disalbe Right click

Saturday, June 20, 2015

தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது?


தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது?

குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் சேலம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ப.அருள் மற்றும் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணா.
தடுப்பூசி
நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும்போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள்தான். சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு, மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.
சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள்!  இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது. முதன் முதலில் பெரியம்மைக்குத்தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள்
தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும்கால தலைமுறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது.

ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன! குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள்தான் தற்காக்கின்றன.
தடுப்பூசி அட்டவணை
ஒரு காலத்தில் உலக அளவில் தட்டம்மை, ரண ஜன்னி, காச நோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அழற்சி போன்ற நோய்களால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 குழந்தைகள் இறந்தனர். ஆனால் இன்றோ, பிறந்த உடனேயே இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால், இந்த நோயால் குழந்தைகள் இறப்பு இல்லை என்ற அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது!

இந்திய அரசு குழந்தைப் பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசி, சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளுடன் சேர்த்து கூடுதலாக மேலும் சில தடுப்பூசி மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
 என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? பிறந்தவுடன்…
குழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன. குழந்தை பிறந்ததும் மருத்துவமனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலையில்லை.
பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)
பி.சி.ஜி.(BCG – Bacille Calmette-Guerin) – குழந்தைக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி. குழந்தையின் இடது கையில் தோள்பட்டைக்கு அருகில் (புஜத்தில்) போடப்படும். இது நோயை முற்றிலும் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே இது வேலை செய்யும்.
எச்சரிக்கை: தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறு வீக்கம் உண்டாகலாம். அது உடைந்து புண்ணாகி லேசான நீர்க்கசிவுகூட ஏற்படலாம். இதில் பயம் ஒன்றும் இல்லை. சில நாட்கள் வரை இருந்துவிட்டு பின்னர் அதுவாகவே சரியாகி அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். புண் ஆறாமல் இருந்தால் அல்லது அதிகமான வீக்கம் இருந்தால் குழந்தை நல மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புண் ஆற வேண்டும் என்று எந்த ஒரு மருந்தையும் அதன் மீது தடவக்கூடாது.
இளம்பிள்ளைவாதத்துக்கு ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)
போலியோ கிருமி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கால்கள் சூம்பிப்போகச் செய்யக்கூடியது. இதனால் நிரந்தர ஊனம் ஏற்படும். இதைத் தவிர்க்க பல கட்டமாக அரசாங்கமே இலவச மருந்தை அளிக்கிறது.
குழந்தைப் பிறந்தவுடன் வாய் வழியாக ஓ.பி.வி. (OPV- oral polio vaccine)  மருந்து அளிக்கப்படும். இதை ‘ஜீரோ டோஸ்’ என்பர். போலியோ நோய்த் தடுப்பில் சொட்டு மருந்து / ஊசி என்று இரண்டு இருக்கின்றன. பொதுவாக நம் ஊரில் போலியோ சொட்டு மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஹெபடைடிஸ் பி (எச்.பி.வி.) தடுப்பூசி (விருப்பத்தின் பேரில்)

உலக அளவில் பொதுவாகக் காணப்படும் நோய்த் தொற்று ‘ஹெபடைடிஸ் பி’. இது கல்லீரலைப் பாதிக்கிறது. எதிர்காலத்தில் கல்லீரல் சுருக்கம் (லிவர் சிரோசிஸ்), கல்லீரல் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். இதைத் தவிர்க்க பிறந்ததும் ‘ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைப் பரிந்துரைக்கவில்லை. ஆனால், இதைப் போட்டுக்கொள்வது நல்லது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆறு வாரங்களுக்குப் பிறகு…
டி.பி.டி. (DPT) எனப்படும் முத்தடுப்பு ஊசி, போலியோ தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து இரண்டாவது டோஸ், ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ், ரோட்டா வைரஸ், பி.சி.வி. முதல் டோஸ், எச்.ஐ.பி. முதல் டோஸ் அளிக்கப்படும்.
முத்தடுப்பு ஊசி (டி.பி.டி.) (கட்டாயம்)
‘டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக்கு எதிரான மருந்து இது.
எச்சரிக்கை: டி.பி.டி. தடுப்பூசி போடப்பட்ட சில மணி நேரத்தில், சில குழந்தைக்கு காய்ச்சல் வரலாம். அது சாதாரணமான காய்ச்சல்தான். பயப்படத் தேவையில்லை. ஒரே நாளில் குணமாகிவிடும். காய்ச்சல் ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்தால் உடனடியாக குழந்தையை டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.
ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)
போலியோவுக்கு அளிக்கப்படும் மருந்தின் இரண்டாவது டோஸ் இது. வாய் வழி சொட்டு மருந்தாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
ரோட்டா வைரஸ் தடுப்பூசி  முதல் டோஸ்
(விருப்பத்தின்பேரில்)
வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும் கொடிய கிருமி ரோட்டா வைரஸ். ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால் இந்தநோய் வராமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.

