disalbe Right click

Sunday, April 23, 2017

ஜாதி பின்னணியில் தீர்ப்பு வழங்கக்கூடாது!

ஜாதி பின்னணியில் தீர்ப்பு வழங்கக்கூடாது!

ஜாதி பின்னணியில் தீர்ப்பு வழங்க கூடாது!:
கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் அறிவுரை
சென்னை:'ஜாதி மற்றும் சமூக பின்னணி அடிப்படையில், தண்டனை வழங்க கூடாது' என, கீழமை நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அத்துடன், கொலை, கொள்ளை வழக்கில், ஜாதி அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரை, உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
  • காஞ்சிபுரம் மாவட்டம், திருமங்கலம் கண்டிகை கிராமத்தில், பொன்னியம்மன் கோவிலின் கதவை உடைத்து, உள்ளே புகுந்த சிலர், உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளை அடித்தனர்.
  • கோவிலுக்கு வெளியே துாங்கி கொண்டிருந்த சுப்ரமணி என்பவர், சத்தம் கேட்டு விழித்தார்.
  • கட்டையாலும், கடப்பாரையாலும் சுப்ரமணியனை தாக்கியதில், அங்கேயே இறந்தார்.
  • 2010 ஜனவரியில் நடந்த சம்பவம் குறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
  • இந்த வழக்கை, காஞ்சிபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது.
  • ஐந்து பேருக்கும், ஆயுள் தண்டனை விதித்து, 2015 ஜூலை, 31ல் தீர்ப்பளித்தது.
  • தண்டனையை எதிர்த்து, குமார் தவிர மற்ற நான்கு பேரும், மேல்முறையீடு செய்தனர்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் நாகமுத்து, என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
  • குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில், ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
  • ஆதாரங்கள் இல்லாமல், ஜாதி அடிப்படையில் குற்றவாளி என, முடிவு செய்வது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
  • இந்த வழக்கைப் பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாதி பின்னணி மற்றும் சமூக அடிப்படையை, விசாரணை நீதிமன்றம் ஆராய்ந்துள்ளது.
  • குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் குற்றம் புரிந்துள்ளனர் என்ற முடிவுக்கு, நீதிமன்றம் வந்துள்ளது.
பாரம்பரிய தொழில்
  • குறிப்பிட்ட வகையான குற்றங்களில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் பாரம்பரியமாக ஈடுபடுவர் என, நீதிமன்றம் எப்படி அனுமானிக்க முடியும் என்பதை, புரிந்து கொள்ள முடியவில்லை.
  • குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, திருடுவது தான் பாரம்பரிய தொழில் என, விசாரணை நீதிமன்றம் எப்படி முடிவுக்கு வர முடியும்.
  • ஒரு காலத்தில் அந்த சமூகத்தினர், திருட்டு தொழில் செய்ததாக அனுமானித்தாலும், அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான், கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக, நீதிமன்றம் முடிவுக்கு வந்தது, கேலிக்குரியதாக உள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, ஒரு சமூகத்தின் மீது முத்திரை குத்துவதை, எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.
  • முன்னோர்களின் கிரிமினல் நடவடிக்கையை அடிப்படையாக வைத்து, அவர்களின் வழி வந்தவர்கள் மீதான வழக்குகளை, நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது.
  • தீர்ப்பு எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
  • இப்படி ஒரு மோசமான தீர்ப்பை, எங்கள் அனுபவத்தில் சந்தித்ததில்லை.
  • ஜாதி அடிப்படையிலான தீர்ப்பு, இதுவே கடைசியாக இருக்கட்டும்.
  • உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, அனைத்து முதன்மை செஷன்ஸ் நீதிபதிகளுக்கும், பதிவுத்துறை சுற்றுக்கு அனுப்ப வேண்டும்.
  • வரும் காலங்களில், ஜாதி மற்றும் சமூக பின்னணியில், தீர்ப்புகள் இருக்கக் கூடாது.
  • செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
தண்டனையை எதிர்த்து, குமார் என்பவர் மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும், ஐந்து பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 23.04.2017

சட்ட விரோத காவல் & சித்ரவதை - போலீஸ் மீது வழக்கு

சட்ட விரோத காவல் & சித்ரவதை - போலீஸ் மீது வழக்கு
சென்னை:சட்டவிரோத காவலில் வைத்து துன்புறுத்தியதாக, கோவை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியைச் சேர்ந்த சரவணன் தாக்கல் செய்த மனு:

என் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை; கோவை மாவட்டத்தில், ரியல் எஸ்டேட், மொத்த காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். அங்கு சொத்துக்களும் வாங்கினேன். கோவை மாவட்டம், வெள்ளக்கிணறில் வசித்து வந்தேன்.என் நண்பர் வைத்திலிங்கத்துடன், சந்தைக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது, சீருடையில் இல்லாத ஏழு போலீசார், எங்கள் இருவரையும் வேனுக்குள் ஏற்றிச் சென்றனர். 2016 பிப்ரவரியில் சம்பவம் நடந்தது.

திருமண மண்டபத்தில் திருடி விட்டதாக, என் மீது குற்றம் சாட்டினர்; லத்தியால் அடித்தனர். கோவையில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து தாக்கினர். பின், என் வீட்டுக்கு அழைத்து சென்று, நகை, பணம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.என் மனைவியின் கழுத்தில் தொங்கிய தங்க தாலியை, வலுக்கட்டாயமாக பறித்தனர். காந்திபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று, ஷாஜகான் என்பவர் பெயரில், விற்பனை பத்திரத்தில் கையெழுத்திட வைத்தனர்; வெற்று தாளிலும் கையெழுத்து பெற்றனர்.

