disalbe Right click

Monday, January 16, 2017

தழும்பை மறைக்கும் லேசர் சிகிச்சை


தழும்பை மறைக்கும் லேசர் சிகிச்சை

கல்லூரி மாணவி ஒருவருக்கு, ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், முகத்திலும், கழுத்திலும் காயமேற்பட்டு, சில நாட்களில் சரியானது. ஆனால், காயத்தால் ஏற்பட்ட தழும்பு மட்டும் ஆறாமல், அவரையும், அவரது பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
இவ்வகையான காயங்களால், ஆறு மாதத்தில் தழும்பு பெரிதாவது நின்றுவிடும். இதை, 'ஹைப்பர் ட்ராபிக்' தழும்பு என்போம். ஆறு மாதங்களுக்கு பின்னும் வளர்ந்து கொண்டே செல்லும் தழும்புகளை, 'கீலாய்டு' தழும்பு என்கிறோம். இத்தகைய தழும்புகள், பாதிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, சாதாரண திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
விபத்து, தீக்காயம் அல்லது சாதாரண காயங்கள் பட்ட இடத்தில் திசுக்கள் இறுகுவதால், செயல்பட முடியாமல் போகும். அங்கிருக்கும் நரம்புகளும் பாதிப்படைவதால், வலி இருந்து கொண்டே இருக்கும்; பார்க்கவும் அருவருப்பாக இருக்கும். இதற்காக, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 
இந்த சிகிச்சையில், உடலின் மற்ற பகுதியில் இருந்து தோல் மற்றும் சதையை அறுத்தெடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இதனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடம் மட்டும் அல்லாது, அறுவை சிகிச்சைக்காக சதை எடுக்கப்பட்ட இடமும் குணமாக வேண்டும். 
ஆனால், தற்போது, 'லேசர் ஸ்கார்' விரிவாக்கம் சிகிச்சையின் மூலம், பாதிக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்டிருக்கும் நிறமாற்றத்தை சரிசெய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், அதிக அழுத்தமாக இருக்கும் இடத்தை மென்மையாக்கலாம். 
இதில், மிக சாதாரண மயக்க நிலையிலும், மரத்துப் போகும் ஊசியும் போட்டு, தீப்புண் தழும்பு, நிறமாற்றம், வளர் தழும்பு, திசுவறைப் பெருக்கம், அறுவை சிகிச்சை தழும்புகள், புற்று நோய்க்காக எடுத்துக் கொள்ளப்பட்ட சிகிச்சையில் ஏற்படும் தழும்புகளுக்கும் சிகிச்சை அளிக்கலாம்.இதற்காக, ஒரு நாள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து, வீட்டிற்கு திரும்பி விடலாம். இந்தச் சிகிச்சையின் சிறப்பே, தழும்புகளை அகற்றுவது தான்!
எஸ்.கிருத்திகா ரவீந்திரன், 
அழகு சீரமைப்பு நிபுணர், சென்னை.

74027 23411
நன்றி : தினமலர் நாளிதழ் - 13.01.2016

Sunday, January 15, 2017

திருநங்கைகள் நல வாரியம்


திருநங்கைகள் நல வாரியம்

இந்த உலகத்தில் ஆணாகவுமில்லாமல், பெண்ணாகவுமில்லாமல் 
திருநங்கையாக மாறி, பிறந்த வீட்டிலும், சமூகத்திலும் ஆதரவு இல்லாமல்  பரிதாபமாக வாழ்கின்ற இவர்களுக்கு நமது தமிழக அரசு ஒரு நல வாரியத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை சிறக்க உதவி வருகின்றது. உங்களுக்குத் தெரிந்து யாராவது இருந்தால், அவர்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி கீழ்க்கண்ட சலுகைகளை பெற உதவுங்கள்.

*********************************அன்புடன் செல்வம்பழனிச்சாமி*******

மாற்றுப்பாலினத்தைச் சார்ந்த 4 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப் பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது.  

இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம்  வரை கடனுதவி,

தையல் இயந்திரங்கள் வழங்குதல்,

சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் திருநங்கைகள்  தங்குவதற்கென தற்காலிக விடுதி,

அடையாள அட்டை

இலவச பட்டா வழங்குதல்,

வீடு  வழங்கும் திட்டம்,

சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,

ரேஷன் கார்டு  வழங்குதல்

வாரியம் வழங்கி்ய உதவிகள்

இந்த வாரியமானது கடந்த 2012 முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை இனம் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு என அடையாள அட்டைகளையும் வழங்கி வருகிறது.
இதுவரை, சென்னை-794, கோவை-332, மதுரை-274, நாமக்கல்-159, விழுப்புரம்-175, சேலம்-189, விருதுநகர்-175 என 32 மாவட்டங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 719 மாற்றுப்பாலினத்தவர்களை கண்டறிந்து உறுதிசெய்துள்ளது.

மேலும், திருநங்கைகள் சமூகத்தில் சக மனிதர்களைப் போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது.