எச்.ஐ.பி (ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி) தடுப்பூசி
(விருப்பத்தின்பேரில்)
ஹிமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி நோய்த்தொற்று ஏற்பட்டால் குழந்தைகளுக்கு மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகள் பாதிக்கப்படும். அதைத் தடுக்கவே இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.
கவனம்: இந்த ஊசி போட்ட இடத்தில் சிவந்துபோதல், வீக்கம் அல்லது வலி இருக்கலாம். ஆனால், கவலைப்படத் தேவையில்லை.
பென்டாவேலன்ட் தடுப்பூசி
முத்தடுப்பு ஊசி என்பது மூன்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படுகிறது. தற்போது அதற்குப் பதிலாக ஐந்து நோய்களைத் தடுக்கும் ‘பென்டாவேலன்ட்’ என்ற ஊசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை… உள்ளிட்ட ஐந்து நோய்களுக்கான ஒரே தடுப்பூசிக்கு பென்டாவேலன்ட் என்று பெயர். இந்தத் தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, மஞ்சள் காமாலை பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஏற்கெனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பென்டாவேலன்ட் என்ற ஒரே தடுப்பூசியே சிறப்பாகச் செயல்படுகிறது.
10வது வாரம்
முத்தடுப்பு ஊசி, போலியோ, எச்.ஐ.பி., ரோட்டா வைரஸ், பி.சி.வி. இரண்டாவது டோஸ்… ஆகியவை குழந்தை பிறந்த 10-வது வாரத்தில் அளிக்கப்படும். இதில், முத்தடுப்பு ஊசி மற்றும் போலியோ மருந்தைத் தவிர மற்றவை விருப்பத்தின்பேரில் மட்டுமே போடப்படும்.
14வது வாரம் (மூன்றரை மாதம்)
இந்தக் கால கட்டத்தில் போலியோ, முத்தடுப்பு ஊசி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். இதுதவிர, ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.பி. ரோட்டா வைரஸ், பி.சி.வி மூன்றாவது டோஸ் போன்றவைகளும் அளிக்கப்பட வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு…
வாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் இந்தக் கால கட்டத்தில் அளிக்க வேண்டும். இன்ஃபுளுவென்சாவுக்கான தடுப்பூசி இந்த மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். இதன்பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்ற வகையில் இன்ஃபுளுவென்சாவுக்கு மருந்தும் கொடுக்க வேண்டும்.
ஒன்பதாவது மாதம்
போலியோ சொட்டு மருந்து, மற்றும் ஹெபடைடிஸ் பி 3-வது டோஸ் அளிக்கப்பட வேண்டும்.
தட்டம்மைத் தடுப்பூசி (கட்டாயம்)
குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போட வேண்டும். இதை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். ஒன்பதாவது மாதத்தில் இந்தத் தடுப்பூசி போடப்படாத குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பின் எம்.எம்.ஆர் போடலாம்.
மேலும், 5 அல்லது 12 வயதிலும்கூட இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒரு வயதுக்குப் பிறகு
இந்த காலகட்டத்தில் ஹெபடைடிஸ்- ஏ வைரஸுக்கான தடுப்பூசி முதல் டோஸ் அளிக்கப்பட வேண்டும். இதுவும் விருப்பத்துக்கு உட்பட்டது. ஹெபடைடிஸ் ஏ-வில் கொல்லப்பட்டது, உயிரோடு இருக்கக்கூடியது என இரண்டு வகையான டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டாவது (இறுதி) டோஸ், முதல் டோஸ் போட்டதில் இருந்து ஆறு முதல் 18 மாதங்களில் போடவேண்டும்.

காலரா தடுப்பூசி (விருப்பத்தின்பேரில்)
ஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு இந்த ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. காலரா என்பது ‘விப்ரியோ காலரே’ என்ற கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உடலில் உள்ள நீரை வெளியேற்றிவிடும். நீருடன் சேர்ந்து உடலில் உள்ள உப்புக்களும் வெளியேறிவிடுவதால் நீர் இழப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம். இந்த நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால், இளநீர் போன்றவற்றைக் கொடுக்கலாம். அல்லது உப்பு- சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும்.
எச்சரிக்கை: குழந்தை வாந்தி எடுக்கிறது என்று தாய்ப்பால், இளநீர், உப்பு-சர்க்கரைக் கரைசல் கொடுக்காமல் இருந்துவிடக்கூடாது.
15வது மாதத்தில்
எம்.எம்.ஆர். தடுப்பூசி முதல் டோஸ், வேரிசெல்லா தடுப்பூசி, பி.சி.வி. பூஸ்டர் தடுப்பூசி இந்தக் காலக்கட்டத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. 

எம்.எம்.ஆர். தடுப்பூசி (கட்டாயம்)
மீசல்ஸ், மம்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் தட்டம்மை, புட்டாலம்மை (பொன்னுக்கு வீங்கி) மற்றும் ஜெர்மன் அம்மையை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி இது. 
எச்சரிக்கை: இந்தத் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு காய்ச்சல்போல உடல் சூடாகும், மூட்டு வலி அல்லது உடலில் விரைப்புத்தன்மை ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
வேரிசெல்லா தடுப்பூசி
(விருப்பத்தின்பேரில்)
வேரிசெல்லா சோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் சின்னம்மை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக வேரிசெல்லா தடுப்பூசி 15-வது மாதத்தில் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒருவரை ஒருவர் தொடுவதன்மூலமும், சுவாசம், இருமல், தும்மல் மூலமும் காற்றில் பரவக்கூடியது. சிலருக்கு இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், சில குழந்தைகளுக்கு இது வலிப்பு நோயை ஏற்படுத்தி உயிரிழப்பைக்கூட உண்டாக்கலாம். சின்னம்மை வந்து சென்றபிறகும்கூட இந்தக் கிருமி உடலிலேயே இருந்து எதிர்காலத்தில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. 12 முதல் 15 மாதக் குழந்தைகளுக்கு இது அளிக்கப்பட வேண்டும்.
16 முதல் 18வது மாதங்களில்
டி.டி.பி., ஐ.பி.வி., ஹெச்.ஐ.பி. முதலாவது பூஸ்டர் அளிக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு இந்த நோய்க் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டிருக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தக் கிருமிகளுக்குரிய நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ‘பூஸ்டர் தடுப்பூசி’ என்று பெயர்.
முத்தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி (கட்டாயம்)
‘டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், பெர்டூசிஸ் எனப்படும் கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக் எதிரான பூஸ்டர் தடுப்பு மருந்து இது.
எச்சரிக்கை: குழந்தைக்கு சிறிய அளவில் காய்ச்சல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம் இருக்கலாம். கவலைப்படத் தேவையில்லை. 
போலியோ பூஸ்டர் மருந்து
போலியோ தடுப்பு மருந்து. வாய் வழியே எடுத்துக்கொள்ளக்கூடியது.
குறிப்பிட்ட காலத்தில் போட்டுவிட்டோமே என்று இருந்துவிட வேண்டாம். போலியோ ஒழிப்பு தினத்தன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. அந்தநேரத்திலும் குழந்தைக்கு இந்தச் சொட்டு மருந்தை அளிக்கலாம்.
எச்.ஐ.பி. பூஸ்டர் (விருப்பத்தின்பேரில்)
எச்.ஐ.பி. பூஸ்டர் தடுப்பூசி போடும்போது ஊசிபோடும் இடத்தில் வலி, சிவந்துபோதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்.
18வது மாதம்
ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி இரண்டாவது தவணை (விருப்பத்தின்பேரில்)

