disalbe Right click

Friday, March 17, 2017

புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி


புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி
தான பத்திரம் மீது விசாரணை கை நீட்டிய 'தங்கம்' கைது!
விருதுநகர், : போலியாக பத்திரம் தயாரித்ததாக அளித்த புகாரை விசாரிக்க 3,000 ரூபாய் வாங்கிய, விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலக டைப்பிஸ்ட் தங்கத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் சாமியார் கிணற்றுதெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது குடும்பத்தினர் பெயரில் பொதுச் சொத்துக்கள் உள்ளன.

'இதை பங்காளிகளில் ஒருவரான வெள்ளைச்சாமி, போலி பத்திரம் தயாரித்து தானம் கொடுத்து விட்டார்' என, சென்னை பத்திரப்பதிவு ஐ.ஜி.,யிடம் பாண்டுரங்கன் புகார் கொடுத்தார்.

லஞ்சம் கொடு: 
இதை விசாரிக்க விருதுநகர் மாவட்ட பதிவாளர் சந்தானத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பதிவாளர் அலுவலக டைப்பிஸ்ட் தங்கம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பாண்டுரங்கன் புகார் அளித்தார். அலுவலகத்தில் நேற்று, டைப்பிஸ்ட் தங்கம் 3,000 ரூபாய் வாங்கியபோது, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கேட்டது ரூ.10 ஆயிரம்: 
பாண்டுரங்கன் கூறுகையில், ''எனக்கு சாதகமாக விசாரிக்க தங்கம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். மறுத்ததால், மூன்றா யிரம் ரூபாயாக குறைத்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாமல் புகார் கொடுத்தேன்,'' என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை


வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை

பாரத ஸ்டேட் வங்கியில் மோசடி: மேலாளருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை,:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், ஒரு கோடி 98 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக, மேலாளர் உட்பட ஆறு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிளை மேலாளராக ராதாகிருஷ்ணன், உதவியாளராக ராஜகோபாலன் பணிபுரிந்தனர். 

இவர்களது நண்பர்கள் புதுக்கோட்டை விஸ்வநாதன், விருதுநகர் சிவாரங்கசாமி, சிவகாசி ராஜ்கபூர், திருநெல்வேலி ஷேக்அமீர். 

இவர்களின் வங்கி கணக்குகளை, அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு மாற்றினர்.இக்கணக்குகளுக்கு மும்பை வங்கிகளில் இருந்து காசோலைகள் மூலம் ஒரு கோடியே 98 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்தனர். 

காசோலைகளை நான்கு பேரின் கணக்குகள் மூலம் மாற்றி மோசடி செய்ததாக, சி.பி.ஐ., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கணேசன் விசாரித்தார். 

ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், ஷேக் அமீர், ராஜ்கபூர், சிவாரங்கசாமிக்கு தலா ஏழு ஆண்டு, விஸ்வநாதனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எல்.ஏ!


தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எல்.ஏ!

அரசியல் பாதைகள் புதைகுழிகள் நிறைந்தவை’ என சொல்லப்படுவதுண்டு. இந்த புதைகுழிகள் நிறைந்த அரசியல் பாதையில் நீண்ட காலம் தங்கள் பயணத்தை மேற்கொள்வது என்பது நிச்சயம் சவால் மிக்கது.

அப்படி அரசியல் பாதையில் நீண்ட பயணங்களை மேற்கொண்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

90 வயதைக் கடந்தும் இன்னும் அரசியலில் இருந்து முழுமையாய் விட்டு விலகிடாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் வரிசையில் இணைந்துள்ளார் கேரளா காங்கிரஸ் தலைவரான கே.எம்.மானி.

84 வயதான இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் தோல்வியே சந்திக்காத தலைவர்களில் கருணாநிதிக்கு அடுத்த இடம் கே.எம்.மானிக்கு தான். 12 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளார் அதுவும் ஒரே தொகுதியில்.

கரிங்கோழக்கல் மானி மானி என்பது தான் இவருடைய முழு பெயர். வழக்கறிஞரான இவர் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் இவரது நெருங்கிய உறவினருமான பி.டி.சாக்கோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கேரள காங்கிரஸ் என்ற தனி அமைப்பில் இணைந்து முக்கியப் பங்காற்றினார்.

1965ம் ஆண்டு முதன் முதலாக கோட்டயம் மாவட்டம் பாலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் துவங்கி 2016ம் ஆண்டு வரை, அதே பாலா தொகுதியில் 12 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார் கே.எம்.மானி.

கேரள மாநில காங்கிரஸ் கட்சி, இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் என இரு பெரிய கட்சிகளுடனும் இவரது கேரள காங்கிரஸ் (மானி) கூட்டணி அமைத்து தேர்தல்களைச் சந்தித்து உள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 6 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றனர். ஆனாலும், இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனாலும், ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட போதிலும், ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காத சரித்திரம் கே.எம்.மானியை மக்கள் தொண்டனாக நிலை நிறுத்துகிறது. அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படக் கூடியவராக கே.எம்.மானி உள்ளார்.

கேரள சட்ட மன்றத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து இருக்கிறார். கேரள லாட்டரி உதவித் திட்டம் மூலமாக 1,400 கோடியைத் திரட்டி அதன் மூலமாக ஒன்றரை லட்சம் ஏழை நோயாளிகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்தார். அத்துடன், உலகிலேயே முதல் முறையாக விவசாயிகள் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் தான் கேரள மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கேரள சட்ட மன்றத்துக்குள் கே.எம்.மானி நுழைந்து தற்போது 50வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, கேரள சட்ட மன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய சபாநாயகரான ஸ்ரீராமகிருஷ்ணன், "கே.எம்.மானி, எப்போதுமே மானி சார் என்றே எல்லோராலும் அழைக்கப்படக் கூடியவர். அவர் தனது செயல்பாடுகள் மூலமாக சட்டமன்ற வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறார். கடந்த 50 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருப்பதன் மூலமாக சாதனை படைத்த அவர், தன் மீது எழும் விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக் கொள்ளக்கூடியவர்" என்று புகழாரம் சூட்டினார்.

முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "புள்ளி விவரப்படி பார்த்தால், கே.எம்.மானி தனது 50 வருட சட்டமன்ற சாதனையை கடந்த இரு வருடங்களுக்கு முன்பே எட்டி விட்டார். பாலா தொகுதியில் அவர் 1965ம் ஆண்டில் வெற்றி பெற்றார். ஆனால், அந்தத் தேர்தலில் கேரள சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் அந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், அந்தக் கணக்கு இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அவரது இந்த சாதனை பாராட்டுக்குரியது. இந்தச் சாதனையை இனி யாராலுமே இந்தியாவில் முறியடிக்க முடியாது என்பது நிச்சயம். அவர் பாலா தொகுதியில் போட்டியிடும்போது பல பாரம்பரியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றியை கைப்பற்றி இருப்பது வரலாற்றில் எப்போதும் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

இந்த சாதனைகளுக்கு மத்தியில் அவர் சட்டமன்ற மாண்பையும் மரபுகளையும் கடைப்பிடிப்பதையும் அனைவருமே பின்பற்ற வேண்டும்.

