இதுவே மாதம் ஒரு முறை என்கிற ரீதியில் வட்டியைக் கணக்கிட்டால் மாதத் தவணை ரூ.23,270 கட்ட வேண்டும்.
 ஃப்ளாட் ரேட்டுக்கும் மாதம் ஒரு முறை வட்டியைக் கணக்கிடும் முறைக்கும் வட்டி வித்தியாசம் ரூ.5,063. எனவே, இதைத் தேர்வு செய்யக் கூடாது. 
மாதம் ஒரு முறை வட்டி கணக்கிடுவதே லாபகரமாக இருக்கும். இதைவிட லாபகரமாக தினசரி வட்டிக் குறையும் முறை இருக்கும். 
எனவே, எந்தக் கடனாக இருந்தாலும் அதற்கான வட்டியை எந்த முறையில் கணக்கிடுகிறார்கள், மாதத் தவணை எவ்வளவு என்பதை அறிந்து வாங்கினால், வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். 
வாகனக் கடன், நுகர்வோர் பொருட்களை கணக்கிடும்போது ஃப்ளாட் ரேட் முறையைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் உஷாராக இருப்பது நல்லது.
சேனா சரவணன்
நன்றி : நாணயம் விகடன் - 22.01.2017

Monday, January 23, 2017

நான் கூவம் பேசுகிறேன்

No automatic alt text available.