அடையாள அட்டை

தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் சமூகநலம், சத்துணவு திட்டத் துறை சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில், பிறப்பு பெயர், அரவாணி பெயர், தற்போதைய, நிரந்தர முகவரி, உறுப்பினர் எண், உறுப்பினர், மாவட்ட சமூக நல அலுவலரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன்மூலம், 1,559 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 1,084 திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டாவும், 108 திருநங்கைகளுக்கு தையல் இயந்திரமும், 659 திருநங்கைகளுக்கு காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்பு வீடுகள்

133 திருநங்கைகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ 99 லட்சத்து 75 ஆயிரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்

40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
திருநங்கைகள் சுய உதவிக்குழு

இதுவரை, 442 திருநங்கைகளுக்கு ரூ. 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெட்டிக்கடை, மளிகைக்கடை, உணவகம், துணி வியாபாரம், பால் வியாபாரம், வேளாண் பொருள்கள் விற்பனை, அழகு நிலையம், சோப்பு வியாபாரம், செங்கல் சூளை அமைத்தல் உள்ளிட்ட சுய தொழில்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன
தகவல் : http://ta.vikaspedia.in/ இணையதளத்திலிருந்து.

ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்ய


ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்ய 
வாடகை வீடுகளில்தான் அதிக மக்கள் வசித்து வருகிறார்கள். தொழில் நிமித்தமாகவோ அல்லது வசதி குறைவு காரணமாகவோ அடிக்கடி வீடுகளை மாற்ர வேண்டிய சூழ்நிலைக்கு நாம் அனைவருமே ஆளாகிறோம்.

வீடு மாறினால், நமது முகவரியும் தானாகவே மாறிவிடுகிறது. நாம் பயன்படுத்துகின்ற குடும்ப அட்டை, கேஸ் இணைப்பு அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில்  நமது புதிய முகவரியை மாற்றுவது மிகவும் அவசியம். 

முகவரி மாற்றம் செய்யாவிட்டால்  சில சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆகையால், வீடு மாறினால் ஒவ்வொருவரும் தஙளுக்குண்டான மேற்கண்ட ஆவணங்களில்  கண்டிப்பாக முகவரி மாற்றம்  செய்ய வேண்டும். 

கேஸ் இணைப்பு அட்டையில் முகவரி மாற்றம் செய்ய

இதனை மாற்றம் செய்ய யாரும் சொல்ல வேண்டியதில்லை. வீடு மாறியவுடன் கேஸ் இணைப்பு அட்டையில் எல்லோருமே தானாகவே முகவரி மாற்றம் செய்வதுவிடுவார்கள். குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்த பத்திர நகல் அல்லது மின்கட்டண நகல் அல்லது நகராட்சி வீட்டுவரி ரசீது நகல் இணைத்து தங்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கும் ஏஜென்சியின் மேலாளரிடம்  விண்ணப்பிக்க வேண்டும். உடனே மாற்றம் செய்து தந்து விடுவார்கள்.   இதில் சிரமம் ஏதுமில்லை.
குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய

தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தத்தின் நகல் அல்லது நகராட்சியில் கட்டிய வீட்டுவரி ரசீது, முகவரி மாற்றம் செய்யப்பட்ட  கேஸ் இணைப்பு அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து தங்களது குடும்ப அட்டை ஒரி்ஜினலை இணைத்து ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும். 
சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் அ்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பத்தை  நேரில் கொடுப்பவர்களுக்கு அவர்கள் ஒரு டோக்கன் வழங்குவார்கள். அதில் எந்த தேதியில் வாங்க அங்கு மறுபடியும் வர வேண்டும் என்று குறித்திருப்பார்கள். ஒரு வாரத்திற்குள் தங்கள் குடுமப அட்டையில் புதிய முகவரியை எழுதி “சீல்” வைத்து கொடுப்பார்கள்.

அதன் பிறகு தங்கள்  பழைய முகவரிக்குட்பட்ட ரேசன் கடைக்குச் சென்று, அங்குள்ள கோப்பில் தங்கள் பெயரை நீக்க விண்ணப்பிக்க வேண்டும். நீக்கிய பிறகு அதற்கு அவர்களிடம் ரசீது பெற வேண்டும். 

அவர்களிடம் அதனை பெற்று தங்களுடைய புதிய முகவரிக்கு உட்பட்ட ரேசன் கடையிலும் அதனை தெரிவித்து பெயர் பதிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான்  உங்களுக்கு ரேசன் கடையில் பொருட்கள் வழங்குவார்கள்.

 வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய

வேறு சட்டமன்ற தொகுதிக்கு அல்லது அதே தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்குண்டான படிவம் 8 A –ஐ நீங்கள் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
நீங்கள் மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்கள் பகுதிக்குரிய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். 

மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் (படிவம்  8 A ) விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். 

நீங்கள்  உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற விபரத்தை

http://elections.tn.gov.in/ 

என்கிற இணைய தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய

குடும்ப அட்டை நகல்,  மின் கட்டண ரசீது,  நகராட்சியில் கட்டிய வீட்டு வரி ரசீது ஆகியவற்றின் நகலுடன் பழைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் என்.ஓ.சி. (No objection Certificate) ) வாங்கி அதன் நகலையும் இணைத்து புதிய முகவரிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் (கிரேடு  I/II) அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் ஓட்டுநர் உரிமத்தில் பிழையாக உள்ள தனது பெயரையோ, பிறந்த தேதியையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, , முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால், அதற்குண்டான ஆதார நகலையும் இணைத்து, விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். 