குறித்த நேரத்துக்கு சட்ட மன்றத்துக்கு வருவது மட்டும் அல்லாமல், அவரது வருகைப் பதிவையும் இன்றைய சட்ட மன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்’’ எனக் குறிப்பிட்டார்.

கேரள சட்ட மன்றத்தில் 1970ம் வருடம் இவருடன் இருந்த ஒரே சமகால அரசியல்வாதி, முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மட்டுமே.

ஆனால், இந்த நிகழ்வின்போது அவர் சட்ட மன்றத்துக்கு வராததால், அவரது கருத்து சட்ட மன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் குறையே.

இந்த நிலையில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா தனது கருத்தைப் பதிவு செய்கையில், ‘‘இந்திய ஜனநாயக வரலாற்றில் அதிசயக்கத்தக்க ஒரு வரலாறு கே.எம்.மானி. அவர் எப்போதுமே தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையுடன் செயல்படுவது இல்லை.

சட்டமன்ற உரையாக இருந்தாலும் செய்தியாளர் சந்திப்பாக இருந்தாலும், அது குறித்து முதலிலேயே நிறைய தகவல்களைச் சேகரித்த பின்னரே பேசுவார்’’ என்றார்.

கேரள அரசியலில் எதிரும் புதிருமாகச் செயல்படும் இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் அளவுக்கு கே.எம்.மானியுடன் கருத்து வேறுபாடுகள் நிறைந்து இருப்பவர், பி.சி.ஜார்ஜ். அவர் பேசுகையில், ‘எனக்கு மானி சாருடன் எப்போதும் நல்ல உறவு இருந்தது இல்லை. ஆனாலும், அவரது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மறுக்க முடியாதது’ என்றார்.

இவற்றுக்குப் பதில அளித்துப் பேசிய கே.எம்.மானி, ‘‘என்னை இந்த மன்றத்தில் பேசிய பலரும் பாராட்டியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. நான் கடந்த காலங்களில் எதிரி என நினைத்த சிலர் எனக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்கள் எனது நண்பர்கள் என்பதை நீங்கள் பேசியதில் இருந்து புரிந்து கொண்டு விட்டேன்.

என்னை இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்தது எனது பாலா தொகுதி மக்களே. அவர்களுக்கு கூப்பிய கரங்களுடன் மண்டியிட்டு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று பேசி நெகிழ்ந்தார்.

வயது 84ஐ கடந்து விட்டது. அவரது உழைப்பு இன்னும் அவரை இளமையாக வைத்திருக்கிறது. வாழ்த்துகள் கே.எம்.மானி சார்...
- ஆண்டனிராஜ்

நன்றி : விகடன் செய்திகள் - 17.03.2017

Wednesday, March 15, 2017

தகவல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது

Image may contain: text

தகவல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது!



விசாரணையில் இருக்கிறது என்று தகவல் தராமல் தட்டிக் கழிக்கும் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு எதிரான மிகவும் அருமையான ஆணை !

ஆள் மாறாட்டம், பெண் கைது!


ஆள் மாறாட்டம், பெண் கைது! 

ஜாமீனுக்காக ஆள்மாறாட்டம் செய்ததால் விபரீதம் ரூ.500க்கு ஆசைப்பட்டு சிறைக்கு சென்ற பெண்: ஐகோர்ட்டில் பரபரப்பு

சென்னை : சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சூர்யா. இவர் போதை மருந்து மற்றும் மயக்க மருந்துகளை  சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். 

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு கண்ணகி நகர் போலீசார் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் சூர்யாவின் ஜாமீன் வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சூர்யா தரப்பில் ரூ.1 லட்சம் ஜாமீனில் விடுவிக்க கோரி சத்தியபாமா என்ற பெண் உரிமை கோரினார். 

 அதற்கான ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நீதிபதி ஆவணங்களை சரிபார்த்த போது சத்தியபாமா அளித்த வாக்காளர் அடையாள அட்டையில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தை பார்த்து சந்தேகம் அடைந்து, சத்தியபாமாவிடம் இது உங்கள் புகைப்படமா என்று கேட்டார். அதற்கு அந்த படம் என்னுடைய படம் தான் என்று கூறியுள்ளார்.

ஆனால், சந்தேகம் தீராததால் நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் பஞ்சவர்ணம் (42) உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் சத்தியபாமா மீது புகார் அளித்தார். 

அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய போது சத்தியபாமா என்ற பெயரில் சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்று தெரியவந்தது. 

இவர் ரூ.500க்கு ஆசைப்பட்டு சத்தியபாமா என்ற பெயரில், ஜாமீனுக்காக ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் ஆள்மாறட்டம் செய்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி : தினகரன் நாளிதழ் - 16.03.2017

ஃபெரா குற்றவாளி, தேர்தலில் போட்டியிட முடியாது!


ஃபெரா குற்றவாளி, தேர்தலில் போட்டியிட முடியாது!

ஃபெரா குற்றவாளி தினகரன் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவே முடியாது...சட்டம் சொல்வது என்ன?

சென்னை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஃபெரா (Foreign Exchange Regulation Act) வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளியான டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவே முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஃபெரா வழக்கின் குற்றவாளியான டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதற்கு ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

1995, 1996ம் ஆண்டுகளில் டி.டி.வி. தினகரனின் வங்கிக் கணக்குகளில் பெருமளவு பணம் வெளிநாடுகளில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஹைகோர்ட் தீர்ப்பு 
இவ்வழக்கில் தினகரனுக்கு ரூ31 கோடி அபராதம் விதித்தது ஃபெரா வாரியம். இத்தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் ரூ28 கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டது. 

இதை எதிர்த்து டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் இவ்வழக்கில் டி.டி.வி. தினகரன் குற்றவாளியே என்றும் அவர் அபராதத் தொகை செலுத்தியே ஆக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

6 ஆண்டுகாலம் போட்டியிட முடியாது 
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபரால் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிடவே முடியாது.

 சரி, ஃபெரா வழக்கில் தினகரன் குற்றவாளி என்று மட்டும்தானே சொல்லியிருக்கிறதே... அவருக்கு எப்படி இது பொருந்தும் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

சட்டம் என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்தெந்த குற்றங்கள் செய்திருந்தால் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்கிற ஒரு பட்டியல் இடம்பெற்றுள்ளது. 

"Disqualification on conviction for certain offences" என்ற அந்த பிரிவின் (e) the Foreign Exchange (Regulation) Act, 1973 (46 of 1973) 

அதாவது ஃபெரா சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதம்தானே... 
ஃபெரா வழக்கில் டி.டி.டி.வி. தினகரனுக்கு அபராதம் மட்டும்தானே விதிக்கப்பட்டுள்ளது... அதை செலுத்திவிட்டால் டி.டி.வி. தினகரனால் போட்டியிட முடியுமே என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

அபராதம் விதித்தாலும் போட்டியிட முடியாது 
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மேலே நாம் குறிப்பிட்டுள்ள,
 "Disqualification on conviction for certain offences" பிரிவில் 

[shall be disqualified, where the convicted person is sentenced to- (i) only fine, for a period of six years from the date of such conviction; (ii) imprisonment, from the date of such conviction and shall continue to be disqualified for a further period of six years since his release.] 