இதை அரசு பரிந்துரைப்பது இல்லை என்றாலும், இந்திய குழந்தைகள் மத்தியில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று பரவலாகக் காணப்படுவதால் ‘இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு’ இதனைப் பரிந்துரைக்கிறது. முதல் தவணைபோலவே, வைரஸ் கிருமி உயிருடன் உள்ளது, இறந்தது என இரண்டு டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இரண்டு வயது
இந்த வயதில் டைஃபாய்ட் மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதில் டைஃபாய்டு தடுப்பூசி மட்டும் கட்டாயம் போடப்படவேண்டும்!
டைஃபாய்டு காய்ச்சல் தடுப்பூசி (கட்டாயம்)
டைஃபாய்டு பாசிலஸ் என்ற கிருமி மூலம் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தக் கிருமியானது பாதுகாப்பற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும். பொதுவாக சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதிகளில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. வளர்ந்த நாடுகளில் டைஃபாய்டு மிகவும் அரிதான நோய். ஆனால், இன்னும் வளரும் நாடுகள் சுகாதாரச் சீர்கேடு காரணமாக ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நான்கரை முதல் ஐந்து வயது வரை
இந்த வயதில் டி.டி.பி இரண்டாவது பூஸ்டர், ஓ.பி.வி. மூன்றாவது தவணை, எம்.எம்.ஆர். மற்றும் வேரிசெல்லா தடுப்பூசிகள் இரண்டாவது தவணை, டைஃபாய்டுக்கான தடுப்பூசி, மெனிங்கோக்கல் தடுப்பூசி போன்றவை அளிக்கப்பட வேண்டும்.

எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை (கட்டாயம்)
எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது மீசல்ஸ், மம்ஸ், ரூபெல்லா நோய்க் கிருமிகளுக்கு எதிரானது.
எச்சரிக்கை: தடுப்பூசி கொடுத்ததும் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்படலாம்.
ஓ.பி.வி. பூஸ்டர் (கட்டாயம்)
இது போலியோவுக்காக அளிக்கப்படும் வாய்வழிச் சொட்டு மருந்து.
டி.டி.பி. பூஸ்டர் இரண்டாவது தவணை(கட்டாயம்)
இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போட்ட பிறகு காய்ச்சலும், ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம் இருக்கலாம்.
தேவையெனில் போட வேண்டியது
ஷப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி
குறிப்பிட்ட பகுதியில் ஜப்பான் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி பரவுகிறது என்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் ‘ஜப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி’ போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதுவும், எட்டு மாதங்கள் பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பப்பைவாய் புற்று தடுப்பூசி
பெண்களுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தது ஒன்பது வயது முதல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மூன்று தவணைகளில் (0-2-6 மாதங்களில் அல்லது 0-1-6 மாதங்களில்) இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கானது என்றாலும் ஆண்களும் 11 அல்லது 12 வயதுக்கு மேல் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.
தேசியக் குடும்ப நலத்துறை மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் 43.5 சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே 12 மாதங்களுக்குட்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பெறுகின்றனர். அரசு பரிந்துரைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்.
இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைக்கும் மற்ற மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதைச் செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த முடியும்.
இயற்கை நோய்த் தடுப்பு
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. குழந்தைக்கு தாய்ப்பாலே முழு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்.
பிரசவத்துக்குப் பிறகு முதன்முதலில் சுரக்கும் சீம்பால் குறைவாகவே இருக்கும். ஆனால் இதில் அடங்கியுள்ள சத்துகளும், அது தரக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியும் அளவிட முடியாதது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு சீம்பாலைப் புகட்டாமல் இருக்க வேண்டாம்!
குழந்தையின் எடை…
குழந்தைப் பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு எடை குறையும். பிறகு சரியானபடி பால் கொடுத்து, சரியான நேரக்கணக்குக்கு குழந்தை தூங்கி விழித்தால் வாரத்துக்கு 200 கிராம் வீதம் எடை கூடும்.
கவனிக்கவேண்டிய முக்கியமான விஜயங்கள்
சில தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும். 
 தடுப்பூசி போடவேண்டிய காலகட்டத்தில் குழந்தைக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அல்லது வேறு எதாவது உடல் நலப் பிரச்னை இருந்தால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். தடுப்பூசியைத் தள்ளிப்போடவும்வேண்டாம். குழந்தைக்கு உள்ள உடல் நலப்பிரச்னைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே நல்லது.

  குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து போடவேண்டாம். அதேபோல் கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம்! டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, முதலில் அவற்றைச் சரிபடுத்திய பிறகு தடுப்பூசி அளிக்க வேண்டும்.
  மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளி மிகவும் முக்கியமானது. அதிலும் நான்கு வார இடைவெளியில் டி.பி.டி. தடுப்பூசி மற்றும் ஓ.பி.வி. சொட்டு மருந்து போடவேண்டும் என்பது அவசியம்.
  எல்லா தடுப்பூசியும் முழுதாகப் போடப்பட்ட குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்களுக்கு டிடி (டெட்டனஸ் டாக்ஸாய்ட்) கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. டி.பி.டி. பூஸ்டர் மீதம் இருக்கும்போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே போடப்பட்ட பூஸ்டர் டோஸ் டெட்டனசில் இருந்து உங்கள் குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கும்.
  குழந்தைக்கு ஊசி போட புட்டத்தை விட தொடையே சிறந்த இடம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துதல் கூடாது. பெற்றோர்கள் இதை உறுதிப்படுத்துவது நல்லது. ஊசிப் போட்ட இடத்தில் சில குழந்தைகளுக்கு சிறு வீக்கம் தென்படும். இது பிரச்னையும் இல்லை. அதற்கு க்ரீம், மருந்து போடத்தேவையும் இல்லை.