சட்டவிரோதமாக காவலில் வைத்து, சித்ரவதை செய்ததற்காக, கோவை மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணா, காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன்.

என் மனுவை பரிசீலித்து, போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை செயலர், டி.ஜி.பி., கோவை போலீஸ் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ராஜா முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர் நாளிதழ் செய்தி - 23.04.2017


Saturday, April 22, 2017

இந்திய சாட்சியச் சட்டம்,1872 (பிரிவு-134)


இந்திய சாட்சியச் சட்டம்,1872 - பிரிவு 134
நீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, அது சம்பந்தமாக அதனுடன் இணைத்து நாம் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. 

இருந்தாலும், அதிக சாட்சிகள் அல்லது ஆவணங்களின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்புகள் வழங்குவதில்லை. நாம் ஜெயிப்பதற்கு வலுவான சாட்சி அல்லது ஆவணம் ஒன்று மட்டும் இருந்தாலே போதுமானதாகும். 

எந்த ஒரு வழக்கிலும், ஏதாவது ஒரு சங்கதியை மெய்ப்பிப்பதற்கு இத்தனை சாட்சிகள் வேண்டுமென்பது இல்லை என்று  இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-134  தெளிவாகக் கூறுகிறது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி- 23.04.2017

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 125

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 125   
 நடுவர் அல்லது காவல்துறை அதிகாரி அல்லது அலுவலர் எவரிடத்திலும்  குற்றம் ஏதேனும் செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல் அவர் எங்கிருந்து பெற்றார்? என்று சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. 
வருவாய்த்துறை அலுவலர் எவரும், பொது வருவாய்க்கு எதிராகக் குற்றம் ஏதேனும் செய்யப்பட்டது பற்றிய தகவல்களை அவர் எங்கிருந்து பெற்றார்?   என்று சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. 
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-125ன்  கீழ் குற்றம் சம்பந்தமான தகவல்களை அதை பெற்ற அதிகாரி அல்லது அலுவலர் எவரும் வெளியில் கூற வேண்டியதில்லை என்று மேற்கண்டபடி  தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனால், அரசுத்துறை அதிகாரியிடம் குற்றம் சுமத்தப்பட்டவர், என்மீது குற்றமா, யார் சொன்னது? என்று  கேட்டுவிட்டால் புகார் மனுவை ஜெராக்ஸ் எடுத்து அவரது கையில் கொடுத்துவிடுகிறார்கள். புகார்தாரர் தாக்கப் படுகிறார். புகார் மீதான  நடவடிக்கை முடக்கப்படுகிறது. 
இதனால்தான் நாட்டில் நடக்கின்ற குற்றங்களை  பொதுமக்கள் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். 
அதனால்தான், அரசுத் துறை மூலமாக வெளியிடப்படும் சில விளம்பரங்களில், நீங்கள் கொடுக்கின்ற புகார் ரகசியமாக பாதுகாக்கப்படும்! என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை நம் நாட்டில் உள்ளது. 
இந்நிலை மாற வேண்டும். 
அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.04.2017

தவணை முறையில் பொருட்கள் வாங்குவது சரியா?