வங்கிக் கணக்கில் முகவரி மாற்றம் செய்ய

கணக்கு இருக்கும் வங்கிக்குச் சென்று வங்கிக் கிளையை மாற்றம் செய்து தரக் கோரி குடும்ப அட்டை நகல்,  மின் கட்டண ரசீது,  நகராட்சியில் கட்டிய வீட்டு வரி ரசீது நகல் ஆகியவற்றை இணைத்து உங்களது வங்கியின் மேலாளர் அவர்களிடம் விண்ணப்பித்தால் போதும், உங்கள் வங்கிப் புத்தகத்தில் புதிய முகவரியை பிரிண்ட் செய்து கொடுத்து விடுவார்கள்.
புதிய முகவரி வேறு ஊரில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களது பழைய வங்கியின் மேலாளர் அவர்களிடம் உங்கள் சேமிப்பு கணக்கை புதிய முகவரியிலுள்ள அவர்களது வங்கிக்கு மாற்றம் செய்து தர வேண்டி மேலே கண்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பத்து நாட்களுக்குள் மாற்ரம் செய்து கொடுத்து விடுவார்கள்.

பான்கார்டில் முகவரி மாற்றம் செய்ய 

பான்கார்டில் முகவரி மாற்றம் செய்ய அதன்  
 https://tin.tin.nsdl.com என்ற

இணைய முகவரிக்குச்  சென்று PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும். 

இந்த விண்ணப்பத்தில் "update communication address" என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய

ஆதார் அட்டையில் முகவரி  மாற்றம் செய்ய நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html 

என்கிற இத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் வழியாக அப்டேட் செய்துகொள்ளலாம். 

 ஆன்லைனில் விண்ணப்பித்து இதனை செய்வதற்கு தங்களுக்கு தெரியவில்லை என்றால் அருகிலுள்ள “கம்ப்யூட்டர் செண்டரை” அணுகுங்கள். 

இதன் மூலம் அட்டையில் பிழையாக உள்ள உங்கள் பெயரையோ, பிறந்த தேதியையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, செல்போன் எண்ணையோ  மற்றும் முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால், அதற்குண்டான ஆதார நகலையும் இணைத்து, கொடுத்தால் போதும். 

பதிவுத் தபாலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: http://uidai.gov.in/images/application_form_11102012.pdf

தமிழில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

UIDAI Regional Office
Khanija Bhavan, 
No.49, 3rd Floor,
South Wing Race Course Road, 
Bangalore – 01080-22340862

ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

UIDAI Regional Office,
5th 7th Floor, 
MTNL Building,
B D Somani Marg, 
Cuff Parade, 
Mumbai – 400 005
போ்ன்:  022 – 22186168

மேலும் விவரங்கள் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-300-1947, 
இணையதளம் :help@uidai.gov.in

பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் செய்ய

உங்களியமுள்ள  அனைத்து ஆவணங்களிலும் முகவரியை மாற்றம் செய்துவிட்டு இறுதியாகத்தான் பாஸ்போர்ட் முகவரியை மாற்ற வேண்டும். 
ஏனென்றால், பாஸ்போர்ட் முகவரி மாற்றத்துக்குத் ஆவணங்கள் அதிகம் தேவைப்படுகிறது.
.
முகவரி மாற்றம் செய்யப்பட்ட குடும்ப அட்டை நகல், பான் கார்டு நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஓட்டுநர் உரிமம் நகல் மற்றும் வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து தங்கள் மாவட்டத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் விண்ணப்பிக்கலாம். 

இவற்றுக்கு ஃபார்ம் 2 – ஐ பயன்படுத்த வேண்டும்.

ஆவணங்களில் முகவரியை மாற்ற விரும்புவோர்களின் கனிவான கவனத்திற்கு. 

மேற்கண்ட வரிசைப்படி ஆவணங்களில் முகவரிகளை மாற்ற வேண்டும். அது உங்களுக்கு நேரத்தை மிச்சமாக்கும்.

*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Saturday, January 14, 2017

கிரயப் பத்திரத்தைச் சரிபார்க்க

கிரயப் பத்திரத்தைச் சரிபார்க்க 


ஒரு சொத்தானது விற்பனையாளரிடம் இருந்து நாம் வாங்குவதற்குக் கிரையப்  பத்திரம் மூலம்  மாற்றம் செய்யப்படுகிறது. 

இதற்கு கிரையப் பத்திரத்துக்கான முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணத்தை அப்பத்திரம் பதிவு செய்யும்போது பதிவு அலுவலகத்தில் நாம் செலுத்த வேண்டும். 

நமது தமிழ்நாட்டில் சொத்து வழிகாட்டு மதிப்பின் மேல், 1ஓ ரூபாய்க்கு 7ரூ முத்திரைத் தாள் மற்றும் 1ரூ பதிவுக் கட்டணம் ஆக மொத்தம் 8% கட்டணத்தை நாம் கிரையப் பத்திரத்துக்குச் செலுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் கிரையப் பத்திரத்தில் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் மற்றும் அடையாள அட்டை எண்,  பத்திரப் பதிவு துறையின் மூலம் இணைக்கப்படுகின்றன. அதற்கு முன்பு வெறும் பெயர்கள், கையெழுத்துக்கள் அல்லது கைரேகைகள் மட்டுமே இருக்கும்.