நான் கூவம் பேசுகிறேன்

கண்நீர் கதைகள்…நீரின் வேர் தேடும் பயணம்!
‘‘இக்கோலம் காண்பதற்கோ தக்கோலம் தனிலிருந்து யான், தப்பாக பிறப்பெடுத்தேன்?’’ என்ற கேள்வியுடன்தான் என் கதையைத் தொடங்க வேண்டும். ‘‘இப்போது என் பெயர் கூவம். பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்கப் பதிவேடுகளிலும் அதுவே என் பெயர். ஆனால், எனக்கு ‘கூகம்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.
பிறப்பு
சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில், திருவூறல் என்றும், தக்கோலம் என்றும் வரலாற்றுக் குறிப்புகளில் பெருமையாகச் சொல்லப்படும் இடத்தில்தான் சிறு மலையும், பூமிப் பாறையும் இணைகிற இடத்தில் பிறப்பெடுத்தேன்… இதற்கு மேல் என் அடிமுடி ஆராய்ச்சி எல்லாம் வேண்டாமே!
பெருமை
திருவள்ளூர் மாவட்டத்தின் பேரம்பாக்கம் வழியாகச் சென்றால், கூவம் கிராமத்தை அடையலாம். கி.பி ஏழாம் நூற்றாண்டில் இங்கே அருள்மிகு திரிபுராந்தக சுவாமி திருக்கோயில் உருவானபோது, இரண்டாம் ராஜேந்திரன், மூன்றாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன் என்று பல அரசர்கள் என்னைக்கொண்டாடினர்.
கோயிலைக் கட்டியதற்கும், என்னைக் கொண்டாடியதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். சம்பந்தம் இருக்கிறது. என்னை அவர்கள் ‘சிவாம்சம்’ நிறைந்த நதியாகவே பார்த்தனர்; என்னைச் சிறப்பித்துக் கூறும் பொருட்டே இங்கே திருக்கோயிலையும் நிறுவினர்.
என்னை ‘இறை சக்தி’ என, நான் சொல்ல வரவில்லை. நான் மிகவும் அற்புத மூலிகை நீரைக்கொண்ட நதி… பல நோய்களைத் தீர்க்கும் இயற்கையின் சொத்து… என்னை முழுமையாகப் பயன்படுத்தி நீங்கள் குறைவின்றி வாழுங்கள் என்றுதான் சொல்ல வந்தேன். ‘கூவத்தில் குளித்தால் குஷ்டம் போகும்’ என்ற வழக்குச் சொல்லே இந்தப் பகுதியில் இருந்து வந்தது. குஷ்டம் போனதோ, இல்லையோ அது வேறு விஷயம்… என்னில் இன்னும் என்னென்ன சக்திகள் இருக்கின்றன என்று அறிய என் நீரோட்டத்தைச் சேகரித்து நீங்கள் ஆய்வுக்கு அல்லவா அனுப்பி இருக்க வேண்டும். சாக்கடை நீர் செல்லும் பாதையாக அல்லவா என்னை ஆக்கிக்கொண்டீர்கள்.
‘முந்தினான் மூவருள் முதல்வனாயினான் கொந்துலா மலர்ப்பொழிற் ‘கூகம்’ மேவினான் அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே!’
இப்படி என்னைப் பற்றி மூன்றாம் திருமுறையில் திருஞான சம்பந்தர், தேவாரத்தில் ஏராளமான எண்சீர், அறுசீர் விருத்தங்களில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
என்னில் வளர்ந்த பறவைகளும், கால்நடைகளும்!
சீரும் சிறப்புமாக என்பார்களே, அதுபோல் ஆனந்தப் பிரவாகமாய் ஊற்றெடுத்து எனக்கென்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து என் பயணத்தை இங்கிருந்துதான் தொடங்கினேன். என் கரைப் பகுதிகளில் செழுமையுடன் ஓங்கி வளர்ந்த புல்வெளிகளையும், பசுந்தழைகளையும் கால்நடைகள் உண்டு கொழுத்தன. என் மடிமீது துள்ளிய விதவிதமான மீன் இனங்களை உண்டு பசியாற சிறகினங்கள் கண்டம் விட்டு கண்டம் வந்தன.
அரசியலில் சிக்கினேன்!
ஒருநாள், திடீரென தமிழ்நாட்டு அரசியலில் என்னைத் திரும்பிப் பார்த்தனர். என்னைச் சுத்தப்படுத்தி, படகுவிட்டு, கரைகளில் செடி, கொடிகள் நட்டு லண்டனின் ‘தேம்ஸ்’ நதிபோல ஆக்கிக் காட்டுவதாக என் கரையில் நின்றபடி ஆளாளுக்குச் சூளுரைத்தனர். நான் அவர்கள் சொல்வதை ‘தேமே’ என ஆர்ப்பரிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால அரசியலில் சிக்கி, நான் பட்ட அடி இப்போதிருக்கும் நிலையைவிட அதிகமான நாற்றம் என்றே சொல்லலாம். இதில் எனக்கென்ன தயக்கம்? இனிமேல் இழக்க என்ன இருக்கிறது?
என் எல்லையின் தூரம் இது!
கொசஸ்தலை ஆறு என்று கேள்விப்பட்டிருப் பீர்கள்… இதே திருவள்ளூர் மாவட்டத்தில் என்னோடு லேசாக கலந்து அது ஓடுவதைப் பார்க்கலாம். அதன் பூர்வீகம் வேலூர் மாவட்டத்தின் தொடக்க எல்லை. அதே எல்லைக்கோட்டில் இருக்கும் ஊரின் பெயர் கேசாவரம். இடது பக்கம் எட்டிப் பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புத்தூர் வந்துவிடும். இதில் நான் எங்கிருந்து புறப்படுகிறேன் தெரியுமா? கேசாவரத்தின் மேலிருக்கும் ‘தக்கோல’த்திலிருந்து… ஆக, காஞ்சிபுரமும், திருவள்ளூரும், வேலூரும் என்னின் ஓட்டத்தில் இடது, வலது, மத்திமம் ஆக இருக்கிறது.
நான் இழந்த இடங்கள்!
புறப்படும் இடத்திலேயே நான்கு திசைகளிலும் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீரை நிரப்பி வைத்துக்கொண்டு அங்கிருந்து பல கிளைகளாகப் பிரிந்து, ஆறுகளுக்கே நீர் பாய்ச்சும் ஒரு நதி வட தமிழகத்தில் உண்டென்றால், அது நான்தான். கடந்த சில ஆண்டுகளாக என்னில் எதையெதையோ கொட்டி நீர் வழிப்பாதையைத் திருப்பிவிட்டார்கள். என் பாதையைத் தொலைத்து நீங்கள் வகுத்த பாதையில் எங்கெங்கோ போனேன்; முட்டிக்கொண்டேன்; மோதிச் சிதறி நின்றேன். கசாப்புக் கடைகளின் கழிவுகளை சிலர் கொட்டினர். சிலர், சின்னதாய் ‘தறி’ மேடை அமைத்து என் நீர்நிலையைப் பயன்படுத்தி அந்த ஊருக்கே கவுரவமாக ‘சின்ன தறிப்பேட்டை’ என்று பெயரிட்டனர். பின்னாளில் அதுதான், ‘சிந்தாதரிப்பேட்டை’ என்றானது. இதுதான் பொன் விளையும் பூமி என்று என்னில் விதை விதைத்து எதையெதையோ நட்டார்கள், அறுவடை செய்தார்கள்…