தவணை முறையில் பொருட்கள் வாங்குவது சரியா?
முதலில், சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்?
1. உங்களுடைய மாதச் சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் இ.எம்.ஐ செலுத்துகிறீர்கள்?
2. உங்கள் வீட்டில் உங்களைச் சுற்றியுள்ள பொருட்களில் எவை எல்லாம் இ.எம்.ஐ-யில் வாங்கியவை…
3. எவை எல்லாம் இ.எம்.ஐ-யில் கிடைக்கின்றன?
இந்தக் கேள்விகளுக்கான விடையில் இருக்கிறது, நம்முடைய தனிப்பட்ட பொருளாதார வலிமை! 
இன்றைய தேதியில் நாம் இருக்கும் வீட்டில் தொடங்கி, டி.வி., பைக், கையடக்க மொபைல் வரை கிட்டத்தட்ட எல்லா பொருட்களுமே தவணைமுறையில் கிடைக்கின்றன. தேவை இருக்கிறதோ… இல்லையோ எதைக் கண்டாலும் வாங்கிக் குவிக்கிறோம். பாட்டு கேட்பதற்கு மட்டும் வீட்டில் 10 சாதனங்கள் வைத்திருக்கிறோம்.
90-களின் ஆரம்பத்தில், `ஷாம்பூ’ என்பது இந்தியாவில் ஆடம்பரமான பொருட்களில் ஒன்று. 100 மில்லி ஷாம்பூ பாட்டிலின் விலை அப்போது இரண்டு லிட்டர் பெட்ரோலைவிட அதிகம். ஷாம்பு வாங்குவதை, அப்போது நடுத்தர வர்க்கத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்போது நடந்த ஆச்சர்யங்களில் ஒன்று சாஷே. ஒரே ஒரு ரூபாயில் ஷாம்பூ, கடைக்கோடி வரை ரீச்… பிரில்லியன்ட் ஐடியா!
இந்த சாஷேக்களின் சற்றே பெரிய நிதியாதார வடிவம் தான் `ஈக்குவேட்டட் மந்த்லி இன்ஸ்டால்மென்ட்ஸ்’… சுருக்கமாக EMI அல்லது தவணைமுறைத் திட்டம்.
`ஒருவருடைய வாங்கும் திறனுக்கு அதிகமாக விலை உள்ள ஒரு பொருளை வாங்கவைக்கும் எளிய வழி, இந்த இ.எம்.ஐ’ என்றே இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எண்ணிக்கையில் அதிகமான நடுத்தரவர்க்கத்தினர் தலையில், விலை உயர்ந்த பொருட்களைத் திணிக்கும் இன்னொரு டெக்னிக் என்றும் இதைக் கருதலாம். அது மட்டும் அல்ல, வாங்கும் பொருளின் விலைக்கு மேல் வட்டிபோட்டு, அதையும் சேர்த்து நுகர்வோரின் தலையிலேயே சுமத்தும் `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ டெக்னிக்.
பாஸ்கரன், சென்னையில் முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர். மாதம் 50,000 ரூபாய் சம்பளம். ஆனால், அதுதான் தனது பிரச்னை என இப்போது சொல்கிறார். பணம் எடுக்கச் செல்லும் ஏ.டி.எம்-மில் இருந்து தெருமுனை மளிகைக் கடை அண்ணாச்சி வரை எல்லோரும் அவருக்கு லோன் தரத் தயாராக இருந்தார்கள்.
முதலில் குடியிருந்த வாடகை அறைக்கு, கிரெடிட் கார்டில் ஏ.சி வாங்கினார். `ஆறு மாத இ.எம்.ஐ-ஆக மாற்றிக்கொள்கிறீர்களா?’ என்றதும், `சரி’ என்றார். ஏ.சி-யைத் தொடர்ந்து எல்.இ.டி டி.வி வந்தது. சைடு எஃபெக்ட்டாக ஹோம் தியேட்டர் சேர்ந்தது. இந்தப் பட்டியல் கடைசியில் ஆப்பிள் ஐபோனில் வந்து நின்றது. 50,000 ரூபாய் சம்பளம், இ.எம்.ஐ போக 13,000 ரூபாயாகச் சுருங்கியது.
ஒருகட்டத்தில் ஐ.டி துறை வீழ்ச்சியைச் சந்திக்க…
பாஸ்கரனின் சம்பளத்தை 40,000 ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். வேலை தப்பித்ததே பெரிய விஷயம் என்ற சூழலில் பாஸ்கரனால் எதுவும் பேச முடியவில்லை. செலவுகளைச் சமாளிக்க முடியாமல், தவணைகளில் சிலவற்றைக் கட்டாமல் இருந்தார். அதனால் வங்கிகள் அவரை தொடர்ந்து நெருக்க ஆரம்பித்தன. வீட்டில் அப்பாவுக்கு ஓர் அவசர அறுவைசிகிச்சை… அதிகமான தொகை தேவைப்பட, பெர்சனல் லோனுக்கு விண்ணப்பித்தார். அவசியமான அந்த நேரத்தில் கடன் தர மறுத்துவிட்டன வங்கிகள். காரணம், `சிபில் ஸ்கோர்’!
அது என்ன சிபில் ஸ்கோர்?
ஒவ்வொருவரும் வங்கிகளுடன் பல வகைகளில் நுகர்வோராக இருக்கிறார்கள். வீட்டுக்கடன், வாகனக்கடன்… எனப் பல்வேறு கடன்களில் தொடங்கி கிரெடிட் கார்டு, சேமிப்புக் கணக்கு எனப் பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன.
அதற்குச் செலுத்தவேண்டிய பணத்தைச் சரியாகச் செலுத்துகிறோமா இல்லையா என்பதை வைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்கோர் போடுவார்கள். குறிப்பிட்ட தேதியில் செலுத்தத் தவறியவர்கள், செலுத்தாமல்விட்டவர்கள் என ஒவ்வொரு குறைக்கும் மார்க் குறைந்துகொண்டே வரும். இப்படி குறைவான ஸ்கோர் பெற்றவர்களுக்கு அடுத்து எந்த வங்கியும் எந்த லோனும் கொடுக்க முன்வராது.
இதை முறைப்படுத்தப்பட்ட சிஸ்டம் மூலம் கண்காணிப்பதால் எந்த வங்கியில் என்ன பேலன்ஸ் இருந்தாலும், அதை மற்ற எந்த வங்கியும் தெரிந்துகொள்ள முடியும். அதனால் ஒரு வங்கியை ஏமாற்றி, இன்னொரு வங்கியில் வாங்கிவிடவும் முடியாது. இப்படி சிபில் ஸ்கோரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதனால், வாழ்க்கையின் பிற்பகுதியில் திருமணத்துக்கும், பிள்ளைகள் படிப்புக்கும், இன்னும் பல முக்கியமான அத்தியாவசியச் செலவுகளுக்கும் கடன் வாங்க வங்கியை நாடினால், நம்முடைய பழைய ட்ராக் ரெக்கார்டைக் காட்டி கடன்தர மறுத்துவிடுவார்கள்.
நம் வசதிக்காகத்தான் தவணைமுறையில் வீடு தொடங்கி டி.வி வரை சகலத்தையும் வாங்குகிறோம். கோடைகாலத்தைச் சமாளிக்க ஏ.சி., நெரிசலைத் தவிர்க்க கார்… என வரிசையாகச் சொல்லலாம். ஆனால், அதற்காக நாம் செலவழிக்கும் தொகை நம்மை நெருக்கடியில் தள்ளுகிறது என்றால், அதைக் கவனித்து மாற்றிக்கொள்ள வேண்டாமா?