அதாவது குற்ற வழக்குகளில் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்ட நபர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது முதல் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்; சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், தண்டனை பெற்று விடுதலையானது முதல் மேலும் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. 

ஆக ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளி டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி போட்டியிடவே தகுதியற்றவரே என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.

நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள் - 16.03.2017

சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது!


சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது!

10-ம் வகுப்பு தேர்வுக்குப் பின் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது: சென்னை ஹைகோர்ட்

சென்னை: 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பின், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்த பி.கருணாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 அந்த மனுவில், நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன்.ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டுவிட்டனர். 

நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது, எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டுவிட்டேன். 

அதன்பின்னர் பிளஸ்-2 தேர்விலும் அதேபோல குறிப்பிட்டிருந்தேன். இதன்பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு வானூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 

10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றில் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை பெற்றேன். 

குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச்சான்றிதழை பெற்றேன். 

இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித்தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் கடந்த 2014-ம் ஆண்டு மனு செய்தேன். 

பலமுறை நேரில் சென்று முறையிட்டும், பிறந்த தேதியை திருத்தம் செய்து தராமல் உள்ளார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி தேர்வுத்துறை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின் படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பின், வயது மற்றும் பெயர்களில் திருத்தங்கள் செய்ய முடியாது. எனவே, மனுதாரரின் 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது. 

மேலும், பிறந்த தேதியை மாற்றவேண்டும் என்று தேர்வுத் துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. 

மேலும், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின்படி, 10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் பிறந்த தேதியை மாற்ற முடியாது. 

எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி :  ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள் - 16.03.2017

கட்சி சின்னங்கள் சர்ச்சை - தேர்தல் ஆணையம் முடிவு

Image may contain: text

கட்சி சின்னங்கள் சர்ச்சை - தேர்தல் ஆணையம் முடிவு

கட்சிச் சின்னம் சர்ச்சைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பது எப்படி?- சில விவரங்கள்
பொதுவாக ஒரே கட்சியாக இருந்து பிறகு உடைந்து இரு அணிகள் பிரிந்து அந்தக் கட்சியின் அசல் தேர்தல் சின்னத்துக்கு இருதரப்பினரும் உரிமை கோரும்போது தேர்தல் ஆணையம்தான் எந்த அணிக்கு கட்சியின் அசல் சின்னம் என்பதை முடிவெடுக்கும்.

அது அந்த முடிவை எப்படி எடுக்கிறது என்பது குறித்த சில விவரங்கள் இதோ:

எந்த அதிகாரத்தின் கீழ் தேர்தல் ஆணையம் கட்சிச் சின்ன சர்ச்சைகளில் முடிவெடுக்கிறது?

1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் வழங்கல் உத்தரவு என்பதன்படி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை அங்கீகரித்து சின்னங்களை ஒதுக்க வேண்டும். உத்தரவின் 15-ம் பத்தியின் கீழ் தகராறுகள் ஏற்படும் போது தேர்தல் ஆணையமே யாருக்கு கட்சியின் உண்மையான சின்னம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும்.

பத்தி 15-ன் சட்ட தகுதி என்ன?

கட்சியினுள்ளோ, இரு கட்சிகளோ இணைவது மற்றும் பிரிவதன் அடிப்படையில் கட்சிச் சின்னம் பற்றிய முடிவை எடுக்க அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. 1971-ம் ஆண்டு சாதிக் அலி மற்றும் இன்னொருவருக்கு எதிரான இந்தியத் தேர்தல் ஆணைய வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

ஒரு குழுவை அதிகாரபூர்வ கட்சியாக அங்கீகரிக்கும் முன் தேர்தல் ஆணையம் யாவற்றை பரிசீலிக்கும்?

அசல் சின்னத்துக்கு உரிமை கோரும் குழுவுக்கு கட்சியில் ஆதரவு எப்படி உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். அதாவது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு மற்றும் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகக்குழு ஆதரவு என்று இருதரப்பு ஆதரவையும் தேர்தல் ஆணையம் கணக்கிலெடுத்துக் கொள்ளும். 

இந்த இருதரப்புகளிடையேயும் தங்களுக்குத்தான் அதிக ஆதரவு என்று கோரும் பிரிவை எப்படி தேர்தல் ஆணையம் நிறுவும்?

அதாவது குறிப்பிட்ட கட்சி இருபிரிவுகளாக உடைவதற்கு முன்பாக சேர்ந்திருந்த போது கட்சியின் விதிமுறைகளையும், நிர்வாகிகள் பட்டியலையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். கட்சியின் உயர்மட்ட குழுக்களை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு இதில் எத்தனை நிர்வாகிகள், உறுப்பினர்கள் எதிர்கோஷ்டியினரை ஆதரிக்கின்றனர் என்பதை ஆய்வு செய்யும். ஆட்சியமைப்புப் பிரிவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை அவர்களின் வாக்குமூலப் பதிவுகளுடன் அளிப்பது பரிசீலனைக்கு ஏற்று இவர்கள் எந்தப் பிரிவை ஆதரிக்கிறார்கள் என்பது முடிவு செய்யப்படும். 

உறுதியான கண்டுபிடிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கும்?

அதாவது ஒரு குறிப்பிட்டப்பிரிவுக்கு கட்சியின் அமைப்பாக்கப் பிரிவு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிகள் ஆகியோர் ஆதரவு பெரும்பான்மையாக இருக்கிறது என்று அந்தப் பிரிவுக்கே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மற்றொரு பிரிவு தனிக் கட்சியாக பதிவு செய்ய அனுமதி வழங்கும். 

இரு தரப்பினருக்கும் உள்ள ஆதரவில் இழுபறி நிலை ஏற்பட்டால்...

இப்படிப்பட்ட நிலையில் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும். இருபிரிவினரும் புதிய பெயர்களில் அதாவது மூலக் கட்சியின் பெயரில் முன் ஒட்டு அல்லது பின் ஒட்டு சேர்த்து புதிதாக பதிவு செய்ய அனுமதி வழங்கும். 

தேர்தல் காலங்களில் கட்சிச் சின்னம் பற்றிய தகராறுகள் உடனடியாக தீர்க்கப்படுமா?

தேர்தல் ஆணையம் பல்வேறு ஆதாரங்களையும் பரிசீலிக்க காலம் எடுத்து கொள்ளும். உடனடியாக தேர்தல் என்றால் கட்சியின் சின்னத்தை முடக்கி இரு பிரிவினரையும் வெவ்வேறு பெயர்களில், தற்காலிக சின்னங்களில் போட்டியிட அனுமதிக்கும். 

சரி! இருதரப்பினரும் தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒன்று சேர்ந்து விட்டால்..

மறுபடியும் கட்சி இணைந்து ஒன்றாகிவிட்டால், மறுபடியும் தேர்தல் ஆணையத்தை அணுகி ஒருங்கிணைந்த கட்சி என்று அங்கீகரிக்கக் கோர வேண்டும். பிரிவினர்கள் ஒரு கட்சியாக இணைவதை அங்கீகரிக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்குத்தான் உள்ளது. அது கட்சியின் மூலப்பெயர் மற்றும் சின்னத்தை தொடர அனுமதிக்கலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.03.2017

அரசியல் சாசனச் சட்டம், பிரிவு-142.