ஒருநாள் அந்த விவசாயிகளையும் சிலர் விரட்டினார்கள். அங்கே கட்டடங்களை எழுப்பி அதனை ‘அபார்ட்மென்ட்’ என்றார்கள்.
இப்போது நீங்கள் சொல்லும் இயற்கைப் பேரிடரில் (பேரிடரா அது? திமிறி வெளி வந்த எங்கள் கோபத்தின் வெளிபாடு அல்லவா அது…) எல்லாம் தொலைத்தார்கள். மீண்டும் என் நீர்பரப்பையும் நிலப்பரப்பையும் இப்போதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இது இன்னும் எத்தனை நாட்களோ, மாதங்களோ தெரியவில்லை. அதோ தூரத்தில் மு.மேத்தாவின் கவிதைத் தலைப்புபோல ‘அவர்கள் வந்துகொண்டிருக் கிறார்கள்’. அந்தக் கவிதைப் புத்தகத்தின் உள்ளடக்கத்திலோ அவர்கள் வேலை தேடி வந்துகொண்டிருக்கும் பட்டதாரிகள். இவர்களோ, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் என்னில் பட்டா போடுகிறவர்கள். நான் போகுமிடம் எல்லாம் எனக்கே சொந்தம் என்று கொண்டாடிச் சொல்லிக்கொள்ள நான் ஆறோ, ஏரியோ அல்ல… ஒரு ஜீவநதி. ஆனால், பிறக்கிற பகுதியின் சுற்றுப்புறத்தைக்கூட சொந்தமில்லை என்று ஆக்கிவிட்டார்களே.
இங்குதான் முடிகிறது!
திருவள்ளூரிலிருந்து இப்படி தட்டுத் தடுமாறி தப்பித்து, ‘போதும்யா, மூச்சு முட்டுது’ என்று சென்னை மெரினாவின் காமராஜர் சாலையைக் கடந்து நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடாவின் முகத்துவாரத்தில் என் பயணத்தை முடிக்கிறேன்.
பல ஆறுகள், என் பிள்ளைகள்!
திருவள்ளூர் ஆறு, சத்திரம் ஆறு, நரசிங்கபுரம் ஆறு, பேரம்பாக்கம் ஆறு என்று 25 சிற்றாறுகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் அந்தந்த ஊர்ப் பெயரோடு ஓடினாலும் அவற்றுக்கான சுவையான நீர் ஆதாரம் நானே என்பதால், அவை அத்தனையும் இந்தக் கூவத்தின் பிள்ளைகளே.
பாலாறு, கொசஸ்தலை என்று பெரிய பெரிய ஆறுகளும் வெயில் காலங்களில் என் இருப்பு நீரை உள்வாங்கி வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது, காலத்தால் அழிக்க முடியாத தண்ணீர் வரலாறு. இருளஞ்சேரி, எட்டிக் குட்டிமேடு, குமாரஞ்சேரி இப்படி ஒன்பது கிராமங்களைச் சேர்த்த மொத்த பெரிய கிராமத்தின் பெயர்தான் என் பெயர், ஆமாம்… கூவம் கிராமம்.
‘ரத்தக்கண்ணீர்’ என்ற சினிமாவில் எம்.ஆர்.ராதா, ‘அந்த ஆப்பிள் அழகிகளின் அருகாமையிலே, ‘தேம்ஸ்’ நதியின் தீரத்திலே…’ என்ற திருவாரூர் தங்கராசுவின் வசனத்தைப் பேசுவார். வட தமிழ்நாட்டில் ஓடுகிற ஒரே ஜீவநதி நான்தானே, ஏன் அவர் தேம்ஸை சொல்ல வேண்டும்? பெரிதாய் காரணம் ஒன்றுமில்லை. என் இயற்கையான அழகின் மீது கொட்டி மூடப்பட்ட அசிங்கங்கள்தான் அவர்களை தேம்ஸ் பக்கம் திரும்ப வைத்ததே.
1967 – 72-ல் அண்ணா, ஐந்தாண்டுத் திட்ட வடிவைக் கொண்டுவந்தார். அப்புறம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அமைதி. 2001-ல் மத்திய அரசின் உதவியோடு சீர்படுத்துவதாக ஜெயலலிதா திட்டம் போட்டார். 2009-ல் துணை முதல்வர் பொறுப்பிலிருந்த மு.க.ஸ்டாலின் கூவத்தைச் சீரமைப்பது தொடர்பாகத் திட்டமிட வெளிநாடு போனார். அதற்கு முன்னதாக, 2008-ல் என்னைச் சீரமைக்க அறக்கட்டளை ஒன்றையே நிறுவினார். மீண்டும் 2012-ல் ஜெயலலிதாவே ‘என்னை’ பாதுகாக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து பின், அவர் முடிவை அவரே 2013-ல் மாற்றிக்கொண்டார். என் ஓட்டப் பாதையில் 105 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தடையில்லா ஓட்டமாக்க 300 கோடி ரூபாயில் திட்டம் போட்டிருக்கிறார்… இன்னும் ஏதேதோ திட்டங்கள் போட்டு கோடிகளை ஒதுக்கியிருப் பதாகச் சொல்கிறார்கள். யார் எது சொன்னாலும் கேட்டுக்கொள்ளத்தானே முடியும்.
பல சினிமாக்களில், ஊட்டாண்டே வந்தாக்கா மூஞ்சிமேல அட்சிப்புடுவேன், பேமானி, சோமாறி… ன்னு ஒருத்தன் பேசுறான். இன்னொருத்தனோ, ‘இன்னாடா கஸ்மாலம், கூவம் கணக்கா கூவுறே’ங்கறான்… சினிமாவில் எதையெதையோ இப்படித்தான் புரியாமல் காமெடி என்கிற பெயரில் கொட்டித் தீர்க்கிறார்கள். கூவம் என்ன அத்தனை அவலமா… அத்தனை நாற்றமா? என்னைச் சீரழித்தவர்கள்தானே நாற்றத்தின் பிறப்பிடம்?
ஒரே புலம்பலாக இருக்கிறதே என்கிறீர்களா? புலம்பல்தான்… எஞ்சியிருக்கும் கொஞ்ச நீரையாவது நஞ்சு கலக்காமல் காப்பாற்ற முடியாதா என்ற புலம்பல்தான். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள். கடலில் போய் ஆக்கிரமிப்பு செய்து பாருங்கள்; கடலில் போய் மண்ணெடுத்து வீடு கட்டிப் பாருங்கள்; ஏன் முடியவில்லை? அது உங்களை விழுங்கும் வாயுள்ள கடல். உங்கள் ஜம்பம் அங்கே எடுபடாது.’’ என்று தன் கதையைக் கூறி முடித்தது அந்தப் பாவப்பட்ட கூவம்!
நன்றி : ஜூனியர் விகடன் - 24.01.2016