Thursday, June 18, 2015

தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம்


தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம் அறிமுகம்
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கவும் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து (18.06.2015) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
இந்தியாவில் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.மேலும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் புகார் அளிப்பதற்கு வசதியாகவும், அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
புகார் தெரிவிக்க ஆறு வழிகளை பின்பற்றலாம்.

* 'பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்யப்படக் கூடிய ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை https:/play.google.com/store/apps/details?id=com.uniphore.ecpublic&hl=enல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* enetra@chennaicorporation.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் அனுப்பலாம்.
* 94441 23456 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்.
* '1950' என்ற டெலிபோன் எண்ணை அழைக்கலாம்.
* மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் அனுப்பலாம்.
* தேர்தல் உதவி மையங்களில் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம்; இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

புகார் விவரம், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் 45 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் 2 முதல் 24 மணி நேரத்திற்குள், புகார்தாரருக்கு தெரிவிக்கப் படும்.

'இ - நேத்ரா' திட்டம் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதி யில் அறிமுகப்படுத்தப்படுகிறது, என்றார்.

Wednesday, June 17, 2015

ஸ்கேன் ரிப்போர்ட்


ஸ்கேன் ரிப்போர்ட் பற்றி தெரிந்து கொள்வோமா?
ஸ்கேன் ரிப்போர்ட்

“கழுத்து வலிக்குதேனு டாக்டர்கிட்ட போனேன்… உடனே, ஸ்கேன் எடுக்கச் சொல்லிட்டார். சாதாரண கழுத்து வலி, தலைவலிக்குக்கூட இப்ப ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கு” என்று  புலம்புவார்கள் பலர்.  உண்மையில் ஸ்கேன் என்பதன் மருத்துவப் பயன்பாடு என்ன? சின்னச்சின்ன உபாதைகளுக்குக்கூட ஸ்கேன் தேவையா என்ன?
“நாடி பிடித்து நோய்களைக் கண்டறிந்த காலத்தில், மனிதனைத் தாக்கிய நோய்களுக்கும் ஒரு வரைமுறை இருந்தது. இதனால், ‘இந்த நோய்… இப்படித்தான் வெளிப்படும்…’ என்று அப்போது வரையறுக்க முடிந்தது. ஆனால், இன்றோ காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரைக்கு கட்டுப்படா விட்டால், அது பன்றிக் காய்ச்சலா? பறவைக் காய்ச்சலா? டைபாய்டா? மலேரியாவா? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தாண்டி, உடலுக்குள் இருக்கும் உறுப்புகளுக்குள் என்ன நடக்கிறது என்பதையும் தாண்டி, உறுப்புகளின் ஒவ்வொரு செல்லிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
தேவை
உடலுக்குள் இருக்கும் உறுப்புகளையும் அந்த உறுப்புகளுக்குள் நடைபெறும் இயக்கத்தையும், 3-டி வடிவத்தில் வீடியோவாகவும், படங்களாகவும் ‘ஸ்கேன்’ காட்டிவிடும். அதன் பிறகுதான், அதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் முடிவுசெய்கின்றனர். விபத்து, மயக்கம், கட்டிகள், வயிற்றுக்கோளாறு என்ற அடிப்படையில் அவை பற்றி அறிய அல்ட்ராஸ்கேன், சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், ஆஞ்சியோகிராம், மேமோகிராம், பெட் ஸ்கேன் என பிரத்யேகக் கருவிகள் வந்துவிட்டன.
ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், துல்லியமாக நோயின் தன்மை, எந்த இடத்தில் உருவாகி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தக் காலத்தில் ஒருவருக்கு வயிற்றுவலி வந்தால், வயிற்றுக்குள் என்ன நடக்கிறது? ஏன் அவருக்கு வயிற்று வலி வந்தது என்பதைப் பார்க்க முடியாது. அவர் சொல்லும் ஒரு சில தகவல்களை வைத்து, ஒரு கணிப்பில் மருத்துவம் பார்க்கப்பட்டது. தற்போது ஸ்கேன்செய்து பார்ப்பதன் மூலம் அனைத்தையும் கண்டறிய முடியும்.
கட்டாயமா?
டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ‘தேவை’ என்ற நிலையில் ஸ்கேன் செய்து பார்த்துவிட வேண்டும். இல்லை எனில், ‘கட்டாயம்’ என்ற ஒரு நிலை வரும். அப்போது பார்க்கும்போது, நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் நோய் முற்றிவிடக்கூடும். மேலும், நோயின் வீரியமும் அளவும் குணப்படுத்த முடியாத நிலையை எட்டியிருக்கும்.
ஒரு சில ஆயிரங்களுக்காக, நமக்கெல்லாம் அந்த நோய் வராது என்று அசட்டுத்தனமாக இருந்துவிட்டால், அதன் பிறகு பல லட்சங்களையும் மிகப் பெரிய அவஸ்தைகளையும் அனுபவிக்க வேண்டி வரும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன்
கர்ப்பிணிகளுக்குச் செய்யும் ஸ்கேன், இரண்டு உயிர்களுக்கானது. எனவே, கூடுதல் கவனம் தேவை. கர்ப்பிணிகளுக்கு கதிர்வீச்சுப் பாதிப்பு இல்லாத அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மட்டுமே செய்யப்படும். கருத்தரித்த காலத்தில் இருந்து முதல் நான்கு வாரங்களுக்குச் செய்யப்படும் ஸ்கேன் மூலம்,  கரு சரியாகக் கருப்பையில்தான் உருவாகி உள்ளதா, அல்லது கருக்குழாயில் தங்கி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு, குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியவும், பாதிப்பு ஏதேனும் உள்ளதா  என அறியவும் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தனை ஸ்கேன்தான் எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது.
11 வாரம் 14வது வாரத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை அறியவும், 21 முதல் 24 வாரங்களுக்குள் குழந்தையின் முழு வளர்ச்சியை அறியவும், இறுதியாக 36 முதல் 38 வாரங்களுக்குள் தொப்புள் கொடி சுற்றியுள்ளதா, பனிக்குடத்தில் உள்ள நீரின் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை அறியவும் ஸ்கேன் அவசியம்.