அரசியல் சாசனச் சட்டம், பிரிவு-142.

நமது நாட்டில் உள்ள மத்திய அரசாங்கமோ அல்லது ஏதாவது ஒரு மாநில அரசாங்கமோ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றமே நேரடியாக  அந்த உத்தரவை நிறைவேற்ற இந்தப் பிரிவு பயன்படுகிறது.
கடந்த 2015-ம் வருடம் லோக் ஆயு்க்தா நீதிபதியை நியமிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாத, உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றமே நேரடியாக முன்னாள் நீதிபது வீரேந்திர சிங்கை அம்மாநில லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியாக நியமித்தது. 

***************************இணையத்தில் இருந்து - 15.03.2017

Tuesday, March 14, 2017

என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


என்ஆர்ஐ-கள் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் பொழுது அவர் இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் (Non-resident Indian -NRI) என்று அழைக்கப்படுகின்றார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act - FEMA) ன் கீழ் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வெளிநாடுகளுக்குத் திரும்ப எடுத்துச் செல்லக்கூடிய அல்லது இயலாத வகைகளில், இந்தியாவில் உள்ள பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. 

 விண்ணப்பப் படிவம் 
என்.ஆர்.ஐக்களால் பூர்த்திச் செய்யப்பட்ட ஒப்பந்த விண்ணப்பப் படிவம் உத்தியோகபூர்வ புள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதோடு அந்தத் திட்டத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட வரையோலை அல்லது வேறு ஏதேனும் உத்யோகப்பூர்வ வடிவத்தில் பணம் செலுத்தப்பட வேண்டும். 

விண்ணப்பதாரர் முதலீடு செய்யும் பொழுது அவர் அந்தத் திட்டத்தின் முதிர்வு தொகையை வெளிநாட்டிற்குத் திரும்ப எடுத்துச் செல்லப் போகின்றாரா அல்லது இந்தியாவிலேயே வைத்திருக்கப்போகின்றாரா என்பதைக் குறிப்பிட வேண்டும். 

KYC  (Know your customer) சார்ந்த ஆவணங்கள் மற்றும் பான் கார்ட் நகல் கொடுக்கப்பட வேண்டும்.   

என்ஆர்ஐ-களுக்குப் பதிலாக வேறு யாராவது முதலீடுகளை நிர்வகிக்க முடியுமா? 

என்ஆர்ஐ-களுக்குப் பதில் அவருடைய பவர் ஆப் அட்டர்னி பெற்ற மற்றொருவர், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். எனினும், பவர் ஆப் அட்டர்னி வைத்திருப்பவர், பரஸ்பர நிதியில் தன்னுடைய விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
பவர் ஆப் அட்டர்னி வைத்திருப்பவர் அதனுடைய மூலப் பிரதி அல்லது நோட்டரி பப்ளிக்கினால் கையொப்பம் இட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும். பவர் ஆப் அட்டர்னியில், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் அவருடைய இந்தியப் பிரதிநிதி ஆகிய இருவரும் கையொப்பம் இட வேண்டும். அதன் பின்னர் அது முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.  

பணத்தை எப்படித்திரும்பப் பெறுவது? 
ஒரு வேளை வெளிநாடு வாழ் இந்தியர், முதலீட்டைத் திரும்ப வெளிநாட்டிற்கே எடுத்துச் செல்லும் முறையில் முதலீடு செய்திருந்தால், முதலீட்டிற்கான பணம், அவருடைய என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 

அவ்வாறு இல்லாத பட்சத்தில், முதலீட்டாளர், முதலீட்டிற்கான பணத்தைத் தனது NRE / FCNR / NRO கணக்கில் இருந்து செலுத்தலாம்.   

முதிர்வு தொகை எப்படி வழங்கப்படும்? 
முதிர்வு தொகை (வரிப் பிடித்தம் போக) இந்திய ரூபாயாக, முதலீட்டாளர் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கு எண்ணிற்குக் காசோலையாக வழங்கப்படும். சில வங்கிகள் NRE / NRO கணக்கிற்கு நேரிடையாகப் பணத்தைச் செலுத்துகின்றன. 

ஒரு வேளை முதலீட்டாளர், வெளிநாட்டிற்குத் திரும்ப எடுத்துச் செல்ல இயலாத அடிப்படையில் முதலீடு செய்திருந்தால், முதிர்வு தொகை அவருடைய NRO கணக்கில் செலுத்தப்படும்.

வரிப் பிடித்தம் உண்டா? 
வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடுகளுக்கு மூலதன ஆதாயங்கள் மீது வரி பிடிக்கப்படும். ஒருவேளை அவர் பங்கு நிதிகளில் ஒரு ஆண்டிற்கு மேல் முதலீடு செய்திருந்தால் அவருக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய டிடிஎஸ் சான்றிதழ் முதிர்வு தொகையுடன் இணைத்து அனுப்பப்படும்.   

கட்டுப்பாடுகள் 
முதலீட்டாளர் ஒரு என்ஆர்ஐ அக இருக்கும் வரை மட்டுமே அவருடைய மூலதனம், மற்றும் மூலதன மதிப்பு உயர்வு ஆகியவை திரும்ப வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 
இதற்கான விண்ணப்பப் படிவத்தில் வெளிநாட்டு முகவரி ஒரு கட்டாயமான புலமாகும். 

எனவே ஒரு என்.ஆர்.ஐ பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் பொழுது தன்னுடைய வெளிநாடு முகவரியைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

Written by: Mr. Batri krishnan 

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் - 14.03.2017


Monday, March 13, 2017

தத்தெடுப்பு வழக்குகள் விசாரிக்கலாம்!


தத்தெடுப்பு வழக்குகள் விசாரிக்கலாம்!

குடும்ப நல நீதிமன்றங்களில் தத்தெடுப்பு வழக்குகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: குடும்ப நல நீதிமன்றங்களில் தத்தெடுப்பு வழக்குகளை விசாரிக்கலாம், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரை கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் நிர்வாகம் தாக்கல் செய்த மனு: 

கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருகிறோம். அக்குழந்தைகளை தத்து கொடுக்கிறோம். வெளி நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் தத்து கொடுக்கிறோம். இதற்காக மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்தோம். 

அந்நீதிமன்றம்,'இளம் சிறார் நீதிச் (குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளை விசாரிக்க, இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. குடும்பநல வழக்குகளில் இருதரப்பினரிடையே சமரசம் செய்யப்படும். இல்லாதபட்சத்தில் வழக்கு விரைந்து முடிக்கப்படும். திருமணம் மற்றும் குடும்ப விவகாரங்களை மட்டுமே விசாரிக்க முடியும். இளம் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளை விசாரிக்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை,' என 2016 நவ.,30ல் நிராகரித்தது. 

இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜெ.நிஷாபானு கொண்ட அமர்வு உத்தரவு: 

இளம் சிறார் நீதிச் (குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் தாக்கலாகும் மனுக்கள் மீது சட்டத்திற்குட்பட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம், 
என்றனர். 

நன்றி : தினமலர் நாளிதழ் -14.03.2017

மோசடி வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்


மோசடி வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்

வங்கிகளில் ரூ.17,750 கோடி மோசடி; ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஏப்.,– டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், 17,750 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. 