தற்போது சில மாநிலங்களில் சாட்சிகளின் புகைப்படமும் கிரையப் பத்திரத்தில் ஒட்டப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

இன்னும் சில மாநிலங்களில் உதாரணமாக  மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிரையப் பத்திரம் பதிவுசெய்யும் முன்பு இணையதளத்தில் அந்தக் கிரையப் பத்திரத்துக்கான முழு விவரங்களையும் கண்டிப்பாக முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும். 

அதாவது விற்பனையாளர் பற்றிய விபரம், வாங்குபவர் பற்றிய விபரம்,  சொத்து பற்றிய விபரம், கிரையப் தொகை, முத்திரை வரி செலுத்தும் விவரம், சாட்சிகள் பற்றிய விபரம் போன்ற விவரங்களை கிரையப் பத்திரம் பதியும் முன் அதற்குண்டான இணைய தளத்தில் முழுமையாக பூர்த்திசெய்ய வேண்டும்.இதனால் மோசடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது

கிரையப் பத்திரத்தில் என்னென்ன  கவனிக்க வேண்டும்?

➽  முத்திரைத் தாள் மூலமாகவோ, வரைவோலை அல்லது இ-ஸ்டாம்பிங் முறை மூல்மாகவோ முத்திரை வரி முறையாக செலுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
# சொத்தினை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் 
பெயர்கள் பிழையின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும்.

➽ சொத்தினை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் 
அடையாள அட்டை நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

➽ விற்பனையாளரின் வாங்குபவரின் கையோப்பங்கள் மற்றும் புகைப்படங்கள், இருவரது அடையாள அட்டை எண்கள் இடம் பெற வேண்டும். 

➽ எந்த ஒரு நிபந்தனையும்   கிரையப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கக் கூடாது.

➽  ஒரு வேளை  பிற்காலத்தில்  விற்பனையாளாரின் சொத்து உரிமையில் ஏதாவது பிரச்சினை எழுந்தால் தகுந்த நஷ்ட ஈட்டினை சொத்தினை வாங்குபவர்களுக்கு அந்த சொத்தினை விற்பவர்களால்  வழங்கப்படும் என்று கிரையப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

➽ சொத்து விவரங்கள், அளவுகள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

➽ற்பனையாளருக்கு அச்சொத்து வந்த முறையினை  கிரையப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

➽ ஒரு வேளை பவர் பத்திரம் மூலம் கிரையப் பத்திரம் பதிவுசெய்தால், முகவருக்குக் கிரையம் செய்யும் அதிகாரம் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 மேலும் சொத்தின் உரிமையாளர் பவர் பத்திரத்தை ரத்து செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 அதே போல்  சொத்தின் உரிமையாளர்   உயிருடன் உள்ளாரா என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உரிமையாளர் உயிருடன் இல்லை என்றால், பவர் பத்திரம் செல்லாததாகி விடும்.

கிரையப் பத்திரம்-அசல் தன்மையை சரிபார்க்கும் முறை

நீங்கள் முதலில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் நகல் ஆவணம் விண்ணப்பித்துப் பெற வேண்டும். 

அந்த நகல் ஆவணத்தை விற்பனையாளரின் ஆவணத்துடன்  ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.

இதன்மூலம் நீங்கள் வாங்கப்போகும் சொத்து பத்திரமானது (விற்பளையாளரின் கிரையப் பத்திரம்) அசல் பத்திரம்தானா என்று உறுதி செய்து கொள்ளலாம்.

வில்லங்கச் சான்றிதழ் எடுத்து பார்க்க வேண்டும்.

நகல் ஆவணம்  1) நகல் ஆவணம், 2) கையால் எழுதப்பட்ட (Manual) நகல் ஆவணம் என்று இரண்டு வகைப்படும்.

 சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நீங்கள் பெற்ற நகல் ஆவணம் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் ஒத்திருக்க வேண்டும்.

கையால் எழுதப்பட்ட நகல் ஆவணத்தை சொத்து விற்பனையாளரின் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும்போது விற்பனையாளரின் பெயர் வாங்குபவரின் பெயர், கிரையத் தொகை, சொத்து விபரம் ஆகியவற்றை கவனமாக சரிபார்க்க வேண்டும். 

மேலும் பத்திரத்தாளின் எண், பத்திர மதிப்பு, பத்திரத் தாள் முத்திரை, பத்திரத் தாள் விற்பனையாளர் முத்திரை, பத்திர எண், தொகுதி எண் மற்றும் பக்கம் எண் போன்ற விவரங்கள் அசல் பத்திரம் மற்றும் கையால் எழுதப்பட்ட நகல் ஆவணம் ஒப்பிடும்போது சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வழக்கின் ஆவணங்களை கேட்பவருக்கு வழங்கவேண்டும்



வழக்கின் ஆவணங்களை  கேட்பவருக்கு வழங்கவேண்டும்
குற்ற வழக்கில் தொடர்பில்லாத நபருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், அமைச்சர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நடந்த வழக்கில், அந்த ஏழு போரையும் தலைமை நீதித்துறை நடுவர் விடுதலை செய்தார். 

அந்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டி இருப்பதால், அந்த குற்ற வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் வேண்டி இருப்பதால், அந்த குற்ற வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தின் நகல்களை தனக்கு வழங்க வேண்டுமென்று சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் j.m. ஆறுமுகம் அவர்கள் மனு தாக்கல் செய்தார். 