ஒவ்வொருவரும் அவரவர் வருமானத்துக்கு ஏற்ப இ.எம்.ஐ-யை எப்படிச் சமாளிப்பது?
`டேக் ஹோம்’ எனச் சொல்வார்கள். அதற்கு, `எல்லா பிடித்தங்களும் போக ஒருவரின் கைக்கு வரும் சம்பளம்’ என அர்த்தம். அந்தச் சம்பளத்தில் 20 முதல் 25 சதவிகிதம் மட்டுமே இ.எம்.ஐ-க்காக ஒதுக்கலாம். 25 முதல் 40 சதவிகிதத்தைத் தொட்டாலே, கொஞ்சம் உஷாராகிவிட வேண்டும். ஏதேனும் ஒரு இ.எம்.ஐ-யை முடிக்கப்பார்க்க வேண்டும். `40 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டால், கூடவே ஸ்ட்ரெஸ் சேர்ந்துகொள்ளும்’ என்கிறார்கள். `50 சதவிகிதத்தைத் தொட்டால் அலாரம் அடிக்கிறது’ என அர்த்தம். ஆனால், இன்று வங்கிகளோ ஒருவரின் சம்பளத்தில் 60 சதவிகித அளவுக்குக்கூட இ.எம்.ஐ கட்டும் அளவுக்கு கடன் தருகின்றன.
இ.எம்.ஐ என்பதில், எதிர்பாராத செலவுகளும் உண்டு. பெரும்பாலும் வீடு வாங்குவதற்காகத்தான் பெரிய அளவில் கடன் வாங்கப்படுகின்றன. அதற்கான வட்டி அவ்வப்போது மாற்றியமைக்கப் படுவதும் உண்டு. அப்படி மாறும்போது இ.எம்.ஐ தொகையும் மாறும். புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில் இதனால் பாதிக்கப்பட்டவர்.
“நான் ஆட்டோமொபைல் கம்பெனியில வேலைசெய்றேன். மிடில் கிளாஸ்தான். கையில இருந்த காசையும் நகையையும் வெச்சு சின்னதா ஒரு ஃப்ளாட் வாங்கினேன். என் மாசச் சம்பளம் 22,000 ரூபாய். அதுல 11,500 ரூபாய் வீட்டு இ.எம்.ஐ-க்குப் போயிடும். மீதியை வெச்சுத்தான் குடும்பம் நடத்தணும். திடீர்னு வட்டி ஏத்திட்டாங்கனு பேங்க்ல இருந்து லெட்டர் வந்தது. `இனி மாசம் 14,000 ரூபாய் கட்டணும்’னு சொன்னாங்க. எனக்கு வயசும் அதிகம்கிறதால லோன் கட்டுற காலத்தையும் அதிகரிக்க முடியாதுனு சொன்னாங்க. நிம்மதியா வாழலாம்னு வீடு வாங்கிட்டு, கடைசியில அது முடியாம வீட்டை என் தம்பிக்கு வித்துட்டேன்” என்கிறார் செந்தில்.
அப்படியெனில், இ.எம்.ஐ ஏமாற்று வேலையா? நிச்சயம் இல்லை. முறையான நிதி மேலாண்மை செய்பவர்களுக்கு இது வரம். சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த லாவண்யா, காதல் திருமணம் புரிந்தவர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி உடன் வேலைசெய்தவரைத் திருமணம் செய்தபோது அவர்களிடம் இருந்தது வேலை மட்டுமே. மாதம் 45,000 ரூபாய் அவர்கள் இருவரின் மொத்த வருமானம். அதில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை கிரெடிட் கார்டில் வாங்கி, அதை இ.எம்.ஐ-ஆக மாற்றிக்கொண்டார். 23,000 ரூபாய் போக, மீதிப் பணத்தில் அன்றாடச் செலவுகளைப் பார்த்துக்கொண்டனர்.
எடுத்தவுடன் ஏ.சி., டி.வி என வாங்காமல் அவசியத் தேவைகளான ஃப்ரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றை வாங்கினார்கள். சம்பளம் ஏறியபோதும் மாதம் 23,000 ரூபாய்தான் இ.எம்.ஐ-க்கு என்பதில் தெளிவாக இருந்தது இந்த ஜோடி. ஐந்தே வருடங்கள்…
தாம்பரத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கி குடிபோய்விட்டார்கள். இப்போது அவர்கள் மாத வருமானம் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டாலும், இ.எம்.ஐ தொகை 40,000 ரூபாய்தான். இதைப் புரிந்துகொண்டால் அதை நம் வசதிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால்… `கையில் கொஞ்சம் இ.எம்.ஐ இருந்தால் அதற்கு நாம்தான் முதலாளி. கழுத்துவரைக்கும் உயர்ந்து சென்றால் அதுதான் நமக்கு முதலாளி.’
இ.எம்.ஐ
`தமிழகத்தின் முதல் இ.எம்.ஐ திட்டம் எதுவாக இருக்கும்?’ என விசாரித்தோம். பிரபல தொழிலதிபர்களான வி.ஜி.பி சகோதரர்களைத்தான் நிறையப் பேர் சொல்கிறார்கள். வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்றுவிட்டு, மாதா மாதம் வந்து பணம் வாங்கிச் செல்வார்கள். பொருளின் விலை 100 ரூபாய் என்றால், 12 மாதங்கள், மாதம் 10 ரூபாய் வீதம் செலுத்தலாம் என்ற அவர்களது பிசினஸ் ஐடியா அப்போது செம ஹிட்.
இ.எம்.ஐ – சில டிப்ஸ்…
1) குறைந்தகால இ.எம்.ஐ எடுப்பது பெஸ்ட். `கட்டுவதற்குச் சிரமம் என்றாலும், இதுதான் சிறந்தது’ என்கிறார்கள் நிதி வல்லுநர்கள்.
2) கடன் வாங்கி, இன்னோர் இடத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தங்கமோ, மியூச்சுவல் ஃபண்டோ தரும் ரிட்டர்னைவிட, நாம் லோனுக்குக் கட்டும் வட்டி அதிகமாகத்தான் இருக்கும்.
3) லோன் மதிப்பு அதிகமாக இருக்கும்போது இன்ஷூரன்ஸையும் சேர்த்து எடுத்துக்கொள்வது நலம். அசம்பாவிதம் ஏதும் நடந்தால், உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற அந்தப் பணம் உதவும்.
4) பெரும்பாலும் லோன்களில், ஆரம்பகால இ.எம்.ஐ-களிலே மொத்த காலத்துக்கும் வட்டி வசூலிக்கப்பட்டுவிடும். கடைசி இ.எம்.ஐ-களில் வெறும் அசல் மட்டுமே போகும். எனவே, லோனை முன்கூட்டியே முடிப்பது என்றால், அசல் எவ்வளவு, வட்டி எவ்வளவு என்பதைக் கவனித்துவிட்டு முடிக்கலாம்.
5) தேவை இருக்கும்போது மட்டுமே ஒரு பொருளை, கடனில் வாங்க வேண்டும். இல்லையென்றால், பொருளின் மதிப்பில் பாதியையாவது பணமாகச் சேர்த்துவிட்டு பிறகு வாங்கலாம்.
6) உங்கள் இ.எம்.ஐ பற்றிய விவரங்களை மனைவி, பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அப்போதுதான் அவர்களுக்கும் வீட்டு நிதி நிலவரங்கள் புரியும்.