இது, தொடர்பாக, 3,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ; அதில், வங்கி ஊழியர்கள், 450 பேரும் அடங்குவர்.

மோசடியில், பண மதிப்பின் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, முதல் மூன்று இடங்¬களில் உள்ளன. 

இந்த வங்கிகளில், முறையே, 2,237 கோடி ரூபாய், 2,250 கோடி ரூபாய் மற்றும், 1,998 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. 

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மோசடி பட்டியலில், தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதலிடத்தில் உள்ளது.

அடுத்த இடங்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க், எச்.டி.எப்.சி., பேங்க், ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க் ஆகியவை உள்ளன.

மதிப்பீட்டு காலத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவைச் சேர்ந்த, 64 ஊழியர்கள் மீது, பண மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) நாளிதழ் -14.03.2017

Sunday, March 12, 2017

குறைந்தபட்ச இருப்பு தொகை வங்கிகள் கணக்கிடுவது எப்படி?


குறைந்தபட்ச இருப்பு தொகை வங்கிகள் கணக்கிடுவது எப்படி?

வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச, மாத சராசரி இருப்புத் தொகை இல்லாவிட்டால், வாடிக்கையாளர்கள், மாதம், 600 வரை அபராதம் செலுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 
வங்கி சேமிப்புக் கணக்கில், பண இருப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதைப் பற்றி வாடிக்கையாளர்கள் கவலைப்படாத காலம் ஒன்று இருந்தது. 

இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியாது. வங்கியில் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம், குறிப்பிட்ட அளவு தொகையை எப்போதும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற நிலை, தனியார் வங்கிகளில் கட்டாயமாகிவிட்டது. அது, ‘எம்.ஏ.பி.,’ என, குறிப்பிடப்படுகிறது. இப்போது, பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியும், ‘எம்.ஏ.பி.,’யை, அமல்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது, வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வங்கி, ‘எம்.ஏ.பி.,’ தொகையை, வைத்திருக்காத, சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம், அபராதம் வசூலிக்கப்படும் என, அறிவித்துள்ளது. 

மத்திய அரசு அறிமுகம் செய்த, பூஜ்ஜிய இருப்பு, ‘ஜன்தன்’ வங்கிக் கணக்கு திட்டத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக, இந்த முடிவை எடுத்திருப்பதாக அவ்வங்கி கூறியுள்ளது. 

அபராதம் எவ்வளவு? பொதுவாக, வங்கிகள், மாநகரம் மற்றும் நகரம்; சிறிய நகரம்; ஊரகம்; மற்றும் கிராமப்புறம் என, பல்வேறு வகையாக, வாடிக்கையாளர்களைப் பிரித்து, எம்.ஏ.பி., தொகையை, நிர்ணயித்துள்ளன. 

அந்த, எம்.ஏ.பி., இருப்பு குறைவாக இருந்தால், அதற்கு ஏற்ப, அவை அபராதமும் விதிக்கின்றன. அது, ஒவ்வொரு வங்கிக்கும் சிறிது மாறுபடுகிறது. 

பொதுவாக, எம்.ஏ.பி., அளவு 2,500 ரூபாயில் துவங்குகிறது; பின், 2,500 – 5,000 ரூபாய்; 5,000 – 7,500; மற்றும் 7,500 – 10,000 என, பல வகையாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப அபராதம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு, பெரும்பாலும், எம்.ஏ.பி., 10 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

 கிராமங்களில், அது, 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 எச்.டி.எப்.சி., வங்கியில், மாநகர பகுதியில், எம்.ஏ.பி., தொகை வைத்து இருக்காவிட்டால், அதிகபட்சம், 600 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 

ஐ.சி.ஐ.சி.ஐ.,யில், 450 ரூபாய்; 

ஆக்சிஸ் வங்கியில், 350 ரூபாய்; 

பாரத ஸ்டேட் வங்கியில், 100 ரூபாய் 

என, வங்கிக்கு வங்கி அது மாறுபடுகிறது. 

இவற்றுடன் கூடுதலாக, 14% சேவை வரி மற்றும் 0.5% கிருஷி கல்யாண் மற்றும் 0.5% ஸ்வச் பாரத் வரி விதிக்கப்படுகிறது. 

பாரத ஸ்டேட் வங்கியில், மாநகர கிளைகளில், ‘எம்.ஏ.பி.,’ 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நகரங்களுக்கு, 3,000 ரூபாய்; 

சிறிய நகரங்களுக்கு, 2,000 ரூபாய்; மற்றும் 

கிராமங்களுக்கு, 1,000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அபராதத்தை பொறுத்தவரை, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விதிக்கப்படவுள்ளது. வங்கிகள், எம்.ஏ.பி., தொடர்பான அபராதங்களை செலுத்தாதவர்களுக்கு, வங்கிகள், இமெயில், எஸ்.எம்.எஸ்., மூலமாக, தகவல் அனுப்புகின்றன. அப்படியும் அபராதத்தை செலுத்தாவிட்டாலோ, இருப்பு பராமரிக்கப்படா-விட்டாலோ, அபராதம் கூடிக் கொண்டே போகும். 

அந்த சேமிப்புக் கணக்கில் பணம் டிபாசிட் செய்யப்படும் ¬போது, அந்த நிலுவைத் தொகை வசூலிக்கப்படுகிறது. எனினும், வங்கிக் கணக்குகளை ரத்து செய்யப்படுவதில்லை; 

சட்டரீதியான நடவடிக்கையோ பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை என்பது ஆறுதல்!

மாத சராசரி கணக்கீடு எப்படி? 
வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காதவர்களுக்கு, அபராதத் தொகை, ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில் விதிக்கப்படுகிறது. அது, மாத சராசரி குறைந்தபட்ச இருப்பு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

இதை கணக்கிடுவது எப்படி? 
ஒவ்வொரு நாள் இறுதியிலும், சேமிப்புக் கணக்கில் மீதம் இருக்கும் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 30 நாளும் அவ்வாறு தினசரி கணக்கிடப்படும். அதை மொத்தமாகக் கூட்டி, வரும் தொகையை, 30 அல்லது 31ல் வகுத்தால் வரும் தொகை தான் மாத குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகை ஆகும். 

மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு!

வங்கி எம்.ஏ.பி., அப¬ராதம் (ரூபாயில்)

எச்.டி.எப்.சி., 10,000 150–600 

ஸ்டேட் வங்கி 5,000 50–100

 ஐ.சி.ஐ.சி.ஐ., 10,000 350–450 

ஆக்சிஸ் 10,000 350**

ஆக்சிஸ் வங்¬கியில், ஒவ்வொரு 100 ரூபாய் இருப்பு குறைவுக்கும், 10 ரூபாய் அபராதத்தொகை, 350 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்கப்படுகிறது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) - 13.03.2017


ஓய்வு பெற்றவர்களுக்கான முதலீடு திட்டம்


ஓய்வு பெற்றவர்களுக்கான முதலீடு திட்டம்

அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ‘சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme)  ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் பிரபலமான முதலீட்டு திட்டமாக இருக்கிறது. 
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அதிக பலன், குறைவான ரிஸ்க் மற்றும் வரிச்சலுகை போன்ற அம்சங்களால், இது ஓய்வூதியம் விரும்பும் முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்படுகிறது.