அவ்வாறு ஆவன நகல்களை வழங்க முடியாது என்று சேலம் தலைமை நீதித்துறை நடுவர் வழக்கறிஞரின் அந்த மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கறிஞர் j.m. ஆறுமுகம் அவர்கள் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் அசல் மனு என் ( Crl.O.P.No) 18533/2007 (27.02.2008) மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நீதியரசர் m. ஜெயபால் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதியரசர் m. ஜெயபால் அவர்கள் (27.02.2008) அன்று வழங்கிய தீர்ப்பின் விவரம் பின் வருமாறு : 

“ வழக்கில் தொடர்பில்லாதவர்களுக்கு அது தொடர்பான ஆவணங்களை அளிக்க முடியாது என்ற உயர்நீதிமன்ற விதி சேலம் நீதிமன்றத்திற்கு பொருந்தாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கம் குறித்து நீதிமன்றங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். 

வழக்கு தொடர்பான விவரங்களை அதில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அறிந்து கொள்ள உரிமை உண்டு. 

ஆகையால், மனுதாரர் கேட்டுள்ள ஆவணங்களை சேலம் தலைமை நீதித்துறை நடுவர் அளிக்க வேண்டும்.

மாநில மனித உரிமை ஆணையம்

மாநில மனித உரிமை ஆணையம்
அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல்  இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?
காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம். 
மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும். 
புகார் அனுப்ப என்ன செய்ய வேண்டும்?
 அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல் 
  அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.
  மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.
  அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.
  புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள்.
ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத் தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
ஆணையர் அவர்கள்,
மாநில மனித உரிமை ஆணையம்,
143, P.S.குமாரசாமிராஜா சாலை,
திருவரங்கம் மாளிகை,
கிரீன்வேஸ் ரோடு,
R.A.புரம்,
சென்னை-600 028.
  இந்த புகாரை சாதாரணமாகவே எழுதி அனுப்பலாம்.
  மனு ஸ்டாம்ப் ஏதும் ஒட்டத் தேவையில்லை.
  புகார் தெளிவாக, முழுமையாக எழுதப்பட வேண்டும்.
  வேறு (நீதிமன்றம்) எங்கும் புகார் அனுப்பி விசாரணை நிலுவையில்  இருக்கக்கூடாது.
 தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தால் மாநில மனித உரிமை ஆணையம் அந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்காது.
 மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தால் தேசிய மனித உரிமை ஆணையம் அந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்காது.
  பொது (அரசு) ஊழியருக்கு எதி்ராக இல்லாத புகார் ஏற்றுக் கொள்ளப்படாது.
 புகார் பதிவு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் விசாரணை மேற்கொள்ளப்படும்.
  மனித உரிமை மீறலுக்கு எதி்ராக இல்லாத புகார் ஏற்றுக் கொள்ளப்படாது.
Phone : 91-44-2495 1484
Fax     : 91-44-2495 1486 
E-mail : shrc@tn.nic.in   
மேலதிக விபரங்களுக்கு......

Friday, January 13, 2017

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?
நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச்  சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், 
பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
பயனை எப்படி பெறுவது?
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். 
இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை,
புற்றுநோய் மருத்துவம், 
சிறுநீரக நோய்கள், 
மூளை மற்றும் நரம்பு மண்டலம், 
கண் நோய் சிகிச்சை, 
இரைப்பை (ம) குடல் நோய்கள்,
ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , 
காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், 
கருப்பை நோய்கள், 
ரத்த நோய்கள்.
மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை
சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து  5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். 
இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 
ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.
மேலதிக விவரங்களுக்கு
இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
http://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு
நன்றி : விகாஸ்பீடியா
****************************************************************
குறிப்பு:
இந்தத் திட்டத்தின் காப்பீட்டு நிறுவனத்துடனான உடன்படிக்கை ஜனவரி 10, 2017 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
இந்தக் காப்பீட்டு நிறுவனம், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1.50 லட்சம் காப்பீட்டு தொகை, ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: 
முதல் முறையாக இந்தத் திட்டத்தில், தமிழகத்தில் குடியேறி 6 மாதத்துக்கும் மேல் வசிக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்கள் முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு, தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள்.
 மேலும், மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும்.
நன்றி : தினமணி நாளிதழ் - 14.01.2017
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற 7373004974 என்ற செல் நம்பரிலும், 04562 252507 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 10.03.2017

மோசடி பதிவுகள் பற்றி சுற்றறிக்கை


மோசடி பதிவுகள் பற்றி சுற்றறிக்கை 


மோசடியான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யபடும் பத்திரபதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறைதலைவர் பிறப்பித்த சுற்றறிக்கை.