Friday, April 21, 2017

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கல்வி பெற

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கல்வி பெற.....

தனியார் பள்ளிகளில் கட்டணமில்லாமல் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு சேர்ப்பது எப்படி?
தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு, மிகப்பெரிய அளவில் போட்டிபோட வேண்டியிருக்கிறது. கல்லூரிகளில் மட்டுமே வசூலிக்கப்பட்ட நன்கொடை, இப்போது எல்.கே.ஜி-யில் சேர்ப்பதற்கும் வசூலிக்கிறார்கள். இதைத் தவிர, பெற்றோரின் வருமானத்தில் பெரும்பகுதியைக் கட்டணமாகச் செலவுசெய்ய வேண்டியுள்ளது. 
பெருநகரங்களில் உள்ள ஒருசில பள்ளிகளில் சேருவதற்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்கு, இரவு நேரத்திலிருந்தே வரிசை நிற்கிறது. அடுத்த ஆண்டில் சேர, இந்த ஆண்டே விண்ணப்பம் வழங்கும் பள்ளிகளும் உள்ளன. இவர்களுக்கு மத்தியில் `நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கு வாய்ப்பு இல்லையா?’ என ஏக்கத்துடன் காத்திருக்கும் பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவினருக்கு உதவக் காத்திருக்கிறது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.
இந்தச் சட்டத்தின் மூலம், சிறுமைபான்மையினர் நடத்தும் பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் கட்டணம் இல்லாமல் பிள்ளைகளைச் சேர்க்கலாம். ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவிகிதம் அளவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் குழந்தைகளிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசு, கல்விக் கட்டணத்தைப் பள்ளிக்கு நேரடியாகச் செலுத்திவிடும்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சட்டம் இருந்தாலும், `சரியான விண்ணப்பங்கள் வரவில்லைஎன்று தனியார் பள்ளிகள் சாக்குபோக்குச் சொல்லி வந்தன. `விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில்லைஅல்லது `பிள்ளைகளைச் சேர்க்கும்போது பெரிய அளவில் அலைக்கழிக்கவைக்கிறார்கள்என்று பெற்றோர்கள் புகார் தெரிவிக்க, அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பத்தை இணையதளத்தின் வழியாகவே பெற ஆரம்பித்திருக்கிறது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது தமிழகக் கல்வித் துறை. மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  இணையதள வசதி இல்லாதவர்கள், அருகில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், தொடக்கக் கல்வி உதவி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகம், அரசு இ-சேவை மையங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுடைய பதிவு, உங்களுடைய மொபைலில் எஸ்.எம்.எஸ்-ஆகத் தகவல் கிடைத்துவிடும்.
இணையத்தில் பதிவுசெய்யும்போது, கீழ்க்காணும் சான்றிதழ்களை இணைக்க வேண்டும். 
1. குழந்தையின் புகைப்படம்.  
2. பிறப்புச் சான்றிதழ் (பிறப்புச் சான்று, மருத்துவமனை உதவியாளர் மற்றும் மருத்துவப் பதிவேட்டின் நகல், அங்கன்வாடிப் பதிவேடு நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலர், குழந்தை பிறந்த தேதி குறித்து வழங்கிய உறுதிமொழி. இவற்றில் ஏதேனும் ஒன்று சமர்பிக்க வேண்டும்).
3. இருப்பிட அடையாள அட்டை (குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக்கணக்குப் புத்தகம், தொலைபேசிக் கட்டண ரசீது, வருமானவரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, இருப்பிடம் சார்ந்து கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சான்று, மாநில/மத்திய அரசு/பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும்).
விண்ணப்பப் படிவத்தில் `நலிவடைந்த பிரிவினர்’, `வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (சிறப்புப் பிரிவு)’, `வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்என்று மூன்று வகை இருக்கும். நலிவடைந்த பிரிவினர் என்பது, ஆண்டு வருமான அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், ஹெச்.ஐ.வி-யினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தை போன்றோரையும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும் மற்ற மதத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர் போன்றோரும் விண்ணப்பிக்கலாம்.
4. நலிவடைந்த பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர், வருமான சான்றிதழையும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர் சாதிச் சான்றிதழையும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதரவற்றவர்/ ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்/ மூன்றாம் பாலினத்தவர்/ மாற்றுத்திறனாளிகள்/ துப்புரவுத் தொழிலாளியின் குழந்தையெனில் அதற்கான சான்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். 
பதிவுசெய்த விவரங்களை அச்சிட்டு, உங்களது குழந்தை எந்தப் பள்ளியில் சேர்க்க விரும்புகிறீர்களோ அந்தப் பள்ளியில் சமர்பிக்க வேண்டும், விண்ணப்பத்தில், உங்களுக்கு அருகில் உள்ள ஐந்து பள்ளிகளை நீங்கள் தேர்வுசெய்யலாம்
உங்கள் வீட்டுக்கு அருகில் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எவ்வளவு பிரிவுகள் இருக்கின்றன, எவ்வளவு மாணவர்களுக்கு எந்த வகுப்பு அனுமதி வழங்கப்படுகின்றன போன்ற அனைத்து விவரங்களும் இணையதளத்தில் உள்ளன. 
பள்ளியில் சேர்க்கைக்காக விவரங்களை மே - 23க்குள் வெளியிட வேண்டும். இந்த விவரங்களைப் பள்ளியின் நோட்டீஸ் போர்டில் வெளியிட வேண்டும்.  பின்பு 'சேர்க்கைக்கான விவரங்களை இணையத்திலும் வெளியிடப்படும்என்று அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அதிக அளவில் விண்ணப்பம் வரும்போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, மே-23 தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது அரசு. 
வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுங்கள். 
 SAKTHIVEL MURUGAN G