வங்கிகளின் வைப்பு நிதி முதலீடு தவிர, இந்த திட்டத்தையும் வயதானவர்கள் பரிசீலிக்கலாம் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். 

மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

தகுதி: 
60 வயதுக்கு மேலானவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது சூப்பர் ஆனுவேஷன் கீழ் ஓய்வு பெற்றவர், 55 வயது முதல், 60 வயதானவர்களும் முதலீடு செய்யலாம். 

ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக முதலீடு செய்யலாம். அதற்கு மேலான தொகை எனில் காசோலை மூலம் முதலீடு செய்யலாம். 

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆயிரம் ரூபாயின் பெருக்கல் தொகையாக முதலீடு செய்யலாம். 

இந்த திட்டத்தின் கீழ் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் துவக்கலாம். ஆனால், மொத்த தொகை, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. 

தனியாக அல்லது கணவன், மனைவி இணைந்த கூட்டாக கணக்கு துவக்கலாம். நாமினி வசதியும் இருக்கிறது.

வட்டி வருமானம்: தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. வட்டி காலாண்டு அடிப்ப-டையில் செலுத்தப்படும்.

வட்டி வருமானம் தானாக செலுத்தப்பட அஞ்சல் அலுவலகத்தில் தனியே சேமிப்பு கணக்கு துவக்கியிருக்க வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம், 5 ஆண்டுகள். 

முதிர்வு அடைந்தவுடன், ஓராண்டு காலத்திற்குள் உரிய விண்ணப்பம் சமர்ப்பித்து, மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். 

தொகையை முன்கூட்டியே விலக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஓராண்டுக்கு பிறகு வழங்கப்படுகிறது. எனினும், டிபாசிட் தொகையின், 1.5 சதவீதம் கழித்துக்கொள்ளப்படும். 

2 ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கிக் கொண்டால், 1 சதவீத தொகை கழித்துக்கொள்ளப்படும். ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து, இன்னொரு அஞ்சல் அலுவலகத்திற்கு கணக்கை மாற்றிக்கொள்ளலாம். 

கே.ஒய்.சி., படிவம், புகைப்படம், பான் எண் ஆகியவற்றை சமர்ப்பித்து அஞ்சல் அலுவலகங்களில் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவக்கி முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள் அதற்குரிய சான்றிதழை அளிக்க வேண்டும். ஒரு சில வங்கிகளும் இந்த திட்டத்தை வழங்குகின்றன. 

இந்த முதலீடு, 80 சி பிரிவின் கீழ் வருமான வரிச்சலுகைக்கு தகுதி உடையது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) - 13.03.2017

கைமாற்றுக் கடன் (BRIDGE LOAN) வேண்டுமா?


கைமாற்றுக் கடன் (BRIDGE LOAN) வேண்டுமா?

புதியனவற்றிற்கும் அதிக வசதிக்கும் ஏங்குவது மனித இயல்பு. புதிது புதிதாய் அதிக சவுகரியங்களுடன் இன்றைய காலகட்டத்தில் வீடுகள் விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கின்னறன. 
நீங்கள் வசிக்கும் வீட்டை அல்லது உங்களது அடுக்குமனையை விற்றுப் புதிய வீடு வாங்க விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டை விற்பதும், புதியதாக வீட்டை வாங்குவதும் ஒரே நேரத்தில் நிகழாது என்று உறுதிபடத் தெரிந்தால், உங்களுக்கு ஆபத் பாந்தவனானாக வந்து உதவுவது கைமாற்றுக் கடன் (Bridge Loan).

பிரிட்ஜ் லோன்

பிரிட்ஜ் லோன் என்பது புது வீடு வாங்கும்போது ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க உதவும். அதாவது புதிய வீடு ஒன்று கிடைத்து, வாங்க முடிவெடுத்து விட்டீர்கள். ஆனால் பழைய வீடு விற்பனையாகாத நிலையில் புதிய வீட்டை வாங்க உங்களுக்கு உதவக் கூடியதுதான் இந்த வகைக் கடன். 

புரியும்படிச் சொன்னால் கைமாற்றுக் கடன் என்று சொல்லலாம். இது குறுகிய காலக் கடன். இன்றைய தேதியில் பலரும் தங்களது பழைய வீடு அல்லது சொத்தை விற்று தங்களது கனவு இல்லத்தை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். அவர்களுக்கு நிதியளிக்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடனைத் திருப்பி அளிக்க ஒரு வருடம் கால அவகாசம் அளிக்கின்றன.

பெரும்பான்மையான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பிரிட்ஜ் லோனை விரைவில் ஒப்புதல் வழங்கி அளித்துவிடுகின்றன. 

அவற்றின் வட்டி விகிதம் அதிகம் என்றாலும் அடையும் பயன்களின் சாதக அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். 

பிரிட்ஜ் லோன்களின் பலாபலன்களைக் கருத்தில் கொண்டு அதற்குச் சந்தை மதிப்பு அதிகரித்து வருகிறது. என்றாலும் பல்வேறு வங்கிகளில் அளிக்கப்படும் பலன்களை ஒப்பிட்டுப் பார்த்து விதிமுறைகளை ஒன்றிற்கு இரண்டு முறை வாசித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் நலம்.

பழைய வீட்டை விற்றுக் கடனை அடைப்பதற்கான அவகாசம் அதிகபட்சம் இரண்டு வருடங்கள். 

கொடுக்கப்பட்ட கால வரம்பிற்குள் உங்களால் பழைய வீட்டையோ அல்லது சொத்தையோ விற்க முடியாவிடில், வங்கிகள் அதனை அடமானக் கடனாக மாற்றிவிடுகின்றன.

 வங்கி அந்தச் சொத்தை அடமானமாக வைத்துக்கொண்டு பிரிட்ஜ் லோனை அதிக வட்டியுடன் கூடிய சாதாரண வீட்டுக் கடனாக மாற்றிவிடும்.

விற்கப்படும் சொத்துக்கு நிகரான சந்தை மதிப்பிலுள்ள பணம் அல்லது புதிய வீட்டின் விலையின் 80 சதவிகிதம் கடனாகப் பெற இயலும். 

உங்கள் சொத்துக்கள், கடன் வரலாறு மற்றும் கடன் பொறுப்புகள் யாவற்றையும் ஆராய்ந்த பிறகே பிரிட்ஜ் லோன் வழங்கப்படும். வீட்டுக் கடன் வழங்கப்படும் போது சரிபார்க் கப்படும் வருமானச் சான்று, வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட், கடன் வரலாறு போன்றவை அனைத்தும் இதிலும் உறுதி செய்யப்படும்.

 இரு சொத்துக்களின் லீகல் டாக்குமெண்ட்களும் சரிபார்க்கப்பட்டு ஏதேனும் மாறுதல் இருக்கின்றதா என வங்கிகள் ஆராயும். 

உங்களுடைய தற்போதைய சொத்தின் லீகல் டாக்குமெண்ட் கடன் தீரும் வரை வங்கியில் அடமானமாக வைக்கப்படும். 

உங்கள் வீட்டை வாங்கும் நபர் வங்கிக்கே நேரடியாக காசோலை வரைந்தும் கடனை திருப்பி செலுத்தலாம்.