தலைமுடி உதிர்வதை தடுக்க


தலைமுடி உதிர்வதை தடுக்க

வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி?
இன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி உதிர்வதை நினைத்து வருந்துவோர் பலர். இதனால் இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்களும் ஏராளம். தலைமுடி உதிர்ந்தால், பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதுண்டு. இப்படி தலைமுடி அதிகம் உதிர்வது ஒருவருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கவலைப்படாதீர்கள். தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில் கொலாஜென் தான் தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமான ஒன்று. ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க...
சரி, தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் கேட்கலாம். இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெங்காய சாறு மற்றும் பாதாம் எண்ணெய்
வெங்காய சாற்றினை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு அலசுங்கள். இதனால் பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு பொலிவைத் தரும் மற்றம் வெங்காயச் சாறு மயிர் கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும்.
வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தேங்காய் 
எண்ணெயும் தலைமுடி உதிர்வதை எதிர்த்துப் போராடும். அத்தகைய தேங்காய் எண்ணெயை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.
வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் 

தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்த கலவை. இந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
வெங்காய சாறு மற்றும் வெதுவெதுப்பான நீர் 
வெங்காய சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, ஒரே மாதத்தில் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.
வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை 
வெங்காய சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கி, ஸ்கால்ப் சுத்தமாகும்.
வெங்காயம் மற்றும் தயிர் 
வெங்காயத்தை அரைத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச, முடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் மென்மைத்தன்மையும் பாதுகாக்கப்படும்.
போல்ட் ஸ்கை » தமிழ் » அழகு » Hair Care -22.01.2016

வளரும் குழந்தைகள் நலமாக


  1. Image may contain: 1 person, closeup
வளரும் குழந்தைகள் நலமாக

குழந்தைகளுக்குச் சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைத்தான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஹெல்த்தி விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக்கொடுக்க வேண்டியவை இதோ…


தண்ணீர் பாட்டில்
பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில், ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே, குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.
டிஃபன் பாக்ஸ்
அதேபோல, பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு, மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும்.
எவர்சில்வரில் செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹாட்பேக் வசதிகொண்ட டிஃபன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன.
ஸ்நாக்ஸ் 
ஸ்நாக்ஸ் என்றவுடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற எண்ணெய்ப் பலகாரங்கள், சாக்லேட்கள், முறுக்கு, குலோப்ஜாமூன் எனக் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சிறுதானியத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஆப்பிள், கொய்யா போன்ற ஏதாவது ஒரு பழத்தை முழுமையாகக் கொடுத்து அனுப்பலாம். காய்கறிகள் சாலட் செய்து தரலாம்.
தண்ணீர்தண்ணீர் வழியாகப் பல நோய்கள் பரவும். எனவே, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீரைக் குழந்தைகள் குடிப்பது தவறு எனச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
தினமும் தண்ணீரைக் கொதிக்கவைத்து, வடிகட்டி, ஆறவைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

கூகுள் குரோம் இணையதளம்


கூகுள் குரோம் இணையதளம்

மேலாகப் பார்க்கையில், கூகுள் குரோம் மற்ற பிரவுசர்களின் செயல்பாடுகளைக் கொண்டதாகவே காட்சி அளிக்கும். ஆனால், அதன் இயக்கங்கள் சிலவற்றில், நாம் பிற பிரவுசர்களிடம் இல்லாத வசதிகளைக் காணலாம். சில அமைப்புகளை மாற்றி வைப்பதன் மூலம், நம் வசதிக்கேற்ப அவற்றை இயங்கும்படி செய்யலாம்.
இதன் சில மறைத்து வைக்கப்பட்ட அம்சங்கள், நம் பிரவுசர் அனுபவத்தினைச் சிறப்பாக மாற்றி அமைக்கின்றன என்பதே உண்மை. இதில் என்ன சிறப்பென்றால், இவற்றை அனுபவிக்க, இந்த வசதிகளைப் பெற நாம் பெரிய தொழில் நுட்ப அறிவெல்லாம் கொண்டிருக்கத் தேவையில்லை. எந்தப் பயனாளரும் எளிமையான வழியில் இவற்றை மேற்கொள்ளலாம்.
ஒலிக்காமல் இருக்கும்படி அமைக்க நாம் ஓர் இணைய தளத்தைத் திறந்திருப்போம். அந்த தளத்தில், ஒரு விடியோ விளம்பர இயக்கி இருக்கும். ஏதேனும் ஒரு விளம்பரப் படத்தை உடனே இயக்கும். சில வேளைகளில், எங்கு படம் உள்ளது, எப்படி இயக்கப்படுகிறது என்று கூடத் தெரியாது. மிகச் சிறியதாகக் கீழாக இருக்கும். அதற்குள் அதன் ஒலி நாராசமாக நம் காதுகளை வந்தடையும்.
இது போன்ற விடியோ படக் காட்சிகள் இயங்கும்போது, நாம் அதிர்ச்சியுற்று, நம் சிஸ்டம் ஒலியை முடக்குவோம். 