ஸ்கேன் வகைகள்
மேமோகிராம்:  40 வயதைத் தாண்டிய பெண்கள் கண்டிப்பாக, மேமோகிராம் சோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்களின் மார்புப் பகுதியில் சாதரணமாகத் தோன்றும் சிறிய கட்டிகளை, 1 எம்.எம் ஸ்லைஸ் வடிவத்தில் துல்லியமாகக் காட்டும் ஸ்கேன் இது. இதன் மூலம், அவை சாதாரணக் கட்டிகளா? புற்றுநோய்க் கட்டிகளா என்பதை அறிய முடியும்.
சி.டி ஸ்கேன்: மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க சி.டி ஸ்கேன் உதவுகிறது. மூளைக்குள் செல்லும் ரத்தக்குழாய்கள், அதற்குள் நிகழும் மாற்றம் போன்றவற்றை அறிய, இந்த ஸ்கேன் உதவுகிறது. விபத்துகளில் தலையில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சி.டி ஸ்கேன் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகிறது.
ஆஞ்சியோகிராம்: மூளை மற்றும் இதய ரத்தக் குழாயில் என்ன நடந்துள்ளது, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. வயதானவர்கள், உடல் பலவீனமானவர்களுக்கு இதயம் தொடர்பான சில சோதனைகளைச் செய்ய முடியாது. அவர்களுக்கு, ஆபத்பாந்தவன் இந்த ஆஞ்சியோகிராம்தான். இவற்றின் மூலம்தான், இதயம் மற்றும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்க்குள் ஏற்பட்டுள்ள அடைப்பு (ஸ்டினோஸிஸ்) மற்றும் விரிவு (அனியூரிசம்) ஆகியவற்றைக் கண்டறிய முடிகிறது.
எம்.ஆர்.ஐ ஸ்கேன்: கதிர்வீச்சு இல்லாமல், காந்தப் புலத்தை வைத்து செய்யப்படும் பரிசோதனை. இதன்மூலம் மூளையின் செய்திறனைக்கூட துல்லியமாக அறிய இந்த ஸ்கேன் பயன்படுகிறது. கர்ப்பிணிகளுக்குக்கூட பாதிப்பு இல்லாத ஸ்கேன் இது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம்.
பெட் ஸ்கேன்:  இன்றைய தேதியில் பெட் ஸ்கேன்தான் இந்த உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. புற்றுநோய் மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. சி.டி., எம்.ஆர்.ஐ போன்றவற்றின் உதவியால், ஓர் இடத்தில் கேன்சர் தாக்குதல் இருப்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால், அது உடலின் எந்தெந்த இடத்தில் பரவி உள்ளது என்பதைக் கண்டறிய உதவுகிறது பெட் ஸ்கேன். எலும்பு, மூளை, நுரையீரல் போன்றவற்றில் பரவி உள்ள கேன்சர் செல்களைத் துல்லியமாக வெளிச்சம் போட்டுக்காட்டும். இதற்காக ‘ரேடியோ நியூக்ளியெட்’ என்ற மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து கேன்சர் செல்கள் எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் போய் படிந்துவிடும். அதன் பிறகு, ‘பெட் ஸ்கேன்’ செய்து பார்க்கும்போது, கேன்சர் செல்களில் படிந்துள்ள ‘ரேடியோ நியூக்ளியெட்’ பிரகாசமாக ஒளிர்ந்து, கேன்சர் பரவி உள்ள அனைத்து இடங்களையும் காட்டிக்கொடுத்துவிடும். அதுபோல், கேன்சருக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை, ஒருவரின் உடல் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டது என்பதை அறிய இன்டர்வெல் ஸ்கேன் பார்ப்பதற்கும் பெட் ஸ்கேன்தான் உதவுகிறது.

Monday, June 15, 2015

12 ரூபாய்க்கு விபத்து பாலிசி!