கடனைத் திருப்பிச் செலுத்துவது என்பது வீட்டை விற்கும் வரை மாதாந்திர தவணைகளாக அல்லது கடன் தொகைக்கான வட்டி அளவாக இருக்கும். 

நீங்கள் சொத்தை விற்ற பின் முழுத் தொகையையும் அந்த இரண்டு வருடங்களுக்கு இழுக்காமல் உடனேயும் கட்டலாம். இது போன்ற குறுகிய காலக் கடன்கள் சாதாரண வீட்டுக் கடனை விட அதிக வட்டி கோரலாம்.

 அதே போல் செலவுத் தொகை மற்றும் கட்டணங்களும் அதிகம் இருக்கலாம். பலன்களைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

முருகேஸ்வரி ரவி

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.03.2017 

பி.எப்., பணத்தை என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றலாம்!


பி.எப்., பணத்தை என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றலாம்!

பி.எப்., உறுப்பினர்கள். தங்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை. தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்.,க்கு மாற்றிக்-கொள்ள வழிசெய்யும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, பி.எப்.ஆர்.டி.ஏ., அண்மையில் தொழிலாளர் சேமநல நிதியான பி.எப்., உறுப்பினர்கள், தங்கள் கணக்கில் உள்ள தொகையை, தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றிக் கொள்வதற்கான நடைமுறையை வெளியிட்டுள்ளது.

பி.எப்., உறுப்பினர்கள் விரும்பினால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இவ்வாறு மாற்றப்படும் தொகை, அந்த ஆண்டுக்கான வருமானமாக கருதப்படாது என்றும், எனவே, வரி விதிப்புக்கு உட்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்ஷன் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். 

ஓய்வூதியத்திற்கான வழியாக தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., அமைகிறது. தனியார் ஊழியர்களும் இதில் இணையலாம். 

என்.பி.எஸ்., திட்டத்தில் விரும்பிய வகையில் முதலீட்டை தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. மாறும் வசதிஎன்.பி.எஸ்., திட்டத்தை மேலும் பிரபலமாக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 தொழிலாளர் சேமநல நிதியான பி.எப்., திட்டத்தில் இணைந்து இருப்பவர்கள், என்.பி.எஸ்., திட்டத்திற்கு மாறும் வசதி அறிமுகம் செய்யப்-படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2015 பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார். 

அதன்படி தற்போது இதற்கான நடைமுறையை பென்ஷன் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் தொடர்பாக, தொடர்ந்து கோரிக்கைகள் வந்த நிலையில், இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவதாக பென்ஷன் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பி.எப்., கணக்கில் உள்ள தொகையை, என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றிக்கொள்ள, இந்த திட்டத்தின் கீழ் டயர் 1 கணக்கு இருக்க வேண்டும். 

இந்த கணக்கை பணியாற்றும் நிறுவனம் மூலம் துவக்கிக் கொள்ளலாம் அல்லது இணையம் மூலம் வழங்கப்படும் இ.என்.பி.எஸ்., வசதியை பயன்படுத்தி துவக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு, இதற்கான கோரிக்கையை உறுப்பினர்கள் தங்கள் அலுவலகம் மூலம், பி.எப்., அலுவலகத்திற்கு முறைப்படி சமர்ப்பிக்க வேண்டும். 

பின், அந்த தொகை, என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றப்படும். அரசு ஊழியர்கள் அல்லது தனியார் துறை ஊழியர்கள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எப்., அல்-லது சூப்பர் ஆனுவேஷன் நிதி அறக்கட்டளை தொகையை இவ்வாறு மாற்றிக் கொள்ளலாம்.

என்ன பலன்?
என்.பி.எஸ்., திட்டத்திற்கு மாறுவதற்கான இந்த வசதி, பல அணுகூலங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. பி.எப்., சேமிப்பிற்கான வட்டி, இந்த ஆண்டு, 8.65 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுக்கிறது. 

என்.பி.எஸ்., திட்டத்தின் உறுப்பி¬னர்கள், தாங்கள் விரும்பிய வகையில் முதலீட்டு வாய்ப்பைத் தேர்வு செய்யலாம். அதில் சமபங்குகளில் அதிக முதலீட்டு வாய்ப்பைத் தேர்வு செய்யும் வசதியும் இருக்கிறது. எனவே, நீண்டகால நோக்கில், என்.பி.எஸ்., முதலீடு நல்ல பலனை அளிக்கலாம் என கருதப்படுகிறது. 

பி.எப்., கணக்கைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

என்.பி.எஸ்., திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பு வரவேற்கத்தக்கது என கருதப்பட்டாலும், இதை பயன்படுத்த விரும்புகிறவர்கள், இரு திட்டங்களின் சாதக, பாதகங்கள் மற்றும் தங்கள் நிதி இலக்குகள் உள்ளிட்ட அம்சங்களை கவனமாகப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

வரம்புகள் கவனம்
என்.பி.எஸ்., திட்டத்தைப் பொறுத்தவரை, சமபங்கு முதலீடு வாய்ப்பு அதிக பலன் தரக்கூடியதாக கருதப்பட்டாலும், இதில் சில வரம்புகள் இருக்கின்றன. இதில், 60 வயதாகும் வரை முழுத்தொகையையும் விலக்கிக் கொள்ள முடியாது. 
ஆனால், பி.எப்., உறுப்பினர்கள் வேலையை இழந்த பின், தொடர்ந்து 2 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால், முழுத்தொகையையும் விலக்கி கொள்ளலாம்.

மேலும், என்.பி.எஸ்., திட்டத்தில் ஓய்வுபெறும் வயதில், 60 சதவீத தொகையை மட்டுமே விலக்கி கொள்ள முடியும்.

 எஞ்சிய தொகை, பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும். 

மேலும், என்.பி.எஸ்., முதலீடு வரிச்சலுகை கொண்டிருந்தாலும், பணத்தை விலக்கி கொள்ளும்போது. வரிவிதிப்பு உண்டு. 

என்.பி.எஸ்., திட்டத்திற்கும் அனைத்து கட்டங்களிலும் வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

 மேலும், இளம் வயதினருக்கு இந்த வாய்ப்பு பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பின் பல்வேறு அம்சங்-களை பரிசீலிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) - 13.03.2017


Saturday, March 11, 2017

சர்பாசி சட்டம் - 2002 (SARFAESI ACT-2002)


சர்பாசி சட்டம் - 2002 (SARFAESI ACT-2002)

Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest என்பதையே ”SARFAESI ACT” என்று சுருக்கமாக அழைக்கிறோம்.

வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரத்தைத் தருகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், “வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம்” என்ற அமைப்பின் உதவியையும் வங்கிகள் பெறலாம்.

இந்தச் சட்டம் கடந்த 2002ம் ஆண்டுதான் இயற்றப்பட்டது.
2002ம் ஆண்டுக்கு முன்பு வரை வங்கிகள் தன்னுடைய வாடிக்கையாளருக்கு வழங்கிய கடனை வசூலிக்க படாதபாடுபட்டு வந்தது. 

அதற்கு வங்கியானது முதலில் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்ய வேண்டும். வழங்கப்பட்டிருக்கும் கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். கடனுக்காக ஜாமீனாக கொடுக்கப்பட்ட சொத்தை ஜப்தி செய்வதற்கு பல சட்ட நடைமுறைகளை பின்பற்றி, வழக்கை நடத்தி தீர்ப்பைப் பெற வேண்டும். 