பத்திரப்பதிவு துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண். 67 / 03-11-2011-ன் படி, மோசடிப் பத்திரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு,
உயர்நீதிமன்றம், சென்னை, W. P. No. 16747 / 2015, நாள். 20-07-2015. தீர்ப்பின்படி
நிலமோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், போலி பத்திரங்களை ரத்து செய்யவும், பத்திர பதிவுத் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நில மோசடியால் பாதித்தவர்கள், பத்திர பதிவு அலுவலகத்தில் புகார் அளித்தாலும், பெரிதாக எதுவும் நடந்து விடாது. விசாரணை நடத்தும் பத்திர பதிவுத் துறை அதிகாரிகள், அனைத்து ஆவணங்களை சரிபாார்த்து, போலியானவை என, தெரிந்தும், பாதித்தவர்கள் பக்கம் இருப்பதில்லை.
'போலி பத்திர பதிவை நீக்க, தங்களுக்கு அதிகாரம் இல்லை. சிவில் கோர்ட்டிற்கு சென்று உத்தரவை பெற்று வாருங்கள்' என்று கைகழுவி விடுவர். காவல் துறை அதிகாரிகளும் நில மோசடியில் ஈடுபடுவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடுவதில்லை. இந்த பழங்கால நடைமுறைகள் களையப்பட்டு போலி பத்திரங்களை நீக்க, பத்திர பதிவு துறைக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் அண்மையில் நடந்த சிவில் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை இனி எப்படி நடைபெறும்?
இதன்படி, இனி, போலி பத்திரம் குறித்து புகார் எழுந்தால் மாவட்ட பதிவாளர் நேரடியாக விசாரிப்பார். இரு தரப்பின ருக்கும் சம்மன் கொடுக்கப்படும். இரண்டு தரப்பினரும் நேரில் ஆஜரானதும், அந்தந்த பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., சர்வேயர் உதவியுடன் சொத்து பத்திர ஆவணம் ஆராயப்படும். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இந்த விசாரணை முடிக்கப்படும்.
ஆவணம் போலியானது என தெரிந்தால் போலி பத்திரம் ரத்து செய்யப்படும். அத்துடன் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும் என, காவல் துறைக்கு, துறை ரீதியாக பரிந்துரை செய்யப்படும். இது தொடர்பாக, சார் பதிவாளர் பத்திர பதிவு அலுவலகங் களில் தனி ஆவணங்கள் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.









முதல் தகவல் அறிக்கை பதிவு சட்டம்

முதல் தகவல் அறிக்கை பதிவு சட்டம் 


நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்னைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.

வழக்குகள் இரண்டு வகை

முதலில் ஒரு குற்றச்சாட்டில் பல்வேறு தன்மைகள் உள்ளது. பொதுவாக குற்றங்கள் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் என்று இருவகைகள் உள்ளது. இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை. பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அதன் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்னைகளை உரிமையியல் (சிவில்) வழக்குகள் என்று வரையரை செய்யப்பட்டுள்ளது.
சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறுவது எப்போது?

இந்த உரிமையியல் பிரச்னைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் (கிரிமினல் வழக்கு) தன்மை பெறுகின்றன.
குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களாக கருதுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.

கிரிமினல் வழக்குகள் எவை?

பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாகும்.

கிரிமினல் வழக்குகளின் பிரிவுகள்

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை
1) நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள்

2)  நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாகும்.

அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சூறையாடுதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாகும்.

இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார், தன்மீது அவதூறு பரப்பிவிட்டார், அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார், பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்படுவோர் புகார் கொடுத்தால், காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படுகிறது

அதே சமயத்தில் காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விஷயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக கருதப்படுகின்றன.

சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறுவது எப்படி?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.
இந்திய தண்டணைச் சட்டம் - குறிப்பு

எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கடமை என்ன?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை - பதிவு எப்போது?

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.
முதல் தகவல் அறிக்கை - பதிவு செய்ய மறுத்தால்?

அவ்வாறு காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர் தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும்.
மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர்  பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்து கொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

மேல்முறையீடு யாருக்கு செய்ய வேண்டும்?

குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.
நீதிமன்றம் செல்வது எப்போது?

புகார் பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.
கோர்ட் டைரக்‌ஷன்

புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை. மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம்.
இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை  நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பு இல்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156 (3)ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர் எதிர் எம். எஸ். கிருஷ்ணாபட் மற்றும் பிறர் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.

எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

நீதிமன்றத்தில் தனிப்புகார்

குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர் சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார். அவ்வாறு விசாரிக்கப்படும் போது  தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம்.
தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம். அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.  மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.

நீதிமன்றத்தின் அதிகாரம்

இதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது. அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.

நேரடியாக நீதிமன்றத்தில் புகார் செய்யலாம் (பிரிவு-482)

மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும்.

இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம்.

பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதி மன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 03.01.2017

Thursday, January 12, 2017

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்கு சேரும்?