12 ரூபாய்க்கு விபத்து பாலிசி!
***************************************
அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி ?பாரதி தம்பி
'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப் பரவும் செய்தி. அரசின் விளம்பரங்களும் அமோகமாக இருப்பதால், ஆளாளுக்கு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். '12 ரூபாய்க்கு ரெண்டு லட்ச ரூபாய் பாலிசியா? அப்படின்னா எனக்கு 10 பாலிசி போடுங்க’ என்கிறார் ஒருவர். 'ஏற்கெனவே நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோமே... அதுவும் இதுவும் வேறு வேறா..?’ என்பது பலரின் குழப்பம். சந்தேகங்களுக்கு விடை தேடுவோமா? 
இப்போது மத்திய அரசு இரண்டுவிதமான காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஒன்று,விபத்துக் காப்பீட்டுப் பாலிசி. இதில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம். குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, கை, கால், கண் ஆகிய உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடாக அதிகபட்சமாக 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் செய்ய முடியும். விபத்தில் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் வரையிலும் க்ளெய்ம் செய்யலாம். '12 ரூபாய்தானே’ என்பதற்காக 10, 20 பாலிசிகள் எடுக்க முடியாது. ஓர் ஆளுக்கு ஒரு பாலிசிதான். அதற்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு அவசியம். பிரீமியம் தொகை, ஒவ்வோர் ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்துதான் எடுக்கப்படும். இந்தத் தொகைத் திருப்பித் தரப்பட மாட்டாது.
'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்பது இரண்டாவது திட்டம். அதாவது, 'பிரதம மந்திரி வாழ்க்கை ஒளி காப்பீடுத் திட்டம்’. இதன்படி ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசிதாரர் எந்தக் காரணத்தினால் மரணம் அடைந்திருந்தாலும் அவரது நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வருடாவருடம் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இதில் கட்டப்படும் பிரீமியமும் திரும்பத் தரப்பட மாட்டாது.
'இந்த இரண்டு பாலிசிகளுக்கும் என்ன வித்தியாசம்? ஏன், ஒன்றில் அவ்வளவு குறைந்த தொகை..?’ என்றெல்லாம் பலப்பல குழப்பங்கள் நிலவுகின்றன. காப்பீடு தொடர்பான அடிப்படை விவரங்களை இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன் விளக்குகிறார்.
''இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோமென்ட் பாலிசி (Endowment policy). இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது. ஆனால், முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் என்றாலே ஒரு முதலீடு என்பதைப்போல நம் ஊரில் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
முதலீடு செய்ய லாபகரமான வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டுகிறீர்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பீர்கள்.          20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும் எனச் சொல்வார்கள். இது 4 முதல் 6 சதவிகித லாபம்தான். ஆனால், பாதுகாப்பான பி.பி.எஃப் திட்டத்தில் 8.5 சதவிகிதம் உறுதியான லாபம் கிடைக்கிறது. அதனால் இன்ஷூரன்ஸ் என்பதை முதலீடாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.
உண்மையில் டேர்ம் பாலிசிதான் இன்ஷூரன்ஸின் முழுமையான அர்த்தத்தை வழங்குகிறது. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ஒருவேளை இறந்துவிட்டால், அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு அவர் எவ்வளவு சம்பாதித்துத் தருவாரோ, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதற்கான காப்பீடு இது. ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 10-ல் இருந்து         15 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். உங்கள் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய் என்றால், 30 முதல் 45 லட்சம் வரையிலும் டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
விபத்துக் காப்பீடுத் திட்டம் என்பது, முழுக்க முழுக்க விபத்து நேர்ந்தால் மட்டுமே க்ளெய்ம் செய்யக்கூடியது. இதற்கான பிரீமியம் குறைவுதான். உதாரணத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு தோராயமாக 200 ரூபாய் பிரீமியம் வரும். உங்களின் வருமான வரம்பைப் பொறுத்து, விபத்துக் காப்பீடு தொகையும் முடிவு செய்யப்படும். இதில் பிரீமியம் எனக் கட்டும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறலாம். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு பணம் சென்றுவிடும். டேர்ம் பாலிசி எடுக்கும்போதே, விபத்துக் காப்பீடையும் அதனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு 'ரைடர்’ எனப் பெயர்.
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அல்லது மெடிக்ளெய்ம் என்பது மற்றொரு முக்கியமான பாலிசி. நோய்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய பாலிசி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து 3 முதல்           5 லட்சம் ரூபாய்க்காவது மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது.
இன்றைய சூழலில் ஒருவர் விபத்துக் காப்பீடு பாலிசி, டேர்ம் பாலிசி, மெடிக்ளெய்ம் பாலிசி ஆகிய மூன்று பாலிசிகளை வைத்திருப்பது அவசியம். விபத்துக் காப்பீடுப் பாலிசியை தனியாக எடுக்காமல், டேர்ம் இன்ஷூரன்ஸுடன் ஒரு ரைடராகச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி ஒருவரிடம் எத்தனை எண்டோமென்ட் பாலிசி இருந்தாலும், அத்தனையையும் அவர் க்ளெய்ம் செய்ய முடியும்!''
ஏன்... எதற்கு... எப்படி?
தற்போது அரசு அறிவித்துள்ள விபத்துக் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 12 ரூபாய், ஆயுள் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 330 ரூபாய். இரண்டிலும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அடிப்படை சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இங்கே...
''யாரெல்லாம் இந்த பாலிசிகளை எடுக்க முடியும்?''
''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் எவரும் இதில் சேரலாம்!''  
''சேர என்ன செய்ய வேண்டும்?''
''நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று விசாரித்தால் விண்ணப்பம் தருவார்கள். அதை நிரப்பிக்கொடுத்தால் போதுமானது!''
''வயது வரம்பு என்ன?''
''12 ரூபாய் பிரீமியம் கட்டும் விபத்துக் காப்பீடு பாலிசியில் சேர, 18-70 வயது உடையவராக இருக்க வேண்டும். 330 ரூபாய் பிரீமியம் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசியில் சேர்வதற்கு 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்!''
''ஒருவர், எத்தனை பாலிசிகள் எடுக்கலாம்?''
''ஒரு நபர் ஒரு விபத்துக் காப்பீடு பாலிசியும்,
ஒரு டேர்ம் பாலிசியும் மட்டுமே எடுக்க முடியும்!''
''ஒருவேளை ஒருவர் மூன்று வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், ஒவ்வொன்றின் மூலமாகவும் ஒரு பாலிசி எடுக்கலாமா?''
''முடியாது. அப்படியே எடுத்தாலும் ஏதேனும்
ஒரு பாலிசிதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்!''
''இந்த பாலிசி எனக்கு மட்டும்தானா... குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாமா?''
''குடும்பத்தினருக்குக் காப்பீடு அளிக்காது. விபத்துக் காப்பீடு பாலிசியின்படி விபத்து ஏற்பட்டால் அவரோ, வாரிசுதாரரோ இழப்பீட்டைப் பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசியின்படி, மரணம் ஏற்பட்டால் அவர் குறிப்பிட்டுள்ள வாரிசுக்கு, அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்!''
''இப்போது பாலிசியில் சேர்ந்துவிட்டு, வேண்டாம் என்றால் இடையில் விலக முடியுமா?''
''இது தொடர்பான அறிவிப்புகளில், பாலிசியை இடையில் நிறுத்திக்கொள்வது குறித்த விவரங்கள் இதுவரை குறிப்பிடப்படவில்லை!''
''பாலிசி அமைந்த வங்கிக் கணக்கை மாற்ற வேண்டியிருந்தால் என்னவாகும்?''
''நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை, அந்த         ஓர் ஆண்டுக்கானது மட்டுமே. எனவே அடுத்த ஆண்டு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றாலோ, நீங்கள் அந்த பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றாலோ,  உங்கள் பாலிசி காலாவதியாகிவிடும். வேறொரு வங்கிக் கணக்கின்மூலம் புதிதாக விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்!''
''க்ளெய்ம் செய்ய, என்ன செய்ய வேண்டும்?''
''விபத்துக் காப்பீடு பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய, விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்., காப்பீடுத் தொகை செலுத்தியதற்கான ரசீது, விபத்து மூலம் மரணம் நேர்ந்திருந்தால் மரணச் சான்றிதழ்... ஆகியவற்றை எந்த வங்கிக் கணக்கின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். 330 ரூபாய் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசிக்கும் இதே நடைமுறைதான்!''
நன்றி : ஆனந்த விகடன் - 14.06.2015 

Thursday, June 11, 2015

இனி ஈஸி ஆகுமா இன்கம்டாக்ஸ் ஃபைலிங்?