ஆனால், இந்த சர்பாசி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யாரையும் எதிர்பார்க்காமல், வங்கியானது  தான் கொடுத்த கடனை தானே வசூல் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது.

இந்தச் சட்டத்தின் கீழ், 'கடன் வசூல் தீர்ப்பாயம்' (Debit Recovery Tribunal) என்று ஒன்றும் 'கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (Debit Recovery Appellate Tribunal) என்று ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

. இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை வழக்கு தொடுப்பதற்கு  முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம். நீதிமன்றம் பக்கம் போகும் வேலையே வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்களும் கண்டபடி எதிர்வாதம்  செய்யவும் முடியாது.

பிரிவு - 13

அடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளவர்கள், அதற்கு ஈடாக அளித்துள்ள சொத்துகளின் மீது சர்பாசி சட்டம் 2002 - பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஒரு வேளை உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் அதற்கு ஈடாக நிறுவன பங்குகளைக் காட்டியிருந்தால் அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.
பிரிவு - 17

வங்கியினுடைய சட்ட நடவடிக்கைளில் குறை ஏதாவது  இருந்தால் அல்லது  வங்கியானது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி கடன்பெற்றவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம். 

பிரிவு - 34

பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வங்கிகள் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி எவரும் இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் எதையும் நீதிமன்றங்களில் இருந்து பெறவே முடியாது. 

ஏனென்றால், அவைகளை வழங்குவதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும்போது தனி நபர் பிணை அல்லது ஜாமீன் கேட்பது அவர்களின் வழக்கமான நடைமுறையாகும். சொந்தமாக ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை மீட்கும் நடவடிக்கையை வங்கிகள் கடைசிபட்சமாகத்தான்  மேற்கொள்கின்றது.

சொந்த ஜாமீன் அளித்தவர்களின்மீது கொடுத்த கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் எடுத்த நடவடிக்கை மிகக் குறைவாகும். 

கடன் மீட்பு தீர்ப்பாயத்துக்கு செல்லும் முன் உத்தரவாதம் அளித்த நபரின் சொத்துகளை முடக்கி அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை வங்கிகள் முதலில் எடுக்க வேண்டும்.

கடன் வாங்கிய ஒரு நிறுவனம்  நஷ்டமாகி  மூடப்பட்டு இருந்தால், அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு  சொந்த ஜாமீன் வழங்கியவர்களிடமிருந்து அந்தக் கடன் தொகையை வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கு கடந்த 18.03.2016 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை பிற தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்களிடமும் மேற்கொள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக் கையை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் அளித்த விஷயத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு சென்று விட்ட நிலையில் அவரிடமிருந்து, ”வழங்கிய கடனை” வசூலிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இதுபோன்ற நிலை பிற வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

இது சம்பந்தமான முக்கிய வழக்கு

Sumathi vs. Sengottiyan and others - Madras High Court - M.Jayapal, J. C.R.P. (PD) No. 1591 of 2009 and M.P. No. 1 of 2009 - decided on 05-0202010 - Citation : 2010 (3) CTC 53

(இணையத்தில் இருந்து திரட்டியவை, நாள்:11.03.2017 )


மேலும் சில தகவல்கள்:

  1. சர்பாஸி சட்டத்தின் வாயிலாக வங்கி எடுத்து ஏலம் விட்ட சொத்தை ஒருவர் வாங்குகின்றார். அவ்வாறான ஏலத்திற்கு எடுத்த தொகைக்கு Sale Certificate வழங்கப்படுகின்றது. அந்த Sale Certificate அடிப்படையில் ஏலத்தில் சொத்தை எடுத்தவர் அதை பதிவு செய்ய முனையும்பொது, பதிவாளர் அந்த சொத்தின் அரசு மதிப்பிற்கு Stamp Duty செலுத்த சொல்கின்றார். உயர்நீதிமன்றமானது, ection 47-A of the Indian Stamp Act, 1899, பொருந்தாது எனவும் Sale Certificate மதிப்பிற்கு Stamp Duty செலுத்துவதே சரி! என ஆணையிட்டுள்ளது. வழக்கு எண்: 2015 (1) CTC 526 (Mad)
  2. ஒருவர் வீட்டிற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அவர் வீட்டை வாடகைக்கு வீட்டை விட்டுள்ளார். இதற்கிடையில் வீட்டிற்காக வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில், வங்கியானது சர்பாஸி சட்டத்தை பயன்படுத்தி அந்த வீட்டின் உடமையை எடுக்க முயற்சி செய்கின்றது. அப்போது ஒரு சட்ட வினா எழுகின்றது. வாடகைதாரர் குடியிருக்கும்போது, மேற்படி சட்டத்தை கொண்டு அவரை வாடகைதாரரை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்த வீட்டின் உடமையை எடுக்கு சர்பாஸி சட்டம் அனுமதிக்கின்றதா? அதற்கு உச்சநீதிமன்றம் “சர்பாஸி சட்டத்தில் வாடகைதார்ர் இருக்கும்போது அவரை காலி செய்து உடமை எடுக்க அதிகாரம் இல்லை எனவும் வாடகைதாரரை முறையாக சட்டப்படியாக அவரை அந்தவீட்டைவிட்டு காலி செய்த பின்னரே அந்த வீட்டின் உரிமையை எடுக்க முடியும் என தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண்: 2016(2) CTC 319 (SC) 
  3. சர்பாஸி சட்டத்தின்படி சொத்தின் உடமையை எடுக்கும் வகையில் வங்கியானது நீதிமன்றத்தில் ஆணையிட கோரியதில், வங்கி அதற்கான ஆணையை பிறப்பித்திருக்கும் நிலையில் (உடமை இன்னும் எடுக்கப்படவில்லை) சொத்தின் உரிமையாளர் DRT –ல் மேல்முறையீடு செய்கின்றார். வங்கியானது சொத்தின் உடமை இன்னும் எடுக்கபடாத்தால், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று வாதிட்டதின்பேரில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகின்றது. சொத்தின் உரிமையாளரின் மேல்முறையீட்டின் உரிமையானது சொத்தின் உடமை எடுக்கப்படவில்லை என்பதை காரணமாக கொண்டு, எந்தவிதத்திலும் பாதிக்காது என தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண்: 2015(4) CTC 18 (Mad)
  4. SARFAESI சட்டத்தின் படி கடன் பெற்றவரின் சொத்துக்களை வங்கி எடுத்து கொள்கின்றது. அந்த கடன் பெற்றவர் இந்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பதால் வங்கியானது அந்த சொத்தை விற்கும்போது விற்ற பணத்தில் இருந்து முதலில் இந்திய சுங்கவரி துறையானது வரியை பெற உரிமை உள்ளது! என்ற வாதத்தை மேற்படி சட்டத்தின் பிரிவு 35 யை காட்டி சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கு எண்: 2016 (3) CTC 66 (Mad).
நன்றி : வழக்கறிஞர் திரு Leenus Leo Edwards, 06.01.2017
அன்புடன் செல்வம் பழனிச்சாமி