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்கு சேரும்?
எனது  நண்பர் ஒருவர் பெருந்தொகையை வங்கி  ஒன்றில்  'டெபாசிட்’ செய்திருந்தார். அந்த டெபாசிட் தொகைக்கு தன்னுடைய  இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டார். வங்கியில் டெபாசிட் செய்திருந்த பணம் யாருக்கு சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. 
நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு அந்த டெபாசிட் தொகை சேரவேண்டுமா, அல்லது முதல்மனைவிக்கும் நண்பருக்கும் பிறந்த வாரிசுகளுக்கும் சேர வேண்டுமா என்பதில் பயங்கர குழப்பம். 
(முதல் மனைவிக்கும் அவரது குழந்தைகளுக்குமே அந்த டெபாசிட் தொகை சேர வேண்டும். இரண்டாவது மனைவி வாரிசு அல்ல.)
இப்படி ஒரு பிரச்னை  என்றால் எனது இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியான பிரச்சனை. திருமணமான சில ஆண்டுகளிலேயே அவரது மனைவி இறந்துவிட்டார்.  தன்னுடைய குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே என்று நினைத்து, தனது நெருங்கிய  உறவினர் ஒருவரை  அவரது சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் நாமினியாக நியமித்திருந்தார்.  
தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனது உறவினர் மூலமாக தனது சொத்துக்கள், தன்னுடைய குழந்தைகளுக்கு சிக்கல் இல்லாமல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு. நல்ல முன்னேற்பாடுதான்.
ஆனால் என்ன நடந்தது?  திடீரென மறைந்த நண்பரின்  குழந்தைகளுக்கு எதுவும் கொடுக்காமல் அந்த சொத்துக்கள் முழுவதையும்  அபகரிக்கப் பார்த்தார் அந்த நெருங்கிய உறவினர்.
இது போன்ற பிரச்னைகள் எழுவதற்கு மிக்கிய காரணம் நாம் நாமினி குறித்து  தெரிந்து  கொள்ளாததுதான். 
ரத்த சம்பந்தம் உள்ள மூன்றாம் நபரை நாமினியாக நியமித்தால், அல்லது எவரையும் நாமினியாக நியமிக்காவிட்டால், சொத்துக்குரியவரின் வாரிசுகள் அந்த சொத்துக்களைப் பெறுவதில் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றது. 
நாமினிக்கு  என்று சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன, இருக்கிறது? கடமைகள் என்ன இருக்கிறது?, வாரிசுகளுக்கு என்ன உரிமைகள் இருக்கிறது?  என்பதை தெரிந்து கொள்வோம், வாருங்கள்! 
யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
'ஒருவர்  மூன்றாம் நபரை தனது சொத்துக்களுக்கு நாமினியாக நியமித்துவிட்டு இறந்துவிட்டார் என்றால், அவரது சொத்துக்கள் முதலீடுகள், சேமிப்புகள், ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிறுவனங்கள் யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? 
எந்தவித ஆட்சேபனையும் வாரிசுகளிடமிருந்து இல்லாதபோது பலன் அல்லது முதலீடு நாமினியிடம் ஒப்படைக்கப் படும்.  வாரிசுகள் ஆட்சேபனை செய்தால் நீதிமன்றத்தை அணுகி  உத்தரவு பெற்று வருபவரிடம் அவைகள் ஒப்படைக்கப்படும்.
நாமினி நியமிக்கப்படவில்லை என்றால்?
 நாமினியை நியமிக்காமலே ஒருவர் இறந்துவிட்டால் பிரச்னைகள் எதுவும் இன்றி வாரிசுகளுக்கு அதாவது அவரது மனைவி, குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இவர்களில் யார் உரிமை உடையவர்களோ அவர்களுக்குப் போய் சேர்ந்துவிடும்.
 நாமினி என்று யாரையுமே ஒருவர் நியமிக்காதபோது வாரிசுச் சான்றிதழ் (legal heir certificate) அடிப்படையில் அவரது சொத்துக்களை/முதலீட்டைத் திருப்பி கொடுப்பார்கள். 
நாமினி என்று யாரையும் நியமிக்காத சூழ்நிலையில் இருக்கின்ற வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு  ”ஆட்சேபணை இல்லாச் சான்றிதழ்” வழங்கி அதன்மூலம் சொத்துக்களையோ முதலீட்டையோ பெற்று பின்பு அனைவரும் பிரித்துக் கொள்ளலாம்.
சில சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் (succession certification) பெற்று அதன் மூலம்தான் உரியவர்கள் அதற்குரிய பலனைப் பெற முடியும்.
நாமினியாக யாரை நியமிக்கலாம்?
வாரிசு என்று ஒருவர் இருக்கும்போது மூன்றாவது நபரை நாமினியாக நியமிக்கலாமா? வாரிசுகள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் நாமினி நியமிப்பது அவசியம்தான்.  நாமினியாக யாரை நியமிக்க வேண்டும்?, நாமினியாக யாரை  நியமிக்கக் கூடாது என எந்த விதிமுறையும் சட்டத்தில்  இல்லை. இருந்தபோதிலும், ரத்த உறவு முறை, பெற்றோர் அல்லது மனைவியை (spous)  நாமினியாக நியமிப்பதுதான் நடைமுறையில் உள்ளது.
மூன்றாம் நபரை நாமினியாக நியமிக்கலாமா?
நாமினியாக மூன்றாம் நபரை  ஒருவர் நியமிக்கும்போது, சட்டரீதியான பல கேள்வியும் சந்தேகங்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு எழும். 