நன்றி : விகடன் செய்திகள் -22.04.2017


தோப்புக்கரணம் போடுவதால் உண்டாகும் பலன்கள்

தோப்புக்கரணம் போடுவதால் உண்டாகும் பலன்கள்

உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்கும் தோப்புக்கரணம்!
நாமெல்லாம் பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும்போது முச்சந்தி பிள்ளையாருக்கு ஒன்பது தோப்புக்கரணம் போட்டுவிட்டு போனோமே...உங்களுக்கு ஞாபகம் வருகிறதா..?

இன்றும் "பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுடா... நல்லா படிப்பு வரும்''னு சில தாத்தாக்கள் பேரன்களுக்கு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் பள்ளிக்கூடங்களில்கூட 'தூக்கம்' என்பதை 'துக்கம்' என எழுதும் மக்கு மாணவர்களை தண்டிக்கவும், தப்புக் கணக்குப் போடும் மாணவர்களை திருத்தவும் வாத்தியார்கள் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். பெரியவர்கள் உட்பட அனைவருமே பிள்ளையார் கோயிலுக்கு போனால் முறையாக அமர்ந்து எழுந்து தோப்புக்கரணம் போடுவது வழக்கம்.

ஆனால் இன்று 'ஃபாஸ்ட் ஃபுட்' சாப்பிடுவது போல சாமி கும்பிடுவதும் சுருங்கிப் போனதால் தோப்புக்கரணம் போடுவதை பலரும் விட்டுவிட்டார்கள்.

நம் பெரியவர்கள் கற்றுத் தந்த இந்த தோப்புக்கரணத்தை இன்றைக்கு வெளிநாட்டுக்காரன் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர், எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணத்தை பற்றிச் சொல்லும்போது, "இந்த உடற்பயிற்சி மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் தூண்டப்பட்டு சக்தி பெறுகின்றன.'' என்கிறார். 

அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். மேலும், தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் இந்த உடற்பயிற்சியை சில நாட்கள் தொடர்ந்து செய்தபிறகு, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.

அதேபோல யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர், ''தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன'' என்று சொல்கிறார்.

''இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன, மூளையின் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.'' எனவும் அவர் சொல்கிறார்.

அட, நாம் தப்பு செய்யும்போது நம் வாத்தியார்கள் நம் காதுகளைப் பிடித்து ஏன் திருகினார்கள், ஏன் தோப்புக்கரணம் போட வைத்தார்கள் என இப்போதுதான் புரிகிறது. எப்போதுமே நாம் அம்மா அப்பா செல்வைதைவிட அடுத்தவர்கள் சொல்வதைத்தானே கேட்டு பழக்கப்பட்டிருக்கிறோம்.

'சரி, இனிமேலாவது விநாயகர் கோயிலுக்கு போகும்போதும், ஏன் வீட்டிலேயும்கூட தோப்புக்கரணத்தை போட முடிவு செய்துவிட்டேன். ஆனால் எப்படி போடுவது?' என்கிறீர்களா..? உங்களுக்காக சின்ன டிப்ஸ்...

* தினந்தோறும் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலேகூட போதும்.

* உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்றுகொள்ளுங்கள்.

* உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும்.

* வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* அதேபோல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* பிடித்துக் கொள்ளும்போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும்
இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

* மூச்சை நன்றாக வெளியே விட்டபடி, அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள்.

* ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து செய்வது கடினமாக இருப்பவர்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடங்கள் என படிப்படியாக அதிகரித்துக்கொள்ளுங்கள்.

நம் குழந்தைகளை புத்திசாலியாக்க அபாகஸ் பயிற்சி அளிக்கும் நாம், இனியாவது தோப்புக்கரணத்தை சொல்லிக்கொடுப்போம்.

-கா.முத்துசூரியா 

விகடன் செய்திகள் - 21.04.2016

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?
10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.
எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.
மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.
அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் ?சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.
சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். 
அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.
தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.

எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.
காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
விகடன் செய்திகள் - 21.04.2016

விஞ்ஞானிகள் வியக்கும் ஹோமம் தெரபி

Image may contain: one or more people, text and food
விஞ்ஞானிகள் வியக்கும் ஹோமம் தெரபி
'சூர்யாய ஸ்வாஹா
சூர்யாய இதம் நமஹ
பிரஜாபதேய ஸ்வாஹா
பிரஜாபதேய இதம் நமஹ'
- இவை அக்னிஹோத்ர மந்திரத்தின் எளிய சொற்களாக விளங்குபவை. வேதங்களில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களில் மிகவும் எளியது இதுதான். அக்னி ஹோத்ரம் வானிலையை மாற்றுகிறது. அதில் ஈடுபடுபவர்களின் மனத்தையும், பக்குவப்படுத்துகிறது.
அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் இந்தப் பயன்களை அடைய முடியுமா என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்ற ஊரில் இதற்காக ஓர் ஆராய்ச்சி நிலையமே நிறுவப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சக்தி, வம்ச அடிப்படை, மருத்துவம், விவசாயம் போன்றவை வளம் பெறுவதற்குக் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை இங்கே விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்கிறார்கள்.
ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் பிரெடரிக் மாக்ஸ்முல்லர், இப்படி குறிப்பிட்டார்:
'அக்னிம் இதே புரோசிதம் -
யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம்
ஹோதாரம்
ரத்னதாதமம்
உலகத்தின் பழம்பெரும் நூலான ரிக்வேதத்தில் வரும் முதல் வாசகம் இது.
'அக்னியை நான் வணங்குகிறேன். யாகத்தின் முதல் தலைவனும், தெய்வீகம் நிறைந்த முதல்வனும், சக்தியைத் தூண்டுபவனும், எல்லாச் செல்வங்களையும் அருளுபவனும் ஆகிற அக்னியை நான் வணங்குகிறேன்.''
ஹோமம் என்பது சாதாரண நெருப்பல்ல. விதிப்படி அதை தயார் செய்ய, குறிப்பிட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சக்தியைப் பெற, குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
சிவபுரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,500 ஆண்டுகளுக்குப்பிறகு, முதன்முறையாக அகல்கோட் மடத்தைச் சேர்ந்த கஜானன் மகராஜ் என்ற பெரியவரால் சோமயக்ஞம் முறைப்படி செய்யப்பட்டது. அந்த யாகத்தில், கூடவே ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. விஞ்ஞான ரீதியாகப் பல முடிவுகள் அதிலிருந்து வகைப்படுத்தப்பட்டன.
ஹோமங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறியதும் எளியதுமான ஒன்று அக்னிஹோத்ரம். இது இயற்கையின் விஞ்ஞான வழியில் மனிதனின் மனத்தைப் பண்படுத்துகிறது. இதனால் உடலுக்கும், சில அடிப்படையான பக்குவங்கள் கிடைக்கின்றன. இவை ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
அக்னிஹோத்ரம் ஒருநாளைக்கு இரண்டு முறைகள் செய்யப்படவேண்டும். சரியாக சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும் செய்யவேண்டும். இயற்கையின் சுழற்சியை ஒட்டி இது செய்யப்படுவதால் சூரியனின் தோற்றமும் மறைவும் இதற்கு உரிய கால அளவுகளாக இருக்கின்றன.
இதைப் பற்றி வாஷிங்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 'சூரியோதயத்தின்போது சக்தி மிகுந்த மின்னணுக்கள், நெருப்பு மின்னல்கள் பூமியை நோக்கி வருகின்றன. இந்த ஒளிவெள்ளத்தின் ஆற்றல் அபாரமானது. தீய பொருட்கள் அந்த உதயத்தில் கருகி அழிந்துவிடுகின்றன. உயிர் கொடுக்கும் சக்தி ஓங்குகிறது. அந்த வேளையில் அக்னிஹோத்ர மந்திரங்களை இசையுடன் கூறுவது அந்தச் சக்தியை தூண்டுகிறது. மாலையில் சூரியன் மறையும் வேளையில் இந்தச் சக்தி மெள்ள மெள்ள சுருங்கி அடங்குகிறது. அப்போதும் இந்த மந்திரம் அதன் இயக்கத்துக்கு ஏற்றபடி அமைகிறது' என்று கண்டறியப்பட்டது.
சூரியனின் சக்தியைப் பொறுத்தே வானிலை அமைந்திருக்கிறது. வானத்தில் பரவி இருக்கும் பல்வேறு மண்டலங்களிலும் அந்தச் சக்தி இயங்குகிறது. வெள்ளம்போல் எலெக்ட்ரான் அணுக்கள் பூமியின் காந்த மண்டலத்தை நோக்கி வந்து சேருகின்றன.
பூமியைச் சுற்றி உள்ள மின்காந்த மண்டலமும் நம் எண்ணங்களையும் உணர்ச்சி அலைகளையும் ஏந்தி நிற்கிறது. மிதமான நிலையில் இதன் வேகம் ஏழு சுழற்சிகள் ஆகும். நாம் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியான நிலையில் தியானத்தில் அமரும்போது, நம் மூளையில் எழும் அலைகளும் அப்போது ஒரு வினாடிக்கு ஏழு சுழற்சிகள் வீதமே இயங்குகிறது. ஆகவே, தியான நிலையில் நாம் இயற்கையான சூழ்நிலைக்குப் பொருந்தி விடுவோம்.