எளிதாகும் நடைமுறைகள்…இனி ஈஸி ஆகுமா இன்கம்டாக்ஸ் ஃபைலிங்?

By vayal on 
ருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது என்றாலே பெரும் சவாலான விஷயம் என்கிற நிலைதான் நேற்று வரை இருந்து வந்தது. ஏறக்குறைய 15 பக்கங்களை நிரப்பி, வரி கணக்குத் தாக்கலை சரியாக பின்பற்றி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதற்கு பேசாமல் வரியே கட்டிவிடலாம் போலிருக்கிறது என்று புலம்பித் தீர்த்தவர்கள்தான் அதிகம்.
இனி இந்த கஷ்டம் இல்லை. கடினமான வருமான வரி கணக்குத் தாக்கலை எளிமையாக்கி மூன்று பக்கத்துக்குள் வரி கணக்குத் தாக்கலை முடித்துவிடலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும், வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வழக்கமான கெடு தேதியை ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 31-க்கு நீடித்து இருக்கிறது. மே 31, ஞாயிற்றுக்கிழமை அன்று நிதி அமைச்சகம், வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்தது. இதுபோல, வரி கணக்குத் தாக்கல் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
 வெளிநாட்டு பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமா? 
வரி கணக்குத் தாக்கல் செய்யும் வரிதாரர் வெளிநாடுகளுக்குச் சென்ற விவரங்கள், வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும் என  ஒரு மாதத்துக்குமுன் மத்திய அரசு சொன்னது. இதற்கு வரிதாரர்கள் மற்றும் அனைத்துத் தரப்பில் இருந்தும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், வெளிநாட்டு பயண விவரங்களை ரிட்டர்ன் படிவத்தில் குறிப்பிடத் தேவை இல்லை என மத்திய அரசு தற்போது தெளிவுப்படுத்தி இருக்கிறது. இதற்குப் பதிலாக பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட்டால் போதும் என்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் சொத்து விவரம்!
இதற்குமுன் (2011-12-ம் ஆண்டு முதல்) வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் விவரத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த வெளிநாட்டு சொத்து மூலம் ஏதாவது வருமானம் வந்தால் மட்டுமே அதுபற்றி வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என்று மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் சொத்து இருக்கும்பட்சத்தில் அதன்மூலம் வருமானம் வரவில்லை என்றாலும்கூட ரிட்டர்ன் படிவத்தில் குறிப்பிடுவது அவசியம்.
வரிக் கணக்குப் படிவங்களில் மாற்றங்கள்!
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பவர்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதில் அதிக நிவாரணம் அளிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு பிசினஸ் அல்லது நிபுணத்துவ வருமானம் அல்லது மூலதன ஆதாயம் எதுவும் இல்லை என்றால் அவர்களுக்கு என புதிய படிவம் ஐடிஆர்2ஏ (ITR2A ) கொண்டு வரப்படுகிறது. இதில், மூலதன ஆதாயங்கள் குறித்துக் கேள்விகள் எதுவும் கேட்கப்பட்டிருக்காது.
இது தவிர, ஐடிஆர்2 (ITR2), ஐடிஆர்2ஏ(ITR2A) படிவங்கள் மொத்தமே மூன்று பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களும் வரிதாரர் தாமாகவே எளிதாக நிரப்பக்கூடியதாக இருக்கும் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. இதற்குமுன் இந்தப் படிவங்கள் 14 பக்கங்களைக் கொண்டிருந்தது.
ஐடிஆர்2 படிவத்தில் இதற்குமுன் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டது, எத்தனை முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது, வெளிநாட்டில் சொந்தப் பணம் எவ்வளவு செலவிடப்பட்டது என்கிற விவரத்தை குறிப்பிட வேண்டியிருந்தது. இப்போது ஐடிஆர்2 மற்றும் ஐடிஆர்2 ஏ-ல் பாஸ்போர்ட் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும்.
 வெளிநாட்டில் உள்ள சொத்து மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்தால் 3 முதல் 7 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மேலும், வெளிநாட்டிலுள்ள சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வரி கணக்கு விவரத்தில் தெரிவிக்கவில்லை என்றால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரையில் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பாஸ்போர்ட் எண் மூலம் ஒருவர் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், எத்தனை முறை குறிப்பிட்ட நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்கிற விவரத்தை மத்திய அரசு எளிதில் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில், உண்மையில் வரி ஏய்ப்பு செய்பவரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எனவேதான், அது வெளிநாட்டு பயண விவரங்களை விரிவாகத் தெரிவிக்க வேண்டாம். பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்று சொல்லி உள்ளது. இதில், வரி தாரருக்கும் ஒரு லாபம் இருக்கிறது. அவர் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்பவராக இருந்தால், பயண விவரங்கள் மற்றும் செலவு விவரங்களை முழுமையாக நினைவில் வைத்து, அதனை வருமான வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிடத் தேவையில்லை. எனவே, இந்த மாற்றம் வரவேற்கக் கூடியதாக இருக்கிறது.
 வங்கிக் கணக்கு விவரம்!
ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட வருமான வரிப் படிவத்தில் நிதி ஆண்டு இறுதியில் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையைக் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப் பட்டிருந்தது. அதற்குப் பதில், வங்கிக் கணக்கு எண் (சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு எண்), ஐஎஃப்எஸ் கோடு எண்ணை படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாத (dormant) கணக்குகள் பற்றிய விவரங்களையும் வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என இதற்குமுன் சொல்லப்பட்டிருந்தது.
இப்போது இந்த விவரத்தை குறிப்பிடத் தேவையில்லை. வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தை   மட்டும் குறிப்பிட்டால்  போதும்.
மாத சம்பளம் மட்டுமே இருக்கிறவர்கள் 4 பக்கங்களைக் கொண்ட ஐடிஆர்1 (சஹாஜ்) படிவத்தில் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்4எஸ் (சுகம்) கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கால அவகாசம் அதிகரிக்க வேண்டும்!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள், சாதகமா அல்லது பாதகமா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் சதீஷ்குமார் விளக்கிச் சொன்னார்.