இதற்குப் பதிலாக, குரோம் ஒரு நல்ல வழியைத் தருகிறது.
குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்பட்டுள்ள டேப்பில் இதற்கான வழி உள்ளது. அங்கு சிறிய ஒலிப்பான் படம் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், அந்த தளத்தில் எந்த ஒலியும் இயக்கப்பட மாட்டாது.
இதனை இயக்க குரோம் பிரவுசரில் சின்ன அளவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மாறா நிலையில், அந்த படத்தில் எந்த இயக்கமும் தரப்பட்டிருக்காது. இல்லை எனில், டேப்பில், அந்த ஒலிப்பான் அடையாளம் தெரியும். அதில் கிளிக் செய்தால், எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை இயக்க, கீழே தரப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை அப்படியே, பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் அமைத்து எண்டர் தட்டவும்.
chrome://flags/#enable-tab-audio-muting உடன், உங்களுக்குப் பல கட்டளை வரிகள் அடங்கிய பக்கம் காட்டப்படும். உடனே பயந்துவிட வேண்டாம். நீங்கள் எந்த வரியில் செயல்பட வேண்டுமோ, அந்த டெக்ஸ்ட் மஞ்சள் வண்ணத்தில் காட்டப்படும். அங்குள்ள enable என்பதில் கிளிக் செய்திடுங்கள்.
பின்னர், பிரவுசர் மீண்டும் இயக்கப்படும். இப்போது தளங்களின் ஆடியோவினை முடக்கும் வழி உங்களுக்குத் தரப்பட்டதாக பிரவுசர் இயங்கும். எந்த தளத்திற்கான டேப்பிலும், ஸ்பீக்கர் ஐகானை இயக்கி, முடக்கலாம். மீண்டும் ஒலி வேண்டும் என்றால், மீண்டும் ஒருமுறை அதே ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்திட, ஒலி இயக்கப்படும்.
டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க எளிய வழி
நாம் இணைய தளங்களைப் பார்வையிடுகையில், நாம் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு செயல், அதன் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதுதான். அது ஒரு சொல்லாகவோ, பாராவாகவோ, அல்லது குறிப்பிட்ட அளவிலான டெக்ஸ்ட்டாகவோ இருக்கும். பெரும்பாலானவர்கள் மவுஸ் கொண்டு டெக்ஸ்ட்டின் தொடக்கம் முதல், இறுதி வரை இழுத்துத் தேர்ந்தெடுப்போம். இது பெரிய அளவிலான டெக்ஸ்ட் எனில், சற்று சிரமம் தரும் செயலாக இது இருக்கும். குரோம் பிரவுசரில் இதற்கு ஒரு விரைவான எளிய வழி ஒன்று தரப்பட்டுள்ளது.
ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், அதன் மீது இருமுறை கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கொண்டெல்லாம் இழுக்க வேண்டாம். பாரா ஒன்றில் எங்காவது மூன்று முறை தொடர்ந்து கிளிக் செய்தால், அந்த பாரா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இங்கும் மவுஸை இழுக்க வேண்டாம். சரி, பாரா ஒன்றின் நடுப் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள்.
தொடக்கத்தில் மவுஸைக் கிளிக் செய்து, இறுதி வரை அப்படியே இழுத்து வந்து தேர்ந்தெடுப்பீர்கள். இங்கு அது தேவையில்லை. எங்கு டெக்ஸ்ட் பகுதி தொடங்குகிறதோ, அங்கு ஒருமுறை கிளிக் செய்திடுங்கள். பின்னர், டெக்ஸ்ட் எங்கு முடிகிறதோ, அங்கு ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு கிளிக் செய்திடுங்கள். குறிப்பிட்ட பகுதி மட்டும் ஹை லைட் செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டதனைக் காட்டும். நமக்கு எவ்வளவு நேரம் மிச்சமாகிறது. மேலே சொல்லப்பட்டவை போல பல ட்ரிக்ஸ் குரோம் பிரவுசர் கொண்டுள்ளது.

ரயில் விபத்து - நிவாரணம் பெற

ரயில் விபத்து - நிவாரணம் பெற
சாலையில் மோட்டார் வாகன விபத்து அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இந்த விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகின்றன.ஆனால் ரயில் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, அதனைப் பெறும் முறை குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.
இரண்டு ரயில்கள் மோதிக்கொள்வதோ, அல்லது ஒரு ரயில் தடம்புரள்வதோ ரயில் விபத்து ஆகும். இந்த விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழப்போருக்கும், உடல் பாகங்களை இழப்போருக்கும்கூட நிவாரணம் வழங்கப்படுகிறது.ஆனால் இந்த செயல் தற்கொலை முயற்சியாகவோ, வேறு காரணங்களுக்காக தானாகவே மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது. இவ்வாறு தவறி விழுவோர் குடிபோதையில் விழுந்திருக்கக்கூடாது. மேலும் சட்டவிரோதமான குற்றச்செயலில் ஈடுபடும்போது தவறி விழுந்தாலும் இழப்பீடு கோரமுடியாது.
இதேபோல ரயில் பயணத்தின்போது நடக்கும் பயங்கரவாத செயல்கள், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் பாதிக்கபோபடுவோரும் இழப்பீடு பெறலாம்.
இதற்காக மாநில அளவில் ரயில் (பயணிகள்) உரிமைத் தீர்ப்பாயம் [Railway Claims Tribunal] இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கான ரயில் பயணிகள் உரிமைத் தீர்ப்பாயம் சென்னையில் இயங்கி வருகிறது.
விபத்து நடந்த ஓராண்டு காலத்திற்குள் இழப்பீடு கோரும் மனுவை பதிவு செய்யலாம்.உயிர் இழப்புக்கு அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். அதேபோல உடல் உறுப்பு இழப்புக்கும் அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். பொருள் இழப்புக்கும், இழப்பின் தன்மைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது.
ரயில் பாதையில் அத்துமீறி பிரவேசித்து, கவனக்குறைவாக நடந்துகொண்டு ஏற்படும் இழப்புகளுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.
பயணச்சீட்டு பெற்று முறைப்படி பயணம் செய்யும் பயணிகளே இந்த நிவாரணங்களை பெற தகுதி உடையவர்கள். அதே போல முறைப்படி ரயில் பெட்டியின் உட்புறத்தில் பயணம் செய்பவர்கள்தான் சட்டரீதியான பயணிகளாக கருதப்படுவார்கள். ரயில் பெட்டியின் கூரைமேல் அமர்ந்து செல்பவர்களுக்கு இந்த நிவாரணங்கள் கிடைக்காது. மேலும் கூரை அமர்ந்து செல்பவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ரயில்வே நிர்வாகம் அளிக்கும் இந்த நிவாரணங்களை முறைகேடாக பெறமுயற்சி செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் பரிசாக கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
முகவரி:
Railway Claims Tribunal,
"Freshford"
50, McNichols Road,
Chetpet,
Chennai - 600 031

Sunday, January 22, 2017

அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்!


அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்!
நிபுணர்கள் கருத்து

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இதன்படி, ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விட்டன. முக்கிய இடங்களில் நடத்த முடியாவிட்டாலும் அவசர சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. 
மத்திய அரசு இயற்றிய பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது. இதில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன.