அக்னிஹோத்ரம் செய்ய கூர் உருளை வடிவம் கொண்ட செப்புப் பாத்திரம், காய்ந்த பசுஞ்சாண வறட்டிகள், சுத்தமான நெய், நவதானியங்கள் ஆகும். ரசாயன முறைப்படி புரதச் சத்து மிகுந்த அரிசி, முட்கள் நிறைந்திருக்கும் மரங்களின் சுள்ளிகள் ஆகியவையே ஹோமத்துக்கு உரியவை. காலையும் மாலையும் அக்னி மூட்டப்பட்டு ஹோமம் நிகழ்த்தப்படுகிறது.
வறட்டித் துண்டுகளும், அரிசியும், நெய்யும் அக்னியில் சேர்க்கப்படுகின்றன. விரல் நுனியில் மட்டுமே எடுக்கக் கூடிய அளவு அரிசியை எடுத்து, 'சூர்யாய ஸ்வாஹா, சூர்யாய இதம் நமஹ' என்று முதல் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது. தொடர்ந்து, 'பிரஜாபதயே ஸ்வாஹா, பிரஜாபதயே இதம் நமஹ' என்று இரண்டாவது மந்திரம் கூறப்படுகிறது. இது உதய காலத்தில் செய்யப்படும் தொடக்கம்.
இதேபோல்
'அக்னயே ஸ்வாஹா,
அக்னயே இதம் நமஹ'
'
பிரஜாபதயே ஸ்வாஹா
பிரஜாபதயே இதம் நமஹ'
என்று சந்தியா காலத்தில் உச்சரிக்கப்படுகிறது. அப்போது அக்னிஹோத்திர பாத்திரத்தைச் சுற்றி அபரிமிதமான சக்தி அலைகள் உருவாகின்றன. காந்த சக்தி மிகுந்த மண்டலம் உருவாகி, அழிவுச் சக்திகளைத் தடுத்து வளர்ச்சி சக்திகளை அமைக்க உதவி செய்கின்றன. இவ்வாறு அக்னி ஹோத்திரம் வளர்ச்சியையும், செழுமையையும் தூண்டுகிறது. இவை அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் விஞ்ஞான அடிப்படையில் எடுக்கப்பட்ட அளவுகளாகும்.
பூனாவில் உள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பாரி ராத்னர், அர்விந்த் மாண்ட்தர் ஆகிய விஞ்ஞானிகள், அக்னிஹோத்ரம் செய்யப்படும் இடத்தில், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்திருப்பதையும், ஹோமப் புகையில் பார்மல்-டி, ஹைட் என்ற உயிரணுக்களுக்கு செழுமையை ஊட்டும் பொருள் நிறைந்திருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க விஞ்ஞானி ஆன்மெக்ளிப்ஸ், ''இன்றைய தொழில் வளர்ச்சியினால் காற்று, மண், நீர் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை மூன்றையும் தூய்மைப் படுத்தவேண்டியது மனித குலம் உயிர் பிழைக்க மிகவும் அவசியம். இதற்கு அக்னிஹோத்திரம் உதவுகின்றது" என்று சொல்லி இருக்கிறார்.
அக்னிஹோத்ரம் செய்யப்படுவதற்கு முன்பும் செய்த பின்பும் வானிலையில் உள்ள பண்புகளை 'எலோப்டிக்' சக்தி அளவுமானியின் மூலம் பகுத்து அறிந்திருக்கிறார்கள். அக்னிஹோத்திரம் செய்த பிறகு இந்த சக்தி கணிசமான அளவு உயர்ந்திருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
சரும நோய்கள், மூச்சு வியாதிகள், இருதய பாதிப்புகள், தொண்டை வியாதிகள் ஆகிய நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடிய மருந்துகள் அக்னிஹோத்திரம் நிகழ்த்தி அந்தச் சூழலிலேயே தயாரிக்கப்படுவதாகவும், இந்த மருந்துகளைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக விளங்குவது அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் இருந்து திரட்டப்படும் சாம்பலே ஆகும் என்றும் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர், மோனிகா ஜெஹ்லே கூறி இருக்கிறார்.
அக்னிஹோத்திரம் ஹோமாதெரபியைப் போல் செயல்பட்டு, உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்திருக்கிறது. மனம் அமைதிப்படுவதால் ரத்தத்தின் பண்பும் துடிப்பும் மேம்படுகின்றன. வியாதிகளால் வரும் பாதிப்புகள் குறைகிறது. மனதைத் தூய்மைப்படுத்தி.. தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் வளப்படுத்த உதவுகிறது. அக்னியின் மூலம் வானமண்டலமும் தூய்மை அடைகிறது. அதனால் இயற்கையின் இயக்கத்துக்கு ஏற்ற அளவில் மனமும் இயங்கி அமைதி அடைகிறது.
அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் ஒரு சக்திமண்டலம் உருவாகிறது. இந்த நிலையில் அங்கே வளரும் தாவரங்கள் செழுமையுடன் சத்துக்களையும் பெறுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பே மஹாராஷ்டிராவில் உள்ள, திராட்சைப் பயிர் பெருக்கத் துறையின் விஞ்ஞானிகள் இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். நாசிக் மாவட்டத்தில் பஸ்வந்த் என்ற கிராமத்தில், திராட்சைப் பயிர்கள் ஆறுமாதத்தில் பெறக்கூடிய வளர்ச்சியையும் செழுமையையும் மூன்று வாரங்களிலேயே அடைந்திருக்கின்றன.
உலகமெங்கும் வானிலை, நீர், மண் ஆகியவற்றை வளப்படுத்தி, மனிதனின் மனதையும் பண்படுத்தி உயிர்கள் வளர உதவி, தாவரங்களையும் செழுமைப்படுத்தும் அக்னிஹோத்திரத்தை வாழ்வளிக்கும் மகாசக்தியாகப் போற்றுவது முற்றிலும் சரிதான்.
- எஸ்.கண்ணன்கோபாலன்
விகடன் செய்திகள் - 20.04.2016