 எடுத்துக்காட்டாக,  ஒருவர் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உறவினர் அல்லாத மூன்றாம் நபர் ஒருவரை அதற்கு நாமினியாக நியமிக்கும்போது, இது போன்ற சந்தேகம் வரும். ஒருவேளை பாலிசி எடுத்த நபருக்கு திடீரென்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டால் நாமினி மீது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நிச்சயமாக சந்தேகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.  இப்படி ஒரு சந்தேகம் அவர்களுக்கு எழும் சமயத்தில் நாமினியிடம்  கொடுக்காமல்,  உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு வாரிசுகளிடமே பணத்தைக் ஒப்படைப்பார்கள்.
நாமினி சொத்துக்களை அபகரிக்க நினைத்தால்?
ஒருவர் ஏதோ ஒரு சூழ்நிலையில் ரத்த சம்பந்தமில்லாத ஒரு நபரை நாமினியாக நியமித்து விட்டு திடீரென்று இறந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை அல்லது முதலீடுகளை நாமினியாக இருக்கும் நபர் அபகரிக்க நினைத்தால், வாரிசுதாரர்கள் அதனை  தடுப்பது எப்படி? இது போன்ற சூழ்நிலையில்  வாரிசுதாரர்களின் என்ன செய்ய வேண்டும்?
சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட நாமினி, அவற்றை வாரிசுகளிடம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அபகரித்தாலோ, வாரிசுதாரர்கள் நீதிமன்றத்தைத்தான்  நாடவேண்டும். வேறு வழியில்லை.
இறந்தவரின் வாரிசு என்பதை நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களின் மூலம் நிரூபித்தால்,  இறந்தவரின் சொத்துக்களை அல்லது முதலீட்டை  வாரிசுகளிடம் ஒப்படைக்க  நீதிமன்றம் நாமினிக்கு உத்தரவிடும்.
நாமினியின் அதிகாரம் என்ன?
 என்னதான் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், ரத்த சம்பந்தமில்லாத ஒருவருக்கு, இறந்தவரின் சொத்தில்  எவ்வித உரிமையும் கிடையாது என்பதை நாமினியாக நியமிக்கப்பட்டவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 
சொத்துக்களையோ அல்லது முதலீட்டையோ  வாரிசுகளிடம் ஒப்படைக்கும்  கடமை மட்டுமே அவருக்கு உண்டு! அவர் ஒரு காவல்காரர். அவ்வளவுதான்! 
அதே நேரத்தில் ஒருவருக்கு ஒரே ஒரு மகன் என்றால் வாரிசு யார் என்கிற பிரச்னை வராது. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட  மகன்களோ அல்லது மகள்களோ  இருந்தால், இதில் யாரை நாமினியாக நியமிப்பது என்கிற கேள்வி எழும். 
வாரிசாகவும், நாமினியாகவும், ஒருவரே இருக்கும்போது பிரச்னை ஏதும் எழ வாய்ப்பு இல்லை. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாரிசுகளாக இருந்து, அதில் ஒருவரை மட்டும் நாமினியாக நியமித்தால்,  குடும்பத்தில் உள்ள மற்ற வாரிசுகள் எவரும் ஆட்சேபனை செய்யவில்லை என்றால், நாமினியாக உள்ள வாரிசே சொத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற வாரிசுகளில் யாராவது ஒருவர் ஆட்சேபனை செய்தால்கூட  நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்.
நாமினி இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
நாமினியாக நியமிக்கப்பட்ட நபர் இறந்து விட்டாலோ அல்லது பைத்தியம் பிடித்திருந்தாலோ  நாமினியாக யாரையும் நியமிக்கப்படாததற்கு அது சமமாகும். நாமினி நியமிக்கப்படாத போது நேரடியாகவே வாரிசுகளிடம் சொத்துக்கள்  அல்லது முதலீடுகள் கொடுக்கப்படும். 
அசையும் சொத்துக்களில் நாமினி பெயர்
சிக்கல் எதுவும் இல்லாமல், மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் ஒருவர் இழப்பீடு பெறுவத்ற்கு,   நாமினி பெயரை  கட்டாயம் குறிப்பிட வேண்டும்  என்று (Insurance Regulatory and Development Authority)  ஐ.ஆர்.டி.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து பொதுக் காப்பீடு (ஜெனரல் இன்ஷூரன்ஸ்) நிறுவனங்களுக்கும் அந்த அமைப்பு அறிக்கையும் அனுப்பி உள்ளது. 
 தற்போது சட்டப்படியான வாரிசுகளுக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் இழப்பீட்டுத்  தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால்  இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஆண்டு கணக்கில் தாமதமாகிறது. அதை தவிர்க்கவேண்டும் என்பதற்காக நாமினி நியமிப்பது அவசியம் என்பதை ஐ.ஆர்.டி.ஏ. வலியுறுத்தி அதனை கட்டாயமாக்கியும் இருக்கிறது.
எந்தவிதமான  முதலீடு செய்தாலும், நாமினி என்பது ஒரு முக்கியமான விஷயம்.  பி.எப். எனப்படுகின்ற பிராவிடண்ட் பண்ட்டிற்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். 
பலர் வேலைக்குச் சேரும்போது  திருமணம் ஆகாமல் இருந்திருப்பார்கள். அதனால், அப்போது பெற்றோர்களின் பெயரை நாமினியாக பி.எப்-ல்  காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணம் ஆன பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியமானதாகும். 
அதைப்போல, நாம் நாமினியாக  காட்டியவர் திடீரென இறந்துபோய்விட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது முக்கியமாகும் . 
நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்குச் சென்றோ அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ ஒருவர் தனது புதிய நாமினியை நியமிக்கலாம். 
இந்த கட்டுரையை நான் எழுத காரணமாக இருந்த நண்பர் வழக்கறிஞர் திரு  Leenus Leo Edwards​ அவர்களுக்கு நன்றியுடன் இதனை சமர்ப்பிக்கிறேன்.