கைவிட மறுப்பு

'இந்த சட்டம் தற்காலிகமானது தான்; ஆறு மாதங்களுக்கு தான் செல்லும். இது தேவை யில்லை; நிரந்தர சட்டம் தான் வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் வலியு றுத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிடவும் மறுக்கின்றனர்.

பார்லிமென்ட் அல்லது சட்டசபை நடக்கும் போது சட்ட மசோதா தாக்கல் செய்து, விவாதம் நடத்தி, அது நிறைவேறும் போது சட்டமாக மாறுகிறது. அதன்பின், அந்த சட்டத்துக்கு கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அப்போது, சட்டம் முழு வடிவம் பெறுகிறது.சட்டசபையோ, பார்லிமென்ட்டோ கூடாத போது சூழ்நிலையை மற்றும் அவசர தன்மையை கருத்தில் கொண்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. 

அதாவது, சட்டசபை கூடும் வரை காத்திருக்காமல், அவசர தேவையை கருதி, அவசர சட்டம் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவசர சூழ்நிலை உள்ளது என்பதில் கவர்னர், ஜனாதிபதி திருப்தியடைய வேண்டும். இந்த அவசர சட்டத்தின் ஆயுள், அதிகபட்சம் ஆறு மாதங்கள் தான்; சட்டசபை கூடியதும், ஆறே வாரங்களில் அவசர சட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். அவசர சட்டம், சட்டசபையில் நிறை வேற்றப்பட்டு சட்டமாகலாம். இல்லையென்றால் புதியசட்டமும் கொண்டு வரலாம்.

முதல்வர் உறுதி

'தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தொடர் பாக, இன்று துவங்க உள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்படும்; மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
இந்த அவசர சட்டம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 

அவசர சட்டம் என்பது தற்காலிகமானது தான்; 

ஆனால், இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது; அப்போது, அது நிரந்தர மானதாகி விடும்.ஒரு சட்டத்தை எதிர்த்து, நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடியும். இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தால், அது வெற்றி பெறாது; 

ஏனென்றால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 254(2)ன் கீழ், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால், சிலரது யூகங்களுக்கு அடிப்படை இல்லை. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது:

தமிழக அரசு, 2009ல், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம், மத்திய சட்டத்துக்கு முரணாக இருந்ததால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்போது, மத்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால், மாநில சட்டத்துக்கும்,மத்திய சட்டத்துக்கும் இடையே முரண்பாடு எழாது.

சட்டசபை கூடாத போது அவசர சட்டம் தான் பிறப்பிக்க முடியும். சட்டசபை கூடும் போது அவசர சட்டத்தையே சட்டமாக நிறைவேற்றி னால் போதும்; அது, சட்ட வடிவம் பெற்று விடும். அவசர சட்டத்துக்கும், நிரந்தர சட்டத்துக்கும் இது தான் வித்தியாசம். இதை புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரமுள்ளது

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டருமான பி.வில்சன் கூறியதாவது:அவசர சட்டம் பற்றிய முழு தகவல்களும் கிடைக்கவில்லை. அரசின் உத்தரவை பார்த்தால், இந்த அவசர சட்டம், நீதிமன்றத்தின் பரிசீலனையின் போது நிற்காது. ஏனென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது.

அதேநேரத்தில், அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், பொதுவாக நீதிமன்றம் தடை விதிப்பதில்லை. அவசர சட்டம் பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றால் தான் தடை விதிக்க முடியும். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.01.2017


ஜல்லிக்கட்டு - நிபந்தனைகள்


ஜல்லிக்கட்டு நடத்த அரசு விதித்துள்ள நிபந்தனைகள்

சென்னை: தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை அடிப்படையாக கொண்டு, தமிழக கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இயக்குனர் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார்.

கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இயக்குனர் ககன் தீப் சிங் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் - 1960ல் திருத்தம் ஏற்படுத்தி, தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. விலங்குககள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் பிரிவு - 3,துணை பிரிவு(2)ன்படி, தமிழக கவர்னர் சில விதிமுறைகளை உருவாக்கி உள்ளார். அவை வருமாறு:

1. விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 2, உட்பிரிவு( டிடி)ன் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர் அல்லது அமைப்பினர் மாவட்ட கலெக்டருக்கு எழுத்து பூர்வமாகதகவல் தெரிவிக்க வேண்டும்.

2. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மனிதர்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இத்தகவல்களை கலெக்டர் பதிவு செய்ய வேண்டும்.

3. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும கலெக்டர், ஜல்லிக்கட்டு நடக்க உள்ள இடத்தை பார்வையிட வேண்டும்.

4. வருவாய், கால்நடை, போலீஸ் மற்றும் சுகாதார துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்ற ஒரு ஜல்லிக்கட்டு குழுவை கலெக்டர் ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளின்படி நடக்கிறது என்பதை அந்த குழுவினர் மேற்பார்வையிடுவர்.

5. கால்நடை துறையினரால், காளைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்பதை போட்டி நடத்துபவர்கள் உறுதி செய்ய வேண்டும். போதை பொருள் உள்ளிட்ட உணர்வுகளை துண்டும் பொருட்கள், காளைகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

6. ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள், நோயால் பாதிக்கப்படவில்லை; போதை பொருட்களுக்கு ஆட்படவில்லை என்பதை, கால்துறை நிபுணர்களின் உதவியுடன் கலெக்டர் உறுதிசெய்ய வேண்டும்.

7. போட்டி நடத்துபவர்கள், திறந்வெளி மைதானத்தில் கீழ்கண்ட வசதிகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.