‘‘வரி கணக்குப் படிவம் மூன்று பக்கங்களாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதில் அதிக விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒருவருக்கு ஐந்து வங்கிகளில் கணக்கு இருந்தால், அவை அனைத்தின் விவரமும் ரிட்டர்ன் படிவத்தில் கணக்கு எண், கிளையின் விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மேலும், ஜாயின்ட் அக்கவுன்ட் இருந்தாலும் அந்த விவரத்தையும் குறிப்பிட வேண்டும். அது வரிதாரருக்கு அதிக வேலை வைக்கும்.
ஐடிஆர் படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்கிற ஸ்கிமா (schema) இன்னும் தயாரிப்பு நிலையில்தான் இருக்கிறது. இந்த நிலையில் எப்படி ஐடிஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்ப முடியும்? பொதுவாக, ஜூலை 31, வரி கணக்குத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி. அந்த வகையில் ஏப்ரல் 1 தொடங்கி, ஜூலை 31 வரைக்கும் நான்கு மாதங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்ய வரிதாரருக்கு அவகாசம் கொடுக்கப்படும். ஆனால், இப்போது ஏறக்குறைய இரண்டரை மாதத்தை மத்திய அரசு ஐடிஆர் படிவம் தயாரிப்புக்கே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், வரி கணக்குத் தாக்கலுக்கான காலம் ஒரு மாதம் மட்டுமே நீடிக்கப்பட்டிருப்பது நிச்சயம் வரிதாரர்களுக்கு கஷ்டத்தையே தரும். எனவே, என்றைக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறதோ, அதிலிருந்து நான்கு மாதங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்ய அனுமதிப்பது சரியாக இருக்கும்.
இப்போது செய்யப் பட்டிருக்கும் ஆகஸ்ட் 31 வரைக்குமான நீடிப்பு மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் ரூ.1 கோடிக்கு கீழே டேர்னோவர் கொண்ட நிறுவனங்களுக்குதான். ரூ.1 கோடிக்கு மேல் டேர்னோவர் கொண்ட நிறுவனங்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள். இப்போது இரண்டரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர்களை அரசு மறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை.
அரசு ஒவ்வொரு ஆண்டும் இப்படி நிதி ஆண்டு முடிந்தபிறகு வரி கணக்குத் தாக்கல் செய்யப் போகிற நிலையில்தான் வரி கணக்குப் படிவங்களில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது அல்லது கூடுதல் விவரங்களைப் படிவத்தில் நிரப்ப வேண்டும் என்று சொல்கிறது. இது வரிதாரர்களுக்கு சிரமத்தையே தரும். முன்னரே குறிப்பிட்டிருந்தால், அந்த விஷயங்கள் தொடர்பான விவரங்களை முன்பே குறித்து வைத்துக்கொள்வார்கள்.
இது ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது உதவியாக இருக்கிறது. இனிவரும் ஆண்டுகளிலாவது இப்படி வரிதாரர்களை வதைப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
எது எப்படியோ ஐடிஆர் படிவங்கள், வரி கணக்குத் தாக்கல் சாஃப்ட்வேர் வெளியானால்தான் வருமான வரி கணக்கு தாக்கல் சுகமாக அமையுமா அல்லது சோகமாக இருக்குமா என்பது தெரியும்!
ரியல் எஸ்டேட்டை பாதிக்கும் அரசு நடவடிக்கை!
 மனை, சொத்து வாங்கும்போது ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகத் தரக்கூடாது. அப்படித் தந்தால் 100% அபராதம் விதிக்கப்படும். ரூ.20,000-க்கு மேல் தொகை செல்லும்போது, காசோலை அல்லது கேட்பு காசோலையாகதான் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் நிபந்தனை இருக்கிறது. விவசாயிகளுக்கு விவசாயம் தவிர வட்டி, வாடகை, சம்பளம் என எந்த வருமானமும் இருக்கக்கூடாது. இவை ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே மந்தநிலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் துறையை மத்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் மந்தமாக்கிவிடும் என ஆடிட்டர் சதீஷ்குமார் தெரிவித்தார். ‘‘ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க, புரமோட்டருக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக முன்பணம் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது புதிய சட்டப்படி புரமோட்டர் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். வீடு பிடிக்காமல் பணமாக இந்த ஒரு லட்சத்தைத் திரும்ப வாங்கினால், அதற்கும் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். ரியல் எஸ்டேட்டில் வழக்கமாக ரூ.5 லட்சம் வரைக்கும் ரொக்கமாகக் கையாளப்படும். இந்த நிலையில் இது ரூ.20,000-ஆகக் குறைக்கப்படும்போது, ரியல் எஸ்டேட் தொழில் இன்னும் மந்தமாக வாய்ப்புள்ளது” என்றார்.

அடல் பென்ஷன் திட்டம்


அடல் பென்ஷன் திட்டம்… ஏன்? எதற்கு? எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும் என்று பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தந்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வங்கிப் பரிமாற்றம் மற்றும் அரசுக் கணக்குகள் பிரிவின் இணைப் பொது மேலாளர் வி.வி.கணேசன்.
‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 – 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.
யார் இணையலாம்?
18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும். 
பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.
ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.
எப்படி இணைவது?
எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.
யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?
நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை!)
முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.
எப்படி பணம் செலுத்துவது?
ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
எப்போது பணம் எடுக்கப்படும்?
நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.
தொகையை அதிகரிக்கலாமா?
வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.
பணம் கட்டாவிட்டால்..?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.
யார் நிர்வகிக்கிறார்கள்?
இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
என்ன உறுதி?
நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.
எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.
60 வயதுக்குப் பின் இறந்தால்…?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.
அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.
உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 – 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.
சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?
இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.
வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.
தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது” என்றார் கணேசன்.