நிபந்தனைகள்:

* மைதானத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், காளைகளுக்கு, 20 நிமிட ஓய்வு அளிக்க வேண்டும்
*போட்டி துவங்குவதற்கு முன் காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில், ஒவ்வொரு காளையும் சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் போதிய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

*ஒவ்வொரு காளைக்கும், 60 சதுர அடி இடம் தர வேணடும். அவற்றுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் தந்து, அவை சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் வசதி ஏற்படுத்தவேண்டும். காளையின் மன நல பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் உரிமையாளர் அதன் அருகிலேயே இருக்க வேண்டும்.

*போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையையும், கால்நடை துறையின் டாக்டர்கள் மற்றும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

*காளை உடலின் மேற்பகுதியில் காயங்கள் ஏதும் உள்ளதா, காது அருகே காயம் உள்ளதா, வால் பகுதியில் காயம் உள்ளதா என்பதை கால்நடைதுறை டாக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

*காயம் இருக்கும் காளையை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்.

* காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் ஷாமியானா போட்டு இருக்க வேண்டும். மழை மற்றும் சூரிய ஒளியில் இருந்து காளைகளை பாதுகாக்க வேண்டும்.

*காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். காளைகளின் கழிவுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லாதஅளவுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும்.

திமில் பகுதியை பிடித்தபடி :

* தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.
8. காளைகளை, கால்நடைதுறையின் தகுதி வாய்ந்த கால்நடை டாக்டர்களின் ஆய்வுக்கு உட்படுத்துவது கட்டாயம்.

9. காளைகளின் பொதுவான உடல்நலம் ஆய்வு செய்ய வேண்டும், பரிசோதனை கூட ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும். சோர்வு, நீர்போக்கு பாதிப்பு, உடல் நல பாதிப்புள்ள காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.

10. போதை பாதிப்புக்கு உள்ளான காளையை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.

11. வாடிவாசல் பகுதிக்கு காளையை கொண்டு சென்று, அதன் மூக்கணாங்கயிற்றை அதன் உரிமையாளர் தான் அகற்றி, மைதானத்திற்குள் அனுப்ப வேண்டும்.

12. காளைகளை பரிசோதனை செய்யும் இடம், ஷாமியானா வசதியுடன் இருக்க வேண்டும்.

13. போட்டி நடக்கும் மைதானம் குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர் இட வசதி கொண்டதாக இருக்க வேண்டும். 50 சதுர மீட்டர் பகுதிக்குள் தான், காளைகளை போட்டியில் பங்கேற்பவர்கள் ஏறுதழுவ வேண்டும்.

14. வாடிவாசலை மறித்து கொண்டு போட்டியாளர்கள் நிற்க கூடாது. அதே போல் காளைகள் வெளியேறும் பகுதியையும் அவர்கள் மறிக்க கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15.மீட்டர் அல்லது 30 வினாடிகள் அளவுக்கு அல்லது காளையின் மூன்று துள்ளல்கள் வரை போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும். போட்டியாளர்கள் காளையின் வால், கொம்பு மற்றும்வாலை பிடித்து அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்த கூடாது. இந்த விதிகளை மீறும் போட்டியாளர்கள், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுவார்கள். போட்டியாளர்கள் ஏறு தழுவும் முயற்சி மேற்கொள்ளும், 15 மீட்டர் இடம், மிருதுவான பகுதியாக மாற்றப்பட வேண்டும். அப்போது தான், காளைகளுக்கோ, போட்டியாளர்களுக்கோ காயம் ஏற்படாது.

15. ஏறு தழும் இடத்தில் இருந்து காளை சென்று சேரும் இடம் வரையான பகுதி காளை ஓடும் பகுதி எனப்படும். அப்பகுதி, பார்வையாளர் மாடத்தில் இருந்து, தள்ளி இருக்கும் வகையில்தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். காளைகள் அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் தூரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் பார்வையாளர்கள் எழுப்பும் சத்தம், காளைகளை மிரள செய்யாது.

16. ஏறு தழும் நடக்கும், 15 மீட்டர் பகுதிக்கு பிறகு காளையை தொடர்ந்து போட்டியாளர்கள் ஓட கூடாத. அவற்றை தொட கூடாத. காளை ஓடும் இடம், 100 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்க வேண்டும். வாடிவாசல் பகுதியில் இருந்து போட்டி முடியும் இடம் வரையான இடம் வரை காளை ஓடும் நேரம், 60 வினாடிகள் முதல், 120 வினாடிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

17. போட்டி முடியும் இடத்தில், காளையின் உரிமையாளர் அல்லது அவரது பிரதி நிதி மட்டுமே இருக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு காளைக்கும், 60 சதுர மீட்டர் இடம் அளிக்க வேண்டும். அங்கு உணவு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். அங்கு, 20 நிமிடங்கள் காளைகள் ஓய்வு எடுத்த பிறகு வீட்டுக்க அழைத்து செல்லலாம்.

18. போட்டி முடியும் இடத்தில், ஷாமியானா வசதி இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கால்நடை டாக்டர்கள், போலீசார் இருக்க வேண்டும்.

19. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும்.

20. பார்வையாளர் மாடம், குறைந்தபட்சம், 8 அடி உயரத்தில், இரட்டை தடுப்பு வசதியுடன் இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

21. பார்வையாளர் மாடத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்பதை பொதுப்பணித்துறையினரின் வழிமுறைகளின்படி கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

22. போட்டியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். போட்டியாளர்கள்மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள், கால்நடை டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். அவசர காலவெளியேறும் வழிகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.01.2017

Friday, January 20, 2017

மாநில தகவல் ஆணையம்


மாநில தகவல் ஆணையம்

நமது நாட்டில் நடைபெறுகின்ற ஊழல்களை வெளிக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிப்பது, “தகவல் அறியும்  உரிமைச் சட்டம்-2005” என்றால், அது மிகையாகாது.

சமூக ஆர்வலர்களாக இருந்தாலும் சரி, சாதாரணமானவர்களாக இருந்தாலும் சரி, மேற்கண்ட சட்டத்தை பயன்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு இதனது பயன்பாடு இருந்திருக்கிறது. 

சிலரது பெயருக்கு முன்னால் இந்த சட்டத்தின் சுருக்கச் சொல்லானது  (RTI) இணைந்து, அவர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த சட்டத்தைப் போல வேறு எந்த சட்டத்தையும் மக்கள் அதிக அளவு பயன்படுத்தி இருப்பார்களா? என்றால், அது சந்தேகமே.

ஆரம்பத்தில் இருந்த வேகம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும்  இதனை செயல்படுத்தும் ஆணையத்தில்  தற்போது இல்லை என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, வருத்தம் தரக்கூடிய விஷயம்.

இருந்தபோதிலும் இந்த சட்டத்திற்கு ஆதரவு இன்னும் குறையவில்லை. பயன்படுத்துபவர்களும் அதனைப் பற்றி விசாரிப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

மாநில தகவல் ஆணையத்திற்கென்று தனியாக  http://www.tnsic.gov.in/ இணையதளம் ஒன்று உள்ளது. 

அதற்குள் சென்று பார்த்தால் 

* தகவல் அறியும் உரிமைச் சட்டம்

* மாநில தகவல் ஆணையம்

* தகவல் எப்படி கோருவது

* தகவல் ஆணைய முடிவுகள் மற்றும் ஆணைகள்

* நடைபெற இருக்கும் வழக்கு பற்றிய விபரங்கள்

* மாநில தகவல் ஆணையத்தின் முகவரி

* மற்ற மாநில தகவல் ஆணையங்களின் இணைப்புகள்

ஆகியவற்றைப் பற்றிய ஏராளமான தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

மத்திய தகவல் ஆணையத்தின் இணைப்பிற்கு இதனை கிளிக் செய்யுங்கள்.

http://www.cic.gov.in/

*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி**

போலி மதிப்பெண் சான்றிதழ் - TNPSC நடவடிக்கை


போலி மதிப்பெண் சான்றிதழ் - TNPSC நடவடிக்கை

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தவருக்கு தேர்வு எழுத 7 ஆண்டுகள் தடை : டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை

சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு 7 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதித்து டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ(நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) பதவிக்கான (2014-2015) நேரடி நியமனம் தேர்வுக்கு, விண்ணப்பத்தாரர் என்.பிரேம் என்பவர் எழுத்து தேர்வு முடிவுகள் குறித்த பதிவுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்துள்ளார். 

அதனை தேர்வாணையத்திற்கு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுக்கு தேர்வாணையம் நடத்த போகும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளில்  கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்து அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தி்னகரன் நாளிதழ் - 21.01.2017

தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை


தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

சங்க வீட்டுமனைகள் ஒதுக்குவதில் முறைகேடு தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

சென்னை: சங்க வீட்டுனைகள் ஒதுக்குவதில் முறைகேடு செய்த தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
சென்னையை சேர்ந்தவர் சுந்தர் (59). 
சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். சென்னை தட்டச்சர், சுருக்கெழுத்தர் கூட்டுறவு சங்க தலைவராகவும், வீட்டு வசதி வாரிய சங்க தலைவராகவும் இருந்தார். 

கடந்த 1997ம் ஆண்டு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், வீட்டு வசதி வாரிய சங்கத்தின் மூலம், தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என சென்னை கூட்டுறவு பதிவாளருக்கு கோரிக்கை வைத்தார்.

அதன்படி 22 ஏக்கர் நிலம் மாடம்பாக்கத்தில் வழங்கப்பட்டது. அதை 247 பேருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அதில், 38 பேருக்கு மனையை வழங்காமல் சுந்தர், தனது உறவினர்கள் பெயருக்கு முறைகேடாக மாற்றி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு சென்னை கூட்டுறவு சார்-பதிவாளர் சார்பில், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. 

போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி தேவநாதன், குற்றம் சாட்டப்பட்ட சுந்தர் மீது, அனைத்து தரப்பு சாட்சிகள், ஆதாரங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 7 ஆண்டு சிறை, 35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 20.01.2017

பற்று அட்டை மூலம் முன்பதிவு


பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் 


பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறை: ரயில்வே விளக்கம்

பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) ஆகியவற்றைப் பயன்படுத்தி "ஸ்வைப்' மெஷின் மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறைகளை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் 10,000 "ஸ்வைப்' மெஷின்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், ரயில்வே கவுன்டர்களை அணுகி டிக்கெட்டை ரத்து செய்துகொள்ள முடியும். பற்று அட்டைகளை மீண்டும் எடுத்து வரவேண்டியதில்லை. இதையடுத்து, முன்பதிவு தொகை வாடிக்கையாளரின்  வங்கிக் கணக்கில் 7 தினங்களில் வரவு வைக்கப்படும்.

ஒருவேளை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்யவில்லை எனில், ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் நபர் "ஸ்வைப்' மெஷினில் தனது பற்று அட்டை அல்லது கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) பயன்படுத்த வேண்டும்.

அதன் மூலம், அந்த நபரின் வங்கி விவரங்கள் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்த தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நன்றி : தினமணி நாளிதழ் - 21.01.2017